சிறுகதை

பெயர்தல் – காலத்துகள் சிறுகதை

குளியலறைக்குள் நுழைவதற்கு முன் வெளியிலிருந்து எட்டிப் பார்த்தான். இந்த வீட்டிற்கு குடிவந்த முதல் வாரம், குளியலறையில் பக்கெட்டின் அருகில் உயிருடன் இருக்கிறதா இல்லையா என்பது சொல்ல முடியாத பருத்த தவளையொன்று படுத்துக் கிடந்தது. அப்பாவிடம் சொல்லி அதை விலக்கியபின் அடுத்த நாள் மதியம், ‘ரெண்டு நாளாச்சு, சம்மர்ல குளிக்காம இருந்தா வேர்க்குரு இன்னும் அதிகமாகும், ஸ்கின் டிசீஸ்தான் வரும்’ என்று அம்மா சொன்னபின்தான் குளிக்கச் சென்றான். அதன்பின் உள்ளே எந்த ஜந்துவையும் பார்த்ததில்லை. முதலில் கால்களிலும்,வயிற்றுப் பகுதியிலும் நீரை ஊற்றினான். குளிருக்கு உடல் பழகியது. பின் மேலுடம்பில். ‘நாங்களும் இங்கயே வந்துட்டோம்டா’ என்று சத்தம் போட்டுக் கொண்டே வந்த வினோத்தும், ப்ரித்வியும் வெளியே நின்று பேசிக்கொண்டிருக்க, நுரைத்திருந்த உடம்பில் நீரை ஊற்றியபின் உடம்பைத் துவட்டி விட்டு துண்டைக் கட்டிக் கொண்டு போர்ஷனுள் நுழைந்தான். சின்ன ஹாலுக்கு ஒரு புறம் பாத்திரம் வைக்கும் அறை, மறுபுறம் இரண்டு பேர் நிற்கக்கூடிய சமையலறை மற்றும் துணிகளும் மற்ற சாமான்கள் வைத்திருக்கும் அறை. அங்கு உடை மாற்றி வெளியே வந்தபோது ‘தங்கப்பழம் கடை அளவுக்கு ப்ரொவிஷன்ஸ் க்வாலிட்டி இங்க இல்ல’ என்று அப்பா சொல்ல, தக்காளி நறுக்கிக் கொண்டிருந்த அம்மா எதுவும் பேசவில்லை.

மாம்பலம் கிரி ஸ்ட்ரீட்டில் வசித்தபோது தங்கப்பழத்திடம்தான் மளிகை சாமான்கள் வாங்குவது, அடுத்த போர்ஷன் மாமியும் அங்குதான். முதலில் ‘தங்கப்பயம்’ என்று இவன் அழைத்தது திருத்தப்பட, பின் ‘தங்கப்பயம்னு சொல்லக் கூடாது, தங்கப்பழம்னு சொல்லணும்’ என்று கூறியதை இப்போதும் அம்மா நினைவு கூர்கிறாள். இந்த ஏப்ரல் மாதம் ரெண்டு முறை வந்து தவணை பாக்கியை கேட்டுக் கொண்டிருந்த கடைப்பையன், வீடு காலி செய்வதற்கு முதல் நாள் மாலைகூட வந்திருந்தான். அடுத்த நாள் ஞாயிறு மதியம் வீட்டைக் காலி செய்து, பொருட்களை முதலில் வண்டியில் அனுப்பி, ரெயில் நிலையத்திற்கு ஆட்டோவில் செல்கையில், ‘நா சொன்னேன்ல, சண்டே மத்தியானம் கடை கெடையாதுன்னு’ என்று அம்மாவிடம் அப்பா சொன்னதற்கு அம்மா எந்த பதிலும் சொல்லவில்லை. அதற்கு முன்பு திருவண்ணாமலைக்குச் செல்லும் 122ம், மாம்பலம் வழியே செல்லும் 5Bம் மட்டும் அறிந்திருந்தவன், தாம்பரம் வரை ரெயிலில் சென்று, அங்கிருந்து டி-சிக்ஸ்ட்டியில் செங்கல்பட்டிற்கு வந்தான். வண்டி வழியில் நின்ற ஒரு நிறுத்தத்தில், ‘இதான் சிங்கப்பெருமாள் கோவில் இங்கதான் ஸ்கூல் இருக்கு. நரசிம்மர் சக்தி வாய்ந்தவர் கும்புட்டுக்கோ’ என்றாள் அம்மா. அம்மா வேலை செய்யும் பள்ளி இந்த ஊரில்தான். பஸ்ஸிலிருந்து நரசிம்மரை பார்க்க முடியவில்லை, கும்பிட்டுக் கொண்டான்.

மஞ்சள் நிறப் ‘பக்கிள்’ பையில் புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டான். அருகில் இருந்த தகர பெட்டியில் ‘விக்னேஷ் லெண்டிங் லைப்ரரியின்’ மூன்று மூன்று கதைகளாக பயின்ட் செய்யப்பட்ட ரெண்டு ஆஸ்ட்ரிக்ஸ் மற்றும் ஒரு டின்டின் நூல்கள். அங்கிருந்து அப்பாவும் அம்மாவும் படிக்கும் வேறு இரு நூல்கள். மாம்பலத்திலிருந்து கிளம்புவதற்கு ஏழெட்டு நாட்களுக்கு முன் இறுதியாகச் சென்று எடுத்து வந்தவை. வினோத்தும், ப்ரித்வியும் ஏழரைக்கெல்லாம் ரிக்ஷாவில் பள்ளிக்குக் கிளம்பி இருப்பார்கள். இங்கு ஐந்து நிமிடத்திற்கும் குறைவான நடை தூரத்தில்தான்பள்ளி. ஒன்பது இருபதுக்கு கிளம்பினால்கூடச் சென்று விடலாம்.

எட்டே காலுக்கு அம்மா கிளம்பும் போது ‘லஞ்ச் எடுத்து வெச்சிருக்கேன். அப்பா ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போவா’ என்று சொல்ல ‘நோ மா ஐ வில் கோ மைசெல்ப்’ என்றான்.

‘பர்ஸ்ட் டே இல்லடா, இன்னிக்கு மட்டும் அப்பா வரட்டும்’

‘வேணாம்மா, த்ரீ பி செக்ஷன் ஐ நோ நா போயிப்பேன்’.

அம்மா அப்பாவை பார்க்க பேப்பரை படித்துக் கொண்டிருந்தவர் எதுவும் சொல்லவில்லை.

‘ரோட்ட க்ராஸ் பண்ணணும்டா, அப்பாவோடையே போ ‘ என்றவளின் வலது மணிக்கட்டை பற்றிக் கொண்டே ‘சின்ன ரோட் தானம்மா’ என்று சொல்ல, ‘அடமென்ட், பாத்து போ. கம் ஸ்ட்ரெயிட் ஆப்டர் ஸ்கூல். தெரியாத பெரியவங்க யாரவது கூப்ட்டா டோண்ட் டாக்’ என்று விட்டு கிளம்ப வீட்டின் பின்புறம் சென்றான். சுவற்றை ஒட்டிய பெரிய காலி மனை. கற்களும், மூன்று தென்னை மரங்களும் இருந்தாலும் இந்த மனையில் கிரிக்கெட் விளையாட முடியும். கிரி ஸ்ட்ரீட்டில் இவன் வீட்டிற்கு இரு வீடு தள்ளி வினோத் குடியிருந்த இடத்திற்கு முன்புறம் இதை விட மிகவும் சிறிய மனை உண்டு, அதில் செஞ்சுரி அடிப்பதெல்லாம் சாதாரணம்.

அதன் மறுமுனையில் அடுத்த தெருவுடன் இணையும் இடத்தில் இரு சின்ன ஓட்டு வீடுகளில் ஒன்றினுள் நுழைந்தவனுக்கும், அதன் வாசலில் இருந்த கயிற்றில் துண்டை உலர்த்தப் போட்டுக் கொண்டிருந்தவனுக்கும் இவன் வயதுதான் இருக்கும். இவன் சேர்ந்திருக்கும் பள்ளியில் படிப்பவர்களாக, ஒரே வகுப்பாகக்கூட இருக்கலாம். மாடியில் வசிக்கும் வீட்டு உரிமையாளரின் மகனும் இவனை விட சிறியவன். மற்ற இரண்டு போர்ஷன்களில் ஒன்றில் கைக்குழந்தை. இங்கு வந்தபின் தெரு முனையை அடுத்திருக்கும் கடைக்குச் சில முறை சென்றிருக்கிறான். பள்ளிச் சீருடை எடுக்க பஜாருக்கு ஒரு முறை. இந்த மாதம் முதல் தேதி மாலை அம்மாவுடன் ரெயில் நிலையத்திற்கு சென்று அங்கிருக்கும் கடையில் ‘அமர் சித்ர கதா’ வாங்கி வந்தான்.

இங்கு வந்தபின் அப்பா அம்மா தவிர யாரிடமும் பேசியதில்லை. ஒன்று வீட்டில், அல்லது இங்கு வந்து அமர்ந்திருப்பது. மனையின் வலது புறம் பாழடைந்த மண்டபம், அதையடுத்து மாட்டுக் கொட்டகை. அங்கிருந்துதான் வீட்டிற்கு பால் வருகிறது. மனையில் மாடுகள் போடும் சாணத்தை பத்து மணிக்கு மேல் அள்ளிச் செல்வார் மாட்டுக்காரர். திருவண்ணமலையில் தாத்தி வீட்டிற்கு
எதிரேதான் பால்காரர் சந்திரன் வீடு, பால் வரத் தாமதமாகும் நாட்களில் சாணி வாசம் நிறைத்திருக்கும் இடத்திற்குச் சென்று இவனே வாங்கி வருவான்.

ஒன்பதே காலுக்குக் கிளம்பினான். வீட்டின் கீழ்த் தளத்தில் உள்ள மூன்று போர்ஷன்களில் கடைசி இவனுடையது. மற்ற இரண்டைத் தாண்டி,குறுகிய நீளமான சந்தொன்றில் நுழைந்து அதைக் கடந்தால் தெரு. இருட்டான பின் கடைக்குச் செல்வதில்லை. தெருமுனையில் வலது புறம் திரும்பினான். நடந்தும், சைக்கிளிலும்பள்ளிக்குச் சென்று கொண்டிருப்பவர்கள். மெட்ராஸில் ‘தாத்தா’ என்று மட்டுமே அதில் செல்பவர்கள் அழைக்கும் முதியவர் ஓட்டும் ரிக்க்ஷாவில் பள்ளிக்குச் செல்வது. சென்ற வருட நவம்பரில் பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கும் போது சின்னமேட்டில் வண்டி ஏறிக் குலுங்க ஓரத்தில் உட்கார்ந்திருந்தவன் கீழே விழுந்து, அழுதபடி பள்ளிக்கு வந்தவனை ஸ்டாப் ரூமில் அமர வைத்த ராதா மிஸ் சமாதானப்படுத்தியபடியே இருந்தார். அன்று மாலை ஆறு மணியளவில் அடர்த்தியாக மழை பெய்து கொண்டிருக்க வீட்டிற்கு வந்து ‘மன்னிச்சுடுமா, மன்னிச்சுடுமா, தப்பாயிடுச்சு’ என்று குறுகிய உடலில் கைகூப்பியபடி சொல்லி கொண்டிருந்த தாத்தாவை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு வந்த அப்பா ‘ட்ரன்க்’ என்றார். இதுவரை வீட்டை விட்டு வெளியே பஜாருக்குச் சென்று வந்த ஒன்றிரண்டு முறையும் ரிக்க்ஷா தென்படவில்லை. ஊருக்கு வந்த அன்று பேருந்து நிலையத்தில் இருந்து குதிரை வண்டியில்தான் வீட்டிற்கு வந்தார்கள். வண்டியின் படிக்கட்டில் கால் வைத்து தடுமாறியபடி உள்ளே ஏறியவன், ஓட்டுபவர் பின்னால் மிக அருகில் அமர்ந்து குதிரையையே பார்த்து கொண்டு வந்தான்.

‘வாட் இஸ் தட் அரவுண்ட் இட்ஸ் அய்ஸ்’

‘டு மேக் இட் கோ இன் எ ஸ்ட்ரைட் லைன்’

குலுங்கிச் செல்லும் வண்டியில் அவ்வப்போது அதன் உட்புறத்தை பிடித்து கொள்ள வேண்டியிருந்தது. விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தின் அடியில் இருந்த வைக்கோலின் உறுத்தல். திருவண்ணாமலைல சந்திரன் வீட்ல இருக்கும்மா இந்த ஸ்மெல்’.

‘சும்மாரு’ முழங்கையை தட்டினார் அம்மா.

ஏழெட்டு வீடுகளையும் கடையையும் தாண்டியதும் சாலை பிரியும் இடத்தில் இடது புறம் திரும்பி பத்தடி நடந்தால், சாலையின் மறுபுறம் பள்ளி. ரோட்டை கடந்த சிறு கூட்டத்துடன் சேர்ந்து கொண்டு பள்ளியினுள் நுழைந்தவன், உடனேயே இடது புறம் திரும்பி, த்ரீ பியினுள் இருந்த கூட்டத்தை பார்த்தவாரே அதைக் கடந்து தாழ்வாரத்தின் இறுதி வரை, இரண்டாவது, ஒன்றாவது வகுப்பறைகளைப் பார்த்தபடி நடந்து சென்றான். அதையடுத்து இருந்த படிக்கட்டுக்களில் ஏறிக் கொண்டிருந்தவர்களில் பலர் பேண்ட் அணிந்திருந்தார்கள். திரும்பி வந்து தன் வகுப்பறை
வாசலில் நின்றிருந்தவனை கவனிக்காமல் புதிதாக உள்ளே நுழைந்து கொண்டும், வெளியேறிக் கொண்டுமிருந்தார்கள்.

மணி அடித்ததும் வகுப்பறை காலியாக ஆரம்பிக்க, உள்ளே நுழைந்தவன், அறையின் நுழைவாயில் பக்கமிருந்த மூன்று பேர் அமரும் இருக்கைகளில், இரண்டு புத்தகப் பை மட்டுமே இருந்த கடைசி இருக்கைக்கு முன்பிருந்த பெஞ்ச்சில் தன் பையை வைத்து விட்டு, வெளியேறிக் கொண்டிருந்த மற்றொரு மாணவனின் பின்னால் சென்று மைதானத்தில் ஸ்டேஜிற்கு முன் குழும ஆரம்பித்தவர்களில் இவனுடைய வகுப்பு வரிசையில் இணைந்து கொண்டான். அனைவரும் அடர் நீல நிற டைரி வைத்திருந்தார்கள். ‘அவர் பாதர் இன் ஹெவன்’ என்று ஆரம்பிக்கும் இறைவணக்கத்தில் ‘யுவர் கிங்டம் கம்’, ‘யுவர் வில் பி டன்’ போன்ற சில வரிகள் புரிந்தன. அதற்கும், பின் அனைவரும் சேர்ந்து -சிலர் டைரியை பார்த்தபடி – பாடிய இறை -‘வாக்கிங் வித் தி லார்ட்’ என்று ஆரம்பித்த- பாடலுக்கும் முணுமுணுப்பது போல் வாயசைத்தான். பள்ளிப் புத்தகங்களுடன் தந்திருந்த டைரி விடுப்பு எடுப்பதை குறிக்க தேவைப்படும் என்றுதான் அம்மா சொல்லி இருந்தாள்.

அசெம்ப்ளி முடிந்து வகுப்பறைக்குள் நுழைந்து தன் இடத்திற்குச் சென்றவனை அங்கு அமர்ந்திருந்த இருவரில் ஒருவன் ‘பெயிலா’என்று கேட்டதற்கு பதில் சொல்வதற்கு முன் ஆசிரியர் உள்ளே நுழைந்தார். வருகைப் பதிவேட்டில் முதலாவதாக இவன். இவனுக்கு அடுத்திருந்தவன் கார்த்தி, பெஞ்ச்சின் மறுமுனையில் முரளி. முன்பு படித்த பள்ளியில் ராதா மிஸ் ஆங்கில பீரியட் ஆரம்பித்திருப்பார். அடர் வண்ணச் சேலைகளில் பள்ளிக்கும் வருபவர், தாத்தியை விடச் சிவந்த நிறம். என்ன குறும்பு செய்தாலும் கடிந்து கொள்ள மாட்டார். முதலாம் வகுப்பு படிக்கும் போது இன்டர்வெல்லில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தவன் தனக்கு மிகவும் பிடித்த ஆசிரியை ராதா மிஸ்தான், அவர்தான் மிகவும் அழகு என்று சொல்லிய இரண்டொரு நாட்களுக்குப் பின் கழித்து மதிய உணவு இடைவேளையின்போது ஸ்டாப் ரூமிற்கு இவனை வரச் சொன்னதாக மகேஷ் தெரிவித்தான். உண்டு முடித்து அரைவட்டமாக அமர்ந்திருந்த ஆறேழு ஆசிரியைகளில், வனிதா மிஸ் ‘யூ லைக் ஒன்லி ராதா மிஸ்’ என்று இவன் நுழைந்தவுடன் கேட்க எதுவும் சொல்லாமல் இருந்தான். ‘ஆர் வீ நாட் ப்யுடிபுல்’ என்று மீண்டும் அவர் கேட்டு முடிப்பதற்குள் ‘நோ மிஸ்’ என்று இவன் சொன்னதற்கு அறையில் சிரிப்பு. ‘வாட் நோ’ என்று மீண்டும் கேட்டவரின் பார்வையைத் தவிர்த்து முகத்தை திருப்பியவன் முன் நாற்காலியின் வலது புறம் சாய்ந்து உள்ளங்கையில் தாடையை ஏந்தியபடி ராதா மிஸ். தலையை குனிந்து கொண்டான். ‘அப்போ யூ டோன்ட் லைக் அஸ் இல்லையா ‘ இப்போது சந்திரா மிஸ். ‘யார் நல்லா க்ளாஸ் சொல்லித் தருவாங்க’. அமைதியாக இருந்தான்.

‘அப்போ ஹி நீட் நாட் கம் டு அவர் க்ளாசஸ்’, ‘கரெக்ட்’, தொடர் குரல்கள். ‘ஸாரி மிஸ்’ என்றபடி நிமிர்ந்தவனை ராதா மிஸ் கையசைத்து அழைக்க அருகில் சென்றவனை மடியில் அமர்த்திக் கொண்டார். ‘ஸாரி மிஸ்’ என்று மீண்டும் ஆரம்பித்தவனை ‘டோண்ட் பி அப்ரைட், சும்மா சொல்றாங்க’ என்று இடைமறித்தவரின் காதில் இருந்த ஜிமிக்கியை பார்த்துக் கொண்டிருந்தான்.

இரண்டாவது பீரியட் முடிந்ததும் வகுப்பிலிருந்து வெளியேற ஆரம்பித்தவர்களில் இருந்த முரளியும், கார்த்தியும் இவனிடம் திரும்பி ‘பத்து நிமிஷம் இண்டர்வல், வரியா’ என்று அழைக்க அவர்களுடன் சென்றான். சிறுநீர் கழித்துவிட்டு மைதானத்திற்கு சென்றவுடன் ‘ந்யு அட்மிஷன்தான, எங்க படிச்ச முன்னாடி?’ என்ற கேட்ட கார்த்திக்கு பள்ளியின் பெயரைச் சொன்னான்.

‘எங்க இருக்கு’.

‘அட் மெட்ராஸ், கேகே நகர் ‘.

‘அப்ப செங்கல்பட்டுக்கே புதுசா’,

‘ எஸ், வி கேம் லாஸ்ட் மந்த்’.

‘என்னடா இங்கிலீஷ்லயே பேசற’ என்ற முரளியிடம் ‘இன் மை… அந்த ஸ்கூல்ல..’

‘தமிழ் பேசத் தெரியும்ல’

‘தெரியும் தெரியும்’

‘வீடு எங்கடா’ என்றான் கார்த்தி.

‘பிக் மணியக்கார ஸ்ட்ரீட்’

‘நான் சின்ன மணியக்காரத் தெருடா, அடுத்த தெருதான்’

‘ஒகே, ஒன் வீடு எங்க’ என்று முரளியிடம் கேட்க அவன் ‘என்.ஜி.ஓ நகர்.’

‘அப்பா என்ன பண்றார்’ என்றான்.

‘ஆபிஸர்’

‘எங்கடா’

‘ஆபிஸ்’ என்றிவன் சொல்லும்போது மணி அடிக்க வகுப்பறைக்குச் சென்றார்கள்.

உணவு இடைவேளையில் ‘வாடா போலாம்’ என்றான் கார்த்தி.

‘இல்ல கார்த்தி, எடுத்துட்டு வந்துட்டேன்’

‘வீட்ல போய் சாப்டலையா, பக்கத்துலதான வீடு இருக்கு, நா தினோம் போய் சாப்ட்டு ஒன்றரைக்கெல்லாம் வந்துடுவேன் முரளி இங்கதான் சாப்டுவான்’ என்றுவிட்டு கிளம்பினான்.

‘ஹவுஸ் ரொம்ப டிஸ்டன்ஸ்ஸா முரளி’ மைதானத்தில், ஸ்டேஜின் அருகே சாப்பிட உட்காரும்போது கேட்டான்.

‘ரொம்ப. அர மணி நேரம் நடந்து போணும்’.

ஸ்டேஜை ஒட்டி இருந்த கேட்டின் வழியே வந்துகொண்டிருந்த மாணவர்களைச் சுட்டி, ‘அங்க பின்னாடி என்ன க்ளாஸ், அந்த பசங்க ஷூஸ்,டைலாம் போட்டுக்கல’ என்று கேட்டான்.

‘அது தமிழ் மீடியம், அஞ்சாவது வரைக்கும். நமக்கு பத்தாவது வரைக்கும் இங்க’.

மேல் தளங்களை சுட்டியபடி ‘ஹை ஸ்கூல் க்ளாஸ் அங்க. உருளைக்கிழங்காடா, எடுத்துக்கட்டுமா’

‘எடுத்துக்க முரளி’ என்று அவனிடம் நீட்டியபடி ‘அப்ப லெவன்த்லேந்து’, என்றிவன் கேட்க, ‘அதெல்லாம் மெயின் ஸ்கூல்ல. நத்தம் பக்கம் இருக்கு. இது பிராஞ்ச் ஸ்கூல்.’

‘அது எங்க, தூரமா?’

‘பழைய பஸ்டேண்ட் தாண்டி போணும், தூரம்தான். சிக்ஸ்த்லேந்து தமிழ் மீடியம், அப்பறம் பதினொண்ணு பண்ணெண்டு எல்லாம் அங்கதான்’

டிபன் பாக்ஸ் கழுவி வகுப்பறையில் வைத்து வெளியே வரும்போது எதிரே கார்த்தி. ‘பெரிய மணியக்காரத் தெருல எங்கடா வீடு’

‘நம்ம ஸ்கூல் ரோட க்ராஸ் பண்ணிப் போனா இன்னொரு ஸ்கூல் இருக்குல, அதுக்கு ஸ்ட்ரெயிட்டா இருக்கற ரோட்ல, மிடில்ல இருக்கு’

‘டப்பா இஸ்கூலு, அப்ப நான் ஒன் வீட்டத் தாண்டிதான்டா என் வீட்டுக்குப் போவேன். ஒண்ணாவே போலாம் ‘

‘பாய்ஸ் அன்ட் கர்ல்ஸ் கம் அவுட் டு ப்ளே’ இறுதி பீரியட்டில் வழுக்கை மண்டையில் கொஞ்சம் நரைத்த முடிகள், நெற்றியில் குங்குமம் இட்டிருக்கும் ஸாருடன் அனைவரும் குரலெழுப்பிக் கொண்டிருக்க, விலாவில் தட்டிய கார்த்தி, ‘இங்க பாரு’ என்றான். கையிலிருந்த ரப்பரை தலையில் தேய்த்தபின், அதைப் பாட நூலில் இருந்த சித்திரத்தின் முகத்தில் வைத்து அழுத்தி எடுத்து இவனிடம் நீட்டினான். ரப்பரில் அந்த முகத்தின் அச்சு.

‘இது ஒனக்கு தெரியுமா’என்று கேட்டதற்கு இல்லையென்று தலையாட்டினான்.

‘நீ பண்ணு’

வாங்கித் தேய்த்தான். ‘நல்லா ஸ்ட்ராங்கா தேய்டா’. மற்றொரு முகத்தின் மீது வைத்தழுத்தி எடுத்தபோது ரப்பரில், சாயம் போனது போல் முகத்தின் அச்சு. ‘நல்லா தேச்சு அப்பறம் ஸ்ட்ராங்கா அழுத்தணும்டா’

ஸார் தொடர்ந்து சிறுவர், சிறுமியரை விளையாட அழைத்துக் கொண்டிருக்க மலங்கழிக்கும் உந்துதல். முதலாவது படிக்கும்போதும் இதே போல் நடக்க, மிஸ்ஸிடம் எதுவும் சொல்லாமல் பின்புற அழுத்தத்தை அடக்கிக் கொண்டிருந்தான். ‘மிஸ் மிஸ்’ பின்பெஞ்ச்சில் இருந்து மகேஷின் குரல். ‘இங்க பாருங்க மிஸ்’. காலில் மலம் வழிந்திருந்தது. அன்று புதன், முழு வெள்ளை சீருடை. பெஞ்ச்சுக்கள் அகற்றப்பட்டு, ஆயாவிடம் ஒப்படைக்கப்பட்டான். அவர் துவைத்துத் தந்த, இன்னும் ஈரம் காயாத டிராயரை அணிந்து கொண்டு கிளம்பியவனை ‘டோண்ட் கம் நியர்’ என்று ரிக்க்ஷாவில் செல்லும் போது வினோத்தும், ப்ருத்வியும் கிண்டல் செய்தார்கள்.

‘என்னாச்சு கைய நீவி விட்டுக்கிட்டே இருக்க’ என்ற கார்த்தியிடம் ‘பாத்ரூம் போணும்டா’ என்றான்.

‘அடக்கிக்கடா இன்னும் பதினஞ்சு இருவது நிமிஷம்தான் இருக்கும்’

‘இல்ல கார்த்தி, அது..’

‘டபுள்ஸ்ஸா’

‘ம்ம்ம்’

‘ஸார் இவனுக்கு வாந்தி வருதாம்’ என்று கார்த்தி எழுந்து சொல்ல ‘போ போ, நீயும் போ அவனோட கார்த்தி’ என்றார்.

‘என்னடா இவ்ளோ மெதுவா நடக்கற’

‘முடியலடா’

‘சரி பாத்து வா, தோ வந்தாச்சு, நா இங்க நிக்கறேன்’

வெளியே வந்தவன் ‘ரொம்ப தேங்க்ஸ்டா’ என்றான்.

‘வரேண்டா’ முரளி கிளம்பினான். இவனும் கார்த்தியும் சாலையைக் கடந்தார்கள். ‘இது நாடார் கட, நோட் புக்ஸ், பென்சில் எல்லாம் இங்க

கெடக்கும்’,

‘இங்கதான் நோட்லாம் வாங்கினேன், இது பேரு நாடார் கடையா?’

கடைக்கு எதிர்புறம் இருந்த பள்ளியை சுட்டிக் காட்டி ‘டப்பா ஸ்கூல்ல சாங்காலம், லீவ் நாள்ல வெளையாடலாம்’ என்றான் கார்த்தி.

சிறு சிறு குழுக்களாக விளையாட்டு நடந்து கொண்டிருப்பதை பள்ளியின் திறந்திருந்த கதவு வழியாக பார்த்துக் கொண்டே ‘ஏன் இத டப்பா ஸ்கூல்னு சொல்றாங்க’ என்று இவன் கேட்டதற்கு
தோளைக் குலுக்கினான் கார்த்தி.

‘இங்கதான் இருக்கேன், இந்த சந்துக்குள்ள போனா கடைசி போர்ஷன்’

வீட்டின் முன் நின்றபடி இவன் சொல்ல ‘நேரா போய் ரைட்ல திரும்பி பத்து பண்ணண்டு வீடு தாண்டி என் வீடு, கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்’ என்றவனை நோக்கி தலையாட்டிவிட்டு சந்தினுள் நுழைந்தான். போர்ஷன் வாசலில் வினோத்தும் ப்ருத்வியும் மற்ற நண்பர்களுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘வீ ஆர் ஆல்சோ கோயிங் டு ஸ்டே ஹியர், சேம் ஸ்கூல்’ வேகத்தை அதிகப்படுத்தி சந்தையும், அதையடுத்திருந்த இரண்டு போர்ஷன்களையும் கடந்து போர்ஷனை அடைந்தபோது அம்மா இன்னும் வந்திருக்கவில்லை. ‘காபி குடிக்கறியா?’ என்று அப்பா கேட்டதற்கு வேண்டாமென்று தலையாட்டினான்.

‘ஹவ் வாஸ் ஸ்கூல், தனியா போயிட்டு வந்துட்டியா’ பள்ளியில் இருந்து திரும்பியவுடன் கேட்டார் அம்மா.

‘குட் மா’

‘ப்ரெண்ட்ஸ் கெடச்சாச்சா’

‘எஸ், டூ. ஒன் இஸ் கார்த்தி, நெக்ஸ்ட் ஸ்ட்ரீட் சின்ன மணியக்காரத் தெருல இருக்கான். அனதர் முரளி, என்.ஜி.ஓ நகர்’

‘அதெங்க இருக்கு?’

‘தெரில, ரொம்ப டிஸ்டன்ஸ்ன்னு சொன்னான்’ இவனை அழைக்கும் குரல்.

‘இது கார்த்திமா’

‘உள்ள வாப்பா சின்ன மணியக்காரத் தெருலதான் இருக்கியா’

‘ஆமா’ என்றபடி உள்ளே வந்தவன் அம்மாவிடம் சுவாதீனமாக பேசிக் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தான். ‘டப்பா ஸ்கூல்ல பசங்க சாயங்காலம் வெளையாடுவாங்கன்னு சொல்றான்மா, போட்டுமா’ என்று இவன் கேட்க ‘ஓகே கோ. தெரு முனைல இருக்கற ஸ்கூல் தானே’ என்றார் அம்மா. சந்தைத் தாண்டி, தெருவிற்கு வந்தார்கள்.

‘அங்க என்ன கேம்ஸ் வெளையாடுவீங்க, க்ரிக்கெட்?’

‘எல்லாமே, கிரிகெட்டு, முதுகு பங்க்சர், கண்ணாம் பூச்சி, அட்டாக் எல்லாம்’

‘முதுகு பங்க்சர்ன்னா’

‘பிளாஸ்டிக் பால்ல முதுகுல அடிக்கறது, நீ வெளையாடினது இல்லையா’

‘நோ, அட்டாக் கூட வெளையாடினது இல்ல’

‘ஒத்தன் தொரத்துவான், மத்தவங்க எல்லாரும் ஓடுவாங்க. அவன் ஒன்ன தொட்டுட்டா நீ அப்படியே அங்கேயே நிக்கணும். அவன் மத்தவங்க, எல்லாரையும் தொட்டப் பின்னதான் நகரணும்’

‘ஓ, எவ்ளோ நேரம்டா நிக்கறது’

டப்பா ஸ்கூலை அடைந்திருந்தார்கள். ‘அட்டாக்’ ஆட்டம். மூன்றாவதாக இவன் பிடிபட்டபின் அடுத்து இன்னுமிருவர். இன்னும் ஓடிக் கொண்டிருக்கும் கார்த்தி ‘ஏண்டா அங்கேயே நிக்கற, போய் ஒக்காரு டா’ என்று சற்றுத் தொலைவில் இருந்து கத்த இவன் சென்றமர்ந்தான். அடுத்து அட்டாக்காகிய கார்த்தி இவன் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்தான்.

‘நீ யாரும் மூவ் பண்ணக் கூடாதுன்னு சொன்னியே’ என்றிவன் கேட்க ‘அதுக்காக அப்படியேவா நிப்ப, அது சும்மா சொல்றது, எல்லாரும் ஒடனேயே வெளில வந்துடுவாங்க ‘ என்றான். வீடு திரும்பும்போது ‘ஒன் வீட்டுக்கு… ‘

‘அப்பறம் கூட்டிட்டுப் போறேன்டா. நாளைக்கு எட்டே முக்காலுக்கு வந்துடறேன்’ என்றான் கார்த்தி.

‘ஏன் அவ்ளோ சீக்கரம்’

‘ஸ்கூல்ல வெளையாடலாம்டா, பிளாஸ்டிக் பால் வெச்சிருக்கேன். முதுகு பங்க்சர்’.

தேன் கிண்ணம் முடிந்ததும் ரேடியோவை அணைத்தார் அப்பா. மெட்ராஸில் இருந்து காலி செய்வதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியின்போது மூன்று புதியவர்கள் வீட்டிற்கு வந்து அது முடியும்வரை பார்த்து விட்டு, வெளியே அப்பாவிடம் பேசிவிட்டுச் சென்றார்கள். உள்ளே வந்தவர் ‘வாங்க ஒத்துக்கிட்டாங்க, நாளைக்கே எடுத்துக்கறாங்க’ என்றார். அடுத்த நாள் மாலை அவர்கள் தொலைகாட்சியை எடுத்துச் சென்றபின் இரவுணவுக்காக ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார் அப்பா. இவனுக்கு மிகவும் பிடித்த மசால் தோசையை பிட்டுப் பிட்டு வைத்து பாதி கூட சாப்பிடாமல் வந்தான். ‘மாமி வீட்ல போய் பாருடா’ என்று ஞாயிறு திரைப்படத்தைப் பார்க்க செல்லுமாறு அம்மா கூறியதற்கு எதுவும் சொல்லாதவன், அந்த இரவு யாருக்கும் தெரியாமல் அழுது முடித்து தூங்க வெகு நேரம் ஆனது.

விளக்கை அணைத்தபின் இருளில் தெரிந்த சுவற்றை நோக்கியபடி படுத்துக் கொண்டிருந்தான். ராதா மிஸ் இவனைக் குறித்து விசாரித்திருப்பார், விடுமுறைக்காக வெளியூர் சென்று விட்ட
வினோத்திற்கும் ப்ருத்விக்கும் ஒன்றும் தெரிந்திருக்காது. வினோத் பக்கத்து போர்ஷன் மாமியிடம் கேட்டிருக்கலாம். ஆங்கிலத்தில் இலக்கணப் பிழையின்றி எழுதினாலோ, பேசினாலோ இவன் கன்னத்தை வருடித் தருவார் ராதா மிஸ். பல முறை.

‘அம்மா வீட்ல இல்ல?’

‘ஸ்கூல் போயிட்டாங்கடா’

‘டீச்சராடா அவங்க, எங்க’

‘சிங்கப் பெருமாள் கோவில்ல, லெவன்த், ட்வெல்த்க்கு எடுக்கறாங்க எட்டேகாலுக்குலாம் கெளம்பிடுவாங்க’

‘ஓ, அப்ப அவங்களே ஒனக்கு சொல்லித் தந்துடுவாங்க, படிக்கலனா திட்டுவாங்களா’

‘அதெல்லாம் இல்ல’

‘தோ இத வெச்சுதான் முதுகு பங்க்சர் வெளையாடுவோம்’.

வெள்ளை ஆரஞ்சு நிறக் கோடுகள் போட்ட பிளாஸ்டிக் பந்து.

‘அப்பா எப்ப கெளம்புவாரு”‘

இப்ப… கெளம்பிடுவாரு. வெரி ஹார்ட்பா, அடிச்சா ரொம்ப வலிக்குமா’

‘அதெல்லாம் பழகிடும்’

பள்ளி மைதானத்தில் குறைவான பேர்தான் இருந்தார்கள். முரளி முன்பே வந்திருந்தான். ‘இவங்க த்ரீ ஏ’ என்று இருவர் அறிமுகமானார்கள். ‘ஷா பூ த்ரீ’ போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முரளிதான் முதலில் பந்தை வீச வேண்டும். மற்றவர்கள் இரண்டு மூன்றடி தள்ளிச் சென்றபின் பந்தை அவனிடம் வீசிவிட்டு ‘ஓடுங்கடா’ என்றபடி கார்த்தி ஓட ஆரம்பிக்க அவனைத் தொடர்ந்த இவன் தலைக்கு மேல் சென்ற பந்து தரையில் விழ த்ரீ ஏவின் பாலாஜி அதை எடுத்து இவனை நோக்கி வீசியதைத் தவிர்க்க திரும்பியவன் தோள் பட்டையில் மோதியது பந்து. ‘எடுத்து அடிடா’. முரளியின் குரல். பந்தை எடுத்துத் துரத்த ஆரம்பித்தவன், ‘என்னடா முதுகே தெரிய மாட்டேங்குது…. சரியா, ஹவ் டு த்ரோ’ என்று மூச்சிரைத்தபடி கேட்க ‘சும்மா அடிடா ஒடம்புல எங்கேயாவது பட்டா போதும்’ என்றான் பாலாஜி.

மதியம் முரளியின் பைண்ட் செய்யப்பட்ட ‘சோசியல் சயின்ஸ்’ புத்தகத்தை வைத்து க்ரிக்கெட். மாலை வீட்டிற்குத் திரும்பும்போது ‘என் வீட்ல வூட்டன் பேட் இருக்கு, மர பேட். அத வெச்சு வெளையாடலாம்’ என்றிவன் சொன்னதற்கு ,’அப்ப ரப்பர் பால்ல கூட விளையாடலாம், அஞ்சு மணிக்கு வரேன்’ என்று கார்த்தி சொல்ல ‘இன்னிக்கு ஒன் வீட்டுக்கு போலாமா’என்றான். ‘நாளைக்கு கண்டிப்பா கூட்டிட்டுப் போறேண்டா’.

போர்ஷனை வந்தடைந்ததும் உடை மாற்றி விட்டு பேட்டை எடுத்துக் கொண்டு பின்புறம் சென்று அதை சுழற்றிக் கொண்டிருந்தான். அப்பா இவனுக்கு ஏற்றார் போல் தானே செய்த பேட். அதன் வெளிப் பகுதியில் நீல நிற ஸ்கெட்ச் பென்னில் அகர வரிசையில் ஆட்டக்காரர்களின் பெயர்கள். முதலில் ‘ஆலன் நாட்’, இறுதியாக அப்பாவுக்கு ஆதர்ச ‘விவ் ரிச்சர்ட்ஸ்’. கிரி ஸ்ட்ரீட்டில் விளையாடிய அந்த சிறிய இடத்தில் கூட பேட்டிங் மட்டும்தான் இவனுக்கு ஓரளவுக்கேனும் இயல்பாக வந்தது, ப்ருத்வி பந்து வீச்சிலும், பீல்டிங்கிலும் வல்லவன். இவர்களை விட இரண்டு வயது மூத்த கிஷோரின் பந்து வீச்சை தொடர்ந்து ஒரு ஓவர் ஆட்டமிழக்காமல் சமாளித்தால் அது பெரிய சாதனை, பந்து வரும் திசையை ஒருவாறு கணித்து அந்தப் பக்கம் பேட்டை சுழற்ற ஆரம்பிப்பதற்குள் ஆடுபவனை தாண்டிச் சென்றிருக்கும். ப்ருத்வி கிஷோரின் பந்துகளை தடுக்கவும் மட்டுமில்லாமல், ‘ஸ்ட்ரோக்கும்’ செய்வான்.

மறுநாள் குளித்து முடித்தவுடன் உடைமாற்றிக் கொண்டு பேட்டை எடுத்து வாசற்கதவின் அருகே வைத்தான்.

‘நல்லா இருக்குடா, ஸ்கூலுக்கு எடுத்துட்டு போ வேணாம், நாளைக்கும் நாளன்னைக்கும் லீவ்வுல டப்பா ஸ்கூல்ல வெளையாடலாம்.’

‘வேற எந்த க்ரவுண்ட் இல்லையா’

‘ஸ்ரீனிவாசா தியேட்டர் கிரவுண்ட் இருக்கு ஆனா அண்ணனுங்கதான் வெளையாடுவாங்க ‘

‘அது எங்க இருக்கு’

‘ஸ்ரீனிவாசா தியேட்டர் போனதில்ல, நம்ம ஸ்கூல் தாண்டி ரைட்ல டர்னிங் வரும், அங்க தான் தியேட்டரு, பக்கத்துல கிரவுண்ட்டு’

‘ஓ இல்லடா இங்க வந்து எந்த சினிமாவும் போல. எங்க போர்ஷன் பின்னாடிகூட க்ரவுண்ட் இருக்கு, அங்க கூட விளையாடலாம்டா. முரளி வருவானா’

‘கஷ்டம்டா, அவ்ளோ தூரம் லீவ் நாள்ல விட மாட்டாங்க, பாலாஜி வருவான் அவன் கிட்டக்கதான் இருக்கான், மணி, ராஜா, அப்பறம் இன்னும் ரெண்டு மூணு பேரு ஒனக்கு தெரியாது யாரும் நம்ம ஸ்கூல் இல்ல ‘

‘ஓகே ரப்பர் பால் வெச்சிருக்கியா’

‘இருக்கு இருக்கு ‘

‘பின்னாடி க்ரவுண்ட் இருக்குலமா, அங்க நாளைக்கு க்ரிக்கட் வெளையாடப்போறோம்’ படுக்கச் செல்லும் முன் அம்மாவிடம் சொன்னான்.’நாளைக்கு எனக்கு ஸ்கூல் இருக்கு’ .

இருளை நோக்கியபடி படுத்துக் கொண்டிருந்தான். மரக் குச்சிகளை உடைத்து ஸ்டம்ப் செய்து விடலாம். மெட்ராஸில் பத்து பண்ணிரண்டு பேர் வரை சேர்ந்து விடுவார்கள். கார்த்தி எத்தனை பேருடன் வருவானோ… சாயம் போன வலது கைக்கான க்ளவுஸ் ஒன்றை வைத்திருந்த ப்ருத்வி, அதை இவனுக்கும் வினோத்துக்கும் மட்டும்தான் அணியத் தருவான். ஆடப் போகும் போதும்,
தொலைக்காட்சியில் பார்த்துள்ளது போல் அதை கையில் அணிந்து கொண்டு இல்லாத ஸ்ட்ராப்பை ஒட்டி மணிக்கட்டை சுழற்றி விட்டுக் கொள்வான்.

ஒன்பதரை மணிக்கு ஐந்து பேருடன் கார்த்தி வந்தான். எலுமிச்சை பழத்தின் அளவில் ரப்பர் பந்து. ‘இங்கதான் சொன்னேன்’ பின்புற மனையைச் சுட்டியபடி இவன் கூறியதற்கு, ‘எடம் இருக்கு, கல்லுலாம் இருந்தாலும் வெளையாடலாம்’ என்றான் கார்த்தி. ‘அந்த பசங்களும் இங்க தான் குடி இருக்காங்க’ மனையின் மறுமுனையில் இருந்த இரு வீடுகளில் ஒன்றிலிருந்து வெளிப்பட்டவர்களை சுட்டி இவன் சொல்ல ‘அது கோபாலு, கிருஷ்ணமூர்த்திடா, ட்வின்ஸ்ஸு. எங்க ஸ்கூல் தான், சிக்ஸ்த் படிக்கறாங்க’ என்ற மணிகண்டனிடம் ‘அப்போ நீ அவங்கள்ட்ட இங்க வெளையாடலாமன்னு கேளு, அவங்களும் வரட்டும்’ என்று கார்த்தி சொல்ல சுவற்றை தாண்டி மனையில் குதித்தவன் அவர்களருகில் சென்று பேசி, மூவருமாக திரும்பும்போது இவர்களையும் வருமாறு சைகை கட்டினான். ‘புதுசா குடி வந்துருக்கீங்கள்ள,நீ சவுத்துல ஒக்காந்துருக்கரத பாத்திருக்கோம்’ என்று கோபால் சொன்னதற்கு தலையாட்டினான். ஸ்டம்ப் நட்டு டீம் பிரிப்பதை பார்த்துக் கொண்டிருந்த சிறுவனையும் சிறுமியையும் சுட்டி அவர்கள் யாரென்று கேட்டதற்கு ‘சித்தப்பா பசங்க’ என்றான் கோபால். விளையாட்டு ஆரம்பித்ததும் அவர்கள் மனையின் ஓரத்தில் இருந்த மற்றொரு வீட்டினுள் செல்ல, சிறிது நேரம் கழித்து வெளியே வந்த பெண் இவர்களின் ஆட்டத்தை சில கணங்கள் கவனித்த பின் வேறு பக்கம் திரும்பி கத்த ஆரம்பித்தார்.

‘என்னடா எதோ கத்தறாங்க, நம்மளத்தானா போயிடலாமா’ என்று கார்த்தி கேட்டதற்கு ‘த்தா, அதெல்லாம் கண்டுக்காத, த்தேவ்டியா முண்ட’ தரையில் எச்சில் உமிழ்ந்தபடி கிருஷ்ணமூர்த்தி சொன்னான்.

மூன்று ஆட்டங்களிலும் இவனுடைய அணிக்கு வெற்றி. கார்த்திக்கு பேட்டை சுற்ற மட்டுமே தெரிந்தது, மணி ஓரளவிற்கு ஆடினான். கோபாலின் பந்து வீச்சை மட்டும் இவன் கவனத்துடன் கையாள வேண்டி இருந்தது. இருவரும் ஒரே அணியில் இருந்திருந்தால் இன்னும் எளிதாக வெற்றி கிடைத்திருக்கும்.

ஆட்டத்தின்போது பந்து ஒருமுறை அருகிலிருக்கும் மண்டபத்தினுள் சென்று விட, கோபாலுடன் அதை எடுக்கச் சென்றான். வேட்டி மட்டும் அணிந்திருந்த,கையில் புத்தகமொன்றை வைத்திருந்த முதியவர் பந்தை எடுத்து சுவற்றில் சாய்ந்தமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருக்க ‘பந்து விழுந்துடுச்சு தாத்தா, எடுத்துக்கறேன்’ என்று கதவில்லாத பின்புற வாயிலில் நின்று கொண்டு கோபால் சொன்னான். கையசைத்து அழைத்தவரின் அருகில் சென்றவர்களிடம் எதுவும் சொல்லாமல் பந்தை நீட்டினார். அவரருகில் திறந்திருந்த தகர பெட்டி முழுதும் புத்தகங்கள். ‘யார் இவரு, சோடா புட்டி கண்ணாடி’ என்று வெளியே வந்தவுடன் இவன் கேட்க ‘இங்க தான் ரொம்ப நாளா இருக்காரு, ஒரு கண்ணு கெடயாது. இந்த மண்டபம் அவருதுன்னு சொல்றாங்க, அவர் மட்டும் தனியா தங்கிருக்காரு.’ என்றான் கோபால்.

‘எப்படி .. பேக் சைட் டோர்ரே இல்ல, ஓபன்னா இருக்கு’

மதியம் டப்பா ஸ்கூலில் ஆடும் போது காலையில் வந்தவர்களில் மணி மட்டும் இருந்தான். அங்கு புதிதாக இணைந்தவர்கள் இளையவர்கள். ஆட்டத்தில் வெற்றி பெற காலையை விட குறைவான முயற்சியே தேவைப்பட்டது. விளையாடி முடித்து கிளம்பும்போது ‘ஒரு நிமிஷம் இரு’ என்று விட்டு நாடார் கடைக்குச் சென்று எதோ கேட்டு விட்டு திரும்பிய கார்த்தி ‘அஞ்சரை தான் ஆகுது, வரியா ஸ்ரீனிவாசா கிரவுண்ட்டு போலாம்’ என்று கேட்க, ‘ஒகே, ரொம்ப நேரமாகாதில்ல’.

‘கிட்டக்க தான், போயிட்டு ஒடனே வந்துடலாம்’

பள்ளியைத் தாண்டி சாலை இரண்டாக பிரியும் இடத்தில்,’தோ இந்த லெப்ட்ல வேதாச்சல நகர், ரைட்ல தான் ஸ்ரீனிவாசா தியேட்டர், ரோட்ட க்ராஸ் பண்ணலாம் வா’

தியேட்டரில் இருந்த போஸ்டரில் ‘காக்கி சட்டையை’ பார்த்தவாறே ‘ரஜினியா கமல்லா’ என்று கார்த்தி கேட்டதற்கு ‘ரஜினி தான்’ என்றவனின் தோளை இரு கைகளாலும் பற்றியழுத்தியபடி
எழும்பி குதித்து ‘டேய் சூப்பர்… செம ஸ்டைல், பைட்ல. கமல் சுத்த வேஸ்ட். போலிஸ் மாதிரியே இல்ல’

‘எஸ், ஒன்லி டேன்ஸ், பைட் பண்ணவே தெரியாது’

‘என்ன டேன்ஸ்ஸு. போன வாரம் தான் இங்க ரிலீஸ் ஆச்சு, இங்க புது படம்லாம் ரெண்டு மூணு மாசம் கழிச்சு தான் வரும். இதான் கிரவுண்ட்டு’ மைதானத்தில் இவர்களை விட பெரியவர்கள்
கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்க இவன் வயதையொத்தவர்கள் அதை பார்த்துக் கொண்டோ, ஓடிப் பிடித்து விளையாடிக்கொண்டோ இருந்தார்கள். ‘இங்க பெரியவங்கதான்
வெளையாடுவாங்க’

புற்தரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்து விட்டு திரும்பும் போது ‘ஒனக்கு ப்ரதர்ஸ் சிஸ்டர்ஸ் இருக்காங்களா’ என்று கார்த்தியிடம் கேட்டான்.

‘ரெண்டு அக்கா’

‘நம்ம ஸ்கூல்தானா’

‘… அலிஸன் ஸ்கூல்ல படிக்கறாங்க’

‘அது எங்க இருக்கு ‘

‘அதுவும் கொஞ்ச கிட்டக்கதான்..’

‘நாளைக்கும் எல்லாரும் வெளையாட வருவாங்களா, ஆப்டர்நூன் நெறைய பேர் வரலையே’

‘மணி வருவான், மத்தவங்க தெரில’

தெருவினுள் நுழையும் போது ‘ஒன் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னியே’ என்று கேட்டான்.

‘..நாளைக்கு கண்டிப்பா போலாம்டா’

சுவற்றை நோக்கித் திரும்பிப் படுக்கும் போது உடலெங்கும் வலி, மேற்புயங்கள் கனத்தன. பத்து பேர் இருந்தால் ஐந்து ஐந்தாக ரெண்டு டீம் நன்றாக செட் ஆகும். கார்த்தி வைத்திருப்பதை விட பெரிய ரப்பர் பந்து ஐந்து ரூபாய்க்கு கிடைக்கக்கூடும், அம்மாவிடம் பணம் கேட்கவேண்டும். அழுந்தும் இமைகள். மண்டப தாத்தாவிடம் என்ன புத்தகங்கள் இருக்கும். நாளை கார்த்தி வீட்டிற்கு செல்ல வேண்டும், முடிந்தால் என்.ஜி.ஓ நகருக்கும். கார்த்திக்கு வழி தெரிந்திருக்கும். நாளை மற்ற யாரும் வராவிட்டாலும் பின் வீட்டில் கோபாலும், கிருஷ்ணமூர்த்தியும் கட்டாயம் இருப்பார்கள். போர்வையை இழுத்து முகத்தை மூடிக் கொண்டான்.

பிலவப் பார்வை – கோ. கமலக்கண்ணன் சிறுகதை

கோ. கமலக்கண்ணன்

01

அவனுக்கு அப்படியொரு குணம் இருந்தது. அது குணமல்ல; அது பேராற்றல், ஆம். கூடுவிட்டு கூடு பாய்வது கேள்விப்பட்டிருப்பீர்கள். அதைப் போலொரு ஆற்றல். அவனுக்கு முன்பு – சில திறமை வாய்ந்த புனைவெழுத்தாளர்களைத் தவிர – யாருக்கும் அந்த திறமை இல்லாமல் இருந்ததால், அதை அவன் அதற்கிட்ட பெயரான `பிணைநுழை` என்றவாறே அறிந்துகொள்ள முடிகிறது.

அதைப் பற்றி விவரிக்கும் முன்னர், `பிணைநுழை` போன்ற அரிய, உண்மையான திறமைகள் கொண்டவர்கள் வாழ்வில் – பெரும்பாலும், இத்தகைய திறமைகள் ஏதோவொரு புள்ளியில் கண்டடையப்பட்டதாகவே இருப்பதையும், பிறப்பிலேயே இத்தகைய பேராற்றல் திறன்கள் இல்லாமல் இருப்பதையும் சுட்ட விழைகிறேன்.

இதில் முதன்மை பாத்திரம் செய்யும் அளப்பறிய, வியப்பூட்டும் செய்கைகளை ஒருவேளை நம்ப மறுக்கும் தற்குறியாக நீங்கள் இருந்தால், இதைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருப்பது, ஆழமாய்த் தொடர்ந்து வாசிப்பது போன்ற செயல்கள், யாருக்கும் எந்த நன்மையும் தரப்போவதில்லை; கூடவே, கடவுள் நம்பிக்கையுடன் ஒவ்வொரு சடங்குகளையும், மந்திரங்களையும் சொல்லிக் கொண்டு தனக்கு நன்மை விளையும் என்று நினைப்பதற்கும் அக்கதியே விளையும். ஒரு வேளை நான் சொல்லப்போவதையெல்லாம் நம்புபவருக்கும் எந்த நன்மையும் விளையப்போவதில்லை, அவர்கள் இதை நம்பினார்கள் என்பதைத் தவிர.

காசிநாதன் அவனது காலகட்டத்தின் இளைஞர்கள் அனைவரையும் போல்தான் அன்றுவரை வாழ்ந்து கொண்டிருந்தான். காலையில் தன் காலரை முகர்ந்து பார்த்துவிட்டு, தனக்கே சகித்துக் கொள்ள முடிந்ததால், தனது சட்டையினை மூன்றாம் நாளாக துவைக்காமல் அணிந்து கொண்டான். எப்படியும் நாளை துவைக்க வேண்டும். ஜீன்ஸ் ஒன்றும் பிரச்சனை இல்லை எப்படியும் பத்து முறைவரை எந்தவித குழப்பமுமின்றி அணியலாம்.

அலுவலகம் வெறும் அல்லல் தரும் இடமாகவே பெரும்பாலும் இருக்கிறது. காசிக்கு விருப்பமாக இருப்பது ஒளிப்படங்கள் எடுப்பதும், பறவைகள் மீதான ஆர்வமும் மனித அரவமற்ற இடங்களில் அவற்றை தரிசிப்பதும்தான். ஒரு அரைகுறை ஆர்னித்தாலஜிஸ்ட். அவன் தனது அழகிய உணர்வுகளை காமிராவில் பிடித்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் திளைத்திருந்த காலம் உண்டு.

தான் விரும்பாத ஒரு பணியில் ஒருவன் சிக்கிக்கொள்ளும்போது, அதன் சுமை பல மடங்காகிவிடுகிறது.  அவன் பார்த்த பணி, ஒரு எழுத்தர் பணியைப் போலவும், ஒரே விதமான கணக்குகளைத் தொடர்ந்து பின் தொடர்ந்து அதிலுள்ள பிரச்சனைகளைக் கண்டு சரி செய்தல் என்பதாக இருந்தது. அணிலைப் பிடித்து வந்து மூட்டைச் சுமக்க வேண்டும் என்று சொன்னது போல.

மதிய உணவுக்குப்பின், ஒரு மணிநேரம் கழித்து, வழக்கம் போல் அவனது இமைகள் தன்னை இழுத்து கண்களுக்குத் திரையிட முயன்று கொண்டிருந்தது. அவன் நெற்றியைச் சுருக்கி விரித்து கண்களை விசும்பிற்குக் காட்டிக்கொண்டிருந்தான். அப்படியே மெல்ல ட்ராகன் வடிவில் இருந்த ஒரு ஓவியத்தின் நடுவே வீற்றிருந்த சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான். ரொம்ப நேரமாக ஓரிரு நிமிடங்கள்தான் கடந்திருந்ததாக காட்டியது. சார்பியல் தத்துவத்தை எளிதில் விளக்க உதவும் இரண்டு உதாரண நிலைகள் – காதலிக்கு காத்திருப்பவனும், விரும்பாத அலுவல் செய்பவனும்.

கிடைக்கும் நேரம் தூங்க மட்டுமே அப்பழுக்கின்றி உதவுகிறது. ஒரு வேளை, தூங்கும் நேரமான ஆறு மணிநேரத்தில் ஓரிரு மணி நேரங்களைக் கடன் வாங்கினால், அடுத்த நாள் முதல் வேலையாக கணிணியில் அமர்ந்து தொலைக்கவேண்டிய நிலை அவன் கண்களை படுத்திதான் எடுத்துக் கொண்டிருக்கும். அதற்கு பயந்தே அவன் பல சுய பணிகளை, ஞாயிறன்று என்று தள்ளிப் போட்டுக்கொள்வான். ஞாயிறு வந்ததும், அவன் குறித்து வைத்த பணிகளில் முக்கால்வாசி பெரும்பாலும் அப்படியே கவனிக்கப்படாமலே எஞ்சும்; தள்ளி போடுவதற்குதான் அடுத்த ஞாயிறு வருமே.

02

ஒரு முறை தன்னிடம், கவனித்துக் கொள்ளும்படியாக அலுவலக செயலாளரால் விட்டுச்செல்லப்பட்ட, அழகிய பெண்குழந்தை `சித்திரவேணி`யின் அழுகையைச் சுழியாக்க நினைத்து, தன் முகத்தை பலவாறாய் நீட்டி மடக்கி, மங்கோலாய்டு போலவும், உதட்டைச் சுழித்து `ய்யூயூ…’ என்றவாறும் சத்தமிட்டுக் கொண்டே தன் காதுகளருகே கைகளை வைத்துக் கொண்டு, `வா, வா` என்றழைப்பதைச் செய்தபோது, தன் விழியின் பாவையைச் சுழற்றி ஏதோ படுமுயற்சியில் இருந்தபோது, அத்திறமையை நிகழ்த்தும், அது நிகழும் பிரபஞ்சத்தின் ஒரு புள்ளி அவனுக்குத் தென்பட்டது. அவ்விளையாட்டுகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட `சித்திரவேணி` அவனைக் கைதட்டி ஆர்ப்பரித்ததாலும், வெகு நாட்களுக்குப் பிறகு தன் முகத்தை பல கோணங்களில் இழுத்துப் பிசைந்ததில் அவன் முகத்தசைகளுக்குள் ஏற்பட்ட இரத்த ஓட்டம் தந்த புத்தெழுச்சியின் செம்மையாலும், அது ஒரு பேராற்றல் என்பதை அவன் அப்போது கவர்ந்து கொள்ளவில்லை.

இரவில், நீளுறக்கத்தின் நடுக்கடலில் அவன் அமர்ந்து அதே விளையாட்டை – அதாவது விழியின் இமையைத் திருப்பிவிட்டு வெள்ளையாக தன் விழியை மாற்ற முயன்ற பகுதியை மட்டும் – செய்து பார்த்தபோதுதான், அவன் தான் ஒரு நடுக்கடலின் மையத்தில், விழியின் அமைப்பில் இருந்த ஒரு படகின் கருவிழியாக இருக்கவேண்டிய இடத்தில் அமர்ந்திருப்பதை முழுமையாக உச்சத்திலிருந்து காண முடிந்தது. அந்த காட்சி தந்த சிலிர்ப்பாலும், ஒருவித பீதியாலும், உதறிவிட்ட கைகளைக் கொண்டு விழியை மீள்நிலைக்கிழுத்தான். மேலே பார்த்தான், பருந்தொன்று உச்சத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தது – அது அவனை இரையென்றெண்ணித்தான் அதைச் செய்து கொண்டிருக்கிறது என்று நினைத்ததால் அவன் பீதி நொடிக்கிருமடங்காக பெருத்துக் கொண்டிருந்தது.

இரண்டாவது முறை; அவன் தன்னுள்ளிருக்கும் அப்புதிரை – எப்போதும், புரியாதிருக்கும் வரை எதுவும் அப்படித்தானே அழைக்கப்பட வேண்டும் – துழாவ ஆரம்பித்து விட்டான். எப்படி இத்தனை நாள் இதை நாம் எழுப்பாமல், இதை பயன்படுத்தாமல் வாழ்ந்து கொண்டிருந்திருக்கிறோம், என்ற கேள்வியும் பரவசமும் அவனை உருட்டிக்கொண்டிருந்தது.

அவனது புதிர் மெல்ல அவிழ்ந்தது. அதனை தன் திறமைகளுள் ஒன்றாக மாற்றிக் கொள்ளத் தக்கவாறு, அது மலரென விரிந்தது; பாம்பென வளைந்தாடியது; கிளியென மூக்கில் சிவந்தது; இப்போதெல்லாம், அவன் தன் கைகளால் விழியிமையைத் திருப்பவேண்டியதாயில்லாமல், நேரடியாய் தான் குறிவைக்கும் பறவைகளின் உயிரில் நேரடியாக `பிணைந்து நுழைந்து`, தன் இமைபிறழ்வதை உருவாக்கிக் கொண்டான்.

அணில்களின் ஓட்டத்தில், வல்லூறுகளின் உயரத்தில், தேள்களின் ஒய்யாரத்தில் என அத்தனை மனிதனாயல்லாத உயிர்களோடும் அவனால் தன்னைப் பிணைத்துக் கொள்ள முடிந்தது. கிட்டத்தட்ட மூன்றேகால் வருடங்களை இப்படி உலகை ரசிக்க அவன் பயன்படுத்திக் கொண்டான்.

பறவைகளை ரசிக்கும் கண்களைப் பெற்றிருந்த காசியின் பார்வை, தற்போது பறவைகளுக்குள் இருந்து உலகை ரசிக்கும் நிலையில் இருந்தது. அவனுக்கு பறவைகளின் மூலமாக உலகினை ரசிப்பதே வெகு இன்பமாக இருந்தது. பறத்தல் ஒரு வித தளைகிழித்தல. உயரங்களை அணுகியும், விசும்பின் மையத்தில் உலவியும் அவன் கொண்ட உணர்வு, தான் எதையும் சார்ந்தவனல்ல; நான் நிலத்தை வென்றவன் என்பதுதான்.

உலகின் அத்தனை பறவைகளும் நிறைந்த ஒரு இளம்புற்குறுங்காட்டினை அமைக்க வேண்டுமென்ற பேராசையும் அவனுள் குடியேறியது. அப்போது, அவனுக்கிருந்த பொருளாதார அடிப்படையில், சில கிளிகள், ஒரு சில காதற்பறவைகள், புறாக்கள் ஆகியவற்றை மட்டும் தன்வீட்டில் வைத்துக்கொண்டு நாளுக்கு பத்துமணி நேரங்கள் செலவிட்டு தன் `பிணைநுழை` திறனை மென்மேலும் நுணுக்கமாக ஆக்கிக்கொண்டிருந்தான்.

அவன், உலகின் நுண்ணிய கண்களைக் கொண்ட மனிதர்களும், அவர்களது உயர்ரக கேமிராக்களும்கூட நுழைய முடியாத காட்சிகளை வெகு அநாயசமாகக் கண்டு நிகழ்ந்துகொண்டிருந்தான். அவன் கரண்டு கம்பியில் நின்ற காகத்தின் பார்வையில், மாடிப்படியில் இடதடமுலை மட்டும் தன் காதலன் உதடுகளுக்கு உணவிட்டவாறான கனவில் தன்னைப் பதமாய் விரல்களுக்குப் பதப்படுத்திக் கொண்டே, நின்று சொருகிய கண்களோடு தன் முனகலைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தை ரசித்து சுயமைதுனம் செய்ததை வெகு ஆர்வகதியோடும், பேருக்கு, கடற்குதிரையின் `பிணைநுழை`யில், தன்செவுள்களிலிருந்தே ஒளிவிடுவதாய்க் காட்சி தரும் சூரிய கதிர்பட்ட `கொலைத்தன மீனின்` நிழலைப் பிடிக்க நினைத்த காட்சியையும், தான் பார்த்த காட்சிகளிலேயே மிகவும் சிறந்தவை என்று குறிப்பிட்டு தன் முகநூலில் பதிவிட்டு அதையும் தன் சுயபார்வைக்கு மட்டுமென திருத்தி வைத்துக் கொண்டான்.

03

அவைகளைத் தொடர்ந்து, நாள்தோறும் அவனுக்கு உலகின் புதிர்களைக் காண்பதும், புதிர்களின் பதில்களைத் தேடுவதுமே ஆதியந்த தேடலாகி, உலகில் மனிதன் உருவாக்கிய, இயற்கையில் உருவாக்கப்பட்டதான, அத்தனை அழகினையும் தெவிட்டி மீண்டு, மீண்டும் தெவிட்டும் மட்டும் ரசித்தான்.

அவனுக்குள்ளே அகம் கடவுளாக மாறிவிட்டிருந்தது. அதையும் கடக்க முடியாமல் போனபோது அவனுக்கு ஏற்பட்ட சலிப்பும் போதாமையும் அவனைக் கொன்றுவிடுவது போலிருந்தது. மெல்ல மீண்டும் கடவுளைத் தேய்த்து மனிதனாகும் முனைப்பில், தன் எண்ணத்தைச் சாறுபிழிந்து முடிவில், இந்த திறனை வெகு சிறப்பான தொழிலாக நடத்த முடிவெடுத்தான்.

ஒவ்வொருவருக்கும் அவருக்குத் தேவையான, தொலைந்து போன எதையும் தேடிக் கண்டுபிடித்து கொடுக்கலாம் என நினைத்து அதற்கு விளம்பரப்படுத்தும் விதமாக `சகலமார்க்க யோகி` என்ற பட்டப்பெயரிலும் ‘குரு காசி’ என்ற பொதுப்பெயரிலும் அறியப்பட்ட ஒரு சிறிய குறி சொல்லும் தொழிலதிபராய் அமர்ந்தான். அவனது எதிர்பார்ப்பை விடவும் தொழில் வெகு எளிதாகவும் சூடாகவும் இருந்தது, துவக்கத்திலிருந்தே. கூடுதலாக, வாடிக்கையாளர்கள் தேடிவரும் பொருள் கிட்டும் பட்சத்தில் மட்டுமே தான் கட்டணம் வசூலிக்கப்போவதாக இருப்பதையும் தன் அறிக்கையில் தெரிவித்திருந்தது விரைவிலேயே அவனை ஒரு பெரும் புள்ளியாக்கியது அந்த வட்டாரத்தில்.

குரு காசி, ஒரு தடிமனான கிழவனின் பல்செட்டையும், ஒரு மகாபக்தன் தான் கோயிலில் தொலைத்த செருப்பையும் ஒரே நாளில் கண்டுபிடிக்க வேண்டிய கோரிக்கையை மின்னஞ்சலில் பெற்று, அதைக் கண்டுபிடித்ததும் கட்டணமாக அவர்களுக்கு இரண்டு விரல்களைக் காட்டியதும் – இரண்டாயிரம் கட்டணம் கேட்பதாய் எண்ணி- இருபதாயிரம் பெற்றதும் அவனது பொருளாதார நிலையைப் பன்மடங்கு பெருக்கிட துவக்கப் புள்ளியானது.

தன் தொழிலின் மீது பலருக்கும் சந்தேகம் விளைவது இயல்பே என்பதைப் புரிந்து கொண்டிருந்த காசி என்கிற குரு காசி தற்போது, மக்களை அதிகம் குழப்பிவிடக்கூடாது என்பதற்காக தனது உண்மையான திறமையை மறைத்து வைத்துக்கொண்டான். மாறாக கிளிகளைக் கொண்டு சில எழுதப்படாத ஓலைகளுள் ஒன்றை தேர்ந்தெடுத்து, தனக்கு மட்டுமே அவ்வோலையில் தெரியும் எழுத்துக்களைப் படிப்பதாக அனைவரையும் நம்பவைக்கும் தன் ஆகிருதி அசைவுகளைக் கொண்டு தொழிலில் செழித்தான்.

04

அந்த பைத்தியம் குரு காசியின் பிறப்பினைக் கேள்விக்குள்ளாக்கும் கெட்ட வார்த்தையை மந்திரமென சொல்லிக்கொண்டிருந்தது. பதற்றத்துடன் தன் மகனின் சித்தம் குறித்த அலைபாய்தல்களை விளக்கிக் கொண்டிருந்தாள் அந்த பைத்திய பாலகனின் அன்னை. அவளிடம் கனிவினை இழந்துவிடாத பார்வையுடன் அவனது நிலைகுறித்து அறிந்து கொண்டார் குரு காசி. அவளால், எந்த மருத்துவத்திலும், எந்த கடவுளாலும் சரி செய்யப்படாத அவனது பிரச்சனையின் தீர்வு குரு காசியிடமிருந்து மட்டுமே கிடைக்கும் என்று வலுவாக நம்பப்பட்டதுதான் காசிக்கு மேலும் சங்கடத்தைத் தந்தது.

சேவை மையத்தின் கோட்பாடுகளைச் சரிவர புரிந்து கொள்ளாமல் நிலைகுத்திய விழிகளோடும், மனக்கோணலோடும் இருந்த தன் மைந்தனின் பைத்தியக்காரத்தனத்திற்கு முற்றுப்புள்ளி இங்குதான் கிடைக்கும் என்று எண்ணி வந்த அன்னை, கடைசியில் குரு தன் நிலை விளக்கம் தந்து அவளிடம் அழாதகுறையாக அனுப்பிவைத்திடும்போது அவ்வன்னையின் சோகம் அவனையும் தொற்றிக்கொண்டது. குரு தன் நிழல் போன்ற தோற்றமளிக்கும் உடலிலிருந்து சொன்னது, ‘வெளியே தொலைந்தவர்களை கண்டறியும் வழிமுறைகளே எனக்கு இச்சுவடிகளால் அருளப்பட்டுள்ளது; தனக்குள்ளேயே தொலைந்து போன உன் பாலகனை கண்டறிய என்னால் இயலாது தாயே`.

பிளாஸ்டிக் செருப்பு நெருப்பில் உருகுவது போல உணர்ந்தான். அன்று முதல், இது போன்ற வழக்குகளை வாசலிலேயே தவிர்த்திட, தனக்கு உதவியாளராக அப்துல் என்ற அநாதையைச் சேர்த்துக் கொண்டான், அவன் அநாதை என்பதற்காக அல்ல; அவன் குருட்டு அநாதை என்பதற்காக. கூடுதல் சிறப்பாக அப்துலின் குள்ளத்தனம் இருந்தது. அது ஒரு விதமான மாயமந்திர சூழலுக்கு உதவும் தோற்றமாக இருந்தது.

இப்படி ஒரு இடத்தில் ஒரு குள்ளன் இருந்தால், அவனைப் பற்றிய பெரும் கற்பனைக் கதைகள் மக்களாலேயே புனையப்பட்டு அது நிறுவனத்திற்கு கூடுதல் பயனளிக்கும் என்பதையும் குரு காசி உணர்ந்து கொள்ள அதிக நாட்கள் எடுக்கவில்லை.

குள்ளனால் முடிந்தாலும், இந்த பணியை ஒரு குருடனால் முழுமையாகச் செய்ய முடியாது என்று முன்னரே புரிந்து கொண்டதால், அவன் அமர்ந்திருக்கும் இடத்தின் உச்சியில் தன் சேகரத்தில் இருந்த பல பறவைக்கூண்டுகளில் ஒரு கண்காணிப்பு புறா ஒன்றினை நிறுவியிருந்தான். கண நேரத்தில் அப்புறாவிலும், தன் உடலிலும், தொலைபேசியிலும் என பரிணமித்து உரிய ஆணைகளை அப்துலுக்கு அனுப்பிக்கொண்டு சிறப்பாக நிர்வகித்துக் கொண்டிருந்தான்.

ஒவ்வொரு முயற்சியும், ஒவ்வொரு பலனைத் தருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு படி முன்னேற்றமும் ஒவ்வொரு எதிரியை உருவாக்கிவிடுகிறது என்பது மட்டும் திண்ணம். உள்ளூர் வெளியூர் அரைச் சாமியார்கள், ரவுடிகள், அவர்களுக்கான வழக்கறிஞர்கள் ஆகியோரடங்கிய லாபியில் ஒரு ரகசிய கூட்டம் நடைபெற்றதே இவனது இந்த அசுர வளர்ச்சியை கட்டுப்படுத்தத்தான். ஆனால், அந்த கூட்டத்தில் முடிவானதென்னவோ அவனை தீர்த்துக்கட்டிவிடவேண்டுமென்ற தீர்மானம்தான்.

பெரும் பொருட்செலவில் ஒரு நிழலுலக கொலைகாரனை தேர்ந்தெடுத்து குரு காசியின் பறவைப் பண்ணைக்கு அனுப்பியிருந்தார்கள். ஆனால், இரண்டு நாட்களாக குரு காசி அந்த கொலைகாரனின் கண்களில் அகப்படவேயில்லை.  இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த கூலியின் உடல் ஊரின் பொதுவான ஒரு சாலை சிக்னலில், விடியற்காலையில் கிடந்தது. அவனது, இரண்டு கண்களும் அவன் இறப்பதற்கு முன் கிடுக்கியைக் கொண்டு பிடுங்கப்பட்டிருப்பது போல தெரிவதாக பின்னர் கண்டறியப்பட்டது.

ஒவ்வொரு முறையும் அவனைக் கொல்ல வரும்போதும் அவன் மாயமாய் மறைந்துவிடுவதும், கொல்ல வந்தவர்களே மரணிப்பதும், அவர்கள் கண்கள் பிடுங்கி எறியப்பட்டிருப்பதும், ஒரு பெரிய ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் எதிரிகள் தரப்பில் ஏற்படுத்தியது. இதை குறிப்பிட்டு போலீஸுக்கு தெரிவிக்கவும் இயலாது என்பதும், குரு காசியின் தொழில் எந்த சுணக்கமுமின்றி முன்பை விட செறிவாக நடைபெறுகிறது என்பதும் அவர்களை நோக்கி குரு காசி தந்த எச்சரிக்கையாகவே இருந்தது. அது, முக்கிய நிலை எதிரிகளை புண்ணில் தேய்த்த மிளகாய்ப்பொடியென வெறியேற்றி வைத்திருந்தது.

05

அப்துல், தனக்கு வந்த சில்லறைப் பணத்தை வைத்து ஒரு சிறிய வீடு ஒன்றினைக் கட்டியிருந்தான். சிறிய வீட்டில் அவன் உடலிலுள்ள இச்சைகளை சரிகட்ட ஒரு பேரழகியை தேர்ந்தெடுத்து வைத்திருந்தான். அவள், அவனால் அல்ல, உண்மையில் அவனிடமிருந்து ரகசியங்களை திருடிக்கொள்ள எதிரிகளால் அமர்த்தப்பட்டவள்.

அவள், பேரழகியாயிருக்க வேண்டிய அவசியமில்லையே என்றொரு விவாதம் நடந்தது. இல்லை, குருடர்களுக்கு களிமயக்கில் விரல்களில் பத்துகண்கள் முளைக்கும், உடலிணைவில் ஆயிரம் கண்கள் சிமிட்டும் என்றொருவாறு, தெளிவாக எதிர்வாதத்தைக் கிளப்பி தன் சொந்த செலவில் தன் மனைவியை விட அதிகம் தான் நேசிக்கும் பிரகதி என்ற பேரழகியை உள்நுழைப்பதில் கோவிந்தன் என்ற வழக்கறிஞர் வெற்றி பெற்றிருந்தார். அவள் மூலம், தன் கூட்டாளிகளைவிடவும் கூடுதல் செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம் என்ற தனிக்கணக்குதான் அவர் அவ்வளவு சிரத்தை மேற்கொள்ள காரணம்.

அவளும் குள்ளனுக்கும் குருடனுக்கும் செய்வதிலாத சேவைகள் செய்து, அவனிடமிருந்து கிடைத்த ஒன்றுக்கும் உதவாத செய்தியோடுதான் தினமும் திரும்பிட வேண்டி இருந்தது. மேலும், நேரடியாக கேட்கப்படும் கேள்விகளுக்கு அப்துல் வெகு திறமையாக புலன்விசாரணை செய்யும் கேள்விகளைத் தொடுக்கக் கூடும் என்றறிந்து அவள் அமைதி காத்தது அவள் அனுபவத்தைக் காட்டுவதாக இருந்தது.

அன்று தானும் திருதராஷ்டிரரின் மனைவி போல தன் கண்களை மூடிக்கொண்டு அவனைப் புணர விரும்புவதாக சொல்லி அப்துலைத் தூண்டினாள். அவள் விழியினை துணியால் மூடியதோடன்றி, பிரகதியின் கைகளையும் கால்களையும் கட்டிலின் நான்கு திசைகளிலும் பிணைத்து, அவளுடலை தன் காமத்தால் விழுங்கிக் கொண்டிருந்த அப்துல் தன் இச்சை தீர்ந்ததும் சற்று நேரம் அவள் கொப்பூளில் முகம் வைத்திருந்தான். அவள் சில முனகல்களும் பாராட்டுகளுமாக அவனை கொஞ்சிக்கொண்டிருந்தாள்.

அடுத்த நொடி தன் கழுத்தின் வளைவிடுக்கில் ஏதோ கூர்மை படுவதை உணர்ந்தாள். புரிந்துவிட்டது அவளுக்கு, தடுமாறினாள். அத்தனை உண்மையும் கொஞ்சம் ரத்தமும் வெளியேவந்தது அவள் தொண்டையிலிருந்து.

06

அன்றிரவு தன் ரகசிய அறையின் உள்ளே துயில் கொள்ளும் முன், வழக்கம் போல் அப்துலை அழைத்து அன்றைய பரிவர்த்தனைகளை கவனித்து அவனிடம் பேசி அனுப்பினான். பிறகு தன் உறக்கத்தை துவங்க எத்தனித்தான். சில வாசனைகள் ஒன்றுக்கொன்று தொடர்பான வாசனைகளின் நியாபங்களை நோக்கி அவன் மனதை இழுத்துச் சென்றது. எல்லாமே நியாபகங்கள்தான், நமக்கு தெரியாத ஒன்றை, அது இது போன்றதுதான் என்ற மாயையின் மூலம் நமக்கு தெரிந்த ஒன்றாக மாற்றுவது இந்த நியாபகங்கள்தான். வியந்தான்.

மெல்ல அவனது நியாபகம், அவனது நாற்றமடிக்கும் சட்டையை நோக்கி நகர்ந்தது. தற்போது, இருக்கும் இந்த பணியாவது தனக்கு பிடித்தமான பணிதானா என்ற எண்ணத்தில் நுழைந்தான். அன்று கிடைக்காத உறக்கத்தையெல்லாம் இன்றே தூங்கி கழிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. வந்ததுமே அவ்வெண்ணத்தின் மீது சிறு புன்னகையைத் தெளித்தான். நிகழ்விலிருந்து கனவிற்கு எப்போது வந்தேன் என்ற பிரித்தறிய இயலாத கனவொன்றில் சஞ்சரித்தான். ஆழ்துயில் கொண்டான்.

பூக்கள் நிறைந்த உலகம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கும் பிரம்மனாக தானிருப்பதைக் கண்டுகொண்டிருந்தான். அவனது படைப்பின் மூலம் உருவாகிக் கொண்டிருந்த ஞாலம் உலகின் அத்தனை சுகங்களையும், அழகுகளையும், அழகினைக் கண்டறியும் கண்களையுமே கொண்டிருந்தன.

திடீரென்று, அக்கனவில் புயலும், கோரங்களும், இடியும் என பதற்றங்கள் உருவானது. படைப்பாளி தவித்துக் கொண்டிருந்தார், என்ன குழப்பமானதென்று அறியாமல். திடீரென அவரது இதயப்பகுதியில் ஒரு ஈட்டி நுழைந்து, அவரது குருதி கொப்பளித்து அவ்வுலகின் பள்ளங்களை நிரப்பி செங்கடலாகிக் கொண்டிருந்தது.

திடுக்கிட்டு விழித்த காசியின் முன் பலர் ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்தனர். காசியால் நம்ப முடியவில்லை, இந்த அற்ப மனிதர்களால் பேராற்றல் பெற்றிருந்த என்னை எப்படி நெருங்க முடிந்தது என்ற கேள்வியே அவனை வலியை மீறிய வியப்பில் வைத்திருந்தது.

வழக்கறிஞர் கோவிந்தன், அமைச்சர் பிரகாஷம், ஆய்வாளர் ஷாஜகான் என அத்தனை எதிரிகளும் அங்கே தரிசனம் தந்தனர். எதிரியை ஒழிப்பதில் ஒருமைப்பாடு கொள்ளும் அவர்களை நோக்கி புன்னகைத்தபோது, பிணைநுழை கொண்டு பறவையின் உடலை அடைந்துவிட வேண்டும். அப்படிச் செய்தால் நான் பிழைப்பேன். இந்த உடல் மட்டுமே இவர்களிடம் சடலமாய் எஞ்சும். நான் உலகை ஆளும் ஒருவனாய் இருப்பேன் என்ற அவசர தேவையினையும் காசி உணர்ந்தான்.

`பிணை நுழை` யை முயற்சிக்கத் தொடங்கும் கணத்தில், ஒரு பெரிய கூராயுதம் வெகு சரியாக நெஞ்சைப் பிளந்தது. அடுத்த கணத்தில் நெஞ்சைக் கிழித்த கொடும் ஆயுதம், பின் நோக்கி சென்றது. கனவெனத் தோன்றிய நிஜத்தில், மிச்சமிருந்த உயிரின் உதவியால் திரும்புகையில் குனிந்து பார்த்த, அவன் கண்களை நம்பமுடியாமல் தவித்தான்.

இரு கண்களும் ஒளி பெற்றிருந்த அப்துல் அங்கே, சாமர்த்தியமான சிரிப்புகளுடன் கூடிய முகத்தில் இருந்தான். காசி மெல்ல தன் இருளும் கண்களோடு மல்லாந்து விழுந்தான். ஏதோ ஒரு கெட்ட வார்த்தை சொல்லி அப்துல் தன் குருவின் முகத்தில் மிதித்தான். காசியின் உடல் ஐம்பத்திரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு, ஒரு கிலோமீட்டருக்கு ஒன்று என்ற வீதத்தில் தூக்கி எறியப்பட்டது.

அப்துல் அளவிடமுடியாத செல்வத்திற்கு அதிபதியாக இருந்தான். பிரகதியையும் அவள் போன்ற பலரையும் தன் இச்சைக்கு துணையாக இருத்திக் கொண்டு தானிழந்த உயரத்தை தன் ஈகோவால் பூர்த்திசெய்து கொள்ள எண்ணிக் கொண்டிருந்தான். குள்ளன் தானே குபேரனாக வாழமுடியாத கரீபியன் கடற்கரையில் சூரியனை குளிராடி அணிந்து பார்த்தவாறே மகிழ்ந்திருந்த அவன் முகத்தின் மீது, ஒவ்வொரு 12 நொடிக்கும் உச்சியில் வட்டமிட்டுக் கொண்டிருந்த  ராஜாளி ஒன்றின் நிழல் பட்டுப் பட்டு சென்றுகொண்டிருந்தது.

ஆரண்ய கன்னி – கன்யா சிறுகதை

கன்யா

நர்மதையின் அருகே அமைந்துள்ள அழகான காடு. செடியும் கொடியும் மரங்களும் சிறு சிற்றோடைகளும் சூழலை ரமிக்கச் செய்கின்றன. மலர்களிலும் கனிகளிலும்தான் எத்தனை வகைகளைப் பார்க்க முடிகிறது இங்கே! மாதவி, தான் எப்போதும் அந்தந்தக் கணங்களில் வாழ்வதை தானே இரசித்தாள். மரப்பட்டைகளைக் கொண்டும் கீற்றுக்களைக் கொண்டும் மூங்கில் கழிகளைக் கொண்டும் அங்கே பர்ணசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், யாரையும் காணவில்லை. ஒருக்கால் அஷ்டவகனின் யாகத்திற்குச் சென்றிருக்கலாம். அவள் இங்கு வந்து ஐந்து நாட்கள் ஆகின்றன.

நான்கு மான்கள்- ம்ருணாளினி, ம்ருகனயனீ, ஹிரண்மயி, அக்ஷ வித்யா! எத்தனை அன்புடன் மாதவியைச் சுற்றி வருகின்றன! நான்கு வேதங்களின் குறியீடா?அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று பெண்களுக்குச் சொல்லப்படும் குணங்களா?அவளையும் இணைத்துக் கொண்டு ஐந்தழல் தவமா?அவளையே அறியும் ஆவலா? இன்று அதிகாலையிலேயே ம்ருணாளினி வந்து விட்டாள். நேற்றே இதற்கான அச்சாரமும் போட்டுவிட்டாள்.

மாதவி பேசத் தொடங்கினாள்-

‘ம்ருணா, நானும் காட்டின் உயிர்தான். உன்னைப் போல் கவரிமான் இனம்தான்.வெள்ளி எழுந்தாகிவிட்டது. அடர்ந்த மரங்களின் உள்ளே தாய்ப் பறவைகள் எழுந்து குஞ்சுகளைக் கொஞ்சிக் கொண்டே பாதுகாப்பாக இருக்கும் விதத்தினைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. புலரியின் முதல் கிரணங்களில் அவை இரை தேடி கிளம்பத் தயாராகும். முந்தும் பறவைக்குத்தான் அதிக உணவு கிடைக்கும். ம்ருணா, அந்தக் குஞ்சுகளுக்கு பறக்கத் தெரிந்தவுடன் தாய் அதை கவனிக்காது. ஆனால், அப்பொழுதுதான் பிறந்த குழந்தைகளை விட்டு தனியே வந்த தாய் நான்.’

ம்ருணாளினி ஏறிட்டுப் பார்த்தது.

‘ஓ, ம்ருகனயனீ, நீயும் வந்துவிட்டாயா? ஹிரண்மயி, அக்ஷ வித்யாவும் வந்திருக்கிறார்களா? புதுப்புற்கள் உங்களுக்காகவே பனித்துளிகளுடன் காத்திருக்கின்றன. நந்தினி பால் ததும்ப வந்து நிற்கிறாள் பார். என்ன கேள்வி கேட்க வேண்டும் என்னிடம்? என் அமுதூற்றை என்ன செய்தேன் என்றா? பாருங்கள், நந்தினி கன்றுடன் வரவில்லை. நினைத்து முலை வழியே நின்று பால் சுரக்கிறாள், நானும் என் மைந்தர் நால்வருக்கும் அப்படியே செய்தேன். பசும் புல் கூட வேண்டாம், என் கதைதான் வேண்டுமா உங்களுக்கு? சரி காலையிலேயே கதையா? பாதிதான் இப்பொழுது சொல்வேன்,சம்மதமா?’ என்று அவள் ஆரம்பித்தாள்.

‘என் பெயர் மாதவி. ஒவ்வொரு வனமாகப் பார்த்து வருகிறேன். எல்லா உயிர்களும் என்னை நேசிக்கின்றன. நான் எல்லோருடனும் நட்பு கொள்கிறேன்.’

‘மரங்களின் இலைகளின் ஊடாக ஆதவன் பூமியில் போடும் வட்டங்களும், காற்றில் இலைகள் அசைய அவை மாறும் உரு எழிலும், தெளிந்த நீல வானும் காலவர் வந்த அன்றைய தினத்தில் இல்லை. பொழியாத கரு மேகங்கள், இறுக்கமான காற்று, இனம் தெரியாத மனக் கலவரம் இப்படிப்பட்ட ஓர் நாளில் பிரதிஷ்டானத்தின் மன்னராகிய யயாதியிடம் அவர் வந்தார். முகத்தில் நல்ல களை. திருமணமாகாதவர். தன் ஆசானாகிய விஸ்வாமித்திரருக்குக் கொடுப்பதற்கான குரு தட்சிணையை மன்னரிடம் யாசகம் பெற்றுச் செல்வதற்கு வந்திருந்தார். அவருக்கு எண்ணூறு பால் வெள்ளைக் குதிரைகள் வேண்டும்-அவைகளும் ஒரு காது மட்டும் கறுப்பாக இருக்க வேண்டும். யயாதியிடம் அந்த மாதிரி ஒரு குதிரைகூட இல்லை; பொருள் தந்து வாங்கிக்கொள்ளச் சொல்ல கருவூலத்தில் நிரை இல்லை. மன்னருக்கும், மைந்தர்களுக்கும் கவலை; ஏழை அந்தணனுக்கு உதவ ஒன்றுமில்லை. அப்பொழுது நான் சொன்னேன், ’தந்தையே, உங்கள் கௌரவத்தை நான் காக்கிறேன்,’ மாதவி சற்று நிறுத்தினாள்.

‘ம்ருணாளினி, உன் அழகான கண்களை வியப்பில் விரிக்கிறாய், என்ன ஒரு வசீகரம்! ஆம், நான் இளவரசிதான். ஆனால், செயல்களின் எந்த விளைவும் என்னை அணுகாது. தழையும், புற்களும் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கின்றன? உங்களுக்கு அவை உணவு, எங்களுக்கு கண் கொள்ளும் விருந்து,’என்று சற்று நிறுத்திவிட்டு, ‘சரி,சரி, அக்ஷ வித்யாவைப் பார், தலையைச் சாய்த்து மேலே சொல் என்கிறாள். “தந்தையே, காலவர் என்னை அழைத்துச் செல்லட்டும்; என்னை மணம் புரியும் அரசரிடம் தனக்கான 800 குதிரைகளைப் பெற்றுக் கொள்ளட்டும்” என்றேன். என் தந்தை மகிழ்ந்தார். இவளுக்கு ஆண் மக்களைப் பெற்றெடுக்கும் வரம் ஒரு முனிவர் தந்துள்ளார். காலவரே, நீங்கள் இவளை அழைத்துச் சென்று அரச குலத்தில் மணம் செய்வித்து அதன் மூலம் உங்கள் குரு தட்சிணையைப் பெறுங்கள், என்றார் அரசராகிய என் தந்தை.’

‘மீதியை இன்று மதியம் சொல்கிறேன்,’ என்று மாதவி நகர்ந்ததும் மான்களுக்கு வருத்தம்தான்.

“ஒரு இளவரசி ஏன் காட்டில் இருக்கிறாள்? மனிதர்களைப் போல் நரிகள்கூட இல்லை.அந்தக் காலவன் தன் வேலை முடிந்ததும் இவளைக் கைவிட்டிருப்பான். ஆமாம், அதென்ன விந்தையான குரு தட்சிணை; எண்ணூறு வெள்ளைக் குதிரைகள், அவைகளின் ஒரு காது மட்டும் கறுப்பு. காட்டில் தவம் செய்யும் ரிஷிக்கு அவ்வளவு குதிரைகள் எதற்கு?அவர் இந்தக் காட்டிற்கு வருகையில் நம்முடைய கொம்பாலே முட்டித் தள்ள வேண்டும்,” அவைகள் பேசிக்கொண்டே புல் மேய்ந்தன.

‘எல்லா உயிர்களுக்கும் பிறரது வாழ்க்கை ஒரு சுவாரஸ்யம் போலும். இந்த மான்கள் என்னைப் புரிந்து கொள்ளுமா? அது கான் உயிரிகளின் சட்டத்தைக் கொண்டா, மனித நியதிகளைக் கொண்டா? அதிலும்கூட இப்பொழுது நடைமுறையில் உள்ள வழக்கங்களா, இல்லை தொன்ம மரபுகளா?’

மாதவி சிரித்துக் கொண்டாள். பிறர் புரிந்து கொள்ள வேண்டுமென நினைத்தாலே நம் செயலுக்கான அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறோம் என்றுதானே பொருள். ஆனாலும், உயிர் சுமக்கும் பெண்ணிடம் உலகம் அதிக அளவில் உண்மையை எதிர்பார்க்கிறதோ? எந்த உண்மை அது, நிஜமான மெய்யா, நிழலான மெய்யா? நிகழ்வுகளிலிருந்து பிரிந்து அதில் ஒன்றாமல் ஈடுபடுவது உண்மையின் வேஷம் போட்ட பொய் அல்லவா?அல்லது அதுதான் வாழும் கலையா? மனிதன் பிற உயிர்களைப் போல் நான்கு கால்களால் தவழாமல் நேரே நிற்கத் தெரிந்ததும் கனல் என்றும், கன்னி என்றும், கற்பு என்றும், வம்சம் என்றும், குலப் பெருமை என்றும் சிக்கிக் கொண்டு விட்டானோ? விலங்குகள் புணர்வதற்கென்று பருவங்கள் வைத்திருக்கின்றன, சில நியதிகளும்கூட.

அந்த ஆண் தூக்கணங்குருவி பார்த்துப் பார்த்து எத்தனை அழகாக கூடு கட்டியது தன் துணைக்காக. அதை அந்தப் பெண் குருவி ஏற்றுக்கொள்ளவில்லை. சில மாறுதல்களைச் செய்யச் சொன்னது- முக்கியமாக உள் தொட்டில் போன்ற அமைப்புடன் முட்டையிடவும், குஞ்சு பொரிக்கவும் அது சொன்ன மாறுதல்கள். தன் இனப் பெருக்கத்தில் அவைகள் கவனமாக இருக்கின்றன. அவைகளும்தான் காதல் கொள்கின்றன, சேர்ந்து இன்பமாக இருக்கின்றன. ஆனால், சில மனிதர்கள் காமத்தில் மட்டுமே ஆடி, அதுவும், பருவங்கள் பாராது, அழகுணர்ச்சியை இழந்தல்லவா வாழ்கிறார்கள்? பக்க விளைவாகக் குழந்தைகள்! விந்தையான உலகம் இது’.

மான்கள் வந்து அவள் சிந்தனையைக் கலைத்தன. ’என் கதையைத் தொடர வேண்டும் அதுதானே? அயோத்தி அரசர் ஹர்யஸ்வாவிற்கு ஒரு ஆண் மகனை  அதாவது வசுமானசாவைப் பெற்றுக் கொடுத்தேன். அவர் இருநூறு குதிரைகள் கொடுத்தார். பின்னர் காசி மன்னர் தேவதாசவிற்கு என் மூலம் ப்ரதார்த்தனா பிறந்தான். மேலும் ஒரு இருநூறு குதிரைகள். அப்புறம் போஜனகிரியின் அரசனான உஷினராவிற்கு சிபி பிறந்தான். மீதி இருநூறு குதிரைகளுக்காக விஸ்வாமித்திரருக்கு அஷ்டவகனைப் பெற்றுக் கொடுத்தேன்.’

“ஹர்யஸ்வாவிற்குச் சரி. மற்ற மூவருமெப்படி இதை ஒப்புக் கொண்டார்கள்?” என்றாள் ம்ருகனயனீ.

‘சென்ற பிறப்பில் நீ மனிதனாக இருந்திருக்க வேண்டும்; வாசனை போகவில்லை’ என்று சிரித்தாள் மாதவி.

‘ஒவ்வொரு குழந்தை பிறந்தவுடன் நான் கன்னியென ஆகும் திறம் பெற்றவள்; அதை வரமென்றுகூட நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். அதனால் நான் கற்புக்கரசி என கொண்டாடப்படவும் கூடும்.’

“நீ அதிகமாக பயமுறுத்துகிறாய். உங்கள் மனித சட்டங்கள் அப்படித்தானே இருக்கின்றன,” என்றாள் ஹிரண்மயி.

‘கோபத்தைப் பார். சாஸ்திரங்களின்படிதான் நால்வருடன் எனக்குக் கல்யாணம். அப்படியில்லையென்றால் பிறக்கும் மகனுக்கு அரசாளும் உரிமை கிடையாது. என் கருவறை வாயில் ஒரே ஒரு கூடலுக்குத்தான் திறக்கும். ஒரு விந்துவிற்கு மேல் அனுமதிக்காது. காதலுக்கும், காமத்திற்கும் இடம் கொடுக்காத இதை தாந்த்ரீகத்தில் ’யோனிக் காப்பு’ என்றும், ’கரு இருள் பூஜை’ என்றும் சொல்வார்கள். என் மகன்கள் பிறந்த மறு நொடி நான் அவர்களை விட்டுப் பிரிந்து விடுவேன். என்னுள் ஊறும் அமுது அவர்களை என் நினைப்பாலேயே வளர்த்து விடும் நான்காவது மகன் பிறந்த பிறகு காலவர் என்னை வாழ்த்தி வணங்கி கன்னியெனவே என் தந்தை யயாதியிடம் ஒப்படைத்தார்’.

“அதெல்லாம் தான் முடிந்துவிட்டதே, பின் ஏன் காட்டுக்கு வந்தாய்?’என்றாள் அக்ஷ வித்யா.

‘யயாதி மன்னர் எனக்கு சுயம்வர ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினார். பல அரசர்களுக்கு  என்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இருந்தது. முத்தான நான்கு புதல்வர்களை நான் பெற்று அளித்தாகிவிட்டது. ஒவ்வொரு மகனுக்கும் நினைப்பாலே பாலூட்டி வளர்த்தாகிவிட்டது. இனி ஒரு மண வாழ்க்கை எனக்கெதற்கு? வசுமானசா செல்வம் மிக்கவனாகவும், பெருமை படைத்தவனாகவும் இருக்கிறான்; இரண்டாம் மகன் ப்ரதார்த்தனா வீரம் மிக்கவன்; சிபி உண்மைக்கும், நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறான். அஷ்டவகா அஸ்வமேத யாகம் செய்து அரசாள்கிறான். எனக்கு கடமைகள், பந்த பாசங்கள் கிடையாது. நல்ல உலகிற்கான தவமும், நல்ல நட்பும் மட்டுமே தேவை. இரண்டும் காட்டில் எனக்கு கிடைக்கும் என்றவுடன் என் தந்தை என்னை என் விருப்பப்படி அனுப்பி வைத்தார். காடு காடுகளாகச் சென்று கொண்டிருக்கிறேன்,’ என்றாள் மாதவி.

“என் கேள்வி இது, மாதவி. நீ கன்னிகையென ஆகாவிடில் உன்னை தேவதாசாவோ, உஷினராவோ கல்யாணம் செய்திருப்பார்களா? அவர்களின் இந்த மனப்பாங்கினை நீ வெறுக்கவில்லையா?” என்றாள் ஹிரண்மயி.

‘ஒரு போதும் இல்லை. எல்லாம் ஒரு நிலத்தில் விளைந்த தானியமாக இருந்தாலும் தேர்ந்த நெல்மணி விதைகளை வைத்துத்தான் அடுத்த பட்டம் நடக்கும். மனைவி ஆன கன்னியினால்தான் அரச வழி நல் வாரிசென வளரும்,’ மாதவியின் பதில் புரியவே அவர்களுக்குச் சற்று நேரமாயிற்று.

“அப்படியென்றால் உன் தந்தை சொல்படி திருமணமாவது செய்து கொண்டிருக்கலாம் அல்லவா?” என்றாள் அக்ஷ வித்யா.

‘எனக்கு கலவியில் நாட்டமில்லை. கற்பிற்கு மனிதர்கள் சொல்லும் சமன்பாட்டில் நம்பிக்கையில்லை. நான் சக்தியின் குறியீடு.என் கருப்பையில் குடி கொண்டுள்ள கன்னித்தெய்வம் நான். திங்கள்தோறும் நான் அடையும் விலக்கின் குருதி மிகத் தூய்மையானது. பெண்ணெனப் பிறந்ததால் அன்னை என ஆனேன். அது என் பெருமை. அந்தந்தக் கருச் சுமந்த போதில் நான் அதைத் தவிர எதையும் நினைக்கவில்லை, ஒப்பீடு செய்யவில்லை.

‘பிறந்த குலத்திற்கு நேர இருந்த சங்கடத்தைப் போக்கினேன், மகன் அற்ற அரசர்களுக்கு நல்ல குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்தேன். குருதட்சிணை தர இயலாமல் தவித்த ஒரு அந்தணனுக்கு என்னால் முடிந்த உதவி செய்தேன். மகளாக,பட்டத்து இளவர்களின் தாயாக, ஒரு  கடன்பட்ட யாசகனின் உறவற்ற தோழியாக, விச்வாமித்திரரின் வாரிசினைச் சுமந்த பாக்யசாலியாக… இனி என்ன வேண்டும் எனக்கு? நான் நிர்க்குணா, நிர்மலா, நிசம்சயா, நிர்னாசா. நான் சரஸ்வதி எனும் ஆறு. பிறர் கண்களுக்குப் புலப்படாத தத்துவம் இலங்கும் தூய நதி. கலையாத தருணங்களைக் காலம் கலைக்காது குழந்தைகளே, நான் காட்டின் கன்னி அல்லவா?’

 

 

 

பிரைமரி காம்ப்ளக்ஸ் – சுரேஷ் பிரதீப் சிறுகதை

சுரேஷ் பிரதீப்

பிரைமரி காம்ப்ளக்ஸ் என்பதுதான் அர்த்தத்தோடு நான் அறிந்த முதல் ஆங்கில வார்த்தை. தொண்டையில் சதை வளரச் செய்யும் அந்த வியாதி எனக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் அளித்திருந்தது.

உடம்புக்கு முடியவில்லை என சொல்வதற்கு முன்னே கிருஷ்ணமூர்த்தி டாக்டர் கையில் ஊசியை எடுத்துவிடுவார். அவரெதிரே நெளிந்தபடி ஸ்டூலில் உட்கார்ந்திருக்கும் என்னுடைய நொய்மையான தோள்களை பிடித்தபடி எனக்கிருக்கும் கோளாறுகளை அம்மா சொல்லும். அம்மா பேச்சை நிறுத்தும் வரை அவரெதிரே பரப்பி வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு சிறிய கண்ணாடிப் புட்டியில் இருந்தும் மருந்தை ஏற்றுவார். ஈரப் பஞ்சால் ஊசி குத்தப் போகும் என் நோஞ்சான் கையை அவர் தேய்க்கும்போதே எனக்கு வலிக்கத் தொடங்கிவிடும். அதுவரை என்னை போட்டுக் கொடுத்து பெரிய ஊசியாக குத்த வைத்த அம்மாவின் இடுப்பை ஒரு கையால் வளைத்துக் கொள்வேன். அம்மாவும் முதுகைத் தடவிக் கொடுக்கும். அதன்பின் நடப்பது வேறு வகையான கொடுமை.

உடல்நிலை மோசமாகி ஆரம்ப சுகாதார நிலையத்தின் மாத்திரைக்கும் ஊசிக்கும் சுகக்கேடு சரியாகாதபோதுதான் கொரடாச்சேரிக்கு செல்லும் வாய்ப்பே கிடைக்கும். ஆனால் சேனம் கட்டப்பட்ட குதிரையென மருத்துவமனைத் தவிர எதுவுமே கண்ணில் பட்டுவிடாமல் அம்மா இழுத்துக் கொண்டு செல்லும். ஒருமுறை பேருந்து ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி வரும் அம்மாவின் தலையைத் திருப்பி, “அம்மா எனக்கு ஜொரம் சரியாயிட்டும்மா. புரோட்டா வாங்கித் தர்றியா” என்றேன். பின்னிருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பாதகத்தி சிரித்துக் கொண்டே, “ஆஸ்பத்திரி நெருங்க நெருங்க அப்டிதாம்புள்ள இருக்கும்” என்றாள். என்னுடைய புரோட்டா கனவு தகர்ந்து போனது.

அன்றும் வழக்கம் போலவே ஒன்றும் வாங்கித் தராமல் அரைபோதையில் வரும் என்னை தரதரவென அம்மா இழுத்துச் சென்றது. வீட்டிற்கு வந்ததும் பயண அனுபவத்தை ஐந்து நிமிடங்கள் கூட அசைபோட விடாமல் கொஞ்சமாக உப்பு போட்டு வடித்த சுடுகஞ்சியை கொடுக்கும் அம்மா. பூண்டு ஊறுகாய்தான் அம்மாவிடம் எதிர்பார்க்கக்கூடிய அதிகபட்ச கருணை.

ஆனால் அப்பாவுடன் கிருஷ்ணமூர்த்தி டாக்டரை பார்க்கச் செல்வது ஊசி போடும் ஒரு சம்பவத்தை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அவ்வளவு மோசமான அனுபவம் என்று சொல்ல முடியாது. என்ன ஒன்று, ஊசி போட்ட இடத்தை பற்களை கடித்துக் கொண்டு அப்பா தேய்த்துவிடுவது சில நேரங்களில் தோல் கரைந்து உள்ளிருந்து ஒன்றிரண்டு எலும்புகள் எட்டிப்பார்த்து விடுமோ என்ற பயத்தை அளிக்கும். வேண்டியவரை முகத்தை சோர்வுடன் வைத்துக் கொண்டால் அப்பா தின்பதற்கு ஏதேனும் வாங்கித் தருவார்.

அடிக்கடி சளி பிடிக்கிறது என்று என்னை தஞ்சாவூர் அழைத்துச் செல்லப் போவதாக அம்மா சொன்னது பேரானந்தத்தை கொடுத்தது. அதுவரை நான் தஞ்சாவூர் சென்றதில்லை. ஆனால் பெரிய ஊர், ராஜேந்திரன் என்ற பெரிய டாக்டர் என்றெல்லாம் என்னை கலந்து கொள்ளாமலே அவர்கள் பேசிக் கொண்டிருந்தது இயல்பாகவே பெரிய ஊசி என்ற எண்ணத்திற்கு என்னை இட்டுச்சென்றது. ராஜேந்திரன் எப்படி இருப்பார் என கற்பனை செய்யத் தொடங்கினேன். ராஜாத்தி அக்காவின் அப்பா பெயரும் ராஜேந்திரன் தான். ஏணி முறம் கூடை எல்லாம் செய்து கொடுப்பார். கூரிய நுனிகள் கொண்ட பெரிய மீசை வைத்திருப்பார். பார்க்க பயமாக இருக்கும். ஆனால் அப்பாவிடம் மிகுந்த பணிவுடன் பேசுவார். கிட்டத்தட்ட அதே பணிவுடன் என்னிடமும் பேச முற்படுவது சிரிப்பை வரவழைக்கும். அவரிடம் எப்படி ராஜாத்தி அக்கா சில்லுகோட்டிலும் கிட்டிபுள்ளிலும் எப்போதும் தோற்கடிக்கிறாள் என முறையிட முடியும் என பேசாமல் இருந்து விடுவேன். மேலும் அழாமல் அதைச் சொல்லவும் முடியாது. அழுதது தெரிந்தாலே அப்பா அடிப்பார்.

எப்படி யோசித்தும் ராஜேந்திரன் டாக்டருக்கு கூரிய மீசை உடைய முகமே மனதில் எழுந்தது. ஆனால் நான் கண்டது கருந்தாடியும் நுனிகள் தாழ்ந்த மீசையும் உடைய ஒரு சிகப்புச் சட்டை போட்ட வெள்ளை மனிதரை. அவர் அறையும் அவரைப் போலவே பளிச்சென்று இருந்தது. அந்த அறை அரக்கு நிற புடவை கட்டிய அம்மாவை மேலும் அழகியெனக் காண்பித்தது. அப்பா அவ்வறையின் அமைதியில் தன்னை பொருத்திக் கொண்டு அமர்ந்திருந்தார். ஒரு சிறிய புத்தகம் அளவிற்கு இருந்த என்னுடைய மருந்துச்சீட்டு கோப்பினை ஒரு பத்து நிமிடங்கள் நோட்டமிட்டார். வேற்றுகிரகவாசியைப் போலவோ அதீத கருணையுடனோ என்னைப் பார்க்காத ராஜேந்திரன் டாக்டரை எனக்கு மிகப்பிடித்து விட்டது. மேலும் பேசிக் கொண்டிருக்கும்போதே ஊசியில் மருந்தேற்றும் அநாகரிகம் எல்லாம் ராஜேந்திரன் டாக்டரிடம் இல்லை. வெறுங்கையோடு என்னருகே வந்து தொண்டை முழையை அழுத்தினார். லேசாக வலித்தாலும் இதமாக இருந்தது.

“எச்சி முழுங்கும் போது வலிக்குதாடா” என்றார்.

“ம்ஹூம்” என தலையசைத்தேன்.

“என்னடா பொம்பள புள்ள மாதிரி அபிநயம் காட்ற படவா” என கன்னத்தைக் கிள்ளினார். மறுமுறை கிள்ளமாட்டாரா என்றிருந்தது.

இருக்கைக்கு சென்றபின் “ஒன்னும் பயப்பட்ற மாதிரி இல்ல சார். பிரைமரி காம்ப்ளக்ஸ்தான். கொஞ்சம் வீக்கா இருக்கான். தெனம் அவிச்ச முட்ட கொடுங்க. ஒரு ரெண்டு மாசம் கழிச்சு வாங்க. சும்மா செக்கப் பண்ணதான். முட்ட குடுக்கிறத மட்டும் நிறுத்திடாதிங்க. உங்க திருப்திக்காக டேப்ளட் எழுதுறம்மா” என்று அம்மாவை பார்த்து சிரித்தபடியே எழுதினார்.

ஊசியே போடாமல் அனுப்பியதை என்னால் நம்ப முடியவில்லை. ரொம்ப சந்தோஷம் வரும்போது எனக்கு எலும்புச் சட்டகம் வேலை செய்யாது. அம்மாவின், அப்பாவின் கைகளில் மாறி மாறி துவண்டேன்.

“இங்கேரு இப்பிடியே எளஞ்சிகிட்டே வந்தீன்னா ஸ்டேஷன்லயே உட்டுட்டு ட்ரெயின் ஏறிடுவோம்”, என அம்மா மிரட்டிய பிறகு எலும்புகள் வேலை செய்யத் தொடங்கின. ஆப்பிள் மாதுளை அன்னாசி என பழங்களின் படமாக போட்டிருந்த ஒரு டானிக் பாட்டில் வாங்கினார் அப்பா. சப்பி சாப்பிடும் ஒரு இனிப்பு மிட்டாய். கவர்ச்சியான அட்டையில் வைக்கப்பட்ட சில அழகான பெரிய மாத்திரைகள். இவ்வளவு தான் ராஜேந்திரன் டாக்டர் எழுதியிருந்தார். அந்த டானிக்கை எழுந்ததும் யாருக்கும் தெரியாமல் ஒரு மூடி குடிப்பேன். குடித்த பிறகும் அளவு குறைந்திருக்காது. அதனால் மீண்டும் ஒரு மூடி குடிப்பேன். காலை சாப்பிட்ட பின் மற்றொரு மூடி. வியாழக்கிழமைகளில் மட்டும்தான் பள்ளியில் அவித்த முட்டை கொடுப்பார்கள். அதிலும் மஞ்சள் கருவை தனியாக எடுத்துவிட்டு கடைசி கொஞ்சம் சோற்றுடன் அதனை பிசைந்து தின்னும் ஒரு வழிமுறையை என் தோழர்கள் கண்டறிந்ததும் அதை பயன்படுத்துவதும் எனக்கு உமட்டலை தான் கொடுத்தது. ஆனால் மாலையில் பசியுடன் வரும்போது ஒவ்வொரு நாளும் அவித்த முட்டை காத்திருந்தது.

அதற்கு முன் ஒரு மனிதனின் நினைவு அவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்ததில்லை. சனிக்கிழமைகளில் மட்டுமே அண்ணன் வெளியே எடுக்கும் சீட்டுக்கட்டு மரத்தினால் ஆன கிரிக்கெட் பேட், கொழுந்து வாழை இலை இதெல்லாம் நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கும். ஆனால் ஒரு மனிதனை நினைத்து சந்தோஷப்படுவது அதுவே முதன்முறை. என் வகுப்பில் படித்த அன்பரசனையும் பிரதீப்பையும் நினைத்து நிறையவே பயந்திருக்கிறேன். அன்பரசன் கருப்பாக உருண்டையாக இருப்பான். நல்ல கவர்ச்சியான பெரிய உதடுகள் அவனுக்கு. எப்போதும் என்னை ஏளனத்துடன் “டேய் பென்சிலு” என வம்பிழுப்பான். ஒற்றைப்படை ரேங்க் வாங்குவதால் வாத்தியார்களின் சப்போர்ட் கிடைக்கும். அதனால் அன்பரசனை ஓரளவு சமாளிக்க முடியும். ஆனால் பிரதீப் அப்படி கிடையாது. நல்ல பாம்பைப் போல அவன் உடல் ஈரமாகவே இருக்கும். காலில் பெரிய பெரிய புண்கள் சில நாட்களில் பார்க்கக் கிடைக்கும். அவன் தமிழ்நாட்டில் பிறந்தவன் அல்ல. ஏதேனும் கன்னடக் கெட்டவார்த்தை சொல்லி திட்டுவான். நீண்ட குச்சி போல இருப்பான். இவர்கள் தனித்தனியே இருந்தபோது நான் அவ்வளவாக பயப்படவில்லை. ஒன்று சேர்ந்து கொண்டு என்னை நிறையவே அழவைத்தார்கள். காலையின் என் முதல் பிரார்த்தனை அவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்பதாகவே இருக்கும் பெரும்பாலும்.

ஆனால் இப்படியொரு மனிதனை நான் விரும்பியதில்லை. ராஜேந்திரன் டாக்டரிடம் செல்லப் போகிறோம் என்று சொன்ன அப்பாவை சட்டென்று ஓடிப்போய் கட்டிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. மறுமுறை அவருக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அப்போதுதான் இதுவரை அப்படி யாருக்கும் எதுவும் நான் கொடுத்ததில்லை என்று நினைவுக்கு வந்தது. சரி பரவாயில்லை என எண்ணிக் கொண்டேன்.

குறுக்கு கம்பியை கடித்தபடியே பேருந்து பயணம். ராஜேந்திரன் டாக்டர் சென்றமுறை வந்தபோது இருந்ததைப் போலவே இருந்தார். ஏதோ உள்ளறையில் போய் வேறு சட்டை போட்டுக் கொண்டு எதிரே அமர்ந்திருப்பவர் போல இருந்தார். என்னை வாசலில் பார்த்ததுமே “வாடா பயலே” என நாற்காலியில் அமர்ந்தபடியே கழுத்தை மட்டுமே உயர்த்திச் சொன்னார்.

கையைப் பிடித்தவர் “என்னாடா அம்மா தெனம் முட்ட கொடுத்திச்சா” என்றார். நான் அண்ணாந்து பார்த்து புருவங்களை உயர்த்தி மூடியபடியே வாயை நீட்டி “ம்” என நீளமாக ஆமோதித்தேன்.

“பய தேறிட்டான் போலருக்கே” என என் இடது கை மணிக்கட்டை நெறித்தபடி சொன்னார். வலித்தாலும் சிரித்தேன். ஆனால் நான் தேறிவிடவில்லை அப்போது. கரும்பளிங்கு மாதிரி இருக்கும் அன்பரசு போலவோ உரித்த பளபளப்பான வேப்பங்குச்சி மாதிரி இருக்கும் பிரதீப் போலவோ நான் மாறியிருக்கவில்லை.

ராஜேந்திரன் டாக்டர் இருக்கையில் அமர்ந்த பின்னும் என்னைப் பார்த்து சிரித்தார்.

“உங்க பையன் கம்ளீட்டா கியூர் ஆயாச்சு சார். இந்த டேப்லட் மட்டும் ஒரு ஒன் வீக் கண்டினியூ பண்ணுங்க அது போதும்” என்றபடியே ஏதோ எழுதத் தொடங்கினார்.

“ஒரு வாரங்கழிச்சு வரணுமா சார்” என்றார் அப்பா.

கண்ணாடி வழியாக கண்களை மட்டும் உயர்த்தி “உங்களுக்கு மூணு தரம் ஆஸ்பத்திரிக்கு போனாதான் திருப்தி வரும்னா தாராளமா வாங்க” என்றார் டாக்டர்.

அம்மா கூட கொஞ்ச நேரம் பற்களை வெளிக்காட்டி மூடிக்கொண்டது. நானும் சிரித்தபிறகே சட்டென்று அந்த உண்மை உரைத்தது. ராஜேந்திரன் டாக்டரை இனிமேல் பார்க்க வரமுடியாது. அந்த பிரைமரி காம்ப்ளக்ஸ் இவ்வளவு சீக்கிரம் ஏன் நீங்குகிறது என்றிருந்தது எனக்கு. மேலும் எட்டு வயதில் அந்தச் சொல்லை உச்சரிப்பது எனக்கொரு தன்னம்பிக்கையை கொடுத்திருந்தது.

நாங்கள் வெளியேறினோம். அடுத்த பெற்றோர் மகனுடன் உள் நுழைந்தனர்.

ராஜேந்திரன் டாக்டர் “வாடா பையா” என்று சிரிப்பது கேட்டது. அவர் சிரிப்பைக் கேட்டபிறகு பிரைமரி காம்ப்ளக்ஸ் சரியானது நல்லதுதான் என்று தோன்றியது. அம்மாவும் அப்பாவும் வருமுன்னே விடுவிடுவென இறங்கி சாலையோரம் போய் நின்றேன், வரவிருந்த அழுகையை கட்டுப்படுத்தியபடி.

பூதம் – காளி பிரசாத் சிறுகதை

காளி பிரசாத்

ஆம்புலன்ஸ் என்றால் பெரிய வண்டியாக இல்லை. சிறிய ஆம்னிவண்டிதான். ஆனால் வேகமாக போனது. அதன் பின்னாலேயே அந்த நீல நிற பைக்கும் சென்றது. அதைத் தொடர்ந்து இன்னும் சில இருசக்கர வாகனங்கள். ஒதுங்கி நின்ற இருசக்கர வண்டியோட்டிகளும் ஆம்புலன்ஸ் கடக்கும்போது அந்த சங்கிலியில் இணைந்து கொண்டனர். இருபுறமும் வண்டிகள் நிற்க, சிறப்பு தரிசன சீட்டு வாங்கிய வரிசையாக ஆம்புலன்ஸ் பின்னால் அவர்கள் சென்றுகொண்டிருந்தனர். முதலிடத்தை நீல நிற வண்டிக்காரன் விடுவதாய் இல்லை. அதை பிடிக்க ஒரு பெண்ணும் இன்னொரு வெள்ளை சட்டைக்காரனும் முயன்றார்கள். அதற்குள் இன்னொரு வண்டிக்காரன் குறுக்கே இடிப்பதுபோல் வர, நீலகண்டன் தன் உள்ளங்கைகளால் கண்களை மூடிக்கொண்டார். ஆண்டவன்தான் காக்கணும் என்று நினைத்தார். உடனே, கந்த சஷ்டி கவசத்தில் அவருக்குத் தெரிந்த அந்த நாலு வரிகள் ஞாபகம் வந்து முணுமுணுத்தார். பின் இயல்பாக எடுப்பதுபோல கைகளை விலக்கிப் பார்த்தார். கந்தன் காப்பாற்றியிருந்தது போலத்தான் இருந்தது. தான் மிகவும் பதட்டப்பட்டதை நினைத்து வெட்கப்பட்டவராக கைபேசியை எடுத்துப் பார்ப்பது போல தன்னை யாராவது பார்த்தார்களா என நோக்கினார். அர்னால்டு பார்த்திருப்பான் என்று தோன்றியது. அர்னால்டு பேருந்தை சற்று நகர்த்தி நிறுத்தி இவரைப் பார்த்து சிரித்தான்.

“ஒண்ணியும்ஆவல. ஆச்சுன்னா இன்னும் ட்ராஃபிக் ஆயிருக்கும்.”

“இந்த நெரிசலுக்கே அரையவராவது ஆவும்…”

இன்றும் அலுவலகத்திற்கு பத்து நிமிடங்களாவது தாமதமாகத்தான் போகப் போகிறார். அலுவலக வாழ்க்கையில் கடந்த ஆறு மாதங்கள்போல அவர் தாமதமாக போனதே இல்லை. எல்லாம் கிண்டி தலைமை அலுவலகத்திற்கு மாறிய பிறகுதான். இன்னும் ஆறு மாதங்கள்தான். அப்புறம் அவர் நினைக்கும்போது கிளம்பலாம் அல்லது கிளம்பாமலும் இருக்கலாம். எல்லாம் அவர் இஷ்டம்தான். அதுவரையில் இந்த மாநகரப் பேருந்தும் மாதப் பயணச்சீட்டும் அர்னால்டும் தணிகைவேலும் மாறப் போவதில்லை.

அலுவலகம் சற்று கும்மாளமாக இருந்தது. நாகராஜு இனிப்பு கொண்டு வந்திருந்தான். ஓங்கோலிலிருந்து சென்னைக்கு புது வீடு மாறியபின் இன்றுதான் வருகிறான்.

“ஸ்கூலுக்கு அனுப்பிட்டு அவளுக்கு போகவர வழியும் சொல்லிக் கொடுத்தாச்சு சார். நீங்க மட்டும் இல்லாட்டி பாஷையும் இடமும் தெரியாம ரொம்ப அலைஞ்சிருப்பேன் சார். இப்படி டக்குனு முடிச்சு கொடுத்துட்டீங்க” சமாளித்தாலும் அவன் குரல் சற்று இடறியது.

“ரொம்ப சந்தோஷம்ப்பா…” பதிலுக்கு இவரும் ஆங்கிலத்தில் சொல்லி தோளில் தட்டிக் கொடுத்தார்.

பின் செருமியபடிக்கே லட்டு ஒன்றை எடுத்து வாயில் போட்டபோது கைபேசி சிணுங்கியது. லட்டுத்தூள் தொண்டையிலே சிக்கி புரையேறியது. ‘அந்த சனியன் பிடிச்ச கொரங்கு எதாவது பண்ணிருப்பானா? அல்லது காலையில் பேசின விஷயந்தானா?’ இரண்டு பூதங்களில் எந்த பூதம் என தெரியவில்லை.

காலையில் காலண்டரைக் கிழித்து வியாழக்கிழமை குருவுக்கு நல்லெண்ணை விளக்கு ஏற்ற வேண்டுமென்று நினைத்தபோது அகிலா சமையற்கட்டிலிருந்தபடியே கூறினாள் “இன்னைக்கு எப்படியும் போயி நைச்சியமா பேசிட்டுவாங்க… ஒண்ணு கிடக்க ஒண்ணு பண்ணிடாதீங்க… இல்லாட்டி கிருஷ்ணமூர்த்திய கூப்புட்டு போங்க.. வேணும்னா மாப்பிள்ளைய வர சொல்லி பிரியாகிட்ட சொல்லவா? சாயங்காலம் எத்தன மணிக்குன்னு சொல்லுங்க. அவருக்கு இப்பவே சொன்னாத்தான் கிளம்பி வர சரியா இருக்கும்.. நான் வேணும்னா கேட்டு சொல்லவா…?”

”இன்னைக்கு வியாழக்கிழமையா இருக்கு கோயிலுக்குப் போகணுமே.. வேணும்னா நாளைக்குப் போறேன்”

“கோயில் கெடக்கு, மொதல்ல இதை பாருங்க.. நாளைக்கு சரிபடாது. சனி ஞாயிறுன்னு எங்கயாவது கிளம்பிடுவாங்க”

இன்று எப்படியும் குருவுக்கு நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற வேண்டும் என்று நீலகண்டன் மீண்டும் நினைத்துக் கொண்டார். பல வருடங்களாக அவர் வியாழனன்று கோவிலுக்குப் போவது வழக்கம். அது ஏன் தடைபடவேண்டும்.

“ஆங்… சொல்லும்மா.”

“ஆபீஸ் போயாச்சா? ஆபீஸ்ல கேக்கிறேன்னீங்களே.. என்ன சொன்னாங்க? எத்தினி மணிக்கு கிளம்பணும்?”

“சாயங்காலம் நானே போயிட்டு வரேன்… யாரும் வர வேணாம்.”

“ஆமாம்… என்னன்னாலும் உங்க தம்பி. நீங்க பேசுறதுதான் சரின்னு மாப்பிள்ளைகூட சொன்னாராம். ஏன் விடாம இருமுறீங்க?”

”பொறயேறிக்கிச்சும்மா. தொண்டைல சிக்கிடுச்சி. நான் அப்புறம் பேசறேன்.”

பதினைந்து வருடங்களுக்கு முன்பு நடந்தது அது. அப்பாவிற்குப் பின், பாகம் பிரிக்கையில் அந்த ஓட்டு வீடும் நாற்பது பவுன் நகையும் மிஞ்சின. வீடு வெங்கடேஸ்வரனுக்கும் நகை நீலகண்டனுக்கும் என வாய்மொழி முடிவாக உறவினர்கள் முன்னிலையில் நடந்தது. நீலகண்டனுக்கு நகையைப் போட வயசுக்கு வந்த பெண் இருப்பதும் கம்பெனி க்வார்ட்டர்சில் வீடு இருப்பதும் காரணமானது. வீடில்லாமல் இருப்பதால் அந்த வீட்டில் வெங்கடேஸ்வரன் இருப்பதாகவும் ஒருமித்த கருத்தாகக் கூறி, முடித்து வைத்தார்கள். இது எப்படியோ அனைவரின் உள்ளத்திலும் ஏற்கனவே பதிய வைக்கப்பட்டிருந்தது. அடுத்த ஐந்து வருடங்களில் நடந்த கல்யாணத்தில் நாற்பது பவுனும் திருகு குறையாமல் அப்படியே பிரியாவுடன் சென்றன.

அதன்பின் க்வார்ட்டர்சில் இரண்டுமுறை வேறு ப்ளாக்குகள் மாறி நாலு வருடங்கள் முன்பு இந்த இரு படுக்கை அறைகள், ஒரு ஹால், சமையலறை மற்றும் கொல்லையும் இருக்கும் தரை தளத்திற்கு வந்திருக்கிறார்கள். வாசலில் பெரிய வேப்பமரம் உண்டு. மாலை அதனடியில் நாற்காலி போட்டு அமர்ந்தால் காற்று அள்ளிக்கொண்டு போகும். வீட்டுக்குள் அமைதி, கொல்லையில் பசுமை, வெளியே வேப்பமரக்காற்று என்று சொர்க்கமாக இருந்தது.

ஐந்து மாதங்களுக்கு முன் ஆஞ்சநேயலு குடும்பம் மாடிக்கு வந்தது. அவர்களின் தினப்படிசாதனைகளானவை முறையே, வீட்டிற்குள் குழந்தைகளுடன் கிரிக்கெட் ஆடுவது அல்லது டான்ஸ் ஆடுவது, கொல்லையில் குப்பையைக் கொட்டுவது மற்றும் அவர்கள் காரை வேப்ப மரத்தடியில் நிறுத்துவது. பலமுறை மறைமுகமாகவும் ரெட்டியின் மனைவியை வைத்தும் சொல்லிப் பார்த்தாள் அகிலா. ஆனால் சற்று குறைந்ததே தவிர நிற்கவில்லை. ஒருமுறை காரை நிறுத்துவதற்கு முன்பே நாற்காலியை போட்டுவைத்தாள். அன்று மாலை, நமஸ்காரம் ஒதினா, என்று அன்புடன் அழைத்து நாற்காலியை கொடுத்துவிட்டுச் சென்றான். அக்கணம் முதல் அவன். சனியன் பிடிச்சகொரங்கு, என அகிலாவால் அழைக்கப்படலானான். நாளாக நாளாக அகிலாவால் இருக்கவே முடியாதென ஆனது.

“இவ்ளோ டார்ச்சரா பண்ணுவான்? நீங்க ஆபீஸ்ல ஒரு கம்ப்ளைண்ட்கொடுங்க.”

“அவன் என்னவிட சீனியர் போஸ்ட். கம்ப்ளைண்ட் கொடுத்தாலும் ஆறு மாசம் அட்ஜஸ்ட் பண்ணிப் போகத்தான் சொல்லுவங்க.”

ஆறு மாசம் கழித்து ஓய்வு பெற்றதன் பின்னும் ஒரு வருடத்திற்கு அந்த வீட்டை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒரு வருஷம்லாம் முடியாதுங்க உடனே வேற வீடு பாருங்க, என அகிலம் நச்சரிக்கத் துவங்கியபோதுதான் இந்த அடுத்த பூதம் கிளம்பியது.

அன்று மேசை மீது இருந்த போளியை ஒரு விள்ளல் எடுத்து சாப்பிடும்போது அகிலாச மையற்கட்டிலிருந்து வந்தாள். “என்ன பிரச்சனையிருந்தாலும் சரி… ஏதாவது சாப்பிட இருந்தா எடுத்து அப்படியே சாப்பிட வேண்டியது… யாரு கொடுத்தா என்ன ஒண்ணும் தேவையில்லை.”

“யாழு கொழுத்தா?” இன்னும் அவர் முழுங்கவும் இல்லை. கொல்லைப்பக்கம் வரும் எலிக்கு வாங்கியதாய் இருக்குமோ…?

“எல்லாம் உங்க கொல்ட்டி தம்பிதான். நல்லா சிரிச்சு ஈஈ-னு போளி சாப்ட்டு அப்புறம் ஒண்ணுஞ் சொல்லாத ஏமாளி அண்ணனா இருக்கத்தானே பொறப்பே உங்களுக்கு…”

“இப்ப இத துப்பணும்ங்கிறியா திங்கணும்ங்கிறியா?”

“திண்ணுங்க.. ஒரு போளியக் கொடுத்தா ஈசியா காரை நிறுத்திக்கலாம்னு தெரிஞ்சிருக்கு… நாலு வளையலக் கொடுத்தா சொந்த வீட்டையே எழுதி கொடுப்பீங்க.. எழுதிதான் ஒட்டிருக்கே.. இது என்ன கேவலம், ஆறுமாசம்தானே? அவனவன் கோடீஸ்வரனாவான்… நீங்க பிச்சையெடுங்க”

தட்டை விசிறியடித்தார். வாயில் இருந்ததை நடு வீட்டில் துப்பிவிட்டு வெளியேறினார்.

அன்று மாலை பிரியா மாப்பிள்ளை குழந்தையுடன் வந்திருந்தாள். “தாத்தா வா” என அழைத்ததால் நாலு கிண்டர்ஜாயுடன் வீட்டுக்கு திரும்பினார்.

“நம்ம பூர்வீக வீட்ட சித்தப்பா ப்ளாட் போட்டு விக்கப் போறாராம்… நாலு வீடு, அதுல ஒண்ணு அவருக்கு. அப்புறம் ஒரு கோடி ரூவா பணமுமாம்.”

ஒரு ஈ நீலகண்டனின் வாயில் புகுந்து காது வழியே வெளியே வந்தது.

“ஒரு கோடியா…? எப்படி?”

“எப்படின்னா? அந்த நிலத்தோட மதிப்பு இப்ப அந்தளவு இருக்கு. நல்லா ஆறு லட்சம் ரூவா நகைய கொடுத்துட்டு ஏமாத்திட்டாரு உங்க தம்பி.”

“சும்மா இரு. இப்ப ஏதோ ஏறியிருக்கும்.. அன்னைக்கு இவ கல்யாணத்துக்கு அததான் போட்டோம் மறக்காதே. அப்பா அம்மா வைத்தியம் காரியம் எல்லாம் முடிஞ்சு ஒண்ணும் இல்லாதப்போ அத வச்சுத்தான் கல்யாணம் பண்ணினோம். கல்யாணத்துக்கும் அவன்தான் முன்னால நின்னான்… எவ்ளோ பண்ணான்…!”

“என்ன பண்ணாரு? நெக்லசோட பாக்கிறப்போ அப்படியே அம்மா மாதிரி இருக்குன்னு அழுது, நகைய கொடுத்தத எல்லார் முன்னாடியும் சொல்லிக் காட்ற மாதிரி பண்ணாரு.”

“மாமா, நீங்களோ அத்தையோ அப்பவே ஒரு வார்த்த சொல்லிருக்கலாம்.. நான் வீட்ட வாங்கிட்டு நகைய கொடுக்க சொல்லிருப்பேன். நிலம்லாம் இப்போ எந்த ரேஞ்சிலயோ ஏறிக்கிட்டிருக்கு. நீங்க போட்ட நகை கூட இப்போ பாதிக்குத்தான் எடுப்பான் தெரியுமா? கெடீயெம் கூட இல்ல அந்த நகைங்க…”

‘அன்னைக்கு உங்க அம்மா நாப்பதுதான்னு கண்டிப்பா சொன்னப்போ நீங்க இதெல்லாம் சொல்லிருந்திருக்கலாமே மாப்ளே…? என் பொண்ணு இடுப்பத்தானே பாத்துக்கிட்டிருந்தீங்க…?’ நீலகண்டனால் கேட்க முடியாது. மாப்பிள்ளை மகேஸ்வரன் மாதிரி என்பது அகிலாவின் பெருமிதம். பிரியாவும் தாட்சாயணியாக மாறலாம்.

“நாங்க வேணும்னா நகைய அப்படியே தறோம். புதுசா பாகம் பிரிங்க. இல்லாட்டி கேஸ் போடலாம்…”

முழங்கையில் இடித்துக்கொண்டதுபோல வலித்தது நீலகண்டனுக்கு.

“தம்பி மேல அண்ணன் கேஸ் போடறதா?”

“இல்ல, அந்த ஃப்ளாட்ல ஒரு வீட்ட உங்களுக்கு கொடுக்க சொல்லுங்க…”

“இப்ப தங்கம் வெல ஏறி நெலம் வெல ஏறாம இருந்தா நீ பாதி நகைய தருவியா? உன் சம்மதத்தோடவும் பேசி கொடுத்ததுதானே?”

“இதுதான் உங்க தம்பி சாமர்த்தியம். என்ன இருந்தாலும் நீங்க ஒரு குமாஸ்தா. அவரு வியாபாரி. எத சொல்லி எத கொடுத்து எத வாங்கணும்னு அவருக்கு நல்லா தெரியும்… இல்லாட்டி இப்படி கார்ல்லாம் வாங்க முடியுமா?”

நாளடைவில் அப்படியே சொந்தங்களுக்குள் பேசி வெங்கடேஸ்வரன் காது வரை விஷயம் போனாலும் இதுவரை இருவரும் அதுபற்றி பேசிக் கொள்ளவில்லை. அகிலாவிற்கு ஆதரவாக பலர் ஃபோன் செய்து ஒரு கோடி என்பது ஸ்மார்ட் சிட்டி வந்ததும் நாலு கோடியாகும் என்று தெரிவித்தார்கள். வீட்டு வாசலில் பஸ்ஸும் மாடியில் மெட்ரோவும் கொல்லையில் ஸ்கூலும் வரும் என்றார்கள்.

‘எங்கோ வரும் ஸ்மார்ட்சிட்டினால கையில் தரப்போகும் ஒருகோடி எப்படி நாலு கோடியாகும்? இங்கே கிரிக்கெட் சத்தத்துலேயே தூங்க முடியல. ட்ரெயின்லாம் வந்தா அத்தனை சத்தத்தில் எப்படி வாழமுடியும்?’ என யோசித்தார்.

“ஒரு கோடில்லாம் கிடைக்காது. அடையாரே அந்தளவுதான் போகும். இந்த ரேட்டெல்லாம் சும்மா அடிச்சு விடறதுதான். வியாபார தந்திரம். கைக்கு வரும்வரை நிச்சயம் இல்லை” என்று கிருஷ்ணமூர்த்தி ஒருநாள் கேண்டீனில் சொன்னார்.

“எப்படியிருந்தாலும் ஒரு ஃப்ளாட்டாவது எழுதி வாங்கிடுப்பா” என்றாள் பிரியா.

“ஒன்றரை வருசம் கழிச்சு எப்படியும் வேற வீடதான் பாக்கணும். நைச்சியமா பேசி வாங்குங்க. உங்களுக்கு என்ன தெரியும்…? ஒண்ணு முழுங்குவீங்க, இல்ல தூக்கிப் போட்டு உடைப்பீங்க.”

நீலகண்டன் தள்ளித் தள்ளி போட்டு வந்தார். அகிலாவால் முடியவில்லை. தினம் கேட்டவள் இன்று நாளுக்கு மூன்று முறை நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாள். இன்றுதான் வெங்கடேஸ்வரனை நேரில் பார்த்து கேட்டு வரலாம் என கிளம்பினார்.

“நீங்க வச்சா குடுமி எடுத்தா மொட்டை கேஸு. நைச்சியமா பேசச் சொல்லி மாப்ள சொன்னாராம்.”

‘நைச்சியமாக எப்படி பேசுவது. நைச்சியம்ங்கிரவன் யாரு? லிட்டர் எவ்வளவு? டின்ல தருவானா தூக்கு எடுத்துகிட்டுப் போணுமா?’

தம்பியிடம் போய் என்னவென்று கேட்பது? தன் ஐஸிலும் மிட்டாயிலும் பாதியைக் கொடுத்து பழக்கமிருக்கிறது. எதையும் கேட்டு பழக்கமில்லை. அண்ணி அவல் கொடுத்தான்னு சொல்லி கொடுத்தா புரிஞ்சிட்டு கொடுத்திருவானோ? அல்லது அவன் மகனின் குழந்தையை மடியில கொடுத்தா அதோட சிரிப்புக்கு உயிரையே கொடுப்பேனே? இந்த வீடெல்லாம் எந்த மூலைக்கு?

பர்மிஷன் போட்டுவிட்டு இப்படி ரோட்டில் நின்று யோசிப்பதைவிட ஏதாவது ஒரு கோயிலுக்குப் போகலாம் என்று முடிவெடுத்தார். இன்று வியாழன் வேறு. குருவுக்கு நல்லெண்ணெய் விளக்கு ஏற்றவேண்டும். அவர் ஏரியாவில் பாடல் பெற்ற ஸ்தலமே உண்டு. அது அவர் எப்போதும் போகும் கோயில். இன்று போவதற்குள் நடை சாத்திவிடுவார்கள். இந்த மாநகரத்தில் வேறு எந்த கோவிலுக்குப் போவது? கபாலீஸ்வரர், மருந்தீஸ்வரர் கோயில் போய் திரும்பி வந்து பேசி பின் கிளம்பிப் போவது கடினம். அப்போது அவருக்கு தம்பி வீட்டிற்குப் போகும் வழியில் இருந்த கைலாசநாதர் கோயில் ஞாபகம் வந்தது. இரண்டு ஸ்டாப்பிங் தள்ளி காந்தி நகரில் இறங்கினால் நடந்து போய்விடலாம். பிரியா கைக்குழந்தையாக இருந்தபோது தூக்கிக்கொண்டு சென்றது. இருபது வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட சிறிய கோயில். போகிற வழியில் அங்கு போய்விட்டு போகலாம் என முடிவு செய்தார்.

இந்த டேங்குக்கு எதிரில் அவர் கடைசியாக கண்ட சின்ன சிவன் கோயில் இல்லை. முன்பு சின்ன கோபுரம் கிழக்குப் பக்கம் இருந்தது. இப்போது இன்னொன்று மேற்கு நோக்கி இருந்தாலும் பெரிய கோபுரமாய் இருந்தது.

வாசலிலேயே குருவிற்கு ஒரு நல்லெண்ணெய் விளக்கும், சிவனுக்கு சங்குப்பூ மாலையும் வாங்கிக் கொண்டார்.

“அந்த கேட்டு வழியா போனீங்கன்னா நவகிரகம் வந்துடும்” என்றாள் பூக்காரி.

கோயில் நன்றாக விஸ்தரிக்கப்பட்டிருந்தது. முன்பு அந்தப் பக்கம் சைக்கிள் ஸ்டாண்ட் மற்றும் காலி மைதானம் இருந்தது. இப்போது அதையெல்லாம் எடுத்து கோவிலை அதுவரை நீட்டித்து கட்டியிருக்கிறார்கள். நவக்ரஹ வாயிலிலேயே கூட்டம் இருந்தது. நெருக்கி உள்ளே போய் குருவிற்கு முன்னால் இருந்த அரசமரத்தடியில் விளக்கை ஏற்றி வைத்து நின்றிருந்தார்.

“அர்ச்சகர் வரலையா?”

“சந்நிதில சாமிக்கு அலங்காரம் பண்ண ஒத்தாசையா இருக்காப்ல… வந்துடுவாரு”

திடீரென கூட்டம் எழுந்தது, “சாயி சரணம் பாபா சரணம் சரணம்” என்ற கோஷம் உச்சஸ்தாயியில் கேட்டது. சாய் ஆரத்தி பாக்கலாம் வாங்க என ஒருவர் அழைக்க, கூட்டம் மொத்தம் அங்கு முன்னேறியது.
சிறிது நேரத்துக்குப்பின் அவர்களில் இருந்து குருக்கள் பிதுங்கி வெளியே வந்தார். நீலகண்டன் குருவுக்கு அர்ச்சனை செய்தார்.

“ஈஸ்வரனுக்கும் அர்ச்சனை செய்யனும்”

குருக்கள் கையை வலது பக்கம் நீட்டி ”அங்க போங்கோ, வேற குருக்கள் இருப்பார். அப்புறம் ஹனுமார் பல்லக்குத் தொட்டில்ல விளக்க ஏத்தாதீங்கோ. விளக்கேத்தற இடம் அந்தண்ட இருக்கு”

மரத்தடியில் இருந்தது பல்லக்கு என அப்போதுதான் புரிந்தது

சிவன் சன்னதிக்கு நடக்கும் வழியில் நீலகண்டன் ஒவ்வொன்றாக பார்த்தார். இப்போது சிவன் கோயில் மாத்திரம் இல்லை. அருள்மிகு ஸ்ரீ அலர்மேல்மங்கா சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமி / ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஸ்வாமி கோயில் என பெயர் கொண்டிருந்தது. போகும் வழியில் அனுமாரும் அவருக்கு நேராக கருப்பண்ணசாமியும் இருந்தார்கள்.

“சாமி… அனுமார்க்கு நேரா ராமர்தானே இருப்பாரு…?”

“இவர் பஞ்சமுக ஹனுமார் ஸ்வாமி. ராமர் சைடுல இருக்கார் பாருங்கோ. பஞ்சமுகத்துல குதிரை முகம் அவரைப் பார்த்த மாதிரியே இருக்கும். இந்தியாவிலேயே இங்கதான் இந்த விசேஷம். ஹயக்ரீவ முகம் ராமரை பாக்கறத சேவிச்சா கல்வியும் ஒழுக்கமும் செல்வமும் சேரும். இன்னைக்கு வியாழக்கிழமை வேற. இன்னும் கொஞ்ச நேரத்துல சுதர்சனர், அனுமார், பாபா சந்நிதில கூட்டம் தாங்காது.”

“நேர்த்தியா கட்டிருக்காங்களே, தொழிற்சாலை இயந்திரங்களை மாதிரி வரிசையா அடுக்கடுக்கா””

“டைல்ஸெல்லாம் தேச்சு அலம்பிருக்கா. பாத்து நடங்கோ.”

நீலகண்டன் ஒவ்வொரு சன்னதியாக நின்று கைகூப்பி சென்றார். முருகன், ஐயப்பன், விநாயகர், சரஸ்வதி, கருமாரியம்மன் சன்னதிகளைத் தாண்டி வெங்கடேஸ்வர பெருமாள் சன்னதியை சுற்றி வந்தார். சுதர்சனரையும் அவரை அடிப்பிரதட்சணம் செய்பவர்களையும் சேர்த்து சிலர் அவசர பிரதட்சணம் செய்து கொண்டிருந்தார்கள்.

கைலாசநாதர் பழைய இடத்தில் லிங்கரூபியாக இருந்தார். அம்பாளும் பழைய இடத்திலேயே இருந்தாள். இருவரின் உற்சவ மூர்த்திகளும் சிவன் சந்நிதியின் பக்கவாட்டில் இருந்தனர். குருக்கள் அலங்காரம் செய்து கொண்டிருந்தார். நீலகண்டன் மட்டும்தான் அப்போது அங்கிருந்தார்.

“அமைதியான நல்ல தரிசனம்”

நீலகண்டன் அளித்த சங்குப்பூ மாலை ஈஸ்வரனின் கழுத்தைச் சுற்றி நீலமாக ஒளிர்ந்தது.

அப்போது பெருமாள் சந்நிதி பட்டர் அவசரமாக வந்து அங்கிருந்த பெரிய ரோஜாப்பூ மாலையை எடுத்துக் கொண்டார்.

“மஹேஷா, ட்ரஸ்டி வறார், இந்த மாலையை பெருமாளுக்கு எடுத்துண்டு போறேன். இந்த தாமரையையும்.”

குருக்கள் அலங்காரத்திலிருந்து திரும்பாமல் தலையசைத்தார்.

“இந்தா ஹனுமார் ப்ரசாதம். அப்படியே வாய்ல போட்டுண்டு தா.. நான் கிளம்பணும்.”குருக்கள் பஞ்சாமிர்த கரண்டியை அண்ணாத்தி வாயில் போட்டுக் கொண்டார்.

பட்டர் கிளம்பிச் சென்று, அலங்காரமும் ஆனதும் தீபாராதனை துவங்கியது.

“நம: பார்வதீ பதயே ஹரஹர மஹாதேவா…”

உமையும் ஈஸ்வரனும் ஜொலித்தார்கள். சங்குப்பூ நீல உறை போல ஈஸ்வரனின் கழுத்தை சுற்றியிருந்தது. உதட்டின் மேல் ஒரு துளி தேன் இருந்தது. தீபஒளியில் இருவரையும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் நீலகண்டன்

“நல்லா இருக்கு, நம்ம எடத்த அவன் எடுத்துக்கிட்டான்… அங்க மரத்தடியில் கொரங்கன் வண்டிய நிறுத்திருக்கான். ரோஜாப்பூவையும் தாமரையையும் அவன் எடுத்துட்டு உங்க கழுத்த சுத்தி வெறும் நீலத்த விட்டு வச்சிருக்கான்.. அதக் கேக்காம பஞ்சாமிர்தம் தின்னிட்டிருக்கீங்க…” என்று கடுகடுத்தாள் அகிலாண்டேஸ்வரி அம்மை.

“திங்கட்டுமா துப்பட்டுமா சொல்லு” என்றது நீலகண்ட சிவம்.