எழுத்து

கதைகளின் நடனம்-.சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘அவரவர் வழி’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து- அரிசங்கர்

அரிசங்கர்

சில கலைஞர்களின் நடனம் நம்மை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். அந்த நடனத்தில் நாம் நம்மை மறந்து திளைத்திருப்போம். அருகில் யார் இருந்தால் என்ன, எது நடந்தால் என்ன என்று அந்த நடனம் நம்மைக் கட்டிப்போடும். சில அசைவுகள் நம் உணர்ச்சிகள் பலவற்றைத் தூண்டிவிடும். அந்த நடனம் நம்மை அவ்வாறு கட்டிப் போட்டிருக்கும். பல நேரங்களில், என்ன இது, இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே, என ஏங்க வைக்கும். திரும்பத் திரும்ப அதை நோக்கியே நம்மை இழுக்கும். அப்படிப்பட்ட ஒரு நடனத்தைத்தான் சுரேஷ்குமார இந்திரஜித் தன் கதைகளின் மூலமாக நிகழ்த்தியிடுக்கிறார்.

புத்தகத்தின் தரத்தை அதன் பக்க அளவைக் கொண்டோ, அல்லது கதைகளின் எண்ணிக்கையைக் கொண்டோ வகைப்படுத்த முடியாது என்பதை இந்தத் தொகுப்பு நிறுவியிருக்கிறது. மிகவும் சிறிய அளவிலான இந்தத் தொகுப்பு பத்து கதைகள் கொண்டது. அனைத்து கதைகளும் இதழ்களுக்காக எழுதப்பட்டவை. அதனாலேயோ என்னவோ, ஒவ்வொரு கதையும் கிட்டத்தட்ட ஒரே அளவைக் கொண்டு இருக்கிறது. பல கதைகள் விரைவில் முடிந்துவிட்டதே என்ற குறை நிச்சயம் படிப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும்.

இந்தத் தொகுப்பில் இருக்கும் அனைத்து கதைகளுக்கும் பொதுவானது என்னவென்றால் நாம் பார்க்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் வேறு ஒரு கோணம் இருப்பதுதான். பெரும்பாலான கதைகள் ஒருவர் பார்வையில் மட்டுமே நிகழ்வதில்லை. வாழ்க்கையின் வேறு ஒரு பரிமாணத்தை தன் கதைகளில் திறந்துவைக்கிறார். ஒருவரைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் பார்வை மற்றொருவருக்கு இருக்காது என்பதே பல கதைகளின் ஆதார முடிச்சாக இருக்கிறது.

இந்தத் தொகுப்பில் நான் முதலில் படித்தது தொகுப்பின் கடைசி கதையை. சிறிய கதை என்பதால் வாங்கியவுடன் நின்றுகொண்டே படித்தேன். ஒரு மனிதனுக்கு மிகவும் படபடப்பை ஏற்படுத்தக்கூடிய விஷயங்கள் சிலவற்றில் (முக்கியமாக ஆண்களுக்கு) ஒன்று, தன் மனைவி அருகில் இருக்கும்போது முன்னாள் காதலியைச் சந்திப்பது. ‘அவரவர் வழி’ என்கின்ற இந்தத் தொகுப்பின் தலைப்புக் கதை இதைப் பற்றியதே. இந்தக் கதையும் அதன் முடிவும் தந்த பரவசமே அடுத்தடுத்த கதைகளை நோக்கி என்னை நகர்த்தியது. எதிர்பார்க்காத ஒரு விஷயம் நம் எல்லோர் வாழ்விலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கண்டிப்பாக நடந்ததே தீரும். அந்த நொடியில் நடக்கும் அந்த மாயாஜாலத்தையே பெரும்பாலும் தன் கதைகளாக்குகிறார்.

அந்தத் தருணம் எல்லா நேரத்திலும் நமக்கு பரவசமூட்டுவதாக அமைவதில்லை. சில நேரம் அது நம்மை மரணத்தின் விளிம்பிற்கே அழைத்துச் செல்கிறது. வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்குகிறது. வாழ்வின் முடிவை நோக்கி நகர்த்தக்கூடியதாகவும் அமைகிறது. இதை தன் ‘பங்குப் பணம்’ கதையில் நிகழ்த்துகிறார். இந்தக் கதையில் ஒரு திருடனுக்கும் பெருமாளுக்கும் இருக்கும் ஒப்பந்தம்தான் மையம். தான் திருடுவதில் பத்து சதவீதம் பெருமாளுக்குத் தந்துவிடுவதாக வேண்டிக் கொள்ள அன்றிலிருந்து திருட்டுத் தொழில் அமோகமாக நடக்கிறத. சொன்னபடி முதலில் செய்யும் திருடன் பிறகு தன வேண்டுதலை நிறைவேற்றுவதில்லை. அதன் பிறகு திருடப்போகும் இடத்தில் அவன் கால் பிசகிவிட ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாதவனாகிறான். விடியத் துவங்குகிறது. விடிந்ததும் தான் மாட்டிக்கொள்வோம் என்று அவனுக்குத் தெரிந்துவிடுகிறது. தான் பங்குப் பணத்தை தராததினாலேயே தண்டிக்கப்பட்டதாக அவன் நம்புகிறான்.

மனிதனுக்குள் ஏற்படும் மனத்தடையும், மனக்குழப்பமுமே இன்றைய நவீன வாழ்வின் பெரும் சிக்கலாக இருக்கிறது. இத்தகைய விஷயங்களையே இந்தத் தொகுப்பு கையாள்கிறது. மனிதன் எதிலுமே திருப்தியடைவதில்லை. ஆனாலும் அவன் விட்டுக் கொடுப்பதுமில்லை. அவன் தன் ரகசியங்கள்தான் உலகின் மிக முக்கியமாக ரகசியம் என்று நினைக்கிறான். ஆனால் அது அடுத்தவர் பார்வையில் ஒன்றுமே இல்லாத ஒன்றாகத்தான் இருக்கிறது. ‘நிகழ்காலமும் இறந்தகாலமும்’ என்ற கதையும், ‘மாய எதார்த்தம்’ என்ற கதையும் அப்படித்தான்.

இந்தத் தொகுப்பில் முக்கியமான கதையாக நான் கருதுவது ‘அழியாத சித்திரங்கள்’ என்ற கதைதான். எனக்கு மிகப் பிடித்தமாக கதையும் இதுதான். நமக்கு பிடித்தமானவர்களின் மனதில் நாம்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பதோ அல்லது நாம்தான் இருக்கிறோம் என்று நம்புவதோ எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதே இந்தக் கதையின் மையம். சிரித்துப் பேசுவதினாலும், கூடப படுப்பதினாலும், உடன் வாழ்வதினாலும்கூட அவர்கள் நமக்கானவர்கள் என்று நம்புகிறோம். இன்றைய நவீன உலகத்தில் வேலை, தொழில் என மனிதன் அலைந்துகொண்டே இருக்கிறான். சேர்ந்து வாழ்வது என்பதோ, கணவன் காலையில் சென்று மாலையில் வீட்டுக்கு வரவேண்டும் என்பதோ நகர வாழ்க்கையில் எல்லாருக்கும் நடக்காதது. இப்படியான காலகட்டத்தில் அவரவர்களுக்கான ரகசியங்கள் இருந்தே தீரும். ஆனால் இந்தக் கதை இன்றைய மன ரகசியங்களை பற்றியது அல்ல. அன்றைய மன ரகசியங்களை பற்றியது. போன தலைமுறையை பற்றியது. அவர்கள் ஆழ்மன ரகசியங்களைப் பற்றியது.

இதுதான் நான் வாசிக்கும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் முதல் தொகுப்பு. நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரிலேயே இதை துவங்கினேன். மேலும் சில கதைகளை இணையத்தில் வாசித்தேன்.

நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது முதன் முதலில் ‘மாயப்படகு’ என்ற பெயரில் ஒரு மாயாஜால கதையை எழுதினேன். அது நண்பர்களிடத்தில் ரசிக்கப்பட்டது. அது மேலும் கொஞ்சம் மெருகேற்றியபின் ‘புதுவை பாரதி’ என்ற சிற்றிதழில் 12 வாரம் தொடராக வெளிவந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘புதுவை பாமரன்’ என்ற சிற்றிதழில் மூன்று சிறுகதைகள் வந்தன. அதன் பிறகு எழுதவில்லை. பிறகு 2013 ல் சென்னைக்கு குடிபெயர்ந்த பிறகு தனிமை என்னை மீண்டும் எழுதத் தூண்டியது. இருப்பினும் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் எதையும் வெளியிடவில்லை. 2018 பிப்ரவரி மாதம் ‘மலைகள்’ இதழில் என் முதல் கதை வந்தது. இந்த மூன்று மாதத்தில் ‘பதாகை’, ‘மலைகள்’ மற்றும் ‘திண்ணை’ இணைய இதழ்களில் பத்து கதைகள் வெளிவந்துள்ளன. அனைத்தும் பல்வேறு காலகட்டத்தில் எழுதியது.

வாசிப்பையும் அதன் தொடர்ச்சியாக எழுத்தையும் நோக்கி என்னை நகர்த்தியது எனது தனிமையே. இதுவரை எழுத வருகிறதா என்று தெரியவில்லை. இருந்தாலும் சில கடினமான விஷயங்களைக் கடந்து செல்ல எளிதாக முடியவில்லை. மனிதர்கள் எளிதாகக் கடந்து சென்றுவிடும் அடுத்தவர்களின் துயரங்களை நான் கொஞ்சம் அருகில் சென்று பார்க்க விரும்புகிறேன். எதுவும் செய்ய முடியாத இந்த கையாலாகாத்தனம்  குறித்து எனக்குள் இருக்கும் குற்ற உணர்விலிருந்து மீள எழுதுவது எனக்குக் கொஞ்சம் உதவுகிறது. மனிதர்களை எப்படி அணுகுவது, அனுபவங்களைச் சுவையான கதையாக மாற்றுவது எனச் சில விஷயங்களை நான் சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகளில் இருந்து கற்றேன். அவ்வகையில், தமிழ்ச் சிறுகதையின் தவிர்க்க முடியாத மாயாஜாலக்காரர் சுரேஷ்குமார இந்திரஜித்.

 

 

விடுவிப்பு- அரிசங்கர் சிறுகதை

அரிசங்கர்

 “லெட்சுமி ஊங்கிட்ட ஒரு அம்பதுருவா இருக்குமா…”

“நானே உங்கிட்ட இருக்குமானு கேக்கலாம்னு இருந்தன்” என்றாள் வடிவு.

“கொடுமன்னு கோயிலுக்கு வந்தாக்கா, இங்க ஒரு கொடும அவுத்து போட்டு ஆடுது,” என்று லட்சுமி சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்தப் பக்கமாக சூப்ரவைசர் வருவதைப் பார்த்த வடிவு லட்சுமியிடம் அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினாள். இருவரும் அவன் போவதையே ஓரக்கண்ணால் பார்த்தபடி தங்கள் வேலையைப் பார்த்தனர்.

“மொதல்ல இவங்கிட்ட இருந்து தப்பிச்சி ஓடனும்” என்றாள் லட்சுமி.

“எங்கனு போவ, எங்க போனாலும் இவன போல ஒருத்தன் கைலப்புடிச்சிகினு வருவானுங்கதான். போறதுனா அது சம்பளத்துக்குனுதான் இருக்கனும்” என்றாள் வடிவு.

“நீ சொல்றத பாத்தா எதோ எடம் பாத்துட்ட போல”

“க்கும் டீ… இன்னும் நல்லா கத்து, எல்லத்துக்கும் கேக்கட்டும்” என்று கோவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னாள் வடிவு.

“ஆமா மிஷின் ஓடற சத்தத்துல நான் பேசறதுதான் இப்ப கேக்கப்போவுது. எதுனா நல்ல கம்பேனினா நாமளும் வரலாம்னுதான் கேட்டன்,” என்று சமாதான தொனியில் சொன்னாள் லட்சுமி. வடிவு பதில் எதுவும் சொல்லவில்லை. வடிவு எதாவது சொல்வாளா என்று இரண்டு முறை அவளைப் பார்த்தவாறே இருந்தாள். ஆனால் அதன் பிறகு அன்றைய வேலை முடியும் வரை வடிவு எதுவுமே பேசவில்லை. மதிய நேரத்தில்கூட சாப்பிட வராமல் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தாள். லட்சுமிக்கு அவளைப் பார்க்க எரிச்சலாக இருந்தது. தனக்குள் சொல்லிக் கொண்டாள், “ச்சீ… இன்னா பொம்பள இவ, சின்ன வயசுலருந்து ஒன்னாவேதான இருக்கோம். ஒன்னாதான் படிச்சோம், கட்டிக்கினு போனதுகூடப் பக்கத்து பக்கத்து தெருவுலதான். இத்தினி நாளுக்கும் ஒன்னாவேதான் இருக்கோம். ஒரு நல்ல கம்பேனியா வந்தா நமக்குச் சொன்னா இன்னா. இவ சொத்தயா நாம கேக்கறோம்,” லட்சுமி இப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போதே வடிவு வந்து வேகமாகச் சாப்பிட்டு லட்சுமியுடன் முடித்தாள்.

லட்சுமியும், வடியும் முத்திரைப்பாளையத்தில்தான் ஒன்றாகப் படித்தார்கள். ஒன்றாகவே பத்தாவது ஃபெயில் ஆகி ஒருவர் பின் ஒருவராகச் சிறிய இடைவெளியில் திருமணம் செய்துகொண்டு இப்போது இருவருமே ஐயங்குட்டிப்பாளையத்தில் பக்கத்துப் பக்கத்து தெருவில் வசிக்கிறார்கள். மேட்டுப்பாளையத்தில் இருக்கும் ஒரு பிளாஸ்டிக் கம்பேனியில் வேலை பார்க்கிறார்கள். இருவருமே மாநிறம், சம உயரம்தான். லட்சுமி எப்பவுமே ஒரே மாதிரிதான் இருந்தாள், எலும்பும் தோலுமாக. ஆனால் வடிவு திருமணத்திற்குப்பின் நன்றாக சதை போட்டு இருவருக்குமான வயது வித்தியாசம் அதிகமாகப் பார்ப்பவர்களுக்கு காட்டியது. தான் சீக்கிரம் கிழவியாகிவிட்டோமே என்று லட்சுமியைப் பார்க்கும்போதெல்லாம் வடிவுக்குத் தோன்றுவதுண்டு.

மாலை வேலை முடிந்து இருவருமே மேட்டுப்பாளையம் சறுவலில் சாலையில் இறங்கிவந்து கொண்டிருந்தனர். வழக்கமாக அப்படியே குறுக்கு வழியாகச் சென்று முத்திரைப்பாளையம் வழியாகச் செல்வதுதான் அவர்கள் வழக்கம். ஏதேனும் அவசர வேலைகள் இருந்தால் கீழ் ரோட்டுக்கு வந்து டெம்போ  பிடித்துச் செல்வார்கள்.

வடிவு பேச்சைத் துவங்கினாள், “லெட்சுமி, மதியம் அந்த புது கம்பெனி மேனேஜருகிட்ட தாண்டி பேசிகினு இருந்தன்.” என்றாள்.

லட்சுமி பதில் எதுவும் சொல்லவில்லை.

“உனுக்கும் சேத்துதாண்டி பேசனன்”.

இப்போதும் லட்சுமி பதில் சொல்லவில்லை. ஆனால் காதை நன்றாகத் தீட்டிக்கொண்டு, வடிவு என்ன சொல்லப் போகிறாள் என்று கவனித்தாள். வடிவு தொடர்ந்தாள், “அந்தாளு என்னாடானா கம்பேனிதான் மேட்டுபாளையத்துல இருக்கு, ஆனா ஆப்பீஸ் பாண்டில இருக்கு மொதல்ல அங்க வந்து பாருங்கனு சொல்றான். நீ என்னாடி சொல்ற நாளைக்கு ஒரு எட்டு போய்ட்டு வந்துடலாமா?” என்றாள்.

லெட்சுமி யோசித்தாள். அவள் கணவன் துரைராஜ்க்கு லட்சுமி வடிவுடன் பழகுவது சுத்தமாகப் பிடிக்காது. வேலை நேரம் தவிர அதிகம் அவள் வடிவுடன் செலவிடமாட்டாள். வடிவைப் பற்றி வீட்டிலும் பேசமாட்டாள். அப்படித்தான் ஒரு நாள் வடிவு சும்மா இல்லாம எதோ கேட்க போக துரைராஜ் அடித்த அடியை இன்று நினைத்தாலும் லட்சுமியின் உடல் நடுங்கும். அவளால் வலி தாங்க முடியாமல் அவன் காலிலேயே விழுந்தாள். அவன் கேட்கும் நிலையில் இல்லை. இவள் குழந்தையை துக்கிக்கொண்டு பக்கத்துத் தெருவில் இருந்த பார்க்கில் சென்று அமர்ந்து கொண்டாள். பிறகு துரைராஜே வந்து சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றான். இதை இவள் வடிவிடம்கூட சொல்லவில்லை. அவள் என்றுமே தன் கணவனை விட்டுக் கொடுத்ததில்லை. இப்போது போய் புது கம்பேனி, அதுவும் வடிவுடன் என்றால் நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டான். ஏன், இந்த கம்பேனியில் என்ன பிரச்சனை என ஆயிரம் கேள்விகள் வரும். நீ வேலைக்கே போக வேண்டாம், என்று கூட சொல்லிவிடுவான். எதோ கொஞ்சம் கஸ்டமில்லாம இருக்கு அதுக்கும் உல வெச்சுக்க வேண்டாம், என்று லட்சுமிக்குத் தோன்றியது.

“இன்னாடி, நான் கேட்டுனே இருக்கன். நீ கனவு கண்டுனுவர” என்றாள் வடிவு.

“நீ கேட்டததான் யோசிச்சினு வரன். நாம ரெண்டு பேரும் ஒண்ணா போனா சரிவராது. தனித்தனியா கிளம்புவோம். பாண்டி பஸ் ஸ்டாண்டுலருந்து ஒண்ணா போலாம்,” என்றாள்.

வடிவு சரி என்று சொல்ல இருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றனர்.

மறுநாள் லட்சுமி கிளம்பி சரியாக பாண்டி பேருந்து நிலையத்துக்கு வந்துவிட்டாள். அவர்கள் பேசிக்கொண்டதுபோல் பேருந்து நிலையத்தை ஒட்டி இருந்த சைக்கிள் ஸ்டாண்ட் அருகில் காத்திருந்தாள். ரொமப நேரம் ஆகியும் வடிவைக் காணவில்லை. வடிவுக்கு கைபேசியில் அழைத்தாள். கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. லெட்சுமிக்கு எரிச்சலாக வந்தது. இவளை நம்பி வந்தது தப்பா போச்சே, என்று நொந்துக்கொண்டாள். காலையிலிருந்து பச்சை தண்ணிகூட குடிக்கவில்லை என்று நினைவுக்கு வந்தது. மிகவும் சோர்வாக இருந்ததால் எதிரில் இருந்த ஒரு டீக்கடைக்கு சென்று, ஒரு டீ, என்றாள். அப்படியே வடிவு வருகிறாளா என்று பார்த்துக்கொண்டே இருந்தாள். டீ மட்டும்தான் வந்தது. டீக்கடை ஒட்டியே ஒரு லாட்ஜ் இருந்தது. யாரும் உள்ளே போன மாதிரியும் தெரியவில்லை, வந்த மாதிரியும் தெரியவில்லை. இவள் லாட்ஜையே பார்த்துக் கொண்டிருந்ததை உள்ளே இருந்து பார்த்த ஒருவன் அவளிடம் வந்து, “உள்ள உங்கள கூப்பிடறாங்க” என்றான்.

“என்னயா” என்றாள் லட்சுமி.

“ஆமாம்மா” என்றான் அவன்.

“எதுக்கு” என்றாள்.

“அட என்னானுதான் வந்து கேட்டு போயேன்மா” என்றான்.

இவள் டீக்கு காசை நீட்ட, அவன் தடுத்தான். அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம், என்று அவளை உள்ளே கூட்டிச் சென்றான். அவர்கள் போவதையே பார்த்துக்கொண்டிந்த டீக்கடைக்காரனுக்கு உள்ளே சென்ற சிறிது நேரத்திலேயே அவள் பெரிதாக கத்துவது கேட்டது. அவளுக்குத் தெரிந்த அனைத்து கெட்ட வார்த்தைகளையும் உதிர்த்தாள். வேகமாக வெளியே வந்து டீக்கடைக்காரனிடம் காசை வீசிவிட்டுச் சென்றாள். அழைத்துச் சென்றவன் வெளியே வந்தான். அவனிடம் டீக்கடைக்காரன், “இன்னா படியிலயா” என்றான்.

அவன் இல்லை என்பது போல் உதட்டைச் சுளித்தான்.

லட்சுமி பேருந்தில் போய்க்கொண்டிருந்தாள். வடிவின் மேல் அவளுக்கு ஆத்திரமாக வந்தது. இப்போது பிரச்சனை வடிவோ அல்லது அந்த லாட்ஜ்காரனோ இல்ல. இவள் லாட்ஜில் இருந்து வெளியேறியதைப் துரைராஜின் நண்பன் ஒருவன் பார்த்து விட்டான். அதை நினைத்துத்தான் அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது. இவள் அவனை பார்த்தமாதிரியே காட்டிக்கொள்ளாமல் வந்து பேருந்தில் ஏறினாள். இதயம் வேகமாக அடிக்கத் துவங்கியது. “இவன் போய் அவனிடம் சொல்லிவிட்டால் அவ்வளவு தான். அவன் அடித்தே கொன்றுவிடுவான். அதுக்கு நாமலே செத்துடலாம். அய்யோ புள்ளய என்ன பண்றது,” இப்படி பல திசைகளில் அவள் மனம் ஓடிக்கொண்டிருந்தது. தனக்கு இது தேவைதான் என்று நினைத்துக்கொண்டாள். இந்த வடிவுக்கு நாளைக்கு இருக்கு, என்று நினைத்துக் கொண்டாள்.

பேருந்து மேட்டுப்பாளையம் வந்தது. மணி ஒன்பதரைதான் ஆகியிருந்தது. வேலைக்கே போகலாம் என்று வேகமாக மேடு ஏறினாள். தனக்கு பின்னாலேயே யாரோ வருவது போல் இருக்க, பின்னால் திரும்பிப் பார்த்தாள். அவன் வந்து கொண்டிந்தான். இந்தச் சனியன் புடிச்சவன் ஏன் நம்ப பின்னாடி வரான், என்று எரிச்சலானாள். மீண்டும் திரும்பிப் பார்த்தாள் அவன் தன் முழுப்பல்லை காட்டிச் சிரித்தான். இவள் வெடுக்கென முகத்தைத் திருப்பிக்கொண்டு வேகமாக கம்பேனிக்குள் நுழைந்து, தாமதமாக வந்ததற்கான வசையை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றாள். அங்கே வடிவு அமர்ந்திருந்தாள். அவளைப் பார்த்தவுடன் லட்சுமிக்கு அவளை அப்படியே மிதிக்க வேண்டும் என்பது போல் இருந்தது.

லட்சுமியின் முகத்தை பார்ர்கும்போதே வடிவுக்குப் பயமாக இருந்தது. தாமதமாக வந்ததால் முதலில் லட்சுமி எதுவும் பேசவில்லை. அமைதியாக தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். மதியம் உணவு இடைவெளியின்போது லட்சுமி திட்டியதில் வடிவு அழுதேவிட்டாள். அவளால் அழுகையை அடக்க முடியவில்லை.

“இல்ல லெட்சுமி, நான் நேத்து என் வீட்டுகாரர்கிட்ட சொன்னேன். அவரு உடனே நானே உன்ன கூட்டினு போறன்னிட்டாரு. காலைலயே கிளம்பிட்டோம். போன வீட்டுலயே வச்சிட்டன்னு பாதி வழியிலதான் தெரிஞ்சிச்சி. நீ வரத்துக்குக் கொஞ்சம் முன்னாடிதான் வந்தன். அஞ்சி நிமிசத்துல நானே யாருகிட்டயாது போன் வாங்கி உன்ன கூப்பிடலாம்னு இருந்தன். அதுக்குள்ள நீயே வந்துட்ட. நான் வேணும்ன்னுலாம் ஒண்ணும் பண்ணல லெட்சுமி,” என்றாள்.

ஆனால் லட்சுமியால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் மீண்டும் வடிவிடம் ஏறினாள்.

“இப்ப அந்தச் சனியன் புடிச்சவன் வேற பின்னாடியே வரானே நான் என்ன பண்றது. என் வூட்டுக்காரங்கிட்ட சொல்லிட்டா இன்னா பண்றது,” என்றாள்.

“ஏய், அண்ணன் அதெல்லாம் நம்பாதுடீ,” என்றாள் வடிவு.

“நீ ஏன் அங்க போனன்னு முதல்ல உத உழும். வந்து வாங்கிக்கறியா?”

வடிவு அமைதியாக இருந்தாள். அன்றைய வேலை முடிந்து இருவரும் குறுக்கு வழியாகச் சென்றனர். அவன் வருகிறானா என்று அவ்வப்போது பார்த்தவாறே வந்தாள் லட்சுமி.

மறுநாள் தெருமுனையிலிருந்து பின்னாடியே வந்தான். பார்க்கும்போதெல்லாம் பல்லைக் காட்டினான். இது தினமும் தொடர ஆரம்பித்தது. லட்சுமிக்கு வீட்டிலும் வேலை ஓடவில்லை, கம்பெனியிலும் வேலை ஓடவில்லை. தூக்கம் தொலைந்தது. எந்த தப்பும் பண்ணாமல் ஏன் இந்த நரக வேதனை என்று நினைத்துக் கொண்டாள். இது இன்னும் எத்தனை நாள் தொடருமோ தெரியவில்லையே.

“பேசாம உன் வீட்டுக்காருகிட்ட சொல்லிடு” என்றாள் வடிவு. அவள் புது கம்பெனிக்கு மாறியதிலிருந்து அவளைப் பார்க்க முடியவில்லை லட்சுமியால். அதான் கடைக்கு போகிற சாக்கில் வடிவு வீட்டிற்கு வந்தாள். இருவரும் பல யோசனைகளை ஆராய்ந்தனர். முடிவில் எதுவும் திருப்தியாக இல்லை. லட்சுமி கிளம்பினாள்.

“சரி வடிவு நான் கிளம்பறன்,” என்றாள்.

இருவரும் வீட்டு வாசலுக்கு வந்தனர். எதிர்க்கடை வாசலில் அவன் நின்றிருந்தான். அவனைப் பார்த்ததும் வடிவு ஆவேசமாக விளக்குமாற்றை எடுத்து அடிக்கப் போனாள். லட்சுமி அவளைத் தடுத்துவிட்டாள். ஆனால் வடிவின் வாயை அவளால் தடுக்க முடியவில்லை. அவன் லட்சுமியை முறைத்துக்கொண்டே சென்றுவிட்டான். வடிவு மீண்டும் தனக்கு உலை வைத்துவிட்டாள் என நினைத்துக்கொண்டாள்.

சில தினங்களாக அவன் வரவில்லை. லட்சுமிக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆனால் அவன் சும்மா இருப்பான் என்று மட்டும் தோன்றவில்லை. ஒரு நாள் அவள் வேலைவிட்டு வரும்போது ஒரு சந்தில் அவளை மடக்கி நேரடியாகவே கேட்டான், “உங்கிட்ட முதலும் கடைசியுமா கேக்கறன் என் கூட ஒருவாட்டி வர முடியுமா முடியாதா?” என்றான்.

லட்சுமிக்கு காதில் யாரோ அமிலத்தை ஊத்தியதுபோல் இருந்தது. அவன் முகத்தில் காரித்துப்பிவிட்டு வேகமாகச் சென்றாள். அவன் அப்படிக் கேட்டதை அவளால் தாங்க முடியவில்லை. இரவு முழுவதும் அழுதாள். மறுநாள் உடம்பு சரியில்லை என்று வேலைக்குப் போகவில்லை. விட்டில் இருந்த வேலைகள் அன்று அவளுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. எந்த நினைப்பும் வரவில்லை. பின் மதியத்தில் அவள் கணவன் துரைராஜ் கதவை திறந்து கொண்டு வீட்டிற்குள் வந்தான். அவனுடன் சில நண்பர்கள் வந்தார்கள். துரைராஜ் முகத்தில் சில இடங்களில் வீங்கியிருந்தது. சட்டை முழுவதும் கிழிந்து தொங்கியது. லட்சுமி பதற்றமாக அவனிடம் ஓடினாள். அவன் நண்பர்கள் அதற்குள், “ஒண்ணும் இல்லமா, சின்னா ஒரு தகராறு. எல்லாம் பேசி முடிச்சாசு. பதறாத” என்றனர். பிறகு துரைராஜிடம் திரும்பி, “துரை இத இத்தோட விடு. அவன்லாம் ஒரு ஆளுனு அவன்கூட போய்… சரிவிடு. நாளைக்கு நல்ல ரெஸ்ட் எடு பாத்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு வெளியேறினர்.

அனைவரும் போனபின் லட்சுமி மெல்ல அவனிடம் “எதுக்கு சண்ட” என்றாள்.

சிறிது அமைதியாக இருந்தவன் அவளிடம், “அந்தப் பரதேசி இல்ல, செல்வம்” என்றான்.

லட்சுமிக்கு பகீர் என்றது. அவன்தான் என்று நினைத்துக்கொண்டாள். துரை தொடர்ந்தான், “அந்த நாயி எங்கிட்டயே வந்து உன்னப்பத்தி தப்பா சொல்றான். உன்ன அங்க பாத்தேன் இங்க பாத்தேன்னு. அதான் அடிச்சி அவன் வாய உடச்சிட்டன்.”

லட்சுமி தான் எதிலிருந்தோ விடுவிக்கப்பட்டது போல் உணர்ந்தாள். அவள் கண்களில் நீர் வந்துகொண்டே இருந்தது. இவள் அழுவதைப் பார்த்த துரைராஜ், “அட நீயேன் அழற, அவன் கிடக்கறன் பொறம்போக்கு” என்றான்.

தந்நலா, பெரியவரின் சொர்க்கம் – ஆகி கவிதைகள்

ஆகி

தந்நலா

தெய்வமா இவன்
கடவுளே
இவன் ஆடும் தாண்டவத்தைக் கண்டு
கண்டது படிக்கும் நான்
பொறுக்கமாட்டாமல்
எரிந்து விழுகிறேன்
சாம்பலாய் விழுந்ததும்
மூன்று நாழிகைகளில் போதும்
போதும் விட்டால் போதுமென்று
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழுந்தும் விடுகிறேன்
எரிந்து விழும் என்னை
பெருக்கியெடுத்து இவள் ஏன் ஒருபோதும்
குப்பைக்கூடையில் இடுவதில்லை
இட்டால் எப்படி உயிர்த்தெழுவதாம்
பைபிள் படிக்கும் இவள்
இவனது தாண்டவத்தைக் கண்டு
எரிந்து விழுகையில்
இவளது சாம்பலை
நான் பெருக்கியெடுத்து விட்டால்
மூன்று நாழிகைகளில்
எப்படி உயிர்த்தெழுவாளாம்
மீண்டும் மீண்டும் எப்படி
எரிந்து விழுவாளாம்
அப்படி சற்று தள்ளி நின்று
ஆட்டம் போடுங்கள் நடராசரே
அனைத்தையும் இயக்குபவள் தந்நலம்
எனில் என்னுள்ளும் அவளுண்டு
எச்சமாய் ஆட்டிவைக்கும்
ஊக்குவிக்கும் இச்சையாய்
பன்மையா குழந்தைமை
குழந்தையா இவன்
கடவுளே
இவன் எடுக்கும் அவதாரங்களை
சொல்லிமாளாது
ஆனாலொன்று இருவரும்
ஒரே சமயத்தில் எரிந்து
விழுந்துவிடாமல் கவனமாய்
இருந்துகொள்ளவேண்டும்
செயல் பிசிறினாலும்
பெருக்கியெடுக்கத் தயங்காக் குழந்தைக்கு
நடராசாத்தி இயக்கி குறித்த
இயலுணர்வு இருப்பினும்
பெருக்கியெடுப்பது குறித்து
என்ன தெரியப்போகிறது

oOo

பெரியவரின் சொர்க்கம்

கனவுகளை நனவாக்க
இயன்றோர்
தங்கள் மென்கனவுகளை
கடுங்கனவுகளாக்குகின்றனர்
கற்காலத்தில்
மென்னுடலைச் சாடியோர்
பிற்காலத்தில்
மின்னுடலைப் பாடுகின்றனர்
இல்லாததைத் தேடுவோர்
இல்லாததைத் தேடி
தேவையில்லாததைக்
கண்டடைகின்றனர்
வனவெளியில்
திரிந்துறங்கியோர்
விண்வெளியில்
கண்விழித்திருக்கின்றனர்
கனவுகளை நனவாக்க
இயலாதோர்
தங்கள் ராக்கனவுகளை
பகற்கனவுகளாக்குகின்றனர்
இதெல்லாமிருக்கட்டும்
பெரியவரொருவர் இருந்தார்
அவர் யெகோவாவின் சாட்சிகள்
கட்சிக்குத் தாவி சொர்க்கம் சென்றார்
சொர்க்கம் சென்றவர் செவத்த யெகோவாவைத்
தேடி கருத்த கிறிஸ்துவைக் கண்டார்
கிறிஸ்துவைக் கண்டவர்
சற்று தயங்கி நின்றார்
தயங்கி நின்றவரை கிறிஸ்து
அதோ அங்கே பாருங்களென்றார்
அங்கு சீலையைப் பார்த்து
பூரிப்படைந்தவர் அருகில் சென்று
கண்ணிமைத்து இதுவா யெகோவா
யெகோவியாக இருக்கும் என்கின்றார்

நம் வீட்டு மனிதர்கள் – வண்ணநிலவனின் “கடல்புரத்தில்” வாசிப்பனுபவம். -வெங்கடேஷ் சீனிவாசகம்

 – வெங்கடேஷ் சீனிவாசகம் – 

நான் பிலோமி அக்காவைப் பார்த்திருக்கிறேன் என்றுதான் நினைக்கிறேன். அல்லது, பிலோமி அக்காவைப் போன்ற வேறொரு அக்காவை. முட்டத்தில், என் பதின்ம வயதுகளில். அப்பா கூடப் பிறந்த அத்தை, அப்போது முட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராயிருந்தார். மருத்துவமனை அருகிலேயே வீடு. பள்ளி விடுமுறைகளில் சில வாரங்கள் முட்டத்தில் அத்தையின் குட்டிக் குழந்தைகள் சாய், வித்யாவுடன் விளையாட்டுகளில் கழியும்.

வீட்டிற்கு முன்னால் ஒரு மரமல்லி இருந்தது. எப்போதும் மல்லிகள் மரத்தினடியில் சிதறிக் கிடக்கும். ஒரு விடுமுறையில், சாய், வித்யாவுடன் சிறிய மூன்று சக்கர சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்தபோது, கையில் மீன் கூடையுடன் ஒரு அக்கா வாசலுக்கு வந்து நின்று “டாக்டரம்மா” என்று அத்தையைக் கூப்பிட்டார். திரும்பி எங்களைப் பார்த்து சிரித்தார். அத்தை உள்ளிருந்து வந்து, அந்த அக்காவை பேர் சொல்லி கூப்பிட்டு “வந்துட்டியா? உள்ள வா” என்று கூப்பிட்டுப் போனார். அக்கா அடிக்கடி வீட்டிற்கு வருவார்கள் போல; சாயிக்கும், வித்யாவிற்கும் அவர்களைத் தெரிந்திருந்தது. நானும், சாய், வித்யாவும் மீன்களை வேடிக்கை பார்க்க உள்ளே ஓடினோம். “இது விஜயன்; அண்ணன் பையன். லீவுக்கு வந்துருக்கான்” என்று என்னைக்காட்டி சொன்னார் அத்தை. அக்கா கன்னத்தை நிமிண்டிவிட்டு சிரித்தார்.

எனக்கு இப்போது முட்டம் நிகழ்வுகள் பெரும்பாலும் கலங்கலாய்த்தான் நினைவிலிருக்கின்றன (ஒருவேளை ஜெனிஃபர் டீச்சரும் கண்ணில் விழுந்திருப்பார்களோ!). அத்தையும், மாமாவும்கூட வெகுநாட்கள் முட்டத்திலில்லை. அத்தை அங்கிருந்து வெள்ளலூருக்கும், நத்தத்திற்கும், அலங்காநல்லூருக்கும் வேலை மாற்றலாகிக் கொண்டிருந்ததால், என் விடுமுறை நாட்களும் அங்கங்கு மாறிக்கொண்டிருந்தன.

இப்போதெல்லாம் எந்தப் புத்தகம் படித்தாலும் மனது பின்னோக்கித் திரும்பி, நினைவுகளில் மூழ்கி, வாசிக்கப்படும் வாழ்வுடன் நோஸ்டால்ஜியாவையும் பின்னிவிடுகிறது. சமீபத்தில் தமிழினி வசந்தகுமார் வெளியிட்டிருந்த பாமயனின் அபுனைவு நூலான “வேளாண்மையின் விடுதலை” படிக்கும்போதுகூட, மனம் தாத்தாவின் வேளாண்மை கொழித்த கிராமத்து வீட்டிலேயே இருந்தது. கமலையும், மாடுகளும், வேர்க்கடலைக் குவியலும் மனதை நிரப்பித் தளும்பின.

நெய்தலின் நான் படித்த முதல் புத்தகம் குரூஸின் “ஆழி சூழ் உலகு”. அவ்வாழ்க்கையை மனதுக்கு நெருக்கமாய் அறிமுகப்படுத்தியிருந்தது. “கடல்புரத்தில்” குறுநாவல்தான்; ஆனால் அந்த மனிதர்கள், அவர்களின் உலகம், அவர்களின் குணம், அவர்களின் பேச்சு… அச்சு அசலானதாய், நானே அருகிலிருந்து பார்ப்பதைப் போலிருந்தது; அதனால்தான் பிலோமி அக்காவைப் பார்த்திருப்பேனோ என்ற பிரமையுண்டானது. இப்புனைவு ஆரம்பமும், முடிவுமில்லாதது; ஆம் அவ்வாழ்வின், அம்மனிதர்களின் ஒரு குறுக்குவெட்டு, 112 பக்கங்களில். சாரத்தைப் பிழிந்து கொடுத்தது மாதிரி; பெரும் புனைவாக விரித்தெடுக்க எல்லாச் சாத்தியங்களும் கொண்ட நறுக்கான, செறிவான குறுநாவல். முன்னுரையில் வண்ணநிலவன் சொன்னதுபோல், ஓரத்தில் ஒதுங்கி நின்று, எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து எழுதிய கலைஞனின் மொழி. எழுத்தாளன் அவ்வாழ்க்கையினூடே பார்வையாளனாக மட்டுமே இருக்கிறான்; கிஞ்சித்தும் ”தன்”-னை வெளிக்காட்டிக் கொள்ளாமல். பெரும் ஆசுவாசம். ஆனால் ஒட்டுமொத்தப் புனைவின் வழியே எழுத்தாளனின் அகம் வெளிப்பட்டு விடுகிறது.

ஒரு விமர்சனம் படித்தேன்; இக்குறுநாவலில் எல்லோருமே அதீத நல்லவர்களாய் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்; அதனாலேயே செயற்கையாகத் தெரிகிறதென்று. என்னுள் புன்னகை எழுந்தது. என்னவொரு மனநிலைக்கு வந்துவிட்டிருக்கிறோம்! நல்லது ஏதும் கண்ணில் பட்டால், அல்லது நல்லதாகவே கண்ணில் பட்டுக் கொண்டிருந்தால், ”ஏதோ சரியில்லை” என்று நமக்குத் தோன்றுகிறது; கூடவே ஒரு ஐயமும் இது மிகுகற்பனை கொண்ட மெலோடிராமாவாகத்தான் இருக்கவேண்டும் என்று. எனக்கென்னவோ படிக்கும்போது இந்நாவல் மிகுகற்பனையாகவே தெரியவில்லை. நாடகத்தனமாயும் உணரவில்லை.

*

வல்லத்தையும், வீட்டையும் விற்றுவிட்டு தன்னுடன் வந்து இருக்குமாறு செபஸ்தி, அப்பச்சி குரூஸிடம் சொல்கிறான்; அவனுக்கு அந்தப் பணம் வேண்டும், சாயபுவுடன் சேர்ந்து சைக்கிள் கடை வைக்க; குரூஸ் உயிரே போனாலும் மணப்பாட்டைவிட்டு வரமாட்டேன் என்கிறார். செபஸ்தியின் அம்மை மரியம்மைக்கு மகனுடன் செல்ல விருப்பம்தான். மரியம்மைக்கும் வாத்திக்கும் ஸ்நேகம்; அது குரூஸிற்கும் தெரியும்தான். செபஸ்தியின் தங்கை பிலோமிக்கு சாமிதாஸின் மேல் காதல்; சாமிதாஸூம் பிலோமியை விரும்புகிறான்.

பக்கத்து வீட்டில் லாஞ்சி வைத்திருக்கும் ஐசக்; அவனின் நோயாளி மனைவி கேதரின். ஐஸக்கிற்கு கேதரினை அடித்து விரட்டிவிட்டு, பிலோமியை கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசை.

பிலோமியின் அண்ணன் செபஸ்தியை காதலித்தாலும், உவரியூர் மாப்பிள்ளைக்கு வல்லத்துடன் வாக்கப்படும், பிலோமியின் நெருங்கிய ஸ்நேகிதி ரஞ்சி. ரஞ்சியின் மேல் மிகுந்த நேசம் வைத்திருக்கும் ரஞ்சியின் கொழுந்தன்.

குரூஸின் வல்லத்தில் உடன்வரும் சிலுவை. சிலுவைக்கும் பிலோமியின் மேல் ஒரு கண் உண்டு. சிலுவையின் மனைவி இன்னாசி.

குரூஸின் குடும்பத்திற்கு உதவும், குரூஸின் மீன்களை வாங்கிக்கொள்ளும், பிலோமியுடன் சகஜமாய்ப் பேசும் தரகனார்.

லாஞ்சிக்காரர்களுக்கும், வல்லத்துக்காரர்களுக்குமான பகைமையும், உரசல்களும். பாதிரியாருக்குப் பிரியமான ரோசாரியாவும் லாஞ்சி ஓட்டுகிறான். பிலோமியும் சாமிதாஸூம் ஒருநாள் உடலால் இணைகிறார்கள்.

மணப்பாட்டின் ஒரு கிறிஸ்துமஸ் திருவிழாவின்போது, கள் குடித்த மரியம்மை தூக்கக் கலக்கத்தில் வீட்டுப்படியில் தவறி விழுந்து இறந்து போகிறாள். குரூஸ் நடைபிணமாகிறான். காரியங்கள் முடிந்து செபஸ்தியின் மனைவி போகும்போது பிலோமியிடம், “இனிமே நீதான் எல்லாத்தையும் பாத்துக்கணும்,” என்று சொல்லிவிட்டுப் போகிறாள்.

ஐஸக்கிற்கும், ரோசாரியாவிற்கும் சண்டை வருகிறது. ரோசாரியாவின் மனைவிக்கும், பாதிரியாருக்கும் தொடர்பிருப்பதாக பேசிக்கொள்கிறார்கள். ஒருநாள் ஐஸக்கின் லாஞ்சியில் தீப்பிடிக்க, ரோசாரியாதான் வைத்திருப்பான் என்று கோபத்தில் கள்ளுக்கடையில் ரோசாரியாவைக் கத்தியால் குத்தி கொன்றுவிடுகிறான் ஐஸக். ஐஸக்கிற்கு பைத்தியம் பிடிக்கிறது.

நாட்கள் நகர்கின்றன. பிலோமிக்கும், மரியம்மையின் வாத்திக்கும் இடையே நட்புண்டாகிறது. மணப்பாட்டில் அறுப்பின் பண்டிகை வருகிறது. ஊர் விழாக்கோலம் பூணுகிறது. குரூஸ் வல்லத்தையும், வீட்டையும் விற்க முடிவு செய்கிறான். வல்லம் பிரிவதை தாங்கமுடியாமல் மனம் பேதலித்து குழந்தையாகி விடுகிறான்.

*

நான் நெகிழ்ந்த இடங்கள் பல.

பிலோமிக்கு தாத்தா தாசையாவை ரொம்பப் பிடிக்கும்; தாத்தா இறப்பதற்கு முந்தைய டிசம்பரில் கிறிஸ்துமஸ் கோயிலுக்குக் கடைசியாய் அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டு தட்டுத்தடுமாறி நடந்து வருகிறார். வரும்போதே அடிக்கொருதரம் “பிலோமிக் குட்டிக்கி தாத்தாவால் கஸ்டமில்லையே?” என்கிறார். “அதெல்லாங் கிடையாது தாத்தா” பிலோமி பதில் சொன்னதும் “நீ மவராசியா இருப்பே…” என்கிறார் தாத்தா.

*

”பிலோமி உள் நடைப்படியில் உட்கார்ந்திருந்தாள். அவளுடைய மடியில் செபஸ்தியுடைய இரண்டு பையன்களும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்கு இந்தப் பிரியமான அத்தையை விட்டுப்போகக் கொஞ்சங்கூட மனசில்லை.

“லே கீழ இறங்கி உட்கார்ந்தா என்ன? அவ பாவம், நோஞ்ச ஒடம்புக்காரி…” என்று செபஸ்தி அதட்டல் போட்டான்.”

*

”கிறிஸ்துமஸூடன் பனியும் வந்துவிடுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அழகைத் தருவதே இந்தப் பனிதான். பனியினூடே கிறிஸ்துமஸ் ஆராதனைக்குப் போகிறதும், பனியைப் பிளந்துகொண்டு கேட்கிற கோயில் மணியோசையும் எவ்வளவு அழகாயிருக்கின்றன.

இரவு பதினொன்றரை மணிக்கு எல்லோரும் ஆராதனைக்குப் புறப்பட்டார்கள். கோயிலில் குலசேகரப்பட்டினத்திலிருந்து வந்திருந்த ரேடியோ, கிறிஸ்தவ கீதங்களைப் பாடிக்கொண்டிருந்தது லேசாகக் கேட்டது. தெருவில் போகும் அந்தப் பிள்ளைகளுக்குள் யார் பிலோமியுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு போவது என்பதில் சிறு சச்சரவு மூண்டது. அமலோற்பவத்துடைய புருஷன் தன் பிள்ளைகளைப் பார்த்து சத்தம் போட்டான். அதிலே ஆசிர் மட்டும் அரைகுறை மனசுடன் தன் அப்பச்சியுடைய கையைப் பிடித்துக்கொண்டான். மெர்ஸி கேட்கவில்லை. அவள் பிலோமியுடைய கையைத்தான் பிடிப்பேன் என்றாள்.”

*

சாய்-ம், வித்யாவும் இப்போது டாக்டர்களாகி விட்டார்கள். மரமல்லி எனக்குப் பிடித்த மரமாகி விட்டது. மரமல்லியும், கீழே மண் தரையில் சிதறிக் கிடக்கும் நீண்ட வெண்பூக்களும், அந்தக்காட்சி அப்படியே மனதில் பதிந்துவிட்டது. பத்து வயதில் பிடித்துப்போன மரமல்லிகளின் வாசம் இப்போதும் மனதில். அதன்பின் பள்ளி முடித்து, தோட்டக்கலை இளங்கலையில் சேர்ந்தபோதும், அந்த நான்கு வருடங்களில் நிறைய பூமரங்கள் அறிமுகம் ஆனாலும், பிடித்த பூமரமாக மரமல்லியே இருந்தது.

பிலோமி அக்காவுடன் பயணிக்கையில் மனது மேல் கொண்டு வந்த இன்னொருவர் ஓடைப்பட்டியில் சின்னக் குடிசையில் கடை வைத்திருந்த காமாட்சி பாட்டி. காமாட்சி பாட்டி தடிமனான கண்ணாடி போட்டிருப்பார்; காதுகளில் கனமான தண்டட்டி. அப்போது நான் ஆரம்பப் பள்ளியில் இருந்தேன். உணவில் கருவாட்டின் மணத்துக்கும், சுவைக்கும் பழகி எந்த சாப்பாடாயிருந்தாலும் தட்டில் ஒரு கருவாட்டு துண்டிருந்தால் மனம் சந்தோஷம் கொள்ளும். அப்பாவிற்கும் கருவாடு பிடிக்கும். காய்கறி ஏதும் சமைக்காதபோது, அம்மா பாட்டி கடையில் கருவாட்டு துண்டுகள் வாங்கிவரச் சொல்லுவார். ஊரிலேயே காமாட்சி பாட்டி கடையில் மட்டும்தான் கருவாடு கிடைக்கும். எங்கள் கிராமத்து வீட்டிலேயே, வீட்டினுள் கொடியில், பண்டிகைக்கு எடுத்த இறைச்சியின் மிச்சங்கள், உப்புக்கண்டமாய் காய்ந்துகொண்டிருக்கும். அம்மா அதைப் பண்ணித் தருகிறேன் என்றாலும், வேண்டாம் என்று சொல்லிவிட்டு பாட்டி கடைக்குத்தான் ஓடுவேன்.

முன்னுரையில் வண்ணநிலவன் “மனம் உய்ய வேண்டும்; அதற்குத்தான் இலக்கியம்” என்கிறார். கடல்புரத்தில் எல்லோரும் முழுமையான அன்பும், கோபமும் ஒருங்கே கொண்ட மனிதர்களாயிருக்கிறார்கள்; செபஸ்தி அப்பாவின் மீது அன்பாகவும் இருக்கிறான்; கோபப்படவும் செய்கிறான். குரூஸிற்கு, மரியம்மையின் மேல் வெறுப்பும் இருக்கிறது; அன்பும் இருக்கிறது. பிலோமிக்கு, சாமிதாஸின் மேல் அன்பு துளியும் குறையவில்லை, அவன் பிரிந்தபோதிலும்.

*

பிலோமியைப் பார்க்க வீட்டிற்கு வருகிறான் சாமிதாஸ். இன்னும் சில நாட்களில் அவனுக்கு திருமணம் உவரியூர் பெண்ணுடன்.

”அவன் மெதுவாகக் குனிந்துகொண்டே வீட்டினுள் வந்தான். அந்தக் கால்களுக்கு அந்த வீட்டினுள் நுழைய அதற்குள் எப்படி இவ்வளவு தயக்கம் வந்தது.

“சும்மா உள்ளே வாங்க. இது அசல் மனுஷர் வூடு இல்ல. உங்களுக்க பிலோமி வூடுதா இது…”

அவனுக்கு வார்த்தைகள் இல்லை.

“பிலோமிக்கு நா பண்ணியிருக்க பாவத்துக்கு ஆண்டவர் என்னயத் தண்டிக்காம வுடமாட்டார்”

அவள் மௌனித்திருந்தாள். மீண்டும் அவனே பேசினான்.

“நீ என்னய மன்னிக்கணும்…எனக்கு மாப்பு தரணும்.”

“இப்படியெல்லாம் நீங்க பேசக்கூடாது.”

“நாளச்செண்டு கல்யாணம். ஒன்னயப் பார்க்கணும் பேசணும் போல இருந்திச்சு. அதான் வந்தேன். நீயும் கண்டிஷனாட்டு வரணும். நா ஒன்னயத்தா ரொம்ப நெனச்சுக்கிட்டிருப்பேன். சரின்னு சொல்லு…”

“ம்…”

பிலோமி சிரித்தாள்.

“என்ன சிரிக்கா? வருவியா?”

“வாரேன்…” என்று சிரிப்பினூடே சொன்னாள் .”

அந்தச் சிரிப்பின் முதிர்ச்சியையும், அன்பின் தளும்பலையும் அடைந்துவிட்டால் இந்த ஜென்மம் சாபல்யம் அடைந்துவிடாதா என்ன?

பச்சை – ஹரீஷ் கண்பத் சிறுகதை

ஹரீஷ் கண்பத்

அம்மா காலையிலேயே மதிய உணவுக்குத் தயார் செய்யத் துவங்கியிருந்தாள். கிராமம் என்ற நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் சிறுநகரமாய் மாறிக் கொண்டிருக்கும் இது போன்ற ஊர் ப்ரியாவுக்குப் புதிது. நகரத்திலேயே பிறந்து வளர்ந்தவள். நகரத்திலிருக்கும் எல்லாமும் இங்கேயும் வரத் துவங்கி விட்டாலும் ஒரு மெல்லிய இழையில் இரண்டும் வித்தியாசப்பட்டுக் கொண்டே இருப்பது இயல்புதான்.

அதன் பல சாட்சிகளுள் ஒன்றாய் சின்னச் சின்னக் கூரை வேய்ந்த வீடுகளையும், மாலையானால் வாசலில் கயிற்றுக் கட்டிலைப் போட்டுக் கொண்டு அரட்டை அடிக்கும் சனங்களும், வழியில் தென்படும் எல்லா வீடுகளிலிருந்தும் உணவுண்ண அழைப்பும் என்று பார்த்துப் பார்த்துக் கண்கள் விரிய ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் ப்ரியா.

மெல்ல வெளியிறங்கிப் படலைத் திறந்து கொண்டு நடக்கத் துவங்கினோம். முந்தைய நாளின் கோடை மழை இலை செடி கொடிகளைத் துடைத்து வைத்திருந்தது. பச்சை மணம் வீசிக் கொண்டிருந்தது. ஆளரவமற்ற சாலையை ப்ரியா வெகுவாக ரசித்தபடி நடந்து கொண்டிருந்தாள். அவ்வப்போது கடக்கும் எக்ஸல் சூப்பர் அல்லது எம் 80 யின் ஒலிகள் தவிர காற்று அமைதியாயிருந்தது.

பத்து நிமிட நடையில்தானிருந்தது கோவில். திடீரென்று வெயில் காணாமல் போய் மேகம் மூட்டம் போட்டது. சட்டென்று சுதாரிப்பதற்குள் சடசடவெனத் தூறல் விழத் துவங்கியது. வேகமாய் அருகிலிருந்த மரத்தடிக்கு ஓடி நின்றேன். ப்ரியாவும் பின்னோடு ஓடி வந்தாள்.

“ மழை பெய்யும்போது மரத்தடில நிக்கக் கூடாது தெரியும்ல. சய்ன்ஸ்” என்றாள் மூச்சு வாங்கலின் நடுவே சிரித்துக் கொண்டே. அவள் நெற்றியிலிருந்து பிரிந்திருந்த ஒற்றை முடியின் நுனியில் அமர்ந்திருந்த மழைத்துளி எப்போது வேண்டுமானாலும் கீழே விழக் கூடும்.

“ இது பாஸிங் க்ளவுட்தான். உடனே நின்னுரும் பாரு மழை,” என்று நான் சொல்லி முடிக்கச் சட்டென்று தூறல் நின்றது. அசட்டுப் பெருமையாயிருந்தது எனக்கு. மீண்டும் நடையைத் தொடர்ந்தோம். வழியில் கோமதியக்காள் எதிர்ப்பட்டாள். இதான் சம்சாரமா, என்றாள். ப்ரியாவின் கன்னத்தை வருடினாள். குசல விசாரிப்புகள் முடிந்து “தம்பி வூட்டுக்கு எப்ப சாப்புட வர்ற? ந்தா இன்னிக்குதான் வர்றது” என்றாள்.

எனக்குப் பிறக்கும் குழந்தையின் சிரிப்பு இப்படி இருந்தால் எவ்வளவு அழகாயிருக்கும் என்று சட்டென்று தோன்றியது கோமதியக்காவின் சிரிப்பைப் பார்த்து. அவ்வளவு துலக்கம். சிரித்துச் சமாதானம் சொல்லிக் கடந்தேன்.

பத்து நிமிடம் நடந்து கோவிலை அடைந்தோம். “இந்த ஊர்ல இவ்ளோ பெரிய கோவிலா?” என்றாள் வியப்பாய், செருப்பைக் கழற்றியபடியே. பிரதான சன்னிதி கூட்டமின்றி இருந்தது. ஓரிருவர் நின்றிருந்தனர். ஒரு சிறுவன் அவனைவிடச் சின்னப் பெண் ஒன்றை சிரமப்பட்டுத் தூக்கி மணி அடிக்க வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.

அர்ச்சகர் தரிசனம் செய்வித்துவிட்டு பிரசாதம் கொடுக்கையில் கல்யாணம் பற்றி விசாரித்தார். நல்லபடியாய் முடிந்தது சந்தோஷம், என்றார். பிரசாதம் வாங்கிக் கொண்டு அகன்றோம். கோவிலைச் சுற்றி வரும்போது பின்புறமிருந்த அரச மரத்தடி நாகரை வணங்கிக் கொண்டோம். அவ்வளவு பெரிய அரசமரத்தை விடுத்துச் சற்றுத் தொலைவில் சுவர் விரிசலில் லேசாய்க் கீறிக் கொண்டு முளைத்திருந்த அரசஞ்செடி மீது கவனம் பதிந்தது. அது லேசான காற்றில் சிலிர்ப்பது போல் அசைந்தது முதல் துளி மழை உடம்பில் பட்டதும் வரும் சிலிர்ப்புக்கொப்பாயிருந்தது.

அரச மரத்தின் பின்புறம் எங்கிருந்தோ வந்திருந்த ஒற்றை ஆடு முன்னங்கால்களில் எக்கித் தழை தின்ன முயன்று கொண்டிருந்தது. மெல்லப் பிரகாரச் சுற்றை முடித்து விட்டுக் கோவில் வாசலுக்கு வந்தோம்.  கோவிலின் அகன்ற திண்ணையைப் பார்த்ததும், “கொஞ்ச நேரம் உக்காந்துட்டுப் போவோம்” என்றேன். திண்ணையில் காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்காராமல் உட்தள்ளிச் சுவரில் சாய்ந்து சப்பணங்காலிட்டு அமர்ந்தோம். வெயில் தெரியவில்லையென்றாலும் திண்ணைக்கென வேயப்பட்டிருந்த கூரையின் நிழல் அலாதியாயிருந்தது.

சற்றைக்கெல்லாம் மீண்டும் சடசடவெனத் தூறல். “இதுவும் உங்க ஊர் மழை தானே? இது எப்ப நிக்கும்னு சொல்லு” என்றாள் ப்ரியா என்னைப் பார்த்துக் குறும்பாக. அவள் “உங்க ஊரு மழை” என்று சொன்ன பதம் பிடித்திருந்தது.  தூறல் கோடுகளினூடே மெதுவாக ஒரு எக்ஸல் சூப்பர் கடப்பது தெரிந்தது. கோவிலைக் கடக்காமல் நின்றது. வண்டியிலிருந்து இறங்கி வரும் வெள்ளை வேட்டி மனிதரின் நடையை எங்கோ பார்த்தது போலிருந்தது.

அருகில் வர வர நீர்க் கோடுகளை மீறி ஆள் அடையாளம் தெரிந்தது. ரங்கன் பெரியப்பாதான். என்னைப் பார்த்து விட்டிருக்கிறார். புன்னகையுடன் வந்தார். மழை அவரை ஒன்றும் செய்யவில்லை. திடீரென்று அவர் அருகில் வருவதற்குள் கோவிலுக்குள்ளே தரையில் நீர்த் துளிகள் விழுந்து தெறிப்பதைக் காண வேண்டும் என்று ஆவல் எழுந்தது. திரும்பி உள்ளே பார்ப்போமா என்று யோசனையினூடே பெரியப்பா வந்து சேர்ந்து விட்டார்.

“என்னாடா எப்பிடி கீற” என்றார். சங்கடமாய் நெளிந்தேன்.  “நல்லாருக்கேன் பெரிப்பா” என்றேன். ப்ரியாவிடம் “என் பெரிப்பா” என்றேன். அவள் புருவம் சுருக்குதலில் “இவர் கல்யாணத்துக்கு வரலியே?” என்ற கேள்வி தெரிந்தது.

“இதான் உன் சம்சாரமா. வணக்கம்மா. நல்லாக்கீரியா?” என்றார் நிறைவாக. “நல்லாருக்கேங்க” என்றாள், என்ன சொல்லி அழைக்க வேண்டுமென்ற குழப்பத்தில் எந்த உறவு முறையும் கூறாமல். மழை விட்டிருந்தது. கூரையின் நுனியிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது.

“செரி நட வீட்டுக்கு போவலாம்” என்றார். திடுக்கிட்டேன். “அது… வந்து… பெரிப்பா” என்று இழுத்தேன். “என்னாடா இழுக்குற. உங்கப்பன் என்னிய கல்யாணத்துக்கு கூப்புடலன்னு எனக்கு வருத்தம்தான். அதுக்கு நீ என்னா செய்வ. பெரிம்மா பாத்தா சந்தோசப்படுவாடா. என்னா வரியா” என்றார்.

அவர் அழைப்பின் தொனியில் “தயவு செய்து வாயேன்” என்ற விண்ணப்பமிருந்தது. ”சரி பெரிப்பா போலாம்… ஆனா சாப்பாட்டுக்கு….” என்றேன்.

“அது தெரியும். உங்கம்மா ஏற்கனவே செய்ய ஆரம்பிச்சிருப்பாங்க. நீ அங்கயே சாப்புடு. நம்மூட்ல எதுனா கலரு கிலரு முறுக்கு சாப்புட்டு போ. இல்ல காப்பித் தண்ணிதான் குடிச்சிட்டுப் போ. இன்னொரு நாளிக்கி சாப்டுக்கலாம். என்னா ஓகேதான” என்றார். என்ன ஒரு புரிதல். அந்த நொடி பெரியப்பாவைத் தோளோடு அணைத்துக் கொள்ள வேண்டும் போல் தோன்றியது.

“செரி. உனுக்குதான் வீடு தெரியும்ல. ந்தா அஞ்சு நிமிசம் நடந்தா வருது. நீ நடந்து வந்துர்றியா. நான் மருமவளக் கூட்டிகினு வண்டில போறன் முன்னாடி. என்னாமா வரியா” என்றார். ப்ரியா என்னைப் பார்த்தாள். மெல்லக் கண் காட்டினேன்.

“சரிங்க போலாம்” என்று வெகு இலகுவாகக் கிளம்பி விட்டாள். அவர்கள் இருவரும் வண்டியில் ஏறிக் கோவில் முனை தாண்டி மறைந்ததும் நடக்கத் துவங்கினேன். இப்படி மழை அவ்வப்போது நீர் தெளித்து இந்தச் செடிகளையெல்லாம் மேலும் மேலும் பச்சையாக்கிக் கொண்டிருக்கிறதே, ஒரு கட்டத்தில் இதற்கு மேல் செடியில் பச்சைக்கு இடமில்லை என்று செடியில் பட்டு வழியும் நீரெல்லாம் பச்சையாய் வழியப் போகிறதென்று நினைத்துக் கொண்டேன்.

நினைத்தவுடன் திரும்பி சாலையோரச் செடியைப் பார்த்தேன். அமைதியாயிருந்தது. பெரியப்பா இந்த ஐந்து நிமிட வண்டிப் பயணத்திலேயே ப்ரியாவுக்கு எங்கள் குடும்பக் கதையையும் அப்பாவுக்கும் அவருக்குமான உப்பு பெறாத ஏதோ ஒரு கவுரவச் சண்டை பற்றியும் அதனால் உண்டான பத்து வருஷப் பகை பற்றியும், ஆடு பகை குட்டி உறவு கணக்காகப் பெரியப்பா என்னையும் என் தம்பிகளையும் உறவாடுவதைப் பற்றியும் என் அப்பாவும் பெரியப்பாவின் பெண் மீது பாசமாயிருப்பதைப் பற்றியும்  விவரித்திருக்கக் கூடும்.

பெரியப்பா வீட்டுக்குப் போனால் தெரியும். பெரிய்ப்பா வீடு கோவிலுக்கு அருகிலேயே இருந்தது. ஐந்து நிமிஷ தூரம். இவ்வளவு அருகருகே இருந்து கொண்டு எப்படி பகையை தினந்தோறும் காலையில் எழுந்ததும் நினைவுபடுத்திக் கொண்டு அதை உயிர்ப்புடன் வைத்திருக்க முடிகிறதென்று ஆச்சரியமாயிருந்தது. யோசனையினூடே நடந்ததில் பெரியப்பாவின் வீடு வந்து விட்டது.

பால்யத்தில் நான் பார்த்த பெரியப்பா வீட்டின் வாசல் வேலிப் படல் இரும்பு கேட்டாக மாறியிருந்தது. உள்ளே வீட்டுக்குச் செல்லும் வழிகூட சிமெண்ட் வேயப்பட்டிருந்தது. கூடையைத் திறந்து விட்டிருப்பார்கள் போல. கோழிகள் ஆங்காங்கே சிதறிச் சுற்றிக் கொண்டிருந்தன. ப்ரியா பெரியப்பாவுடன் வாசலிலேயே நின்று கொண்டிருந்தாள்.

கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன். சரியாக பெரியம்மா வெளியே வந்தார். முகத்தில் அவ்வளவு மலர்ச்சி. பாதி வழியிலேயே மறித்தார். வாடா இப்பதான் இந்த கெழவிய பாக்கறதுக்கு வழி தெரிஞ்சிதா, என்று என் கன்னம் வழித்தார். பின் கையைப் பிடித்துக் கொண்டு அழைத்துப் போனார். பெரியம்மா கொஞ்சம்கூட மாறவில்லை. வாசலுக்குச் சென்றதும் நிப்பாட்டினார்.

“இங்கயே நில்லு வரேன். இது யாரு உன் சம்சாரமா. அழகா இருக்கா. நல்லாருங்க ரெண்டு பேரும். இந்தா வந்துர்றேன்,” என்று உள்ளே போனார். லேசான பரபரப்பு இருந்தது அவர் நடையில். உள்ளிருந்து இன்னதென்று இனம் பிரித்தறிய முடியாத ஏதோ ஒரு உணவு அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் வாசனை வந்தது.

ஆரத்தித் தட்டுடன் வந்து வரவேற்றார் பெரியம்மா. “கல்யாணம்லா நல்லபடியா நடந்துச்சா” என்றார். “போயி அவங்களுக்கு காப்பி போடு”, என்று பெரியம்மாவிடம் சொன்ன பெரியப்பா, “காப்பி குடிக்கிறிங்கள்ல?” என்றார் எங்களைப்  பார்த்து. தலையசைத்தோம். “இந்தா போறேன் இருங்க. பையன் வந்துகுறான் வூட்டுக்கு. இன்னா அவசரம்” என்று என் அருகில் வந்து கன்னத்தை வழித்தாள்.

சிறு வயதில் மடியில் போட்டுத் தூங்கப் பண்ணிய பெரியம்மாவின் சேலை வாடை மீண்டும் இத்தனை வருடங்களுக்குப் பின் இவ்வளவு அருகே. நிமிர்ந்து பெரியம்மாவைப் பார்த்தேன். கண்கள் மின்னிக் கொண்டிருந்தன. இவ்வளவு சந்தோஷம் தாங்காது என்பது போல இருந்தது அவளின் செய்கைகள்.

வீட்டின் பின்புறம் ரயிலின் ஓசை கேட்டது. பெரியம்மா விலகி சமையலறைக்குள் நுழைந்தார். “சின்ன வயசுல இங்க பெரியப்பா வீட்டுக்குப் பின்னால இருக்கற காம்பவுண்டு செவுரு எகிறி குதிச்சிதான் நானு பாஸ்கரெல்லாம் ரயில்வே கிரவுண்டுல போயி விளையாடுவோம்,” என்றேன் ப்ரியாவிடம்.

“அந்த செவுரெல்லாம் இப்ப ரொம்ப பெருசா கட்டிட்டானுக. அப்புறம் அந்த ரயில்வே ஸ்டேசன் வாசல்லருந்து பாய்ஸ் ஸ்கூலு போவோமுல்ல. அந்த ரோட்டையும் ரயில்வே பிராப்பர்டினு சொல்லி கேட்டு போட்டு அந்த பக்கம் போவ முடியாம செஞ்சிட்டானுங்க. இப்ப மெயின் ரோடுல சுத்திகினு ஆனந்தா ஓட்டலாண்ட போயிதான் பாய்ஸ் ஸ்கூல் போவணும். இல்லனா ட்ராக்குலயே நடந்து போவணும்,“ என்றார் பெரியப்பா.

ஏனோ ஊரின் முகம் பெரியப்பா சொன்ன ஒரு வாக்கியத்தில் சட்டென்று மாறி விட்டது போலிருந்தது. “ பாஸ்கர் எங்க?” என்றேன். இன்னும் சகஜமாய்ப் பெரியப்பா என்று அழைக்க வாய் வரவில்லை. “அவன் நால் ரோடு வரைக்கிம் போயிருக்கறான். வந்துருவான்” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே எம் 80 சத்தம் கேட்டது.

வ்ண்டியை நிறுத்தி விட்டு உள்ளே வந்தவன் எங்களைப் பார்த்ததும் சட்டென்று நின்று விட்டான். சூழலை கிரகித்துக் கொள்ள சில நொடிகள் தேவைப்பட்டது அவனுக்கு. எழுந்து அவனை நெருங்கினேன். தோள் மேல் கை போட்டு அணைத்தேன். “எப்படி இருக்க பாஸ்கரு” என்றேன். தயங்கிப் பின் அவனும் அணைத்தான். “டேய் எப்பிட்றாகீற. நான் நல்லாகுறன். என்றவன் இயல்பாய் ப்ரியாவைப் பார்த்து, “இன்னாமா நல்லாகுறியா” என்று புன்னகைத்தான்.

“பெரியப்பா பையன். எனக்கு அண்ணன். ஆனா பெஸ்டு ப்ரெண்டு,” என்று ப்ரியாவிடம் அறிமுகம் செய்தேன்.

பெரியம்மா காபிக் கோப்பைகளை ஒரு பெரிய தட்டில் வைத்து கூட பிஸ்கட், சீடை, முறுக்கு என்று எதையெதையோ கொண்டு வந்தார். கவனிப்பும் அனுசரிப்பும் பேச்சுகளும் விசாரணைகளும் நீண்டபடியிருந்தன. கவனமாய் அப்பா பற்றிய பேச்சு மட்டும் எழாமல் பார்த்துக் கொண்டார் பெரியப்பா.

நேரமாகி விட்டதென்று சொல்லிக் கொண்டே கிளம்புவதற்கு எழுந்தேன். பெரியப்பா “எப்படி போற?” என்றார். “ நடந்துதான் “ என்றேன்.

“இரு நான் கொண்டு வுடறேன்,” என்றார். திடுக்கென்றது. இதென்ன தர்ம சங்கடம்? “இல்ல… நாங்க ரெண்டு பேரு… நடந்தே….” என்றேன். “அட அதுக்கென்ன. என் வண்டி கீது. பாஸ்கர் வண்டி கீது. போலாம் வா,” என்றார். பாஸ்கரும் குழம்பினான். ஆனால் தயாரானான். விஷயத்தின் வீரியம் புரியாததால் ப்ரியா வேடிக்கை மட்டும் பார்த்தாள்.

“என்ன நடக்கப் போகிறதோ என்ற பயத்துடன் கிளம்பினேன். பெரியப்பா வண்டியில் ப்ரியா ஏறிக் கொள்ள, பாஸ்கருடன் நான் கிளம்பினேன். வீடு நெருங்க நெருங்க குழப்பம் அதிகரித்தது. ஒன்றிரண்டாய்த் தூறல் போட்டுக் கொண்டிருந்தது. போகும்போது இருந்த தூறலை ரசிக்கிற மனநிலை இப்போது இல்லை.

யோசித்து முடியாமல் வீடு வந்து விட்டது. இறங்கிக் கொண்டு எதுவும் சொல்லாமல் மௌனமாய்த் தலையாட்டினேன். அவர்களைக் கிளம்பச் சொல்லி நேரிடையாய்ச் சொல்ல முடியாது. அப்பா வெளியே வந்து விடக் கூடாதென்பதே என் வேண்டுதலாயிருந்தது.

சட்டென்று ப்ரியா, “ உள்ள வாங்க பெரியப்பா,” என்றாள். சொல்லி விட்டு பதிலுக்குக் காத்திராமல் உள்ளே நுழைந்து விட்டாள். ஒரு நொடி என்னைப் பார்த்த பெரியப்பா பின் எதுவும் பேசாமல் உள்ளே நுழைந்தார். உயிர் போய் விடும் போலிருந்தது. இந்த ரயில் வேறு நேரம் காலம் தெரியாது கூவித் திரிந்து கொண்டிருந்தது.

வாசலில் அரவம் கேட்டு அம்மா தான் முதலில் வந்தாள். அதிர்ச்சியை மெல்ல மென்று முழுங்கியவள் “ வாங்கணா. வா பாஸ்கரு,” என்றாள் மெல்லிய குரலில். படி வரை வந்தவரை எப்படி வர வேண்டாமென்று சொல்வது என்பது தவிர அவள் வரவேற்க வேறு காரணங்களில்லை. பயம் அப்பிக் கிடந்தது அவள் கண்ணில்.

“தம்பி நடந்து வர்றன்னு சொன்னான். அதான் எதுக்கு நடக்கணும்னு நாங்க கூட்டினு வந்தோம். கல்யாணமெல்லாம் நல்லா நடந்துச்சா?” என்றார்.

“ஆங்… நல்லா… நடந்துச்சு,” என்றாள் அம்மா. குக்கர் விசிலடித்தது. இப்போது இந்த நொடி சோவென்று பெருமழை பெய்யத் துவங்கி பேச்சுக் குரல்களை அமுக்கி விடாதா என்றிருந்தது எனக்கு.

அப்பா வெளியில் வந்தார். நின்றிருப்பவர்கள் எல்லாரையும் பார்த்தார். பின் அப்பாவின் பார்வை பெரியப்பா மீது நிலை கொண்டது. சில நொடிகள். யுகங்களுக்கான மௌனங்களைத் தமக்குள் பொதிந்து வைத்திருந்த நொடிகள். மீண்டும் குக்கர் கத்தியது. “வா. எப்படிகீற” என்றார் அப்பா பெரியப்பாவைப் பார்த்து.

“ நல்லாகுறன். நீயி?” என்றார் பெரியப்பா.

“ நல்லாதான் இருக்குறன். வா வந்து உக்காரு,” என்றார். பெரியப்பா சுவாதீனமாய் அமர்ந்து கொண்டார்.  “கல்யாணத்துக்கு கூப்புட…” என்று தொடங்கிய அப்பாவை அவசரமாய் இடை மறித்து “அது பரவால்ல” என்றார் பெரியப்பா.

“எப்படிகிற பாஸ்கரு” என்றார் அப்போதுதான் பாஸ்கரைப் பார்த்த அப்பா.

“நல்லாகுறன் சித்தப்பா” என்றான் பணிவாய்.

பின் ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு “புள்ளைக்கி கல்யாணம் ஆகிருக்குது. அதான் நம்ம வூட்டுக்கு சாப்புட கூப்புடலாம்னு. நாளைக்கி அனுப்பி வெக்கிறியா?” என்றார். இத்தனை உரையாடல்களின் இடையேயும் இருவரும் ஒருவரையொருவர் கண் பார்த்துக் கொள்ள தவிர்த்தனர்.

“அதுக்கென்னா. வருவான்” என்றார் அப்பா.

“செரி அப்ப நான் கெளம்பறேன்” என்று திரும்பியவர் மீண்டும் ஒரு முறை தயங்கி நின்றார். சட்டென்று அப்பாவின் பக்கம் திரும்பி அவர் தோளைத் தொட்டு, “நீயும் வாயேன். சம்சாரத்தையும் கூட்டினு வா. எல்லாரும் வாங்க. ரெம்ப நாளாச்சி” என்றார். இப்போது அப்பாவின் கண்ணை நேருக்கு நேர் பார்த்தார்.

“செரி என்னா வேல கீதுன்னு பாத்துகினு நாளிக்கி எல்லாரும் வந்துர்றோம். அண்ணியாண்ட சொல்லிரு,” என்றார் அப்பா. மெல்லத் தலையசைத்த பெரியப்பா வாசலை நோக்கி பாஸ்கருடன் நடந்தார்.

நான் பின்னாலேயே சென்றேன். திரும்பி, “வரேன் தம்பி. நாளிக்கி அப்பா அம்மா எல்லாரையும் இட்டுகுனு வந்துரு” என்றார். “சரிங்க பெரியப்பா” என்றேன். மஹை பெருந்தூறலாய் விழத் துவங்கியிருந்தது. கோவில் மணிச் சத்தம் தீனமாய்க் கேட்டது. குக்கர் மீண்டும் சத்தம் போட்டது.  பெரியப்பாவின் வண்டி கிளம்பித் தெருமுனை சென்று திரும்பி மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தேன். ரயில் சத்தம் கேட்கத் துவங்கியது.