எழுத்து

புன்னகை

– ஸ்ரீதர் நாராயணன்

காப்பிக்கடை ஜன்னல் வழியே
கோப்பையைத் தரும்-
கோடென வரைந்த தாடியுடனான-
இளைஞனின் புன்னகை.

முன்னர் அதே ஜன்னலில்
காப்பி கோப்பையை தந்து கொண்டிருந்த-
நீள தலைமுடியை
தொப்பியினுள் செருகிக் வைத்திருக்கும்-
இளைஞனின் புன்னகையை
நினைவுப்படுத்தியது.

இருவரும் ஒன்றாகவும் இருக்கலாம்.

கவனத்திற்குட்பட்டவைக்கும்
அல்லாதவைக்குமான
ஊசலாட்டத்தினிடையே
அந்தப் புன்னகை மட்டும்
பத்திரமாக இருக்கிறது.

 

எதற்காக எழுதுகிறேன் – பாஸ்டன் பாலா

– பாஸ்டன் பாலா-

“You see, in this world, there is one awful thing, and that is that everyone has his reasons.”
― Jean Renoir

சமீபத்தில் ‘கல்வாரி’ (Calvary) படம் பார்த்தேன். ஒருவர் ஏன் கத்தோலிக்க பாதிரியார் ஆனார் என்பதைச் சொல்லியிருந்தார்கள். அதில் வருவது போல், நான் எழுதுவது என்பதும் திருச்சபை பிரசாரகர் போல் ஃபேஸ்புக் சபையில் சொற்பொழிவாளராகும் விருப்பத்தினால்தான்.

தேவாலயத்தை வைத்தும் கல்வாரி திரைப்படத்தை வைத்தும் மேலும் விவரிப்பதற்கு முன் எழுதுவதற்கான வெளிப்படையான காரணங்களைப் பார்க்கலாம்:

  1. மற்றவர்களைத் திருத்துதல்: அதிவிற்பனையாகும் விகடன், குமுதம், குங்குமம் போன்ற இதழ்களில் வரும் பொதுமைப்படுத்தல்களைப் படித்து, அவற்றின் போதாமைகளையும் பிழைகளையும் சுட்டிக் காட்டுதல்
  2. அனுபவங்களைப் பகிர்தல்: அண்டார்டிகாவிற்கே செல்லாமல், பயணக்கட்டுரை எழுதும் தமிழ்ச்சூழலில், சுயமாகக் கண்டறிந்ததை பலரும் அறிய வைத்தல்
  3. விவாதங்களை உருவாக்குதல்: பேசாப்பொருளாக, மூடுமந்திரமாக தாளிட்டு வைக்கப்படும் கொள்கைகளின் மீது வெளிச்சம் பாய்ச்சி, மாற்றுக் கருத்துகளைச் சுட்டிக் காட்டுதல்
  4. பொழுதுபோக்கு கேளிக்கையில் ஈடுபடல்: வேலை முடிந்து சோர்வடைந்த வேளைகளில் புத்துணர்ச்சிக்காக ஐ.பி.எல், என்.எஃப்.எல், என்.பி.ஏ எல்லாம் பார்க்காமல், விளையாட்டாக எழுதி உற்சாகம் அடைதல்
  5. தியாகம் செய்தல்: எண்ணங்களைப் பதிவு செய்து காப்புரிமை பெற்று காசாக்குவதில் கிடைக்கும் பணத்தை விட எழுத்தில் பகிர்வதால் திருப்தி கிடைத்தல்
  6. தனிமையைக் போக்குதல்: எனக்கெனவே நான் வாழ்கிறேன் என நினைத்து சுயநலத்தில் மூழ்காமல், நண்பர்களைக் கண்டடையும் முயற்சியில் இறங்குதல்.

குதிரைப் பந்தயம் பார்த்திருக்கிறீர்களா? பந்தயத்தின் துவக்கத்தில் பத்து பன்னிரெண்டு குதிரைகள் ஓட ஆரம்பிக்கும். குதிரையை ஓட்டுபவர் அதன் மீது உட்கார்ந்து கொண்டு அதை விரட்டுவார். கடைசியில் ஒரேயொரு குதிரை ஜெயிக்கும். மற்ற குதிரைகளுக்கு தான் தோற்று விட்டோம் என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளும் சூட்சுமம் கிடையாது. ஆனால், அதற்கு முன்பு கிடைத்த நல்ல சாப்பாட்டிற்கும், தோல்விக்குப் பின் கிடைக்கும் பசும்புல்லுக்கும் பெரிய வித்தியாசம் தெரியப் போவதில்லை. ஜெயித்த குதிரையும் தங்கக் கோப்பையை தன் கால்களினால் தூக்கிக் காட்டி புகைப்படத்திற்கு குதிரைப்பல்லை ஈயென்று இளித்து காண்பிக்கப் போவதில்லை. குதிரை ஜாக்கிக்கும் குதிரையை வாங்கிய பணமுதலைக்கும் ஒளிபாய்ச்சப்படும்.

நான் எழுதுவது என்பது குதிரையைப் போன்றது. தன்னால் இயன்ற அளவு நன்றாக ஓட வேண்டும் (யாரோ விரட்டுகிறார்கள் என்பதற்காக, என்னால் எழுத முடியாத ஓட்டத்தில் ஓடி, காலை உடைத்துக் கொள்ளும் சம்பவங்களும் உண்டு). சில சமயம் ஓட்டத்தில் இருந்து நிறுத்தம் கண்டு, கொட்டிலில், போட்டதைத் தின்று, காலங்கழிக்கும் தருணங்கள் உண்டு. சில சமயம் நன்றாக ஓடி, முதல் பரிசை யாருக்கோ வாங்கிக் கொடுத்திருக்கிறோம் என்பது தெரியாமல், தன் பாட்டுக்கு அடுத்த ஓட்டத்திற்கு தயார் செய்து கொள்வதும் உண்டு.

நல்ல எழுத்து என்பதற்கு பல அடையாளங்கள் இருக்கின்றன. அதே போல் ‘நீங்கள் எழுத்தாளரா’ என்பதற்கு என்ன அடையாளங்கள் என்று பட்டியலிட்டால், ஏன் எழுதுகிறேன் என்பதற்கான விடைகள் கிடைக்கலாம்.

ஒரு எழுத்தாளர் என்று நான் எவரை ஏற்றுக் கொள்கிறேன் ?

  • அ. தொடர்ந்து எழுதுவது: இந்த நேரம்தான் எழுத முடியும்; இந்த மனநிலையில்தான் எழுதமுடியும்; இந்தச் சூழலில்தான் எழுத முடியும் என்றில்லாமல், எங்கும் எப்பொழுதும் தயாராக இருப்பது
  • ஆ. பல்வகையில் எழுதுவது: நகைச்சுவைதான் வரும்; சினிமா விமர்சனம்தான் போடுவேன்; கவிதை மட்டுமே வார்ப்பேன் என கொம்பனாக இல்லாமல், எல்லா விதமான முயற்சிகளையும் செய்வது
  • இ. உரையாடலில் ஈடுபடுவது: இன்னாருடன் பேசினால் விதண்டாவாதம்; இந்தக் கொள்கையை ஆதரித்தோ/எதிர்த்தோ எழுதுவது நேரவிரயம் என்று புறந்தள்ளாமல், பொறுமையாக விளக்குவது
  • ஈ. நல்ல மனிதராக இயங்குவது: சமரசங்கள் செய்துகொண்டாலும் தன்னளவில் நேர்மையாகவும் தெளிவாகவும் குடும்பத்துக்கும் உற்றார் உறவினருக்கும் பாந்தமான சொந்தமாகவும் நேசிக்கத்தக்கவராக இருப்பது
  • உ. கல்லுளி மங்கராக இருப்பது: இந்தப் பத்திரிகைக்கு இது போதும்; இந்த வாசகருக்கு இவ்வளவு சொன்னால் போதும் என்று விட்டுவிடாமல், தொடர்ந்து ஆழமாகவும் எளிமையாகவும் முழுமையாகவும் எழுதிக் கொண்டேயிருப்பது.

இப்பொழுது நான் யாரை எழுத்தாளர் என நம்புகிறேன் என்பதைச் சொன்னால், ‘எதற்காக எழுதுகிறேன்… எப்படி அவர் போல் ஆக முயல்கிறேன்’ என்பது எனக்கு பிடிபடலாம்.

சுஜாதாவை எழுத்தாளர் என நினைக்கிறேன். அவரைப் போல் இரட்டை குதிரைச் சவாரி முடியும் என நம்புகிறேன். ஒரு பக்கம் அறிவியல் வேலை; இன்னொரு பக்கம் புனைவு அமர்க்களங்கள்; மற்றொரு பக்கம் தொழில்நுட்ப விளக்கங்களை சுவாரசியமான கட்டுரைகளாக்குதல்; பிறிதொரு பக்கம் இதழ் ஆசிரியராக பணி; அது தவிர ஆன்மிக ஈடுபாடு; தத்துவ விசாரம்; அறிபுனை ஆக்கங்கள் என ஒவ்வொரு துறையிலும் முத்திரை படைப்புகள். கூடவே எழுத்தாளராய் இல்லாத மற்றொரு பணியில் 9 முதல் 5 வரையிலான வேலையிலும் தீவிர செயல்பாடு என பன்முகம் கொண்டவராக இருக்க வேண்டும்.

இதற்கும் ‘கல்வாரி’ திரைப்படத்திற்கும் என்ன சம்பந்தம்?

படத்தின் துவக்கத்தில் இந்த மேற்கோள் வரும்:

“மனம் தளர வேண்டாம்; ஒரு திருடன் காப்பாற்றபட்டான்.
மட்டு மீறிய ஊகம் வேண்டாம்; ஒரு திருடன் பழிக்கப்பட்டவன் ஆனான்!’
– புனிதர் அகஸ்டீன்

கல்வாரி மலையில் இயேசு கிறிஸ்துவோடு இரு கள்வர்களும் சிலுவையில் அறையப்பட்டார்கள். அவர்களில் ஒருவன் தன்னுடைய பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கோரினான். இன்னொருவன் மனத்தினால் வருந்தாமல், அன்பு உள்ளம் கொள்ளாமல், புறத்தே மட்டும் பாசாங்கிட்டு சொர்க்கத்திற்கு வழி கேட்கிறான். அப்போது தன் தந்தையை நோக்கி ’பரமபிதாவே இவர்களை மன்னியும்’ (லூக்கா 23:24) என்று பேசினார் இயேசு. தந்தையிடம் பேசிவிட்டு தம் இரு பக்கங்களையும் நோக்கியபோது, இரு திருடர்கள் தம்மை இரண்டாகப் பங்கு போடுவது தெரிந்தது.

அந்த இருவரையும் பாவத்திற்குப் பரிகாரமாக, அன்பின் அடையாளமாக ஆளுக்கொரு சிலுவையைச் சுமந்து கொண்டு கோயிலுக்கு வரவேண்டும் என்று அனுப்பி வைக்கிறார். இருவரும் பக்கத்திலிருந்த காட்டிற்குச் சென்று ஆளுக்கொரு மரத்தைத் தேர்ந்தெடுத்து சிறப்பானதொரு ஆக்கத்தைச் செய்கிறார்கள். தம்முடைய புத்தம்புதிய சிலுவையைச் சுமந்து புறப்பட்டார்கள். பயணம் நெடுந்தூரமாகவும் முடிவில்லாததாகவும் தெரிகிறது. சிலுவையின் பாரம் அதிகமாகவும் இருக்கிறது. ஓரிடத்தில் ஓய்வு எடுத்தார்கள். ஓய்வு எடுத்த பிறகு ஒரு திருடன் கேட்கிறான். “சிலுவையின் எடையைக் குறைத்து கொள்வோமா?” என்று கேட்டான். “எனக்கு வேண்டாம். நீ வேண்டுமென்றால் சிலுவையைக் குறைத்துக் கொள்” என்று சொன்னான் இன்னொரு திருடன். மற்றவன் குறைத்துக் கொண்டான். மீண்டும் பயணம் தொடர்ந்தது. மீண்டும் ஓய்வு; மீண்டும் மற்றவன் சிலுவையை இன்னும் கொஞ்சம் குறைத்துக் கொண்டான். கூட்டாளி மறுப்பு ஏதும் சொல்லவில்லை. கோவில் முகப்பை அடைந்தார்கள். அப்போது தான் தெரிந்தது கோவில் வளாகத்தை அடைய வழியாக இருந்த பாலம் உடைக்கப்பட்டு இருந்தது. சிலுவையோடு கோவில் வளாகத்தை அடைவது எப்படி என்று இருவரும் யோசித்தார்கள். சிலுவையைக் குறைக்காமல் எடுத்து வந்தவன் சிலுவையைப் பாலமாக வைத்துப் பார்த்தான் சரியாக இருந்தது. சிலுவை மேல் ஏறிக் கரை சேர்ந்து சிலுவையை எடுத்துக் கொண்டான். சிலுவையை குறைத்துக் கொண்டு வந்தவன் சிலுவையை வைத்துப் பார்த்தான் சிலுவை சரியாகப் பொருந்தவில்லை. அக்கரை சேர முடியவில்லை.

என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தம்மையே துறந்து தம் சிலுவையை நாள் தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும் (லூக் 9:23).

அப்போது தான் மனம் மாறிய கள்வனுக்கு ’நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்’ என ஆறுதலாக யேசு கூறியதாக லூக்கா 23:43 சொல்கிறது. இந்த மாதிரி கடைத்தேறத்தான் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒன்றைப் பற்றி எழுதும்போது அது குறித்த புரிதல் மேம்படுகிறது. திரைப்பட விமர்சனம் ஆகட்டும்; நூல் அறிமுகம் ஆகட்டும்; மனிதரை விமர்சிக்கும் புனைவுகள் ஆகட்டும்; உளவியலை பூடகமாக உணர்த்தும் கவிதை குறித்த அனுபவப் பார்வைகள் ஆகட்டும்; எழுதும்போது எனக்குள் ஏற்படும் ரசவாதம் என் சுமைகளை என்னைச் சுமக்கும் பாலமாக மாற்றி என்னை எனக்கு அப்பால் கொண்டு செல்கிறது – என்றெல்லாம் கற்பனை செய்வதால் எழுதுகிறேன்.

நிறப்பிரிகை: ஐந்து – அரிசனம்

சரவணன் அபி

இலைகள் தோறும்
இழையாடைகள் சரிந்து
மெதுவே மிக மெதுவே
சருமம் போர்த்திய
சருகுகள் ஒதுக்கி
நிலம் மெல்ல நடுங்கிட
காதல் செய்யும் வீர்யன்

இருத்தலின் சுடர்
இயக்கத்தின் தீ
அளையிடை இருக்கவொண்ணா
அக்கினிக்குஞ்சு

மேன்மையொன்றே கருதி
எரிந்தழித்து
முளைத்தெழும்
அரிசனம்

மீதமிருக்கும் கனவுகளின் ஈரம்

ஜிஃப்ரி ஹாசன்

களுத்துறைக்குச் செல்வதற்காக புறக்கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் பஸ்சுக்காக காத்துக் கொண்டு நின்றேன். எனக்கு கொழும்பு வரக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் களுத்துறையிலுள்ள எனது நண்பன் ஒருவனை அநேகமாக சந்திக்கச் செல்வது வழக்கம். அவனும் அதை விரும்பி இருந்தான். எனது பல்கலைக் கழகத் தோழியான மிதிலா பாணந்துறையைச் சேர்ந்தவள். அவளது ஊரைக் கடந்துதான் அங்கு செல்ல வேண்டும். ஆனால் அங்கு செல்லும் ஒவ்வொரு பொழுதும் பாணந்துறை வரும் போது எனக்குள் பதட்டமும் ஒருவித சோகமும் கவிழ்ந்து கொள்கின்றன. இத்தனை ஆண்டுகள் கழித்தும் என்னால் அந்த ஞாபங்களிலிருந்து இன்னும் விடுபட முடியாதிருப்பது ஓர் ஆழமான அர்த்தத்தில் நான் தோற்றுப் போய்விட்டதாக உணர்கிறேன். சிலவேளைகளில் களுத்துறைக்குச் செல்லாமலே நான் வீடு திரும்பி விட நினைத்ததுமுண்டு. எதேச்சையாக அவளை அங்கு சந்திக்க கிடைத்து விடக்கூடிய சந்தர்ப்பங்களை இயன்றளவு தவிர்ந்து கொள்ளவே நான் அப்படி நினைத்தேன்;.

எங்கள் பல்கலைக்கழக நாட்களில் எங்களுக்குள் ஓர் ஆழமான நட்பும் புரிதலும் இருந்தது. அது எப்படி ஆரம்பித்தது எப்படி முடிந்து போனது என்பது இன்றளவும் ஒரு கனவு போல என்னுள் ஈரமாக அப்பிக்கிடக்கிறது. எனது பெட்ச்மெட்டான அவள் ஆங்கில இலக்கியத்தை சிறப்புப் பாடமாகப் பயின்றாள்.

நான் இப்போது பஸ்ஸில் ஏறிக் கொண்ட போது அவளும் இதில் வரக்கூடாதா என்று என் கட்டுப்பாட்டையும் மீறி ஏதோ ஒரு நப்பாசையில் பஸ் முழுவதும் ஒரு கணம் சுற்றிப் பார்க்கிறேன். முன்பொரு முறை நான் களுத்துறைக்குச் செல்லும்போது எதேச்சையாக இருவரும் ஒரே பஸ்ஸில் அருகருகே அமர்ந்து செல்லும் சந்தர்ப்பம் உருவானது. ஒரு மழைக்காலத்தில் வாய்த்த அந்த சந்தர்ப்பத்தை என்னை விட அவளே வளாகத்தில் வைத்து அதிகம் நினைவுகூர்ந்தாள்.

‘வீடு செல்கிறீர்களா?’ என்று நான் அப்போது அவளைக் கேட்டேன்.

‘ஓவ்’ என்று தலையசைத்தாள். அவள் எப்போதும் இப்படித்தான் தலையசைப்பது வழக்கம். பகிடிவதைக் காலத்திலிருந்தே அவள் என்னை அடிக்கடி ‘வேண்டுமென்றே’ பார்ப்பதை நான் அவதானித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் ‘பாவம் இவனெல்லாம் எப்படித்தான் இந்த ‘ரெகிங்’ கை தாங்கிக் கொள்ளப் போகிறானோ’ என்று என் மீது பரிதாபப்பட்டுத்தான் இவள் என்னைப் பார்க்கிறாள் என்று நினைத்துக் கொள்வேன். எனினும் அது உண்மையிலேயே பரிதாபப் பார்வைதானா என்பதில் எனக்கு உள்ளுர ஒரு இலேசான சந்தேகமும் இருக்கத்தான் செய்தது.

ரெகிங் பீரியட்டில் முதலாமாண்டு மாணவர்கள் தாங்கள் நினைத்தபடி ஆடையணிய முடியாது. சிரேஸ்ட மாணவர்கள் விதித்திருந்த வரையறையின்படியே நாங்கள் ஆடையணிந்து கொள்ள வேண்டி இருந்தது. ஆயினும் அந்த ஆடையில் கூட அவள் அழகாக இருந்தாள். அவளிடம் சற்று அமைதியான சுபாவம் இருப்பதை நான் உணர்ந்து கொண்டேன். அவள் என்னுடன் ஒரு நெருக்கமான உறவை ஏற்படுத்த முனைபவள் போல் காணப்பட்டாள். ‘ரெகிங் பீரியட்டிலுங்’கூட அதற்கான சந்தர்ப்பங்களை அவள் வலிந்து உருவாக்கிக் கொள்வதை ஓரளவு என்னால் அவதானிக்க முடியுமாக இருந்தது. அதற்கான காரணத்தை என்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

‘ஒரியன்டேஷன்’ நாளில் முதலாமாண்டு மாணவர்கள் தங்களுக்கிடையில் நண்பர்களாகிக் கொள்ள வேண்டும். ஒரு ஆண் ஒரு பெண் நண்பர்களாகி தங்களைப் பற்றி அடுத்தவருக்குத் தெரியப்படுத்திக் கொள்வது இந்த நட்புமயமாதலின் உள்ளடக்கமாக இருந்தது. இதற்கென சில மணித்தியாலங்கள் எங்களுக்கு வழங்கப்பட்டன. அதற்குள் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும். என்ன அதிர்ஸ்டம்! எனக்கருகில் தேடிப்பிடித்து அவள் வந்து சேர்ந்திருந்தாள். அந்த நட்புமயமாதலின் முதல் நாளிலேயே அவளது பெயர் மிதிலா என்பதையும் அவளது ஊர் பாணந்துறை என்ற தகவல்கள் உள்ளடங்களாக அவள் பற்றிய இன்னும் பல முக்கிய தகவல்களை கேட்டுத் தெரிந்து கொண்டேன். சீனியர்ஸ் கேட்கும் போது நான் அவற்றை ஞாபகம் வைத்திருந்து சொல்ல வேண்டும். அவளும் என்னைப் பற்றிய தகவல்களைக் கேட்டுக் கொண்டாள்.

அந்த இனிமையான நாளில் என்னை ஒரு பாட்டுப் பாடும்படி வினயமாகக் கேட்டாள். தெரிந்த ஒரு சில தமிழ் பாட்டுக்களை எடுத்து விட்டேன். என்னை ஒரு சிறந்த பாடகன் என்று பாராட்டினாள். என் மனம் நோகாமல் இருக்கத்தான்? அவள் அப்படி சொல்லி இருக்க வேண்டும். எதற்கும் அருகில் எனது தமிழ் பேசும் நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா என ஒரு முறை நோட்டமிட்டுக் கொண்டேன். அதற்கிடையில் அருகிலிருந்த அவளது தோழிகளிடமும் நான் ஒரு பாடகனாக அவளது புண்ணியத்தில் அறிமுகமாகிக் கொண்டிருந்தேன். இதை எல்லாம் எனது நண்பர்கள் கேள்விப்பட்டால் என்ற ஒரு அச்ச உணர்வும் எனக்குள் எட்டிப்பார்க்கத்தான் செய்தது. ‘அவள் என்ன தப்பா புரிஞ்சிட்டாள் மச்சான்’ என்று சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை வந்து ஓரளவு ஆசுவாசப்படுத்தியது. மேற்கொண்டு பாடுவதற்கு நான் ஒத்துக்கொள்ளவில்லை. என்னுடைய துரதிஸ்டம் அப்போது அவளையும் பாடும்படி கேட்க எனக்கு அன்றொரு ஜென்ரல் நொலிட்ஜ் இல்லாமல் போய்விட்டது. அதை நினைத்து சில வேளைகளில் நான் துக்கம் அனுஸ்டித்ததும் உண்டு.

அவள் எனது பார்வையில் சற்று வித்தியாசமானவளாகத் தெரிந்தது உண்மைதான். ஏனைய சிங்களப் பெண்களின் நடை உடை பாவனையிலிருந்து அவள் வேறு பட்டிருந்ததை நான் அறிவேன். அது அவளது இயல்பான போக்கா அல்லது திட்டமிட்டு அவ்வாறு நடந்துகொள்கிறாளா என்பது பற்றிய ஆராய்ச்சிகளை நான் அப்போது மேற்கொள்ளுமளவுக்கு அவள் மீது ஆர்வம் எடுத்துக் கொள்ளவில்லை. அவள் மிகவும் மென்மையான சுபாவமுடையவளாகவும் அழகியலை ஆராதிப்பவளாகவும் இலக்கிய நாட்டமுடையவாளாகவுமிருப்பதை நான் ஓரியன்டேஷன் நாட்களிலிலேயே தெரிந்து கொண்டேன்.

அவளுடன் சரளமாக உரையாடுவதற்கு எனக்கு மொழி ஒரு தடையாக இருக்கவில்லை. சிங்களத்தில் ஓரளவு உரையாடும் திறன் எனக்கிருந்தது. இடையிடையே ஆங்கிலக் கலப்பும் உரையாடலின்போது கைகொடுத்தது.

‘நீங்கள் மிகவும் மென்மையானவர்’ என்று ஒரு நாள் என்னிடம் சொன்னாள். நானும் ‘நீங்களும் அப்படித்தான்’ என்று சொன்னேன். இருவருக்குமிடையில் இப்படி ஒரு ஒற்றுமை இருப்பது உண்மைதான். ஆனால் அவளிடம் ஒரு வித பிடிவாதக் குணமுமிருந்ததை நான் பின்னாட்களில் அறிந்து கொண்டேன். அந்தக் குணந்தான் என்னிடம் அறவே வர மாட்டேன் என்கிறதே என்று ஒரு நாள் வெளிப்படையாகவே அவளிடம் சொல்லிவிட்டேன்.

அவளுக்கிருந்த இலக்கிய ஈடுபாடு காரணமாக ஆங்கில இலக்கியத்தை  தனது பட்டப்படிப்பில் சிறப்புப்பாடமாகத் தெரிவு செய்திருந்தாள். அபாரமான ஆங்கில அறிவு அவளுக்கிருந்ததை நான் அறிவேன். தாங்கள் அன்றைய பாடத்தில் படித்த ஆங்கிலக் கவிதைகள் பற்றி எப்போதும் என்னுடன் உரையாடும் பழக்கம் அவளுக்கிருந்தது. எனக்குள்ளும் ஒரு தீவிர வாசகனும் எழுத்தாளனும் இருப்பதை ஆரம்ப நாட்களில் அவள் அறிந்திருக்கவில்லை. அதை நான் விரும்பி இருக்கவுமில்லை.

ஒரு நாள் கமலாதாஸ் சுரைய்யா என்றொரு ஆங்கிலத்தில் எழுதும் கவிஞையைப் பற்றியும் அவர் இஸ்லாத்தைத் தழுவியது பற்றியும் என்னிடம் பேசினாள். அன்றிலிருந்து அவளை விடத் தீவிரமாக ஆங்கில இலக்கிய வாசிப்பில் நான் மூழ்கத் தொடங்கிவிட்டேன். அவள் சொல்லும் ஒவ்வொரு எழுத்தாளரைப்பற்றியும் நானும் அவளுடன் பகிர்ந்து கொண்டபோது அவள் மிகவும் ஆச்சரியப்பட்டாள். ‘நீங்களும் ஆங்கில இலக்கியம் எடுத்திருக்கலாம்’ என்றாள். ‘ஓ எடுக்கிற மாதிரித்தான் இரிந்திச்சி’ என எனக்குள் எழுந்த சிந்தனையை சிரமப்பட்டு விழுங்கிக் கொண்டேன். பின் வந்த நாட்களில் அவளது ஆங்கிலப் பாடப் பரீட்சைகளுக்கு அவளைத் தயார்படுத்தும் விரிவுரையாளர் பாத்திரத்தையும் நானே வகிக்க வேண்டி வந்தது.

தமிழ்மொழியில் நான் ஒரு எழுத்தாளனாக கடந்த சில ஆண்டுகளாக செயற்பட்டு வருவதை அவள் நம்பக்கூடிய ஒரு கட்டம் வந்தபோது வெளிப்படுத்தினேன். அது அவளை மேலும் என்னுடன் இணைத்துப் பிணைப்பதாக இருந்தது.

மிதிலா எனது சமயத்தைப் படிக்கும் ஆர்வத்தை ஒரு நாள் என்னிடம் வெளிப்படுத்தினாள். அதற்குண்டான வசதிகளை நான் செய்து தருவதாக அவளிடம் கூறினேன். இதனை முஸ்லிம் மஜ்லிசுக்கும் தெரியப்படுத்தினேன். இதன் முதல் கட்டமாக குர்ஆனின் ஆங்கில மொழி பெயர்ப்புப் பிரதி ஒன்றை இரகசியமாக அவளது கைகளுக்குச் சேர்ப்பித்தேன். பிறகு பல்கலைக்கழக நூலகத்தில் காணப்பட்ட இஸ்லாம் சம்பந்தமான நூல்களை இரவல் பெற்றுப் படிக்கும்படி கூறினேன். நானும் இரவல் பெற்றுக் கொடுத்தேன். சிங்களத்தில் வெளிவந்து கொண்டிருந்த இஸ்லாமிய சஞ்சிகைகளுக்கு நான் சந்தாதாரனானேன். இவை அனைத்தையும் ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் நான் செய்து கொண்டிருந்தேன்.

ஆனால் எனக்குள் இருக்கும் ஒரு வித கோழைத்தனமான கூச்ச சுபாவம் இப்போது தன் வேலையைக் காட்டத் தொடங்கியது. ஒரு சிங்களப் பிள்ளை என்னுடன் நெருங்கிப் பழகுவதை அடுத்தவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று என் மனம் இப்போது குறு குறுக்கத் தொடங்கி இருந்தது. பல்கலைக்கழக சூழலில் அது ஒன்றும் பெரிய விசயமில்லை என்ற போதிலும் அது பற்றி அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். எனினும் அவசரப்பட்டு எந்தவொரு முடிவுக்கும் வராது அது பற்றி நண்பர்கள் வட்டாரத்தில் பேச்சுக்கள் கசியும் வரை காத்திருப்பது என்ற முடிவுக்கு வந்திருந்தேன்.

சில மாதங்களில் அவள் இஸ்லாம் குறித்து என்னளவுக்குத் தெரிந்து கொண்டு விட்டதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஒரு ஃபங்ஷன் தினமொன்றில் மாணவிகள் தங்களை மிகவும் அலங்கரித்து ஆடல் பாடல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் இவளோ சற்று மரியாதையான ஆடையணிந்து ஆடல் பாடல்களில் பங்கேற்காது என்னைப் போல் ஒதுங்கி இருந்து வெறுமனே பார்த்தல் இரசித்தல் பாத்திரத்தை வகித்துக் கொண்டிருந்தாள். மாணவர்கள் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டபோது, அவளையும் ஃபோட்டோ எடுத்துக் கொள்ளும்படி உற்சாகப்படுத்தினேன். அதற்கு அவள் போட்டோ பிடிப்பது ஹராம் என்று சொல்லி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாள்.

‘இதுக்கு இவள் இஸ்லாத்தப் படிக்காமலே இருந்திருக்கலாம்’ என்ற சிந்தனை அக்கணத்தில் எனக்குள் மின்வெட்டி மறைந்தது.

இப்படியாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த  நோன்பு மாதமொன்றில், ‘நீங்கள் நோன்பா?’ என்று என்னிடம் கேட்டாள். நான் ‘ஆம்’ என்று தலையசைத்தேன். ‘நானும் அடுத்த வருசம் நோன்பு பிடிப்பேன்’ என்று அவள் சொன்னபோது அருகிலிருந்த சிங்கள மாணவிகள் அவளை கடுமையாக திட்டினர். நீ என்ன முஸ்லிமா? என ஒருத்தி கடுமையாக அவளை வைய்தது போது எனக்குள் அவள் மீது ஒரு வித பரிவுணர்வு ஏற்பட்டதை உணர்ந்தேன். சக மாணவிகளால் அவள் அந்த இடத்தில் கடுமையாக இம்சிக்கப்பட்டாள். ஒரு மதத்தின் மீது தனக்கிருந்த ஈடுபாட்டை அவள் வெளிப்படுத்திய போது அன்று அவளுக்கு ஏற்பட்ட அவமானத்தால் அவளை விடவும் நான்தான் மிகவும் நொந்து போயிருந்தேன். அப்படியானால் அவள் ஹொஸ்டலில் எவ்வளவு இன்னல்களைச் சந்திப்பாள் என்று என் மனம் அவள் மீது மீண்டும் பரிவு கொள்ளத் தொடங்கியது. ஆனால் அது பற்றி எதுவும் நான் அவளிடம் கேட்கவில்லை.

எங்கள் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்கள் தொழுகை நடத்துவதற்கென ஒரு Prayer Room  தரப்பட்டிருந்தது. எங்களது சமய விவகாரங்களுக்கான மத்திய நிலையமாகவும் அதுவே தொழிற்பட்டது. ஒரு நாள் அதைக் காண்பிக்கும் படி என்னிடம் அவள் கேட்டாள். நான் அவளை உள்ளே அழைத்துச் சென்று அதனைக் காண்பித்தேன். அப்போது அரபியில் அவளது பெயரை எழுதிக் காண்பிக்கும்படி என்னிடம் கையை நீட்டினாள். நான் கையைப்பிடித்து எழுதுவதை தவிர்ந்து கொள்ளும் நோக்குடன் அரபை கையில் எழுதக் கூடாது என்று ஒரு பச்சைப் பொய்யை சொல்லி அந்த இக்கட்டிலிருந்து என்னைப் பாதுகாத்துக் கொண்டேன். இதிலிருந்து சில நாட்கள் கழித்து கெண்டினில் வைத்து அவளது கையில் எனது பெயரை அரபியில் எழுதி இது சரியா எனக் கேட்டாள். சரியாகத்தான் எழுதி இருந்தாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மொழிகளை கற்பதில் அவளுக்குள் தீவிர ஆர்வமும் ஆற்றலுமிருந்ததை அந்நாட்களில் நான் அறிந்தே வைத்திருந்தேன். இப்படியே போனால் ஒரு நாள் குர்ஆனுக்கும் தப்ஸீர் எழுதி விடுவாள் என நான் நினைத்துக்கொண்டேன்.

அவள் பரீட்சைக்கான தயார்படுத்தலில் மிகவும் பிஸியாக இருந்த ஒரு நாளில் ஆங்கிலக் கவிதை உலகின் இரட்டையர்களான தோமஸ்-ஃப்ரொஸ்ட் ஆகியோரின் கவிதைகளில் வர்ணிக்கப்படும் இயற்கையின் அழகு நமது வளாகத்தின் சுற்றுச் சூழலில் நிறைந்து கிடக்கிறது என்று அவளிடம் எனது ஆங்கில இலக்கியப் புலமையை காட்ட முற்பட்ட போது அது வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய சீலமாக முடிந்தது. அவர்களின் கவிதை தனது பரீட்சை வினாத்தாளில் முக்கிய கேள்வியாக இடம்பெறும் எனக்கூறி அவற்றை முழுமையாக எழுதித் தரும்படி ஒரே பிடியாகப் பிடித்துவிட்டாள். அதற்கு முக்கியும் முண்டியும் தயாராகி எழுதிக் கொடுக்க வேண்டி இருந்ததால் எனது பாடத்தில் நான் கோட்டைவிடும் நிலமையும் போதாக்குறைக்கு உருவாகிக் கொண்டு வந்தது.

மிதிலாவின் தந்தை ஒர் உயர் அரசாங்க உத்தியோகத்தராக இருந்தார். அடிக்கடி கோபப்படும் சுபாவம் அவரிடம் இருந்த போதும் அனைவருடனும் அன்பாகப் பழகக்கூடியவர் என்று மிதிலா தனது அப்பாவைப்பற்றி என்னிடம் சொல்லி இருந்தாள். நான் நண்பனைச் சந்திப்பதற்காக களுத்துறைக்குச் சென்ற போது அவளது அழைப்பை ஏற்று அவளது வீட்டுக்கும் சென்றிருந்தேன். அவளது தந்தையும் குடும்பத்தினரும் என்னுடன் அன்பாகப் பழகினர். அவர்கள் என்னுடன் பழகிய விதத்திலிருந்து அவள் என்னைப் பற்றி ஏற்கனவே அவர்களிடம் சொல்லி இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டேன்.  நான் மட்டக்களப்பைச் சேர்ந்தவன் என்பதால் அவர்கள் என்னிடம் யுத்தம் பற்றியே அதிகம்  பேச விரும்பினர். ஆனால் மிதிலா மதத்தைப் பற்றிப் பேசவே விரும்பினாள். ஆனால் இத்தகையதொரு தருணத்தில் இப்படிப்பட்ட பேச்சுக்களைத் தவிர்ந்திருக்கவே நான் விரும்பி இருந்தேன். அவளது தந்தை ஒரு அவசர வேலை காரணமாக வெளியேறிச் செல்வதாக என்னிடம் விடைபெற்றுச் சென்ற சில நிமிடங்களில் மழை பெய்யத் தொடங்கி இருந்தது. அது எதிர்பாராத விதமாக எனது புறப்படலை தாமதப்படுத்தி விட்டது.

அந்த இடைவெளியில் மிதிலா தனது வீட்டு நூலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். இஸ்லாம் சம்பந்தப்பட்ட நூல்களும் அங்கு காணக்கிடைத்தன. ஆனால் அதற்கு தனது தந்தையிடமிருந்து எதிர்ப்புகள் வந்ததாக கூறினாள்.

‘இந்த மாதிரியான புத்தகங்களை படிப்பது உனது பட்டப்படிப்பில் இல்லாத ஒன்று’ என்று அவளது அப்பா அவளைக் கடிந்து கொண்டதை அம்மாவுக்கு கேட்காத வகையில் என் காதருகே வந்து மெதுவாகச் சொன்னாள். அது காதலர்கள் இருவரின் கிசுகிசு உரையாடலைப் போன்றே இருந்தது. வீட்டில் அவளது வாசிப்புச் சுதந்திரம் வரையறுக்கப்பட்டிருந்ததை மிகுந்த மனவேதனையுடன் எதிர்கொண்டேன். அத்தகைய புத்தகங்களை அப்பாவின் பார்வையிலிருந்து மறைத்து வைக்குமாறு அவளுக்கு அறிவுரை கூறிவிட்டு அவளிடமிருந்து விடைபெற்றேன்.

ஸ்டடி லீவு என்பதால் அவள் வீட்டில் தங்கி இருந்து படிக்க முடிவு செய்திருந்தாள். நான் நண்பனின் வீட்டுக்குச் செல்வதா அல்லது எனது ஊருக்கே சென்று விடுவதா அல்லது வளாகம் மீள்வதா என்ற குழப்பத்துடன் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினேன். எனினும் இனம்புரியாத ஒரு சோகம் என் உள் மனதில் எதையோ செய்வதை அன்று முதன்முதலாக உணர்ந்தேன். இன்னும் மழைபெய்து கொண்டிருக்கக் கூடாதா என என் உள் மனம் குறுகுறுத்தது. நினைவுகளின் குப்பைக் கூடையாய் இதயம் கனத்து வழிய நான் பயணத்தை தொடக்க வேண்டி இருந்தது. அன்று களுத்துறைக்குச் சென்று நண்பனைச் சந்திப்பதற்கு மனம் ஒப்பவில்லை. நேரடியாக பல்கலைக் கழகத்துக்கு அல்லது வீட்டுக்குச் சென்று விடுவது என்ற முடிவில் அங்கிருந்து வெளியேறினேன். ஆனால் வளாகத்தில் சும்மா அரட்டையடித்துக்கொண்டிருக்கும் நண்பர்களின் தொந்தரவுகளிலிருந்து தப்பிக்க என் முன்னுள்ள ஒரே தெரிவாக வீடு செல்வதே இருந்தது.

மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் புகையிரததத்தில் யன்னலருகே ஓர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டேன். எப்போதும் இரயில் பயணங்களில் இரைச்சலால் இடறும் இதயத்தில் இன்று வேறொரு துயரம் நிரம்பி இருந்தது.

இப்போது புகையிரதம் அவளை விட்டும் என்னை வெகுதூரம் கொண்டு வந்து சேர்த்துவிட்டது. இந்த சேய்மை சொல்ல முடியாத வலியை உடலெங்கும் பரவவிட்டது. நாம் நேசிப்பவர்களை விட்டும் நாம் தூரச் செல்லும் போதுதான் அவர்கள் மீதான நேசம் நமக்குள் அதிகரித்து உயிர் கொல்லும் கொடிய அரக்கனாக மாறிவிடுகிறது என்பதை நான் யதார்த்தபு+ர்வமாக உணரும் தருணம் வந்தது.

வழக்கமாக வீடு வரும் போது மேலிடும் ஆவல் இன்றில்லை. அவளுடனான அந்த உறவில் மிகவும் அபாயகரமான கட்டத்தை நான் அடைந்திருப்பதை அன்றுதான் தீவிரமாக உணர்ந்தேன். அந்த வலியிலிருந்து என்னை மீட்க நான் எப்போதும் நேசிக்கும் இலக்கியத்தாலும் முடிந்திருக்கவில்லை. நான் அதுவரை காலமும் நம்பி வந்த, வாசித்து வந்த மாபெரும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் கூட என்னை இரட்சிக்க முடியாமல் அந்நாட்களில் என்னை ஈவிரக்கமற்றுக் கைவிட்டுக் கொண்டிருந்தனர்.

கிட்டத்தட்ட எதையும் சரியாக ஜீரணித்துக் கொள்ள முடியாத ஒரு வித இழப்புணர்வுசார்ந்த இந்த நிலமையிலிருந்து அவசரமாக விடுபட்டாக வேண்டும் என்ற முடிவுக்கு என்னை அந்த நிலமை கொண்டு வந்து சேர்த்தது. எனினும் ஒரு கலாசாரத் தடை அவளை நெருங்க விடாமலும் ஒரு நேசப் பிணைப்பு அவளைப் பிரிய விடாமலும் என்னைத் திணறடித்துக் கொண்டிருந்தன. இரு திசைகளிலும் இடம்பெயர்ந்து திரிந்த என் நெஞ்சின் வலியை யார்தான் அந்நாட்களில் அறிந்திருக்கக்கூடும்?

அவளது விசயத்தில் சமூகத்தை, கலாசாரத்தை மீறி நான் செல்வதில்லை என்ற உறுதியான ஒரு முடிவை எடுப்பதும் பின் அந்த முடிவை மீள்பரிசீலனை செய்வதும் என எனது ஸ்டடி லீவு கழிந்து கொண்டிருந்தது. இறுதியில் குடும்பமும் கலாசாரமும் எனக்குள் மேலோங்கி அவளை விட்டும் தூரமாவது என்ற முடிவுடன் வளாகம் சென்றேன்.

ஒருவாரம் கழித்து அவளை வளாகத்தில் சந்தித்தேன். அவளை நேரில் சந்தித்த போது நான் ஏற்கனவே எடுத்திருந்த முடிவு எனக்கே ஞாபகம் இல்லாமல் போய்விட்டது. நான் கலாசாரத்தை மீற முடியாத போராட்டத்தில் அவளை இழப்பது என்ற முடிவை தினமும் எடுப்பதும் பின் அவளை நேரில் சந்திக்கும் தருணத்தில் அக்கணமே அதை மறப்பதுமே அன்றைய நாட்களின் அன்றாட நிகழ்வாகிப் போயின. அதுவே எனக்கு மிகப்பெரிய அவலமாகவும், அருவருப்பாகவும்  இருந்தது. ஆனால் முடிந்தளவு அவளை சந்திப்பதை தவிர்ந்து கொள்ளும் உத்தியைக் கையாண்டு அவளை விட்டும் விலகிவிடுவது என்ற முடிவை நான் ஒரு போதும் கைவிடுவதாகவுமில்லை.

இதற்கிடையில் அவளும் என்னை விடுவதாக இல்லை. பூனையின் தலையில் பனங்காயை வைத்தது போல என் நிலமை அந்நாட்களில் மாறிப் போயிற்று. நான் வேண்டுமென்றே அவளை சந்திப்பதை தவிர்ந்து கொள்ள விரும்புவதை அவள் அறிந்து கொள்ளும்படி செய்வது என்ற முடிவையும் எடுப்பதும் பின் கைவிடுவதுமாக இருந்தேன். வாலும் இல்லை நூலுமில்லை வானில் பறக்கும் பட்டம் ஆனேன் என்ற பாடலை எனக்காகத்தான் எழுதி இருக்க வேண்டும் என்று பெரியளவிலும் அப்போது நான் யோசிக்க வேண்டி வந்தது.

எனது போக்கில் ஏற்பட்ட மாறுதலை அவள் புரிந்து கொண்டுவிட்டாளா என்கிற பரிசோதனைகளையும் நான் அவ்வப்போது மேற்கொண்டு வந்தேன். அதைப் புரிந்து கொண்டவள் போலும் புரியாதவள் போலும் அவளும் வேறு தாப்புக் காட்டித் தொலைத்தாள். அதேநேரம் நான் ஏற்கனவே அச்சப்பட்டது போல் தமிழ் பேசும் நண்பர்கள் வட்டாரத்திலும் எங்களது விசயம் முக்கிய பேசுபொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. எங்கள் இருவருக்குமிடையில் இருப்பது இஸ்லாமா? இலக்கியமா? அல்லது வேறு ஒன்றா என்பதை உடனடியாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக சங்கத்திலிருந்து சிலர் புறப்பட்டிருந்தனர். நான் விசயத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்த இந்த தருணத்தில்தான் அங்கிருந்து விசாரணைகள் முடிக்கி விடப்பட்டிருந்தன. இந்த சந்தர்ப்பத்தை சாக்காக வைத்து அவளிலிருந்து ஒதுங்கும் முயற்சியில் நானும் தீவிரமாக இருப்பது என்ற முடிவுக்கு வந்தேன். துரதிஸ்டவசமாக அந்த முடிவும் அவளை நேரில் சந்திக்கும் வரைதான் தொடர்ந்தது. இனி எந்தவொரு முடிவும் எடுப்பதில்லை என்றொரு முடிவும் அந்நாட்களில் நான் எடுத்ததாக ஞாபகம்.

இரண்டாம் ஆண்டு முதலாவது செமஸ்டர் பரீட்சைகள் நிறைவுபெற்று ஒரு- மாத விடுமுறை எங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறை எனக்கு சாதகமா அல்லது பாதகமா என்பதை மனக் கணக்குப் போட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன்.  அன்றைய நாளில் அவள் என்னை தனியே சந்தித்துப் பேச வேண்டும் என்று அழைத்தாள். வீடு செல்வதற்கு முன் அவளை வந்து சந்திக்கும் படி கேட்டுக் கொண்டாள். அவள் எதைப் பற்றிப் பேசப்போகிறாள். இஸ்லாம் பற்றியா? இலக்கியம் பற்றியா? அல்லது “வேறு ஒன்று” பற்றியா? என்ற குழப்பத்தில் மூழ்கியபடியே நடந்து கொண்டிருந்தேன். ஆனால் அன்று அவளது வழமையான கலகலப்பையும் மகிழ்ச்சியையும் அவளது முகத்தில் என்னால் கண்டு கொள்ள முடியவில்லை. நான் அன்றிரவு ஒன்பது மணிக்கு வீடு புறப்படுவதாக முடிவு செய்திருந்தேன்.

இலேசாக மழை தூறிக் கொண்டிருந்த அன்றைய மாலைப்பொழுதில் சிறு மரங்களின் தலைகளில் மேகங்கள் விசிறிக் கொண்டிருந்த வேளை நான் ஹொஸ்டல் நோக்கி நடந்து கொண்டிருந்தேன். சிலவேளைகளில் அவளும் என்னுடன் நடந்து வருவதுண்டு. அந்த நடைப் பயணத்தின் முழு நேரத்தையும் இலக்கியமும் இஸ்லாமும் விழுங்கி இருக்கும். ஆனால் அன்று நான் தனிமையில் நடக்க விரும்பினேன். மௌனமாக எனக்குள் உரையாட விரும்பினேன். எனது நேசத்தின் பயங்கரத்தை சுற்றி இருந்த காட்டின் எல்லா உயிர்களுக்கும் கேட்கும்படி அலறுவதற்கு விரும்பினேன். அனைத்துத் துயரங்களிலிருந்தும் விடுதலைக்காய் ஏங்கினேன்.

அவளும் அதே பதட்டத்துடன்தான் இருந்தாளா? அவளது நேசிப்பும் பயங்கரமானதா? அவளது கதறலும் கானகத்தை நிறைத்ததா? அல்லது கலாசாரத்தின் தடையை ஏறிக் கடக்கும் துணிச்சல் அவளிடம் இருந்ததா? அவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் பனி போல் நழுவிச் செல்லும் இலேசான காற்றுப் போல் வளாகத்தில் நான் வீசிக் கொண்டிருந்தேன்.

அவளைச் சந்திக்காமல் வீடு செல்வது என்றொரு முடிவை அன்று உறுதியாக எடுத்து விட்டிருந்தேன்.

 

 

எதற்காக எழுதுகிறேன் – மு. வெங்கடேஷ்

மு வெங்கடேஷ்

“எதற்காக எழுதுகிறேன்?” என்று பதாகை என்னிடம் கேட்டபோதுதான் நான் முதன் முதலாக என்னையே இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டேன். இதற்கு முன் இதே கேள்வியைப் பலமுறை பலபேர் பல சூழ்நிலைகளில் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அடுத்து அவர்களிடம் இருந்து வரும் கேள்வியைத் தவிர்ப்பதற்காக, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பதிலை அந்த சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் சொல்லிவிட்டு நழுவிக் கொள்வேன். இருந்தாலும் கேட்டு விடுவார்கள். “பணம் கிடைக்குமா?” “புகழ் கிடைக்குமா?” “அப்படியே சினிமாவுக்குப் போய்டலாமா?” என்று. உள்நாட்டில்தான் இப்படி என்றால் வெளிநாட்டு நண்பர் ஒருவர் “Congrats on becoming a writer and what are you going to do with the royalty?” என்று கேட்டார். சிரிப்பைத் தவிர வேறு எதையும் பதிலாக அளிக்கத் தோன்றவில்லை.

இப்படி எல்லோரிடமும் ஏதாவது ஒரு மழுப்பலான பதிலைச் சொல்லித் தப்பித்த எனக்கு பதாகையிடம் அவ்வாறு சொல்ல மனமில்லை. அதனால் வேறு வழியின்றி என்னிடமே இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டேன். “ழ” வை “ழ” என்றே சரியாக சொல்லத் தெரியாத, பழந்தமிழ் இலக்கியம் எதுவுமே தெரியாத, தமிழ் எழுத்தாளர்கள் எவரையுமே இதுவரை சரியாக வாசித்திராத நான் எதற்காக எழுதுகிறேன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டதற்கு கிடைத்த பதில் இதோ-

எதற்காக எழுதுகிறேன் என்பதற்கு முன் எவ்வாறு எழுதத் தொடங்கினேன் என்று பார்த்துவிடலாம்.

குமுதம், ஆனந்த விகடன், குங்குமம் மட்டுமே படித்துக் கொண்டிருந்த ஒரு சராசரி ஆள் நான். என்னை இந்த எழுத்துலகிற்கு இழுத்து வந்த பெருமை மாதவன் இளங்கோவைச் சாரும். என்னைப் பொறுத்தவரை எழுதுவதென்பது ஒருவகை போதை. மற்ற போதைப் பழக்கங்களைவிட மிகக் கொடுமையான எழுத்துப் பழக்கத்திற்கு என்னை அடிமையாக்கிய பெருமை மாதவன் இளங்கோவுக்கே உரியது (இதில் என்னை இப்போது ஊக்குவிப்பவர்கள் பலர்  உண்டு, ஆனால் நான் எழுத ஆரம்பித்ததற்கு முதல் காரணம் மாதவன் இளங்கோதான்).

நான் எழுதத் தொடங்கிய நாள் இன்றும் என்னால் மறக்க முடியாத ஒரு நாள். பணி நிமித்தமாக பெல்ஜியம் நாட்டிற்குச் சென்றிருந்தேன். அப்போது மேற்கூறிய மாதவன் இளங்கோவைச் சந்திக்க நேர்ந்தது. அவர் அதற்கு முன்பிருந்தே எனக்கு நல்ல நண்பர். நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் பணிபுரிந்தோம். ஆனால் அதுவரை தமிழ்,இலக்கியம், சிறுகதை இப்படி எதைப் பற்றியுமே நாங்கள் பேசியது கிடையாது.

அப்போது அவர், தான் எழுதிய ஒரு சிறுகதைத் தொகுப்பை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். வீட்டிற்கு எடுத்து வந்த நான் அதைப் படிக்கத் தொடங்கினேன். எனக்குண்டான ஒரு கெட்ட பழக்கம், ஏதாவது ஒன்று பிடித்துவிட்டால் அதைக் கடைசிவரைப் படித்துவிட்டுத் தான் கீழே வைப்பேன். அப்படித்தான் அன்றும் நடந்தது. அதிலுள்ள ஒவ்வொரு கதையாகப் படிக்கப் படிக்க அதற்குத் தொடர்புடைய, என் வாழ்வில் நடந்த ஏதாவதொரு சம்பவம் ஞாபகத்துக்கு வர, நாம் ஏன் அதை எழுதக் கூடாது என்று தோன்றியது. அன்றுதான் என் எழுத்தார்வம் உதித்தது.

இவ்வாறு எழுதத் தொடங்கிய நான் இன்று இந்த இடத்தில் வந்து நிற்கிறேன். நான் ஒன்றும் பல கவிதைகளையோ கட்டுரைகளையோ சிறுகதைகளையோ இதுவரை எழுதிவிடவில்லை. இருப்பினும், “எதற்காக எழுதுகிறேன்” என்று பதாகை என்னிடம் கேட்டதே ஒரு அங்கீகாரமாகக் கருதுகிறேன்.

எழுதத் தொடங்கிய புதிதில், நான் எழுதி அனுப்பும் கதை “நன்றாக உள்ளது” என்று நண்பர்கள் சொல்ல மாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருப்பேன். அவ்வாறு வரும் பதிலே எனக்கு “ஆஸ்கார்” விருது கிடைத்ததற்குச் சமமாக எண்ணிக் கொள்வேன். ஆனால் உண்மை என்னவென்றால் அவர்கள் இதுவரை நான் என்ன எழுதி அனுப்பினாலும் “நன்றாக இல்லை” என்று சொன்னதே இல்லை, மாறாக “நல்லா இருக்கு ஆனா….” என்று இழுப்பார்கள். அந்த இழுவையிலேயே எனக்குப் புரிந்துவிடும் அது தேறாது என்று. கதையை அவர்களிடம் ஓகே வாங்கிவிட்ட பின் அதை எப்படியாவது ஒரு இதழில் பதிப்பித்து விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.அதற்காக பல முயற்சிகள் எடுப்பேன். ஒரு காலத்தில் அதுவும் சாத்தியமானது (சிறகு, பதாகை, சில்சீ, அகம்) வாயிலாக.

இப்போது என் மனதில் ஓடிக் கொண்டிருப்பதெல்லாம் எப்படியாவது அந்தக் கதைகளை எல்லாம் ஒரு தொகுப்பாக வெளியிட வேண்டுமென்று. கண்டிப்பாக இதுவும் ஒரு காலத்தில் சாத்தியமாகி விடும். இது அதோடு நின்று விடுமா என்ன? கண்டிப்பாக இல்லை. ஏன்?

இப்போது எதற்காக எழுதுகிறேன் என்பதைப் பார்த்து விடலாம்:

பணம் – இல்லை என்பது எதார்த்த நிலைமை அறிந்த எனக்குத் தெரியும். தமிழில் எழுதி எவ்வளவு சம்பாதித்துவிட முடியும் என்பதும் எனக்குத் தெரியும். அப்போ வேறு எதற்கு?

புகழ் – ஓரளவிற்கு ஆம் என்றே சொல்லுவேன். ஏன் அந்த ஓரளவிற்கு என்று கேட்டால், தமிழில் தலை சிறந்த, உலகத் தரம் வாய்ந்த எழுத்தாளர்கள் இருந்தும் அவர்களுள் நமக்கு எத்தனை பேரைத் தெரியும்? அப்போ வேறு எதற்கு?

மனநிறைவு  – ஆம், என் மன நிறைவிற்காக மட்டுமே. நான் ஒரு தமிழ் எழுத்தாளன் என்று சொல்வதற்காக மட்டுமே. என் “passion” காக மட்டுமே. வேறு எந்தவொரு காரணமாகவும் இருக்க முடியாது.

எழுதுவதென்பது எனக்கு “passion” ஆகிப் போனதால்.ஒவ்வொரு கதை எழுதும்போதும் எனக்கு கிடைக்கும் மன நிம்மதி மற்றும் சந்தோசத்திற்காக மட்டும் எழுதுகிறேன். நான் எழுதும் கதை பெரும்பாலும் என் வாழ்க்கையில் நடந்ததோ அல்லது நான் கேள்விப் பட்டதாகவோ இருக்கும். அவ்வாறு எழுதும்போது நான் பல நேரங்களில் சிரித்திருக்கிறேன், அழுதிருக்கிறேன். என் எண்ண ஓட்டங்களை கதைகளில் கொண்டுவர நான் மெனக்கிட்டிருகிறேன். இதெல்லாம் நான் விரும்பி ஏற்றுக் கொண்டு செய்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை கதை சொல்வதென்பது எளிது. ஆனால் கதை எழுதுவதென்பது?எண்ணத்தில் தோன்றுவதை எழுத்தில் கொண்டுவருவது? முக்கியமாக அதை வாசிப்பவரிடம் கொண்டு சேர்ப்பது? சவாலான விஷயம்தான். இந்த சவாலை சாத்தியமாக்குவதற்கு ஒரே வழி சிறந்த எழுத்தாளர்களை வாசிப்பது மட்டுமே. அவர்கள் எப்படி தாங்கள் சொல்ல வரும் கருத்தை, உணர்ச்சியை வாசிப்பவரிடம் கொண்டு சேர்க்கிறார்கள் என்று தெரிய வரும்.

மேலும் எழுதும்போது நாம் இவ்வுலகை வேறு ஒரு கோணத்தில் பார்க்கத் தொடங்கி விடுவோம். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறதென்று கூர்ந்து கவனிக்கத் தொடங்குவோம். அதிலிருந்து எதை எடுக்கலாம், எதை கதையாக வடிவமைக்கலாம் என்ற எண்ண ஓட்டம் வந்து விடும். எழுதுவதற்கு முன் – பின் என என்னால என்னுள் பல மாற்றங்களை  உணர முடிகிறது. முன்பெல்லாம் சுற்றி என்ன நடந்தாலும் மேலோட்டமாகப் பார்த்துவிட்டுச் சென்று விடுவேன். ஆனால் இப்போது எதைப் பார்த்தாலும், வாசித்தாலும், கேட்டாலும் என்னால் அதில் ஆழமாக என்னை ஈடுபடுத்திக் கொள்ள முடிகிறது. அவ்வாறு கூர்ந்து கவனிக்கும்பொழுது என்னுள் ஒரு கதை ஓடிக்கொண்டே இருக்கிறது.

இது அனைத்திற்கும் காரணம் “passion” ஆக இருக்க முடியுமே தவிர பணமோ, புகழோ இருக்க வாய்ப்பில்லை.

என் எழுத்தார்வத்துக்கு எடுத்துக்காட்டாக இப்போது நடந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன்.

என் மனைவி சோகமாக இருந்திருக்கிறாள். உடன் பணிபுரியும் தோழி என்னவென்று கேட்க, “நேத்து வீட்ல எனக்கும் என் கணவருக்கும் சண்ட,” என்று சொல்லிருக்கிறாள்.” ஐயோ அப்படியா என்னாச்சு அப்புறம்,” என்று தோழி கேட்க, “என்னாச்சு? ஒன்னும் ஆகல. அவர் கோவிச்சிட்டு கதை எழுதத் தொடங்கிட்டாரு,” என்று சொல்லியிருக்கிறாள்!.