எழுத்து

The Lie – T C Boyle

ஆர். அஜய்

காலையில் விழிப்பு தட்டியதும் வேலைக்குச் செல்ல வேண்டுமே/ வேண்டுமா என்று சலிப்புறாதவர்களும், அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் இறங்காமல், சொந்த வாகனத்தில் செல்பவராக இருந்தால் அலுவலகத்தில் நில்லாமல் பயணத்தை இலக்கின்றி நீட்டிக்க வேண்டும் என்று ஒரு சில முறையேனும் எண்ணாதவர்களும் குறைவாகவே இருப்பார்கள், குறிப்பாக ‘திங்கட்கிழமை மனச்சோர்வு’ (Monday Morning Blues) பீடிக்காத ஆட்கள் அரிதுதான். சில நாள் அந்த உந்துதலுக்கு தலைவணங்கி ஏதோ காரணத்தைச் சொல்லி விடுப்பெடுத்துவிட்டு அடுத்த நாள் சற்றே குற்ற உணர்வோடு அலுவலகத்திற்குச் செல்வதும் வழக்காக நடக்கும் ஒன்றுதான்.

All the wrecks I’ve crawled out of’ என்ற டி.ஸி போயலின் (T.C. Boyle) சிறுகதையின் தலைப்பை, சுமூகமாக ஓடிக்கொண்டிருப்பதைப் போல் தோற்றமளிக்கும் வாழ்வை, அதில் உள்ள சிறிய சிக்கலை பெரிதாக்கியோ அல்லது தேவையில்லாத புதிய இக்கட்டை உருவாக்கியோ, சிதைக்கும் போயலின் புனைவுலகின் மற்றப் பாத்திரங்களுக்கும் பொருத்தலாம். ‘The Lie‘ கதையின் கதைசொல்லி அதன் ஒரு வகைமாதிரி.

அலாரத்தின் சத்தத்தில் கதைசொல்லி துயில் கலையும்போது அவரின் சிறு குழந்தை அத்துடன் சேர்ந்து அலற ஆரம்பிக்கிறது. நண்பர்களுடனான முந்தைய இரவு விருந்தின் தாக்கத்தை உடலில் உணர்கிறார். விடுப்பு எடுக்கலாமென்றால் அனைத்து விடுப்பையும் உபயோகித்தாயிற்று. எனவே நம் கதைசொல்லி தன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அன்று வேலைக்குச் செல்வதைத் தவிர்க்கிறார்.

அன்றாட வேலை நாள் ஒன்றில் திடீர் விடுப்பு எடுத்துக்கொண்டு, பரபரப்பாக மற்றவர்கள் வேலைக்குச் செல்ல, எந்த அவசரமும் இல்லாமல் அன்றைய பொழுதைக் கழிப்பதில் உள்ள சுகத்தை போயல் கதைசொல்லியின் அன்றைய செயல்கள் மூலம் போயல் உணர்த்துகிறார். நிதானமான காலை உணவு, மெல்லிய மழையில் தெருக்களில் சுற்றும் இலக்கற்ற பயணம், மது விடுதியில் திட்டமான பீர் அருந்துதல், ஒரு திரைப்படம், பின் மாலை வீடு திரும்பல் என மிக எளிய – பெரும்பாலும் தொலைத்து விட்ட – செயல்களின் ருசியை கதைசொல்லி மட்டுமல்ல வாசகனும் உணர்கிறான்.

தேவையில்லாத கடினமான பொய் என்றாலும் இத்துடன் அது முடிந்து, கதைசொல்லி அடுத்த நாள் வழக்கம் போல் வேலைக்குச் சென்றிருந்தால் எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது. ஆனால் போயலின் பாத்திரங்கள்தான் தன்னழிப்பை (self destruction) பெரிதும் விரும்புகிறவர்கள் ஆயிற்றே. முந்தைய நாளின் ருசி, புலி வாலைப் பிடித்தக் கதையாக மாற, அடுத்த நாளும் விடுப்பு எடுக்க முடிவு செய்கிறார் கதைசொல்லி. அதையும் கூட அவர் சமாளித்திருக்கக் கூடும், ஆனால் அதற்காக சொல்லும் காரணத்தில்தான் தன்னழிப்பில் இறங்குகிறார். தன் குழந்தை இறந்து விட்டதாக சொல்லிவிடும் அவர் அந்த நாளையும் இலக்கற்ற சுற்றல், திரைப்படம் என்று கழிக்கிறார்.

அந்த வார இறுதிக்குப் பின் திங்களன்று அலுவலகம் செல்லும் அவர், அங்கு சக ஊழியர்களின் அனுதாபத்தை ஏற்றுக்கொள்வதோடு, அவர்கள் பரிவோடு தரும் உணவுப் பொருட்களையும், அனைவரின் பங்களிப்பில் தரும் பண முடிப்பையும் – உள்ளுக்குள் குறுகியபடி – ஏற்றுக்கொள்கிறார். போயலின் எழுத்தின் முக்கிய அம்சமான, இருண்மையான அபத்தத்தின் வெளிப்பாடு இங்கு நிகழ்கிறது. அடுத்த நாள் மீண்டும் பொய். இறந்த குழந்தையை அடக்கம் செய்யவேண்டுமல்லவா, எனவே அதற்காக மீண்டும் விடுப்பு. இந்த சேதத்திலிருந்து (wreck) அவர் மீண்டு வருவாரா, அவர் செய்துள்ளதை மனைவி அறியவரும்போது குடும்ப வாழ்க்கை என்னவாகும் என்ற கேள்விகள் எழ, அவற்றின் பதில்களின் தொடக்கக் புள்ளியில் கதை முடிந்து, வாசகனை மேற்கொண்டு யூகிக்க வைக்கிறது.

நம் கதைசொல்லி இருத்தலியல் சிக்கலில் இருப்பவரோ, அல்லது இசை, இலக்கியம், ஓவியம் என வேறு துறைகளில் ஆர்வம் இருந்து பிடிக்காத வேலையில் சிக்கி அதனால் தன்னிலை இழந்து நடந்து கொள்பவரோ அல்ல. அவரளவில் அத்தகைய நியாயங்கள் எதுவும் இல்லாத நிலையில் வெறும் பொறுப்பற்ற ஆசாமி என்று அவரை பற்றி முடிவுக்கு வருவது எளிது. எனில் பின் எந்த விதத்தில் இந்தக் கதையும், அதன் கதைசொல்லியியும் வாசகனுக்கு அணுக்கமானவர்களாக தெரிகிறார்கள்? கதைசொல்லி முதல் நாள் பொய் சொல்லியபின் மனஎழுச்சியும், குதூகலமும் கொண்டாலும் சிறிது நேரம் கழித்து, குற்ற உணர்வும், பயமும் அவருள் துளித்துளியாக இறங்க ஆரம்பிக்கின்றன. அன்றைய பொழுதை சாவகாசமாக கழிக்கும் ஒவ்வொரு நொடியிலும் அவை அவருகிலேயே இருக்கின்றன. அடுத்த நாள் வியாழன் என்பதால், இன்னும் இரு நாட்களை மட்டும் ஓட்டி விட்டால், பிறகு வார இறுதி, பின் அடுத்த வார ஆரம்பத்தில் அனைத்தும் சரியாகிவிடும் என்று தன்னையே நம்ப வைக்க, ஏமாற்றிக்கொள்ளும் விதத்தில் அவர் மீண்டும் விடுப்பு எடுப்பதில் துயரம் மட்டுமல்ல, நாம் செய்திருக்கும் இத்தகைய சுய ஏமாற்றுக்கள் குறித்த சுட்டுதலும் உள்ளது. குழந்தையை அடக்கம் செய்ய வேண்டும் என்று அவர் விடுப்பு எடுக்கும் நாளில், கொஞ்சமும் உற்சாகமும் இல்லாமல், எதுவும் செய்யத் தோன்றாமல், வெளியே செல்லாமல் நாள் முழுதையும் வீட்டிலேயே கழிப்பதில் உள்ள வெறுமையை வாசகன் எப்போதேனும் உணர்ந்திருப்பான்.

முடிவற்ற ஆழமும் பத்தி விரித்து நிற்கும் அரச நாகமும் நம்முள் உருவாக்கும் அச்சத்தையும் பார்வையை விலக்க இயலாத வசீகரத்தையும் கதைசொல்லியின் வீழ்ச்சியிலும் நாம் உணர்கிறோம். இது மனக்கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் வலியுறுத்தும் எச்சரிக்கைக் கதை அல்ல. நம்மைக் குறித்து, நம் மனம் உருவாக்கி வைத்திருக்கும் எல்லைகளின் பலவீனம் குறித்து உணர்த்துவதால், கதைசொல்லியின் செயல்கள் குறித்த ஒவ்வாமை முதலில் தோன்றக் கூடுமென்றாலும் அவர் மீது அவனுக்கு ஒரு கரிசனம் இருக்கவே செய்கிறது. அவரை மனதளவில் தன் சகபயணியாக மட்டுமல்ல, அவரைப் போல் தானும் ஒரு நெகிழ்வான தருணத்தில் நடந்து கொள்ளக்கூடும் என்றும் அவருடன் தன்னை வாசகன் தொடர்புபடுத்திக் கொள்ளலாம். மனவுணர்வின் மேல் தளத்தில் ஒழுக்கவாதியாக, சமூகத்தின் மாதிரி குடிமகனாக இருந்து, அதன் அனைத்து சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே வாழ்க்கையை நடத்தினாலும், அதன் அடி ஆழத்திலேனும், சிறிதளவாவது தளைகளை உடைக்க விரும்பாத, எல்லைகளை மீற விரும்பாத, தடை செய்யப்படுள்ளதின் ருசியை அறிய விரும்பாதவர் எவர் உளர்?

..

ஒளிப்பட உதவி – @tcboyle

ஊடல்

எஸ்.சுரேஷ்

pigeons

'குடூர் குடூர்' என்ற ஆண் புறா பெண் புறாவை பார்த்து.

பெண் புறா ஆண் புறா பக்கம் திரும்பவேயில்லை.

'குடூர் குடூர் குடூர் குடூர் குடூர்' என்று மறுபடியும் ஆண் புறா அழைத்தது.

பெண் புறா பார்க்க மறுத்தது.

ஆண் புறா பறந்து பெண் புறா முன் கிளையில் உட்கார்ந்தது.

பெண் புறா தலையை திருப்பிக்கொண்டது.

"குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர்' என்று இடைவிடாது கூறியது.

பெண் புறா ஆண் புறா பக்கம் கழுத்தை திருப்பி 'குடூர்' என்று கூறிவிட்டு மறுபடியும் கழுத்தை பழைய நிலைக்கு கொண்டுவந்தது.

'குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் குடூர் ' என்று மூச்சிரைக்க மேல் ஸ்தாயியில் ஆண் புறா கூவியது.

பெண் புறா இல்லை என்று கூறுவது போல் தலையை ஆட்டியது.

' குடூர் குடூர் குடூர்' என்று உரக்க கூவியது ஆண் புறா.

பெண் புறா கிளையை விட்டு கோபமாக பறந்து சென்றது.

ஆண் புறா அதை பின்தொடர்ந்தது.


...

ஒளிப்பட உதவி - Guardian Witness

செல்பி – எஸ். சுரேஷ்

செல்பி  எடுத்துகொண்டிருந்த எங்களை பார்த்துவிட்டு

லங்கூர் குரங்கொன்று மரத்திலிருந்து கீழிறங்கி
“என்னையும் ஒரு செல்பி எடுங்கள்” என்றது

நான், மனைவி மற்றும் லங்கூர் உள்ள ஒரு செல்பி எடுத்தேன்

செல்பியை பார்த்துவிட்டு
“ஹ்ம்ம். இதுக்குதான் தனியா எடுத்துக்கணும்னு சொல்றது”
என்று பெருமூச்சு விட்டுவிட்டு
மரத்தில் மறுபடியும் ஏறியது

சில்கோவ்ஸ்கியின் தேற்றம் : கார்ல் இயாக்னெம்மா

தமிழில்: சரவணன் அபி

Karl Iagnemma

அத்தியாயம் 1

முழுதும் நிறையாத அந்த கருத்தரங்கு அறையின் பின்னாலிருந்த காலி நாற்காலியொன்றில் ஹெண்டெர்சன் மஞ்சள் நிற குறிப்பேட்டைக் கொண்டு முகத்தை மறைத்தவாறே சரிந்து அமர்ந்து கொண்டார். அவரைச் சுற்றிலும் கணித வல்லுனர்கள் மூன்று நான்கு பேராய் நின்றபடி ஸ்டைரோபோம் கப்களிலிருந்து காபியை பருகிக்கொண்டு ‘வேரியேஷனல் கால்குலஸ் – செர்மெலோ பிரான்கல் தேற்றம்’ பற்றி கிண்டல் செய்து சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது. அவர்களின் ரசமில்லாத நகைச்சுவை, மட்கிய ஆரஞ்சு நிற தரைவிரிப்பும், வசதியற்ற நாற்காலிகளும், சீராக எரியாத மின்விளக்குகளும் கொண்ட அந்த கருத்தரங்கு அறைக்கு பொருத்தமாகவே பட்டது. சரி, இது தான் அக்ரோன் நகரமா என்று எண்ணிக் கொண்டார் ஹெண்டெர்சன். அவர் எண்ணியதை விட மோசமாகவோ நன்றாகவோ அது இருந்து விடவில்லை.

ஒவ்வொரு வருடமும் அதே கருத்தரங்கு; அதே முந்நூறு பேர்; உற்சாகமற்ற நகரங்கள். டான்ஸ்க் ஒரு வருடம்; பெல்பாஸ்ட் அடுத்த வருடம்; இதோ இப்போது அக்ரோன். அடுத்தது எங்கே – மோகதிஷு போல. அல்லது டெஹரான்? ஹெண்டெர்சனுக்கு அரங்கிலிருந்த தெரிந்த முகங்களில் பல பிடிக்காதவை. நேரில், ஈரமான கைகுலுக்கல்களும், நாற்றமடித்த சுவாசங்களும் கரகரத்த குரல்களும் கொண்ட இந்த மனிதர்கள், அவரவர் ஆராய்ச்சி புத்தகங்களின் தடித்த அட்டைகளுக்கிடையே கணிதம் சமன்படுத்திய கோர்வையான குரல்களில் மிக ஏற்புடையவர்களாக தெரிபவர்கள். ஹெண்டெர்சன் தலையை குறிப்பேட்டினுள் புதைத்துக் கொண்டு, சுற்றி நின்றவர்கள் யாரும் பார்த்து விடாதவாறு, முக்கியமாக, பேச்சாளர் சோக்லோஸ் கண்ணில் படாதவாறு ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தார்.

மணி இரண்டானதும் ‘வலுவிழந்த நான்-லீனியர் தொகுப்புகளின் மாறுபாடுகள்: ஒரு பகுப்பாய்வு’ என்ற ஆய்வுக் கட்டுரையை அன்று சமர்ப்பிக்கவிருந்த சோக்லோஸ் மேடை மேலேறி ப்ரொஜெக்டரை உயிர்ப்பித்தார். ஹெண்டெர்சன் எதிர்பார்த்ததை விடவும் இன்னும் இளமையாகத் தெரிந்தார் சோக்லோஸ். முன்தலை இன்னும் வழுக்கை விழுந்து விடவில்லை; பெரும்பாலான கணித வல்லுனர்களுக்கே உரிய நெற்றிச் சுருக்கங்கள் இல்லை; நான்கு வருட துணைப் பேராசிரியர் பொறுப்பு சோக்லோஸை அவ்வளவாக பாதிக்காதது அநியாயமாகப் பட்டது.

சோக்லோஸ் குறுந்தாடி வைத்திருந்தார். அவர் அணிந்திருந்த, பளபளக்கும் ஊதா நிற டை வலுவிழந்த நான்-லீனியர் தொகுப்புகளைப் பற்றிய கட்டுரை வாசிப்புக்கு முற்றிலும் பொருத்தமில்லாதது என்று நினைத்தார் ஹெண்டர்சன். குறுந்தாடி, சோக்லோஸுக்கு ஒரு பைசாச பாவம் அளிப்பதாக நினைத்துக் கொண்டார்.

“வணக்கம், இங்கு நன்கு தெரிந்த பலர் கூடியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது”, சோக்லோஸ் தனது செழுமையான ஹங்கரியன் உச்சரிப்பில் துவங்கினார். ஹெண்டெர்சன் தன்னிச்சையாக நாற்காலிக்குள் இன்னும் புதைந்து கொண்டார். ஆனால் சோக்லோஸ் குறிப்புகளிலிருந்து தன் கண்களை எடுக்காமல் ஆராய்ச்சிக் கட்டுரைக்குள் பிரவேசித்து கொண்டிருந்தார் – வலுவிழந்த நான்-லீனியர் தொகுப்புகளின் இப்போதுள்ள தீர்க்க முடியாத பிரச்சனைகள், அவை குறித்த முந்தைய ஆய்வுகள், அவற்றின் முடிவுகள், டோபுஞ்ஸ்கியின் 1964-இல் வெளிவந்த பிரபலமான தேற்றம்; கிரேக்க கணித வல்லுநர் காலியார்டோஸ் முன்வைத்த, அதிகம் அறியப்படாத தொடர் முடிவுகள் – என ஒரு துல்லியமான, தேர்ந்த, ஒன்றன் பின் ஒன்றான நகர்வு.

கட்டுரையின் இந்தக் கட்டம் கடந்ததும் சோக்லோஸ் குரலைச் செருமிக் கொண்டார். ஓர் அரை சுரம் குரலில் கூட்டிக் கொண்டு தன் சொந்த ஆராய்ச்சியை இப்போது அவர் விவரிக்க ஆரம்பித்தார். அரையிருளில் ஆழ்ந்திருந்த அரங்கை பார்வையால் அளந்த ஹெண்டெர்சனுக்கு இது போன்ற ஆய்வரங்குகளில் நிலவும் சந்தேகம் கலந்த விரோத மனப்போக்கு இல்லாமல் பொருமலுடன் கூடிய ஒரு மரியாதை நிறைந்திருப்பதாகப் பட்டது. தனது குறிப்பேட்டுக்கு பார்வையை திருப்பி கொண்டு, திரையில் தெரியும் சமன்பாடுகளில் எங்கே குறை தெரிகிறது, எந்த மென்மையான பாகம் தெரியும், எங்கே அந்த கூர் ஈட்டியைச் செருகலாம் என நுண்ணிய மன அவதானிப்புடன் காத்திருந்தார்.

‘இறுதி வரைவு மற்றும் முடிவுகள்’ என்ற படியை ப்ரொஜக்டரில் சோக்லொஸ் வைத்ததும், உறக்கத்திலிருந்து விழித்த பாவனையுடன் இருந்த அரங்கைப் பார்த்து “இதனால் தீர்மானிக்க முடிவது என்னவென்றால் வலுவிழந்த நான்-லீனியர் சமன்பாடுகளின் நிலைத்தன்மையை மரபார்ந்த மாறுபாட்டு ஆய்வின் மூலம் தீர்க்கலாம் என்பதே” என்றார். உணர்வுகளை வெளிக்காட்டாமல் ஆனால் வசீகரமான ஒரு புன்னகையுடன் தன் குறிப்புகளிலிருந்து நிமிர்ந்து நோக்கி, “இப்போது யாருக்காவது ஏதேனும் – ”

“ஒரு கேள்வி”, என்றார் ஹெண்டெர்சன் உரத்த குரலில். அவர் குரலில் பதட்டமும் ஆக்ரோஷமும் இருந்ததை மறைத்துக் கொள்ள முயலவில்லை. இந்த ஒரு கணத்திற்காகத்தான் அவர் பல காலமாக காத்துக் கொண்டிருக்கிறார். “அணி H-ன் நேர்மாற்றும் தன்மை குறித்து என்ன கூறுகிறீர்கள்? H ஒருமையாக இருந்தால் என்னவாகும் என நீங்கள் ஆராயவில்லை.”

சோக்லோஸ் குரல் வந்த அரங்கின் இருண்ட ஆழங்களைப் பார்வையால் துழாவினார். “இன்னும் குறிப்பாக கூற முடியுமா?”

“நிச்சயமாக”. அரங்கில் சில தலைகள் திரும்பி ஹெண்டெர்சனை பார்த்தன. “படி 11-ல் நீங்கள் அணி B ஒரு நேர் அணியாயின் அணி H பன்மைத் தன்மையுடையது என்று வாதிடுகிறீர்கள். ஆனால் B உறுதி செய்ய முடியாத நேர் அணியாக இருந்தால் என்னவாகும் என நீங்கள் ஆராயவில்லை. இது போன்ற பரவலான அணி மாற்றங்களில், B உறுதி செய்ய இயலாத நேர் அணியாக இருக்கும் வாய்ப்பிருக்கிறது; அதனால் H ஒற்றை அணியாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது; எனவே, நீங்கள் நிறுவும் இந்த முடிவு நேர் மாற்றத்தக்கதல்ல.”

சோக்லோஸ் நிதானித்தார். கட்டுரையின் படிகளை மெதுவாக புரட்டி பக்கம் 11க்கு வந்தார். அந்த படியை ப்ரொஜக்டரில் வைத்துவிட்டு, அரங்கிற்கு முதுகை காட்டியவாறு திரும்பி தலையைத் உயர்த்தி திரையை பார்த்தார். அரங்கில் இப்போது பரவிய இறுக்கமான முணுமுணுப்புகள் ஹெண்டெர்சனுக்கு திரைப்படங்களில் காட்டப்படும் பொது மரண தண்டனை நிறைவேற்றத்தின் நாடகமாக்கலை நினைவுபடுத்தியது. தன்னிச்சையாக தாடியை வருடிக்கொண்டே சோக்லோஸ் தன்முன் நேர்த்தியாக கட்டவிழ்கிற கணிதச் சிக்கலை, தான் சரியென்று கருதிப் பொருத்திய நேர்மாற்ற முறையை, தான் பார்க்கத் தவறிய, ஹெண்டெர்சன் தாக்கிய மிக நுண்ணிய ஆனால் மிக அத்தியாவசியமான அனுமானத்தை கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தார்.

“ஆம், சரிதான்.” சோக்லோஸ் குரலை செருமிக் கொண்டார். கடற்கரை வெயிலில் காய்ந்தவை போல் அவர் காதுகள் தகித்தன. “நீங்கள் சுட்டிக் காட்டும் நேர் மாற்ற அணியின் இந்தக் கட்டுப்பாடு… ஒரு வரையறையே.”

“வரையறையா? அந்தத் தவறான அனுமானத்திற்கு பின் நீங்கள் நிரூபிக்கும் அத்தனை முடிவுகளும் தவறல்லவா?”

அரங்கத்தில் ப்ரஜக்டரின் மெல்லிய உறுமல் தவிர முழு நிசப்தம்.

சிறிது நேர அவகாசத்திற்கு பிறகு சோக்லோஸின் தலை விறைப்பாக அசைந்தது. “நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். அந்த அனுமானத்திற்கு பின்னான விளைவுகளை நான் இன்னும் தெளிவாக ஆராய வேண்டும் என நினைக்கிறேன்.”

அரங்கிலிருந்து வாழ்த்தொலி எழுந்தது. கருத்தரங்குகளில் இது போன்ற நிகழ்வுகள் அபூர்வம். இந்த நாளின் நாடகீயம் அடுத்த கருத்தரங்கிலும், அதற்கடுத்ததிலும் மெல்லிய கிசுகிசுத்த குரல்களில் விவாதிக்கப் பெறும். இனி பயம் கலந்த மரியாதையுடன் ஹெண்டெர்சன் பார்க்கப் பெறுவார். கூட்டங்களில் அவரது கணித கட்டுரைகளும் இனி தாக்குதல்களின் இலக்காகலாம். இதெல்லாம் ஹெண்டெர்சன் அறிவார். இந்தக் கூட்டம் முடிந்ததும் அவரிடம் பேசவும் சிலர் காத்திருப்பார்கள் என்பதால், சோக்லோஸ் மீண்டும் வலுவாய்ச் செருமி பார்வையாளர்களின் கவனத்தை மீண்டும் தன்பால் திருப்பிக் கொள்ளுமுன் ஹெண்டெர்சன் சத்தமின்றி அரங்கின் பின் கதவு வழியே வெளியேறினார்.

(தொடரும்)

oOo

19 அக்டோபர் 1972-ல் பிறந்த கார்ல் இயாக்னெம்மா அமெரிக்க விஞ்ஞானி, எழுத்தாளர். புகழ் பெற்ற MIT-ல் இயந்திர பொறியியல் துறையில் Ph. D பட்டம் பெற்ற கார்ல், இயந்திரவியல், ரோபாடிக்ஸ் துறைகளில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கிறார்.

பல பரிசுகள் பெற்ற நாவல்கள், சிறுகதைகள் எழுதிய இவரது பெரும்பாலான கதைகளின் கருப்பொருள் அறிவியல், கணிதம், மனித-இயந்திர உறவுகள் மற்றும் இத்துறை சார்ந்த உளச்சிக்கல்கள்.

பிரபலமான Zoetrope சிறுகதை பத்திரிகையில் வெளிவந்து பலரது கவனத்தை ஈர்த்த ‘Zilkowksky’s Theorem’ என்ற சிறுகதையின்  முறையாக முன்னனுமதி  பெற்று செய்யப்பட்ட மொழியாக்கம் இது.

ஒளிப்பட உதவி – Robotic Mobility Group, MIT

யாசகத்தின் வாசகம்

ஜிஃப்ரி ஹாசன்

கையேந்தலில் வைக்கப்பட்ட

நம்பிக்கையோடு

யாசகர் கூட்டத்தின் பயணம்

ஒவ்வொரு அதிகாலையிலும்

தொடர்ந்தபடியேதான் இருக்கிறது

 

இந்த வாழ்வு யாருடனும்

பகிரப்படாமல் ஒரு புண்ணின் வலியோடும்

ஒரு பிணத்தின் வாடையோடும்

எதுவரை நகரப் போகிறது?

 

கைகள் நீளும் தூரம் வரை

கண்கள் ஒளிகொள்ளும் தொலைவு வரைதான்

அவர்களின் நம்பிக்கையும்

வரையறை செய்யப்பட்டுள்ளது.

பாதைகள் விரியும் திசை எங்கும்

பயணம் தொடர்ந்தபடிதான்

இருக்கிறது!

பரிதவிப்பின்  குரலை

எதிர்பார்ப்புகள் நிறைந்த

கண்களின் ஒளியை

காற்று எல்லாத் திசைகளுக்கும்

எடுத்துச் செல்கிறது

வீட்டின் சுவரோரங்களில்

நின்றபடி

ஏக்கத்துடன் கதவுகளைத் திறக்க முனையும்

குரல்களில் கசிந்து கொண்டிருக்கும்

பதட்டத்தை செவியுறும் வாசல்கள்

திறந்து கொள்கின்றன

செவியுறாத கதவுகள்

மூடியபடியே இருக்கின்றன

நடுக்கத்துடன் நீளும் கரங்களில்

கனவுகளற்றுப் போன

பாதைகள் விரியும் திசைகளில்

அலைவுறும் அந்த வாழ்வின்

எல்லாத் துயரங்களும்

எழுதப்பட்டிருக்கிறது

ஒரு புண்ணின் வலியோடும்

ஒரு பிணத்தின் வாடையோடும்

கசிந்துருகும் குரல்களை காற்று

எந்த வெட்கமுமின்றி

இன்னும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு

காவித் திரியப் போகிறது?