கவிதை

தந்நலா, பெரியவரின் சொர்க்கம் – ஆகி கவிதைகள்

ஆகி

தந்நலா

தெய்வமா இவன்
கடவுளே
இவன் ஆடும் தாண்டவத்தைக் கண்டு
கண்டது படிக்கும் நான்
பொறுக்கமாட்டாமல்
எரிந்து விழுகிறேன்
சாம்பலாய் விழுந்ததும்
மூன்று நாழிகைகளில் போதும்
போதும் விட்டால் போதுமென்று
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழுந்தும் விடுகிறேன்
எரிந்து விழும் என்னை
பெருக்கியெடுத்து இவள் ஏன் ஒருபோதும்
குப்பைக்கூடையில் இடுவதில்லை
இட்டால் எப்படி உயிர்த்தெழுவதாம்
பைபிள் படிக்கும் இவள்
இவனது தாண்டவத்தைக் கண்டு
எரிந்து விழுகையில்
இவளது சாம்பலை
நான் பெருக்கியெடுத்து விட்டால்
மூன்று நாழிகைகளில்
எப்படி உயிர்த்தெழுவாளாம்
மீண்டும் மீண்டும் எப்படி
எரிந்து விழுவாளாம்
அப்படி சற்று தள்ளி நின்று
ஆட்டம் போடுங்கள் நடராசரே
அனைத்தையும் இயக்குபவள் தந்நலம்
எனில் என்னுள்ளும் அவளுண்டு
எச்சமாய் ஆட்டிவைக்கும்
ஊக்குவிக்கும் இச்சையாய்
பன்மையா குழந்தைமை
குழந்தையா இவன்
கடவுளே
இவன் எடுக்கும் அவதாரங்களை
சொல்லிமாளாது
ஆனாலொன்று இருவரும்
ஒரே சமயத்தில் எரிந்து
விழுந்துவிடாமல் கவனமாய்
இருந்துகொள்ளவேண்டும்
செயல் பிசிறினாலும்
பெருக்கியெடுக்கத் தயங்காக் குழந்தைக்கு
நடராசாத்தி இயக்கி குறித்த
இயலுணர்வு இருப்பினும்
பெருக்கியெடுப்பது குறித்து
என்ன தெரியப்போகிறது

oOo

பெரியவரின் சொர்க்கம்

கனவுகளை நனவாக்க
இயன்றோர்
தங்கள் மென்கனவுகளை
கடுங்கனவுகளாக்குகின்றனர்
கற்காலத்தில்
மென்னுடலைச் சாடியோர்
பிற்காலத்தில்
மின்னுடலைப் பாடுகின்றனர்
இல்லாததைத் தேடுவோர்
இல்லாததைத் தேடி
தேவையில்லாததைக்
கண்டடைகின்றனர்
வனவெளியில்
திரிந்துறங்கியோர்
விண்வெளியில்
கண்விழித்திருக்கின்றனர்
கனவுகளை நனவாக்க
இயலாதோர்
தங்கள் ராக்கனவுகளை
பகற்கனவுகளாக்குகின்றனர்
இதெல்லாமிருக்கட்டும்
பெரியவரொருவர் இருந்தார்
அவர் யெகோவாவின் சாட்சிகள்
கட்சிக்குத் தாவி சொர்க்கம் சென்றார்
சொர்க்கம் சென்றவர் செவத்த யெகோவாவைத்
தேடி கருத்த கிறிஸ்துவைக் கண்டார்
கிறிஸ்துவைக் கண்டவர்
சற்று தயங்கி நின்றார்
தயங்கி நின்றவரை கிறிஸ்து
அதோ அங்கே பாருங்களென்றார்
அங்கு சீலையைப் பார்த்து
பூரிப்படைந்தவர் அருகில் சென்று
கண்ணிமைத்து இதுவா யெகோவா
யெகோவியாக இருக்கும் என்கின்றார்

காட்சிப்பொருள் – சரவணன் அபி கவிதை

சரவணன் அபி

ஏன் போக வேண்டும்
யாரும் வழியறியா ஓரிடம்
ஏறும் இறங்கும் பயணிகள்
கலையாத சாம்பல் முகங்கள்
இறப்பதற்காக காத்திருக்கிறார்கள்
இறப்பதற்காக போகிறார்கள்
எரித்துவிட்டு
எரிக்கப்பட வருகிறார்கள்
இருப்பதினிமித்தம் மரணம்
இருண்மையின்
இருநிலைகளினிடையே
இழப்பதற்கேதுமற்ற
இந்த மனமும் உடலும்
போர்க்களங்களிலும்
போரல்லாத களங்களிலும்
பகடைகளாக மடிந்துபோகும்
அத்தனை உடலங்களிலும்
மரிக்காது நினைவில்
தரிக்கும் இவை
அவரவர் பிறந்த பூமி
யாரெங்கிலும்
எங்கேயேனும்
பாடிவிடுங்கள்
நேற்று நேர்ந்ததே
நாளையுமென
ஆயிரம் கோடி
உயிர்களை மூட்டியெரித்த
எங்கள் சிதைகள்
இன்று எரியும்
இந்த மண்
எங்கள் நிலம்

மரணத்திற்கெதிரான கலகம்- ஜிஃப்ரி ஹாஸன் கவிதை

-ஜிஃப்ரி ஹாஸன் – 

என் வீட்டின் எல்லா மூலைகளிலும்
பதுங்கி இருக்கிறது
யாரும் விரும்பாத மரணம்
எல்லாவற்றின் முடிவையும்
அது நுட்பமாய் அறிந்து வைத்திருக்கிறது
கனவுகளிலிருந்து அது என்னைத் தூரப்படுத்துகிறது
ஒரு பெண்ணை நேசிப்பதிலிருந்தும்
கலவியிலிருந்தும் அது என்னை தள்ளிவைக்கிறது

மரணம் பதுங்கி இருக்கும்
வீட்டு மூலைகளுக்குள்ளிருந்து
அதை ஓலத்துடன் விரட்ட முனைகிறேன்

ஜன்னல்களைத் திறந்து வைக்கிறேன்
கதவின் சாவித்துவாரங்களிலிருந்து
சாவிகளைக் கழற்றி வைக்கிறேன்
சுவர்க்கண்களின் திரைச்சீலைகளை விலக்கி வைக்கிறேன்
மரணத்தை அச்சுறுத்தும் சமிக்ஞைகளை
இடைவெளியின்றி எழுப்புகிறேன்
வீட்டின் வளர்ப்புப் பிராணிகளை
கலவரம் செய்யத் தூண்டுகிறேன்
பிரார்த்தனைக் கூடத்தை நிரந்தரமாகத்
திறந்து வைக்கிறேன்
எல்லா சுவர்க்கண்களிலும்
ஊதுபத்திகள் எரிகின்றன
உச்சாடனங்களை இடைவிடாது முணுமுணுக்குமாறு
சுவர்ப்பல்லிகளிடம் கேட்கிறேன்

அது யாரையும் வெளியேற்றும் நுட்பத்துடன்
வீட்டின் சுவர்களில்
சிமென்ட் கலவையாய் ஒட்டியிருக்கிறது
மூலைகளில் இன்னும் பதுங்கித் திரிகிறது
நான் உன்மத்தம் பிடித்தவனாகி
என்னில் மீந்திருக்கும் அச்சத்தால்
என் காலத்தையும் தடுமாறச் செய்கிறேன்
மரணம் என்னை நெருங்காமலே
உன்மத்தம் கொண்டு நான் மரணத்தை நெருங்குகிறேன்

எனதறைச் சுவர்கள் – வான்மதி செந்தில்வாணன் கவிதைகள்

வான்மதி செந்தில்வாணன்

எனதறைச் சுவர்கள்
கரிக்கோல் மற்றும் வண்ணக்கோல் கொண்டு
பிஞ்சுவிரல்களால் அலங்கரிக்கப்பட்டவை.
எனக்கு மிக பிடித்தமானவை.
எவ்வளவு குமுறலுடன் நுழைந்தாலும்
ஆற்றுப்படுத்தலை
மிகவும் கெட்டிக்காரத்தனமாகச் செய்து வருபவை அவை.
எப்போதும் எனதறைச் சுவரோவியம் குறித்த
ஒரு மிதகர்வம் எனக்குண்டு.

நேற்று
இரயில்வே ஸ்டேஷனை ஒட்டியிருந்த
பொட்டல் வெளியில்
நான்கு குச்சிகள் நட்டு
சுற்றிலும் துண்டுச் சீலைகளைத் தொங்கவிட்டவாறு
குடியமர்ந்திருந்தன
சில குடும்பங்கள். குழந்தைகள் உட்பட.

நடுவயதுப் பெண்ணொருத்தி
கற்கள் கூட்டி அடுப்பு மூட்டி
அதன்முன் அமர்ந்திருந்தாள்.
கரித்துண்டைக் கையிலேந்திய பிஞ்சுகள்
அவளது வெண்முதுகில்
ஓவியம் தீட்டியபோது
எனதறைச் சுவர்கள் என் காதில்
மெல்ல கிசுகிசுத்தன,
“சுவர் மட்டுமே சுவரல்ல”.

oOo

என் தனியறைச் சுவர்கள் மிகவும் அச்சுறுத்துகின்றன.
பெரும்பாலும்,
என்னுடன் நேரம் செலவிடவே
பெரிதும் விரும்புகின்றன.
ஆம். என்னுடன் மட்டுமே.
தவிர, அறைத்தோழர்களுடன்
கலகலப்பாய் பேசிச்சிரிக்கையில்
சுவரின் மொத்த வெறுப்பும்
என்மீது படிகிறது.
இப்படித்தான்
ஒரு பகல் அலுவல் முடித்து
ஓய்வெடுக்கும் பொருட்டு
அறையினுள் திடுமென பிரவேசித்தபோது
நான்கு சுவர்களும் மெல்ல மெல்ல நகர்ந்து
எனை நெருக்கி
தம்மைத்தானே அதிபலத்துடன் பூட்டிக்கொண்டுவிட்டன.
எனக்கே தெரியாமல், இவ்வளவு நாள்
மரணத்துடன்தான் வாழ்ந்து கொண்டிருந்தேன் என்பதை
முதன்முறையாக உங்களிடம்தான் பகிர்கிறேன்.

குமாஸ்தா பூனை – ராஜேஷ் ஜீவா கவிதை

ராஜேஷ் ஜீவா

அழுகின்ற குழந்தைக்கு
விளையாட்டு காட்ட
மியாவ் மியாவ் என்றவன்
பின்னர் உற்றார் ஊராரிடமும்
பூனை மொழியில் பேசினான்
கனைத்தும் செருமியும்
பெருங்குரல் எழுப்பியும்
பழைய குரல் திரும்பவில்லை
அவனைப் பார்க்கும் வேளைகளில்
தெருநாய்கள் உர்ரென்று முறைக்க
வீடு இருக்கும் காம்பவுண்டில்
எலித்தொல்லையே இல்லையென
மனைவி பெருமை பேசினாள்
மருந்துக்கும் புன்னகைக்காத
உயரதிகாரி சூத்தைப்பல் தெரிய
நேற்று சிரித்தே செத்தார்
வீட்டுப்பூனையொன்று
குளித்து தலைசீவி பவுடர் பூசி
அலுவலகம் போய் வருவதை
ஊர்ப்பூனைகளும்
காட்டுப்பூனைகளும்
பேசிக்கொள்வதாய் கேள்வி