எழுத்து

தட்டிப்போன தவம்

அர்ஜூன் ராச் 

ஒருநாள்

மனதில் கல்லெறிந்து கொள்ளாமலும்
மனதை கல்லாக்கிக் கொள்ளாமலும்
இருந்தேன்

நினைவுகளின் வலியை
சொரிந்து கொள்ளாமலும்
கனவின் விடியொளியில்
நிலா காயாமலுமிருந்தேன்

யாரையும் பகைத்தோ நேசித்தோ வைக்காமாலிருந்தேன்
சந்தித்தும் பேசாமலும்.

தொலைத்துக் கொள்ளலாம் அல்லது
ஞாயிலாகிக் கொள்ளலாம் என்றெண்ணி
வேண்டாமென
காணாமல் போனதாக இருந்துவிட்டேன்

ரோட்டைப் பார்த்து வண்டியோட்டுவது போலவும்
நாவிதரின் சவரப்பணிக்கு கட்டுப்படுவது போலவும்
ஒரு முகம் ஒப்புவித்திருந்தேன்

நிரம்பிய தண்ணீர் குடத்தோடு
நடை சென்றுவரும் வரை
இரண்டாவது குடம்
நிரவலாக விடுவது போல்
பசியைப் பார்த்துக் கொண்டேன்

அன்றிரவு நின்மதியாக
உறங்கி விடிந்ததும்
இமைப்பிரித்துப் பார்க்க
சூக்கும நிலையில்
கண்கள் கனவுத் தடங்களற்ற
குருடாக இருந்தன

எல்லோருமிருந்திருந்திருந்த
இடத்தினில் யாருமே
இல்லாமலிருந்ததுபோல் எனக்கு
இருள்மயமாக இருந்தது

“திடீரென அலன்று
பயமாக இருக்கிறதென்று சொன்னேன்
கெட்டகனவு கண்டிருப்பீர்
அமைதியாக இமை பொருத்திக் கொள்ளச் சொன்னாள்

இல்லை.
அது இனிதாகத்தானிருந்ததென்று
சொல்வதற்குள்
அலறியதைப் பற்றிக் குழம்பிக்கொண்டே
நா குழற படுத்துக்கொண்டேன்

இப்போது தூல நிலை துலங்கித்தர
கனவு வருவதுபோல்
கனவுகள் வரலாம்

ஆயினும் நான்
அலறாமலிருந்திருக்கலாம்

சிறியதை விழுங்கப் பெரியது

இனியவன் காளிதாஸ் 

 

சிறியதை விழுங்கப் பெரியது
அதனை விழுங்க
மற்றொன்று
இடையில் மிதக்கும்
நதியிலை

என்றபடி கடக்கும்
காலத்தின் கால் தடத்தைத்தான்
நீங்கள் வாழ்க்கை
என்று கூறித் திரிகிறீர்கள்.

சொல் வளர்த் தோட்டம்

பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி 

 

அவர்களிடம் எப்போதும் எந்த முறையீடுகளும் இல்லை.
தினமும் காலை மாலை என
இரு வேளைகளிலும்
அவர்களுடன் என் உரையாடல்கள் நிகழும்.
ஒவ்வொருவருக்குமான நிறங்களின்
மாறுபட்ட தன்மை பற்றிய
சஞ்சலங்கள் இருக்காது.
அவரவரின் பிரத்யேக நிறத்தில்
மலர்ந்து மகிழ்ந்திருப்பர்.
யாரருகில் யாரிருக்க வேண்டுமென்பது
போலான குளறுபடிகள் கிடையாது.
கால நிலை மாற்றத்திற்கு ஏற்றாற் போல
தங்களை தகவமைத்துக் கொள்வார்கள்.
யாரும் யாரை பற்றியும்
எந்த புகார்களும் சொல்லுவதில்லை.
அவர்களின் தினசரியில் நானொரு
பேசும் தாவரமென என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஏமாற்றியபடி
அவர்களை செம்மைப்படுத்தி வருகிறேன்.
விதைகள் துளிர்ப்பதை காண்பது,
தொட்டியின் ஈரப்பதம் தக்கவைப்பது,
துளையிட்டு நீர் வழிந்தோடும்
பாதை அமைத்தல்,
மண்ணை சமன் செய்து நீரை தேக்குவது,
முதல் மலர், முதல் கனி என
அவர்களின் தினசரிகள் மிக சாதாரணமாக
எவ்வித அவசர கதியுமின்றி
அதி இயல்பாக இருக்கும்.
இப்போது கொஞ்சம் கொஞ்சமாக
அவர்களில் ஒருவனாக
என்னையும் அங்கீகரிக்கிறார்கள்.
என் தினசரிகளை விசாரிக்கின்றனர்.
நாங்கள் உரையாடும் போது
ஒவ்வொரு தினமும் எப்போதும் என்னிடம் ஆயிரம் முறையீடுகள் இருக்கும்
ஆயினும் எனது பிரதி கேள்விகளில்
அவர்களிடம் ஒருமுறைகூட எந்த முறையீடுகளும் இருந்ததேயில்லை.

 

காற்புள்ளிகள்

இனியவன் காளிதாஸ் 

 

காற்புள்ளிகள் மேல் வைக்கப்பட்ட
முற்றுப் புள்ளிகள்

இறந்தகாலத்தின்
உதரம் கிழித்து
உறைந்து கிடக்கும்
நினைவுத் துணுக்குகளை
நிழலாடச் செய்கிறது

கனவின் அடியாழங்களில்
கால்வைத்து இறுகிக்கிடக்கும்
சந்தோசத்தின்
பூட்டுகளைத் திறவுகிறது

பிசுபிசுத்துக் கிடக்கும்
பெருங்கதறல்களின்
சாம்பல் குழைத்து
உடலெங்கும் பூசிக் கொண்டு

பல்லிடுக்கில் சிக்கிய
உணவுத் துகளாய் ,
நழுவிப்போன
பால்யத்தை முத்தமிட்டு,
நிகழ்காலத்தின் முகவரிக்குள்
அழைத்துவரும்
நிழற்படங்கள் யாவும்

நினைவுகளின்
பிம்பங்கள் மட்டுமல்ல

ஓய்வின்றி
நகரும் காலத்தின்
காற்புள்ளிகளின்
மேல் வைக்கப்பட்ட
சிலவிநாடி முற்றுப்புள்ளிகள் .

கதவைப் பற்றி

ஆனந்த் குமார்

கதவைப் பற்றி
புகாரில்லை எனக்கு
அது ஒரு அற்ப ஜந்து.
இந்த ஜன்னலின்
அதிகாரம்தான்
பொறுப்பதற்கில்லை.
வானத்தை சரியான அளவில்
வெட்டி வைக்கிறது
மேலும் குட்டிக் குட்டிச்
சதுரங்களாய் வேறு பிரிக்கிறது.

அது காண்பிக்கிறது
தினம் தினம் ஒன்றேயென
வானத்தின் அளவை
அது சொல்கிறது
மாற்றமேதும் இல்லையென.

சரிதான் இருக்கட்டும் முத்தே
உன் இரு சதுரங்களினிடையில்
ஒரு பூ வேலைப்பாடு
தினம் தினம்
அது
கொஞ்சம் பூக்கிறதே என்ன ?