எங்கிருந்தோ ஒருநாள்
ஊருக்குள் வந்துவிட்டான்
பாண்டாக்கரடியின்
முகமூடியுடன்,
ஒரு புதியவீரன்.
அவன்
ஒரு சாகசக்காரன்
மும்முறை
செத்துப்பிழைத்தவன்
என எவரோ சொல்ல
ஊதாநிற புகையைப்போல
ஊருக்குள் கசிந்த
முகமூடியின் மர்மம்
கால்வாயின்
பாலத்தைக் கடந்து
வடக்குத்தெரு முதல்
ஊர்க்கோடியின்
கடைசித்தெரு வரை
நிறைந்து விட்டது.
முடிவில்
வடக்குத்தெருவின்
எண்ணிக்கையில்
பாதிப்பேர்
பாண்டாக்கரடி
முகமூடிகள்
புலி வேடமணிந்த
வீரர்களின்
விளையாட்டுப் போட்டியில்
பார்வையாளர்களுள்
பாதிப்பேர்
பாண்டாக்கரடி
முகமூடிகள்.
ஊர்க்கோடியில்
புதிதாய்
தோன்றி விட்ட
முகமூடிக் குடியிருப்பில்
முழுக்கவும்
முகமூடிகள்.
முகமூடி அணிவது
ஊரின்
புது மோஸ்தராய்
மாறிவிட
முகமூடியின் மிடுக்கில்
முகமூடிகள்
நடக்கும் தெருவில்
முகமூடிகள்
ஒருவருக்கு ஒருவர்
முகமன்
சொல்வதில்லை.
தவறிப்போய்
முகமூடித்தெருவில்
நுழைந்து
யாருடைய
கவனமும் இன்றி
சாலையைக் கடந்துவிட்ட
சலிப்பில்
ஒர் இளம் வீரன்
ஆயாசமாய்
முகமூடி கழற்றும்
சிற்றுண்டிச்சாலையின்
மேசையில்
முதல்முறையாய்
முகமூடி அணிகிறான்
இன்னொருவன்.
ஆடையை மாற்றியபின்
முகமூடியை தாண்டியும்
படிந்துவிட்ட
நிரந்தர மிடுக்கை
அகற்றத் தெரியாமல்
கண்ணாடியின் முன்
திகைத்து நிற்கிறான்
வேறொருவன்.
முகமூடிகள்
தெருவெங்கும் மிதிபடும்
முகமூடிக்கடை வாசலில்
முகமூடியின்
வரைகலையை
குறைகூறி
பேரம்பேசி
வாங்கிச்செல்கின்றனர்
சிலர்
மற்றொரு
புதிய சிக்கல்
துப்புரவு செய்த
பழைய முகமூடிகளை
புதைப்பதா?
எரிப்பதா?