கவிதை

ஆகாச பூச்சியின் நீர்க்கட்டி

கோ . பிரியதர்ஷினி

ஊர் முழுக்க
கேட்கும் எல்லா
குழந்தைகளின் அழுகுரல்களும்
இடிந்து விழுகின்றன
வயிற்றின் மேலொரு
வரி விழாதவளுக்கு

நீர்க்கட்டிகளை ஒவ்வொரு கல்லாய்
தூக்கி போட்டு உடைத்தெறிந்து
உங்களுக்கென்று ஒரு சிசுவை
ஈனுவதற்குள்
நீலமித்து விடுகின்றன
கெட்டிக் கருப்பைகள்

வெப்பத்தை சுரந்து கொண்டிருக்கும்
உதடுகளிலிருந்து
நீள வாக்கியமாகவே
குறு வாக்கியமாகவே
வெளித்தள்ளும் சொற்களில்
இயற்கையாகவே வளைய நெளிகிறது
பேரன்பின் ஆகாச பூச்சியொன்று
என் நுனி வயிற்றில்

கிரீடங்களை
அழுத்தி எடுத்துக் கொண்ட
எல்லா புகைப்படங்களையும்
மாட்டித் தொங்க விடுவது போல்
எங்களினுள் ஆழமாக
சொருகிக்கொண்டிருக்கின்றன
மறைமுக ஆணிகள்

சிலைகளை போல சும்மாவும்
அசையாமலும்
அப்படியே நின்று கொள்ள
நினைவெண்ணுகிறோம்
கீழாடையும் மேலாடையும்
களவாடாத புனிதக் கைகள்
போற்றுதலுக்குரியவை

பரிகசம் ஒன்றை
பாத்திரத்தில் எடுத்து வந்து
ஸ்பூன்களால் ஊட்டி விடுகிறீர்கள்
தலை தூக்கிய போது
வானில் மங்கலாக
அசைகிறது குளியலறை
அந்தரங்க படமொன்று

முறிந்த விரல்களில்
எழுதுமொரு தடுமாறும்
எழுத்துக்களில்
நிறைந்திருக்கும் அஞ்ஞானமாய்
எல்லாருடைய
கழுத்திலும் தடித்து சிரிக்கிறது
தேர்ந்த கள்வர்களின் சாவி

சுவைகள்

கலையரசி

பள்ளிக்கூடம் முடிந்து
வீடு திரும்பும்
குழந்தைப்பருவம்
நினைவுக்கனிகளில்
இன்னமும் சுவைத்திருக்கிறது.

காலம் போட்ட தொரட்டிக்காம்பில்
குறும்புகளைக் கொப்பளித்திருந்தது
கோணப்புளியங்காயின் துவர்ப்பு.

சதைப்பற்றை மென்று துப்பிய
ஒவ்வொரு சீதாப்பழ விதையும்
ஏகாந்தங்களை
மண்ணூன்றி இருந்தது.

நண்பனுக்குத் தெரியாமல்
திருடித்தின்ற நெல்லிக்கனி
அவ்வளவும் கசந்து போனது
அப்பாவியாய்
அவன் தந்த தண்ணீரை
அருந்தியபோது.

தேர்வு நேரங்களில்
புன்னகை துறந்த உதடுகளுக்கு
ஆறுதலாய் முத்தமிட்டிருந்தது
நாவல் பழத்துச் சாயம்.

எளிதாய் ஒடிந்த
வெள்ளரிப்பிஞ்சுகளின் ஓசைகளில்
பிணக்கு நீங்கிய
வெள்ளந்திச் சிரிப்புகள்
எதிரொலித்தன.

உக்கிர வெயிலின் கூர்முனை
உவர்ப்பையும் கார்ப்பையும் தடவி
கீற்றுக்கீற்றாக
மாங்காய்களை நறுக்கித்தந்தது.

படிப்பு முடிந்த காலத்தில்
கனிகளைச் சுவைத்து
வெளியேறிய போது
இலந்தையின் புளிப்பிலும்
இனிப்பிலும்
ஊறிப்போய் இருந்தது
எதிர்காலக் கனவுகள்.

அதன் பின்னர்
எந்தப் பருவமும்
நரம்புக்கிளைகளில்
சுவைக்கவே இல்லை
இன்றுவரை.

 

 

அவள் இவள்

ஜெகதீஷ் குமார்

எட்டு விரல்களையும் படுக்கையாகக் கிடத்தி
இரு கட்டை விரல்களாலும்
ஒத்திக் கொண்டிருக்கிறாள் தொடுதிரையை

தவித்துத் திரியும் தங்கமீன்களைப் போல
இவள் விழித்திரையில்
மின்பிம்பங்கள் நடனமாடுகின்றன

மறுமுனைக் குறுஞ்செய்தியும்
இவள் தரும் எதிர்வினையும் இணைந்து
தொடர்க்கண்ணிகளாலான மாலையாகின்றது

விம்மித் தாழும் நெஞ்சுடன்
துண்டிக்க வழி தெரியாது
வளர்த்தபடியே செல்கிறாள்

எப்போதுமே அவள் தோழர்கள் இவளது
உள்ளங்கைக்குள்தான் இருக்கிறார்கள்
அவள் மிகத் தனியாக இருக்கிறாள்

தன்னுள் துள்ளும் குழந்தையை அடக்கி அழுத்தியபடி
இப்போதுதான் விலக்கிற்கு மெல்ல பழகிக் கொண்டிருக்கிறாள்

நச்சரிக்கும் தோழனின் கோரிக்கையை மனம் நாட
உடல் விதிர்ந்து ஒதுங்குகிறது

எமோடிகான்களால் பதிலளிக்கிறாள்
அவன் கேள்விகளால் தளும்பும்
திரையைப் பார்த்தபடி
அமைதி காக்கிறாள்
தன் இறுதிச் செய்தியை அனுப்பிவிட்டு
அணைக்கிறாள்
திரையையும் உள் உறையும் குழந்தையையும்.

 

அறியாமை

அனுஷா  

ஆர்ப்பரித்து கரைதொட முனையும்
வெண்பஞ்சு நுரைகளாய்
எத்தனை முறை நிகழ்ந்தும் அடங்காத பிடிவாதம்

இலக்கு எட்டப்பட்டதா
இல்லை பிரயத்தனமே இலக்கா
அளப்பரியா எல்லையினை ஆட்கொள்ளும் எத்தனிப்போ

முயற்சிப்பிழையா
அல்லது உருவகப்பிழையா
எதன் பிழை திருத்த இந்த தொடர்முனைப்பு

அலையெனும் வடிவினுள் உருவகித்துச் சிக்கிய
முழுநிறை பேராழியின் அறிவிலிப் போராட்டம்

———————————————————————

அடையாளப்படுத்தும் தனிமையின் பேருரைகள்

 

குறிஞ்சி மைந்தன்

 

தோலுரித்துப் போட்டச் சட்டையை
மீண்டும் கஞ்சி தேய்த்து ஊற வைத்துவிட்டு
பொழுது மறையும் நேரத்தைக் கணக்கிட்டு கொண்டே
கொடியில் உலர்த்திக் கொண்டிருந்தேன்.

மஞ்சள் வெய்யில் என் உடலை நனைத்தது
கொடியில் உலரவிட்ட என் ஆசைத்தோலும் கருக ஆரம்பித்தது.

நிர்வாணம் போர்த்திய உடையுடனே
உல்லாசப் பறவைப்போல்
காடுகளிலும் அடர்ந்த மரங்களிலும்
பயத்தை அப்பிருக்கும் பொந்துகளிலும்
நான் வாழ்வை வாழ்ந்து பார்க்கின்றேன்.

வெட்டுக்கிளிகள் சரசம் பண்ணுவதைப் பார்த்து
நான் என் மனைவியிடம் ஏமாந்துபோனதை
நினைத்து கண்ணீர் சிந்துகின்றேன்.

கண்ணைத் திறப்பதற்குப் பதிலாக,
விடியலைத் திறந்துவிட்டிருந்தேன்
நேற்று குகைப் பொந்தில் அலாதி வாழ்வை
வாழ்ந்துவிட்ட தருணத்தை எச்சில் விட்டுப் பார்க்கும்
ஒரு சிலந்தியின் பின்னலைப்போல் உணர்ந்து பார்க்கிறேன்.

எமது எழுத்துகளுக்கு வலி எடுக்கின்றன
குறைந்தது இரண்டொரு கவிதையாவது
அல்லது
நீலப்படம் பார்த்த மகிழ்வில்
என் படுக்கையில் படுத்துவிட்ட
ஓர் இளம்பெண்ணை நினைத்து, நினைத்து
காதலைக் குறித்த பேருடையாடலை
இப்பொழுதும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் என்னுடையை
பேச்சை, மொழியை, அடையாளத்தை
கேட்டுக் கொண்டிருக்கலாம்
அல்லது
கேட்காமலும் போகலாம்
நான் இன்னும்
இது குறித்தும்
இதனைக் குறித்தும் மட்டுமே
பேச ஆசைப்படுகின்றேன்.

தனிமை திட்டமிட்டுச் செய்த பெரு வலியுடன்
நானும் பெண்ணைக் குறித்த அதிகார மோகத்தை
கூடியமானளவு துடைத்தெரியப் பார்க்கின்றேன்.

இன்னும் சாத்தியப்பட்டுப்போக மறுக்கிறது
எனதான நெஞ்சுரம்.