என்ன பறவையென்று தெரியவில்லை
இருள் மேனி அந்தி வண்ண விழிகள்
மாலையிலிருந்து அப்படியே உட்கார்ந்திருக்கிறது
வானத்தை மறந்துவிட்டதா
இல்லை தானொரு பறவையென்பதையே மறந்துவிட்டதா
நள்ளென்ற யாமத்தில் மனசு கேட்கவில்லை
மொட்டைமாடிக்கு சென்றேன்
அப்போதுகூட அது
பறவைநிலைக்கு திரும்பியிருக்கவில்லை
நெருங்கிச் சென்று
மெல்ல கையில் தூக்கி பறக்கவிட்டேன்
பறக்கப் பறக்க மீண்டும்
அதேயிடத்திற்கே
வந்துகொண்டிருந்தது அந்தப் பறவை
நானும் நிறுத்தவில்லை
கவிதை
அலமாரி – ஸ்ரீதர் நாராயணன் கவிதைகள்
சாக்லேட் துண்டு
கரிய பனிக்குல்லாவை தலையில் மாட்டிவிட
துரத்தி வரும் அன்னையிடமிருந்து
தப்பி ஓடுகிறாள், நீள்சுருள் தலைமுடிச் சிறுமி
வெறுமையான மதியப்பொழுதுகள் போல
உலர்ந்த ஓடுகளாக நின்றுகொண்டிருக்கும்
பெரியவர்கள் கனிந்து வளைகிறார்கள்.
போக்குவரத்து அதிகம் காணாத
அச்சாலையில்
எப்போதாவது ஒரு ஐஸ்க்ரீம் வண்டி வரும்.
குளிர்கால டிசம்பரில்
கிறிஸ்துமஸ் தாத்தா வண்டியும் வரும்.
குப்பை வண்டிகள் இரண்டு
வாரம் ஒருமுறை ஊர்ந்து போகும்
அவளுக்கான வாசல்கள் கொண்ட
பொன்னந்தி நிறத்து
பள்ளிக்கூட வண்டி வந்து நிற்கிறது
ஆர்ப்பரித்துச் சிரித்தபடி
வண்டியிலேறிப் போகிறாள்.
அவள் உதறிவிட்டுப் போன
சாக்லேட் துண்டையே
சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது
தேங்காய் துருவலைக் கொட்டியது போன்ற
புசுபுசுவென நாய்க்குட்டி.
oOo
பேப்பர் கொக்கு
மெல்ல மிளிர்ந்து சிமிட்டிவிட்டு
வெண்சாம்பல் சமுத்திரம் மேவ
உள்ளமிழ்ந்து போய்விடும்
செங்கனலை பார்த்துக்கொண்டு
மேஜையின் ஓரத்தில் அதிர்ந்தபடி
காத்திருக்கிறது பேப்பர் கொக்கு
தன் இறகுகளின் கசங்கலிலிருந்து
சுருக்கங்களை நீவிக் கொள்கிறது
மைக்கறையை வரைந்து
மேனியெங்கும் பூசுகிறது
கால் மாற்றி நின்று
கோணல் பார்வை பார்க்கிறது
ஒற்றை சிறகை விரித்து
உலகை புரட்டித் தள்ளுகிறது.
காற்றின் ஒரு விசிறலில்
கங்கு சீறி வீசும்
ஒரு நெருப்பில்
பற்றிக் கொண்டு
பறந்து விடலாம்
என நம்பிக்கையோடு
காத்திருக்கிறது பேப்பர் கொக்கு
மேஜையின் ஓரத்தில் அதிர்ந்தபடி
oOo
அலமாரி
பிய்ந்துபோன கோட்டு பித்தான்கள்
மூக்குடைந்த ரவிக்கை கொக்கிகள்
ஜோடியிழந்த சட்டைக்கை கப்ளிங்குகள் என
கண்ணாடிபுட்டி நிறைய இருக்கிறது
தொலைக்கவும் முடியாத
பொருத்தவும் முடியாத
பழைய நினைவுகளைப் போல
அறுந்து போனபோது
விடுபட்ட தொடர்புகளை
தேடி அலமாரியில்
காற்றிலாடும் உடுப்புகளிடையே
அவ்வப்போது உரசிப்பார்த்துவிட்டு,
குற்றவுணர்வில் கருத்துப்போய்
கண்ணாடி புட்டியிலே
தங்கிவிடுகின்றன,
இப்படித்தான் இற்றுவிழாமல்
அலமாரியை இழுத்துப்பிடித்து
வைத்துக் கொண்டிருக்கின்றன
ஒன்றுக்கும் உதவாத பழங்குப்பைகள்.
oOo
பின்னால் வரும் நதி – ராஜேஷ் ஜீவா கவிதைகள்
பின்னால் வரும் நதி
குட்டி நிலாக்களைப் போலவோ
கோழிக்குஞ்சுகளைப் போலவோ
தன் குட்டிக் கால்களுக்குப்
பின்னால் ஏன் வருவதில்லை
நதியுமென்று அவள் வியப்புடன் கேட்கிறாள்
எல்லாமும் எல்லாரும்
தன் பின்னால்
வர வேண்டுமென்று
அனிதா விரும்புகிறாள்
நேற்று பின்மதியம்
கலரிங் புத்தகத்தில்
அவள் தீட்டியிருந்த
நதிப் பெருக்கில்
பழுப்பு வண்ண
வயோதிகச் சூரியன்
மூழ்கியெழுந்து
குடையாரஞ்சுப் பழமாகச்
சுழன்று கொண்டிருப்பதை
படுக்கையில் புரண்டு
கொண்டிருக்கும் அவளிடம்
இன்னும் சொல்லவில்லை
oOo
பொம்மை ஃபோன்
நீங்களும் என் நம்பரை
டெலீட் பண்ணிடுங்க என்றாள்
மறுமுனையில்
சத்தமே இல்லை
அழிக்கப்பட்ட ஆயிரம்
ஆயிரமாயிரம் எண்களை
தனது பொம்மை ஃபோனில்
டயல் செய்து ஹலோ சொல்லி சிரிக்கிறாள் குட்டி மாலினி
oOo
மிட்டாய்
ஆனை வேண்டும்
குதிரை வேண்டும்
என்றாலும்
வாங்கித் தருபவள்தான்
ஆனாலும்
கம்மென்றிருக்கிறது குழந்தை
மிட்டாய் மட்டும் போதுமென்று.
பூராம் கவிதைகள்
பூராம்
1.
காலை வெள்ளி
முளைத்த நான்காவது
நாழிகையில் பூமி
நான்கு பக்கமும்
சூழப்படும் நீரால்!
மக்கள் நீாின் மகிழ்ச்சியில்
மீனைப்போல வாழ்வாா்கள்.
2.
ஒற்றைக் கொம்புடன்
யானை விழியோடு
உன் வாசல் படிகட்டில்
அவள்!
கதவை நீ திறக்கும்
தருணம் பாா்த்து
மறக்க முடியாத
நினைவுடன்.
முகமூடிகளின் நகரம் – காஸ்மிக் தூசி கவிதை
எங்கிருந்தோ ஒருநாள்
ஊருக்குள் வந்துவிட்டான்
பாண்டாக்கரடியின்
முகமூடியுடன்,
ஒரு புதியவீரன்.
அவன்
ஒரு சாகசக்காரன்
மும்முறை
செத்துப்பிழைத்தவன்
என எவரோ சொல்ல
ஊதாநிற புகையைப்போல
ஊருக்குள் கசிந்த
முகமூடியின் மர்மம்
கால்வாயின்
பாலத்தைக் கடந்து
வடக்குத்தெரு முதல்
ஊர்க்கோடியின்
கடைசித்தெரு வரை
நிறைந்து விட்டது.
முடிவில்
வடக்குத்தெருவின்
எண்ணிக்கையில்
பாதிப்பேர்
பாண்டாக்கரடி
முகமூடிகள்
புலி வேடமணிந்த
வீரர்களின்
விளையாட்டுப் போட்டியில்
பார்வையாளர்களுள்
பாதிப்பேர்
பாண்டாக்கரடி
முகமூடிகள்.
ஊர்க்கோடியில்
புதிதாய்
தோன்றி விட்ட
முகமூடிக் குடியிருப்பில்
முழுக்கவும்
முகமூடிகள்.
முகமூடி அணிவது
ஊரின்
புது மோஸ்தராய்
மாறிவிட
முகமூடியின் மிடுக்கில்
முகமூடிகள்
நடக்கும் தெருவில்
முகமூடிகள்
ஒருவருக்கு ஒருவர்
முகமன்
சொல்வதில்லை.
தவறிப்போய்
முகமூடித்தெருவில்
நுழைந்து
யாருடைய
கவனமும் இன்றி
சாலையைக் கடந்துவிட்ட
சலிப்பில்
ஒர் இளம் வீரன்
ஆயாசமாய்
முகமூடி கழற்றும்
சிற்றுண்டிச்சாலையின்
மேசையில்
முதல்முறையாய்
முகமூடி அணிகிறான்
இன்னொருவன்.
ஆடையை மாற்றியபின்
முகமூடியை தாண்டியும்
படிந்துவிட்ட
நிரந்தர மிடுக்கை
அகற்றத் தெரியாமல்
கண்ணாடியின் முன்
திகைத்து நிற்கிறான்
வேறொருவன்.
முகமூடிகள்
தெருவெங்கும் மிதிபடும்
முகமூடிக்கடை வாசலில்
முகமூடியின்
வரைகலையை
குறைகூறி
பேரம்பேசி
வாங்கிச்செல்கின்றனர்
சிலர்
மற்றொரு
புதிய சிக்கல்
துப்புரவு செய்த
பழைய முகமூடிகளை
புதைப்பதா?
எரிப்பதா?
