பேட்டி

2015 புத்தக வெளியீடுகள்: பிரக்ஞை பதிப்பகம்

பிரக்ஞை பதிப்பகம்

இவ்வருட புத்தக கண்காட்சிக்கு ‘பிரக்ஞை’ வெளியீடாக வரவிருக்கும் புத்தகங்களைப் பற்றி தமிழ்ப்பெண் விலாசினியுடன் பதாகை நிகழ்த்திய மினஅஞ்சல் உரையாடல்.

நல்ல புத்தகங்களை தங்கள் பதிப்பகம் வழியே கொண்டு வரவேண்டும் என்ற குறிக்கோளுடன் செயலாற்றும் பிரக்ஞை பதிப்பகத்தாரின் முயற்சிகள் வெற்றி பெற உளங்கனிந்த வாழ்த்துகளை பதாகை தெரிவித்துக் கொள்கிறது.

பதாகை: உங்கள் பதிப்பகம் எத்தகைய புத்தகங்களைப் பதிப்பிப்பதில் கவனம் செலுத்துகிறது? அதன் நோக்கங்கள் என்ன?

பிரக்ஞை: நல்ல புத்தகங்கள் ‘பிரக்ஞை’ வழி வர வேண்டும். இதுதான் முதலும் முற்றுமான குறிக்கோள். ஆனால், இப்பதிப்பகம் தொடங்கலாம் என்று திட்டமிட்டபொழுது நண்பர் திரு பி.என்.எஸ் பாண்டியனுக்கும் எனக்கும் தோன்றிய முதல் விஷயம், இதுவரை வந்த பல நல்ல புத்தகங்கள், இன்றைய தேதியில் படிப்பதற்குக் கிடைக்காத புத்தகங்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பது. அதனால் முதல் முயற்சியாக, கொஞ்சம் கடினமான பரிசோதனைதான் என்றாலும், நல்ல பழைய புத்தகங்களை தேர்ந்தெடுக்க முடிவு செய்தோம். முதலில் நான்கு புத்தகங்களைக் கொண்டு வர முயன்றோம். நான்காவது புத்தகத்தைக் கொண்டு வருவதில் சில பிரச்சனைகள் இருந்ததால், இந்த முறை சென்னை புத்தகச் சந்தைக்கு மூன்று புத்தகங்கள் கொண்டுவருகிறோம். அடுத்தடுத்து, இந்த வருடத்திற்குள் இன்னும் சில புத்தகங்கள் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். (more…)

மாதொருபாகனைத் தொடர்ந்து – பெருமாள்முருகன்

– உரையாடல்: எழுத்தாளர் பெருமாள்முருகன்

Alavayan arrhanari

மிழிலக்கியம் பயின்ற அரசுக்கல்லூரி விரிவுரையாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பெருமாள் முருகன் தமிழிலக்கியத்தின் முக்கியமான அடையாளமாக விளங்கிவருபவர். மக்கள் கலாச்சார கழகம் வழியே மார்க்சிய ஈடுபாட்டு கொண்டவர், இலக்கிய பங்களிப்பாக ஏறுவெயில், திருச்செங்கோடு, கூளமாதாரி, மாதொருபாகன், பீக்கதைகள், நீர் மிதக்கும் கண்கள், நிழல்முற்றத்து நினைவுகள் என்று பெருமளவு கொங்குநாட்டு வட்டாரத்து வரலாற்றை ஏழு நாவல்கள், நான்கு சிறுகதை தொகுப்புகள், நான்கு கவிதை தொகுப்புகள், எட்டு கட்டுரை நூல்கள் மற்றூம் மொழிபெயர்ப்புகள், தொகுப்புகள் என்று மிக விரிவாக பதிவு செய்திருக்கிறார். சூழலை மீறி செயல்படும் உத்வேகத்துடன், திசைதெரியாத பெருங்குகைக்குள் வாசிப்பு என்னும் விளக்கோடு தொடர்ந்து பயணப்படுவதாக சொல்லும் பெருமாள் முருகனின் பயணத்தின் அடுத்த அடையாளமாக இரு புதிய நாவல்களை – ஆலவாயன் மற்றும் அர்த்தநாரி – 2015 புத்தக வெளியீட்டு விழாவிற்கு காலச்சுவடு கொண்டு வருகிறது. அதையொட்டி அவரோடு பதாகை நடத்திய மின்அஞ்சல் உரையாடல்.

பதாகை: நிலத்தை துறந்து மொழியைப் பற்றிக் கொண்ட தலைமுறையின் முதல் பதிவாக ‘ஏறுவெயில்’ நாவலை உருவாக்கினீர்கள்.  ஆறு நாவல்களுக்கு பிறகு ஆலவாயனையும் அர்த்தநாரியையும் உருவாக்கும்போதும் அதே தவிப்பை உணர்கிறீர்களா? ஒருவிதமான நிறைவை நோக்கி நகர்வதாக நினைக்கிறீர்களா?

பெருமாள்முருகன்: ஏறுவெயிலை எழுதியபோது தயக்கமும் பயமும் கொண்டிருந்தேன். நாவல் நமக்கு வருமா, எழுத்துப் பயிற்சி நாவல் எழுதப் போதுமா, மாபெரும் நாவல்கள் இருக்கும் மொழியில் பிரசுரத்துக்குத் தகுதியான அளவிலேனும் எழுத இயலுமா என்றெல்லாம் தயக்கம். திசைவழி தெரியாத பெருங்குகை ஒன்றுக்குள் புகுந்து செல்லும் பயமும் இருந்தது. வாசிப்பு என்னும் விளக்கின் துணை ஒன்றைக்கொண்டே உள்ளே சென்றேன். எதிலாவது மோதும்போது பயணத்தை நிறுத்துவேன். சோர்வும் சலிப்பும் தோன்றிப் பின்வாங்கத் தூண்டும். துணிவைப் பெற்று மேற்செல்லச் சில நாட்கள் ஆகும். எங்கிருந்து வந்தது என்று தெரியாத ஒருவகையான அசட்டுத் துணிச்சலே என்னைச் செலுத்தியது. உண்மையில் அதை எழுதிய காலம் தவிப்பு மிகுந்த காலம்தான். இப்போது அத்தகைய தயக்கமும் பயமும் இல்லை. ஆனால் அசட்டுத் துணிச்சலே இப்போதும் செயல்படுத்துகிறது. இது கொஞ்ச தூரம் நடந்து வந்துவிட்டதால் ஏற்பட்டிருக்கும் அசட்டுத் துணிச்சல் என்று புரிகிறது. நிறைவை நோக்கிய நகர்வு  என்று சொல்ல முடியுமா? அப்படி ஒரு நிறைவைக் கண்டடைவது சாத்தியமா? இன்னும் எவ்வளவோ பயணப்படும் பேராசை இருக்கிறது. நிறைவு ஏற்பட்டுவிடக் கூடாது என்றே நினைக்கிறேன். (more…)

2015 புத்தக வெளியீடுகள் – பேயோன்!

– உரையாடல்: பேயோன்

  துண்டிலக்கியம் என்ற வகைமை தமிழிலக்கியதற்கு இவர் அளித்த கொடை எனக் கொள்ளலாம். ஏறத்தாழ ஏழு வருடங்களாக இணையத்தில் இடையறாது எழுத்தாளராக இயங்கி வருபவர், உண்மையில் ஒரு புனைவு பாத்திரமாகத்தான் உருவாக்கப்பட்டவர். இவருடைய படைப்புகளைப் போலவே இவரும் சட்டகங்களை உடைத்துக் கொண்டு புனைவையும் தாண்டி நிலையான ஆளுமையாக உருவெடுத்திருக்கிறார். 2015ம் ஆண்டு ஜனவரி புத்தக கண்காட்சியை முன்னிட்டு, நாம் அவரிடம் இருந்து என்ன படைப்புகளை எதிர்பார்க்கலாம் என்று சிறு உரையாடல்.

பதாகை: இணையத்தில் ஒரு புனைவு பாத்திரமாக அரங்கேறிய புதிதிலேயே, அவ்வருட புத்தக கண்காட்சியில் உங்கள் துண்டிலக்கிய தொகுப்பை அச்சு பிரதியாக கொண்டு வந்தீர்கள். இப்போது ஆனந்தவிகடன் புகழ் பேயோனாகிய பிறகு இணைய வெளியீடு மட்டும் போதும் என்று நீங்கள் ஒதுங்கியிருப்பதன் காரணம் என்ன?

பேயோன்: என்னுடைய அபிமானப் பதிப்பாளரின் சுமையைக் குறைக்கத்தான். ஆழி பதிப்பகம் சிறு முதலீட்டில் நடத்தப்பட்டுவரும் பதிப்பகம். பதிப்பாளர், நண்பர் செ.ச. செந்தில்நாதன் இப்போது அரசியலிலும் தீவிரமாகிவிட்டதால் அவர் புத்தகங்களை கவனமாகத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறார். எனவே செப்டம்பர் வந்ததும் அவரைத் தொலைபேசியில் அழைத்து ‘இந்த முறை என்ன டைட்டில்ஸ் போடறதா இருக்கீங்க?’ என்று நைச்சியமாகக் கேட்கும் பழக்கத்தைச் சென்ற ஆண்டிலிருந்தே விட்டுவிட்டேன். ஆழியில் கிடைத்த சுதந்திரம் வேறு எந்தப் பதிப்பகத்திலும் எனக்குக் கிடைக்காது என்று தோன்றியதால் இணையத்தில் மட்டுமே வெளியிடுவது என்று முடிவு செய்தேன். இணைய எழுத்தாளன் என்ற அடைமொழி கொஞ்சம் வசவு மாதிரி இருப்பதால் அதை நான் விரும்புவதில்லை என்றாலும் இப்போது நான் அப்படித்தான் ஆகியிருக்கிறேன். ‘ஃபேஸ்புக் எழுத்தாள’னாக இருப்பதற்கு இது மேல். (more…)

டேவிட் மிட்சல்

The Bone Clocks அல்லது Cloud Atlas போன்ற நாவல்கள், ஓரளவுக்காவது கதைசொல்லும் கட்டமைப்பில் தேர்ச்சியைக் கோருவதாகக் கருதுகிறீர்களா? – வெவ்வேறு கதையாடல்களை ஒன்றோடொன்று இணைப்பது, காலத் தாவல்கள், நினைவுகூரல்கள், இது போன்றவை. உங்கள் நாவல்களின் இறுதி வடிவம் உருவம் பெறும்வரை நீங்கள் எத்தனை வரைவு வடிவங்களைத் திருத்தி எழுத வேண்டியிருக்கிறது?

முதலில் சோதனை முயற்சியாகத் துவக்கப்படும் வரைவு வடிவத்துக்கும் முடிவில் புத்தகமாகப் பதிப்பிப்படும் இறுதி வடிவத்துக்கும் உள்ள உறவு, ஒரு கிறுக்கலுக்கும் ஆயில் பெயிண்டிங்குக்கும் உள்ளது போன்றது, ஆனால் எதையும் துவக்குவதற்கு ஏதோ ஒரு இடம் தேவைப்படுகிறது. முதலில் கலங்கலான, சாதாரணமான, துல்லியமற்ற, கச்சிதமற்ற ஏதோ ஒன்று தோன்றுகிறது. இந்த நாவலில் எத்தனை பகுதிகள் இருக்கப் போகிறது என்பது பற்றிய ஒரு எண்ணம் அப்போது கிடைக்கிறது – நாவலை, பகுதிகளாகப் பிரித்துக் கொண்டாக வேண்டும்- இந்த நாவலில் ஆறு.

என்னென்ன பகுதிகள் இருக்கப் போகின்றன என்பது தெரிந்ததும், மீனின் எலும்புக்கூடு போன்ற ஒரு படம் போடுகிறேன், நேராக ஒரு பக்கவாட்டுக் கோடு, அதன் இரு புறங்களிலும் கைகள் மாதிரி கோடுகள். அதன்பின் ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு ஐடியாவாக எழுதிக் கொண்டு வருகிறேன். அடிப்படையில் ஒவ்வொரு கையும் ஒரு காட்சி. இப்படிச் செய்யும்போது, என்னென்ன காட்சிகள் இருக்கின்றன என்பது தனித்தனியாகவும் தெரிகிறது, சரியான வரிசையிலும் தெரிகிறது. இந்தக் கைகளிலிருந்து பிற கோடுகள் கிளைக்கலாம்- பார்ப்பதற்கு நிறைய முடி முளைத்திருப்பது போல் தெரியும்- அதன்பின், ஒரு திசையில், ஏதோ ஒரு திசையில் உரையாடல் எழுத ஆரம்பிக்கிறேன், அதற்குக் கீழே இடம் இருந்தால், அங்கு இன்னொன்று எழுதுகிறேன்- என்ன செய்வது என்று தெரியாதபோது, நான் அங்கே ஒரு பாத்திரத்தின் முகம் கூட வரையக்கூடும்.

என் எழுத்தின் வரைவு வடிவம் இப்படிதான் இருக்கிறது. நான் எழுதி முடிப்பது இதையொட்டி இருக்கலாம், அல்லது மாறுபடலாம், ஆனால் எப்படி பார்த்தாலும் வெறுமையை வைத்துக் கொண்டு திண்டாடுவதில்லை. வெற்றுத்திரைதான் எதிரி. ஒன்றுமில்லாத இடத்தில் எதையும் மேம்படுத்த முடியாது. ஏதோ ஒன்று இருந்தால்தான் மேம்படுத்த முடியும், அது எவ்வளவு மோசமாக, துண்டு துண்டாக, அரைகுறையாக இருந்தாலும பரவாயில்லை. ஏதோ ஒன்று கிடைத்துவிட்டபின், வேலை செய்யத் துவங்கலாம் (more…)

விரும்பி வாசிப்பவை

நந்தா குமாரன்

nundhaa

“நீங்கள் விரும்பி வாசிக்கும் கவிஞர்கள் யார், விரும்பும் கவிதைகள் எப்படிப்பட்டவை?”

முதலில் இந்த “மழை கேட்டல்” கவிதையைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன். இது “கணையாழி” பத்திரிக்கையில் April 1998இல் வெளியானது. அப்போது ஞானக்கூத்தன் கவிதைத் தேர்வு செய்து கொண்டிருந்தார். பின்னர் ஒரு தினம் அம்பலம் இணைய அரட்டையில் சுஜாதா இந்தக் கவிதை தனக்குப் பிடித்திருப்பதாகச் சொன்னார்.

இப்போது கேள்விக்கு வருவோம். வழக்கமான பதில் தான், எனினும் சொல்கிறேன். நம் ஜனத்தொகையில் பாதி பேருக்கு மேல் கவிஞர்களாகவே பிறப்பெடுக்கிறார்கள், எழுதியும் குவிக்கிறார்கள். எனவே நாம் படிப்பவற்றுள் பாதிக்கு மேல் கவிதையாகவே இருக்கும் … நாம் விரும்புகிறோமோ இல்லையோ கவிதையை வாசிக்காமல் இருக்க முடியாது. கவிதைக் கடல் என்பதை விட இங்கே இருப்பது கவிஞர்களின் கடல் என்பது தான் பொருத்தம். நல்ல வேளை புத்திசாலித்தனமாக “விரும்பி வாசிக்கும்” எனக் கேட்டீர்கள். (more…)