எழுத்து

கட்டுக்கழுத்தியம்மன்

கலைச்செல்வி

பூசாரி தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பூசை சாமான் அடங்கிய பொட்டலங்களை ஒவ்வொன்றாக பிரித்தார். அடுக்கி கிடந்த தொன்னைகளை வெளியே எடுத்து தனித்தனியாக பரப்பி வைத்தார். விபூதி பொட்டலத்தைப் பிரித்து தொன்னை ஒன்றில் கொட்டும் போது அவர் வாய் தானாகவே முணுமுணுத்துக் கொண்டது.

ஓம் ஸ்ரீ கணேசாய நமஹ

ஓம் ஸ்ரீ குல தேவதாய நமஹ

ஓம் ஸ்ரீ இஷ்ட தேவதாய நமஹ

ஓம் ஸ்ரீ அதிஷ்ட தேவதாய நமஹ

பூசாரிக்கு வயது அறுபதுக்கு மேலிருக்கும். கண்கள் சாராயத்தின் வீக்கத்திலிருந்து விடுபடாதது போலிருந்தது. மீசையும், தாடியும், புருவமும் முகத்தை அளவுக்கதிகமாவே ஆக்கிரமித்திருந்தது. குளித்த உடலில் காவி நிற வேட்டியை சுற்றியிருந்தார். ஈரம் காயும் முன்பே பூசிய விபூதி வெள்ளை வெள்ளையாக காய்ந்து கருத்த உடலுக்கு தேஜஸ் கொடுத்தது. சந்தன பொட்டலத்தைப் பிரித்தார். பரவால்ல.. துாளு சந்தனந்தான்.. தொன்னையில் கொட்டினார். அருகிலிருந்த பன்னீர் பாட்டிலை எடுத்து சிறுவனிடம் நீட்டினார். மகள் வயிற்று பேரன். மிஞ்சிப் போனால் பத்து வயதிருக்கும் அவனுக்கு. தாத்தாவின் பார்வையிலேயே தேவைகளை புரிந்துக் கொண்டு பரபரப்பாக செயல்பட்டான். சுவரில் கையை தேய்த்து சொரசொரப்பாக்கிக் கொண்டு பாட்டிலை திறந்து பன்னீரை கொஞ்சமாக சந்தனம் வைத்திருந்த தொன்னையில் ஊற்றினான்.

பொழுது விடிந்தும் விடியாததுமாக இருந்தது. நேற்று காலையில்தான் பெரியவர்  பூசாரிக்கு தகவல் சொல்லி அனுப்பியிருந்தார். பெரியவர் ஊரில் முக்கிய தலைக்கட்டு. நிலபுலத்துக்கு குறைவில்லாத குடும்பம். ஊருக்குள் அவர் பேச்சுக்கு மறுபேச்சு அநேகமாக இருப்பதில்லை. எப்போதாவதுதான் அவர் பேசுவதும் ஒரு காரணமாக இருக்கலாம். முழங்கால் உயர திண்ணையில் கால்களை பின்னலிட்டு அமர்ந்திருப்பவரின் பார்வையை அத்தனை எளிதாக கடந்து விட முடியாது. “அய்யா.. சாப்டீயல்லா..“ அசடு வழிய கேட்க வேண்டியிருக்கும். பதிலாக தலை அசைப்பு மட்டுமே. மகன் மருதமுத்து வேலைக்காக பிரிந்து சென்றபோதோ பிறகு அங்கேயே வீடு வாங்கி குடியேறியபோதோ கூட ஏற்பட்ட தவிப்பை அவர் வார்த்தைகளாக்க விரும்பவில்லை. என்றோ சில சமயங்களில் தானாகவே வாய் விட்டு பேசுவதை யாராவது பார்க்க நேரிடும். அது குறித்து யாரும் அவரிடம் கேட்டதில்லை.

“பெரியவுக மவன் குடும்பத்தோடு வர்றாப்பலயாம்.. பூசைக்கு ஏற்பாடு செய்ய சொன்னவோ.”

”சுத்த பூசயா..? பலி பூசயாம்மா..?” மருதைய்யனுக்கென்றால் பலி பூசைதான் வழக்கம்.

”கட்ளத்தியம்மனுக்கு நேத்திக்கடென் கெடக்காம்.. அதான்..”

உருவிய சாராய பாட்டிலை கூரையின் இடுக்குக்குள் சொருகினார் பூசாரி. கட்டுக்கழுத்தியம்மனுக்கு நேர்த்தியென்றால் சுத்த பூசைதான். படையலுக்கு பொங்கலும் சுண்டலும் போதும். ஆனாலும் பெரியவர் வீட்டு படையலென்றால் தவுசுபிள்ளை ஏற்பாட்டில் வடை பாயாசத்தோடு மதிய சாப்பாடு பெரிய விருந்தாகி விடும். கிளம்பும்போது முழுசாக முள்ளங்கிப்பத்தையாட்டம் ஆயிரம் ரூபாய் தாளொன்றை புது வேட்டி சட்டையோடு வைத்து நீட்டுவார்கள். மனசு கும்மாளம் போட்டது பூசாரிக்கு. அதிகாலையிலேயே பேரனை எழுப்பி குளிக்க வைத்து அழைத்து வரும்போது பூசாரியின் மனைவி வீட்டை சாணமிட்டு மெழுகிக் கொண்டிருந்தாள். கொண்டைக்கடலை பெரிய அண்டாவில் ஊறிக் கொண்டிருந்தது. சர்க்கரைப் பொங்கலும் சுண்டலும் அவள் பொறுப்பு.

சிறிய கோவில் அது. மருதையன் ஏழுக்கு ஒன்பது அளவிலான கருவறையில் சீரான உயரத்தில் மண்ணாலான சிலைக்குள் குடிக் கொண்டிருந்தார். சிவப்பு நிற உடலும் கரிய பெரிய மீசையும் மஞ்சள் நிற கதுப்பான கன்னங்களுமாக வீரக்களையுடன் கையில் நீண்ட அரிவாள் வைத்திருந்தார். சிறுவன் சிலையின் மடிப்புகளில் இருந்த குளவிக் கூடுகளை தட்டி விட்டு சுத்தமாக துடைத்தான். சிலையின் முன்பாக தரையில் பதிக்கப்பட்டிருந்த அரிவாள் எண்ணெய் தடவலில் பளபளத்திருந்தது. சிலையின் பீடம் எண்ணெய் பிசுக்கேறியிருந்தது. பூஜை கண்டு நாளாகிப் போனதில் கரிய சுவரில் மடிப்புகளாக ஒட்டடை தொங்கியது. யாரோ வேண்டுதலுக்காக தொங்க விட்ட சர விளக்கிலிருந்து தரையில் வழிந்திருந்த எண்ணெயின் மீது காற்றின் உபயத்தால் மண் பூத்துக் கிடந்தது. சிறுவன் தேங்காய் நாரால் பிசுக்கை பரபரவென்று தேய்த்தான். கற்பூர ஆரத்தி மட்டுமே சிலைக்கு. அபிஷேகம் மற்றதெல்லாம் அரிவாள் வடிவ மருதையனுக்குதான். மருதையனின் கட்டுப்பாட்டில் ஏழெட்டு கிராமங்கள் இருந்ததில் சிறிய கோபுரம் எழுப்பி கோவிலை புனரமைக்க முடிந்தது. முன்புறத்தை விரிவாக்கி பேச.. உட்கார, பிடிக்க.. சமைக்க, பரிமாற.. என சிமிண்ட் தளம் அமைத்து ஆஸ்பெஸ்டாஸ் கூரையை ஆங்கிளால் நிறுத்தி பயன்பாட்டை கூட்டியிருந்தனர்.

கருவறையை தாண்டிய வராண்டா சுவர்களால் தடுக்கப்பட்டு சிறிய அறை போல ஆக்கப்பட்டிருந்தது. எல்லாம் பெரியவர் வீட்டு கைங்கர்யம்தான். அதிலிருந்த கான்கீரிட் மேடையில் அதீதமான வெண்கல புன்னகையுடன் கட்டுகழுத்தியம்மன் வீற்றிருந்தாள். ஐம்பந்தைந்து வருடங்களை கடந்த புன்னகை. பெரியவரின் மனைவியாக வீரம்மாள் என்ற பெயரில் உயிரும் உடலுமாக நடமாடும்போது தொலைத்த வசந்தமனைத்தையும் மீட்டெடுப்பது போன்ற நித்ய புன்னகை. தெய்வக்கதைகளை கேட்கவும் மெனக்கெட்டு சொல்லவும் ஆளின்றி போனதில் தை வெள்ளி.. ஆடி வெள்ளிகளுக்கான அம்மனாக மாறிப் போனாள். கட்டுக்கழுத்தியம்மன் என்ற அவள் பெயரும் அதற்கு காரணமாக இருக்கலாம்.  அணிவிக்கப்பட்டிருந்த அடர் பச்சையாலான சரிகை சேலையில் துாசி படிந்திருந்தது  ”தப்புதண்டா செஞ்சிருந்தா மன்னிச்சுக்கம்மா..“ பெரிதாக ஒரு கும்பிடு போட்டு விட்டு சிலையின் மேலிருந்த காய்ந்த மாலையை அகற்றி சுத்தப்படுத்தத் தொடங்கினார் பூசாரி.

கருவேல செடி அடர்வில் மறைந்து மறைந்து வந்து நின்றது அந்த சாம்பல் நிற கெட்ஸ் வண்டி. காரின் கதவை ஆதரவாக பிடித்துக் கொண்டு முன்னிருக்கையிலிருந்து மெல்ல இறங்கினார் பெரியவர். எண்பது வயதிருக்கும். வீரம்மாளை மணக்கும் போது இருபத்து மூன்றில் இருந்தார் ஓங்குதாங்கான தேகம். மாநிறத்தை கடந்த நிறம். தங்கநிற சரிகை கரை வேட்டி அணிந்திருந்தார். கழுத்தைச் சுற்றி அணிந்திருந்த துண்டு நெஞ்சு வரை வழிந்திருந்தது. உடல் அதிகம் தளர்ந்திருக்கவில்லை. அவர் வயதையொத்த அங்காளிபங்காளிகள் கொள்ளு பேரனை பார்த்து விட்ட போதிலும், இரண்டு வருடங்களுக்கு முன்புதான் அடுத்த தலைமுறை வித்தாக பேத்தி பிறந்திருந்தாள்.

ஓட்டுநர் இருக்கையிலிருந்து மருதமுத்து இறங்கினான். பெரியவரின் தத்து புத்திரன். முப்பது வயதிருக்கும். அதிகாரிக்குரிய முகவெட்டு. உறங்கிக் கொண்டிருந்த மகளை தோளில் சாய்த்துக் கொண்டு அவன் மனைவி அபிநயா இறங்க கூடவே சின்னவரும். பெரியவரை ஒற்றி எடுத்ததுப் போன்ற தோற்றம் சின்னவருக்கு. தகப்பனை இழக்கும் போது சின்னவருக்கு இரண்டு வயதிருக்கும். தாயின் புடவை தலைப்பே கதியாக்கி கொண்டவருக்கு பிறகு அதுவே சுபாவமாகிப் போனது. அண்ணனை நேருக்கு நேர் நிமிர்ந்து பார்த்து பேசுவது கூட சின்னவருக்கு சவால்தான். வயல் வேலைக்கு அஞ்சாத தேகம். இரவுநேர படுக்கை கூட வயல்காட்டில்தான் என்றாலும் சின்ன மின்னலோ.. இடியோ.. கூட சின்னவரின் உறுதியை குலைத்து விடும்.

காரின் அருகே ஓடி வந்தார் பூசாரி. ”அய்யா.. வாங்கய்யா.. வாங்கய்யா.. எல்லாரும் வரணும்..” என்றார் பணிந்து குழைந்து.

அலங்காரமின்றி பளிச்சென்று துடைத்து விடப்பட்ட மருதைய்யனையும் கட்டுக்கழுத்தியம்மனையும் திருப்தியாக பார்த்து விட்டு பிறகு பெரிய கும்பிடாக வைத்தார் பெரியவர். ”பிரசாதமெல்லாம் ஆயிட்டுருக்கில்ல..”

”ரவைக்கே கடல ஊற போட்டாச்சுங்கய்யா.. அர அவர்ல ரெடியாயிடும்…”

அடர்த்தியாக தொடுக்கப்பட்டு மெல்லிய வெண்பட்டு சரிகையால் சுற்றப்பட்ட மல்லிகை மாலை அடங்கிய பையை கட்டுக்கழுத்தியம்மன் பீடத்தில் வைத்து விட்டு நகர்ந்தவர் துாணோரம் கால்களை நீட்டியப்படி அமர்ந்துக் கொண்டார். சுற்றிலும் பரவியிருந்த கருவேல மரங்கள் அதிகாலை பொழுதில் கூட அழகற்று இருந்தன. கட்டுக்கழுத்தியம்மன் சன்னதியையொட்டி மருதமுத்து மனைவியுடன் அமர்ந்துக் கொண்டான். சுற்று சுவர்களில்லாத வெளியில் வீசிய அதிகாலைக் காற்று மடியில் துாங்கிக் கொண்டிருந்த மகளின் உறக்கத்திற்கு தாலாட்டாக இருந்தது.

நீட்டி நிமிர்ந்திருந்த அரிவாளில் விபூதி பட்டையிட்டார் பூசாரி. எலுமிச்சம்பழத்தை கையில் எடுத்தவர் ”அந்த சேப்பு எடுப்பா..” என்றார் பேரனிடம்.

”சேப்ப காங்கலயே தாத்தா..” என்றான் சிறுவன். அந்நிய ஆட்கள் முன் அவன் பேச்சு வெட்கத்தில் குழைந்தது.

”தோ.. இருக்கு பாருப்பா..” குவிந்திருந்த பூசை சாமானுக்குள்ளிருந்து  குங்கும பாக்கெட்டை உருவி நீட்டினான் மருதமுத்து. நழுவி விழாத நவீன வேட்டி அணிந்திருந்தான். வேட்டியின் பாக்கெட்டில் பர்ஸ் துருத்திக் கொண்டிருந்தது. வெற்று மார்பில் முசுமுசுத்து வளர்ந்து கிடந்தன மயிர்கள்.

“இதென்னா தாத்தா சேப்பு இரத்த கலர்லருக்கு..?” சேப்புன்னா ரோசு கலர்ல்ல இருக்கும்.. என்ற குழப்பம் ஆட்கொண்டதில் தலையை நிமிர்த்தாமலேயே கேட்டான்.

”சொம்மா இர்ரா.. அப்டியெல்லாம் பேசக்குடாது..“ பேரனை அதட்டினார் பூசாரி.

”தம்பி.. எப்போ வந்தீங்க..?” பேச்சுக் கொடுத்தார்.

”ராத்திரி பன்னெண்டாயிடுச்சுல்ல..” மருதமுத்துவின் குரலில் அலுப்பு மீதமிருந்தது.

“அதான் புள்ள துாங்கிடுச்சு..“ சம்பிரதாயமாக பேசிக் கொண்டே எலுமிச்சம் பழத்தை அரிவாளில் சொருக, அதிலிருந்த குங்குமம் சாறோடு கலந்து செந்நீராய் வழிந்தது.

“எங்க..? சின்னய்யாவ காங்கில..?”

“தோ வாரேன்ல..“ வேட்டி நுனியை பிடித்தபடியே செருப்பிலிருந்து கால்களை விடுவித்துக் கொண்டு அருகில் வந்தார் சின்னவர்.  “நல்லாருக்கீயளாய்யா.? உள்ளுருன்னுதான் பேரு.. பாத்து நெடுநாளாச்சு..”

சின்னவரின் விசாரிப்பில் சங்கடப்பட்டு நெளிந்தார் பூசாரி.

“எளநீயெல்லாம் வச்ச வாவுல கெடக்கு.. அருவாள எடுங்க.. கண்ண தொறந்து வச்சிடுறன்..” வந்தவுடனேயே பரபரப்பான சின்னவரிடம் ”நீங்க குந்துங்கய்யா.. பய பாத்துக்குவான் அதெல்லாம்..“ என்றார் பூசாரி.

”புள்ளய குடும்மா.. எம்புட்டு நேரமா கால்ல போட்டுக்கிட்டு.. காத்தாட துாக்கீட்டு போறன்..“ ஓரிடமாக உட்காருவது பழக்கப்படவில்லை சின்னவருக்கு.

“எலேய்.. போய் அம்மாச்சிக்கு வெறகு எடுத்தாந்து போடுய்யா..” பேரனை ஏவினார் பூசாரி.

மந்தையிலே மாரியாயி

மல மேல மாயவரே..

சந்திரரே சூரியரே..

இந்திரனே மருதைய்யா.

மழை நல்லா பெய்ய வேணும்..

மக்களளெல்லாம் வாள வேணும்..

சுதந்திரம் கிடைத்தது போல பாடிக் கொண்டே துள்ளி குதித்து ஓடினான் சிறுவன்.

”பேரனுக்கும் சொல்லி குடுத்துட்டீங்க போல..” என்றாள் அபிநயா. கால்களை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

”கூடவே கெடக்கற பய.. தன்னால வந்துடும்.. ஆளுங்கள காணவும் வெக்கம் வந்துடுச்சு பயபுள்ளக்கு.. இல்லேன்னா வெளுத்து வாங்கிடுவான்..” என்றார் பெருமையாக. கணவனும் மனைவியுமாக தனித்து விடப்பட்டதில் பூசாரிக்கு பேச்சு வளர்க்க தோதுவாகிப் போனது. வெளியூரில் பிழைக்க சென்றோர்க்கு சொந்த ஊரின் மீது ஒரு கரிசனம் இருக்கும். நேக்கு பார்த்து தட்டு விட்டால் பேச பேச காசுதான்.

”பெரியவரு வூட்ல ராம லச்சுமணன்மாரி ரெண்டே பசங்கதான்.. பெரியய்யாவும் சின்னவருந்தான்.. சிறு வயசுலயே பெரியவரோட அப்பா பொண்டாட்டி புள்ளங்கள வுட்டுட்டு போய் சேந்துட்டாரு.. பொம்பளயாயிருந்தாலும் மல்லுக்கட்டா சொத்த காவந்து பண்ணி கொண்டாந்துருச்சு அந்தம்மா.. பெரிய மவன கேக்காம ஒண்ணு கூட செய்யாது.. பெரியவருக்கும் அம்மான்னா உசுருன்னு வச்சிக்கயேன்.. பக்கத்துல கல்லுக்காரன்பட்டியிலதான் மவனுக்கு பொண்ணெடுத்துச்சு.. ஏளைப்பட்ட பொண்ணுன்னாலும் மவாலட்சுமிகணக்கா இருக்கும் பெரியவரு சம்சாரம்.. வீரம்மானு பேரு.. குடும்பத்துக்கேத்த பொண்ணு.. மாமியாட்ட ஒத்த வாருத்த எதுத்துக்கிட்டது கெடயாது.. ஆரு கண்ணு பட்டுச்சோ தெர்ல.. பெரிய வென ஆயி போச்சு அந்த குடும்பத்துக்கு..”

கட்டுக்கழுத்தியம்மனின் கைகள் ஒவ்வொன்றுக்கும் மஞ்சளால் வளையலிட்டார் பூசாரி.

”ஆச ஆசயா கண்ணாலம் பண்ணி வச்சுது பெரிய மவனுக்கு.. ஆனா என்னா..? வம்சம் தளைஞ்சு வாரத பாக்க குடுப்புன இல்லாம போச்சு அந்தம்மாளுக்கு.. சின்னவருக்கு பொண்ணு தேடிக்கிட்டுருந்த தாவுல அரவம் தீண்டி உசுரு அமைஞ்சு போச்சு..”

திருமணமாகி வருடம் இரண்டு கடந்தும் வீரம்மாள் மலடாகவே இருந்தது  மாமியாருக்கு கோபமாக வெளிப்பட தொடங்கியது. மாதாந்திர ஒதுக்கத்தில் பின்கட்டில் தனித்திருப்பவளுக்கு சாப்பாடு கூட சரியாக கிடைப்பதில்லை. கைக்கும் வாய்க்குமே பிரச்சனையான வீட்டில் பிறந்தவளுக்கு பட்டினி கிடப்பதொன்றும் பெரிய விஷயம் இல்லைதான். ஆனால் எதற்கும் எதிர்வினையாற்றாத கணவனும் திரும்பி போகவியலாத பிறந்த வீடும் தனக்கு எதிராக அமைந்ததில் மௌனம் காக்க வேண்டியிருந்தது வீரம்மாளுக்கு. வீரம்மாளின் தாய்க்கு மகளை நினைத்து நெஞ்சுவரைக்கும் கவலை.  எங்கோ உடுக்கடித்து பார்த்ததில் கர்ப்பவாய் திறந்து கிடப்பதாக சேதி வந்தது. சாமியாடியும் அதையே உறுதிப்படுத்த, சற்று நிம்மதியாக இருந்த நேரத்தில்தான் சம்மந்தியம்மாளின் திடீர் மரணம்.

தாயும் மகனுமாக பார்த்த குடும்ப நிர்வாகம். மாமியாரிடமிருந்து திடீரென தன் கைக்கு மாறியதில் திக்குமுக்காடிப் போனாள் வீரம்மாள். சுதாரித்து கொண்டு நிமிர வருடம் ஒன்று ஓடிப் போனது. தாயில்லாத மகன்கள் இருவருக்கும் தாயாகி போனதும் இந்த காலக்கட்டத்தில்தான்.

தன்னை விட இரண்டொரு வயது மூத்தவரான கொழுந்தனிடம் முதலில் தயங்கி தயங்கிதான் பேசினாள் வீரம்மாள். பிறகு கொழுந்தனின் சுபாவம் புரிப்பட்டு போனதில் அதட்டலும் உரிமையுமாக பழக தொடங்கினாள். தொட்டதெற்கெல்லாம் தாயிடம் அபிப்பிராயம் கேட்கும் பழக்கம் அண்ணியிடம் என்றாகி போனது சின்னவருக்கு. “தொட்ட தொண்ணுாறுக்கும் கேட்டுக்கிட்டு கெடந்தா நாளக்கு கட்டிக்கிட்டு வாரவோ கா காசுக்கு ஒன்ன மதிக்க மாட்டா.. சொல்லிட்டேன்.. ஆமா..” என்பாள் கண்டிப்பாக கொழுந்தனிடம்.

“இனிமேட்ல்லாம் மாத்திக்க முடியாதுண்ணி..“ என்பார் சின்னவரும் விடாப்பிடியாக.

மருதமுத்துவுக்கு சித்தப்பன் மூலமாக இந்த கதைகள் அத்துப்படி. புகைப்படத்தில் கூட பார்த்திராத வீரம்மாளின் உருவம் மெல்ல மெல்ல தாயாக அவனுக்குள் குடி புகுந்தது அப்படிதான்.

சரிகை பட்டுச்சேலையும் மல்லிகை மாலையுமாக கட்டுக்கழுத்தியம்மன் அத்தனை நேர்த்தியாகத் தெரிந்தாள். மஞ்சள் கிழங்கு தாலி கழுத்தில் எடுப்பாக தொங்கிக் கொண்டிருந்தது. கழுத்தில் அணிவிக்கப்பட்ட தங்கத்தாலான சங்கிலி சிலையின் வயிறு வரை ஓடியிருந்தது. விசேஷ நாட்களில் கையோடு கொண்டு வந்து அணிவித்து பார்ப்பதில் எல்லோருக்குமே விருப்பமிருந்தது.

”மவராசி போயி சேந்து முழுசா ரெண்டு வருசம் முடியில.. மரிமவளயுமில்ல கூப்டுக்குச்சு.. சாவற வயசா தாயி அது.. ஒங்காம நொங்காம நெருப்புல்ல தின்னுட்டுப் போச்சு அந்த புள்ளத்தாய்ச்சி பொண்ண..”.

”பிள்ளத்தாய்ச்சியா..” சின்னவரிடம் ஆச்சர்யமாக கேட்டான் மருதமுத்து அன்று இரவு.

”ஊரு மருவாதி.. பேரு மருவாதின்னு ஒண்ணு இருக்குல்ல.. ஆயிரம் பொய்ய சொல்லி கண்ணாலமே பண்ணுதுவோ.. இது சாவு தானே..” என்றார் சின்னவர். முகம் சிறுத்திருந்தது. அன்று இரவு முழுக்க சுமையை இறக்கவும் ஏற்றவுமான மனநிலையில் இருவரும் இருந்தனர்.

சம்மணமிட்டு மரத்திருந்த கால்களை சட்டென்று உதறி கொண்டு எழுந்தான் மருதமுத்து. “அபி.. பாப்பா இந்நேரம் முழிச்சிருப்பா.. போய் பாத்துட்டு வர்றேன்..”

கை குறைய குறைய பூசாரிக்கு கதை சொல்லும் ஆர்வம் மிகுந்துப் போனது.

“செத்துப் போன ஆத்தாதான் மவளா பொறக்குமுன்னு பெரியவரு கனவா கண்டுருக்க.. எல்லாமே நெருப்புல பொசுங்கி போச்சு தாயீ.. பொசுங்கிப் போச்சு..” அப்போதுதான் நிகழ்ந்தது போல் தான் பார்த்தேயிராத இறப்பு பற்றி உருக்கமாக சொன்னார் பூசாரி.

”அன்னீக்கு வெறுத்துப் போனவருதான் பெரியவரு.. அதுக்குபொறவு ஆளு எங்கயும் தட்டுப்படுல.. தேடாத எடம் பாக்கியில்ல.. சின்னவருக்கு ஒரேடியா பதைக்குது.. படுத்தபடுக்கையாவே ஆயிட்டாரு.. மருதைய்யனுக்கு எதோ கொறப்பாடாருக்கும்.. கடா சோறு போட்டு எச்சி எல எடுக்கணும்னு எங்கப்பன்தான் சொன்னாராம்.. கடா வெட்டி முளுசா ஏழு நாளு களியில பாத்துக்க.. தாயீ.. ஒம் மாமனாரு திரும்பீட்டாரு.. மருதய்யன் அம்புட்டு பவுருஃபுல்லு..  குரலை தழைத்துக் கொண்டார். “சின்னவருக்கு எங்கிட்டுருந்துதான் அம்புட்டு தகிரியம் வந்துச்சோ தெர்ல.. பொறந்தவன மொகத்துக்கு மொகம் கூட பாக்க முடியாதுன்னுட்டாரு.. அம்புட்டு கோவம் அண்ணாரு மேல.. பொறவு..? அம்புட்டு பேரும் வுட்டுட்டு போயீட்டா அந்த பயங்கொள்ளிப்புள்ள என்னா செய்யும் சொல்லு தாயீ..“

”எங்க போயிருந்தாராம்..?”

”ஆருக்கு தெரியும்.. அவருக்கிட்ட கேக்கற அளவுக்கு அம்புட்டு தகிரியம் ஆருக்கு இருக்கு.. பொண்டாட்டி நெனப்பு தாங்காம போனவரு அந்த மவராசிய செலயா செதுக்கில்ல கொண்டாந்தாரு..”

”சின்னவர் கோவமெல்லாம் எப்போ தீந்துச்சு..?”

”ஒத்த ஒடம்பொறப்புங்க.. எம்புட்டு நாளு அப்டியே இருப்பாவோ.. எல்லாம் மாறிப் போச்சு தாயீ.. பொறவு நல்ல நாளா பாத்து செலய இங்க கொண்டாந்து வச்சாச்சு.. அதுலேர்ந்து ஊருக்காரங்களுக்கு கண்கண்ட தெய்வமா ஆயிட்டா.. அவள கேக்காம ஒரு கண்ணாலம் கூட நடக்கறதில்ல.. சுமங்கலி தெய்வமில்லயா.“

படைப்பதற்காக எடுத்த வந்த பட்டுச்சேலையை பூசாரியிடம் நீட்டினாள் அபிநயா. “கவர் மேலயே சேலய வச்சுடுங்க.. எண்ணெய் கறை பட்டுடும்..”

”செரி தாயி.. சாக்கெட்டு..”

”பொடவைக்குள்ளயே மடிச்சு வச்சிருக்கன் பாருங்க..”

நெகிழிப் பையை கட்டுக்கழுத்தியம்மன் முன் பரப்பி பட்டுப்புடவையையும் சாக்கெட்டையும் வைத்து அதன் மீது வெற்றிலை பாக்குடன் ஒரு இணுக்கு பூவும் மஞ்சள் உருண்டையும் வைத்தார் பூசாரி. பூசாரியின் மனைவி சர்க்கரை பொங்கல் நிறைந்த பெரிய அன்னக்கூடையின் இருபக்க பிடிகளை பிடித்து துாக்க முடியாது துாக்கி வந்து அம்மனுக்கு முன் வைத்து மூங்கில் தட்டால் மூடினாள். நெய்யும், வறுத்த முந்திரியும் வெல்ல வாசமும் மூங்கில் தட்டை மீறியது.

”சாம்ராணி பொக போடணும்.. அடுப்ப அமைக்கங்குள்ளயும் நெருப்பு கரிய எடுத்து வச்சுடு.. மறந்துபுடாத..” என்றார் மனைவியிடம்.

“ஆங்.. தெரியாதாக்கும்..“

”நம்பள எதுத்துக்கலேன்னா இந்த பொட்டச்சிக்கு கண்ணுல இம ஒட்டாது..” சந்தோஷமாக சிரித்தார் பூசாரி. ”வெளையாட.. புடிக்கன்னு ஒருத்தி இருந்துட்டால்ல தேவல.. பொண்டாட்டி போன பொறவு மறு கண்ணாலமே வேணாம்னு கச்ச கட்டிக்கிட்டு நின்னுட்டாரு பெரியவரு.. சின்னவரும் தனக்கு வேணாமுன்னு அண்ணனுக்கு தோதா ஆமாசாமி போட.. அதுக்கு பொறவு ரெண்டு பேத்துக்கும் தொறவு வாழ்க்கதான்.. நெலம் நீச்சுக்கு பஞ்சமா.. வூடு வாசலுக்கு கொறப்பாடா..? ஊரே சொல்லி சொல்லிதேன் ஒன் புருசன உள்ள கொண்டாந்தாங்க.. அதுமுட்டுந்தா ஊர் பாடு.. பொறவு பெரியவருக்கு எல்லாமே மவன்தான்..”

உடன்பங்காளியின் மகன் மருதமுத்துவை தத்தெடுக்கும்போது பெரியவருக்கு வயது ஐம்பதைக் கடந்திருந்தது. ஆறு மாத குழந்தையாக அத்தனை சொத்துக்கும் வாரிசாக வந்த மருதமுத்துவுக்கு தாய் இல்லாததே பெரிய குறை என்பது தாமதமாகதான் புரிந்தது சின்னவருக்கு. தெரிய வந்த பிறகு அவர் தாயுமாகி போனார். இப்போது கூட கிராமத்துக்கும் பெங்களுரூக்குமான இடைவெளியை கடந்து கடந்தே குறைத்து வைத்திருந்தார்.

பெரியவர் அருகில் வருவது தெரியவும் பூசாரி சத்தமாக  பாட தொடங்கினார்.

காட்டு வழியில கள்ளர் பயமில்ல..

எங்க வீட்டு கொல தெய்வம் வீரம்மா காக்குமடா

நிறுத்து வண்டியன்னு கள்வங்க கேக்கயிலே

வீரம்மா பேர சொன்னா காலனும் தெறிச்சுடுவான்..

“தவுசுப்புள்ள சமயல தொடங்கியாச்சு.. லிஸ்டுல வுள்ளது ஒண்ணும் வுட்டுடுலயே..“ என்றார் பெரியவர் பூசாரியிடம்.

”இல்லீங்கய்யா.. ஆனந்தேன் மளிகயில எல்லாம் செட்டா வாங்கிட்டேங்கய்யா..”

“நல்லதா போச்சு.. செரி.. வேலையாயிடுச்சுல்ல.. இன்னும் பத்து நிமிசத்துல நல்ல நேரம் தொடங்குதுன்னு காலண்டர்ல போட்டுருக்கான்..”

”எல்லாம் முடிஞ்சாச்சுங்கய்யா..”

”நீங்க ஏம்மாமா மேரேஜ் பண்ணிக்கல..?” பெங்களுருக்கு வந்த போது சின்னவரிடம் கேட்டாள் அபிநயா. பெரியவரிடம் இப்படியெல்லாம் நெருக்கமாக உணர்வதை நினைத்துக் கூட பார்க்கவியலாது அவளால். அவர் தன்னிடம் மொத்தமாக பத்து வார்த்தைகள் பேசியிருந்தால் அதிகம் என நினைத்துக் கொள்வாள்.

”ஒத்த பொம்பள ஒம்போது புள்ளய வளத்துடும்.. ஆனா ரெண்டு ஆம்பளங்க ஒத்தப் புள்ளய  வளக்கக்குள்ளயும் நாக்கு தள்ளிப் போச்சும்மா..”

”மாமா.. நா ஒண்ணு கேட்டா நீங்க ஒண்ணு சொல்றீங்க..”

”என்னமோ தோணல ஆயி..” என்றார் சின்னவர்.

“அவுருக்கு சாமி கும்புட்டுக்கிட்டே கெடந்தா பத்தாது..?” என்றான் மருதமுத்து கிண்டலாய்.

“எனக்கு மழையும் ஆவல.. தீயும் ஆவல.. பயங்கொள்ளி ஆம்பளய எந்த பொட்டச்சிக்கு புடிக்கும் சொல்லு..”

அன்றைய இரவு சின்னவருக்கும் மருதமுத்துவுக்கும் கனமாக நகர்ந்துக் கொண்டிருந்தது.

கல்லுக்காரன்பட்டியில் திருவிழா நடந்த சமயம் அது. நட்சத்திரங்களற்ற இரவு வானம் கருங்குடையாக கவிழ்ந்து கிடந்தது. எப்போதும் போல இரவு உணவுக்கு பின் வயல்காட்டுக்கு கிளம்பி விட்டாலும் தலையை உயர்த்தி வானத்தை பார்க்கவே நடுக்கமாக இருந்தது சின்னவருக்கு. மோட்டார் அறை கதவை இழுத்து சார்த்தி உட்புறம் தாளிட்டுக் கொண்டார். அண்ணி இழுத்து வைத்து பரிமாறியதில் அளவுக்கதிகமாவே சாப்பிட்டாயிற்று. தலை வரை போர்வையை இழுத்து விட்டுக் கொண்டு கயிற்றுக் கட்டிலில் சாய்ந்தவர் அப்படியே துாங்கிப் போனார். இரவு வானத்தை மின்னல் வெட்டியதை சிமிண்ட் கிராதி மௌனமாக கடத்திக் கொண்டிருந்ததில் திடுக்கிட்டு விழிப்பு வந்தது. நடுக்கமாக இருந்தது. பெருமழை வருவதற்குள் கிளம்பி விட வேண்டும்.  “பச்சப்புள்ள பச்சப்புள்ளன்னு முந்தானைக்குள்ள சுருட்டி வச்சு வளத்துட்டு எனக்கென்னான்னு வுட்டுட்டு போயிடுச்சு..” அம்மாவின் மீது கோபமாக வந்தது அவருக்கு. ஐந்து நிமிட நடை துாரம்தான். கால்களை எட்டி போட்டு நடந்தார்.

கிழக்கு பார்த்த வீடு. ஓட்டு வீடு என்றாலும் அளவில் பெரிய வீடு. நீண்டு அகன்ற பட்டாச்சாலை. அதன் முடிவில் இருபுறமும் அறைகள். இருபக்க அறைகளையும் பெரிய முற்றம் இணைத்தது. சமையலறையை நெற்குதிரும் தானிய மூட்டைகளும் நிறைத்திருக்கும். முன்புற திண்ணையையொட்டி இறக்கப்பட்ட கீற்றுக் கொட்டகையில்தான் சமையலெல்லாம்.

கொண்டான் கொடுத்த சனங்களெல்லாம் கல்லுக்காரன்பட்டியில் முகாமிட்டு விட ஊர் அரவற்று கிடந்தது. வீரம்மாளுக்கும் போக ஆசைதான். ஆனால் கணவனை மீறி எதுவும் செய்து விட முடியாது. மாவிளக்கு மாவும் அதிரசமுமாக மகளை பார்க்க வந்திருந்தாள் வீரம்மாளின் தாய். தனது பலவீனம் குறித்து அண்ணிக்கு தெரிந்திருந்தாலும் எப்போதும் போல இன்றும் தயக்கமாகதான் இருந்தது சின்னவருக்கு. போதாக்குறைக்கு சம்பந்தியம்மாள் வேறு.

திடீரென்ற ஏற்பட்ட விழிப்பில் கண்களை திறந்து பார்த்தாள் அபிநயா. கணவனின் படுக்கை காலியாக இருந்தது. தலையணையை விட்டு நகர்ந்துக் கிடந்த மகளை இழுத்து தலையணையில் கிடத்தி விட்டு கதவை திறந்து முன்னறையை எட்டிப் பார்த்தாள். அப்பாவும் மகனும் முக்கியமான முக பாவனைகளோடு பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது. “இன்னுமா துாங்கல..“

“.நீ துாங்கும்மா.. வர்றேன்..” என்றான் மருதமுத்து.

”என்னாதான் பேசுவீங்களோ.. குசுகுசுன்னு..” மகள் விழித்துக் கொள்ளக் கூடாது என்ற அக்கறையில் மிக மெதுவாக கதவை மூடி உட்புறமாக தாழிட்டுக் கொண்டாள் அபிநயா.

சமையலறையை கடந்து விட்டால் யார் கண்ணிலும் பட வேண்டியிருக்காது. வேகமாக வந்தவர் சுருட்டின் ஒற்றை நெருப்பில் தயங்கி நின்றார். கீற்றுக் கொட்டகையில் பேச்சுக் குரல் வேறு கேட்டது.

“மாப்ளக்கிட்ட சொல்லிக்கிட்டேன்.. மழ வர்றதுக்குள்ள நா கௌம்பறேன்.. ஒங்கப்பாரு கெடந்து கத்தும்..” சம்பந்தியின் குரல்.

”ம்க்கும்.. மணி பத்தாச்சு.. இந்நேரங்காட்டியும் எங்க போவ.. இங்ஙனயே படுத்துட்டு காலைல கௌம்பு..”

”காரு புடிச்சா போறன்..? ஊரு சனமே திருளாவுல கூடிக் கெடக்கு.. என்னைதான் பெசாசு புடிக்குதாக்கும்..”

“எம்மா.. செத்த இருந்துட்டு போ.. ஒன் வூட்ட ஆரும் துாக்கீட்டு போயிர மாட்டாவோ..”

தாயும் மகளும் பேசிக் கொண்டிருக்கும்போதே நைசாக நழுவி உள்ளே ஓடி விட வேண்டியதுதான். கால்களை ஒரு எட்டு வைத்தவர் இன்னும் சுருட்டின் தீ கங்கு தெரிவதை பார்த்து விட்டு தயங்கி நின்றார்.

”புடிச்சா மொசலுக்கு காலு மூணுன்னு நிப்ப..“ கூரைக்குள் சொருகிக் கிடந்த பாய் தலையணையை உருவும் சத்தம் கேட்டது.

“நா கொட்டாயிலயே படுத்துக்கறன்.. நீ உள்ள போ.. மாப்ள காத்துக்கிட்டுருப்பால..“

”உள்ள போயீ..? எங்க படுக்க..? பட்டாச்சாலல கெடக்கறதும் ஒண்ணுதான்.. இங்ஙன படுக்கறதும் ஒண்ணுதான்..”

”ஏன்டீ.. வெலக்காயிட்டீயா..?” கவலை தோய்ந்திருந்தது சம்பந்தியின் குரலில்.

”சும்மா கெடம்மா.. புள்ளயெல்லாம் மந்திரத்துல மாங்கா காய்ச்சாதான் வரும் பாத்துக்க..”

“மாப்ள ஊர்லதான இருக்காரு..”

”ஊர்ல இருந்தா மட்டும்..? எல்லாம் தனியாதான் படுக்கறது..”

”அடிப்பாவீ.. எம்புட்டு நாளா..?“

”ம்ம்.. கண்ணாலமான நாளாதான்…”

”என்னாடீ சொல்ற..?“

”சொல்றன் சொரக்காயிக்கு உப்பில்லேன்னு…” அழுகிறாள் போலும்.

“அடிப்பாவீ.. மருமவள பிரிச்சு படுக்க வச்சுட்டுதான் ஒன் மாமியாரு வண்ட பேச்சு பேசுனாளா..?”

”நா சொன்னாதானே அதுக்கு தெரியும்.. அவங்கம்மா இருக்கவரைக்கும் ஒரே ரூம்புலதான் படுப்போம்.. அவங்கம்மாவுக்காவ.. அம்புட்டுதான்..”

”அடிப்பாவீ.. படபடங்குதுடீ எனக்கு.. இம்புட்டு பெரிய விசயத்த ஏன்டீ மறச்சே..?”

”ம்ம்… தெரிஞ்சா நீ என்ன பண்ணுவே..? ஒன் வூட்டுக்கு வந்துதான் நா என்னா பண்ணுவேன்.. பேசாம படு.. அந்த மனுசன் சுருட்டு புடிக்க வார நேரந்தான்..”

”வருட்டும்.. வருட்டும்.. என்ன பயமா..? பொளுது விடியுட்டும்.. கேளுங்க இந்த அக்குறும்பத்தன்னு பஞ்சாயத்த கூட்டீட மாட்டேன்..? கஞ்சிக்கு செத்தவங்கன்னா மானம் கெட்டவங்கன்னு நினைச்சு எம்புட்டு பேச்சு பேசியிருப்பா ஒம் மாமியாருகாரி.. ஏயப்பா.. ஒம் புருசன்மாரி சால்சாப்புகார ஆம்பளய என் ஆயுசுக்கும் பாத்ததில்லடீ.. ஊம ஊர கெடுக்கும்ன்னு சும்மாவா சொல்லி வச்சாவோ.. ரெண்டுல ஒண்ணு தெரியாம நவுர மாட்டேன்.. பாத்துக்க..” ஆத்திரமும் ஆவேசமுமாக பேசினாள் சம்பந்தி.

பெரியவருக்கும் ஆத்திரமும் ஆவேசமும் வந்தது. தீக்குச்சியை உரசி கூரை மேல் விட்டெறிந்த பிறகும் கூட அது நீடித்தது. கூரை நெருப்போடு விறகடுப்பில் லேசான கனைப்பிலிருந்த நெருப்பும் லாந்தர் நெருப்பும் சேர்ந்துக் கொண்ட பிறகும் கூட அது தணியாதிருந்தது. கொட்டகைக்கு பின்னே நடுங்கி படபடத்து கிடந்த சின்னவரை பார்க்கவியலாத அளவுக்கும் அது கண்களை மறைத்தது. “சோத்துக்கு நாதியத்த பொட்ட செறுக்கிக்கு ஒடம்பு சொகம் கேக்குதோ.?“

மருதமுத்து மகளை துாக்கிக் கொண்டு வந்தான்.

மீதமிருந்த கதம்ப மாலையை அங்கிருந்த உண்டியலின் கழுத்தில் சுற்றி விட்டார் பூசாரி. “இன்னும் செத்த நேரத்துல இந்த பூவெல்லாம் ஆடு வவுத்துக்குள்ள போயி உருமாறிடும்.. எல்லாம் அப்டிதான்.. தெய்வங்கூட அப்டிதான்.. பதிமூணு தலமொறைக்கு பிற்பாடு அதுங்க கூட மாறிடும்..”

“அதெப்புடீ..?“

”பதிமூணு சென்மத்தோட ஒரு வம்சத்து கணக்கு முடிஞ்சுடும்னு ஒரு நம்பிக்க தாயீ… நம்ம கட்ளத்தி ஆத்தாளுக்கு இதாம் மொத சென்மம்..”

”அதென்ன இப்டியொரு பேரு..?

”புருசன் இருக்க கட்டுக்களுத்தியா போனவ இல்லியா.. அதான்.. கன்னிமாரா இருக்குற சின்ன பொண்டுவ போயிடுச்சுங்கன்னா கன்னிசாமிம்பாங்க.. இந்த பொண்டுவதான் அந்தந்த கொலத்த காக்கற கொலதெய்வம் தாயீ.. வருசந்தவறாம பொங்க வச்சு நேத்தி செஞ்சுட்டோம்னு வையி.. அதுங்களே கொலத்தி விருத்தி பண்ணிடுங்க.. பெரியய்யா செத்து போன பொண்டாட்டிய தெய்வமாக்கி கும்புட்டுதால என்னா கெட்டா போயீட்டாரு..? கட்டுக்களுத்தியா வயித்து புள்ளத்தாய்ச்சியா போன புள்ள அது.. தான் இருந்துட்டு போன வமுசத்த காசும் பணமுமா சீரும் பேருமாதானே வச்சிருக்கா… இந்த தெயிவத்த அடுத்த தலமொறக்கு சேக்கற பொறுப்பு ஒங்கிட்டதான் தாயீ இருக்கு.. மொதல்ல ஒரு ஆம்பளப்புள்ளய பெத்தெடு தாயீ..”

கோயிலுக்கு முன் கும்பல் சேரத் தொடங்கியது.

”அய்யா.. பூசை போட்டுடுலாம் வாரீங்களாய்யா..” கறிவேலங்காட்டில் பார்வையை பதித்து கொண்டிருந்தவரை நோக்கி குரலெழுப்பினார் பூசாரி.

பெரியவரும் சின்னவரும் இம்மாதிரியான நேரங்களில்தான் சேர்ந்து நிற்பதை பார்க்க முடியும். பெரியவரையொட்டி மருதமுத்து குடும்பத்தோடு நின்றிருந்தான்.

முதலில் மருதைய்யனுக்கு சுத்த பூசை போடப்பட்டது.

ஊருக்குள்ள ராசாவாம்..

ராமரு.. லெட்சுமணனாம்..

கொடுக்க புடிக்கையில கர்ணரு பரம்பரையாம்..

பேரு பெத்த சிங்கம் ரெண்டும்

போட்டதம்மா சின்னக் குட்டி

தாயான தாயம்மா.. வீரம்மா காத்திடம்மா.“

சாம்பிராணி புகையால் மணத்து கிடந்தது அந்த இடம் முழுவதும்.

 வாக்கப்பட்ட வூரு இது..

வாழ வச்சு பாரு..தாயி..

கொறவுப்பட்ட ஆயுசுகாரி..

நெறவுப்பட்ட வாழ்க்ககாரி..

நாடு செழிக்க வச்சிடம்மா..

காடு வெளைய காத்திடம்மா..

மழையா பேஞ்சுடம்மா..

நெல்மணியா வௌஞ்சிடும்மா..

கணீரென்ற அவரின் குரல் கூடியிருந்தோரின் உடலை சிலிர்க்க வைத்தது.

“பொண்டுவல்லாம் கட்ளத்தியம்மன கும்புடுக்கங்க..” கூட்டத்தை நோக்கி சத்தமிட்டார். பெரிய சூட வில்லையை இட்டு பெரு நெருப்பாக்கி அம்மனுக்கு தீபாராதனைக் காட்ட கும்பல் கன்னத்தில் போட்டுக் கொண்டது.

மனைவியில் கையிலிருந்த மகளின் கரங்களை குவித்து வைத்தான் மருதமுத்து. “பாப்பாவ நல்லா படிக்க வையீன்னு கன்னிசாமிய கும்புட்டுக்கம்மா..”

புரியாமல் கணவனைப் பார்த்தாள் அபிநயா. ”பச்சப்புள்ளக்கு சரியா சொல்லிக் குடுங்க..” பூசாரியின் படிப்பினையில் பொறுப்பு வேறு சேர்ந்திருந்தது அவளிடம்.

”எல்லாம் சரியாதான் சொல்றேன்..” என்றான் மருதமுத்து சத்தமாக.

***

 

​எதற்காக எழுதுகிறேன் – ஆரூர் பாஸ்கர்

ஆரூர் பாஸ்கர்

arur basakr

 

எழுத்து ஓரு அழகிய கலைவடிவம். அந்த விதை பொதிந்த மனம் நடைமுறை சிக்கல்களையும், தடைகளையும் தாண்டி முட்டி மோதி வேர்பிடித்து, துளிர்விட்டு மேன்மேலும் எழுதி எழுதி தன்னை தானே வளர்த்துக்கொண்டு கிளை பரப்பி பிரமாண்ட விருட்சமாகிறது.

பெய்யும் மழை போல ,அடிக்கின்ற அலை போல, அசையும் காற்று போல. எங்கேனும், என்றேனும் யாரேனும் வாசிப்பார்கள், ரசிப்பார்கள் எனும் நம்பிக்கையில் ஓரு படைப்பாளி தன் தளத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறான்.

அது பாடும் பறவைகளை , ஓடும் நதிகளை, குளிரும் நிலவை, சுடும் சூரியனை வெற்றுக்கண்ணுக்கு புலப்படாத ஏதோ ஓன்று தொடர்ந்து இயக்கிக் கொண்டிருப்பதைப் போன்றது.

அப்படி அன்றாட வாழ்வின் நெருக்கடிகளையும் பிடுங்கல்களையும் தாண்டி ஏதோ ஓன்று என்னை எழுத உந்தித்தள்ளுகிறது. தொடர்ந்து எழுத, எழுத எதை எழுத வேண்டும்- எதை எழுத வேண்டாம் எனப்பிடிபடுகிறது. எழுத்து என்னுள் பல திறப்புகளைத் திறந்துவிட்டுச் செல்கிறது.

துக்கம், வலி, மகிழ்ச்சி, கோபம்,பதற்றம் என மனத்தில் தோன்றிய ஏதோ ஓன்றை எழுதி முடித்தபின் எனக்குள் ஓரு பெரிய நிம்மதி. ஆசுவாசம், ஆனந்தம். அதையும் தாண்டி அகமனத்தின் எல்லா அடுக்குகளிலும் போராட்டம் அடங்கிய, அமைதியான ஓரு ஆழ்ந்த ஜென் மனநிலை. அது வெயில் புழுங்கும் வீட்டின் ஜன்னல்களை திறந்தால் வீசும் குளிர்ந்த வெளிக்காற்றின் சுகம் போல.

சிலர் சொல்வதுபோல பணத்துக்காக, புகழுக்காக எழுதலாம்தான். ஆனால் அது பசியில்லாமல் உண்ணும் விருந்துபோல -ருசியிருப்பதில்லை.

அதே சமயத்தில் ஓரு படைப்பாளி தன் படைப்புகளை இந்தச் சமூகத்தின் முன் வைத்து அதற்கான நியாயமான அங்கீகாரத்தை, விமர்சனத்தை எதிர்பார்த்தே காத்திருக்கிறான். நானும் அதற்கு விதிவிலக்கல்ல.

(ஆரூர் பாஸ்கரின் ‘பங்களா கொட்டா’ அகநாழிகை பிரசுரமாய் அண்மையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது)

எதற்காக எழுதுகிறேன்? – கலைச்செல்வி

கலைச்செல்வி

sakkai

எதற்காக என்பதை விட நான் எப்போது எழுத தொடங்கினேன் என்பதை யோசிக்கிறேன்.  பிறப்பும் கல்வியும் நெய்வேலி நகரத்தில். வாசிப்பிற்கு நேரம் செலவிட தோதான வாழ்க்கையமைப்பு வாய்க்கப் பெற்றிருந்தது. ஆனாலும் அதிகபட்ச இலக்கிய புத்தகங்களாக அறிமுகமானவை அமுதசுரபி, மஞ்சரி போன்றவைதான். பிறகு உயர்கல்வி, திருமணம், அரசாங்கப்பணி, குழந்தைகள் என்ற பரபரப்பான வாழ்க்கை எனக்கும் தொற்றிக் கொண்டது. எனக்கு பணிப்புரிவதில் விருப்பம் இருப்பதில்லை. அப்பா சொல்கிறார்.. நான் செய்கிறேன்.. என்பதைத் தாண்டி வேறேதும் வேலைக்கான தேர்வுகள் குறித்து எனக்கு தோன்றியதில்லை. வங்கித்தேர்வில் வெற்றி பெற்றேன். ஆனாலும் வேலைக்கு செல்ல விருப்பம் இல்லை. அடுத்தடுத்த இரண்டு அரசு தேர்வுகளில் வெற்றி பெற, இதற்கிடையே திருமணம் நடைபெற ஏதோ ஒரு வேலைக்குள் என்னை முழ்கடிக்க வேண்டியிருந்தது.

எவ்வித விருப்பமும் அற்று கடமைக்கு சென்றேன் கடமையாற்ற. என் நேரத்தை என் விருப்பப்படி செலவிட முடியாத நிலை எனக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய தோல்வியை அளித்தது போன்ற உணர்வு. விடுப்புகளே எனக்கு கைக்கொடுத்தன. கிட்டத்தட்ட முழு மொத்த பணிக்காலத்துக்கும் தேவைப்படும் விடுப்பை எடுத்து முடித்திருந்தேன். குழந்தைகள் வளர்ப்பில் ஆழ்ந்துப் போனதில் வேறெதும் தோன்றாத நிலை. புத்தகங்களை கையில் எடுப்பதேயில்லை. ஆனாலும் விட்டகுறை தொட்டக்குறையாக புத்தகக் கண்காட்சிகளுக்கு செல்ல தவறுவதில்லை. ஒருவேளை குடும்பத்தோடு வெளியே செல்ல ஒரு இடமாக அதை நான் கருதியிருக்கலாம். பெண்களை நோக்கிய பொதுபார்வையாக முன் வைக்கப்படும் சமையல் புத்தகமும் வாங்கத் தோன்றாது. கோலப்புத்தகங்களும் வாங்கத் தோன்றாது. தால்ஸ்தோய், தஸ்தாயெவஸ்க்கி என்றும் அலையத் தோன்றாது. வாஸந்தி, அனுராதாரமணன், சுஜாதா இவர்களின் புத்தகங்களை பார்ப்பேன், வாங்கும் எண்ணமின்றி. என் கணவர் இப்புத்தகங்களை விரும்புகிறேனோ என்று எண்ணி அதை பில்லுக்கு அனுப்பி விடுவார். வாங்கிய புத்தகங்களைத் தொடும் எண்ணமும் தோன்றுவதில்லை.

காலம் நல்லப்படியாகவே நகர்ந்தது. ஆயினும் மனதில் ஏதோ ஒரு வெறுமை. தேடல்களற்ற வாழ்க்கை எதையோ கைகளிலிருந்து அடித்துச் செல்வது போலிருந்தது. வழக்கமான வாழ்க்கைச் சுற்றுப்பாதைக்குள் மனம் திருப்திக் கொண்டாலும் எனக்கென ஒரு பாதை தேவைப்பட்டதை… அல்லது என் மனம் தேடுவதை.. நான் புரியாமல் உணர்ந்துக் கொண்டிருந்தேன். சிறு பள்ளியொன்றை ஆரம்பித்தோம். அதில் நிறைய புதுமைகளை புகுத்த ஆர்வம் கொண்டது என் மனம். காலை வழிபாடு முதல் பள்ளி முடியும் தருணங்கள் வரை புத்தம்புதிதான செய்திகளுடன் கல்வி கற்பித்தோம். அதற்கான எண்ணங்களை எழுத்தாக்கும் போது, நான் எழுதியதை திரும்ப வாசித்த போது நன்றாக எழுதியிருப்பதாக தோன்றியது. ஆனாலும் அதைத் தாண்டி வேறேதும் செய்ய தோன்றவில்லை. அதிலும் குடும்பம், அலுவலகம் தாண்டி குறைவாகவே நேரத்தை செலவிட முடிந்தது.

தேடல்கள் ஓயவில்லை என்பது புரிந்தது. எதுவும் முழுமையடையாமலே இருப்பதுபோல தோன்றும். எனக்குள் என்னை சமாளிப்பதே பெரும் பிரச்சனையாக இருந்தது. சுயபச்சாதாபம் ஆட்கொள்வதில் அழுகை முந்திக் கொண்டு வந்து விடும். சிந்தனைகள் நிறுத்த முடியாமல் தோன்றிக் கொண்டேயிருந்தன. அந்த நேரம் நிறைய வாசிக்கவும் தொடங்கியிருந்தேன். அசோகமித்ரன், ல.சா.ரா, கு.பா.ராஜகோபாலன், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், நா.பிச்சமூர்த்தி, அம்பை, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், ஆ.மாதவன், சா.கந்தசாமி என்றும்  கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஆல்பெர் காம்யு, மாப்பசான், இடாலோகால்வினோ, விர்ஜினாஉல்ஃப் எனவும் கலந்து கட்டி வாசிக்க தொடங்கினேன். தமிழ் இலக்கிய வரலாறு, சங்க இலக்கியங்கள், சேரர், சோழர் வரலாறு என தமிழார்வமும் வந்தது. சுற்றுலாக்களை கூட அதையொட்டி அமைத்துக் கொள்ளத் தளைப்பட்டேன். ஆனால் பகிரவோ பேசவோ யாரும் இருக்கவில்லை.

தனிமையுணர்வு என்னை ஆக்ரமிக்க தொடங்க, அந்த அழுத்தத்தில் முதன்முதலாக நான் பேச வந்ததை.. அல்லது நினைத்ததை.. எழுத்தாக்கினேன். அது கதையென்று நினைத்து எழுதவில்லை. ஆனால் கதை போன்ற தோற்றமிருந்தது.  அந்த நேரம் பார்த்து தினமணி நெய்வேலி புத்தகக்கண்காட்சி 2012க்கான சிறுகதைப் போட்டி அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதை அனுப்பி பார்ப்போமே.. என்று அனுப்பினேன். அந்த முதல் கதையே இரண்டாவது பரிசு பெற்றது. ஆனந்தம் என்பதை விட அதிர்ச்சிதான் அதிகமிருந்தது. கதை என்பது இத்தனை சுலபமான ஒன்றா என்றெல்லாம் கூட தோன்றியது சிறுப்பிள்ளைதனமாக. நான் பிறந்து வளர்ந்த அதே ஊரில் பரிசு, பாராட்டு எனக் கிடைத்தபோது எழுதும் உத்வேகம் கூடிப் போனது. அந்நேரம் சிற்றிதழ்கள் அறிமுகமாகியிருந்தன. கணையாழி, உயிரெழுத்து என் கதைகளை வெளியிட ஏதோ எழுத வருகிறது என்று எண்ணிக் கொண்டேன். செய்தித்தாளில் என் பெயருக்கு முன்னிருந்த எழுத்தாளர் என்ற அடைமொழி புதிதாக தோன்றியது. அடுத்த ஆண்டு இதே தினமணி சிறுகதைப் போட்டியில் (2013) புனைப்பெயரில் (சுப்ரமணியன்.. எனது தகப்பனார் பெயர்) எழுதி அனுப்பினேன். அக்கதைக்கு முதல் பரிசு வழங்குவதாக சேதி சொன்னார்கள். மீண்டும் நெய்வேலி. மீண்டும் பரிசு. செய்தித்தாளில் வண்ணப்புகைப்படம். மிக அதிக விவேரணைகளோடு தினமணிக்கதிரில் கதை வெளியானது. நிறைய கடிதங்களும், தொலைப்பேசி அழைப்புகளும் வந்தன.  பிறகு வாசிப்பிலிருந்து அதிமேதாவித்தனமாக எழுத்தையே நாடியது மனம். இப்போது நினைத்தால் சற்று கூச்சமேற்படுகிறது.

எழுத்திலிருந்து மீண்டு(ம்) வாசிக்கும்போது அவை முற்றிலும் புதியதொரு களத்தை எதிர்க்கொள்வது போல தோன்றியது. எழுத்தாளர்கள் மீது முன்பைக் காட்டிலும் மிக அதிக பக்தியும் பிரேமையும் தோன்றியது. ஆனாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் அப்போது எனக்கு எந்த எழுத்தாளரையும் தெரியாது.

தேடலின் நீண்ட வெளி குறைந்துக் கொண்டே வந்தது. நடந்து கிடந்து அதனை களைந்து விடும் நம்பிக்கை முனைப்பாக வெளிப்பட எனது பயணம் தொடர்ந்துக் கொண்டுள்ளது.

(திருச்சியில் வசிக்கும் கலைச்செல்வி.. கதைகள், கட்டுரைகள் எழுதுவதில் எனக்கு ஆர்வம் கொண்டவர். ஐம்பதுக்கும் மேற்பட்ட அவரது சிறுகதைகள் பல்வேறு பத்திரிக்கைகளில் பிரசுரமாகி பல பரிசுகளும் பெற்றுள்ளன. வலி என்ற பெயரிலான அவரது சிறுகதைத் தொகுப்பு ஒன்று காவ்யா பதிப்பதகத்தாராலும், சக்கை என்ற பெயரிலான அவரது முதல் நாவல் என்சிபிஹெச் பதிப்பகத்தாராலும் 2015 ஜனவரி சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது.  திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்ற சக்கை, புத்தனாம்பட்டி நேரு மெமோரியல் கல்லுாரியில் பி. ஏ. தமிழ் இரண்டாம் ஆண்டு பாடநூலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.)

ஏன் எழுதுகிறேன் – வெ. சுரேஷ்

வெ. சுரேஷ்– 

நான் ஏன் எழுதுகிறேன்? நீண்ட காலமாக அரட்டைக் குழு நண்பர்கள் சிலர் நான் ஏன் எழுதுவதில்லை என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். சரி, கேட்கிறார்களே என்று எழுத ஆரம்பித்தால் நீங்கல்லாம் ஏன் எழுதறீங்க, சொல்லுங்கன்னு பதாகைக்காரர்கள் கேட்டு விட்டார்கள். இப்ப நாம் என்ன நிறைய எழுதிட்டோம்னு இப்படிக் கேக்கறாங்கன்னும் தோணாம இல்ல. ஆனா கேள்வின்னு வந்தாச்சு, பதில் என்னவா இருக்கும்ன்னு யோசித்துப் பார்க்கிறேன்.

உண்மையில் இந்தக் கேள்வி புனைவு எழுதுபவர்களுக்குதான் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால், கட்டுரைகள் எழுதுவது என்ற இடம் நேர்ப்பேச்சில் கருத்து கூறுவதிலிருந்து ஒரு எட்டு எடுத்து, தட்டச்ச ஆரம்பித்தால் வந்து விடுகிறது.. நம் முகத்திற்கு எதிரே இருக்கும் 4 அல்லது 5 பேரிடம் சொல்வதை எவ்வளவு பேருக்கு சொல்கிறோம் என்று தெரியாமல் சொல்லிக் கொண்டிருப்பதே எழுத்து என்ற அளவுதான் இரண்டுக்கும் வித்தியாசம்.. ஏன் சொல்கிறோம் என்பதற்கு என்ன காரணமோ அதேதான் ஏன் எழுதுகிறோம் என்பதற்கும் சொல்ல முடியும். ஆனால் புனைவு அப்படியல்ல என்று தோன்றுகிறது. மிகச் சிரமப்பட்டு ஒரு நிகர் உலகை உருவாக்கி, பாத்திரங்களுக்கு உருவம் கொடுத்து உணர்வுகளின் வண்ணம் சேர்த்து… .அப்பப்பா, நம்மால் ஆகப்பட்ட காரியம் அல்ல அது.

இன்னொரு கோணத்தில், சுற்றியிருக்கும் உலகின் நடவடிக்கைகளை எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்கும் ஒருவர் எழுதாமல் இருப்பதுதான் கடினம் என்று தோன்றுகிறது. உலகின் போக்கு குறித்த எதிர்வினைகள் எப்போதும் கணத்துக்குக் கணம் மனதில் தோன்றிய வண்ணமே இருந்தாலும் அவற்றைத தொகுத்து, சீராக அடுக்கி, எழுத்தில் கொண்டு வருவது எல்லோர்க்கும் உடனடியாக வருவதில்லை. சிலருக்கு தங்கள் பதின்ம வயதிலேயே இந்தக் கலை வசப்பட்டு விடுகிறது. என் போன்ற சிலருக்கு அதிக காலம் பிடிக்கிறது ஆனால் ஏதோ ஒரு சமயத்தில், ஒரு அசோகமித்திரன் கதையில் ஒரு பாத்திரத்துக்கு சட்டென்று காரில் கிளட்ச் போடுவது பிடிபடுவது போல இது நிகழ்ந்து விடுகிறது. அதற்கப்புறம் எழுதாமலிருப்பதே உண்மையில் சிரமம்.

பல சமயங்களில் எழுதுவதற்கு பிறரின் தூண்டுதலும் வழிகாட்டலும் தேவையாயிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில்,இவை இரண்டுக்குமான பழி இருவருக்கு உரியது, ஒருவர், சக நண்பர். அவர் என்னை தொடர்ந்து எழுதத் தூண்டினார். இன்றும் ஒவ்வொரு முறை பேசும்போதும், இப்ப என்ன எழுதிக்கிட்டு இருக்கீங்க, என்று கேட்கத் தவறுவதில்லை. மற்றவர் ஜெயமோகன். அவருடன் பழக்கம் ஏற்பட்ட பிறகு, அவர் ஒரு விஷயத்தை எப்படி தொகுத்துச் சொல்கிறார் என்பதும், அந்தத் தொகுத்தலே அவரது எழுத்துக்கு அடிப்படையாக அமைவதையும் நேரில் பார்த்து என்னையறியாமல் உள்வாங்கியிருப்பது நான் எழுத உதவுகிறது என்று சொல்லவேண்டும்.

அப்புறம், ஒரு குறிப்பிட்ட காலம் வரை, நாம் எழுதினால் உலகம் என்ன நினைக்குமோ என்ற ஒரு லஜ்ஜை தடுக்கிறது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது வயதில் அது உதிர்ந்து, நான் உலகைப் பற்றி என்ன நினைக்கிறேன் என்பது முக்கியமாகிவிடுகிறது. அங்கே எழுத்து தொடங்கிவிடுகிறது.

தமிழில் தீவிர இலக்கியம் வாசிப்பவர்களுக்கு ஒரு பெரிய கஷ்டம், நாம் படித்த புத்தகத்தைப் பற்றி பகிர்ந்துகொள்ளக்கூடிய நண்பரை நம் உடனடி வட்டத்தில் கண்டுபிடிப்பது. இதனால் இரண்டு வகையில் பாதிப்பு உண்டாகிறது. பகிர்ந்து கொள்ளுதலும் இல்லை புதிதாகத் தெரிந்து கொள்ளுதலும் இல்லை., அங்குதான் நாம் படித்த நல்ல புத்தகங்கள் குறித்து நிச்சயமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. நான் எழுதியவற்றில் பெரும்பான்மையும் புத்தகங்கள் பற்றியே. அவை மதிப்பீடா விமர்சனமா என்று வகைப்படுத்த நான் முயல்வதில்லை. .முன்னொரு சமயம், கணையாழியில், என்.எஸ். ,ஜெகன்னாதன் அவர்கள், உலகில் மனிதனின் சிந்தனைகள், பல துறைகளில் பெருகியபடியே உள்ளன, இவற்றையெல்லாம், தமிழ் மட்டுமே அறிந்த ஒருவருக்கு எப்படி கொண்டு சேர்ப்பது என்று, கவலைப்பட்டார். உலக மொழிகளில் என்று இல்லை தமிழிலேயே வந்திருக்கும் ஏராளமான நல்ல புத்தகங்கள்கூட இன்னும் சரியான அறிமுகமோ, மதிப்புரையோ இல்லாமல் இருக்கின்றன. ஆகவே ஒரு குறைந்தபட்ச முயற்சியாக நான் படிக்க நேரும் நல்ல புத்தகங்கள் குறித்தாவது பகிர்ந்து கொள்ளலாமே என்ற எண்ணமே எழுதுவதற்கு முக்கியமான காரணம். பிறகு கடந்த 6, 7 வருடங்களாக,, நாஞ்சில் நாடன், கோபாலக்ருஷ்ணன், சு. வேணுகோபால் இரா. முருகவேள் போன்ற எழுத்தாளர்களின் அறிமுகமும் நட்பும், கோவை த்யாகு நூல் நிலைய நண்பர்களுடனான கருத்துப் பரிமாற்றமும், நான் எழுதுவதற்காண காரணங்களில் முக்கியமான ஒன்று. இத்தகைய ஒரு வட்டம் நிச்சயம் எழுதுவதை ஊக்கப்படுத்துகிறது.

கடைசியாகச் சொன்னாலும், மிக முக்கியமான ஒன்று இருக்கிறது, இணையமும் இ-மெயிலும் தரும் வசதி. இப்போது இதைக்கூட, ‘ஒரு வெள்ளைத்தாள் எடுத்து, மார்ஜின் விட்டு, பக்க எண் அளித்து எழுதி, பிழை திருத்தி, உறையிலிட்டு, தபால் தலை ஒட்டி அனுப்பு’, என்றால்….சிரமம்தான், அதற்கெல்லாம் வேலை வைக்காமல், ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதிக் குவித்திருக்கும், (இன்னமும் அதே வழியில் எழுதிக் கொண்டிருக்கும் சிலரையும்) நம் முன்னோடிகளையும் நினைத்தால், தலை தன்னால் வணங்குகிறது

எதிர்க்கவிதையின் அல்வாப்பதம்

பெருந்தேவி

தலைப்பு செய்தி.

***

ஒரு கோப்பை விஷத்தை வாயிலூற்றி அதை இன்னொரு கோப்பையில் துப்பவேண்டும். இதைச் செய்யும்போது வாயில் நீர் ஊறக் கூடாது விழுங்கக்கூடாது தெறிக்கக்கூடாது. வாய் இடையில் பங்குபெறுகிற சிறு பாத்திரம்தான். இந்தக் கலைச் சூத்திரங்கள் மொழியில் கூடிவர வேண்டும்.

***

மொழியிடம் ஆடுறா ராமா என்று கூவுவது பாவம் உண்மையில் மொழி ரங்கராட்டினம். மேலே ஏறும் போது அச்சமில்லாமல் கீழே இறங்கும்போது ஊக்கம் குறையாமல் இருப்போம். குரங்காட்ட ரசிகர்களிடமிருந்து மொழியைக் காக்கும் கடமை நமக்குண்டு.

***

கவிதையின் பிம்பமல்ல எதிர்க்கவிதை. சூனியக்காரியின் கையிலிருக்கும் கண்ணாடியிலிருந்தும் உள்ளபடி உரைக்காதிருப்பதில் வேறுபடுகிறது எதிர்க்கவிதை. இடம் அதில் ரேகை. காலங்கள் தங்கள் எச்சம்.

***

எதிர்க்கவிதை ஒரு நல்ல நாளில் நாள்பட்ட ஒயின் போலச் சுவைக்கும். மோசமான நாளில் முதல் வரியில் தூங்கவைக்கும்.

***

தமிழுக்குப் பல என்று பேர்.