எழுத்து

சிதிலங்கள்

வே. நி. சூரியா

இருள் கொஞ்சும் நேரம். எப்போதும் போல கடல் அலைகள். எப்போதும் போலத்தான் அந்த நேரமும். அங்கு தான் அழகிய முகம், விரித்து விடப்பட்ட கூந்தல் , கடல் அலையை கருணையோடு பார்த்து கொண்டிருக்கும் மாதவி மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் காலடித் தடம் மண்ணில் பதிவதும் அதை கடல் அலைகள் அழிப்பதுமாக ஒரு விளையாட்டு தொடர்ந்து கொண்டிருந்தது.

அநேகமாக அங்கு அவளைத் தவிர அந்நேரம் யாருமில்லை. ஏன் அங்கு மற்ற கடற்கரைகளை போல கூட்டமில்லை என்பது அவளுக்கு தெரியாமல் இல்லை. ஏன் அந்த கடற்கரையை மற்றவர்கள் வெறுக்கிறார்கள் என்பதன் பதில் அந்த மற்றவர்களுக்கு ஆளுக்கொரு விதமாக தெரிந்திருந்தது. அந்த நகரம். அப்படி சொல்லலாமா என்பது கூட தெரியவில்லை.

ஒரு ஆள் அரவமற்ற கடற்கரை, ஆட்கள் அதிகம் வசிக்காத பகுதிகள், ஒரு பாழடைந்த நூலகம் மேலும் தீயில் கருகிய பல அரசாங்க கட்டிடங்கள் , இன்னும் தரையில் சிதறிக் கிடக்கும் ராணுவ உடைகள், பல செயலிழந்த வெடி குண்டுகள் என ஒரு இடம் . அங்கு தான் அவள் வாழ்ந்து கொண்டிருந்தாள்.

அப்படி ஒரு நிசப்தம் அங்கு. அந்த இடத்தை விட்டால் சக மனிதர்களிடம் இருந்து தப்ப வேறு எந்த இடமும் இல்லை. மாதவிக்கு ஒரு சிதிலமடைந்த வீடு அங்கு தான் சொந்தமாக இருந்தது. தற்காலிக சொந்தமாக இருந்தது. அந்த நகரமே எரிந்து போன கோலத்தில் இருந்ததால் அவளுக்கு சமைக்க எரிபொருள் பஞ்சமும் இல்லை.தன்னை போகப்பொருளாக எண்ணும் மனித மிருகங்கள் யாருமில்லாததால் அந்த ஆள் அரவமற்ற நகரில் எப்போதோ பெய்த மழையில் நிரம்பி எப்போதுமே மனித குப்பைகள் மிதந்து வரும் நவீன குளங்களை போல அல்லாத ஒரு நீர் தேக்கம் இருந்தது குளிப்பதற்கு. அதுவும் அவள் ஆடைகள் அற்று நிர்வாணமாக குளிக்கும் அளவிற்கு நிரம்பி வழியும் தனிமையுடன்.

அடிக்கடி அவளுக்கே தோன்றும் இது எனக்கு மட்டும் படைக்கப்பட்ட நகரமா என்று. கடைசியில் இந்த தனிமையை எண்ணி இதை இழந்து விடக்கூடாது என இது எனக்கான நகரம்.இங்கு வேறு யாரும் இருக்க முடியாது.இது எனக்கான நகரம் என அவளுக்கு அவளே சொல்லிக் கொள்வாள். இப்படி ஒரு ஆள் அரவமற்ற அழகான தனிமையுடைய நகரை ஏன் இந்த மனிதர்கள் கைவிட்டார்கள் எனவும் அடிக்கடி யோசித்து கொள்வாள்.

இப்படிப்பட்ட ஒரு நகரத்தின் ஆள் அரவமற்ற கடற்கரையில் நடந்து கொண்டிருந்த மாதவிக்கு என்னவென்றே தெரியாத பல சிந்தனைகள் மின்னி மின்னி மறைந்தன. தனிமையில் இருக்கும் போது மனிதன் உண்மையாக இருக்கிறான் என மனோதத்துவ அறிஞர்கள் சும்மாவா சொன்னார்கள். அந்த தனிமையில் பல வருடங்களாக ஊறிப்போனதில் அவள் முழு உண்மையாக மாற்றப்பட்டிருந்தாள்.

அவள் ஒரு கடற்பறவையை காண நேர்ந்தது.அது போல அவள் பறவைகளை கண்டு வெகுகாலமாகியிருக்கும்.ஏன், விலங்குகளைக் கூட கண்டதில்லை அவள் இந்த நகரத்தில். எப்போதோ எல்லை மறந்து நிசப்தத்தை சுவாசிக்க வரும் சில பறவைகள் அவளை வெகுவாக ஆச்சரியப்படுத்தும். எந்த மனிதர்களும் கனவில் கூட வாழ நினைக்காத ஒரு பிரதேசத்தை இப்படி சில நேரம் இந்த மாதிரியான பறவைகள் பார்த்துவிட்டு செல்வதை கண்டால் ஆச்சரியப்படாமல் யார் தான் இருப்பார்கள்.

அந்த பறவை அவள் நடந்து செல்லும் வழியில் வெகுதொலைவில் பாதி சிதிலமடைந்து கிடக்கும் ஒரு ராணுவ விமானத்தின் இறக்கையின் ஒய்யாரமாக அமர்ந்து தன் உடலை தன் அலகாலே கொத்திக் கொண்டிருந்தது.இந்த ஒரு நிகழ்வை கண்டு திகைத்தவளாய் கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். இதற்கிடையே கடல் அலைகள் சீற்றம் , உப்பு வாசனையேற்றும் ஒரு பயங்கர குளிர்க்காற்று.

அந்த பயங்கர காற்றை விட அதிபயங்கரமான யோசனைகள். அந்த பறவை தற்கொலைக்கு முயல்கிறதா ? ஏன் ? என் ? கண் முன்னால் தற்கொலைக்கு முயல வேண்டும் ? இந்த இருளில் அது ஏன் தனியே இங்கே வந்தது ? என ஒன்றன்பின் ஒன்றாக யோசனைகள். இப்படி யோசித்து கொண்டிருக்கும்போதே திடீரென அந்த பறவை எங்கோ அவசரமாக புறப்படும் மனிதனை போல சிறகுகளை விரித்தசைத்து பறந்து போனது.அப்படி பறந்து போன பின்பும் அவள் அந்த ராணுவ விமானத்தின் இறக்கைக்கு மேல் அந்த பறவை அமர்ந்திருந்த இடத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

எல்லாம் திடீர் என நடந்து கொண்டதை போல அவளும் திடீரென அந்த கடற்கரையை விட்டு சிதிலமடைந்த கட்டிடங்கள் இருக்கும் பகுதியை நோக்கி நகர ஆரம்பித்தாள்.

அவள் வெறும் இடத்தையோ, நேரத்தையோ கடப்பது போல அவள் அங்கிருந்து நடப்பதை பார்த்தால் தெரியாது ஏனெனில் முகத்தில் சதா ஏன் ஏன் என் என எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும் யோசனைகளை தாண்டி தாண்டி பள்ளத்தில் விழாமல் தப்பி சென்றுகொண்டிருந்தாள். தற்கொலை, சுதந்திரம் என இதற்கு முன் அவளுக்கு தோன்றிருக்காத விஷயங்களை கடந்து கொண்டிருந்தாள் . தற்கொலை, சுதந்திரம் என்பது வெறும் வார்த்தைகளாக இருக்கலாம் ஆனால் அந்த வார்த்தைகள் காகிதத்திலோ, புத்தகத்திலோ உயிர் பெறுவதில்லை.ஆனால் இந்த வார்த்தைகளுக்கு மனித மனமே உயிர் கொடுத்து செயல்படவிடுகிறது என்பது அவளுக்கு தெரிந்திருக்கலாம். ஒருவேளை அந்த வார்த்தைகள் என் மனதை ஆதாரமாக கொண்டு என் உடல் வழியே செயல்பட்டு விடுமோ என்ற பயமாக கூட இருக்கலாம்.

இப்படி ஒரு மனநிலை நிலவிய நகர சூழலில் அடிமேல் அடிவைத்து நிழலை முன்னுக்கும் பின்னுக்கும் தள்ளி தள்ளி இலக்கை அடைந்தாள். ஒரு பெரிய கட்டிடம், அதில் பாதி தரையில் கிடந்தது.ஒரு ராணுவ தானியங்கி குண்டு எறியும் கருவியின் பெரிய குழாய் அந்த பாதி கட்டிடத்தின் மேல் கூரையாக கிடந்தது.அது தான் மாதவியின் வீடு. கதவும் கிடையாது. அந்த வீட்டினுள் சில புத்தகங்கள், ஒரு படுக்கை, ஒரு பாலீதீன் குப்பி அதில் பாதியளவு தண்ணீர் , சிறிது குடிக்கப்பட்ட பிராந்தி குப்பி , சில உடைகள் , ஒரு இருபது நாளுக்கு உண்ணும்படியான அகதிகளுக்கான பெரிய உணவு பொட்டலம் , மேலும் சில எழுதப்படாத டையரிகளும், இரண்டு கறுப்பு நிற பேனாக்களும் அங்கு இருந்தது. இவை அனைத்தும் ஏற்கனவே அங்கேயே இருந்ததால் இந்த கட்டிடம் அவள் வசிக்கும் இடம் ஆனது.

உள்ளே போன மாதவியின் கண்ணில் பட்டது அந்த புகைப்படம். அது மட்டுமே அவளுடைய பூர்வீக சொத்து.அதை கண்டவள் கடந்த காலத்தை நினைக்க கடமைப்பட்டவளாய் நினைவுகளில் பின்னோக்கி போனாள். அங்கே தன் தந்தை, தாய், காதலன் , பரபரப்பான நகரம் என நினைவுகளை சுவாசித்து கொண்டிருக்கும்போது அந்த படுக்கையின் மேலே சுவாசித்த களைப்பில் தூங்கியும் போனாள்.அங்கே ஒரு கனவு. நனவில் இருந்து இருந்து சலித்து போனவர்கள் தனிமையில் நினைவுகளை சுவாசித்தால் கனவு வரத்தானே செய்யும்.

அங்கே மாதவி ஒருவனை பார்த்தாள். அது சகா தேவன் என உணர கொஞ்சம் காலம் பிடித்தது. “அதே வசீகர உதடுகள்” என பேசிக்கொண்டே கட்டியணைத்தான் மாதவியை பின்னிருந்து. ஒன்றும் பேச முடியவில்லை மாதவியால். “என்னுடன் வரும் திட்டமில்லையா உனக்கு ?” என்றான் சகா தேவன் பிடியை விடாமல்.சகா தேவனின் அனல் மூச்சு மாதவியின் கழுத்தில் அனல் காற்றாக பட்டு தெறித்துக்கொண்டிருந்தது.

“இந்த இடம் அப்படி ஒரு அமைதி. ஏன் இப்படி வந்து வந்து போகிறீர்கள்.இங்கேயே இருந்துவிடக் கூடாதா ?” என மாதவி கேட்டாள். “இங்கே என்ன இருக்கிறது. அமைதி மட்டும் போதுமா வாழ ?” என கேலியுடன் கேட்டான் சகா தேவன். “இல்லை, இங்கு இருக்க எனக்கு மிகவும் பிடித்துள்ளது .இந்த இடத்தை விட்டு என்னால் வர முடியாது. ஆட்கள் இல்லாத கடற்கரை, சுத்தமான குளம், பரிபூரண அமைதி.என்னால் முடியாது.” என சொல்லிவிட்டு தூரத்தில் தெரியும் ஒரு வெளிச்சத்தை கண்டாள். “அப்படியெனில் நம் திருமணம் ?” என சகா தேவன் கேட்டான். “உங்கள் ஊரில் தான் திருமணம், சம்பிரதாயம், சடங்குகள் எல்லாம்.இங்கே வந்தால் சடங்கும் கிடையாது, சம்பிரதாயமும் கிடையாது ஏன் கடவுளே கிடையாது” என சிரித்துக்கொண்டே சொன்னாள். “எல்லாவற்றையும் ஒப்புக்கொள்கிறேன் ஆனால் கடவுள் இல்லை என சொன்னதை ஒப்புக்கொள்ள முடியாது” என்றான் சற்று கோபத்துடன்.

“கடவுள் இல்லை என்றதும் கோபம் வருகிறதோ ?” என்றாள் மாதவி.”இல்லாம எப்படி. இந்த உலகத்தை படைச்சவர் கடவுள் ” என பேசி முடிக்கும் முன்னரே மாதவி ” அப்படியெனில் இந்த விஷம், வியாதி, போர், தற்கொலை என எல்லாவற்றையும் படைத்தவரும் உங்க கடவுள் தான? என கேட்டவள் அத்துடன் நிற்காமல் “எவ்வளவு நேரம் இப்படி அணைத்துக்கொண்டு நிற்பீர்கள்.கூச்சமாக இருக்கிறது.கையை எடுங்கள் ” என்ற வேண்டுகோளுடன் நாக்கை அசைப்பதை நிறுத்தினாள்.

“ஏன் உன்னை கட்டிப்பிடிப்பது தவறா ? நீ தான் என் காதலியாயிற்றே !” என்று சிரித்துக்கொண்டே சொன்னான் சகா தேவன்.

“ம்கும், நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் ” என்றாள் மாதவி. ” வாழ்க்கை என்று ஒன்று இருந்தால் மரணம் உண்டு தானே ” என பதில் சொன்னான். “வாழவே இல்லை. அதற்குள் உங்களை கொன்றுவிட்டாரே கடவுள் !” என அழ ஆரம்பித்தாள். கண்ணீர் கனவின் கண்ணாடியில் முகம் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தபோது சகா தேவனை காணவில்லை.இருப்பது இல்லாமல் போகும் போது இல்லாமல் இருப்பது நிரம்பி வழிந்து காட்டாறு போல திசை மாறி ஊரை அழித்து கொண்டு ஊரை வளப்படுத்த சிறைக்குள் அடைபடுவது போல அந்த கண்ணீருக்கு பின் ஒரு ஒருமையான வெறுமை. ஒரே வெறுமை. மகா அமைதி. எங்கும் இருள்.

சாவின் நனவை கனவில் கண்ட துக்கம் பொறுக்காமல் மூளையின் நரம்புகள் துயரத்தால் நெறுக்கப்பட்டு மூச்சு தன்னுடைய அகத்தை பிதுக்கி கொண்டு தன் இருப்பை சோதித்து கொள்வது போல உதடுகள் மனதின் மீட்டலில் தன்னாலே “என்ன ஒரு மோசமான கனவு” என சொல்லிக்கொண்டே தூக்கத்தில் இருந்து விழித்து பார்த்தால் அந்த நகரத்தை காணவில்லை.கடற்கரையும் இல்லை.சிதிலமடைந்த கட்டிடங்களும் இல்லை.சுத்தமான குளமும் இல்லை.. மாதவியின் கையில் ஹிட்லர் எழுதிய எனது போராட்டம் புத்தகம் இருந்தது. தொலைபேசி ஒலித்தது.அதை கையில் எடுத்து யார் என பார்த்தால் “சகா தேவன்” என இருந்தது.எழுந்து போய் சன்னல் வழியே பார்த்தாள். ஒரு ராணுவ பயிற்சி முகாம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

நம்புங்கள்

– ஸ்ரீதர் நாராயணன்

dad_daughter

வருங்காலத்தின் அத்தனை அநிச்சயங்களையும்
அச்சுறுத்தும்வகையில் உருவகப்படுத்தி
அவளுக்கு பொறுப்புணர்ச்சி உண்டாக்கவும்,

அடுத்து வரும் வகுப்புகளில்
கவனமாக
dஐ d போலவும் Yயை y போலவும்
மாற்றாமல் எழுத வேண்டும் எனவும்,

கண்டிப்பான சுடுசொற்களை வீசி
அவளுக்கான முன்னேற்றத்தை
வழிப்படுத்தத்தான் எண்ணியிருக்கிறேன்.

இப்படி,
கிளிப்பிள்ளைப் போல
அவள் சொல்லும் சொற்களின்
வேடிக்கையை கேட்டு
திரும்பத் திரும்பத் சொல்லி
கெக்கெலித்து பூரிப்பதற்காக இல்லை.

 

Picture courtesy: Ashok’s blog

Train Graffiti – Nakul Vāc

image1

From Newyork Times


The No.5 train
roaring down rat alleys
slamming out the tunnel
going whop-pop onto the high tracks

Me riding the sky
in the heart of the inner city
Over the whole burnt
and rusted country

Unseen
Unknown
Making the art of the backstreets talk

The trains go rattling over
garbagy Streets
Past the dead-eye windows of
empty tenements

That have people living there
Even if you don’t see them

Now, see
Our tags
Our cartoon figures
Bright and Rhyming poems

Our art that can’t stand still
Climbing across your eyeballs
Night and Day

Flashing those colors in your face
The flickery jumping art
of slums and dumpsters
As if
they were your movie
Motherfucker

A Found Poem, discovered in  pages 440-441 of the Scribner edition of Don Delillo’s Underworld

விட்டத்தைத் தொடுதல் – இலக்கிய மிகையுணர்ச்சி குறித்து: NICK RIPATRAZONE

மொழியாக்கம்: பீட்டர் பொங்கல்

nick_photo

http://nickripatrazone.com

மே 8, 2007 அன்று ஒரு கட்டுரை என்னை அழ வைத்தது. நியூ ஜெர்சியில் பெட்மின்ஸ்டரில் ஒரு பொது நூலகத்தில், என் மனைவி வேலையிலிருந்து திரும்பக் காத்திருந்தேன். அதற்கு முந்தைய ஒரு மணி நேரம் நான் சில கல்லூரி மாணவர்களுடன் கூடைப்பந்து மைதானமெங்கும் ஓடிக் களைத்திருந்தேன் (‘running full-court press’). இப்போது கூடைப்பந்துக்கு பதில் நூலகத்தின் நீண்ட மேஜைக்கும் புஷ்கார்ட் பரிசு 2006ஆம் ஆண்டு பதிப்பின் திறந்திருந்த அறுபத்து ஏழாம் பக்கத்துக்கும் வந்திருந்தேன். பிரையன் டாயில் எழுதிய “யோயாஸ் வோலாடோராஸ்”  . கட்டுரையின் இறுதிப் பகுதியைப் படிக்கும்போதுதான் நான் அழுதேன். அந்தக் கண்ணீர் முழுமையாகவே எதிர்பாராதது. என் வலப்புறம் மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்தவனிடமிருந்தும் என் இடப்புறம் இருந்த சிறுவனுக்கு பாடமெடுத்துக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்தும் நான் அழுகையை மறைத்துக் கொண்டேன், லேஸ் அவிழ்க்கப்பட்ட, கணுக்காலைத் தாண்டி உயர்ந்திருந்த என் ஹைடாப்களை நகர்த்திக் கொண்டேன், முட்டிக்குக் கீழ் நீண்ட ஜிம் ஷார்ட்ஸ்களை இழுத்து விட்டுக் கொண்டேன். நான் இருபத்து ஆறு வயது ஆண், என்னை அழ வைப்பதற்கல்ல இலக்கியம்.

நான் எழுதும் அறையின் வாசல் கதவின்மேல் உயரத்தில் என் தாத்தாவின் சிலுவை தொங்கிக் கொண்டிருக்கிறது. பெல்ட் ஒன்றால் செலுத்தப்பட்ட மோட்டாரின் ஆற்றலைப் பயன்படுத்தி என் பெற்றோருக்கு அவர் ட்ரை சிங்க்  செய்து கொடுத்தார். திடுக்கிட்ட இதயம் போல் அந்த மோட்டார் அடிக்கடி துள்ளும். இப்போது அந்த ட்ரை சிங்க் எங்கள் வீட்டு வாசல் அறையில் இருக்கிறது. நான் பதினெட்டு மாத குழந்தையாக இருந்தபோது தாத்தா இறந்தார். ஆனால் நான் இன்னும் அவரைச் சுமந்து கொண்டிருக்கிறேன். நான் அவரது தோல், அவரது ரத்தம், அவர் மகனின் மகன். நாங்கள் இருவரும் வாழ்வைப் பகிர்ந்து கொண்ட குறுகிய காலத்தில், அவர் என் பெற்றோர் வசித்துக் கொண்டிருந்த வீட்டுக்கு ஒரு அறை செய்து தந்தார். ட்ரைவ்வேயில் இருக்கும் உடைந்த மரத்துண்டங்களுடனும் மரத்தூள்களுடனும் நான் நின்று, அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருப்பேன். எப்போதும் அவருடன்தான் இருப்பேன் என்பதால் அம்மா வந்து என்னை வீட்டுக்குள் தூக்கிப் போவாள். “அவன் பெரிய பையன் ஆயிட்டான்,” என்று அவர் என்னைப் பற்றிச் சொல்வார், இப்போது அந்தச் சொற்களில் என் அப்பாவின் குரலின் ஏற்ற இறக்கங்களைக் கேட்க முடிகிறது.

நியூ ஜெர்சியில் உள்ள லேக் மோஹாக்கில் என் தாத்தா வீடு கட்டும் தொழில் செய்தார். அவர் ஊர் திரும்பியதும் தனக்கென்று ஒரு வீடு கட்டிக் கொண்டார். அது கட்டி முடிக்கப்படும்வரை அதுவரை செய்து முடித்திருந்த அறைகளில் அவரது குடும்பத்தினர் தங்கியிருந்தனர். அவர் எப்போதும் இரவில்தான், ரெஸ்டாரண்டுகள் மூடப்பட்டபின், கடைகள் கதவடைக்கப்பட்டபின் வேலை செய்வார். அவரது கெட்டித்து போன கைகள் வெளிச்சத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்காக அரை இருளில் ஓர் உலகம் படைத்துக் கொண்டிருக்கும். இப்போதும் என் அப்பா தாத்தாவின் கருவிகளைப் பயன்படுத்துகிறார்: க்ராஸ்-கட் ஸா, ரிப் ஸா, உளி, குத்தூசி. அவற்றின் உலோகம் இன்றளவும் கூர்மையாய் இருக்கிறது.

நான் ஒருமுறைதான் என் அப்பா அழுது பார்த்திருக்கிறேன். அவரது உள்ளங்கைகள் டைனிங் ரூம் டேபிளில் அழுந்தியிருந்தன, என் தாத்தாவின் மறைவுக்குப்பின் அவரது அபார்ட்மெண்ட்டை ஒழிப்பது குறித்து அப்பா பேசிக் கொண்டிருந்தார். நான் அறிந்த அனைவரையும் விட அதிக உடல் பலம் கொண்டவர் அவர், தன் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார். அப்பா தன் குழந்தைகளில் எவரையும் அழ வைத்ததில்லை.

ஆண்கள் ஏன் அழுகையை அடக்கிக் கொள்கிறார்கள்? எழுத்தாளர்கள் ஏன் தங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்வதில்லை?

நான் எப்போதும் உணர்ச்சியற்றவனாக இருந்ததில்லை. ஆனால் ஒரு எழுத்தாளனாகவும் வாசகனாகவும் இருந்ததில் பெரும்பாலும் எழுத்தில் உணர்ச்சியைத் தவிர்த்திருக்கிறேன். இதற்கு ஒரு காரணம், ஜான் கார்ட்னரின் “எழுத்துக் கலை”யாக இருக்கலாம் . “பொதுப் பிழைகள்” என்ற அத்தியாயத்தில் அவர், புனைவில் மிகையுணர்ச்சி வெளிப்படுவதை “உத்திப்” பிழை என்று குறிப்பிடுவதில்லை. அவர் அதை “ஆன்ம” குற்றம் என்றே அழைக்கிறார். புனைவுகளில் மெய்யுணர்ச்சியும் மிகையுணர்ச்சியும் வேறு என்று பிரித்துப் பார்க்கிறார் அவர். தக்க அளவில் வெளிப்படும் உணர்ச்சிகளும் உணர்வுகளும் மெய்யானவை. எழுத்தாளன் “பொதுவாக ஏதோ ஒரு வகையில் ஏமாற்றுவதால் அல்லது மிகைப்படுத்துவதால் அடையப்பட்டு, போலித்தனமாய் ஒலிக்கும்” உணர்ச்சி அல்லது உணர்வு மிகையுணர்ச்சி என்கிறார் அவர். நான் கார்ட்னரை சிறிது பிழைவாசிப்பு செய்திருக்கிறேன் என்பது இப்போது தெரிகிறது. “உணர்ச்சி இல்லாத புனைவு எதற்கும் உதவாதது”, என்பதில் அவர் தெளிவாக இருப்பதை நான் உணர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவர் மிகையுணர்ச்சியை விமரிசித்ததைதான் நான் பெரிதுபடுத்திக் கொண்டிருக்கிறேன், அதை ஒரு மன்னிக்கப்படக்கூடிய குற்றமாய் கருதாமல் பெரும்பாபம் என்று புரிந்து கொண்டிருக்கிறேன்.

கார்ட்னர் ஒரு விமரிசகராக அல்ல, உத்தியைக் கற்றுத் தருபவராக நமக்கு பயன்படுகிறார். ஆனால் இந்த விவாதம் நிகழ்ந்த சூழ்நிலை என்ன என்பதைப் புரிந்து கொள்வது நமக்கு உதவியாக இருக்கும். 1970களின் பிற்பகுதியில் அவர் எழுத்தாளரும் தத்துவவியலாளருமான வில்லியம் ஹெச். காஸ்உடன் தொடர்ந்து சில விவாதங்களை பொது மேடைகளில் நிகழ்த்தினார். இவற்றில் மிகவும் முழுமையான விவாதம், சின்சினாட்டி பல்கலை புனைவுத் திருவிழாவில் அக்டோபர் 24, 1978 அன்று நிகழ்ந்தது. அன்றைய நிகழ்ச்சியில் “பொறி பறக்க வேண்டும்” என்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் விரும்பினார்கள் என்கிறார் தாமஸ் லெக்ளேயர். அதைச் செய்யக்கூடியவர்களாக இருந்த ஜான் பார்த்தும் ஜான் ஹாக்ஸ்சும் “பரஸ்பரம் பாராட்டிக் கொண்டார்கள்”. அன்று நிகழ்ந்த விவாதம் போன்ற பல நீண்ட, பசையுள்ள விவாதங்களை கார்ட்னருடன் அவரது கார்பன்டேல் இல்லினாயிஸ் பண்ணை சமையற்கூடத்திலும் வேறு இடங்களிலும் செய்திருப்பதாக காஸ் 2003ஆம் ஆண்டு ஒரு மின்னஞ்சலில் விளக்கம் அளித்தார். இருவரும் தம் “வேறுபாடுகளை” விவாதிக்க விரும்பினார்கள், அது குறித்து “அச்சமோ அச்சுறுத்தலோ” இருக்கவில்லை. கார்ட்னர் :”அற விழுமியங்கள் குறித்து நம்பிக்கை கொண்டவராக” இருந்தார். காஸ், “என் அழகியல் விழுமியங்களில் உறுதியாக இருந்தேன். அவர் மானுடத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் எழுதுவதாகச் சொல்லிக் கொண்டார். எனக்கு அதன் புட்டத்தில் உதைப்பதுதான் திருப்தியாக இருக்கிறது”.

“உயிர்ப்பு” கொண்ட, “அறுபடலற்ற” புனைவெனும் கனவு, என்ற கார்ட்னரின் ஆதர்ச நம்பிக்கையை காஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. அது கல்விப்புலத்தைவிட, உத்தி குறித்த புத்தகத்துக்கு மட்டுமே ஏற்ற சிந்தனை. இதனால்தான் காஸ், அத்தனை நீண்ட, பசையுள்ள விவாதங்களில் ஈடுபட்டார் என்று நினைக்கிறேன்; கார்ட்னருக்கு புனைவில் உள்ள பெருவிருப்பம் தெளிவாகப் புலப்படுவது. அது பிறருக்கும் தொற்றிக் கொள்வது. ஆனால், கலைக்கென்று ஒரு காலம் இருப்பது போலவே கோட்பாட்டுக்கும் ஒரு காலம் உண்டு என்பதை காஸ் உணர்ந்திருந்தார்.

மிகையுணர்ச்சி குறித்து கார்ட்னர் சில முக்கியமான விஷயங்களைச் சொல்லவும் செய்தார். “நிகழ்வுகளே மாபெரும் புனைவுகளில் நம்மை நெகிழச் செய்கின்றன, நிகழ்வுகளைச் சித்தரிக்கும் எழுத்தாளரின் கேவல்களும் ஓலங்களும் அல்ல” என்று பிரகடனம் செய்கிறார். ஆனால் எப்போதும் போலவே இப்போதும் அவர் நிதானப்படுத்திக் கொள்கிறார்: “கதைக்கு முடிவு காணும் இறுதிப் பகுதிகளை மிகவும் வலுவாக அமைத்துவிடக்கூடாது. கதையை அர்த்தமுள்ளதாகச் செய்ய தீவிரமாக முயற்சி செய்வதில், மிகுந்த கவனத்துடன், செயற்கையாக, “பயிலரங்கில் எழுதப்பட்டது போன்ற” உணர்வு ஏற்பட்டு, வாசகர் கவனம் புனைவெனும் கனவிலிருந்து தடுமாறக்கூடும். அதே சமயம், மிகையுணர்ச்சி வந்துவிடக் கூடாது என்றோ எளிய விஷயத்தைச் சொல்வதாக இருக்கக் கூடாது என்றோ மிக நுட்பமாகவும், துணிவில்லாமலும் எழுதிவிடவும் கூடாது- அப்படிச் செய்தால், யாருக்கும், ஆம், விட்டத்தில் சிறகடித்துக் கொண்டிருக்கும் தேவதைகளுக்கும் உன் கதை எதிரொலிக்காது”

கார்ட்னரின் முன்னுதாரணத்தையொட்டி, பிற எவற்றையும் விட, கலவியின் இலக்கிய விவரிப்புகள் உட்பட எல்லாவற்றையும் விட, மிகையுணர்ச்சியை, உயர்வுநவிற்சியுடன்  விவரிக்கப்படும் விசாரத்துடன்/சோகத்துடன்  தொடர்புபடுத்திக் கொண்டிருக்கிறேன். இங்கே தி மில்லியன்ஸில் “A Sentimental Education: Sex and the Literary Writer ” என்ற கட்டுரையை ஜூலியா ஃபியரோ எழுதியிருந்தார். “உணர்ச்சிகள் உட்பட எல்லாவற்றையும்விட நுண்மையே உயர்ந்தது” என்ற நம்பிக்கை “படைப்பிலக்கிய பயிலரங்குகளில்” போதிக்கப்பட்டதை அவர் இங்கு பதிவு செய்கிறார். மிகையுணர்ச்சி குறித்த விமரிசனங்கள், வெளிப்படையாகவும் உட்கிடையாகவும், அவர் ஒரு பெண்ணாய் எழுதுவதன் மீதான விமரிசனங்களாக உள்ளது என்று தொடர்புபடுத்திக் கொள்கிறார்.

Sarah Vap என்ற கவிஞர், மிக அருமையான ஒரு கட்டுரையில் மிகையுணர்ச்சி குறித்த குற்றச்சாட்டுகளும் பெண்களின் எழுத்து குறித்த குற்றச்சாட்டுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிருப்பதை விவாதிக்கிறார். Pleiades இதழின் ஒரு பதிப்பில் நிகழ்ந்த கலந்துரையாடலில், “Poetry, Belligerence, and Shame (PDF)” என்ற கட்டுரை வெளியாகியுள்ளது. அந்தப் பதிப்பில் உள்ள கட்டுரைகள் ஜே கட்ஸ்சால் தேர்ந்தெடுக்கப்பட்டவை. கட்ஸ், 2010 ஆண்டு நிகழ்ந்த AWP கான்பரன்சில் மிகையுணர்ச்சி குறித்த ஒரு கலந்துரையாடலில் தலைமை தாங்கியவர்களில் ஒருவர். நவீனத்துவம், “கவிதையின் இதயத்தைக் குளிர்வித்தது;  வாக்குமூலம் அதை உயிர்ப்பித்தது; பின்-அமைப்பியல் அதன் மீது ஒரு பக்கெட் குளிர்நீர் ஊற்றியது” என்று முன்னுரையில் எழுதுகிறார் கட்ஸ்.

குறிப்பிட்ட ஒன்றை மட்டும் வாசகன் உணரும்படி,  அவனை  “செலுத்த” முற்படும் படைப்பு  என்று அவர் மிகையுணர்ச்சி கவிதையை வரையறை செய்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். மிகையுணர்ச்சி மட்டும் கொண்ட படைப்புகளை அவர் விரும்புவதில்லை என்றாலும், இதயத்தைப் பற்றியிழுக்க முயற்சி செய்யும் கவிதைகளை வெறுக்கும் சிலர் போல் மிகையுணர்ச்சி கொண்ட கவிதைகள் “ஆபத்தானவை” என்று அவர் நினைப்பதில்லை. உணர்ச்சிகளைத் தொட்டெழுப்பும் முயற்சிகளே சிறந்த கவிதைகள் உருவாகக் காரணமாகின்றன என்று அவர் கருதுகிறார். இப்படி ஒரு ரிஸ்க் எடுப்பதற்கு பரிசளிக்க வேண்டுமே தவிர மௌனத்தை நோக்கி மழுங்கடிக்கக் கூடாது என்கிறார் அவர். மிகையுணர்ச்சி குறித்த கவனத்துடன் கவிதை வாசித்து, அத்தகைய தருணங்களைச் சுட்டிக் காட்டுவதை அவர் வெறுக்கிறார்- “ஒரு சில வாழ்வனுபவங்களும் படிப்பினைகளும் சிறுமைப்படுத்தப்படுவதற்கும், சில கலாசாரங்களும் அவை உலகை உணரும் வகைப்பாடுகளும் முக்கியத்துவம் இழப்பதற்கும், ஒரு சில பேசுபொருட்களும் குரல்களும் கவிதை வகைமைகளும் “மிகையுணர்ச்சி” என்ற பதத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு மலினப்படுத்தப்படுவதற்கும், ஊமையாக்கப்படுவதற்கும், அமைதிப்படுத்தப்படுவதற்கும், மதிப்பிழப்பதற்கும் இப்படிப்பட்ட தணிக்கைக்கும் உள்ள தொடர்பை” அவர் வெறுக்கிறார்.

வாப் சொல்வது உண்மைதான். மிகையுணர்ச்சியின் மிகப்பெரும் குற்றம், “அத்தனையையும் மழுங்கடிக்கச் செய்தல், அத்தனையையும் ஒரு மையத்தை நோக்கி இழுத்துச் செல்லுதல்”- இந்த மையம் இதயத்தை விட்டு வெகு தொலையில் உள்ள இடமாக இருக்கலாம். தன் இலக்கிய நுண்ணுணர்வுகளை கத்தோலிக்க சமயம் கட்டமைத்ததை அவர் உதாரணம் சொல்கிறார்: “என் அத்தனை வழிபாட்டு உணர்வுகளும், ஆனந்தங்களும், தொடர்புறுதல்களும் மிக அதிக சடங்குகள் கொண்ட கத்தோலிக்கம் வாயிலாய் வெளிப்பாடு கண்டன”. ஆனால், அதன் மொழியை அவர் கவிதையில் பயன்படுத்தினால், மிகையுணர்ச்சியுடன் எழுதுகிறார் என்று அடையாளப்படுத்தப்படும் சாத்தியம் இருக்கிறது. மேலும், ஒரு பெண்ணாய், அவர் பேறுகாலம் குறித்தோ தன் குழந்தைகள் குறித்தோ எழுதினாலும், இத்தகைய விமரிசனத்துக்கு ஆளாகலாம். மிகையுணர்ச்சி இலக்கியத்தில் ஒரு குற்றமாக இருக்கலாம், ஆனால் அது பெயர் சுட்டவும் பாலறுக்கவும் உதவும் வழியுமாகிறது.

மேலும் வாசிக்க – http://www.themillions.com/2014/05/reach-the-rafters-on-literary-sentiment.html

எதற்காக எழுதுகிறேன் – தி. வேல்முருகன்

தி வேல்முருகன்

எழுதுவது – அதைப்பற்றி அருமை எழுத்தாள முன்னோடிகள் எல்லாம் நல்லவனவே எழுதி விட்டார்கள்

நான் ஏன் எழுதுகிறேன்?

ஆம் அதை சொல்லிதான் ஆக வேண்டும்

வெறும் வார்த்தை ஐாலத்தை நம்பி கைப்பணத்தை இழந்த அன்று, எப்படி படிப்படியாக ஏமாற்றப்பட்டோம் என்பதை அப்படியே எழுதியபோது கதையாகிவிட்டது. தனிமையில் நேரப்போக்குக்கு ஏதோ நினைப்பில் எழுத ஆரம்பித்த பிறகு எழுத வேண்டிய நினைப்பும் எழுத்தும் என்னை பிடித்துக் கொண்டது- ஆம் அதுதான் உண்மை

எழுத ஆரம்பித்த பிறகு என்னிடம் பணி சார்ந்த பதட்டம் குறைந்து நிதானம் வந்திருக்கிறது. இனி எழுதாமல் என்னால் இருக்க முடியாது போலிருக்கிறது

எப்போது எழுத வேண்டிய அவசியம் ஏற்படுகிறது? ஏன், எதற்கு அதை எழுத வேண்டும்?

ஏதாவது மனதை தொடும் சம்பவங்கள், ஏமாற்றங்கள், அவலங்களை பத்திரிகையிலோ கதைகளிலோ வாசிக்கும்போது அதை ஒட்டிய வாழ்வில் நடந்த சம்பவங்களை மனம் மெள்ள கோர்க்க ஆரம்பித்து விடுகிறது பிறகு அதை எழுத தொடங்கினால் எழுத்து தானாகவே ஓடி அதுவாகவே முடிகிறது எனக்கு சிறிது முயற்சிக்க வேண்டும் அவ்வளவுதான்

எண்பத்தி ஒன்பதில் கட்டிடவியலில் பட்டயப்படிப்பு
முடித்து விட்டு வேலையின்மையும் வேலையும் சார்ந்து ஊர் ஊராகவும் பிறகு நாடு நாடாகவும் அலைந்தபோது மிகப்பெரிய கடிதங்கள் எழுதுவேன் நண்பர்களுக்கு அனுபவங்களையும் வீட்டிற்க்கு அன்பையும் தெரிவிக்கும் அவைகள் தான் என் முதல் எழுத்துகள். எழுத வேண்டும் என்ற ஆவல் எப்போதும் உள்ளுக்குள் கனன்று கொண்டு இருந்தது. இரண்டு வருடமாக பணிக்காக ஒவ்வொரு நாளும் நீண்ட பயணம் செய்வதால் கிடைக்கும் நேரத்தில் எழுத ஒரு வாய்ப்பமைந்துவிட்டது.

என் முதல் வேலையே வீடற்றவர்களுக்கான திட்டமான தொகுப்பு வீடுகள் கட்டுவதுதான் மிக எளிய மக்கள் வறுமையிலும் நேர்மையானவர்கள் நாளெல்லாம் கீற்று முடைந்து வாழ்க்கை நடத்துபவர்கள் அவர்களிடம் அரசியல் செய்யும் கான்ராக்டர்கள். அப்படி ஒரு சூழலில் வேலை பார்த்த அனுபவம் அதுவரை இருந்த என்னை இளக்கி விட்டது

பசியில் பசுமை தேடி அலையும் ஆவினம் போல் வேலை தேடிச் செய்யும் நிர்பந்தம் எப்போதும் எனக்கு இருக்கிறது. தொழில் சார்ந்து எளிய மனிதர்களான தொழிலாளர்களுடன் பழக வேண்டி உள்ளதால் அவர்கள் நல்லவைகள் கெட்டவைகள் ஏமாற்றம் எல்லாம் அருகே இருந்து அந்த வாழ்க்கையை பார்த்து இருப்பதால் அதை எழுத வேண்டும் என்ற ஆவல் என்னுள் வந்து விடுகிறது.

எழுதுவதை தொழில் சார்ந்து இப்படி கூட சொல்ல தோன்றுகிறது, எப்படி சுய உழைப்பினால் கட்டி முடித்த வீட்டில் வாழும் திருப்தியிருக்குமோ அப்படி ஒரு திருப்தி எழுதுவதால் எனக்கு இருக்கிறது.

எந்த வேலையும் தெரியாதவன் வெறும் கையையும் காலையும் கொண்டு கட்டிட வேலையில் வந்து கற்றுச் செய்ய முடியும். ஆனால் ஒரு நல்ல வேலைக்காரன் மட்டும் தான் தன் வேலையில் சுயதிருப்தி ஏற்படும் வரை திரும்ப திரும்ப திருத்தி செய்து கொண்டு இருப்பான். செய்யும் தொழிலில் நல்ல வேலைக்காரனான நான் எழுத்திலும் அப்படியே இருக்க விரும்புகிறேன் வேறொன்றுமில்லை…

எனது பதின்ம வயதில் வாசிக்க தொடங்கியவன் இலக்கியம் பற்றிய எந்த அளவீடோ புரிதலோ இல்லாமல் யார் எழுத்து மனதை வருடுகிறதோ, இரக்க உணர்ச்சியை தூண்டுகிறதோ அதை மட்டுமே நூலகத்தில் எடுத்து வாசிப்பேன். அந்த எழுத்தாளர் புத்தகங்களை தேடி தேடி படிப்பேன்.

அது தான் இலக்கியம் என்று எனக்கு தெரியாது ஆனால் தெரியாமல் வாசித்தது எல்லாம் தமிழில் புகழ்பெற்ற இலக்கிய புத்தகங்கள். பிறகு இணையத்தில் வாசிக்க ஆரம்பித்த பிறகு தான் இலக்கியம் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டேன்.

நான் எழுத்தாளன் அல்ல நல்ல வாசகனகவும் வாசித்துக் கிடைக்கும் திறப்பில் மகிழவுமே விரும்புகிறேன்..

…….

(கடலூர் மாவட்டம், அகரம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த திரு. தி. வேல்முருகனை allimurugan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்)