எழுத்து

நிழலைத் தின்றவன்

                   ந. பானுமதி

 

அவன் கனவில் ஒரு குதிரை வந்தது. பட்டுக் கருப்புக் குதிரை.நெற்றியில் வெள்ளை ஒரு பதக்கம் போல் ஓடியது. அதன் அழகு வியப்பிற்குரியதாய் இருந்தது. அதனால்தானோ என்னவோ சற்று கர்வமாகவும், அலட்சியமாகவும் நின்றிருந்தது.

இதைப் போன்ற குதிரையை பார்த்திருக்கிறானா என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.

மொத்தமாகவே அவன் ஏழெட்டு குதிரைகளைத்தான் பார்த்திருப்பான். ஆனால் அவைகள் அனைத்தையுமே வண்டியில் பூட்டப்பட்ட நிலையில்தான் கண்டிருக்கிறான். ஓடி ஓடிக் களைத்த குதிரைகள். உணவைக்கூட அவை ஆவலாக உட்கொண்டதில்லை.. அவைகளின் மூச்சுச் சீறல்கள் சிறு வயதில் பயமாகவும், வளர்ந்த பின்னர் சோகமாகவும் தனக்குக் கேட்டதாக கனவிற்குள்ளும் அவனுக்கு நினைவு வந்தது.

இந்தக் கறுப்பு பட்டுக் குதிரை ஒரு சேணமும் அணியவில்லை. கடிவாளமும் இல்லை. உயரமாகவும், அசையாமலும் நின்றிருந்தது. அதை நெருங்க அவன் ஆசைப்பட்டான். அது  அவனை ஒரு பொருட்டாகக் கூட பார்க்காதது அவனுக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது. அதன் பயங்கர வசீகர அழகு அவனை அங்கிருந்து நகரவிடவில்லை.

அதை “நிலா” என அழைக்க ஆசைப்பட்டான்.  கறுப்பு நிலா! அமாவாசையை கறுப்பு நிலா எனச் சொல்லலாமோ என்று கேட்டுக் கொண்டான்.  கறுப்புத் துகள்களிலிருந்து உலகம் தோன்றியிருக்கலாம் என்கிறார்களே விக்ஞானிகள்— அதைப் போல் இந்த கறுப்பு நிலா ஒரு வெளியைத் தோற்றுவிக்கக்கூடும்.  கருநிழல் படிந்த பேரொளியாக அந்த வெளியில் பல தோற்றங்கள் உருக்கொள்ளக் கூடும்.

நிழல்… அப்பொழுதுதான் அவன் கவனித்தான். அதற்கு நிழலே இல்லை. முன்னே, பின்னே, பக்கவாட்டில், கால்களுக்கிடையில். அடர்ந்த வாலை ஒட்டி எங்குமே நிழலைக் காணோம். கண்களை கசக்கிக் கொண்டு பார்த்தான். இல்லை—நிழலில்லை.

ஒளி படாது காட்சி இல்லை.  இங்கே காட்சியிருப்பதால், நிழல் இருக்க வேண்டுமே? அவன் தன்னை கிள்ளிப் பார்த்துக் கொண்டான். அதை நெருங்கும் ஆசையுடன், அதனால் ஏதேனும்மோசமான  விளைவு ஏற்படுமோ என்றும் தவித்தான்.

ஏன் நெருங்காமலே அந்த அழகை இரசிக்க மனம் ஒப்பவில்லை என அவனுக்குப் புரியவில்லை. மேலும் விபரீதமாக அதன் மேல் ஏறும் ஆசையும் வந்தது. அதன் உயரம் மலைக்க வைத்தாலும், அதில் பயணிக்க மிகுந்த முனைப்பும் மனதளவில் ஏற்பட்டது. நிழல் விழாத “நிலா”அச்சத்தைத் தந்தது.

அவன் வாழ்க்கையில் பெரும் நிகழ்வுகள் இல்லை. பெரிய மாற்றங்கள் கிடையாது. கல்வி, வேலை, திருமணம், குழந்தை  என்ற பாதுகாக்கப்பட்ட சராசரி வாழ்க்கை. அவன் படகில் பயணித்ததில்லை, ஓர் இரவிற்கு மேல் இரயிலில் சென்றதில்லை, மலை ஏறியதில்லை.தேர் இழுத்ததில்லை, தெப்பம் செலுத்தியதில்லை.

இதெல்லாம் சேர்ந்து கனவாக வந்ததோ என கனவிற்குள் ஒரு இழை வந்து போனது. தான் மட்டும் தனியாக அந்த வெளியில் நிலாவுடன் நிற்பதை அவன் அப்பொழுதுதான் உணர்ந்தான். இரு உயிர்கள். மனிதனும், விலங்குமாக. விந்தைகளேயற்ற தன் வாழ்வின் தனிப்பட்ட பொக்கிஷம் போல் கறுப்பு நிலாவும் தானும்..

அவன் ஆவல் இப்பொழுது கட்டுக்கடங்கவில்லை. “நிலா” என்று அழைத்துக் கொண்டே அடியெடுத்து வைத்தான். இந்த நிலையில்கூட தான் ஓடிச் சென்று அதைத் தொட முயற்சிக்கவில்லை என்பது ஆறுதலா, வருத்தமா எனவும் சிந்தித்தான்.

அவன் அடியெடுத்துவைக்கையில் “நிலா” பக்கவாட்டில் விலகி நடந்தது. அவன் வியப்பின் சிகரத்தில் நின்றான். இது என்ன  என்று மீண்டும் ஒரு முறை முயன்ற போதும் “நிலா” பக்கவாட்டில் நடந்து சென்றது. ஆனால், மறையவில்லை. இந்த விளையாட்டின் கவர்ச்சி அவன் களைப்புறும் வரை தொடர்ந்தது. அவன் திடீரென்று உணர்ந்தான்- அவனின் நிழலும் விழவில்லை. அவனின் அருகில் “நிலா” நின்று கொண்டிருந்தது.

..

ஒளிப்பட உதவி – Ponthieu14

 

 

ஏரிக்கரை

IMG_0711

 

ஒற்றைக்காலில்
தவம் செய்யும்
மல்லார்ட் வாத்து
பித்தளை மூக்கை தூக்கி
காற்றில் வாசம் பிடிக்கிறது.

துலங்கும் வெளிச்சத்தில்
மின்னும் மரகதக் கழுத்தை
சுற்றிச்சுற்றி வந்து
படம்பிடித்து தள்ளுகிறவர்களை
அரைக்கண் சரித்துப் பார்க்கிறது

கேமிராவும் ஃபேஸ்புக்கும்
கண்டுபிடிக்கப்படாத காலமொன்றில்,
எள்ளுப்பிண்ணாக்கையும், மக்காசோளத்தையும்
உருண்டை பிரட்டி
உலர்ந்த மீன்களை
கொண்டு வந்திருப்பார்களாக இருக்கும்.

வண்ணமயமான இறக்கைகளுடனான
உடலைக் கொஞ்ச நேரம்
அவர்களுக்குக் காட்டிவிட்டு
ஏரிக்குள் மறைகிறது.

அந்தரங்க வாசிப்பின் துணைக்கருவிகள்

 அஜய் ஆர்

 

 

 

உணர்தல், உணர்வதை புரிந்து கொள்ள முயலுதல், பிறகு ஏன் அவ்வாறு உணர்ந்தோம்/ புரிந்து கொண்டோம் என இன்னும் உள்நோக்கி செல்லுதல் என்பது வாசகன் எந்தவொரு கலைப்படைப்பையும் உள்ளுணர்வும் தர்க்கமும் சார்ந்து அணுகும் முறையில் ஒன்றாக இருக்கலாம். வாசிப்பு முதன்மையாக, அந்தரங்கச் செயல்பாடாக மட்டுமே இருக்கக் கூடும். ஆனால் அவ்வாறு மட்டுமாக இருந்தால், வாசிப்பின் நாம் அறிந்திராத பல பாதைகளில் பயணம் செய்யும் வாய்ப்பே கிட்டாது. அதிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பான செவ்வியல் ஆக்கங்களை வாசிக்க -படைப்பு எழுதப்பட்டுள்ள மொழியில் மட்டுமின்றி சமூகத்திலும், விழுமியங்களிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் – இலக்கிய பதிப்புக்களின் துணை முக்கியத்துவம் பெறுகிறது.

ஷேக்ஸ்பியரின் 5வது சானட்டில் உள்ள

Beauty o’er-snowed and bareness every where:
Then were not summer’s distillation left,
A liquid prisoner pent in walls of glass,
Beauty’s effect with beauty were bereft,
Nor it, nor no remembrance what it was:

வரிகள். கண்ணாடிக் குவளையில் திரவத்தை ஊற்றி வைப்பது போல் அழகை பொத்தி வைத்து, அழகின் சாரத்தையேனும் அழியாமல் காப்பாற்ற முடியும் என்பதாக இவற்றை ஒரு பொது இலக்கிய வாசகன் புரிந்து கொள்ள முடியும். அதே நேரம் , ‘கைதி’ என்று சுட்டுவதன் நோக்கம் என்ன, அப்படிச் சிறைபிடித்தாவது அழகை பாதுகாக்க வேண்டுமா, அப்படி செய்வது அறம் சார்ந்ததா போன்ற கேள்விகளையும் அவன் எழுப்பக் கூடும்.

ஷேக்ஸ்பியரின் 19வது சானட்டின்

“Pluck the keen teeth from the fierce tiger’s jaws,
And burn the long-lived phoenix in her blood;”

வரிகளில் Phoenix பறவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதில் இருந்து (Phoenix பறவை குறைந்தபட்சம் 500 ஆண்டுகள் வாழ்ந்து மடிந்தபின் புத்துயிர் பெறுவதாக பொதுவான ஐதீகம் உள்ளது), காலம் அழகை எத்தனை முறை அழித்தாலும் அது மீண்டும் உயிர்கொள்ளும் என்று புரிந்து கொள்ளலாம்- ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற 18வது சானட்டில்

“Nor shall Death brag thou wander’st in his shade,
When in eternal lines to time thou grow’st;
So long as men can breathe or eyes can see,
So long lives this, and this gives life to thee. “

என்று சொல்லி இருப்பது போல் கவிஞனின் எழுத்தில் கிடைக்கும் இறவாமையால்- என்பதாக வாசகன் நேரடி வாசிப்பில் புரிந்து கொள்ள முடியும்.

ஷேக்ஸ்பியரின் சானட்கள் குறித்து பல கோணங்களில் விளக்கங்களை முன்வைக்கும் பதிப்புகள் பல வந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கதாக சொல்லப்படும் ஒன்றான John Kerrigan பதிப்பில் மேலே பார்த்த 5ஆம் சானட்டின் வரிகளை அவர் இப்படி விளக்குகிறார்: ரோஜா நீர் கண்ணாடி குவளையில் இருப்பது என்பது திருமண பந்தத்தின் தூய்மையின் பாதுகாவலாக, அக்குவளை உடைவது அப்பந்தத்தை கெடுக்கும் ஒன்றின் உருவகமாக ஷேக்ஸ்பியருக்கு முன்னர் Arcadia என்ற நூலில் உபயோகிக்கப்பட்டது. இப்போது வாசகனுக்கு அந்த வரியின் இதுவரை தான் அறிந்திராத பொருள் தெரிய வருகிறது. மணவுறவு என்று இங்கு பொதுவாக குறிப்பிடப்பட்டாலும், அதில் ‘பெண்ணின்’ இடம், அவளிடம் எதிர்பார்க்கப்படும் ‘தூய்மை’ இவற்றையே ‘Arcadia’ சுட்டுகிறது என்றும் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. அத்துடன் அந்த உருவகத்தை ஷேக்ஸ்பியர் எப்படி மாற்றுகிறார் – திருமண பந்தத்தின் பாதுகாவல் என்ற அர்த்தத்தை மாற்றி, குவளை என்பது கருவறையை சுட்டுவதாக, அதாவது அழகின் எச்சமேனும், தலைமுறைகள் தோறும் வாரிசுகளால், வழித்தோன்றல்களால் காப்பாற்றப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்படுவதாக புரிந்து கொள்கிறான். இப்போது அவ்வரிகள் குறித்த இரு புதிய திறப்புக்கள் மட்டுமின்றி, பழமையை புத்தாக்கம் செய்யும் ஷேக்ஸ்பியரின் எழுத்தாளுமை பற்றிய புரிதலும் கிடைக்கக்கூடும்.

அதே போல் 19ஆம் சானட்டின் வரிகளையும் விரிவாசிப்பு செய்கிறார் Kerrigan. “in her blood” என்ற சொற்றொடர் “to be in blood” என்பதின் அதாவது “to be in one’s prime” என்று அர்த்தம் கொள்ளத்தக்க சொற்றொடரின் மருவல் என்று விளக்குகிறார். இப்போது இந்த வரிகளை, Phoenix பறவையை (அழகை) அழிக்க, காலம் 500 ஆண்டுகள் வரை காத்திருக்க தேவையில்லை, எப்போது வேண்டுமானாலும் அதை அழிக்க முடியும் என்ற பொருளில் வாசிக்க வாய்ப்புள்ளது. Phoenix (அல்லது அது இக்கவிதையில் சுட்ட வரும் அழகு) இப்போது காலத்தை வெல்லும் பறவை மட்டும் அல்ல. நாளை இந்த சானட்களின் பிரதிகள் அனைத்தும் அழிக்கப்பட்டால், இவற்றின் உந்து சக்தியான (muse) நாயகன்/ நாயகியை உலகம் காலப்போக்கில் மறந்து விடும். அதே நேரம், ஒரு சிலரிடம் மட்டும் வாய்மொழி பதிவுகளாக இவை காப்பாற்றப்பட்டு மீண்டும் காலத்தை மீறி, உலகின் முன் வலம் வர வாய்ப்புள்ளது. இப்போது இந்தக் கவிதை இறுதியான வெற்றியோ தோல்வியோ இல்லாத – இரு தரப்பும் சமநிலையில் இருக்கும் – களத்தின் சித்தரிப்பாக வாசகனுக்கு தோன்றக் கூடும். மேலும் 5வது சானட்டில் பார்த்தது போல் வாரிசுகளாலும் அழகு தொடர்ந்து உயிர் கொண்டிருக்கும் என்றும் இந்த இரு சானட்களையும் ஒப்பிட்டு ஒரு வாசிப்பை நிகழ்த்த முடியும்.

மொழி என்றில்லை, எழுதப்பட்ட சூழல் குறித்தும் பதிப்பு நூல்களில் இருந்து வாசகனுக்கு பல புதிய தகவல்கள் கிடைக்கின்றன. உதாரணமாக, ஷேக்ஸ்பியர் குறித்து எந்த வாசிப்பும் செய்திராத ஒருவரிடம் அவரின் சானட் தொகுதியைக் கொடுத்தால், அனைத்து சானட்களும் கவிஞனின் உத்வேகமாக (muse) இருந்த ஏதோ ஒரு பெண்ணை முன்னிறுத்தி எழுதப்பட்டவை என்றே முடிவுக்கு வருவார். எனவே, இந்தத் தொகுதியில் 126 சானட்கள் ஒரு இளைஞனை நோக்கி எழுதப்பட்டவை என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது அவருக்கு ஆச்சரியத்தை தரக் கூடும். இந்தப் புரிதல் அவருடைய வாசிப்பில், அவர் முதலில் இந்தக் கவிதைகளில் உணர்ந்ததில் எந்த மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என்பது யோசிக்கத்தக்கது. ஷேக்ஸ்பியரை பாதித்த படைப்புக்கள்/ எழுத்தாளர்கள்,அவற்றின் தாக்கத்திலிருந்து சிறு கருவை எடுத்துக் கொண்டு முற்றிலும் தனித்தன்மை கொண்ட படைப்புக்களை அவர் உருவக்கிய விதம் குறித்து விளக்கும் பல கட்டுரைகள்/ நூல்கள் வந்துள்ளன. அவற்றைப் பற்றிய அறிதலும் அவரின் எழுத்தாளுமையை இன்னும் உள்வாங்க உதவக்கூடும்.

ஒரு கலைப்படைப்பை அதன் படைப்பாளி எந்த அர்த்தத்தில்/ கோணத்தில் உருவாக்கினான் என்பது குறித்தோ அதிலிருந்து தான் மிகவும் விலகிச் செல்வதைப் பற்றியோ கவலை கொள்ளாமல் அதை உள்வாங்குவதை முற்றிலும் தனக்கான ஒன்றாக மட்டுமே வாசகன் அணுகக் கூடும். செவ்வியல் படைப்புக்களைப் பொருத்தவரை, ஒரு படைப்பிற்கே பல பதிப்பாசிரியர்கள்/ தொகுப்பாசிரியர்கள் உள்ளார்கள். அவரவர்களின் அழகியல், கருத்தியல் கோட்பாடு சார்ந்து பல்வகைப்பட்ட பார்வைகளை அவர்கள் முன்வைக்கிறார்கள். இவற்றோடு சேர்த்து செவ்வியல் ஆக்கங்களை படிக்கும்போது, தன் வாசிப்பின் சுயத்தை கொஞ்சமேனும் விட்டுக் கொடுக்காமல் பன்முக வாசிப்பை உள்வாங்குவது சாத்தியம் அல்ல. அப்படி விட்டுக் கொடுக்கும்போது பல புதிய உலகங்கள் அவன் முன் தோன்றுகின்றன, அவற்றினுள் செல்ல தான் உருவாக்கிய உலகை விட்டு அவன் தற்காலிகமாகவேனும் நீங்க வேண்டியுள்ளது. அதே நேரம் தன் அழகியல் மற்றும் உணர்வுத்திறம் குறித்த தாழ்வு மனப்பான்மையை அவன் கொள்ள வேண்டியதில்லை. தன் நிலையில் உறுதியாக இருந்தவாறே மற்ற கோணங்களின் சாத்தியங்களை ஏற்றுக்கொள்வதும், சில நேரங்களின் தன் முந்தையை நிலைபாட்டை மாற்றிகொள்வதும் கூட அவன் வாசிப்பு ஆளுமையையை இன்னும் மெருகேற்றவே செய்யும்.

பின்குறிப்பு:

பெங்குவின் வெளியீடாக வந்துள்ள ‘The Sonnets and A Lover’s Complaint’ (John Kerrigan) நூலில் இருந்து இந்த இரு சானட்களுக்கான விளக்கங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

ஒளிப்பட உதவி – Owl Moon Tree of Life

தொடுவானம்

ந. பானுமதி

அந்த அழகிய வெளிநாட்டு கார் அமுதாவின் வீட்டு வாசலில் வந்து நின்றது. சீருடை அணிந்த ஓட்டுனர் அம்மாவிடம் வந்து ஏதோ சொல்லிவிட்டுச் செல்வது தெரிந்தது. கார் மீண்டும் கிளம்பவில்லையென்பதால், காத்திருப்பதாகச் சொல்லியிருப்பார் போலும்.

அம்மா, மணியை அழைத்து நல்ல டீயாக வாங்கிவரச் சொல்வது கேட்டது.

தனக்கு கேட்கவேண்டும் என்றே அம்மா கத்திப் பேசுவது புரிந்தது. ”நெனப்பு தான் பொழப்ப கெடுக்குதாம்”

அமுதா தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். இடமும் வலமும் மாறித் தெரிவது தானா, தன் நிழலா? இதுவும் காட்சிப் பிழையோ? பிரதிபலித்து எல்லாவற்றையும் நிஜம்போல் காட்டும் இதிலெது உண்மை? கண்ணாடியை உடைக்கும் ஆவேசம் அவளுள் எழுந்தது. ஒருகால், இந்தக் கண்ணாடியைப் பார்ப்பது இதுவே கடைசி முறையோ?

உடைந்து சிதறும் கண்ணாடி காட்டும் சிதறிய அமுதாக்கள் ஒன்றிலிருந்து பலவாய் உருக்கொண்டு அவளையே காட்டிச் சிரிக்கும் என்பதைத் தவிர வேறென்ன பலன்? அழக்கூட தெரியாமல் போய் விட்டதே!

கேமராவின் முன்னே அழுதழுது இன்று நிஜக் கண்ணீர் வரமாட்டேன் என்கிறது. அப்படியும் தான் என்ன கதாநாயகி நடிகையா? ஒரிரு காட்சியில் ஓரிரு வசனம் பேசும் துணை நடிகை! அமுதா சிரித்துக் கொண்டாள் .என் மீது அவர் பார்வை எப்படி விழுந்தது? எதனால் இந்த சிக்கல்? அம்மா இதைக் கேட்ட தினத்திலிருந்து தரையில் கால் பாவாமல் நடக்கிறாள். பொருளே ஆதாரமாக வாழும் நிலை அம்மாவிற்கு.பதினைந்திலிருந்து பத்து வயதுக்குட்பட்ட தம்பியும், தங்கைகளும் அம்மாவின் கடுகடுப்பினால் வாய் விட்டு சிரிப்பது கூடக் கிடையாது. ஆனால் வீட்டில் இப்பொழுது அடிக்கடி சந்தோஷக் கூச்சல் கேட்கிறது. தங்களுக்குள் செல்லமாக சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.

நேற்று இரவு அம்மா தன்னை நேரே பாராது சொன்னது காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. “இனியாவது ஓர் இடம் நிரந்தரம் என இருக்கக் கசக்கிறதா? எம்மாம் ஷூட்டிங்க்கு, அப்பாலே எம்மாம் பேரு! எல்லாத்தையும் விட்டுப்புட்டு போவியா அவன் உன்னைய வரச் சொல்லரச்சே. இன்னாமோ மனப் பீடமாம், மாட்டாளாம்.நாயி நக்கித் தான் குடிக்கும்”

அம்மா சண்டையிடுகிறாள், எச்சரிக்கிறாள், தான் கன்னியில்லை என்று குத்திக் காட்டுகிறாள். அம்மா சொல்லாத ஒன்றும் இதில் இருக்கிறது. அது எதிர்காலம் பற்றிய இவளின் பயம். இவர் விருப்பத்தின் படி தான் நடந்து கொள்ளாவிடில் இவள் நடிப்புத் தொழில் இல்லாமலே போய்விடும். அது இல்லையென்றால் பின்னர் எதுவும் இல்லை. ஐந்து உயிர்களுக்கு தண்ணீர் ஊற்றும் மரம் நட்டவர் அவர்தானோ என்னவோ? ஆமாம், அவரை நான் எத்தனை உயரத்தில் வைத்திருக்கிறேன், அவரால் தவறே செய்ய இயலாது, கண்ணியக் குறைவாக நடக்க முடியாது என்று?.இப்பொழுது எனக்கு உறுத்துவது எது நிஜமா, நிழலா?

நிஜம் எனில் எது? இன்று வந்து காத்து நிற்கும் காரா? நிழல் திரையில் பார்த்த அவரது ஒளி பிம்பமா? நிழல் காட்டிய நிஜம் என்கே? நிழலாடும் நிஜம் அல்லது நிஜமாடும் நிழல்! எதிலிருந்து எது? உடைத்துக் காட்டும் கண்ணாடி சிதறல்கள்.

அமுதா நிமிர்ந்து சுவரைப் பார்த்தாள் –அவளது ஒரே தோழியின் பரிசோவியம்.

தொலை தூரத்தில் தொடுவானம் கடலின் மேல் கவிந்து, தொட்டுவிடுவது போல் என்ன ஒரு சாகசம்.! நெருங்கி விடாத விளையாட்டு. காட்சிப் பிழை.!

அம்மா அவளை அழைப்பது கேட்டது.

அமுதா நிமிர்ந்து சுவரைப் பார்த்தாள் –அவளது ஒரே தோழியின் பரிசோவியம்.
தொலை தூரத்தில் தொடு வானம் கடலின் மேல் கவிந்து, தொட்டுவிடுவது போல் என்ன ஒரு சாகசம்.! நெருங்கி விடாத விளையாட்டு. காட்சிப் பிழை.!
அம்மா அவளை அழைப்பது கேட்டது.

சபிக்கப்பட்டவனின் விம்பம் – மஜீஸ்

புகைப்படத்தில் பார்த்த 
உனது விம்பம் 
நேரில் காணும் போது அது 
உன்னை போலவே அல்ல
ஆறு வித்தியாசங்கள் கண்டு பிடித்த 
பரவசத்தில் நீ ஊர் நோக்கி பயணிக்கிறாய்
அது
ஒரு கோடை நாளின் வெளிச்சத்தில் 
மிகைத்த ஒப்பனையோடும் கட்டாயப்படுத்தப்பட்ட புன்னகையோடும் 
கருவி வழி வந்த போலி விம்பமது
பெருந் துயரம் துரத்தும் அயர்ச்சியில்
கொடூரங்களை நினைவுகளாக்கி
மலையொத்த சாபங்களோடு
அலைந்து திரிபவனின் 
நிஜ விம்பங்களை
அறிந்திருக்க உனக்கு எந்த 
வாய்ப்புக்களுமில்லைதான்.