தமிழாக்கம்

ஜெஜூரிக்கும் ரயில் நிலையத்திற்கும் இடையே

 காஸ்மிக் தூசி

photo

சிறிய கோயில் நகரம்
அதன் மலை அடிவாரத்தில்
நெருக்கியடித்துக் கொண்டிருக்கும்
அறுபத்து மூன்று பூசாரிகள் உள்ள
அறுபத்து மூன்று வீடுகள்
அதன் முந்நூறு தூண்கள்
ஐந்நூறு படிகள் மற்றும்
பதினெட்டு வளைவுகள் விட்டு

பூசாரியின் மகன்
ஒருபோதும் சொல்லத்துணியாத
திறமையின் வழிபணம் சேர்த்த
ஒருபோதும் உள்ளே கால் வைக்க மாட்டேன்
என அவன் நம்பும்
கோயில் நாட்டியக்காரியின்
அறுபத்து நான்காவது வீட்டை கடந்து
இடிந்த கோயிலைத் தாண்டிச் சென்றாலும்

காணவில்லை கோயில்நாயை
கோரக்‌ஷநாத் முடிவெட்டும் சலூன்
மகாலஷ்கந்த கபே
மற்றும் மாவு மில் தாண்டிவிட்டால்
அவ்வளவு தான்.
முடிந்தது.

வந்தாயிற்று நகரம் விட்டு
கையில் ஒரு தேங்காயோடு.
பாக்கெட்டில் ஒரு பூசாரியின் முகவரி அட்டை
மற்றும் தலைக்குள் சில கேள்விகள்.
ஜெஜூரி ஒருபுறம்
ரயில் நிலையம் மறுபுறம்
வழியில் இரண்டுக்கும் நடுவே வந்தபின்
கனவில் இருப்பது போல.
செய்வதறியாது
நிற்க வேண்டியதுதான்.
இருபுறமும் தட்டுகள் சமநிலைப்பட்டபின்
ஏற்கவும் இழக்கவும் முடியாமல்
அசையாமல் நிற்கும் முள்ளாகி.

தடத்தில் செல்லாமல் திகைப்பூட்டி
நிறுத்தி வைக்கும் காட்சி
சோளக்கொல்லையில்
ஒரு டஜன் சேவல்களும் கோழிகளும் .
ஒரு வகை அறுவடை நடனம் போல.
இதுவரை பார்த்தவற்றிலேயே
விநோதமானது
ஏழு பறவைகள்
தன் நான்கு மடங்கு உயரத்திற்கு குதிக்க
குறுக்கே பாய்கின்றன
ஐந்து பறவைகள் தானியம் எடுத்த அலகுடன்

Untitled

என்னைப்பார்க்க எவ்வளவு அசட்டுத்தனமாக இருக்கும்
என்பதை மறந்துவிட்டு நிற்கிறேன்
உண்மையில் இருப்பதைப்போலவே
இடப்புறம் பூசாரி
வலப்புறமாக
ஒரு ஸ்டேஷன் மாஸ்டர்.
000

(அருண் கொலாட்கரின் Between Jejuri and The Railway Station என்ற கவிதையின் தமிழாக்கம்)

ஒளிப்பட உதவி- http://banmilleronbusiness.com/

போதுமான விபரங்கள் தெரியவில்லை – பாட்ஜட் பவல்

– பாட்ஜட் பவல் (Padgett Powell) – 

நாம் அறிந்து கொள்ள விரும்பும் சிலர் இருக்கின்றனர், அறிந்து கொள்ள விரும்பாத சிலர் இருக்கின்றனர், அறிந்துகொள்ள விரும்பக்கூடிய சிலர் இருக்கின்றனர், நாம் ஒரு வேளை சந்திக்க நேர்ந்தால் அறிந்து கொள்ள விரும்பாத சிலரும் இருக்கின்றனர். சிலருக்கு பலரைத் தெரிந்திருக்கிறது, பலருக்குச் சிலரைத் தெரிந்திருக்கிறது, சிலருக்கு சிலரே தெரிந்திருக்கிறது. கடைசியில் பார்த்தால், எல்லாரையும் தெரிந்து கொள்ளும் விருப்பம் இருக்கிறதா அல்லது யாரையும் தெரிந்து கொள்ளாமல் இருக்கும் விருப்பம் இருக்கிறதா என்ற உந்துதலில்தான் வந்து முடிகிறது. இதை ஒரு கொதிவடி நெடுங்களன் என்று சொல்லலாம். மேற்பரப்பில் எல்லாரையும் அறிந்திருக்கும் உற்சாகிகள் இருக்கின்றனர், அடியில் தனிமை விரும்பிகள் இருக்கின்றனர். மேற்பரப்பில் புனிதர்கள், அடியில் கொலைகாரர்கள். சில கொலைகாரர்களுக்கு ஒரு கொலை செய்தாலே போதுமானதாக இருக்கும், சிலர் நூற்றுக்கணக்கில் அல்லது ஆயிரக்கணக்கில் கொல்ல விரும்புகிறார்கள். அனைத்துக்கும் அடிமட்டத்தில் தன்னைத் தவிர வேறு யாரையும் அறியாதவன் இருக்கிறான், அவன் தற்கொலை செய்து கொள்ள விரும்புகிறான்.

அவனிடம் ஒரு ஜோடி காலணிகள் இருக்கின்றன, ஒரு காலத்தில் நாய் இருந்தது. அந்த நாய் கிண்ணியில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதை விரும்பியது, அப்பழுக்கற்ற வகையில் அது வீட்டினுள் நடந்து கொண்டதும் தன்னைச் சுகாதாரமாக வைத்துக் கொண்டதும் ஒரு கார் அதை அடித்தபின் சீர்குலைந்துப் போயிற்று. அதன்பின் அது வெயிலில் இருந்த காரில் ஒரு விபத்தாய் பூட்டி வைக்கப்பட்டபின் சூடு தாங்க முடியாமல் செத்துப் போனதும் ஒரு ஆள் கார் சீட்டுக்கடியில் இருந்த சீட் ஸ்ப்ரிங்குகளில் அசாத்தியமான வகையில் கழுத்துப்பட்டை சிக்கிக் கொண்டிருந்த அந்த நாயைக் கண்டெடுத்தான். அவனது வயது பன்னிரெண்டு இருக்கலாம். அந்த நாய், வழமையாய்ச் சொல்லப்படுவதுபோல், கதகதப்பாய் இல்லை; அது அபாரமாய் கொதித்துக் கொண்டிருந்தது. அந்த ஆள், அல்லது அந்தப் பையன், சீட்டுக்கடியிலிருந்து அதை விடுவித்தபின் கழுத்துப்பட்டையைப் பிடித்து வெளியே இழுத்து பசுமையாய் இருந்த புல்வெளியில் குளிரப் போட்டான். அவன் உள்ளே போய் அம்மாவிடமும் அப்பாவிடமும் மேக் செத்துப் போய் விட்டான் என்று சொன்னான்.

மேக் நூல் நூலாய் நீண்டிருந்த முடி கொண்ட டெர்ரியர், புல்லில் குளிரப் போடப்பட்டிருந்தவன் பார்க்க அழகாயிருந்தான். விபத்துக்குப்பின் அவனது வாழ்க்கை கடினமாக இருந்திருந்தது: இடுப்பில் பின் வைத்திருந்தார்கள்; வராந்தாவில் பேண்டு விடுவான்; கிண்ணியில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதில் முன்போல் அவனுக்குக் களிப்பில்லை. புழக்கடையில் நிலத்தடி கோட்டை ஒன்று கட்டும் முனைப்பில் அந்தப் பையன் தோண்டத் துவங்கியிருந்த குழியைப் புதுப்பித்து அப்பா மேக்கை அதில் புதைத்தார். பின்னர் புத்தகம் படிப்பதற்கான கண்ணாடி காணாமல் போனதும் அது அவரது பாக்கெட்டிலிருந்து நழுவி மேக்கின் கல்லறையில் விழுந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கப்பட்டு, மேக்கைத் தோண்டியெடுத்து கண்ணாடியைத் தேடும்படி அந்தப் பையனிடம் அவனது அம்மா சொன்னதும். என்ன? என்று அந்தப் பையன் கேட்டபின், என்ன இருந்தாலும் அது அவ்வளவு சரியான ஐடியாவாக இல்லை போல என்று பரிந்துரைத்த அம்மா அவன் கேட்பதற்கு முன்னதாகவே நாயை மீண்டும் அந்தப் பையன் தோண்டியெடுக்க வேண்டும் என்ற தன் விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டாள்; பின்னர் அந்தப் பையன் நிச்சயம் தான் இப்படிக் கேட்டிருக்கக்கூடும் என்று நினைத்துக் கொண்டான்- ஏன் அப்பாவுக்கு பதில் நான் அதைச் செய்ய வேண்டும்- அவர் மட்டுமே நாயைப் புதைத்திருந்தார், அவர் மட்டுமே கைவிடப்பட்ட அந்தப் பையனின் கோட்டை விட்டு வைத்திருந்த குழியைத் தேர்ந்தெடுத்தார்- ஏன் அப்பாவல்ல, அவன்தான் நாயைத் தோண்டியெடுக்க வேண்டும், அதுவும் அவனுடையதல்ல, அப்பாவின் கண்ணாடியைத் தேட. சால்மன் மீன் வண்ணம் கொண்ட ரெனால்ட் காரில் சிக்கிக் கொண்டு செத்திருந்தது அந்த நாய். அதை உள்ளே வைத்து பூட்டியது யார் என்று தெரியவில்லை.

பிற விபரங்களும் போதுமான அளவில் தெரியவில்லை. வயதாக வயதாக, குறைவதற்கு மாறாய், நம் அச்சம் அல்லது துயரம், ஏன் கூடுகிறது என்பதும் தெரியவில்லை.

நன்றி – Okey Panky

அஜாமிலனும் புலிகளும்

காஸ்மிக் தூசி

தங்கள் மன்னரிடம் சென்று
நாங்கள் பட்டினி கிடக்கிறோம்
என்றன புலிகள்.
15 பகல்கள் மற்றும்
16 இரவுகள்
ஒருகவளம் கூட இல்லை
சாப்பிட

அஜாமிலனின் புதுக்காவல் நாய்
எங்களை கண்டுபிடித்து விடுகிறது
எப்படியோ
விரட்டுகிறது காததூரத்தில்
‘அப்படியா, அதிர்ச்சியான செய்தி!
ஏன் முன்பே சொல்லவில்லை
என்னிடம்?
தயாராகுங்கள் விருந்துக்கு.
அந்த காவல்நாய்க்கு
ஞாபகம் இருக்கும்படி
பாடம் கற்பிக்கிறேன் நான்’
-என்றார் புலிராஜா.

அப்படியே ஆகட்டும்
என்றன புலிகள்
’’கவனமாக,’
என்று ராணி சொல்வதற்குள்
விடியும் முன்னரே
தனியாக புறப்பட்டுச்சென்ற
புலிராஜா
ஒரு மணி நேரத்தில்
திரும்பி வந்தார்,
கண்களைச்சுற்றிலும் இரத்தக்கட்டு
வாலில் ஊஞ்சல் கட்டு
திட்டமிட்டு விட்டேன் நான் எல்லாவற்றையும்,
ஒவ்வொரு அசைவையும்.
நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும்
தாக்குதலை நடத்துகிறேன் நான்
முன் நின்று
பார்த்துவிடுவோம் அந்தப்பயலை ஒருகை !
என்றார் ராஜா
காவல்நாயின் வேகமோ
மின்னலைப்போல
ஒரே சமயத்தில் இருந்தது
51 இடங்களிலும்
50 புலிகள் மற்றும் புலி ராஜா
அவர்களுக்கு எந்த வாய்ப்பும் தராமல்
ஒரு ஆட்டைக்கூட அவர்கள் தொடும்முன்
சுற்றி வளைத்தது எல்லோரையும்

51 புலிகளையும் விரட்டிப்பிடித்த காவல் நாய்
போர்க்கைதிகளாக
கயிற்றால் பிடித்துக்கட்டியபின்
வீசிற்று அஜாமிலின் முன்
பெரிய பொதி போல

சற்றே களைப்புடன்
உடைந்த பல்லை துப்பியபடி
’நீ வைத்திருக்கும் நாய்
அருமையானது அஜாமிலன்
என்றார் ராஜா.
விஷயம் என்னவென்றால்
சிறு குழப்பம் அவ்வளவுதான்
உன் ஆடுகளை எல்லாம்
ஒன்றுவிடாமல் சாப்பிட்டிருப்போம்
ஆனால்
அவைகளை பயமுறுத்த விரும்பவில்லை நாங்கள்
என்ன செய்கிறோம் என்பதல்ல
எப்படிச்செய்கிறோம் என்பதுதானே முக்கியம்
உன்னை ஒரு நண்பானாக மட்டும் பார்க்க வந்தோம்
என்பதே உண்மை’
உன் காவல்நாய்
வாழ்நாளின் வாக்குதவறாத உத்தமன்
சின்ன விஷயத்துக்குப்போய்
இப்படிச்செய்துவிட்டான் பாவம்
-என்று பயந்து சொன்னார் புலிராஜா.

அஜாமிலனோ தேர்ந்த நிர்வாகி
புலியின் கண்களை பார்க்கவே இல்லை
ஆனால் அது சொல்வதையெல்லாம்
நம்புவதாய் நடித்தான்
எல்லாப் பொய்களையும்
ஏற்றுக்கொண்ட்தாய் பாவித்து
கட்டுகளை விடுவித்து
அவைகளை இருக்கும்படி சொன்னான்
இரவு உணவுக்கு.
புலிகளால் மறுக்க முடியவில்லை
ஆட்டுக்குழம்பு, ஆட்டுகறி வறுவல்

உணவுக்குப்பின்
நாம் ஒரு நெடுங்கால நண்பர் ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டால் என்ன
-என்றான் அஜாமிலன்.
கர்ஜித்து உறுமின புலிகள்
அருமையான விஷயம்
நாங்கள் நினைத்ததும் அதுவே
நண்பர்களாய் இருப்போம் வாழ்நாள் முழுதும்
என்றன புலிகள்,
சாப்பிட்ட முள்கரண்டியை
கீழே வைத்தபடி.
புலிகளுடன்
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டான்
அஜாமிலன்
அன்புளிப்பாக ஆடுகள்,
தோல் ஆடைகள்
மற்றும் கம்பளிப்பந்துகள்
அளித்து வழியனுப்பினான்.

அஜாமிலன் ஒன்றும் முட்டாள் அல்ல
அவனுக்குத்தெரிந்த
எல்லா நல்ல மேய்ப்பர்களையும் போல
அவனும் அறிவான்
சிலசயம்
புலிகளுக்கும்
விருந்தளிக்க வேண்டும்
என்பதை.

விலாபுடைக்க உண்ட
புலிகளும் ஆடுகளும்
நட்புணர்வுடன்
ஒரே துறையில் நீர் அருந்துகையில்
அவன்
நாள் முழுக்கவும்
குழல் இசைக்கலாம்

=====

அருண் கொலாட்கரின் Ajamila and the Tigers  என்ற கவிதை தமிழாக்கம்

ஒளிப்பட உதவி – hippyshopper.com

தாய் எழுத்து – பரூல் செகால்

பரூல் செகால்  (Parul Sehgal)-

(குடும்ப அமைப்பினுள் இருந்தவாறு, அதிலும் குறிப்பாக தாய்மை நிலையில், எழுத்துப் பணியில் ஈடுபடுவது குறித்து புக்ஃபாரம் என்ற தளத்தில்  பரூல் செகால் எழுதியுள்ள கட்டுரையின் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு பகுதி)

… இந்தப் புத்தகங்கள் ஒப்புதல் வாக்குமூலத்துக்கு அப்பாற்பட்ட ஒருவகை வெளிப்படைத்தன்மைக்கு தம்மை ஒப்புக் கொடுத்துள்ளன; இவற்றின் தீவிர ஒளிவுமறைவின்மையை முன்னிறுத்தும் கூறுகள் குழுவிழுமியங்களின் வழி வெளிப்படுகின்றன, நாம் வாசிக்கும் புத்தகம் எப்படி உற்பத்தி செய்யப்பட்டது என்பதை வெளிப்படுத்துவதில் ஓர் ஆர்வம் இருக்கிறது என்பதைத் தவிர கூடுதலாய், கண்ணுக்குத் தெரியாத வகையில் எப்போதும் மறைந்திருக்கும் வெவ்வேறு வகை உழைப்பை அம்பலப்படுத்தும் நோக்கமும் தென்படுகிறது.

எ லைப்ஸ் வர்க் என்ற நூலில் ராச்சேல் கஸ்க் இவற்றுக்கான தொனியை நிறுவினார்: “குழந்தைகளும் அவர்களை யார் பார்த்துக் கொள்கிறார்கள் என்பதும், என்னைப் பொறுத்தவரை, ஆழமான அரசியல் கேள்விகளாகிவிட்டன- தாய்மையைப் பற்றி ஒரு புத்தகம் எழுதும்போது அதை எழுதுவதற்கான நேரம் எனக்கு எப்படி கிடைத்தது என்பதையும் ஓரளவுக்காவது விளக்காமல் இருப்பது ஒரு முரண்பாடாக இருக்கும்“. அவர் தான் செய்த ஏற்பாடுகளை விவரிக்கிறார், எப்படி முதல் ஆறு மாதங்கள் அவரது கணவர் வேலைக்குப் போய்க் கொண்டிருக்க, அவர் தன் மகளை கவனித்துக் கொண்டார் என்பதையும், அதன்பின் அவர்கள் இருவரும் லண்டனை விட்டு கிராமப்புறத்துக்கு இடம் பெயர்ந்து, அவரது கணவர் வேலையில்லாமலும் அவர் முழு நேரம் எழுதிக் கொண்டிருந்தும் நடைமுறைப்படுத்திய குடும்ப அளவிலான பரிசோதனை முயற்சியின் கலவையான விளைவுகளையும் விவரமாக எழுதுகிறார்.

மேக்கிங் பேபிஸ் என்ற புத்தகத்தில் ஆன் என்ரைட் இதைத் தொடர்கிறார்: “என் அலுவல் நேரத்தை மாற்றிக் கொள்ள முடியும், நான் பயணம் செய்ய வேண்டியதில்லை, எனக்கு முதல் குழந்தை பிறந்தபோது என் துணைவர் ஆறு வார விடுப்பு எடுத்துக் கொண்டார், இரண்டாம் குழந்தை பிறந்தபோது மூன்று மாத விடுப்பு எடுத்துக் கொண்டார் (ஊதியமில்லா விடுமுறை, இதை மும்முறை குறித்துக் கொள்ளுங்கள்). அவர் சமையலும் செய்கிறார். குழந்தைகளை குளிப்பாட்டவும் செய்கிறார்“.

பென் லெர்னர் மெத்த மகிழ்ச்சியுடன் தன் நிலையை அம்பலப்படுத்திக் கொள்கிறார். வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமான அவரது 10:04 என்ற நாவல், குழந்தைப் பிறப்பையும் திருப்புமுனையாய்க் கொண்டிருக்கிறது- இந்த நாவல் சூல் கொண்டது, அதன் கருவை முன்வைத்த வியாபாரம், விற்பனை என்று துவங்கி தன் பிற எழுத்துகளை உண்டு செரித்து புத்தகம் எழுதி முடித்தது என்று அனைத்தையும் தன் கதையில் விவரிக்கிறார். இதில் புத்தகத்தின் மாசற்ற கருத்தரிப்பு குறித்து எந்த மிகைகற்பனையும் கிடையாது- உண்மையான, அழுக்கான நுண்விபரங்கள் மட்டுமே.

கஸ்க் எழுதுவது போல், குழந்தை வளர்ப்பில், “ஆழமான அரசியல்” இருக்கிறது என்றால், எழுதுவதன் உழைப்பிலும் அரசியல் இருக்கிறது, யார் எழுதுகிறார்கள், எதை எழுதுகிறார்கள் என்ற கேள்விகளிலும் அரசியல் இருக்கிறது- இவர்களால் எப்படி நிதிநிலையைச் சமாளிக்க முடிகிறது, என்ற கேள்வியிலும் அரசியல் இருக்கிறது.

டிபார்ட்மெண்ட் ஆப் ஸ்பெகுலேஷன் என்ற நூலில் ஒரு கதைசொல்லி, எழுத முடியாத நிலையிலிருக்கும் எழுத்தாளர், இப்போது புதிதாய் தாயாகியிருப்பவர், தன் ஆரம்பகால லட்சியங்களை நினைத்துப் பார்க்கிறார்: “நான் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ வேண்டும் என்று திட்டம் வைத்திருந்தேன். அதற்கு மாறாக நான் கலை பூதமாக இருக்கப் போகிறேன் என்று நினைத்தேன். பெண்கள் கலைத்துறையில் பூதாகரமான ஆகிருதி அடைவதேயில்லை, ஏனெனில் கலை பூதங்கள் கலை குறித்து மட்டுமே கவலைப்படுகின்றன, அன்றாட விவகாரங்களைப் பற்றியல்ல. நபகோவ் தன் குடையைக்கூட மடித்ததில்லை. தபால் தலைகளை அவருக்கு வேரா எச்சில்படுத்திக் கொடுத்தாள்“. கலை பூதத்தின் பின்னுள்ள சாரங்களை இந்த நூல்கள் வெளிக்கொணர்கின்றன: நிதிக்கொடை விண்ணப்பங்களின் மேலிருக்கும் தபால்தலைகளை எச்சில்படுத்தி ஒட்டியது யார்? யார் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டது? யார் மளிகை சாமான்களுக்கு காசு கொடுத்தது, எப்படி கொடுத்தார்கள்?

நம் படைப்பூக்கம் வெளிப்படும் வடிவம் பெரும்பாலும் வர்க்கம் சார்ந்தது,” என்று எழுதினார் ஆடர் லோர்த். அவர் கவிதையைப் போற்றி அவ்வாறு எழுதினார், கலை வடிவங்களில் மிகச் “சிக்கனமானது”, “மிகவும் ரகசியமானது, மிகக் குறைவான உடல் உழைப்பைக் கோருவது, மிகக் குறைந்த பருண்மை கொண்டது, ஷிப்டுகளுக்கு இடையே, மருத்துவமனைக் கிடங்கில், சப்வேயில், கூடுதலாய் எஞ்சியிருக்கும் காகிதத் துண்டுகளில் எழுதப்படக் கூடியது“.

டோனி கேட் பம்பார இதே காரணத்துக்காக சிறுகதையை நேசித்தார்- அதன் “கைக்கடக்கமாய் கொண்டு செல்லும் தன்மை“. “உழவர் சந்தைக்கு கார் ஓட்டிக் கொண்டு போகும் வேளையில் அதன் அடிப்படை வடிவத்தைச் சொல்லி விட முடியும், விமான நிறுவனம் என் தொலைபேசி அழைப்பை எடுக்கக் காத்திருக்கும் வேளையில் வசனங்களைத் தீர்மானிக்க முடியும், என் மகள் செய்யும் காரட் கேக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கதையின் மையக் காட்சியின் வரைவு வடிவத்தைத் தீர்மானிக்க முடியும், நடுராத்திரியில் கதையின் முதல் வடிவை எழுதி முடித்துவிட முடியும், துணிகள் எந்திரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும்போது மெய்ப்பு பார்த்து திருத்த முடியும், துண்டுப் பிரசுரங்களை நகலெடுக்கும்போது கூடவே என் கதையையும் நகலெடுத்து விட முடியும்” (கார்ல் ஓவ் நாஸ்கார்ட் பற்றி இங்கு நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை- பெரும் பனிச்சரிவாய் அவர் எழுதிக் குவிக்கும் உரைநடை- தன் குடும்ப வாழ்வு பற்றி மிகத் துல்லியமான நுண்விபரங்கள் கொண்ட அந்த ஆறு நூல்கள்- ஸ்காண்டிநேவிய சமூக சேவை அமைப்புகள் இல்லாமல், அவரும் அவரது கவிதாயினி மனைவியும் தங்கள் நான்கு குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள ஒப்புவித்த குழந்தைக் காப்பகங்கள் இல்லாமல், எவ்வளவு சாத்தியப்பட்டிருக்கும்?)

ஓப்பில், ரூல், மன்கூசோ, என்ரைட்- இவர்கள் துண்டிலக்கியம் மற்றும் சிறுபொறிகளாய்த் தெறிக்கும் உரைநடை வடிவத்தைத் தேர்ந்தெடுக்க அழகியல் மற்றும் அறிதலியல் காரணங்கள் இருக்கின்றன என்பது நிச்சயம்தான், ஆனால், வேறு ஆழமான கட்டாயங்களும் இவர்களுக்கு இருக்கின்றன என்று தோன்றுகிறது- “என் குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு என்னால் எழுத முடியாது,” என்று எழுதுகிறார் நெல்சன். தன் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவசர அவசரமாக தான் எழுதியதாக என்ரைட் சொல்கிறார், பின்னரே அவர் தன் குறிப்புகளை புத்தக வடிவில் தொகுத்திருக்கிறார். ஓப்பில் எழுதிய டிபார்ட்மெண்ட் ஆஃப் ஸ்பெகுலேஷன் நாவலின் கதைசொல்லி, காரில் சென்றுகொண்டிருக்கும் வேளையில் மளிகை சாமான் பட்டியலில் எழுதுகிறார், கிரெடிட் கார்ட் ரசீதுகளின் பின்புறம் கிறுக்குகிறார் (ஓப்பில்கூட தன் நாவலை இன்டெக்ஸ் கார்டுகளில்தான் எழுதியிருக்கிறார்).

ஜோன் டிடியன், எலிசபெத் ஹார்ட்விக், ரேனாடா ஆட்லர் முதலியவர்கள் எழுபதுகளில் புகழ்பெறச் செய்த துண்டங்கள்- அல்லது உணர்வுநிலை துண்டித்தல்களின் பலவகைகள்- அல்ல இவை. அவர்களது துடிப்பான, மெல்லிய வாக்கியங்கள் நளினமாய் அவிழ்ந்து விழும் பணக்காரப் பெண்களின் அலுப்பை நினைவூட்டின. இப்போது எழுதுபவர்கள் வேறு திசையில் செலுத்தப்படுகிறார்கள், இது வலிமிகுந்த நிலைபெயர்தலாக இருக்கிறது. இந்தத் துண்டங்கள் கரடுமுரடாக இருக்கின்றன- ஆனால் இவை அன்னியப்படுதலை நிகழ்த்திக் காட்டுகின்றன என்பதைவிட ஒருங்கிணைத்தலை நோக்கி உணர்ச்சிகரமான முயற்சி எடுத்துக் கொள்கின்றன.

பெண்கள், அதிலும் குறிப்பாக தம் பணியில் உணர்வுப்பூர்வமான ஈடுபாடு கொண்ட பெண்கள், மகப்பேற்றுக்குப்பின் தம்மிலிருந்தே அன்னியப்பட்டு உணர்வதைக் கைப்பற்ற விரும்பியதாய் பல நேர்முகங்களில் ஓப்பில் கூறியிருக்கிறார். நொறுங்கிய கண்ணாடியில் வரையப்பட்ட சுய ஓவியம்தான் டிபார்ட்மெண்ட் ஆஃப் ஸ்பெகுலேஷன்.

மணவாழ்வு, புரட்சி மற்றும் வழமை, ஏன், கதையாடல்கள் குறித்தே உள்ள வழக்கமான கதையாடல்களின் மத்துறுதல்களை எதிர்த்து நிற்கும் அலகுகளாய் ஆர்கனாட்ஸ் என்ற நூலில் மாகி நெல்சனின் துண்டங்கள் ஒவ்வொன்றும் இருக்கின்றன என்ற உணர்வு எழுகிறது. “எப்போது, எப்படி, பழைய நியூக்லியர் குடும்ப அமைப்பை புதிய உறவு அமைப்புகள் பிரதிபலிக்கின்றன, எப்போது எப்படி அவை தம்மை முற்றிலும் புதிய சூழியலில் அமைத்துக் கொண்டு உறவுகள் குறித்து மறுபரிசீலனையாகும் வகையில் தம்மைத் தொகுத்துக் கொள்கின்றன“, என்று கோட்பாட்டியலாளர் ஜூடித் பட்லரின் மொழியை கடன் வாங்கி அவர் கேட்கிறார். “உன்னால் எப்படிச் சொல்ல முடியும்; அல்லது, அதைக் காட்டிலும், சொல்வது யார்?

மேலும் வாசிக்க- புக்பாரம்

ஒளிப்பட உதவி- விக்கிப்பீடியா

வண்ணக்கழுத்து 13: இரண்டாம் சாகசம்

”ரசெல்தார் மேலோட்டமான காயங்களிலிருந்து குணமடைந்த பின்பு நாங்கள் இரண்டாவது முறை போர்முனைக்கு கொண்டு செல்லப்பட்டோம். இந்த முறை அவர் என்னுடன் ஹிராவையும் எடுத்துக் கொண்டார். அப்போதே நாங்கள் கொண்டு செல்லப்போகும் செய்தி மிக முக்கியமானது என்பதைப் புரிந்து கொண்டேன். இரண்டு பேரிடம் நம்பிக்கை வைத்தால் இருவரில்ஒருவராவது செய்தியைக் கொண்டு சேர்ப்பார்களே.

“குளிர் கடுமையாக இருந்தது. ஏதோ பனிப்பிரதேசத்தில் வாழ்வது போல உணர்ந்தேன். எப்போதும் மழை பெய்துகொண்டிருந்தது. தரை மிக மோசமாக இருந்தது. ஒவ்வொரு முறை தரையில் கால் வைக்கும் போதும், புதை மணலைப்போல சகதியில் சிக்கிக் கொண்டது, பிணத்தின் மீது கால் வைத்தது போல சில்லிட்டது.

“இப்போது நாங்கள் ஒரு புதிய இடத்தை வந்தடைந்தோம். அது பதுங்கு குழி அல்ல. ஒரு சிறிய கிராமம். அதைச் சுற்றிலும், எரிந்து கொண்டிருக்கும் அழிவின் அலை வீசியது. அது எதோ புனிதமான முக்கியமான இடம் அந்த மனிதர்களின் முகத்தைப் பார்க்கையில் தெரிந்தது. கிட்டத்தட்ட அந்த இடத்தின் எல்லாக் கூரைகளையும், சுவர்களையும், மரங்களையும் சாவின் சிவப்பு நாக்குகள் தீண்டியிருந்த போதும், அந்த இடத்தை அவர்கள் இழக்க விரும்பவில்லை. திறந்த வெளியில் இருப்பதை நான் பெரிதும் விரும்பினேன். சாம்பல் நிற வானத்தை கீழே, மிகவும் கீழே பார்க்க முடிந்தது. இன்னமும் எந்த குண்டும் விழுந்திருக்காத வெண்பனி நிலத் துண்டைகளையும் பார்க்க முடிந்தது. அத்தனை குண்டு வீச்சுக்கும் துப்பாக்கிச் சூட்டுக்கும் நடுவில், பெருங்காற்றில் சிதைந்த பறவைக்கூடுகள் போல வீடுகள் நொறுங்கிப் போயிருந்த இடத்தில், எலிகள் ஒவ்வொரு பொந்தாக ஓடின, சுண்டெலிகள் பாலாடைக் கட்டிகளைத் திருடி ஓடின, ஈக்களைப் பிடிக்க சிலந்திகள் வலைகள் பின்னின. மனிதர்கள் சக மனிதர்களால் கொல்லப்படுவதில் பொருட்படுத்த ஒன்றுமில்லை,, அன்று வானைச் சூழ்ந்திருந்த மேகங்களைப் போலவே அதில் கவலைப்பட ஒன்றுமில்லை என்றபடி அவை பாட்டுக்கு தங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தன.

“சிறிது நேரம் கழித்து குண்டுவீச்சு நின்றது. அந்தக் கிராமம், அதாவது எஞ்சிய கிராமம், அந்தத் தாக்குதலில் தப்பித்துவிட்டது போலப்பட்டது. மேலும் மேலும் இருண்டது. வானம், நான் என் மூக்கை அதில் நுழைக்கும் அளவிற்கு மிகவும் கீழே இறங்கியிருந்தது. என்னுடைய ஒவ்வொரு சிறகையும் குளிர் பிடித்துக் கொண்டு, என் உடம்பிலிருந்து அவற்றை பிய்க்கத் துவங்கியது. எங்கள் கூண்டில் அசையாது உட்கார்ந்திருப்பது முடியாத காரியம் என்பதை உணர்ந்தேன். எங்களைக் கதகதப்பாக வைத்துக்கொள்ள நானும் ஹிராவும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டோம்.

“மீண்டும் துப்பாக்கிச் சூடு துவங்கியது. இந்த முறை அனைத்து திசைகளிலிருந்தும். எங்கள் சின்ன கிராமம் எதிரியால் சூழப்பட்ட தீவாக ஆகிவிட்டது. எல்லாவற்றையும் மூடுபனி போர்த்தியிருக்க, எதிரிகள் பின் பக்கத்திலிருந்து எங்களுடைய தொடர்பை துண்டித்துவிட்டார்கள். பிறகு, ஏவுகனைகளை வீசத் துவங்கினார்கள். மதியம் கழிந்து அதிக நேரம் இருக்காது, ஆனாலும் இமாலய இரவைப் போலவே, இருட்டாகவும் நசநசப்பாகவும் இருந்தது. இன்னும் இரவாகவில்லை என்பதை மனிதர்கள் எப்படி அறியக்கூடும் என்று யோசித்துப் பார்த்தேன்.. என்ன இருந்தாலும் மனிதர்கள் பறவைகள் அளவிற்கு விஷயம் தெரிந்தவர்கள் அல்லவே.

“எங்களுடைய செய்திகளைக் கொண்டு செல்வதற்காக நானும் ஹிராவும் திறந்துவிடப்பட்டோம். நங்கள் மேலே பறந்தோம். ஆனால், அதிக தூரம் செல்ல முடியவில்லை. சீக்கிரமே அடந்த பனியினால் விழுங்கப்பட்டோம். எங்கள் கண்கள் எதையும் பார்க்க முடியவில்லை. ஒரு குளிர்ந்த ஈரப்பதம் மீக்க திரை ஒன்று எங்கள் கண்களை அழுத்தியது. ஆனால், நான் இதைப் போல ஒன்றை எதிர்பார்த்துதான் இருந்தேன். போர்க்களத்திலோ இந்தியாவிலோ இப்படிப்பட்ட நேரத்தில் நான் என்ன செய்வேனோ அதையே செய்தேன். நான் மேலே பறந்தேன். ஒரு சமயம் இன்னும் ஒரு அடி கூட மேலே செல்ல முடியாது என்பது போலத் தோன்றியது. என் இறக்கைகள் ஈரமாகி இருந்தன. என் மூச்சு, தொடர்ந்த தும்மல்களால் தடைப்பட்டது. எக்கணமும் செத்து விழுந்துவிடப் போகிறேன் என்று நினைத்தேன். புறா கடவுளர்களின் உதவியால், இப்போது என்னால் சில கஜம் வரைக் காண முடிந்தது. எனவே, நான் மேலே பறந்தேன். இப்போது என் கண்களில் எரிச்சலை உணர்ந்தேன். என் கண்கள் குருடாவதிலிருந்து தப்பிக்க, புழுதிப்புயலில் ஊடே பறக்கும் போது நான் பயன்படுத்தும் என்னுடைய இரண்டாவது கண் இமையை பயன்படுத்தியே ஆக வேண்டும் என்பதை திடீரென்று, உணர்ந்தேன். ஏன் என்றால், நாங்கள் மூடுபனிக்கிடையே இல்லை. மனிதர்கள் பரப்பிவிட்ட, மட்டமான வாடை கொண்ட, கண்களை அழிக்கும் புகை அது. யாரோ ஊசியால் கண்களிலேயே குத்தியது போல என் கண்கள் வலித்தன. என் கண் திரை மூடியிருக்க, மூச்சைப் பிடித்துக் கொண்டு நான் போராடி மேலே ஏறினேன். என்னுடன் வந்து கொண்டிருந்த ஹிராவும் மேலே ஏறினான். அந்த வாயுவால் மூச்சடைத்து சாகும் நிலைக்கு வந்துவிட்டான் அவன். ஆனால், அவன் தன்னுடைய போராட்டத்தை நிறுத்திக் கொள்ளப்போவதில்லை. கடைசியில் அந்த விஷவாயுவைத் தாண்டி நாங்கள் மேலே பறந்தோம். அங்கே காற்று சுத்தமாக இருந்தது. என் கண்களின் திரையைத் திறந்து, சாம்பல் நிற வானத்தை நோக்கினேன். அங்கே எங்களுடைய படைவரிசை தெரிந்தது. நாங்கள் அதை நோக்கிப் பறந்தோம்.

”எங்கள் இடம் நோக்கி பாதி தூரம் சென்றிருப்போம், அப்போது உடம்பு முழுக்க கருப்புச் சிலுவை போட்டுக் கொண்டிருந்த ஒரு கொடூர கழுகு எங்கள் அருகே பறந்து, பக் பஃப், பக் பஃப், பாப் பா… என்று எங்கள் மீது நெருப்பை உமிழ்ந்தது. நாங்கள் குனிந்து கொண்டோம். எங்களால் முடிந்ததைச் செய்தோம். அதன் பின்பக்கம் பறந்து சென்றோம். அந்தப் பக்கத்திலிருந்து அந்த இயந்திரங்களால் எங்களைத் தாக்க முடியவில்லை. அந்த இயந்திரக் கழுகின் வாலுக்கு மேலே நாங்கள் பறந்து செல்வதை நினைத்துப் பாருங்கள். அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அது வட்டமடிக்கத் துவங்கியது. நாங்களும் வட்டமடித்தோம். அது குட்டிக்கரணம் போட்டது. நாங்களும் போட்டோம். நிஜமான கழுகைப் போல் இல்லாமல், அதனுடைய வால் ஒரு செத்த மீனைப் போல விறைப்பாக இருந்தது. அதை அசைக்கமுடியாமல், அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதன் முன்னே மறுபடி சென்றால், அந்த நொடியிலேயே கொல்லப்படுவோம் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்.

“நேரம் போய்க்கொண்டிருந்த்து. அந்த இயந்திர கழுகின் வாலுக்கு மேலேயே காலம் பூராவும் சுற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதை நான் உணர்ந்தேன். நாங்கள் கிளம்பி வந்த, விஷவாயு சூழப்பட்ட கிராமத்தில் ரசெல்தாரும் எங்கள் நண்பர்களும் இருந்தார்கள். அவர்களின் பாதுகாப்புக்காகவும் அவர்களுக்கு உதவி கிடைக்கவும் நாங்கள் எங்கள் செய்தியைக் கொண்டு சேர்க்க வேண்டும்.

“அப்போது அந்த இயந்திரக் கழுகு ஒரு தந்திரம் செய்தது. அது தன்னுடைய இடம் நோக்கி திரும்பிப் பறந்து சென்றது. அது எங்களைச் சுடாமல் இருக்கும் பொருட்டு, அதன் வாலுக்கு மேலேயே பறந்து சென்று எதிரியின் எல்லைக்குள் நுழைய நாங்கள் விரும்பவில்லை. குறி பார்த்துச் சுடுபவர்கள் அங்கு எங்களைச் சுட்டு வீழ்த்தி விடுவார்கள். இப்போது நாங்கள் எங்கள் இடம் நோக்கி பாதி தூரம் வந்துவிட்டோம், எங்கள் எல்கையும் கண்களுக்குத் தெரிகிறது, எனவே நாங்கள் கவனமாக இருப்பதில் அவ்வளவு அக்கறை செளுத்தவில்லை. அந்த இயந்திரக் கழுகிடமிருந்து திரும்பி எங்களால் முடிந்த அளவு வேகமாகப் பறந்தோம். ஒவ்வொரு முறை இறக்கையை அடிக்கும் போதும் மேலே உயர்ந்தோம். நாங்கள் இப்படிச் செய்த உடனே, அந்த பரிதாப மிருகம் திரும்பி எங்களைத் தொடர ஆரம்பித்தது. அதிர்ஷ்டவசமாக, அதற்கு கொஞ்சம் நேரம் பிடித்தது. இப்போது நாங்கள் எங்கள் எல்கைக்கு மேலே பறக்கிறோம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில், அந்தக் கழுகும் எங்கள் உயரத்திற்கு வந்து, எங்களை நோக்கி நெருப்பைக் கொட்டியது, பஃப் பஃப் பாப் பா. இப்போது நாங்கள் குனிந்து மூழ்க நிர்பந்திக்கப்பட்டோம். நான் ஹிராவை எனக்கு கீழே பறக்கச் செய்தேன். அது அவனை பாதுகாத்தது. அப்படியே நாங்கள் பறந்தோம். ஆனால், விதி என்பது விதியே தான். எங்கிருந்தோ ஒரு கழுகு வந்து எதிரியை நோக்கிச் சுட்டது. நாங்கள் இப்போது பாதுகாப்பாக உணர்ந்தோம். நானும் ஹிராவும் அருகருகே பறந்தோம். அப்போது நான் தவிர்த்த ஒரு குண்டு அவனுடைய இறக்கையை முறித்தது. பாவம்! ஹிரா காயம்பட்டுவிட்டான். அவன் வட்டமடித்து ஒரு உடைந்த வெள்ளி இலையைப் போலே காற்றின் ஊடே கீழே விழுந்தான். நல்லவேளை எங்கள் எல்லையில் விழுந்தான். அவன் இறந்துவிட்டதைக் கண்டதும், இரண்டு கழுகுகளுக்கும் இடையில் நடக்கும் சண்டையைக் காணத் திரும்பிக்கூட பார்க்காமல், நான் மின்னல் வேகத்தில் பறந்தேன்.

“நான் எங்கள் இடத்தை அடைந்தவுடன், தலைமைத் தளபதியிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர் என் முதுகைத் தட்டிக் கொடுத்தார். அந்த வயதான மனிதர் அந்த காகிதத் துண்டைப் படித்துவிட்டு, சில்வண்டு போல் ஓசை எழுப்பிக்கொண்டிருந்த அதிசய வஸ்துக்கள் சிலவற்றைத் தொட்டு ஒரு கொம்பை எடுத்து அதில் என்னவோ உறுமினார். இதைக் கண்டு, முதன் முறையாக ஒரு முக்கியமான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். இப்போது கோண்ட் என்னை என்னுடைய கூண்டிற்கு கொண்டு போனார். அங்கு, ஹிராவை நினைத்துக் கொண்டு நான் உட்கார்ந்திருக்க, எனக்கு கீழே இருக்கும் பூமி மொத்தமும் அதிர்ந்த்தை உணர்ந்தேன். வெட்டுக்கிளிகள் போல இயந்திரக் கழுகுகள் பறந்தன. அவை ஊளையிட்டன, இரைந்தன, குரைத்தன. கீழே, நிலத்திலிருந்து, எண்ணற்ற உலோக நாய்கள் வெடித்து உறுமின. பிறகு, காட்டிலிருக்கும் ஒட்டு மொத்த புலிகளுக்கும் பைத்தியம் பிடித்துவிட்டதைப் போல, அடர்ந்த குரலில் ஊளைச் சத்தம் கேட்டது. கோண்ட் என் தலையைத் தட்டிக் கொடுத்து, ‘இன்று நீ காப்பாற்றிவிட்டாய்’ என்றார். எனக்கு தான் நாள் ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. இருண்ட சாம்பல் நிற வானத்திற்கு கீழே, மரணம் ஒரு டிராகனைப் போலவே சுற்றிக் கொண்டும் அலறிக் கொண்டும், தன் பிடியிலிருந்த அனைவரையும் கசக்கிக் கொண்டும் இருந்தது. அடுத்த நாள் பயிற்சிக்காக எங்கள் தளத்திற்கு பக்கத்தில் பறந்த போது, என் கூண்டிலிருந்து ஒரு மைல் தொலைவிற்குள் நிலம் குண்டுகளால் துளைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். எலிகளாலும் சுண்டெலிகளாலும் கூடத் தப்பிக்க முடியவில்லை. டஜன் கணக்கில் அவை கொல்லப்பட்டு, பிய்த்து எறியப்பட்டிருந்தன. என்ன ஒரு சேதம் ஏற்பட்டிருக்கிறது என்பதை இதிலிருந்தே நீங்கள் அளவிட்டுக் கொள்ளலாம். ஓ! எத்தனைக் கோரம். எனக்கு துக்கமாக இருந்தது. இப்போது ஹிராவும் செத்துப் போய்விட்டான். நான் தனிமையாகவும் சோர்வாகவும் உணர்ந்தேன்.