சு வேணுகோபால் சிறப்பிதழ்

பிறவிப் பெருங்கடலும் சிற்றின்ப நதிக்கரையும்…

– குமரன் கிருஷ்ணன்

venu

சு வேணுகோபால்

பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடப்பதை மெய்ஞானப் புலம்பல் என்பார் மேலோர்…நீந்திக் கடப்பது கிடக்கட்டும். நினைத்த போது கரையில் அமர்ந்து களித்து, அலையில் கால் நனைத்து, பின் “வீடு” திரும்ப, பிறவிப் பெருங்கடல் ஒன்றும் மெரீனா பீச் அல்ல என்ற அறிவு நமக்கு எட்டுவதற்குள்ளாகவே ஆயுளில் பாதி பூமியில் புதையுண்டு விடுகிறதே! பெருங்கடலில் கலக்கும் சிற்றின்ப நதிகளின் வழியே கழிமுகத் துவாரங்களை தேடியபடி பருவத்தின் படகில் சஞ்சலத் துடுப்பு போட்டுத் திரிவதுதானே நம்மில் பலருக்கு சாத்தியப்படுகிறது!

இந்நதிகளில் பெரும்பாலும் ஒரு கரை “பெண்” எனலாம். “பெண்மை” என்று எழுத மனது விழைந்தாலும், முன்னர் ஒருபொருட் பன்மொழி போல் தெரிந்த “பெண்”ணும் “பெண்மை”யும் இப்போது காலம் போகும் போக்கில் இரட்டுற மொழிதல் ஆகி விட்டதோ என்ற ஐயம் இருப்பதால் “பெண்” என்று எழுத வேண்டியாயிற்று. ஆனால் வேணுகோபால் தனது “ஆட்டத்தில்”, “உள்ளுக்குள் கனலாய் பொங்கி எரியும் அணங்கு. நெருப்புக்குள் தீமை தங்காது. உண்மையே சுடர். சரி தவறு, நிறை குறை, கற்பு கறை எதுவும் பெண்ணிற்கில்லை. அவள் தாய். பெண்மை என்றாலே தாய்மைதான்” என்று இந்த ஐயத்திற்கு ஒரு தெளிவும் மேன்மையுறு வடிவும் கொடுக்கிறார். இதை வாசிக்கும்பொழுதே “பெண்” என்பதை “பெண்மை” என்று எழுத வேண்டும் என்று தோன்றுகிறதல்லவா?

இப்படி ஒரு கரை பெண்ணாகி (பெண்மையாகி) விட்டபோது மறுகரை மட்டுமே பிறவிப் பெருங்கடல் பயணத்தில் அனுபவ மாறுபாடுகளை உருவாக்குகிறது. இந்த “மறு கரை”யின் பண்பு மற்றும் வாழ்வியல் வடிவங்கள் ஆகியவற்றின் சாரம் பெரும்பாலும் மண் சார்ந்து இருக்கிறது. இப்படி பெண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே சுழலும், சிற்றின்பச் சுழலில் உழலும் உள்ளத்தின் ஊசலாட்டங்களை நம்முன் நிறுத்துவதே வேணுகோபாலின் படைப்புகள்.

சு வேணுகோபாலின் சிறுகதை மற்றும் நாவல் கட்டமைப்புகளில் குறிப்பிடத்தக்க வேறுபட்ட அடிப்படை கோணங்களை நாம் கண்டடைய முடியும்…அவரின் சிறுகதைகள், பெண்களின் பார்வையில், அவர்களையே மையமாக்கி கதை சொல்கிறது. அவரின் குறுநாவல்களோ ஆணின் மனக்கண்ணாடி வழியே, பெண்ணைப் பேசுகிறது. ஆனால் அவரின் அனைத்து படைப்புகளுமே, மேற்சொன்ன கழிமுகங்களே கதியென்று நகரும் கதை நாயகன் நாயகிகளை அடுத்த கட்டத்திற்கு முன்னகர்த்தி முதிர்ச்சியின் முகவரி காட்டி பெருங்கடலின் பொருள் புரிபடத் துவங்கும் பூரிப்பை முன்னிறுத்தியே முடிகின்றன.

ஒவ்வொரு படைப்பிலும், நம்மை வெவ்வேறு அனுபவ பரிசலில் அமர்த்தி வைத்து “இரு கரைகள்” ஊடே சலனத்தின் வழி “பெருங்கடல்” நோக்கி நம் முதிர்ச்சியின்மையை செலுத்துவதே வேணுகோபாலின் கதைசொல்லும் பாங்கு. அத்தகைய பாங்கு, சாமானிய மனித மனங்களுக்குள்ளும் பிரத்யேக அனுபவங்களைக் கண்டடையும் சாத்தியங்களை படைப்புகளின் அடியில் தாங்கி நிற்பதோடு, படைப்புக்கும் நமக்கும் ஒரு “தொடுகை” ஏற்படுத்தும் ஊக்கியாகவும் உருவெடுக்கிறது. அந்தத் தொடுகைக்கான நொடியை காலம் எங்கே பதுக்கி வைத்திருக்கிறது என்பது எப்போதும் ஆச்சரியம் தருவதாக இருக்கிறது.

கல்லூரி சேர்ந்த புதிதில் நண்பர்கள் குழாமுடன் அவ்வப்போது அழகர் கோயில் செல்வதுண்டு. அருகில் சாலையோர மரங்களின் அடியில் கவிந்திருக்கும் நிழல்களில் சைக்கிளில் இளநீரும் நுங்கும் விற்போர் நிறைய தென்படுவார்கள். அத்தகைய ஒரு பயணத்தில், எங்கள் குழு, ஒரு முதியவரிடம் நுங்கு வாங்க நின்றது. என் நண்பன் எங்கள் அறியாமையை வெளிப்படுத்தும் வண்ணம் “நிறைய வரும்படி வெட்டுங்க” என்றான். “எந்த காயை சீவினாலும் மூணுதான் தம்பி இருக்கும்” என்ற முதியவர் ஏதோ தோன்றியது போல், சற்று நேரம் கழித்து, அங்க பாருங்க என்று தொலைதூரம் கைகாட்டினார். எங்களுக்கும் தொலைவில் தெரிந்த யானைமலைக்கும் இடையே, கூட்டத்தில் இருப்பது போல் தோன்றினாலும் பனை மரங்கள் ஆங்காங்கே ஒன்றுக்கொன்று பகை கொண்டது போல் தனித்திருந்தன.

பனைமரங்கள் பார்க்கும்பொழுதெல்லாம் ஏன் அவை சந்தோஷத்தின் சாயல் கொண்டவையாக இருப்பதேயில்லை என்ற எண்ணம் எனக்குத் தோன்றுவதுண்டு. தனிமை, வெறுமை இவற்றின் உணர்வுகளை ஊட்டுவதாகவே பனை இருக்கிறது. ஆங்கு தெரிந்த பனைகளில் ஒன்றைச் சுட்டி, “அதுக்கு பேரு கூந்தப்பனை, காய்க்காது” என்றார். முதல் பார்வைக்கு வித்தியாசம் தெரியாவிடினும், கூர்ந்து நோக்கின் பனைத் தோகைகள் தலைகீழாய் கவிழ்த்து வைத்தது போலிருந்தன. சுமார் பத்து வருடங்கள் கழிந்திருக்கும். சென்னையில் புத்தகக் கடை ஒன்றில் “கூந்தப்பனை” என்னும் புத்தக அட்டை பார்வையில் பட்டபொழுது அழகர் கோயில் செல்லும் சாலையும் அன்று முதியவர் காட்டிய பனை, அதன் பொருள்தனை நினைவில் நிறுவிச் சென்றது. வேணுகோபாலின் படைப்புகளுக்கும் எனக்கும் “தொடுகை” நேர்ந்த நொடி அது.

அன்புக்குரியவர்களோ அல்லது அன்புக்குரியவர்கள் என்று தப்பிதமாக நாம் புரிந்து கொண்டவர்களின் மகிழ்ச்சியின் பொருட்டு என்ற நம் நினைப்பின் பிழையால் நிகழ்ந்து விடும் விட்டுக்கொடுத்தல்களிலும் விட்டுவிடுதல்களிலும் அக்கணத்தின் மகிழ்ச்சி மறைந்தபின் மனம் எதிர்கொள்ளும் அலைகழிப்புகளின் பரிமாணங்களே வேணுகோபாலின் பல படைப்புகளின் அடிநாதம். கூந்தப்பனையும் அத்தகை ஒரு கதையே. மண் சார்ந்த உள்ளுறை உவமங்களின் மூலம் கதையின் கருவை உள்ளீடு செய்யும் வேணுகோபாலின் நேர்த்திக்கு இக்கதையின் அறிமுகப் பத்தியே சான்று. “சாகும் தறுவாயை உதறிய சில மரங்களின் குருத்து ஓலைகள் இளம் பச்சையை நீட்டிக் கிடந்தாலும் ஓரங்கீற்று நுனிகள் ஏற்கெனவே காய்ந்து கிடந்தன. துளிர்த்திருக்கின்ற கீற்று அவனுக்கு நிம்மதியைத் தந்தது” என்னும் வரிகளின் வழியே மொத்தக் கதையையும், கதை நாயகனின் மனம் மேற்கொள்ளவிருக்கும் பயணத்தையும் சொல்லி விடுகிறார். மண், இயற்கை இவற்றையே இடுபொருளாய் வைத்து அவர் மிக எளிதாய் ஆழமான தத்துவ விசாரங்களை அடுக்கிக் கொண்டே போவதை பல கதைகளில் பல இடங்களில் காணலாம்…கூந்தப்பனையில்கூட, காமத்தின் பிடியில் நகரும் கதையை இவ்வாறே அவர் ஞானத்தின் நிழலுக்குத் தள்ளுகிறார். அற்புதமான‌ அந்தப் பத்தியை படித்துப் பாருங்கள்: “மரம் அழகைச் சொரிகிறது. பூக்களையும் இலைகளையும் உதிர்க்கிற இலையுதிர்காலம் மரத்திற்கு அழகற்றதா? ஜீவன்களின் பரிதவிப்பில் அழகு துடிப்பதாகத் தோன்றுகிறதே… …அழகு கிழண்டு போகுமா? அழகிலிருந்து அழகு விடைபெறுமானால் அழகின் உயிர் எப்படிப்பட்டது? தங்கியிருந்த இடத்தின் பொருள் என்ன? உயிர்ப்பு எது? அழகு புறம் என்றால் அதன் கரு?…” இம்முதிர்ச்சியின் வழியே, பெண்ணிலிருந்து துவங்கும் மனதின் அலைக்கழிப்பு, மண் சார்ந்த மனதின் தழுவலில் ஒரு மகானுக்குரிய மேன்மை அடைகிறது. கதை முடிகிறது.

“அபாயச் சங்கு” கதையில், “அகத்திமர இலைகள் தூங்க ஆரம்பித்து விட்டன. கீரைக்குன்னாலும் ஆட்டுக்குன்னாலும் ஆறு மணிக்கு முன்னாடி பிடுங்கணும்” என்று எளிதாய் ஏதோ சொல்வது போல் சொல்லி, “ஆனால் களவு போவது என்னமோ ராத்திரியில் தான்” என்று ஒரு பொடி வைத்து, “எதை சொல்லி வைக்கிறோமோ அதற்கெதிரான துருவம் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் சொல்லி வைப்பதையே பிரதானப்படுத்துகிறார்கள். மீறலில் விளைந்த நிறமாலை” என்று அதனடியில் பரவும் தத்துவ மணத்தை நாம் நுகரத் தருகிறார்! மெதுவாக இறங்கும் தத்துவம் மட்டுமில்லை, நம் அனுபவ எல்லைகளை மீறி கால் வைக்கையில் நம்மை பிளக்கும் கண்ணி வெடிகளும் உண்டு! உதாரணமாக:

“மனக்கடலின் மீனுக்குக் கரையில்லை…”

“புகை மூட்டத்துக்குள் தூங்கும் கங்கு…”,

“கருங்கூந்தல் அதுவாக வெண்மையைத் தழுவிக் கொள்வதுபோல் ஆனந்தம் சோகத்தைத் தழுவத் தன்னையறியாமல் பயணம் மேற்கொண்டிருந்தது…”

என அவரின் வரிகளுக்கிடையில் நம் நொடிகள் தேங்கிக் கிடப்பதுண்டு.

வேணுகோபாலின் பிரதான கதைமாந்தர்கள் அனைவருமே “வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற எண்ணத்தை அடியொற்றிருப்போராகவே இருக்கின்றனர். அதன் குறியீடு போன்றே, கதைக்களத்தில் உணர்வுத்தறியின் ஊடுபாவு போல மண் செடி கொடி மரங்கள் ஒன்றி வலம் வருகின்றன. எனவேதான், தங்கள் வாழ்வில் பெருத்த அவலத்தில் தவிக்கும்பொழுதும் “திராட்சைக் கொடியை பிஞ்சில் வெட்டுவது பாவமில்லையா” என்று அறுபது கடந்த முதியவரால் யோசிக்க முடிகிறது [“கண்ணிகள்”]

மோட்டார் போடு தாத்தா தென்னை மரம் பாவம்” என்று ஐந்து வயது சிறுவனாலும் யாசிக்க முடிகிறது [“உயிர்ச்சுனை”]. கொடுக்காப்புளி மரத்தை விவரித்துக் கொண்டே போய் “வீட்டையே உயிர்ப்பித்து விடும் மரம்” என்று முடிக்க முடிகிறது [“புற்று”]…ஒரு தொட்டிச் செடி கூட வைத்துக் கொள்ள இடமின்றி, அதனுடன் ஒட்டிக் கொள்ள நேரமின்றி ஓடும் நம் வாழ்வின் வறட்சியை உணர்ந்து ஏக்கம் கொள்ள வைக்க முடிகிறது…தன் வாழ்க்கை ஞாபகங்கள் முழுவதையும் தோட்டத்தின் பொழுதுகளாய், அத்தோட்டத்தின் நினைவுகளையெல்லாம் தன் பிள்ளைகள் வளர்ந்த காலத்துக்குள் அடைக்க முயல்கிறது [“தாய்மை”]…தன்னை கண்டதும் தீவனம் கொண்டு வந்திருக்கிறானோ என்று பசு எழுந்து நிற்பதாக எண்ண வைக்கிறது…வைக்கோலை திருட வைக்கிறது [“புத்துயிர்ப்பு”]…ஒவ்வொரு கதையிலும், ஒரு முறையேனும் விவசாயம் சீரழிந்து போன விசனத்தை விபரமாக தன் எழுத்தில் வித்திட முடிகிறது… வேணுகோபாலால்…

வேணுகோபாலின் சிறுகதை சாளரத்தில் வழி தெரியும் பெண்மையின் விசாலங்களும் வேதனைகளும்தான் எத்தனை எத்தனை! “இளவெயிலில் உலகமே ஒரு குழந்தை” என எண்ண வைக்கும் “பேதை”…, ஒரு நாய்க்குட்டி, பெண் என்பதாலேயே அதனை தெருவில் விடச்சொல்லும் அம்மாவிடம் சிறுமி, “அம்மா நான் உங்கூடயே இருக்கேம்மா என்னை தொலைச்சிடாதம்மா” எனக் கெஞ்சும் “புற்று”…, கனவுக்கும் நனவுக்கும் இடைப்பட்ட ரணங்களை ஒற்றைச் சிரிப்பைக் கொண்டே மருந்து போட்டுக்கொள்ளும் “கிடந்த கோலம்”…,”அவளின்” நடுங்கும் கரங்களை வைத்தே நம் மனசாட்சியை நடுங்க வைக்கும் “வெண்ணிலை”…,வாழ்ந்து கெட்ட “காரைவீட்டுக்காரி”யின், ஊருக்கு செழிப்பு வேண்டும் என்ற வரம் கேட்கும் “தாய்மை”…, நாள்தோறும் சாலையில் நம்மை கடக்கும் கணக்கற்ற பெண்களின் அடியில் உறங்கும் “உள்ளிருந்து உடற்றும் பசி”…

தன் எழுத்து ஒவ்வொன்றையும் இழைத்து, மனிதத்தின் கூறுகளை அதன்வழி நுழைத்து, நமக்குள் அகம் பற்றிய சிந்தனை ஆர்த்து அவர்பால் நம்மை ஈர்த்து விடும் வேணுகோபாலின் ஒவ்வொரு படைப்பை படித்து முடிக்கையிலும், நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஆற்றாமைகளும் ஆதங்கங்களும், தீதும் சூதும் சற்று நேரமேனும் கழன்று நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்தின் உயிர்ப்பின் மீதும் பெருங்கருணைப் பார்வை விரிந்து அன்பு நெகிழ்ந்த மனதின் மணம் உள்ளிருந்து உவகையாய் ஊற்றெடுப்பதை உணர முடியும்.

மனித வாழ்வின் அகவல் – ‘ஆட்டம்’ குறுநாவல்

ரா கிரிதரன்

venu

சு வேணுகோபால்

சு.வேணுகோபால் எழுதிய “ஆட்டம்” குறுநாவல் மேலோட்டமாகப் பார்க்கையில் பிரிவைப் பற்றிய கதை என்றாலும் வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளின் போது தனி மனித மனம் கொள்ளும் ஊசலாட்டங்களைப் பேசும் படைப்பாகவும் அமைந்திருக்கிறது. பிரிவின் துயரை ஏற்க மறுக்கும்போதும், அதை உண்டாக்கியவர்கள் மீது அதீத வெறுப்பும், கோபமும் உண்டாக்கும் மனதின் அனத்தல்கள் மீது வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. பலதரப்பட்ட படைப்புகளில் கையாளப்பட்ட கருவாக இருந்தாலும் சு.வேணுகோபால் பயணம் செய்யும் வழிகளும், அடையும் முடிவுகளும் அவருக்குரிய முறையில் தனித்துவமாக இருக்கின்றன.

பிரிவின் துயர் பற்றிய பேசுபொருள் தமிழுக்குப் புதிய கதைக்களன் அல்ல. நம் காவியங்களிலும் பிரிவு மிக விரிவாகக் கையாளப்பட்டுள்ளது. நெய்தன் நிலப்பறவையான அன்றிலின் பிரிவு, தென் அமெரிக்கப் பறவையான Candor அனுபவிக்கும் பிரிவு என மனிதன் உட்பட ஒவ்வோர் விலங்கும் பிரிவின் வேதனையை வெவ்வேறு விதத்தில் ஏற்றுக்கொள்கின்றன. சங்கம் முதல் காப்பியங்கள், சிலம்பு, நவீன ஆக்கங்கள் வரை பிரிவின் துயர் பற்றிப் பல பெருங்கதைகள் உள்ளன. ராமன் தற்கொலைக்கு முயல்கிறான், சாமானியளான கண்ணகி அரசவை நுழைகிறாள் – ஒவ்வொருவரும் அவரவருக்குரிய வகையில் பிரிவின் துயரை எதிர்கொள்கிறார்கள். பல கதைகளில் பிரிவு என்பது பெருநிகழ்வுக்கான முகாந்திரமாக இருக்கிறது. கொந்தளிப்பான சமூக நிகழ்வாகவும், அறமீறலின் எதிர்ப்பைக் காட்டவேண்டிய அவசியத்தை பிரிவுகள் உணர்த்துகின்றன. இவ்வகையில் “ஆட்டம்” குறுநாவல் பிரிவின் விசாரணையை பல தளங்களில் மேற்கொள்கிறது.

“ஆட்டம்” எனும் குறுநாவலின் கதை மாந்தர்கள் தேனி மாவட்டத்தின் வீரபாண்டி என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். முல்லையாற்றின் நிலப்பகுதி. ஊரெங்கும் சோளக்குருத்துகளும் வாகை மற்றும் பூவரச மரங்களும் நிரம்பியிருக்கும் செழிப்பான பூமி. மழைக்குப் பஞ்சமில்லாததால் விளைநிலங்களுக்கும் குறைவில்லை. வீரபாண்டியில் பிரதானமான விளையாட்டு கபடி ஆட்டம். குஞ்சு குளுவான்கள் முதல் வயதான மூதாட்டிகள் வரை ஆட்டம் என்றால் கபடிதான். தேனிப்பகுதியைச் சுற்றியிருக்கும் ஊர்களிலிருந்து பல கபடி குழுக்கள் வீரபாண்டியில் சந்தித்து போட்டிபோடும். அவர்களுக்கு அது பெருமை தரும் விஷயம். வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தாலும் கபடி போட்டியில் வீரபாண்டிக்கு இருக்கும் அதிகாரம் தேனி பகுதியில் வேறு ஊருக்கு இல்லை.

அப்பேற்பட்ட வீரபாண்டியில் வடிவேல் கபடி விளையாட்டில் தெய்வமென மதிக்கப்பட்டவன். வடிவேல் ஆடுகிறான் என்றால் ஐந்து வயது குழந்தை முதல் பல் போன கிழவர்கள் வரை கோமாரியம்மன் திடலில் கூடிவிடுவார்கள். பதினெட்டு வயது முதல் கபடி வீரனாகத் திகழ்ந்த வடிவேலுவின் கதையைச் சுற்றிப் பின்னப்பட்டது இந்த குறுநாவல். பதினெட்டு வயது முதல் இருபத்து நான்கு வயது வரை கபடி மட்டுமே அவனது நினைப்பாக இருந்தது. வைரமணி, பிரேம்குமார், காளையன் எனும் நண்பர்களோடு நான்கு கட்டங்களில் நடத்தும் சாகஸங்கள் தேனி மாவட்டம் முழுவதும் மிகப் பிரபலம்.

நான்கு திசைகளில் சென்றுவிட்ட நண்பர்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் வலிகளையும் பேசத்தொடங்கும் கதை நெடுக அவர்களது ஆட்டத்தின் திண்மையும் வெளிப்படுகிறது. வடிவேல் காதலில் விழுகிறான்; ஆனால் தோற்பதில்லை. திருமணத்தில் முடியும் காதல் ஒரு கட்டத்தில் கைநழுவுகிறது. நான்கு கட்டத்துக்குள் தனது சாகஸ ஆட்டத்தை நிகழ்த்தி வெற்றி வீரனாக வந்தவன் வாழ்க்கையின் போராட்டங்களை திருமணம் முடிந்த பின் சந்திக்கிறான். காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத பெண் வீட்டு முறைமாமனை தாக்கிவிட்டு இருபத்து நான்கு வயதில் ஜெயிலுக்குச் செல்கிறான். சில வருடங்களில் வெளியே வந்தவன் தன் மனைவியின் காதல் கழன்றுவிட்டதை உணர்கிறான். பிள்ளைகள் ரெண்டான பின்னும் அவனது மனைவி கனகத்துக்கு வேறொருவனுடன் தொடர்பிருப்பதைக் கண்டு பதறுகிறான். அவன் வாழ்க்கையிலிருந்து ஆட்டத்தையும், ஆட்டத்திலிருந்து வாழ்க்கையையும் பற்றிவிடமுடியும் எனும் எண்ணத்தோடு தனது முப்பத்து ஐந்தாவது வயதில் மீண்டும் கபடிப்பயிற்சி செய்யத் தொடங்குகிறான்.

நிகழ்காலமும் பழைய நிகழ்வுகளும் பின்னிப்பிணைந்து வளரும் கதையில் வடிவேலுவின் சமூக உறவு தத்ரூபமாக வெளிப்பட்டிருக்கிறது. இளவயதில் கபடி ஆடும்போது அவனுடைய நண்பர்களான காளையன், பிரேம்குமார், சுருளி போன்றோர் காதலுக்கும் அவனுடைய விளையாட்டுக்கும் மிக்க உறுதுணையாக இருக்கிறார்கள். அவனுடைய ஒவ்வொரு நினைப்பும் விளையாட்டில் தனது உடலின் பெளதிக இருப்பைக் கடந்து சாகஸங்கள் நடத்தும் கனவில் திளைக்கிறது. உடலைக் கட்டுமஸ்தாக மாற்றுவது ஒரு பயிற்சி என்றாலும் மனதின் அமைதியும் ஆட்டத்துக்கு இன்றியமையாத ஒன்றுதான். உடலும் மனமும் ஒருமுகத்தோடு இயங்கும்போது அவனால் பெளதிக இருப்புகளைக் கடக்க முடிகிறது. லயத்துடன் கூடிய சீர்மை அவனுக்குள் மட்டுமல்ல அவனைச் சுற்றியிருக்கும் சமூக உறவுகளிலும் பிரதிபலிக்கிறது. நண்பர்களுடனான உறவின் இனிமையிலும், அவர்களது சுகதுக்கங்களில் ஒருங்கிணைய முடியும் இயல்பும் வடிவேலின் ஆதார குணங்களாக வெளிப்படுகின்றன.

ரயில் தண்டவாளத்தில் நடக்கும் சைக்கிள் போட்டியில் திறமைவாய்ந்த பிரேம்குமார் ரயில் ஓட்டத்தில் சிக்கி இறப்பதும், உடல் உறுதியை சித்தியினுடனான உறவில் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வாழ்க்கையைத் தொலைத்த காளையனின் இழப்பு, தாயைக் காணாது வீட்டிற்கும் ரோட்டிற்கும் திரியும் வடிவேலின் நாயின் அலைக்கழிப்பு என ஒவ்வொருவரின் வாழ்க்கைப் போராட்டமும் கதையில் மிகச் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. உடலை போகப்பொருளின் உச்சகட்டமாக நினைத்து அதை மட்டுமே போஷித்து சிற்றின்பங்களில் ஈடுபடுபவர்கள் தங்களுக்குள் சீர்மையற்ற மன ஆட்டத்தை வாழ்வின் ஒரு கட்டத்தில் உணர்கிறார்கள். நடக்க முடியாமல் உடல் வீங்கிப் போகும் காளையன், ரெண்டாம் முயற்சியாக ஆட்டத்தைத் தொடங்கியிருக்கும் வடிவேல், முதல் உறவின் வழியே ஒரு பெண்ணைப் பெற்ற வடிவேலுவின் தாய் போன்றோர் நடுவயதில் வாழ்வின் அலைகழிப்புகளுக்கு ஆளாகிறார்கள். உடலின் ஆசைகளை நெடுகப்பற்றி வாழ்வு மீதான நம்பிக்கை மீது கவனத்தை கூட்டாது சிதறவிட்ட தருணங்கள் நாவலில் நிறைய உண்டு.

நாவலில் பொருந்தாத சித்திரம் வடிவேலு காமத்தைப் பற்றி அனத்தும் பகுதிகள் எனத் தோன்றியது. சித்தி நாகமணிக்கும் காளையனுக்கும் இருந்த உறவு தகாத காமத்தின் பயனாகத் தொடங்கிய ஒன்று. காளையனின் இளமையை கடைசி சொட்டு வரை உறிந்து ஐம்பது வயதிலும் தனது உடலைக் கட்டுக்கோப்பு குலையாது வைத்திருக்கும் நாகமணி கொன்று உண்ணும் யட்சி போன்றவள். காமத்தில் பிறந்து நிராகரிப்பிலும் நம்பிக்கை துரோகத்திலும் முதிர்ந்த இந்த உறவு நாவலில் மிக உயிர்ப்பானப் பகுதி. அதே நேரத்தில், காதலில் பிறந்து காதலைத் தக்கவைக்கப் போராடும் வடிவேலு – கனகம் உறவில் காமத்தின் ஏக்கம் ஆசிரியரை மீறி ஒட்டவைத்த ஒன்றாகவே தோன்றியது. வயதான பின்னர் ஆட்டத்தில் தோற்பதும், கனகுவின் கள்ளக்காதல் தன் மூக்குக்குக் கீழே நடப்பதை கண்டும் தடுக்க முடியாமல் தவிப்பதும் தனது செயலின்மையால் என நினைத்தாலும் உடலுறவில் அவள் மீதான ஆதிக்க நினைப்புக்கு கதையில் எந்த முகாந்திரமும் இல்லை என்றே சொல்லவேண்டும். ஒரு விதத்தில் நடுத்தர வயதில் மீண்டும் பயிற்சியைத் தொடங்கும் வடிவேலு தனது வாழ்க்கையையும் கனகுவையும் மீட்டு விடலாம் என எண்ணுகிறான். நேரடியாக இல்லாவிட்டாலும் அவனது முயற்சியில் இளமையை மீட்ட நினைக்கும் சாத்தியங்கள் காதலின் தேவையை உணர்வதால் மட்டுமே எனத் தோன்றுகிறது. நாகமணி மீதான காம இச்சை கூட இக்காதல் கைகூடாத இயல்பினால் விளைந்த எரிச்சல் தான்.

கோமாரியம்மன் திருவிழா சமயங்களில் பக்கத்து ஊரில் வசிக்கும் தனது அக்காவின் ஆசிர்வாதத்தை வாங்கும் வடிவேலு இம்முறையும் அதற்காகக் காத்திருக்கிறான். முதல் உறவில் பிறந்தவளை அவனது தாயும் ஒவ்வொரு வருடமும் திருவிழாவின்போதுதான் சந்திக்கிறாள். குடும்பத்தில் அனைவருக்கும் தெரிந்த ரகசியமாக இது இருந்தாலும், அக்காவின் ஆசிர்வாதம் நம்பிக்கையை கூட்டும் என வடிவேலு நினைக்கிறான். கனகம் தனது கள்ளக்காதலனுடன் பெங்களூரில் வாழ்வதாகத் தெரிந்துகொண்டவன் அவளை சந்திக்க ஊருக்குப் போகலாமா என நினைக்கிறான். கோமாரியம்மன் கோவில் திருவிழாவின் போது அக்காவிடம் இதைப் பற்றி கேட்கத் தயாராகும்போது அவள் வரவேயில்லை. வடிவேலுக்கு இருக்கும் கடைசி நம்பிக்கையும் தவிடுபொடியாகும் நிலையில் மனசஞ்சலத்துடன் வீட்டுக்குத் திரும்புகிறான். ஒவ்வொரு வருடமும் தீச்சட்டி தூக்கி பிள்ளை வரம் கேட்டு வரும் அக்கா அந்த வருடம் ஏன் வரவில்லை? தாயன்பை எதிர்பார்த்து வருடாவருடம் வரும் அவளை சந்திக்கும்போதெல்லாம் வடிவேலுவின் தாய் பரிமளம் தன்னியல்பை மறந்திருப்பாள். சந்திக்க முடியாமல் போகும்போது அவள் இத்தனை காலமாகத் தேடி வந்ததன் அர்த்தம் புரியாமல் குழம்புகிறான்.

நாவலின் ஆழமானப் பகுதிகளில் ஒன்றாக இந்த அக்கா, அம்மா, வடிவேலு உறவு இருக்கிறது.கனகம், அம்மா, அக்கா எனத் தன்னைச் சுற்றியிருக்கும் பெண்களிலெல்லாம் எதைத் தேடுகிறான் வடிவேலு? நிச்சயம் காமம் அல்ல. காமத்தின் பல அலகுகளையும் அதன் தாக்கங்களையும் நண்பர்களின் வாழ்விலிருந்து அறிந்துகொண்டுவிட்டிருந்தான் வடிவேலு. கனகம் திரும்ப வந்தாலும் அவளோடு தினமும் கூடியிருந்து தன்னுடைய ஆண்மையை நிரூபிக்க நினைக்கிறான். அந்த நினைப்பு கூட அவனது நிறைவேறாத காமத்தினால்லாமல் அவள் மீதிருக்கும் கோபத்தால் விளைந்த ஒன்றுதான்.

திருவிழாவின்போது அக்கினிப்பெண்கள் ஏந்தி வரும் தழல்களைச் சுற்றி ஊர் திரண்டிருக்கும் காட்சி வடிவேலுவுக்கும் பெண்களுக்குமான உறவை மிகக் கச்சிதமாகக் காட்டுகிறது. அப்பெண்களில் சாமி ஏறுவதை ஊரே திரண்டு பயபக்தியோடு பார்க்கிறது. அவர்களது உதடுகள் ஊடறுத்து வாய்ப்பூட்டு போடப்பட்டிருக்கிறது. உறுமியும் கொட்டும் முழங்க அந்த ஏழைப் பெண்கள் நெருப்பேந்திச் செல்கிறார்கள். பொதுவாகவே யாரும் மதிக்காத குழுவினர். கூட்டத்தில் வடிவேலு அவர்களைப் பார்த்தபடி நிற்கிறான். அவன் முன்னால் தழலேந்தி வரும் அக்கா சட்டென கண்கள் விரிய நிற்கிறாள். அவன் தடுமாறுகிறான். சாமி நம்பிக்கை இல்லாதவனாகக் காட்டப்பட்டவன் தடுமாறுகிறான். ஆனால் தப்பி ஓடவில்லை, “கண்ணைத் திற” என்றாள் அக்கா. அவன் நிலைகுலைந்து பார்க்கிறான். அங்கு வேறு யாருமில்லை என்பது போல அவர்கள் இருவரும் அத்தனை சத்தத்துக்கு இடையே நிற்கிறார்கள். “இந்த ஆத்தா இருக்காடா உனக்கு”, தன் மார்பில் அறைந்து சொன்னபடி அவள் விலகுகிறாள்.

இங்கிருந்து கதை வேறு திசையில் பரவத் தொடங்குகிறது. கதையின் மிகத் தீவிரமானப் பகுதியும் இதுதான் என்றாலும் இதுகாறும் வளர்த்த கதையின் போக்கை முற்றிலும் மாற்றிவிடுகிறது. அதுமட்டுமல்லாது, ஆசிரியரின் குரலிலும் வடிவேலுவின் சிக்கலுக்கான தீர்வை அளிக்கும் நோக்கமும் வெளிப்பட்டுவிடுகிறது. குறத்தி ஒருத்தி குழந்தையைச் சுமந்தபடி தூளியை வேடிக்கை பார்க்கிறாள். தீ ஏந்தி வரும் பெண் அவள் முன்னே தடுமாறி விழப்போகும்போது, குறத்தி “எந்திரி சாமி, நட நான் கொண்டு விடறேன்”, என சாமியை வழிநடத்திச் செல்கிறாள். குறத்தி முதுகில் சாய்ந்திருந்த குழந்தை தாயின் பிடி இல்லாது அவளை இறுகப்பற்றிக்கொள்கிறது. அவர்களோடு வடிவேலுவும் நடந்து செல்கிறான். சாமியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத குறத்தியின் சுமையை தன்னால் சுமக்க இயலும் எனச் சொல்கிறான். அவள் விடாப்பிடியாகக் குழந்தையையும் தீ ஏந்தி வந்த சாமியையும் கைத்தாங்கலாக கோயிலுக்கு வெளியே கொண்டு விடுகிறாள். வெளியே அக்கா தென்படாதிருந்தாலும் உள்ளே செல்லாமல் குறத்தியோடு நின்று விடுகிறான் வடிவேலு.

ஒவ்வொரு சித்தரிப்பாக இல்லாமல் முன்னும் பின்னுமாக ஆடும் நாவலில் இப்பகுதி மிக நுணுக்கமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. முல்லை ஆற்றை சுற்றி இருக்கும் கோயிலில் நடக்கும் திருவிழா. கோமாரித் திருவிழா. நோய் நொடி வரும்போது கோமாரியின் காலடியில் மண்டிக்கிடக்கும் ஊர். மதுரைக்குப் போன கண்ணகியும் இந்த நதியைக் கடந்து கோமாரியை வணங்கியிருப்பாள் எனும் வரி நாவலில் பொருந்தாதது போல இருந்தாலும், கற்பிழந்ததாக வரும் பாத்திரங்கள் சூழ்ந்திருக்கும் நாவலில் இச்சித்திரம் சட்டெனப் பொருந்திப்போகிறது. பண்டைய காலம் முதல் கற்பென்னும் பெரு நெருப்பு பெண்களின் இருப்பை சூழ்ந்திருந்தாலும் நிறை குறை இல்லாது பெண் என்றால் தாய் எனும் அறிதல் சாதாரணமாகத் தோன்றும் சித்திரம் அல்ல. வடிவேலுவின் தாய், மனைவி கனகம், காளையனின் சித்தி என அவனைச் சுற்றியிருப்போர் எல்லாருமே கற்பிழந்த பெண்கள் எனும்போது தெய்வத்தின் சந்நிதியில் எல்லாருமே கண்ணகிதான் என ஆசிரியர் குரல் நாவலை வேறொரு தளத்துக்கு உயர்த்தி விடுகிறது.

தகாத உறவுகளின் வலையில் சிக்கி வாழ்க்கையை இழந்திருக்கும் வடிவேலு தன் உடல் சக்தியின் பெளதிகச் சாத்தியங்களைக் கடப்பதன் வழி அவன் காதலித்துத் திருமணம் செய்த கனகத்தை மீண்டும் அடைய நினைக்கிறான். ஆனால் உடலின் சாத்தியங்களுக்கு எல்லை உண்டு எனும் உண்மையை இளைஞர்களோடு விளையாடும் போட்டியில் உணர்ந்துகொண்டாலும் அதை ஏற்றுக்கொள்ள அவன் தயாராக இல்லை. எப்படியும் பயிற்சி மூலம் போட்டியையும், வெற்றியின் வழி கனகத்தையும் அடைந்துவிடலாம் எனும் எண்ணம் கோமாரியம்மன் திருவிழாவில் தவிடுபொடியாகிறது. கருவறைக்கு வந்தாலும், நிறை குறையற்ற கற்பு அமைந்தாலும் எல்லா பெண்களும் தாய் வடிவமே, அவர்கள் அனைவரும் சாமி பிம்பங்களே என உணர்ந்ததும் “சிறிய அளவில் சோள வியாபாரத்தைத் தொடங்கலாம்..தாய்ப்பறவை. குஞ்சுகள் பசியோடு காத்திருக்கும்”, எனத் தன் குழந்தைகளுக்கு ஒரு எதிர்காலத்தை அளிக்கவேண்டி வேறொரு ஆட்டத்தைத் ஆடத் தயாராகிறான். இந்த ஆட்டத்தில் தவறிழக்காமல் ஆடி ஜெயிப்பான் என்பது நிச்சயமல்ல, ஆனாலும் “தோற்றாலும் ஓட வேண்டும். ஓடாமல் நிற்பதில்தான் தோல்வி”, எனும் அறிதலின் விதை அவனுள் முளைத்துவிட்டபின் ஆடும் ஆட்டம் இது. மனதில் வேட்கைக்கும் உடலின் சாத்தியங்களுக்கும் இடையே முளைத்த போராட்டத்தின் விதியை தீர்மானிக்கும் ஆட்டம்.

நிர்க்கதியின் நிழலில்

அரவிந்த் கருணாகரன்

arvindk

அதிவேக சமூக மாற்றம் தனிமனிதனுள் ஏற்படுத்தும் சிக்கல்கள், திரிபுகள் குறித்து பல இலக்கியப் படைப்புகள் வந்துள்ளன. ஐரோப்பாவில் தொழிற்புரட்சியால் விவசாய சமூகங்கள், தொழிற்துறை-மைய சமூகங்களாக வேகமாக மாற்றம் அடைந்தபோது ஏற்பட்ட தனிமனித விளைவுகள் நவீனத்துவ ஆக்கங்களின் மையப் பேசுபொருளாக இருந்தன. இந்திய இலக்கியத்திலும் ஐரோப்பிய நவீனத்துவத்தின் தாக்கம் அதிகம். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை விவசாயத்தில் இருந்து தொழிற்துறை, பிறகு அங்கு மையம் கொள்ளாமல் உடனேயே சேவைத்துறை என அடுத்தடுத்து மாற்றம். ஆகவே தொடர்ந்து ஒரு பெயர்ச்சிக் காலகட்டத்திலேயே [transition period] நாம் இருந்து கொண்டிருக்கிறோம். இது இன்னும் நுண்ணிய சிக்கல்களை தனிமனிதனிலும், நம் குடும்பச் சூழலிலும் ஏற்படுத்தியது. குறிப்பாக விவசாயிகள் மற்றம் வேளாண்மை செய்யும் குடும்பங்களில் பிறந்தவர்கள் சந்திந்த அவலமும், உயிர்ப்போராட்டமும் நம் முற்போக்கு எழுத்திலும், நவீனத்துவ ஆக்கங்களிலும் முக்கியமான பேசுபொருட்கள் ஆகின.

இருந்தும் ஐரோப்பிய நவீனத்துவ எழுத்திற்கும், இந்திய நவீனத்துவ எழுத்திற்கும் அடிப்படையான வேறுபாடுகள் உண்டு என்பதை எனக்கு உணர்த்திய இரண்டு முக்கியமான ஆக்கங்கள் நாஞ்சில் நாடனின் ‘சதுரங்கக் குதிரை’ நாவலும், சு.வேணுகோபாலில் ‘வெண்ணிலை’ சிறுகதை தொகுப்புமே ஆகும். இந்த இரண்டு ஆக்கங்கள் காட்டும் உலகமும் சிக்கல்களும் நவீனத்துவத்திற்கு மிக நெருக்கமானவை. இவற்றிலும் இருண்மை, அர்த்தமிழப்பு, தனிமையாலும் காமத்தாலும் அலைகழிக்கப்படும் மனிதர்கள், சமூக விதிகளின் குலைவு, அதனால் மனித உறவுகளில் ஏற்படும் இறுக்கங்கள் எல்லாம் உண்டு. ஆனாலும் இவை அளிக்கும் வாசிப்பு அனுபவம் முற்றிலும் வேறொரு தளத்தில் இருக்கின்றன.

நாஞ்சிலின் சதுரங்கக் குதிரை நாவலை எடுத்துக் கொண்டால் அதில் வரும் நாராயணனும் குட்டினோவும் தங்கள் சொந்த ஊரில் வாழ வழியின்றி பம்பாய்க்கு இடம்பெயர்ந்து, பிறகு அந்த பெருநகர் உருவாக்கும் பல்வேறு விதமான நெருக்கடிகளுக்கும், அடையாள இழப்பிற்கும் ஆளாகிறார்கள். அடிப்படையில் பார்த்தால் இவர்களின் பிரச்சனை ஒரு வில்லி லோமன் [ஒரு விற்பனை பிரதிநிதியின் மரணம் – ஆர்தர் மில்லர்] அல்லதொரு கிரிகர் சாம்சா [உருமாற்றம் – ஃபிரான்ஸ் காஃப்கா] எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் இருந்து வேறுபட்டதல்ல. தங்கள் அலுவலக வேலையிலிருந்து முழுக்க அந்நியமாகிப்போதல், மிதவைகளைப் போல் வாழ்க்கையிலொரு பிடிப்பின்றி அலைதல் என பல ஒற்றுமைகள். இருந்தும் இவர்கள் இந்த அடையாளமின்மையை, அர்த்தமிழப்பை எதிர்கொள்ளும் விதம் தனித்துவமானது. எப்பேர்ப்பட்ட அக-புற நெருக்கடிகளிலும் இவர்கள் அராஜகவாதிகளாகவோ, எதிர்மறை ஆளுமைகளாகவோ மாறுவதில்லை. ஒட்டுமொத்த பிறழ்வை நோக்கியோ, வன்முறை நோக்கியோ இவர்கள் செல்வதில்லை. ஏன் அப்படி எதுவும் ஆகவில்லை எனக் கொஞ்சம் குதர்க்கமாக யோசித்தால், அது நாராயணனுக்கும், குட்டினோவுக்கும் சுவையின் மீதுள்ள பிடிப்பால் எனத் தோன்றுகிறது. எந்நிலையிலும் உணவை, அது தரும் சுவையை அவர்கள் இழக்கவில்லை. நாவல் ஆரம்பித்த சில பக்கங்களிலேயே உணவு குறித்த, சமையல் குறித்த சித்தரிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. நாவல் முழுக்க நாராயணனும் குட்டினோவும் சாப்பிட கிளம்பிப் போய்க்கொண்டே இருக்கிறார்கள். தனிமையும், அடையாளமின்மையும், சுரண்டலும், சுயநலமுள்ள இந்த உலகத்தில் இருந்து அவர்களை பன்பாவும், பட்டாடா வடாவும், ஈரானியன் சாயும், நண்டுபொரியலும், பொரித்த மீனும் தான் காப்பாற்றியது என நினைக்கத் தூண்டுகிறது. ஆனால் இந்தச் சுவை என்பது வெறும் நாவின் சுவை மட்டுமல்ல. மன ஆழத்தில் இருந்து ஊற்றெடுக்கும் சுவை. இந்த பொருண்மை உலகத்தில் அதன் ஒவ்வொரு துளியின் மீதும் பொதிந்திருக்கும் சுவை. அதுவே அவர்களை எதிர்மறை ஆளுமைகளாக ஆக்காமல் மீட்டது, இப்பூமியின் மீதும், மானுத்தின் மீதும் நம்பிக்கை இழக்காமல் கால் ஊன்றி நடக்கச் செய்தது எனத் தோன்றுகிறது.

நாஞ்சிலின் கதாபாத்திரங்களுக்கு உணவும் அது தரும் தீராச் சுவையும் என்றால், சு.வேணுகோபாலின் கதைமாந்தர்களுக்கு மண்ணும் உழவும் எனலாம். மண் மீது அவர்களுக்குள்ள பிடிப்பால், வெறும் நிலமும் நிலக்காட்சிகளும் அவர்களுள் உருவாக்கும் தாக்கத்தால் தாங்கள் சந்திக்கும் பல்வேறு நெருக்கடிகளை, இருளை தாண்டிச் செல்கிறார்கள் (அல்லது குறைந்தபட்சம் அவற்றை முழு உயிராற்றலோடு விடாமல் எதிர்கொள்கிறார்கள்). நாஞ்சிலின் நாவல்களில் உணவு சார்ந்த வர்ணனைகள் வந்துகொண்டே இருப்பது போல், சு.வேணுகோபாலின் ஆக்கங்களில் நிலம்சார்ந்த விவரிப்புகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் அவை பச்சைபசலென வீற்றிருக்கும் அழகிய நிலக்காட்சிகள் அல்ல, வறண்டு தகிக்கும் நிலத்தின் விவரிப்புகள். மைல் கணக்காக வெடித்து நீளும் வரப்புகளின் காட்சிகள். இருந்தும் அவை திரும்பத் திரும்ப அதன் அத்தனை நுட்பங்களோடும் வந்து கொண்டே இருக்கின்றன. நிலம் எதுவாக இருந்தாலும் அது மனிதனில் உருவாக்கும் உயிரிச்சையும், தாக்கமும் அடிப்படையில் ஒன்றுதான் என அவர் உணர்த்த விரும்புவது போல் கூட சில சமயம் தோன்றும்.

குறிப்பாக அவரது வெண்ணிலை சிறுகதைத் தொகுப்பில் உள்ள பல கதைகள் மண்ணுக்கும் மனிதருக்கும் உள்ள உறவை பேசவே முற்படுகின்றன. அவற்றிலும் பெரும்பாலான கதைகள் மானுட இருண்மையை நோக்கியே குவிகின்றன. மானுட மனநிழலில் படர்ந்திருக்கும் கருமையை வெகு இலகுவாக வேணுகோபால் இனம்கண்டு கொள்கிறார். ஆனால்  ஐரோப்பிய நவீனத்துவம் பேசும் இருண்மைக்கும், வேணுகோபால் பேசும் இருண்மைக்கும் முக்கிய வேறுபாடு உண்டு. காலத்தின் பிரம்மாண்டத்தின் முன் மிரண்டு நிற்கும் தனியனாக, இச்சைகளின் அலைக்கழிப்புகளால் கைவிடப்பட்ட மிருகமாக அவர் தனது கதைமாந்தர்களை காட்டவில்லை. மாறாக, சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் மரநிழலில் சேர்த்திவிடத் துடிக்கும், அதற்காக சலிப்பேயில்லாமல் தினசரி ஓடும் ஒருவனில், புதிர்தன்மையுடன் “எப்படியோ” குடிகொள்ளும் கூறுகளைச் சுட்டிக் காட்டவே விரும்புகிறார். அர்த்தமிழப்பாலும் அதனால் ஏற்படும் செயலின்மையாலும் ஒருவன் உணரும் இருண்மையுணர்வை அவர் பேச விழையவில்லை. மாறாக செயலூக்கத் தளத்தில் ஒருவன் உணரும் இருண்மையை, அவன் திடீரென எதிர்கொள்ளும் நிர்க்கதியை, அதை மீறிச் செல்ல துடிக்கும் போது அடையும் எழுச்சியையும் சரிவையும் சொல்லவே முற்படுகிறார்.

ஒரு சிறந்த இலக்கியப்படைப்பு என்றுமே வலிந்து முன்வைக்கப்படும் மன விகாரங்களாலோ பிறழ்வுகளாலோ ஆனது அல்ல. அதே சமயம், அது வாழ்வின் முடிவற்றுச் செல்லும் இருளை, கீழ்மைகளை,  அவமானங்களை,  சரிவுகளை பூசி மெழுகாது. நிதர்சனத்தைக் கண்டு அஞ்சி ஓடவும் ஓடாது. அவ்வகையில் எவ்வித உத்திகளும் இன்றி, சித்தரிப்பின் உக்கிரத்தால் மட்டுமே தனித்து நிற்கிறது சு.வேணுகோபாலின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு. வேர்வையும், லௌகீகக் கனவுகளுமாக உலா வரும் மனிதர்களின் வாழ்க்கையை போகிறபோக்கில் சொல்லிச் செல்கிறார் வேணுகோபால். அப்படி சொல்லிச் சொல்லியே வாழ்வுக் கணங்களின் அசாதாரணமான சிடுக்குகளை, முரண்பாடுகளை நம் கண்முன்னே நிறுத்துகிறார். கதை நெடுக்க வந்து கொண்டே இருக்கும் முகங்கள். விவசாயிகள். முதியவர்கள். ஸ்கூல் டீச்சர்கள். இல்லத்தரசிகள். பொறுக்கிகள். பித்தர்கள். ஆனால் இவர்களை லட்சிய உருவகங்களாக ஆக்க வேணுகோபால் முயல்வதில்லை. இவர்களின் துயரங்களை, மேன்மைகளை, சறுக்கல்களை எந்த ஒரு தத்துவச் சட்டகத்திற்க்குள் அடைக்கவும் அவர் முனைவதில்லை. உக்கிரமான கணங்களை சாதாரணமாகச் விவரிக்கிறார். அவை வாசகனுள் ஏற்படுத்தும் தத்தளிப்பும், மனஎழுச்சியுமே இந்தக் கதைகளின் வெற்றி எனச் சொல்லலாம்.

இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகளின் பேசுதளம் கைவிடப்படுதலும், அதனால் ஏற்படும் நிர்க்கதி நிலையுமே ஆகும். ஈரம் முழுக்க உறியப்பட்டு கைவிடப்பட்ட நிலம். நிலத்தால் நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்ட மனிதர்கள். மிச்சமிருக்கும் ஈரத்தையும் துளைபோட்டு கோர்த்துறிஞ்சி இந்நாளை கடந்துவிடத் துடிக்கும் ஆட்கள். இவர்களின் சூதறியா செய்கைகளால் கைவிடப்படப்போகும் நிலையில் உள்ள நாளைய தலைமுறை. கணவனின் பொறுப்பின்மையால், மகன்களின் மூர்க்கமான சுயநலத்தால் கதியற்றுப்போன பெண்கள், முதியவர்கள். குறிப்பாக இந்த தொகுப்பில் உள்ள “புத்துயிர்ப்பு” என்னும் கதை. இதன் பேசுபொருளும் கைவிடப்படுதலே ஆகும். ஆனால் ஜெயமோகன் உட்பட சில விமர்சகர்கள் முன்னரே குறிப்பிட்டுருப்பது போல், தொகுப்பில் உள்ள மற்ற கதைகளில் இருந்து இக்கதை அதன் கவித்துவத்தால், எழுச்சியால் தனித்து நிற்கிறது.

வேறு யாரோ ஒருவரின் தோட்டத்தில் இருந்து சோளத் தட்டையையோ, மாட்டுத்தீவனத்தையோ திருடி பிடிபட்டு எல்லோர் முன்னிலையிலும் கூனிக் குறுகி நிற்கும் சிலரை நாம் எங்கோ எப்போதோ பார்த்திருப்போம். அப்படி பிடிபட்ட ஒரு விவசாயியின் சரிவை நுட்பத்துடன் நம் கண்முன் நிறுத்தும் ஆக்கமே “புத்துயிர்ப்பு”. தனது மாட்டுக்கு ஒருபிடி புல்லுக்காக நாள் முழுக்க வெக்கையில் அலையும் ஒருவனின் வாழ்க்கையை “போகிறபோக்கில்” சொல்கிறார் வேணுகோபால். வரண்டு தகித்து எரியும் நிலம். பஞ்சப்பரப்பின் கோரத்தோற்றம். ஒரு தனிப்புல்லைக் கூட கோபாலால் எங்குமே காணமுடிவதில்லை. சுற்றிச் சுற்றிக் களைத்துப் போய், கண்களில் காய்ச்சல் முட்ட வீடு திரும்புகிறான். வீட்டில் நாக்குலர்ந்து படுத்திருக்கும் நிறைசினைப்பசு. கருவுற்றிருக்கும் மனைவி சாந்தா. தகதகக்கும் காரை. மனைவி மீது எரிந்தெரிந்து விழுகிறான். ஒரு பிடி புல்லுக்காக பொட்டலில் நாளெல்லாம் அலையும் அவனைக் கண்ட மனவேதனையில் மாட்டை விற்றுவிடும்படி சாந்தா கூற, குச்சியை எடுத்துக் கொண்டு அவளை அடிக்க ஓடுகிறான். பின்னர் சமாதானமாகி, அவளது நகையை பேங்கில் வைத்து இரண்டு வண்டிப் புல் வாங்கி வரச் செல்கிறான். பேங்கில் பணத்தை வாங்கிக் கொண்டு அனல் தகிக்கும் மதிய வெயிலில் புல் வாங்க அலைகிறான். எங்கெங்கோ அலைந்து பார்க்கிறான். எங்குமே ஒருகட்டு புல் கூட கிடைக்கவில்லை. நாலு மடங்கு விலைக்கு மொத்த புல்லையும் பக்கத்து பெருஊர்களில் இருந்து லாரியில் அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள் என அறிகிறான்.

பின்னர் மிகுந்த மனச்சோர்வுடன் வீடு திரும்பி மாட்டைக் கட்டிக் கொண்டு உடைந்தழுகிறான். சாந்தா அவனை தேற்ற முயற்சிக்கிறாள். ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு படுக்கும்படி கூறுகிறாள். அவள் தூங்கியவுடன் சொந்தத்தில் ஒருவரின் சோளத் தோட்டத்திற்குள் புகுந்து கொஞ்சம் தீவனத்தை திருட முயற்சிக்கும்போது பிடிபடுகிறான். “என்னைய ஒண்ணும் மாமான்னு நொட்ட வேணாம்…… மாட வளக்க முடியலைன்னா எங்கிட்டாவது ஊம்பப் போடா” என்று கடுமையாக அவமானப்படுத்தப்படுகிறான். நடுஜாமத்தில் எழுந்த சத்தத்தைக் கேட்ட கிராமத்துப் பெரியவர் ஒருவர் அங்கு வருகிறார். அடி வாங்கி நிற்கும் கோபாலைப் பார்த்து “ஏண்டா நாயே.. இது ஒரு பொளப்பாடா” என்று ஏசி, அவர் பங்குக்கு அவனை இரண்டு தட்டு தட்டுகிறார். பின்னர் காலையில் பஞ்சாயத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று அவனை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள். விடிகாலையில் கோபால் பாலிடாலும் வாந்தியுமாக நுரை தள்ளிக் கிடக்கிறான். ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு ஒடுகிறார்கள். ”எம் பாவா…. இப்பிடிப் பண்ணிட்டியே பாவா..” என அவனது மனைவி கல்லீரல் அதிர கதறுகிறாள். அங்கேயே மயங்கி, குடம் உடைந்து, குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். சுருங்கிய பிஞ்சுத்தோலும், பிசுபிசுப்புமாக குறைமாதம் பிறக்கும் அந்தக் குழந்தையை வெயிலில் காட்ட மருத்துவச்சி தூக்கிக் கொண்டு ஓடுகிறாள்.

எது அந்த ஊர் மக்களையெல்லாம் நிர்க்கதியின் முனை நோக்கித் தள்ளியதோ அதுவே இக்குழந்தையின் மீதும் பட்டுத் தெறித்து மின்னுகிறது. அனைவரையும் அலைக்கழிக்கும் கோர வெயிலை தன் மூடிய பிஞ்சு விரல்களால் அள்ளிப் துளாவிப் பருகத் துடிக்கும் குழந்தை! நிர்க்கதியின் மடியில் கைக் கால்களை உதைத்துக் கொண்டு துடிக்கும் உயிரின் பேராற்றலை “வான் பொழிய மண் செழிக்க வாழையடி வாழையென வந்ததடி குழந்தை’ என குலவையிட்டு பாடி முடிக்கிறது இந்தச் சிறுகதை. வாழ்வியக்கத்தின் முடிவில்லா புதிர்த்தன்மையை கலையமைதியோடு நகம்மு உண்ர்த்துவதாலேயே இக்கதை பெரும் மனநெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இக்கதையிலும் வேணுகோபால சொல்லிச் சொல்லி சென்றபடி இருக்கிறார். எவ்வித படிமங்களும் இல்லாத நேரடியான விவரணை. கோபால் மீது சாந்தா கொண்டுள்ள பெரும் காதலை பற்றி சில வரிகளே வந்தாலும் வாசகன் முன்னே உயிர்ப்புள்ள ஒரு வாழ்க்கை விரிந்து எழுகிறது. கட்டைக் குரலில் கோபால் பாடும் ”பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து” என்ற பாடலின் ஒவ்வொரு ஏற்ற இறக்கத்தையும் நாமும் கேட்டு உருகுகிறோம். நெகிழ்ந்து நிற்கும் சாந்தாவின் உணர்வலைகளை நாமும் பகிர்ந்து கொள்கிறோம். ஆத்மார்த்தமான ஒரு கதைசொல்லியாலேயே வாசகனுள் இத்தகைய ஒரு நெருக்கத்தை உருவாக்க முடியும். கொஞ்சம் சறுக்கினால் கூட எல்லாம் செயற்கையாகப் போய்விடும். ஆனால் சு.வேணுகோபால் இவ்வகை நெருக்கத்தை மிக இயல்பாக வாசகனுள் உருவாக்குகிறார்.

இப்படி மண்ணில் ஊறித் திளைக்கும் ஒருவனை ரத்தமும், சதையுமாக நம் கண்முன்னே நிறுத்துகிறார் வேணுகோபால். கதையின் ஒருபகுதி முழுக்க உயிர்ப்புடன் விரிகிறது கோபாலின் ஆளுமைச்சித்திரம். நுரை தள்ளிக் கிடந்த கோபாலை ஆஸ்பத்திரியில் சேர்த்த நண்பர்கள் அவனை நினைவுகூரும்  இடத்தை உதாரணமாகச் சொல்லலாம்.  அதே போல் தீவனம் கிடைக்காது போன துக்கத்தையும் மீறி, துண்டுச் சாக்கை ரெண்டாக மடித்து மாட்டை பளபளவென கோபால் துடைக்கும் இடத்தையும் கூறலாம். “தேய்க்கத் தேய்க்க பளபளவென மின்னியது… பசியிலும் சொகமாக நின்று கண்களை மூடியது” போன்ற ஓரிரு வரிகளிலேயே கோபாலுக்கும், மாட்டுக்கும் உள்ள ஆழமான பந்தத்தை உணர்த்துகிறார். முன்னிரவில் புல்கட்டு எதுவும் கிடைக்காமல் சோர்ந்து போய் திருப்பும் கோபாலை, அவனது சைக்கிள் சத்தத்தை வைத்து கண்டுபிடித்து தன் முழுகனத்தையும் தாங்கி திடுதிப்பென எழுந்து நிற்கும் நிறைசினைப்பசுவின் சித்திரமும், அதைக் கண்டு கோபால் கரைந்தழுவதும் நம்முள் ஒரு பெரும் தத்தளிப்பை உருவாக்குகிறது.

பிறகு கடைசியில் அவன் பாலிடால் குடித்து தரையில் நுரைதள்ளிக் கிடக்கும் காட்சிகள் வழியாக கோபாலின் சரிவை விவரிக்கிறார். இவ்வாறு மண்மீது அவன் கொண்டுள்ள உயிர்ப்புள்ள பிடிப்பையும், சுழித்தோடும் வாழ்வுக்கணங்களில் அவன் திமிறி எழுந்து, பின்னர் சறுக்கி, மீண்டும் எழுந்து, பிறகு மீண்டும் வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்படும் சித்திரத்தையும் நம் மனக்கண் முன் வரைந்தபடியே செல்கிறார். அதனாலேயே இக்கதை “ஒருவன் அடையும் சரிவு” எனும் தளத்தைத் தாண்டி “மானுட சரிவு” என்ற தளத்திற்குள்ளும், “சரிவு என்றால் என்ன?” என்னும் கேள்விக்குள்ளும் சென்று, ஒரு செவ்வியல் ஆக்கமாக முழுமை கொள்கிறது

ஒரு விவசாயியின் உலகத்திற்குள் செல்லும் வேணுகோபால், அதே அளவு நுட்பத்துடன் நடுத்தர-கீழ்நடுத்தர இளைஞர்களின் உலகத்திற்குள்ளும், இல்லத்தரசியின் உலகத்திற்குள்ளும் செல்கிறார். கே.டிவியை மாற்றி கார்ட்டூன் நெட்வொர்க் போடும் தன் குட்டி மகனை குண்டியில் ஒரு தட்டி தட்டி, உதைபடப்போற என மிரட்டும் இல்லத்தரசி ஒரு நல்ல உதாரணம். அதே போல் இளைஞர்களின் உலகத்தையும் மிகுந்த சமகாலத்தன்மையுடன் துல்லியமாக பதிவு செய்த வெகு சில தமிழ் படைப்பாளிகளில் சு.வேணுகோபாலும் ஒருவர். முன்முடியில் வெண்கலநிற டை, பட்டை பெல்ட், பிறைச்சந்திரவடிவ கிருதா என பஸ்ஸில் ”ரவுசு” விடும் இளைஞன் தமிழில் அதிகம் எழுதப்படாத ஒரு சமகால யதார்த்தம். தமிழ் சினிமா கதாப்பாத்திரமாக தன்னைத் தானே நிஜவாழ்வின் ஒவ்வொரு நிமிடத்திலும் கட்டமைத்துக் கொண்டிருக்கும் ஜீவன். அவன் உதிர்க்கும் ஒவ்வொரு வாசகத்திலும், உடலசைவிலும் ஏதோவொரு விதமாக தமிழ் சினிமாவின் தாக்கம் இருக்கும். அவர்கள் உலகத்திலுள்ள அலட்டல்களை, கலாய்ப்புகளையெல்லாம் மிக இயல்பாக வேணுகோபால் கொண்டுவருகிறார். இவற்றையெல்லாம் தாண்டி அந்த இளைஞர்களிடையே நீளும் ஆழமான நட்பை ஒரு கொண்டாட்டத்தன்மையோடு விவரிக்கிறார். வாட்டர் பாக்கெட், மிக்சர், அவித்த கடலை புடைசூழ அவர்கள் தண்ணி அடித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் கலாய்ப்பதும், ஒரு முழு ஆம்லெட் உள்ளே போன குஷியில் ஆடிகுதிப்பதுமாக வரும் இடம் ஒரு நல்ல உதாரணம்.

ஆனால் இவர்களை அப்பட்டமான பொறுக்கிகளாகவோ அல்லது வீராவேசம் பொங்கி வழியும் நாயகர்களாகவோ வேணுகோபால் காட்ட முயலவில்லை. இவர்களின் எல்லா குறைகளோடும், இளமைக்கே உரிய பலவீனங்களோடுமே காட்டுகிறார். இருந்தும் வேணுகோபாலின் கவனம் அவர்கள் அடையும், அடைய முயலும் மேன்மையைச் சுற்றியே குவிகிறது. இது அற்புதமாக வெளிப்படுவது ”வெண்ணிலை” என்னும் கதையிலே.

மெயின் ரோட்டில், பிளக்கும் உச்சி வெயிலில், உடலதிர உறுமி பீதியைக் கிளப்பிச் செல்லும் அந்த “யமகா” பைக்கை தமிழகத்தில் நாம் அத்தனைபேருமே எங்கேனும் பார்த்திருப்போம். கிளச்சை முறிக்கிப் பிடித்துக் கொண்டு வளைந்து வளைந்து செல்லும் அந்தக் கர்சீப் கட்டிய இளைஞர்கள் போகும் வழியை திரும்பிப் பார்த்து, மனதார அவர்களை வசை பாடியபடி,  உடன் நடந்து வரும் நம் குழந்தையின் கையை இறுக்கப் பற்றியபடி நாமும் சென்றிருப்போம். அப்படி பைக்கில் விரட்டிப் பிடித்து “நியூ” தமிழ்ப்படத்தை தியேட்டரில் அது ஆரம்பிப்பதற்குள் பார்க்கச் செல்லத் துடிக்கும் இரு இளைஞர்களில் தொடங்குகிறது இந்தக் கதை. அப்போது சிக்னல் அருகே ஒரு பெண் தனித்து நின்று கொண்டிருப்பதை அவர்கள் பார்க்கிறார்கள். எங்கோ பார்த்த முகம். இவர்கள் சாலையை கடக்கும் போதும் அவள் அங்கேயே நின்றுகொண்டிருக்கிறாள். கல்லூரி அருகே உள்ளே ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பெண் அவள் என ஒருத்தன் நினைவுகூர்கிறான். பின் அவனுக்கு ஞாபகம் வருகிறது – மிகுந்த உயிர்த்துடிப்புடன் வேலை பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண் குறித்த அவனது நினைவுகள் எழுகின்றன. அவளுடையது எளிய குடும்பம். வறுமை. ஆனால் வாழ்வின் மீது அவள் கொண்டுள்ள பிடிப்பும், அதே சமயம் துளியும் ஆக்ரோஷமற்ற அவளது வேகமும் நேர்நிலைத்தன்மையும் அவனை அறியாமலேயே அப்போது ஆழ பதிந்துவிடுகின்றன. மிகச் சில காலமே அவளை அறிந்திருந்தாலும் இனிய நினைவுகளே அவனுள் அப்போது எழுகின்றன. ஆனால் அவள் இப்படி தெருவில் யாருமற்று நிற்பதை பார்க்கும் போது அவன் குழம்புகிறான்.

போய் என்னவென்று கேட்கிறார்கள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவளது தந்தை இறந்துவிட்டார். அடக்கம் செய்ய பணமில்லை. உதவிக்கும் வேறு யாருமில்லை. “எதையோ” நம்பி அங்கு சாலையில் வந்து நின்றிருக்கிறாள். இவர்கள் எப்படியோ பணத்தை தேத்தி சடலத்தை அடக்கம் செய்ய உதவுகிறார்கள். வெண்ணிலையா இவளை இப்படி விட்டுட்டு போயிட்டீங்களே என அவளது தாய் சடலத்தை பார்த்து கதறி அழுகிறாள்.

வெண்ணிலை. தாங்கிக்கொள்ளவே முடியாத தனிமை. பரிபூர்ணமான நிர்க்கதி. எந்த தைரியத்தில் அவள் அங்கு சாலையில் வந்து நின்றாள், அவன் மட்டும் அங்கு வரவில்லை, வந்து விசாரிக்கவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும் என அந்த இளைஞன் கேட்க நினைத்து பிறகு கடைசியில் விட்டுவிடுகிறான். ஆனால் கதை முடிந்தபிறகு அந்தக் கேள்வி உண்மையில் அவனை நோக்கி திரும்புவதை நாம் உணரலாம். அவன் பாட்டுக்கு படம் பார்க்க அடித்துப்பிடித்து பைக்கில் போய்க்கொண்டிருந்தவன், எதற்காக உதவினான்? எங்கோ எப்போதோ பார்த்தவள் தெருவில் நின்றுக் கொண்டிருந்தபோது எதற்காக திரும்பப் போய் விசாரித்தான்? இதற்கு விடை தேட எளிய முற்போக்கு விளக்கங்களுக்குள்ளோ அல்லது ஃபிராய்டிய கோட்பாட்டிற்குள்ளோ இந்தக் கதை செல்லவில்லை. உண்மையில் எந்த விடையுமே அளிக்காமல், மானுட இயக்கத்தின் புரிந்து கொள்ளவே முடியாத புதிர்த்தன்மையை வாசகனுக்கு உணர்த்தியபடி முடிவடைகிறது இந்தச் சிறுகதை.

வெண்ணிலா தன்னந்தனிமையானது. ஆனால் அதன் நிர்க்கதியில் இருந்து எழுவது வெக்கையும் குளிரும் மட்டுமல்ல, நிழலும் கூடத்தான். சு.வேணுகோபாலின் இந்தச் சிறுகதைத் தொகுப்பில் நிர்க்கதியின் குரூரத்தையும், நிழலையும் நாம் தொடர்ந்து உணர்ந்து கொண்டே இருக்கிறோம். அப்படி அந்த நிர்க்கதியின் நிழலில் மனிதர்கள் கொள்ளும் சரிவையும் எழுச்சியையும் ஒருசேர சொல்வதாலேயே வெண்ணிலை சிறுகதை தொகுப்பு மற்ற நவீனத்துவ எழுத்துகளில் இருந்து மாறுபடுகிறது. அந்தத் தனித்தன்மையாலேயே தமிழிலக்கியத்திலும் இந்தத் தொகுப்பு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

மானுடத் துயர்- பால்கனிகள் தொகுதியை முன்வைத்து….

கடலூர் சீனு

cuddalore seenu

மானுட துக்கம் என்றொரு சொல் உண்டு, இந்த உடல் கொண்டு இங்கு பிறந்து வருவதனாலேயே, அதன் எல்லைகள் காரணமாக , மானுட உடலம் உருவாகும்போதே அதன் கட்டமைப்புக்குள் எழுதப்பட்டுவிட்ட துக்கம். மானுடம் அனுபவிக்கும் அனைத்து துக்கங்களும், அதன் பிரதிபலிப்பு மட்டுமே என்று தத்துவ ஆய்வுகள் உரைக்கின்றன. இந்த பிரதிபலிப்பு துக்கங்களைத் தொகுத்து சாரமான மானுட துக்கத்துக்கு வந்து விழுபவனே ஆத்ம சாதகன்.

இவை எல்லாம் உயர் தளத்தில், இவை குறித்த எந்த பிரக்ஞையும் இன்றி இந்த துக்கத்தில் தவறி விழுவது இருக்கிறதே. அந்தத் துயர் இணையே அற்ற ஆறுதலே அற்ற துயர். நமக்கு மிக அருகே அத்துயரில் விழுபவர்கள். உலவிக் கொண்டிருக்கிறார்கள். அரவாணிகள். நீ ஒரு ஆம்பளையா என்ற வினாவை எதிர்கொண்டு கொலைகள் நிகந்திருக்கின்றன. நீயெல்லாம் ஒரு பெண்ணா எனும் ஒற்றை சொல்லில் பல தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. அடையாளத்தைச் சந்தேகிக்கும் ஒரு சொல்லை சமூகத்தால் தாள இயலாது. எனில் தனக்கான அடையாளத்தை இந்த உடலுக்குள்ளிருந்து, உறவுகளுக்குள்ளிருந்து, சமூகத்திலிருந்து கணம்கணமாய் நித்தம் துயரத்தையும் அவமதிப்பையும் உண்டு செறித்தபடி, நிறுவ முயல்கிறார்களே அரவாணிகள் அவர்களின் துக்கம் , புத்தன் அடைந்த துக்கத்தைவிடப் புனிதமானதுதான்.

அரவாணிகள் குறித்த பதிவுகளும் ,ஆவணங்களும் நிறைய கண்டிருந்தாலும் , அவர்கள் குறித்த புனைவுகளில் ஆழமான ஒன்றென ,சு .வேணுகோபால் அவர்களின் சமீபத்திய நெடுங்கதையான ‘பால்கனிகள் ‘ புனைவையே சொல்வேன் .

மதுரை கம்பம் ஆகிய ஊர்களில் பரவி வாழும் , விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட , [இந்தத் தலைமுறையில் வேலைக்கு செல்லும்] கூட்டுக் குடும்பம் ஒன்றினில் நிகழும் கதை . கிட்ணா [ஊராருக்கு மோகினி] அவர்களின் செல்லக் குழந்தை . அவன் வளர வளர அவன் பால் திரிபு கண்டிக்கப்படுகிறது . ஒரு சூழலில் தான் ஒரு பெண் என திட்டவட்டமாக அறிந்து , தன பெண்மையைக் காத்துக்கொள்ள வீட்டை விட்டு வெளியேறுகிறான் கிட்ணா . அதன் விளைவாக அவனுக்கான சொத்தையும் இழக்கிறான் .

நெடுநாள் கழிந்து ஒரு பெண்ணாக , தனது குலதெய்வ வழிபாட்டில் தனது குடும்பத்தைக் காண வருகிறான் . அவமானப்படுத்தி விரட்டப்படுகிறான் . மீண்டும் பல வருடம் கழித்து கிட்னாவை அவனது அக்கா ஒரு பதட்டமான சூழலில் சந்திக்கிறாள் . கிட்னா அவனது இயல்பான சமையல் திறமையால் ஒரு உணவகத்தில் மாஸ்டராக இருக்கிறான் . அவனது பாலியல் தோழன் அவனை ஏமாற்றிவிட்டுச் சென்ற சூழலில், ஒரு மகனைத் தத்தெடுத்து ,தனிமையில் வாழ்ந்து வருகிறான் .

திவ்யாவின் நோக்கில் சொல்லப்படும் புனைவு , ஒரு பெண்ணாக தனது தம்பியை நினைத்துக்கூட பார்க்க இயலாத திவ்யா , இறுதியில் அவனுக்குள் உறையும் தாய்மையைக் கண்டு , அதன் வாயிலாக அவனது ஆளுமையை அவள் அங்கீகரிப்பதுடன் நிறைவு கொள்கிறது .

பால்கனிகள் தமிழின் யதார்த்தவாதம் ,இயல்புவாதம் முயங்கிய புனைவு .நவீன தமிழ் இலக்கியம் அதன் வரலாற்றுப் போக்கில் இயல்புவாத , புனைவுகளில் உச்சம் தொட என்ன தேவையோ அதை மட்டும் ‘கண்டுபிடித்து ‘ நீக்கி படைப்புகளை உருவாக்கி முன் செல்ல . மாறாக பிற மொழிகளில் அது செழித்தது . பைரப்பாவின் ஒரு குடும்பம் சிதைகிறது புனைவின் வீச்சை தமிழில் தேடினால் , எதுவும் தேறாது என்பது ஒரு அப்பட்டமான உண்மை .

ஒரு காலகட்டம் பின்வாங்கி , அடுத்த நகர்வு துவங்கும் இச்சூழலின் பதாகை என நாஞ்சிலின் ‘யாம் உண்பேம் ‘ போல சில புனைவுகளை பட்டியல் இட்டால் அதில் இணையும் ஒன்றாக ‘பால்கனிகள் ‘ இருக்கும் . இக் குறுநாவல் அதன் அடிப்படைக் கட்டமைப்பால் செறிவாக உருவாகி , பாத்திரங்களை குறைந்த சொற்களில் முன்வைத்து புனைவின் வளர்ச்சிப் போக்கில் அவர்களின் ,மாறும் ,மாறாத குண இயல்புகள் துலங்குவதன் வழியே வாழ்வுக்கு இணையான நிகர் அனுபவமாக விரிகிறது .

திவ்யாவின் நோக்கில் சொல்லப்படும் இப்புனைவு , அவளது நோக்கில் கிட்ணா மெல்ல மெல்ல திரிபடைவதை ,அவள் அடையும் அதே குறுகுறுப்புடன் வாசகருக்குள் நிகழ்கிறது . குறிப்பாக தன மகளுக்கு பால் தர இயலாமல் ,தகிக்கும் தனங்களுடன் திவ்யா வீட்டுக்கு வரும்போது , கிட்ணா தன் மகளுக்கு அவனது முலைக் காம்பை சுவைக்கக் கொடுத்து , ஆறுதல் செய்வதைக் காணும் தருணம் , அவளது திகைப்பு வாசகனுக்கும் தொற்றுகிறது . புனைவின் இறுதியில் மோகினியின் குழந்தை பரிதியை இவன் கொடுத்து வைத்தவன் எனும் மனதுடன் எடுத்து கொஞ்சுகிறாள் . இந்த மெல்லிய மாற்றம் இங்கும் நிகழ ,இதுவே இந்தப் புனைவை கலைத் தருணம் கூடிய படைப்பாக மாற்றுகிறது .

கிட்ணா கோவில் கொடைக்கு வருகிறான் , தகராறில் பொறுத்துப் போகும் கிட்ணா ‘போடா அலிப்பயலே ‘ என்ற வசவு காதில் விழுந்ததும் ‘ஆமாண்டா அது என்ன நொட்ட வரும்போது தெரியலையோ ? இன்னொருக்கா சொல்லிப்பாரேன் ,கொட்டையில மிதிக்கிறேன் ‘ என ஆவேசமாக புடவை வழித்துக் கிளம்பும்போது , ” எப்டிக்கா மனுஷனால வெறுக்க முடியுது ? வெறுக்கறதுக்காக வாழ முடியுமா ?” எனக் கேட்கும்போது , உண்மையில் உடன் வாழும் சக மனிதன் என்றே மனம் ஏற்கிறது .

நவீன காவிய நடையின் உச்சம் வெண் முரசு சிகண்டினி எனில் , எதார்த்தவாதத்தின் முகம் மோகினி . இன்றைய தமிழ்நாவல் இலக்கிய வகை பேதங்கள் செழிப்பாக இயங்கும் ,வரலாற்று சாட்சியம் இவை இரண்டும் .
பால்கனிகள் கதையில் ஒரு வரி வருகிறது ”இயற்கை சிலருக்கு மட்டும் தனது சாரமான காருண்யத்தை ,அவர்களின் இயல்பாக பொதிந்து வாழ அனுப்பி விடுகிறது ”. பால்கனிகள் நாம் கட்டி உருவாக்கிய அறம் ,மனித நேயம் இவற்றுக்குப் பின்னுள்ள அற்பமான ‘மையத்தை ‘ ஒரு மிகைச் சொல்லுமின்றி பரிசீலிக்க வைக்கிறது .

மார்பகங்கள் பால்தரும் கனிகள் எனில் , குழந்தையைத் தந்து ,தாய்மையைத் தந்து , பால் புகட்ட இயலா மார்பகங்களைத் தந்த , இந்த இயற்கைப் பிறழ்வை எதில் சேர்க்க ?

இந்த வாதையின் கலை வெற்றியே பால்கனிகள் .

இரு நெடுங்கதைகள் அடங்கிய பால்கனிகள் தொகுதில் இரண்டாவது நெடுங்கதை ‘இழைகள்’. அவமதிப்பும், புறக்கணிப்பும், கீழ்மையும், கொஞ்சம் காருண்யமும் இழைகளாகக் கொண்டு நெய்யப்பட்ட வாழ்க்கையைச் சுமக்கும் ராமமூர்த்தி எனும் அரசுப்பள்ளி ஆசிரியரின் நினைவுகளாக விரியும் கதை.

தமிழக அரசு பாடப்புத்தக அட்டைகளில் ஒரு தொடர் வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும். தீண்டாமை ஒரு பாவச்செயல். தீண்டாமை பெருங்குற்றம். தீண்டாமை மனிதத்தன்மை அற்ற செயல். இந்த வாசகங்கள் என்று காலாவதி ஆகும்? தீண்டாமை என்பது சொரியாசிஸ் போல வெளியே தெரியும் அடையாளம் மட்டுமே. நோயின் வேர் எந்தக் கலாச்சாரமும், பண்பாடும் சென்று தீண்ட இயலா மானுட மனத்தின் இருண்ட ஆழத்தில் எங்கோ உள்ளது.

ஜீன் குடால் தனது ஆவணம் ஒன்றினில் மனிதனுக்கும் குரங்குக்குமான ஆச்சர்யகரமான ஒற்றுமை என வன்புணர்வு உள்ளிட்ட சில அடிப்படை அலகுகளை விவரிக்கிறார். அதில் ஒன்று ‘வலுத்த’ குரங்கு இளம் பெண்கள் கூட்டத்துடன், பாதுகாப்பு மிகுந்த வலுவான கிளையில் தங்குகிறது. தசை புடைத்த ருசியான பழங்கள் அதற்கு மட்டுமே. ‘இளைத்த’ குரங்குகள் வலுத்தவனுக்கு அடிமை சேவகம் செய்து, அண்டி வாழ்ந்து , அவன் விட்டுத் தரும் உணவுகளை உண்டு ஜீவித்துக் கிடக்கின்றன.

இக் கீழ்மையின் வேர்கள் மானுடத்துக்கும் அப்பால் உள்ளதோ என்றும் தோன்றுகிறது. அடிமைகள் இன்றி உபரி இல்லை. உபரி இன்றி உடமை இல்லை. குடும்பம், தனிச் சொத்து, அரசு, கடந்தகாலம் எதுவுமே இல்லை. அடிமைகளை வெறுக்காமல் சக மனிதனை ஒரு மனிதனால் அடிமையாக நடத்த இயலாது. இது மற்றொரு அடிப்படை உளவியல் சிக்கல்.

நில உடமை சமுதாயம் மாறி, ஜனநாயக யுகத்துக்குள் நுழைந்துவிட்டோம். ஆனால் நமது சமூக ஆழ்மனம் இந்த நிலப்பிரபுத்துவ மனநிலையில் இருந்து முற்றாக வெளியேறி ஜனநாயகப் பண்பை எய்திவிட்டதா? என்று வினவினால், விடை மழுப்பலாகவே அமையும்.

எனது நண்பர் அமெரிக்கா சென்று இறங்கிய முதல் நாள், முதன் முதலாக கேட்ட அறிவுறுத்தல் இது. ”நீங்க பாட்டுக்கு கேஷுவலா , கைகுலுக்க கை நீட்றதோ, தொட முயற்சி பண்றதோ பண்ணிடாதீங்க. அவங்க வெள்ளக்காரங்க, நீங்க அவங்ககிட்ட அப்டி நடந்துக்கறது இங்க சட்டப்படி குற்றம்.”

வேறொரு நண்பர் சொன்னார் ”பலநாள் சொந்தம் போல முகம் பூரிக்க ஹாய் என்று சொல்வார்கள். அவ்வளவுதான் அத்துடன் முகத்தை திருப்பிக் கொள்வார்கள். நீங்கள் என்றொரு ஜீவன் அங்கிருப்பதே அவர்களுக்கு தெரியாது. அவர்களின் பிளைன்ட் ஸ்பாட் அத்தனை வலுவானது”

சமீபத்தில் வெள்ளையானை நாவல் மீதான உரையாடல் ஒன்றினில் ஜெயமோகன் சொன்னார் ” ஒரு தலித்தால்தான் தலித்தின் துயரை எழுத முடியும் எனும் கூற்று உண்மையானால், ஒரு தலித்தால் மட்டுமே அந்த எழுத்திலுள்ள வலியை உணரமுடியும் என்றாகிறது. இது இலக்கியத்துக்கே புறம்பானது. தலித் இலக்கியம் எனும் வகைப்படுத்தலால் [ சமூகத்தில் அவர்கள் எப்படி தனிமைப்படுத்தப்படுகிறார்களோ ], தனிமைப்டும் போக்கே இறுதியில் எஞ்சும் ”.

சாதிக் கீழ்மையால், தனிமைப்படுத்த்ப்படும், புறக்கணிக்கப்படும், ஒருவன் குருதி ஈரம் உலராத தனது காயத்தை, அதன் வலியை, நினைத்துப் பார்ப்பதே ‘இழைகள்’ எனும் நெடுங்கதை. துயரத்தில் மேல் சாதி, கீழ் சாதி உண்டா என்ன? அது மானுடப் பொது. சாதியின் பெயரால் தான் அடைந்த கீழ்மைகள், அது ஏன் அதன் வேர்கள் எங்கே என்று புரியாமல் திகைத்து நிற்கும் ஒரு மிடில்க்ளாஸ் மனதின் நினைவலைகளே இக் கதை.

இலக்கியப் புனைவுகளில், குறிப்பிட்ட இரண்டு கதைகள் மிக தனித்துவமானது. முதலாவது தோப்பில் முகமது மீரானின் சன்னதியில் எனும் கதை. அடுத்தது ஜெயமோகன் எழுதிய வணங்கான் எனும் கதை.

சன்னதியில் கதையில் அத்தத் ஊரின் [கப்பலில் போய் சம்பாதித்த] பணக்கார பாய். அவருக்கு இரண்டு மகன்கள். வள்ளி துவங்கி அவளது பேரன் வரை அனைவரும் அவரது குடும்பத்தின் வேலையாட்கள். ராஜா போல வாழ்கிறார் பாய். வேலைக்காரர்களை மனிதர்களாக மதிக்காதவர். குடும்ப சண்டை உக்கிரம் அடைந்து தனது சொத்துக்களை இரு மகன்களுக்கும் எழுதி வைக்கிறார். வள்ளி குடும்பம். இரு மகன்மார் வீடுகளுக்கும் மாறி மாறி அடிமை சேவகம் செய்கிறது. நோய் முதுமை இரண்டும் பாயை குடும்பத்தினரின் புறக்கணிப்புக்கு ஆளாக்குகிறது.

ஒரு நாள் காலை பாய் கண்விழித்துப் பார்க்கிறார். நடக்க இயலாத நோய் முற்றிய பாய், மசூதி வாசலில் அனாதையாக கைவிடப்பட்டுக் கிடக்கிறார். அழுது புலம்புகிறார். எவரும் அவருக்கு உதவும் நிலையில் இல்லை. வள்ளி மட்டும் ஒவ்வொரு நாளும் அவரைக் கடந்து செல்லும்போதும் அவரை சுத்தம் செய்து, ஏமான்கள் தன் குடும்பத்துக்கு அளிக்கும் மிச்சிலில் கொஞ்சத்தை அவரது வட்டிலில் வார்த்துவிட்டு செல்கிறாள்.

ஒரு நாள் புயலும் மழையும் வலுக்கிறது. பாய் அழும் குரல் மழையின் ஓலத்தையும் தாண்டி, சேரியில் இருக்கும் வள்ளியின் வீடு வரை கேட்கிறது. சிறுவன் முருகன் திண்ணையில் இருந்து குதித்து இறங்குகிறான். ”அம்மா நம்ம எஜமான்மா” என்று கூவியபடி மழைக்குள் புகுந்து ஓடுகிறான். ஒரு கணம் யோசிக்கும் வள்ளி, புடவையை இழுத்து செருகி தானும் எஜமான் நோக்கி ஓடுகிறாள். நிர்வாணமாகக் கிடக்கும் தன் எஜமானை தாய் போல ஏந்திக்கொண்டு வீடு வருகிறாள்.

வணங்கான் கதை கறுத்தான் எனும் பண்ணை அடிமை, ஒவ்வொரு கணமும் எதிர்ப்பால் மீண்டெழுந்து கறுத்தான் எனும் ஆளுமையாக உயரும் பரிணாம கதியை எழுச்சியுடன் முன்வைக்கும் கதை.

முதல் கதை தமிழில் நிகழ்ந்த அபூர்வங்களில் ஒன்று. நில உடமைச் சமூகம் எனும் கலாச்சாரம் ஒன்றினை கட்டிவைத்த அடிப்படை சரடு ஒன்றினை, நேர் நிலை அம்சம் ஒன்றினை இத்தனை வலுவாக, உளம்பொங்கும் வண்ணம் சொன்ன கதைகள் குறைவே.

இரண்டாவது கதை மீறலின் கதை. என்னை உன்னால் அவமதிக்க முடியாது எனும் நிலைக்கு , ஒவ்வொரு கணமும் தன்னைச் சூழும் கீழ்மைகளைச் சுட்டெரித்து மீண்டெழும் ஆளுமை ஒன்றின் கதை.

இந்த இரண்டு எல்லைகளுக்கும் இடைப்பட்ட நிலை ஒன்று உண்டு. தனக்கு நிகழ்வதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், மீறிச்செல்லவும் வகையறியாமல் , கிடந்துழலும் நிலை. இந்த நிலையில் நிற்கும் ராமமூர்த்தி எனும் ஆசிரியர், தனக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட நாளில், தான் கடந்து வந்த பாதையை எண்ணிப்பார்க்கும் வகையில் கூறப்பட்ட கதை.

போடிநாயக்கனூர் அருகே, வேலுப்பிள்ளையின் பண்ணையாள் சடையாண்டி மாரி தம்பதி. அவர்களுக்கு இரண்டு மகன் இரண்டு மகள். மூத்தவன் பரமன். ரேணுகா டீச்சர் அவனுக்கு ராமமூர்த்தி என பெயரிட்டு பள்ளியில் சேர்க்கிறாள். காளிமுத்து எனும் கருப்புச் சட்டைக்காரர் ‘நீங்கள்லாம் படிச்சாத்தான் இனிமே உங்களுக்கு விடிவு காலம்’ என்று சொல்லி ராமனை ஆசிரியர் பயிற்சி கல்வியில் சேர்க்கிறார்.

ராமமூர்த்தியின் குடும்பம் மொத்தமும் , பண்ணண வேலை, கடன் என உழைத்து களைத்து அவனை ஆசிரியர் ஆக்குகிறார்கள். ராமன் ஆசிரியர் ஆகிறான் வீடு கட்டுகிறான். குழந்தைகள் வளர்கிறார்கள். ராமமூர்த்தியின் மனைவி முத்துலட்சுமி, கணவரின் தம்பி, தங்கைகளை சண்டை போட்டு விரட்டி விடுகிறாள். மூத்த தங்கையின் மகளை, மனைவிக்கு தெரியாமல் செலவு செய்து டீச்சர் ட்ரைனிங் சேர்க்கிறார். ராமமூர்த்தி. பணி நிறைவு எய்த ஆறு வருடங்கள் இருக்கும் நிலையில் அவருக்கு நல்லாசிரியர் விருது கிடைக்கிறது. தான் வாழ்ந்த, கீழ்மைகளும் அவமதிப்புகளும், கொஞ்சம் கருணையும் கவிந்த இந்த நடுத்தர வாழ்வை , விருது கிடைத்ததால் வந்த சிறு உவகையின் பின்னணியில் நினைவில் புரட்டியபடி வீடு நோக்கி நடக்கிறார் ராமமூர்த்தி.

கதையின் பல இழைகளில் ஒன்றாக, அரசுப் பள்ளி, அதன் சுகாதாரம், ஆசிரியர்கள் தொடங்கி மாணவர்கள் வரை கடைபிடிக்கப்படும் சாதிப் பாகுபாடு என சமகால கீழ்மையின் வரலாறு ஒன்று, கொஞ்சமே சொல்லி மீதியை விட்டு கலாபூர்வமாக ஆவணப்பதிவாகிறது.

ராமமூர்த்திக்கு சுயமாக வந்ததா, அல்லது கல்வியால் விளைந்ததா இந்த சுயமானம். அப்பாவையும் அம்மாவையும் வயது பேதமின்றி முதலாளி வீட்டில், எல்லோரும் பெயர் சொல்லி அழைப்பதில் அவனுக்கு வருகிறது முதல் கோபம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அவன் கோபம் புரிவதே இல்லை. இதுல என்ன கிடக்கு என்றே நினைக்கிறார்கள்.

பள்ளியில், இளம்பிராயக் காதலில், ஆசிரியர் பணியில், தேநீர்க்கடையில் என ராமமூர்த்தி தன் வாழ்வு நகரும் அத்தனை எல்லைகளிலும் புறக்கணிப்பின் வேதனையை எதிர்கொள்கிறான். கதைக்குள் ஒரு மிகைச்சொல்லுமின்றி நம்மை நிம்மதி இழக்க வைக்கும் தருணங்கள் பல வருகின்றன. குறிப்பாக ராமமூர்த்தியின் கறிக்குழம்பு மோகம் அவனை அலைக்கழிக்கும் தருணங்கள். மதியம் வீட்டுக்கு வரும் அப்பா களியை சட்டியில் வைத்து கரைத்தபடி பிள்ளைகளை அழைக்கிறார். பிள்ளைகளோ இன்று அம்மா சாயிபு வீட்டிலிருந்து கறி பிரியாணி கொண்டு வருவதாகவும் அதற்காக காத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். பிள்ளைகள் இன்று ”நல்ல சோறு ” சாப்பிடப் போகிறார்கள் என்று உவகையுடனும், பங்குவைக்க வேண்டிய தேவை இல்லாததாலும் அன்று வயிறார சாப்பிடுகிறார் அப்பா. பஞ்சு போன்ற கறி ருசி இழுக்க, பிள்ளைகள் நால்வரும் அம்மாவை தேடி போகிறார்கள். அம்மா வழியில் எதிர்படுகிறார்கள். மீந்த குழம்பிலும், பிரியாணியிலும் கறியைத் தேடி பிள்ளைகள் [குறிப்பாக ராமமூர்த்தி] ஏமாறுகிறார்கள்.தம்பியும் தங்கைகளும் அள்ளி அள்ளி உண்கிறார்கள், அம்மா தங்கைகளின் தலையை தடவியபடி அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அனைத்துக்கும் மேல் ராமமூர்த்திக்கு வலி தரும் நினைவாக நிரந்தரமாக தங்குவது, அந்த பிரியாணி அடி பிடித்த பகுதி. அதை ஒரு பழைய வட்டிலில் கூட கொடுக்காமல், அம்மாவின் முந்தானையையே பையாக மாற்றி அதில் கொடுத்து அனுப்புகிறார்கள். அன்று அந்த பிரியாணி அவனுக்கு ருசிக்காமல் போனதற்கு அதுவும் ஒரு காரணம்.

ஊர் திருவிழா நெருங்க, சக மாணவர்களுடன் கிளம்ப எத்தனிக்கிறான். நினைவில் கிடாவெட்டு, கறிக் குழம்பு. அவர்களோ ராமமூர்த்தியும் உடன் வரப்போகிறான் என அறிந்து குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே அவனை புறக்கணித்துவிட்டு போய் விடுகிறார்கள். யாருமற்ற வீட்டின் முன் அவமானத்தை சுமந்து தனித்து நிற்கிறான்.

உறவில் அவனுக்கு தாத்தா முறை. வாரம் ஒரு முறை கறிக் குழம்பு சாப்பிடும் அளவு வசதி கொண்டவர். கறிக்குழம்பு வாசனையை பின்பற்றி அவன் வீட்டுக்கு வரும்போதெல்லாம் [சாதி சொல்லி திட்டி] ‘அடிச்சி பத்து நாயை’ என்கிறார். அந்த வீட்டு செண்பகத்துடன் அவளுக்கு திருமணம் முடிந்த பின்னும் ராமமூர்த்திக்கு உறவு தொடர்கிறது. நாக்கு ருசி, காமப் பசியில் வந்து நிற்கிறது.

சாதி மதம் பாராமல் நிகழ்வது கலவி மட்டுமே. சின்ன முதலாளி, ராமமூர்த்தியின் பெரிய தங்கையை சுகிக்கிறான். அங்கே சாதி தடை இல்லை. ராமமூர்த்தி நசீமாவை சுகிக்கிறான். அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. அங்கு மதமும் தடை இல்லை.

சாதிப் படி நிலையில் கீழே உள்ளவனால் ஊருக்கு வெளியில்தான் மனை வாங்கி வீடு கட்ட முடியும். மின்சாரமே இல்லாமல், கூடவே புதிதாக வரும் அண்டை வீட்டாரின் புறக்கணிப்புடனும் பல நாட்கள் கழிக்கிறார்கள். கட்டிய வீட்டில் மாட்டி வைக்க அப்பா அம்மாவின் ஒரு புகைப்படம் கூட இல்லை.

அவனது ஆசிரியர் பயிற்சி விடுதிக்கு அவன் கேட்ட பணத்துடன் அப்பா வருகிறார். ராமமூர்த்திக்கோ அவன் விட்டு விலக விரும்பும் கீழ்மையை மீண்டும் அவன் மேல் சுமத்த வந்தவராக அப்பா தெரிகிறார். அப்பாவை யாரோ என்பதுபோல நோக்கி, கண்ணால் வெளியே வர சொல்கிறான். வந்ததும் அப்பா குறுகி நின்று கேட்கிறார் ‘ஏம்ப்பா நான் உள்ள வரக் கூடாதா’. அப்பா கொண்டுவந்த காசு ஜெயசுதாவை கவர்வதற்காக சட்டை பேன்ட்டாக மாறுகிறது. அந்தக் காசு கருங்கண்ணியை குட்டியுடன் விற்று கிடைத்த காசு.

கதையின் வலி மிகுந்த சித்திரம் கருங்கண்ணி ஆட்டுக்கும் அதன் குட்டிகளுக்கும் அம்மாவுக்குமான உறவு. அம்மா ஆடு வளர்க்கிறாள். அதில் பொருளாதார விடுதலை உள்ளது. ஆகவே அது முதலாளிக்கு பிடிக்காது. ஆகவே ஒரு ஆடு இரு குட்டிகளுக்கு மேல் அவளால் எப்போதுமே வளர்க்க இயலாது. ஒரு ஆடு, அதன் அடுத்த தலைமுறை வந்தபிறகு முந்திய தலைமுறையை அம்மா விற்று விடுவாள். மந்தையாக வளர்க்கையில் அப்படி ஒரு ஆடு மீது பாசம் படியாது. ஒற்றையாக வளர்க்கும்போது கிட்டத்தட்ட அது பிள்ளைகளுக்கு இணையான உறவாக மாறிவிடுகிறது. அதுவும் கருங்கண்ணி குட்டிபோட்ட ஆடு. அம்மா மதியம் தனது உணவைக்கூட பட்டினி கிடந்து கருங்கண்ணிக்கு அளித்து வளர்க்கிறாள். மகன் படிப்புக்காக அதை விற்கிறாள். மகள் ஒன்றினை இழந்தவள் போல ஆடு பிரிகையில் ஏங்கி அழுகிறாள். அனைத்தும் அறிந்தும் அந்தப் பணத்தைக் கொண்டே ராமமூர்த்தி , ஜெயசுதா முன் கெத்தாக நிற்க புதிய உடை வாங்குகிறான். ஜெயசுதா அவனின் குலதெய்வம் பெயர் கேட்கிறாள். அத்துடன் அவனை புறக்கணிக்கிறாள். நசீமாவுடனான கூடலில் அவனுக்குள் ஜெயசுதாவே எழுந்து வருகிறாள். நசீமாவின் பிள்ளைகள் அவனுடையவை. ஆனால் அவனால் ஒருபோதும் அள்ளிக் கொஞ்ச முடியாத, ஒரு மர்மக்கோட்டுக்கு அப்பால் இருப்பவை.

முப்பரிமாணம் கொண்டு ராமமூர்த்தியின் வாழ்வை சித்தரித்துக் காட்டி ,புறக்கணிப்பின் வலியை துல்லியமாக நமக்கு கடத்தி , புறக்கணிப்பதன் பின் உள்ள சிறுமையை, நமது அற உணர்வை மௌனமாக கேள்வி கேட்கிறது இந்தக் கதை.

தெணியான் எனும் இலங்கை எழுத்தாளரின் வாழ்வனுபவங்களில் ஒரு சம்பவம் . சாதிப் படிநிலையில் கீழ் படியில் இருப்பவர் தெணியான். ஊருக்குள் பெரிய சாதி எப்போதும் சாதி சண்டையில் திளைத்துக் கொண்டிருக்கிறது. தெணியானின் அம்மா குழந்தை பெற்றிருக்கிறார்கள். பெரிய சாதியில் குழந்தை பெற்ற ஒரு பெண் பிரசவத்தில் இறந்துவிடுகிறாள். வெளியே சாதியின் படிநிலை சண்டைகள் பிரிவுகள்.

தெணியான் வீட்டுக்கு பின் வாசலில், பெரிய சாதியின் ஆச்சி வந்து நிற்கிறாள். தாயை இழந்த குழந்தைக்கு, தெணியானின் அம்மா தனது தாய்ப்பாலை ஒரு கிண்ணத்தில் வார்த்து ஆச்சி வசம் கொடுத்து அனுப்புகிறாள்.

இலக்கியமும் கலைகளும், கால காலமாக புறக்கணிக்கப்பட்டவர்கள், வஞ்சிக்கப்பட்டவர்கள் பின் நின்று மானுடத்தை கேட்கும் கருணை அதுதான். தாய்ப் பாலுக்கு எங்கும் பசித்திருக்கும் குழந்தைபோல, புறக்கணிக்கப்பட்ட ஒருவனின் கருணைக்காண ஏக்கமே இந்த ‘இழைகள்’.

சு. வேணுகோபாலின் புது வாசகன்

டி. கே. அகிலன்

படம்: www.discoverybookpalace.com

அனைத்துச் செயல்களுக்கும் எங்கோ நிகழும் சிறு தூண்டுதலை அவற்றின் தொடக்கப்புள்ளியாக வரையறுக்கலாம். வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள் என்று இருப்பு ஒவ்வொரு மனிதனையும் அதன் மெல்லிய அழைப்புகளால் கணம்தோறும் தூண்டிக்கொண்டிருக்கிறது. தனிமனிதன் அவன் இயல்பிற்கேற்ப, தூண்டுதலை அறிந்து கொள்ளும் உணர்திறனின் வீரியத்திற்கேற்ப சில தூண்டுதல்களை மனதில் அடைகிறான். அவற்றிலும் மிகச் சிலவையே செயல்களாக தம்மை வெளிப்படுத்துகின்றன. மற்றவை அனைத்தும் அவன் மனதுக்குள்ளேயே அழிந்து விடுகின்றன. செயல்களின் அனுபவத்தில் வாழ்க்கை நிகழ்கிறது.

ஜூலை முதல் தேதியன்று மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தபோது,  எனக்கேயான ஒரு தூண்டுதல் காத்திருந்தது. அது என்ன என்பதில் முக்கியத்துவம் ஒன்றும் இல்லை. அப்போதிருந்த மனநிலை அத்தூண்டுதலை செயலாக மாற்றும் உத்வேகத்தையும் அளித்தது. ஒரு வேளை அந்நேரத்தில் வேறு மனநிலையில் இருந்திருந்தால் அது அப்போதே மரணத்தைக் கண்டிருக்கும். சு. வேணுகோபாலின் எழுத்துக்கள் குறித்து சில கட்டுரைகள் வழியாகக் கேள்விப்பட்டிருந்தவை, அந்தத் தூண்டுதலை உயிர்ப்புடன் வைத்திருந்து. அவருடைய சில புத்தகங்களை இணையம் வழியாக வாங்கினேன். தூண்டுதல் செயலாகத் தொடங்கி விட்டது. அதன் விளைவு எதுவாக இருந்தாலும் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். எல்லா அனுபவங்களும் கணநேர தூண்டுதல்களின் கண்ணிச்சரடுதானே!

இவ்வாறு மிகசமீபத்தில் நானும் சு. வேணுகோபாலின் வாசகன் ஆகி விட்டேன். முதலில் படிக்கத் தொடங்கியது, கூந்தப்பனை குறுநாவல் தொகுதி. கதைமாந்தர்களின் செயல்களும், அந்தச்செயல்களுக்குப்பின் இருக்கும் எண்ண ஓட்டங்களும், எண்ண ஓட்டங்களை வடிவமைத்த மனிதர்களின் இயல்புகளும், கதைமாந்தர்கள் வாழ்வில் ஆடும் ஆட்டத்தை இந்தக் கதைகள் விவரிக்கின்றன. நுண்ணிய மன இயக்கங்களின் விவரிப்புகள், மனித மனதின் அழகுகளையும் முடிச்சுகளையும் வெளிப்படுத்துவதுடன், இவைகளைப் பற்றிய வாசிப்புக்கும் உதவுகின்றன..

‘ஜக்கையன் அவர் முகத்தைப் பார்த்தான் இமைகளில் ஈரம் மினுமினுத்தது’ என்று முடிகிறது கண்ணிகள் என்னும் கூந்தப்பனைத் தொகுதியின் முதல் கதை. விவசாயம் செய்து வரும் நிலத்தில், விவசாய ஆட்கள் பற்றாக்குறையால் வட்டிக்குக் கடன் வாங்கி, ஏற்கனவே இருக்கும் கிணற்றை விட்டுவிட்டு புது போர்வெல் வைத்து தென்னைகள் நடுகிறார் ரங்கராஜன். இந்த நிலையில் மகனை கல்லூரியில் சேர்க்க மாத வட்டியில் ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கி, வட்டிக்காரன் கெடுபிடியால் அது வாரவட்டிக் கடனாக மாறி, சில வாரங்களில் வட்டி அசலைத் தின்று விடுகிறது. வட்டி கொடுக்க முடியாததால் பொது இடத்தில் வைத்துத் தாக்கப்பட்டு, மரியாதையை இழந்து தோட்டத்தையும் இழக்கும் நிலைக்கு வருகிறார். ஒரே நம்பிக்கை அறுவடைக்கு வரப்போகும் திராட்சைத் தோட்டம். திராட்சை விளைச்சலை நல்ல விலைக்கு எடுப்பதாக ஆசை காட்டுகிறார், ஜார்ஜ் என்னும் வியாபாரியின் கணக்கப்பிள்ளை. ஆனால் இறுதியில் கிறிஸ்தவனாக மாறினால்தான் அவர்களால் திராட்சைகளை விலைக்கு எடுத்துக்கொள்ள முடியும் என்னும் கண்ணியை வீசுகிறார்கள். மிக மென்மையாக அதைத்தவிர்த்து விட்டு ரங்கராஜன் வெளியே வருகிறார்.

பன்முகப்பண்பாட்டிலிருந்து ஒருமுகப்பண்பாட்டிற்கு அவர்களுக்கேயான காரணங்களால் நகர்ந்தவர்கள், அந்தப் பன்முகப்பண்பாட்டின் கூறுகளை இழந்து விடுவார்களா? அவர்கள் நோக்கமும் ஒருமுகத்தன்மையை அடைந்து விடுமா? அல்லது பன்முகத்தன்மையுடன் இருக்க இயலாதவர்கள்தான் அந்தப் பண்பாட்டை துறந்து விட்டு செல்கிறார்களா? அப்படி பொதுமைப்படுத்த முடியாதுதான். ஆனாலும் அது ஒரு காரணமாகவும் இருக்கக் கூடும். கண்ணிகளின் இறுதி வரிகள் இந்தத் திசையையும் சற்றுத் திரும்பிப்பார்க்கத் தூண்டுகின்றன. அவர் கண்களில் கசிந்த ஈர மினுமினுப்பு இயலாமையினாலா,  பன்முகத்தன்மையின் மனவிரிவு அளிக்கும் இரக்கத்தினாலா அதுவும் இல்லையெனில் ஒருமுகத்தன்மையின் கூர்முனைத் தாக்குதலினாலா?

இந்தக் கதையில், துயரத்தை நோக்கி இட்டுச் சென்றாலும் மனம் ஆடும் விளையாட்டுகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. ரங்கராஜன் மகனை கல்லூரியில் சேர்க்க வட்டிக்கடன் வாங்க தானாகவே முடிவு செய்து விட்ட பின்னும் அவருக்கு ஜக்கையனின் ஆலோசனை தேவைப்படுகிறது. ஜக்கையன் அவரை யோசனை செய்யச் சொல்லும் ஒவ்வொரு முறையும், அவருக்கேயான சாக்குபோக்குகள் வழியாக எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறார். ஆனாலும் ஆலோசனை தேவைப்படுகிறது. இது சாதாரண மனிதர்கள் ஒவ்வொருவரும் நடிக்கும் மனநாடகம்தானே? நாமே நடிக்கும்போது அது நாடகமாகத் தெரிவதில்லை. கதையில் அத்தகைய தருணத்தின் விவரிப்பு நம் இயல்பை உணரச் செய்து ரசிக்க வைக்கிறது.

மனிதர்கள் ஒருவருக்கொருவர், சிறு உதவிகளைச் செய்து அந்தச் செயல் அளிக்கும் மனநிறைவில் நிறைந்திருப்பது மிகவும் இயல்பானது. சமயங்களில் அதீத தன்முனைப்போ அல்லது தயக்கமோ அவற்றைச் செய்ய விடாமல் தடுக்கலாம். சு. வேணுகோபாலின் கதைகளில், தயக்கத்தின் மூலம் உதவிகளைத் தள்ளிப்போடுவதும், மற்றொருவர் தயக்கமின்றி அதே உதவியைச் செய்வதைக் கண்டு, தன் தயக்கத்தையும் அதற்கான காரணத்தையும் கண்டடைவதும் மிக இயல்பாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய விவரிப்புகள் இந்தக் கதைகளின் அழகுகள் எனத் தோன்றுகிறது. ‘வேதாளம் ஒளிந்திருக்கும்’ கதையில் இதைப்போன்ற இரண்டு தருணங்கள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. பஸ்-ல் ஏறும் கால் ஊனமுற்றவர், ஊனமுற்றவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் இருப்பவரை வலுக்கட்டாயமாக எழுப்பி விட்டு அதில் அமர்கிறார். கொஞ்ச நேரத்தில் ஒரு பெண் இடுப்பில் கைக்குழந்தையுடன் ஏறி நெருக்கத்தில் அல்லாடுகிறார். சற்றுப் பின்னால் அமர்ந்திருக்கும் கதைச்சொல்லி, தன் அருகில் வந்தால் எழும்பி இருக்கையை அளிக்கலாம் என எண்ணிக்கொண்டிருக்கையில், அந்த ஊனமுற்றவர் தன் இருக்கையிலிருந்து எழுந்து அதில் அந்தப்பெண்ணை அமரச் செய்கிறார். இதே கதையில், இன்னொரு பஸ் பிரயாணத்தில் தன்னிடம் இருந்த பணம் திருடப்பட்ட நிலையில் ஒரு முதியவர் டிக்கெட் எடுக்க முடியாத காரணத்தால் கண்டக்டரிடம் இருந்து வசையைப் பெற்றுக்கொண்டிருக்கிறார். கதைச்சொல்லி அவருக்கு உதவலாமா என எண்ணிக்கொண்டே, இது போன்ற சந்தர்ப்பங்களில் ஏமாந்து போன ஒரு நிகழ்வை அசைபோட்டுக் கொண்டிருக்கும்போது, ஒரு பள்ளி மாணவன் முதியவருக்கான டிக்கெட் வாங்கி விடுகிறான். மனதின் அழகுகளையும், அவற்றை வெளிப்படுத்தும் தயக்கங்களையும் இத்தகைய நிகழ்வுகளின் விவரிப்புகள் மூலம் சு. வேணுகோபால் அங்கிங்கு சித்தரிக்கிறார்..

‘மெலிதாக கைகளில் படிந்திருக்கும்  ரோமங்களிலும், தோலிலும், எலும்பிலும்,  திசுவிலும், திசுவுக்குள் அணுவிலும், நகங்களிலும், உடலை முழுவதும் சுற்றி வரும் இரத்தத்திலும், இன்ன இடமென்று இல்லாமல் அவனுக்குள் அந்த வியாதி பதுங்கியிருந்தது’. ‘அபாயச் சங்கு’ கதையில் கதைநாயகனான சுரேந்திரனின் காமநோய் இப்படி விவரிக்கப்படுகிறது. காமம் மட்டும்தான் இப்படிப் பதுங்கியிருக்க வேண்டுமா? பொறாமை, பயம், பேராசை, வஞ்சகம் என எது வேண்டுமானாலும் உடலின் ஒவ்வொரு அணுவிலும் படர்ந்திருக்கும் வியாதியாகவும் இருக்கலாமே. அடுத்த வரியில் ‘மோகம் என்று சொல்வதைவிட அவமானத்தின் பிரதிபிம்பம் என்று சொல்லலாம்’ என்று கூறி, நோயின் மூலமும் உணர்த்தபபடுகிறது.

சுரேந்திரன் கல்லூரியில் படிக்கும் வயதில் அந்த வீட்டிற்குக் குடிவருகிறார்கள். எதிர் வீட்டில் கோகிலா குடியிருக்கிறாள். அவளின் அம்மா ரத்னமணி. கோகிலா சுரேந்திரனை உசுப்பேற்ற, அவர்களுக்குள் காதல் வருகிறது. அரசாங்க வேலைக்கு லஞ்சம் கொடுத்து, அது தற்காலிக வேலை என்பது தெரியாமல், வேலையில் சேர்கிறான். அரசாங்க வேலை கிடைத்ததும், ரத்தனமணியும் அவர்கள் காதலை ஏற்பதுடன் ஊக்குவிக்கிறாள். ஆனால் தற்காலிக பணிக்காலம் முடிந்ததும் சுரேந்திரனுக்கு வேறு வேலைகள் கிடைக்கவில்லை. கோகிலாவுக்கு வேறு திருமணம் அவள் ஒப்புதலுடன் செய்து வைக்கப்படுகிறது. சுரேந்திரன் அவமானப்படுத்தப்படுகிறான், அவமானமடைகிறான். இதற்கு வடிகாலாக ரத்னமணியைக் காமத்தால் ஆள நினைக்கிறான்.. அவளும் உடன்படுகிறாள். காமம் அவனையே முழுமையாக ஆக்கிரமிக்கும் வியாதியாகப் பரவுகிறது. தன் நோயின் தீவிரத்தையும், அதன் காரணத்தையும் விளைவுகளையும் உணரும் தருணத்தில் நோயை அழிக்க, தற்கொலை செய்து கொள்கிறான்.

தன் இயலாமையை அறியும் சாதாரண மனிதன் அதை மறைக்கும் பாவனைகளை நடிப்பதும், அவை வாழ்க்கையை மேலும் சிக்கலாக்குவதையும்தான் நடைமுறை வாழ்க்கையில் பெரும்பாலும் காண்கிறோம். ஆனால் தன் இயலாமையை காலம் கடந்து அறியும் ‘கூந்தப்பனை’ கதையின் நாயகன் சதீஷ், அந்த இயலாமையை வெற்றி கொள்ள முயல்கிறான். அது இயலாமை மட்டும் அல்ல தன் உடலின் இயல்பும் அதுதான் என அறியும்போது அதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தன்னிடமிருந்து மனமுவந்து விடுதலை அளிக்கிறான். அவன் பெருந்தன்மையை காண மறுக்கும் சமூகம் அதற்காக அவனை அவமதிக்கிறது. அதைவிட விடுதலை பெற்ற பெண்ணிடமிருந்தும் இயல்பாக வரும் அவமதிப்பு அவனைத் துரத்துகிறது. அவமதிப்பையும் இயலாமையும் சதீஷ் கடந்து சென்றடைந்த இடம், சற்றே நுண்ணுணர்வு கொண்ட வாசகனுக்கு, எந்த சுயமுன்னேற்றம் குறித்த படைப்புகளும் அளிக்காத வாசிப்பனுபவத்தை அளிக்கும் சாத்தியமுள்ளது. கூந்தப்பனை என்னும் சொல், தன் வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டும் பூத்துக் காய்க்கும் ஒரு வகையான பனை மரத்தின் பெயர் என்று இணையத் தேடுதல் மூலம் அறிந்தேன்.

சதீஷ், உடல் உறுதி உடையவன். அவன் உடல் பெண்களை மோகம் கொள்ள வைக்கிறது. ஹேமலதாவுடன் சதீஷுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அவளும் அவன் உடலைக்கண்டு மோகிக்கிறாள். திருமணத்திற்குப்பின்தான் சதீஷின் இயலாமை அவனுக்குத் தெரிய வருகிறது. அவனால் முழுமையான உடலுறவு கொள்ள முடியாது. ஏமாற்றத்தில் ஹேமலதா இடிந்து விட்டாலும் சமாளித்துக்கொள்கிறாள். அவனுடன் இயல்பான வாழ்க்கையை வாழ முயற்சித்து, அவனையும் இயல்பாக்க முயற்சிக்கிறாள். ஆனால் சதீஷ் தன்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை பாழாவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறான். தன் நண்பனுக்கும் ஹேமலதாவுக்கும் திருமணம் செய்வித்து அவர்களுடனே வாழ்கிறான். சமூகம் அவன் பெருந்தன்மையை ஏற்றுக்கொள்ளாமல், அவன் இயலாமையை மட்டும் அவனுடன் அடையாளப்படுத்துகிறது. தன்மனைவிக்கும் அவள் புதுக்கணவனுக்கும் தான் இடைஞ்சலாக இருப்பதை உணர்ந்து, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் அவன் தன் வீட்டிலிருந்து வெளியேறுகிறான். ஆனால் தன் இயல்பிற்கேற்ற வாழ்க்கையை அடைந்து, தன்னுள் இருக்கும் கருணையை வெளிப்படுத்தும் உச்ச கணத்தில்  கதை முடிகிறது. இந்த உச்சகணம்தான் அவனில் மலர்ந்த ஒரே மலர் என்பதைத்தான் கதை சொல்கிறது.

‘வெண்ணிலை’ சிறுகதைத் தொகுதி, முற்றிலும் வேறான வாசிப்பனுபவத்தை அளித்தது. என் பார்வையில், ஒவ்வொரு கதையும் மனிதனின் ஒரு சிறு தன்மையை, பெரும்பாலும் கவனிக்கப்படாத அல்லது எதிர்மறையாக பொதுபுத்தியில் விளங்கிக்கொள்ளப்படும் தன்மையின் அடிப்படையாக இருக்கும் அழகை விவரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. உதாரணமாக ‘வெண்ணிலை’ சிறுகதை. நண்பர்கள் சிலர் சினிமாவிற்கு மோட்டார் சைக்கிளில், மருத்துவமனை வாசல் வழியாகச் செல்கிறார்கள். ‘சிக்னல்’-ல் கடந்து செல்லும்போது, ஒரு பெண் இவர்களைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனிக்கிறார்கள். அந்தப்பெண் விபச்சாரியாக இருப்பாளோ, சினிமாவுக்குச் செல்லாமல் அவளை அழைத்துக்கொண்டு சுற்றலாமா என்னும் ரீதியில் இருவரும் பேசியவாறு தியேட்டருக்கும் சென்று சேர்ந்து விடுகிறார்கள். அந்தப் பெண், அவர்களுக்குத் தெரிந்தவள்தான் என்பதும் பின்னர் நினைவுக்கு வருகிறது. எதிர்பார்த்துச் சென்ற சினிமா மாற்றப்பட்டு விட்டதால், அதே வழியில் திரும்பி வருகிறார்கள். அந்தப்பெண் இன்னும் அங்கு நிற்கிறாள். இவர்களைக் கண்டதும், ஏதோ கேட்பதைப்போல பார்க்கிறாள். இவர்கள் சென்று விசாரிக்கும்போதுதான் அவள் இருக்கும் இக்கட்டு புரிந்து, அவளுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறார்கள். ஒரு செயலின் பின்னால் இருக்கும் நோக்கம் அறியப்படாமல் இருக்கும்வரை, அந்தச் செயல் மற்றவர் எண்ணங்களை எவ்வாறு அலைக்கழிக்கிறது, செயலின் பின் இருக்கும் உண்மை வெளிப்படும்போது, அது எவ்வாறு மற்றவர்களைத் தாக்குகிறது என்பது, கதையின் விவரிப்பில் இன்னும் அழகாக வாசகர்களைத் தொடுகிறது. அந்தத் தொடுதல் நிகழ்ந்தால், எண்ணங்களை உண்மையிலிருந்து பிரித்துப் பார்ப்பது சாத்தியமாகலாம்.

‘வெண்ணிலை’ தொகுதியில் வரும் ‘சந்தர்ப்பம்’ சிறுகதையை, அதைப் படிக்கும்போது இருந்த மனநிலை என்னை ரசிக்க வைத்தது. பள்ளி இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், தங்கள் வகுப்புத்தோழனின் அக்கா திருமணத்துக்காக பக்கத்து ஊருக்குச் சென்று, ஒரு இரவு அங்கு தங்குகிறார்கள். அங்கிருக்கும் நேரம் முழுவதும், அந்த வயதுக்கேயான கொண்டாட்டங்களை நிகழ்த்துகிறார்கள். அவர்களில் ஒருவன் கதிரேசன். அவன் எல்லா எல்லைமீறல்களிலிருந்தும் ஒதுங்கியிருப்பதால் ‘பிள்ளைப்பூச்சி’ எனப்பெயர்பெற்றவன். கொண்டாட்டங்களை முடித்துவிட்டு, அடுத்தநாள் வீடு திரும்புகிறார்கள். கதிரேசனும் இன்னொருவனும் தவிர அனைவரும் வழியில் இறங்கிச் சென்று விடுகின்றனர். அவர்கள் இருவரும் பஸ்நிலையத்தில் இறங்கிச் செல்லும்போது, ஒரு இளைஞன் பெண் ஒருத்தியை மானபங்கப்படுத்துகிறான். கூட்டம் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறது. கொதிக்கும் ஒரு சிலரும் அவன் தன் கையில் வைத்திருக்கும், ஆயுதத்தைக் கண்டு பயந்து ஒதுங்குகிறார்கள். கதிரேசன் எதிர்பாராத ஒரு தருணத்தில், ஏதோ ஒரு தூண்டுதலில் பாய்ந்து அந்த இளைஞனை வீழ்த்துகிறான். அவன் நண்பனும் அவனுக்கு உதவுகிறான். அனைத்தும் முடிந்து விடுகிறது. ஆனால் அவன் இயல்பான பயம் மீண்டும் அவனிடம் ஒட்டிக்கொள்கிறது. தங்களை வீரர்களாக வரித்துக் கொள்பவர்கள், வீரம் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் அதை ஒளித்து வைத்து விடுகிறார்கள். ஆனால் இயல்பிலேயே பயத்துடன் இருப்பவன், தேவையான நேரத்தில் பயத்தை மறந்து, வாழ்வின் தேவைக்கு தன்னை ஒப்புக் கொடுக்கிறான்.

என் வாசிப்பும், ரசனையின் விரிவும் எல்லைக்குட்பட்டது.  அந்த எல்லைக்குள் அடைந்த வாசிப்பனுபவம், என்னளவில் குறிப்பிடத்தக்கதாகவே இருந்தது. என் ரசனை பெரும்பாலும் புறச்செயல்களை விட அக இயக்கங்களைப் புரிந்து கொள்ளும் நாட்டம் கொண்டதாக இருக்கும். அந்த வகையில் காணும்போது இவ்வாசிப்பு ஒரு முழுமையான அனுபவமாக இருந்தது என்றுதான் கூறவேண்டும். பெரும்பாலான கதைத்தருணங்கள் புற இயக்கங்களாக இருந்தாலும் அவற்றுக்குக் காரணமாக இருந்திருக்கும் எண்ண ஓட்டங்களை கற்பனை செய்வது ஒரு இனிய அனுபவமாகவே இருந்தது.