கவிதை

சரவணன் அபி கவிதைகள்: நிகழும், பம்பை, காலடி

 சரவணன் அபி

நிகழும்
நதி – 1: பம்பை
நதி 2: காலடி

நிகழும்

கருந்திரை கீழிறங்கியது
கண்முன் இருண்டு மறைந்தது ஒளி
சூழ நின்ற
மலையடுக்குகளுக்கிடையே
அலையென மிதந்து வரும்
மென்னீரக் காற்று
கமழும் உன் தோள் வாசம்

எப்போதோ முகர்ந்தது
இன்னும் புலன்களில்
அழியா தடம்
இப்போதும்
முகர்ந்துகொள்ளும் அண்மையில்

விருப்பங்களின் சின்னமென
இடையில் எரியும் கணப்பு
வழியும் ஹரிப்ரஸாதின் குழலிசை
சகியொருத்தி சொன்னது
‘ஒரு குழல்,
ஒரு முணுமுணுப்பு,
ஒரு பெருமூச்சு,
ஒரு முனகல்,
ஒரு மெல்லிய அழுகை,
ஒரு தேன்சிட்டின் சிறகசைவு,
சுவாசம்,
தென்றல்,
மரங்களின் உயிர்ப்பு,
இடையோடும் நிசப்தம்,
சொற்களேதுமற்ற இந்நிலை…’

அநித்யங்களின் காதல்
வலியது

—-

நதி – 1: பம்பை

சாகச பயணம்போலும்
தலையில் கட்டோடும்
இடைநழுவும் முண்டோடும்
நகர்நீங்கி நான்காம்நாள்

கருமையும் பச்சையும் நீலமும்
கலந்தடர்ந்த கானகம்
புள்ளினங்களும் இயம்பா
புலரிளங்காலை

துயிலெழுப்பி விரிநீங்கி
தந்தையின் தோளமர்ந்து
மென்சருகென மினுங்கும்
பம்பையின் கரையோரம்

தோளிறக்கி துண்டுரித்து
அடற்கருமையில் அசைவின்றி
நெளியும் நீரோரம் அமர்த்தி
நிகழ்வதென்ன அறியாதவன்

பனிக்குளிர்நீரில் முதல்முழுக்கு
ஆயிரம் ஊசிகள் ஓராயிரம் துளைகள்
விறைத்துநின்ற சிறுஉடல்
சினம்கண்டு சிரித்த தகப்பன்

—-

நதி 2: காலடி

பற்பல நாட்களில்
பேசிய முதல் வார்த்தை
அங்காமலி சங்கரன் அம்பலம்

துகிலோடு நாணமும் களைந்து
பெரியாறின் படிகளிலிறங்கி
எதிர்கரை காணா
இருளும் தொலைவும்
நினைவில்லாது
மயக்கம்போலும் ஓருணர்வில்
முதலடி ஈரடி
பனிக்குட வெம்மைக்குள்

நாசியின்கீழ் உடலம்தழுவி
நகர்ந்த நீர் பொழிந்ததெங்கு
வழிந்ததென்று
புதைந்தமர்ந்திருந்தது
எத்தனைக் காலம்

ஆதவன் தருவான் உடலுக்கு உறுதி – கே. ராஜாராம் கவிதை

கே. ராஜாராம்

நட்ட நடுப்பகலில் உச்சி வெயிலில் நடப்போர்க்கு
வட்டத் திகிரி தருவான் வைட்டமின் D – ஏ சி
கட்டடத்துள் வாழ்வதும் ஒரு வாழ்வா? இக்கால
கட்டத்தின் கட்டாயம் இதை உணர்வதே!

சீரகம் தரும் சூரியனை உபாசித்து
பேரகப் பெரு வெயிலில் நடவீர்! நடவீர்!
தாரக நாமம் உள்ளத்துக்கு உறுதி போல் -பகல்
தாரகைத் தலைவன் தருவான் உடலுக்கு உறுதியே!

அருள் ஒளி ஆதித்ய கிரணங்கள்- சத்துப்
பொருள் தரும் உடலின் வலிமைக்கே- அதுவே
இருள்சூழ் வாழ்வில் அகல் விளக்கென
மருள்மிகு மனத்துள் பாய்ந்திடுமே!

உடலின் உயிரே சூரிய வெளிச்சம- கீழ்க்
கடலில் உதிக்கும் இறை வெளிச்சம்- அது நம்
குடலுள் தூண்டும் சத்தின் பெருமையை- ஒரு
மடலில் பதித்தேன் மக்கள் நலனுக்கே!

காற்றுக் குமிழியாகவே- ஏ. நஸ்புள்ளாஹ் கவிதை

ஏ. நஸ்புள்ளாஹ்

மேலும் அந்தக் கனவை
நாட்பது வருடங்களாக எனக்குத் தெரியும்.

அதன் முகம்
அதன் நிறம்
எனதறையின் சுவரெங்கும்
இன்னும் பழைய மாதிரியே
பிரத்தியேகமான வடிவங்களோடு இருக்கின்றன.

மேலும் அதன் தன்மை குறித்தும்
அதன் பரம்பரை குறித்தும்
இவ்வாறு சொல்ல வேண்டியிருக்கிறது.

கண்கள் பச்சை நிறமுடையன
சில நேரங்களில் மட்டும்
நீல நிறமாக மாறக் கூடியன
தோல்கள் மேகத்தைப் போல
மென்மை
உடல் கடலைப் போல்
எல்லையுடையது.

அந்தக் கனவு
ஆதியிலிருந்து வானத்தின் மற்றும்
பூமியின் மையப்புள்ளியில்
காற்றுக் குமிழியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அக்கினிக் குஞ்சு- இரா. கவியரசு கவிதை

இரா. கவியரசு

நன்றாகத் தூங்குகிறது
நெருப்பு

பற்றிப்பரவி கொன்று விழுங்கும்
அதன் அசுர நாக்குகள்
மழைச்சுவையில்
மக்க ஆரம்பித்திருக்கின்றன

மலைஉச்சியை உடைக்கும்
அதன் பொங்குதல்
நெஞ்சுக்குள்
குளிர்ப்பதனப் பெட்டியில்
மூடி வைக்கப்பட்டிருக்கிறது

கூடிய மட்டும்
தீப்பொறிச் சிறகுகளை
விரிக்க விடாமல்
தண்ணீர்ச்சுவர்கள்
சூழ்ந்தணைக்கின்றன

பற்றும் ஒவ்வொன்றையும்
தன்னைப் போல எரிய வைக்கும்
உயிரின் DNA
மாற்றி அமைக்கப்படுகிறது

அடைக்கப்பட்ட
பாதுகாக்கப்பட்ட
முழுவதும் போர்த்தப்பட்ட
குடுவைக்குள்
சுடர் விட்டெரிய பயந்து
கண்கள் மட்டும்
சிமிட்டிக் கொண்டிருக்கிறது.

 

 

 

உயிர்ப் பருக்கை -வருணன் கவிதை

வருணன்

தசைகளின் இறுக்கம் தளர்த்தி
தலைமயிர் பறித்து தாடைதனில்
பதியனிட்டு விளையாடுகிறாள்,
காலக் குழந்தை.
வளைகாப்பால் பூரித்த
நாளைய தாயைப் போல
தொந்தி சரியவிட்டு
நடையின் வேகம் திருடி
பரிகசித்து வம்பிற்கு இழுக்கிறாள்-
நீயதனை தள்ளாமையென்கிறாய்!

என் உயிர்ச் சோற்றின் சில பருக்கைகள்
கவர்ந்து எங்கோ ஒரு கருவறையிருட்டில்
மிதக்கும் சிசுவின்
ஆன்ம பொம்மை செய்கிறாள்,
காலக் குழந்தை.
எது கொடுக்கப்பட்டதோ
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.