கவிதை

மயானத்திலிருந்து திரும்பியபிறகு – காஸ்மிக் தூசி கவிதை

காஸ்மிக் தூசி

மயானத்திலிருந்து
வீடு திரும்பியபிறகு
அடுத்து என்ன செய்வது என்பது
அவ்வளவு எளிதில்
தீர்மானிக்க முடிவதல்ல

இறந்தவர்
குடும்பத்தில் ஒருவர் எனில்
ஒரு கோப்பை
மதுவோ தேநீரோ அருந்தி

துயரத்தை சிறிதளவு
மறைக்கலாம் மறக்கலாம்.

நெருங்கிய நண்பர் எனில்
ஒரு மாதம் கழித்து
இறந்தவர் வீடு சென்று
தற்செயலாய் அவ்வழி
செல்ல நேர்ந்ததாய்
பொய்சொல்லி
தேநீர் பருகி
உரையாடி திரும்பலாம்

மரக்கன்று ஒன்றை
ஊன்றி வைத்து
நினைவை தினமும்
நீர் ஊற்றி வளர்க்கலாம்.

தூரத்து உறவு எனில்
கூடுகையில் இறந்தவரின்
பிடிக்காத குணங்களை
குறிவைத்து மறைத்து
நல்லதை மட்டும் சிலாகித்து
விவரித்து பேசலாம்.

வேறு எவராகினும்
இறந்தவர் பற்றி
விமர்சிக்க, குறை கூற
குறைந்தது ஆண்டு ஒன்றாவது
காத்திருத்தல் நல்லது.

இறந்தது
நம் முன்னாள் காதலி எனில்
நிலைமை சற்றே சிக்கலானது.

குறிப்பிடும்படி
எதுவும் நிகழாததுபோல்,

வெயில் தாழ்ந்த
மாலை ஒன்றில்
நடைப்பயிற்சி முடித்து
வாசலுக்குள் வருவது போலவோ

வருடத்தின் ஏதோவொரு
சனிக்கிழமை காலையில்
பலசரக்கு மளிகை வாங்கி
வீட்டுக்கு திரும்புவது போலவோ
அன்றாட வாழ்க்கைக்குள்
வந்துவிடுவதைத் தவிர

சற்றுமுன் இறந்துவிட்ட
முன்னாள் காதலி பற்றி
நாம் வேறெதுவும்
செய்வதற்கில்லை.

என்றாவது ஒருநாள்
கூடத்தின் நடுவே
குடும்பத்துடன் பார்க்கும் திரைப்படத்தில்
துயரக்காட்சி தோன்றும்போது

இயல்பாய் கண்கள் பனிக்கையில்
கூடவே இறந்துவிட்ட காதலியையும்
நினைத்துக்கொள்ளலாம்.

தட்டிலிருக்கும் பண்டத்தை
எடுக்க குனியும் சாக்கில்
யாருக்கும் தெரியாமல்
கவனமாய் கண்களை
துடைத்துக்கொண்டு

படம் சிரிப்புக்காட்சிக்கு
மாறிய பிறகு
இறந்தவருடன்
தொடர்புடைய
ஏதாவதொரு ஹாஸ்யத்தை
நினைத்துக்கொண்டு
வாய்விட்டு சிரிக்கலாம்

நாம் பனித்ததும்,
குனித்ததும், சிரித்ததும்
ஏன் ஏனென,

நம்மைத்தவிர
வேறு எவர்தான்
அறியப்போகிறார்?

சைடு வாங்குதல் – செல்வசங்கரன் கவிதை

செல்வசங்கரன்

சிரிப்பே வரவில்லை
இப்படித்தானே சிரிக்கவேண்டுமென சிரித்துப் பார்க்க
இதுவெல்லாம் சிரிப்பில் அடங்குமா
இடதும் வலதும் உதடுகள் சைடு வாங்கிக் கொண்டதால்
தூரத்திலிருந்து பார்ப்பவர்கள்
சிரிக்கிறானென்றே பொத்தாம் பொதுவாக கூறி நகர்ந்தனர்
சிரிக்கவில்லை எனக்குத் தெரியுமாதலால்
பழைய பொசிசனுக்கு வருவதில் ரொம்பச் சிரமமில்லை
இப்பொழுது சிரிக்காமலா இருக்கிறேன் பெரிய பாவம் செய்ய பார்த்தேன்
உதடுகளைப் பழையபடி ரெண்டு பக்கமும் ஒதுக்கி வைத்துக்கொண்டேன்
அக்கேசனாக பார்த்தவர்கள் உள்ளம் களித்திருப்பார்கள்
பக்கத்தில் இருந்தவர்கள் தான்
பெரிய இனா வானா என்று முணுமுணுத்தபடியிருந்தனர்
சிரிப்பது மாதிரி ரொம்ப நேரம் செய்து
முடியவில்லை வாய் வலிக்க ஆரம்பித்துவிட்டது
திரும்பவும் நியூட்ரல் நிலைக்கு வந்து உதடுகளை
பாந்தமாகப் பிடித்து அமுக்கி விட்டுக் கொண்டேன்
என்ன செய்தும் சிரிப்பு வரவில்லை
சிரிப்பை நினைப்பதொன்றே சிரிக்கச் சிறந்த வழியென
காதுக்குள் வந்து பட்சி சொன்னதால் பிழைத்தேன்
அவ்வழியில் போனால் போகப் போக
கொஞ்சம் கொஞ்சமாக கண்ணில் நீர் பூக்க ஆரம்பித்து
ஒரே சிரிப்பு முழக்கம்
என்ன செய்தும் சிரிப்பை அடக்க முடியவில்லை
இப்படிச் சிரிக்கிறேனென்ற சொந்தச் சிந்தையே
கனிய வைத்துக் கனிய வைத்து வளம் குன்றாது காத்தது
சிம்ரன் சிரித்துச் சிரித்துப் பேசி எனக்கு ஒன்று தந்தாரே
அதுவா இது
சிரிப்பதையே வைத்த கண் வாங்காமல்
பார்த்துக் கொண்டிருக்கும் மரியாதை பொருந்தியோரே
உங்களிடம் தான் கேட்கிறேன்
இல்லையென்றாலும் ச்சும்மாவாது சொல்லுங்கள் எதாவதுனாலும்

சாத்தன் மரம் – மந்திரம் கவிதை

மந்திரம்

அந்தியில் பூக்கின்றன
ஏலக்காய் வாசம் பொதிந்த
வெள்ளைப் பூக்கள்.
கொத்துக் கொத்தாய்
பச்சை இலைகளுக்குள்
பொங்கித் தெரிகின்றன.

மோகம் தலைக்கேறும்
அடர் வாசம்
அப்பெருமரத்தில்
குர்கானின் பனிக்காலம் வரை
மோனத்தவம் வீற்றிருந்து
நறுமணம் கிளர்ந்தெழும்
குளிர்க் காற்றில்
தாபமாய் மெல்லச் சூழ்கிறது.

காலநிலை தடம் மாறும்
ஓர் நாளில்
சுற்றி அலையும் பட்டாம்பூச்சி போல்
நகரின் மேல் தீராக் காமமென
கவிந்து விரிகிறது.

யாருமற்ற அதன் காலடியில்
அவள் தீராக் காதலை
எல்லா இரவுகளும் சுவாசிக்கிறேன்

தனிமையை வரைபவன் மற்றும் சில ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்

ஏ. நஸ்புள்ளாஹ்

அவளிடம் மட்டுமே திருடிய சொற்கள்.

அவளது கலாசாரம்
வித்தியாசமான சூழலின்
சொற்களால் திருடப்பட்டிருந்தது.

அவள் வழமையாக வந்தமரும்
அந்த இருக்கையில் அமர்ந்தாள்.

பின் மல்லாந்து
படுத்துக் கொண்டு
அவளது முகத்தில் விழுந்த
மழைத் துளிகளை வாங்கி
மிகவும் சுதந்திரமாய் ரசித்தாள்.

நடைபாதையில் பயணிக்கும்
மக்களின் வாழ்வும் இயக்கமும்
கடவுளின் வரம் என உணர்ந்தாள்.

சாரல் மழை
மெல்லியதாய்
அவளுக்குச் சுட்டது.
அவள் பறவையாக தொலைந்தாள்
மனதில் சிறகுகள் விரிந்து
மேகத்தில் ஏறினாள்.

தனிமையை வரைபவன்

நேற்றும் தனிமையை வரைய வேண்டியிருந்தது
தனிமையை ஓர் இரவாக வரைந்தேன்
இரவிற்குள்
சில நட்சத்திரங்கள் வந்தமர்ந்தன
இன்னும் சில பறவைகளும்
வந்து சேர்ந்தன
நிலா ராஜகுமாரி மேகத்திற்குள்
மறைந்து மறைந்து
புதிது புதிதாய் காட்சி தந்தாள்
பேச்சுக்கு துணை கிடைத்தது
ஒரு யுகத்தைக் கடந்தது போல் இருந்தது

தனிமை கறுப்பு நிறத்தையொத்தது
அது ஒரு பெரும் வனத்தின்
இருளை என் மீது சுமத்தியிருக்கிறது
இருள் என்பதும்
ஒரு வகை வலிதான்
அதனைத்தான்
பல நேரங்களில் தலையணைக்கடியில்
மறைத்து வைக்க வேண்டியிருக்கிறது
எப்படி மறைத்து வைத்த போதும்
அறை முழுக்க அது பரவிடுகிறது

இப்போது
மூன்றாம் சாமம் தாண்டியிருந்தது
தனிமையை ஒரு பகலாக வரையத் தொடங்குகிறேன்
பகலுக்குள் சில மனிதர்கள் நடமாடலாம்.

 

குழந்தை – பூராம் கவிதை

பூராம்

குழந்தை
கொடுத்த முத்தத்தில்
ஓடிப் போன காமத்தைக்
காலம் மூன்று திசை நான்கு
எல்லையில்லா மனவெளியில்
தேடிக் கொண்டிருக்கிறேன்