![]()
சொன்னது போலவே ஒரு மாதத்திற்கு சற்று மேலே ஆனபின் நாங்கள் அந்த இடத்திற்குத் திரும்பி வந்தோம். எங்களுடன் வண்ணக்கழுத்தையும் அவன் அம்மாவையும் கூட்டி வந்திருந்தோம். ஏனெனில், குட்டிப்பயல் இப்போது இரண்டாம் முறை பறக்கும் போது, ஒவ்வொரு கிராமம், லாமாக்களின் மடாலயம், ஏரி, ஆறு எல்லாவற்றையும் சந்தேகத்துக்கே இடமில்லாத வகையில் மிகத் துல்லியமாக அறிந்து கொள்வதோடு, விலங்குகளையும், நாரைகள், கிளிகள், ஹிமாலய கொக்குகள், காட்டு வாத்துகள், டைவர்கள், குருவிப் பருந்துகள், உழவாரக் குருவிகள் போன்ற பறவைகளையும் அறிந்து கொள்ள வேண்டுமென்று விரும்பினேன்.
இந்த முறை நாங்கள் அந்தக் கழுகின் பொந்தைத் தாண்டி நூறு மீட்டர் சென்றோம். அப்போதே ரெடோடென்ரான்களில் இலையுதிர் காலத்திற்கான அறிகுறிகள் தெரிந்தன. அவற்றின் எரியும் பூவிதழ்கள் உதிரத் துவங்கியிருந்தன. பல அடிகள் உயர்ந்திருந்த அவற்றின் தண்டுகள் காற்றில் சலசலத்துக் கொண்டிருந்தன. பல மரங்களின் இலைகள் நிறம் மாறத் துவங்கி இருந்தன. காற்றெங்கும் துக்கம் நிறைந்திருந்தது. பதினோரு மணி சுமாருக்கு, எங்கள் புறாக்களைத் திறந்துவிட்டோம். அவை, வெள்ளைச் சிகரங்களில் தொங்கும் பாய்மரத் துணியாய் விரிந்திருந்த, மாணிக்கக் கல்போன்ற நீல வானத்தில் பறந்து சென்றன.
அரைமணிநேரம் பறந்திருக்கும், ஒரு பருந்து அவற்றின் மேல் உயரே பறந்து வந்தது. அது புறாக்களுக்கு அருகே பறந்து வந்து, அவற்றைப் பாய்ந்து தாக்கியது. ஆனால் அதன் இரையோ ரொம்ப எச்சரிக்கையாக இருந்து, காயம் இல்லாமல் தப்பித்துவிட்டன.
வண்ணக்கழுத்தும் அதன் அம்மாவும், மரங்கள் இருக்கும் இடத்தை நோக்கி கீழே பரபரவென்று இறங்கும்போது, பருந்தின் துணை வெளிவந்து தாக்கியது. தன் கணவரைப் போலவே புறாக்களை நோக்கி அதுவும் பறந்தது. ஆனால், அதனாலும் இரையை வீழ்த்த முடியவில்லை.
தங்கள் இரை தப்பிப் போவதைக் பார்த்த ஆண் பருந்து, தன் பெடையை நோக்கி க்றீச்சிட்டதைக் கேட்டதும் அது காற்றில் இறக்கைகளை அடித்துக் கொண்டு, தக்க சமயத்தை எதிர்பார்த்து, அப்படியே நின்றுவிட்டது. தப்பித்து விட்டோம் என்ற உணர்வில் புறாக்கள் தங்கள் இறக்கைகளை வேகமாக அடித்துக் கொண்டு பறந்தன. மேற்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் இரு பருந்துகளும் விரட்ட, புறாக்கள் தெற்கு நோக்கிப் பறந்தன.
ஒவ்வொரு சிறகடிப்புக்கும் பருந்துகள் புறாக்களை இன்னும் கொஞ்சம் நெருங்கின. கூர் தீட்டிய முனை கொண்ட கசாப்புக் கடைக்காரனின் கத்தி போன்ற வடிவத்திலிருந்த அவற்றின் இறக்கைகள், புயல் போல் காற்றைக் கிழித்து விரைந்தன. ஒன்று, இரண்டு, மூன்று… ஈட்டிகளைப் போல பருந்துகள் வீழ்ந்தன.
வண்ணக்கழுத்தின் அம்மா, அப்படியே நின்று காற்றில் மிதந்தார். பருந்துகளின் கணக்கு தப்பிவிட்டது. இப்போது என்ன செய்ய? எதைத் தாக்க? இதுமாதிரிக் கேள்விகளுக்கு விடை காண சற்று நேரமெடுக்கும். இந்த வாய்ப்பை வண்ணக்கழுத்து தன் திசையை மாற்றிக் கொள்ள பயன்படுத்திக் கொண்டது. பரபரவென்று மேலே இன்னும் மேலே ஏறியது. சில நொடிகளில், மகனைப் பார்த்து அம்மாவும் மேலே ஏறியது.
ஆனால், அதற்கான காலம் கடந்துவிட்டது. பருந்துகள், அம்மாவைக் கிட்டத்தட்ட தாக்கும் தூரத்தில் நெருங்கி வந்துவிட்டன. திடீரென்று ஒரு பதற்றம் அம்மாவைப் பற்றிக் கொண்டது. பருந்துகள் தன் மகனைக் குறிவைக்கின்றன என்று அது பயந்தது. தன் மகனைக் காக்க – இதற்கான அவசியமே இல்லை – விரட்டிவரும் பருந்துகளை நோக்கிப் பறந்தது. அடுத்த நிமிடம், இரண்டு வேட்டைப் பறவைகளும் அதன் மீது பாய்ந்துவிட்டன. காற்று முழுக்க சிறகுகள் சிதறி விழுந்தன. இதைப் பார்த்த வண்ணக்கழுத்து பயந்து போனது. பாதுகாப்புக்காக பக்கத்திலிருந்த செங்குத்தான மலைக் குன்றில் பாய்ந்துவிட்டான். அவனுடைய அம்மா, தன்னுடைய தவறால் தன் உயிரையும் இழந்து, அனேகமாக தன் மகனுடைய உயிருக்கும் ஆபத்தை உண்டு பண்ணிவிட்டது. (more…)




