விமரிசனம்

வண்ணதாசன் – உன்னதத்திற்கான தத்தளிப்பு

ஸ்ரீதர் நாராயணன்

தூரிகையின் மயிர்க்கால்களை
அடையாளப்படுத்தியபடி
சுழன்றோடும் வண்ணத்தீற்றல்கள்.
 
கோடுகள் தேய்ந்து மறைய மறைய
உதயமாகிறது வரையப்பெறாத ஓவியம்.

vannadasan

வண்ணதாசனை நேரில் ஒருமுறை சந்தித்திருக்கிறேன்.  சென்னையில் போஸ்டல் காலனியில் அவர் குடியிருந்தபோது, ஒரு புத்தகத்தை தரவேண்டி அவர் வீட்டுக்குப் போக வேண்டியிருந்தது. அப்போது மின்சாரத்தடையோ என்னவோ.  அவர் வீட்டு வாசலில்தான் நின்றிருந்தார். அந்தியிருள் சூழ்ந்த, மரங்களடர்ந்த வாசல்புறமும், அதை நிறைத்துக் கொண்டாற்போல் அவர் நின்றிருந்த தோரணையும் நினைவில் இருக்கிறது. ‘என்ன படிக்கிறீங்க’ என்பது போல் அவர் கேட்க, சிறிய உரையாடல்தான் நிகழ்ந்தது.

ஆனால் அவருடைய படைப்புலகில் அவருடன் நிகழ்ந்த உரையாடல்கள் அதிகம். கூரிய அவதானிப்புகளுடனான, பாசாங்கற்ற, ஆத்மார்த்தமான குரலுடன் அவர் உரையாடிக் கொண்டிருக்கிறார்.   ”கிளை அசைவதை, கிளையில் சாய்ந்த என் உடல் அமிழ்ந்து அமிழ்ந்து அசைவதில் உணர்ந்தேன்.  காற்றை இப்படியும் அறியலாம் போல‘ என்பதற்கேற்ப நம் புற உலகை அதன் நுண்ணிய கூறுகளுடன் உணர, அவர் எழுத்தில் அமிழ்ந்து அசைகிற வாய்ப்பை நமக்கு தருகிறார்.  வெற்றுக்கூச்சலற்ற, படாடோபமற்ற ஆழ்ந்த சொற்தீற்றல்களில் அவற்றின் தொனிப்பொருள்கள் நம்மை சூழ்ந்து கொள்கின்றன,

தருணங்களின் அழகியல்:

வண்ணதாசன் உணர்வு நிலையில் ஓர் ஓவியர்.  அதனால் அவருடைய படைப்புகளில் நிகழும் தருணங்களை சித்திரமாக நிறுத்த முடிகிறது.  ஆனால் அவர் ஓவியர் மட்டுமல்லாது அருமையான ஒரு கதைசொல்லி.  நம் கண்முன்னே நிகழும் எளிய, தொடர்பற்ற தருணங்களை, சித்திரங்களை இணைத்து மகத்தானதொரு கதையை உருவாக்கிவிட முடிகிறது.  அதற்கும் மேல் அவர் ஒரு கவிஞர். “இந்த வரியை விட, அழகாக இருக்கிறது எழுதாத வரியின் நிழல்,” என்று அளவாக எடுத்துரைக்கும் சொற்களால், வாசகனை பிறிதொரு சொற்களற்ற பெருவெளிக்கு இட்டுச்சென்று விடுகிறார்.

அதற்கும் மேல் அவர் நேசத்தை நாடும் மனிதர். அவருடைய சமூக வலைத்தள எழுத்துகளில் எப்போதும், இருகரம் நீட்டி உள்ளிழுக்கும் கவசங்களற்ற இயல்பான கனிவு தெரிகிறது. எந்த வடிவத்தில் எழுதினாலும், காந்த முள்ளெனச் சுற்றி சுற்றி சராசரித்தனத்திலிருந்து மீண்டுயர தத்தளிக்கும் ஒரு மனதை சுட்டிக் காட்டுகிறது.  அடர்ந்து பெருகும் இருள்வெளியை துழாவிச் செல்கிறபோதும் ஒரு கீற்று ஒளியை விட்டுச் செல்கிறது.   .

தாமிரபரணியின் பாசிபடர்ந்த படிக்கட்டுகளில் காயத்தைக் கழுவப் போனால் வெட்டியவரின் முகத்தில் இருந்த அனாதரவு நிலைமைதான் தெரிகிறது அவருக்கு.

“குறுவாள்களும் கழுவிக்கொள்ளும்படியாக
அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது
அந்நியமற்ற நதி”

என்கிறார்.

கொடுவாளை மறைத்து வைத்திருப்போரிடமும் கவசங்கள் கரைந்து போய் இயல்பான அன்பு வெளிப்படும் என்று கை நீட்டிக் காத்திருக்கும் மனது வண்ணதாசனுக்கு வாய்த்திருக்கிறது. “நீங்கள் என்னைத் தவிர்க்கும்போது, என்னிடம் இருக்கும்படி, நான் விடாமல் பாதுகாக்கும் குறைந்தபட்ச உண்மைகளையும் தவிர்க்கிறீர்கள் என்பதுதான் என் கவலை” என்று விசனப்படுகிறார்.

கிருகிரு மிட்டாய்க்காரனைப் போலவே தோற்றத்தில் இருக்கும் கோமுவின் அப்பா, வருமானமற்ற நாட்களில் சாப்பாட்டிற்காக, கோமு வீட்டு வேலை செய்யும் வீட்டிற்கு, அவளைத் தேடி வருகிறார். போகும்போது சொல்லிக்கொண்டு போவதும் கிடையாது.  ஆனாலும் கோமுவிற்கு தேரோட்டம் பார்க்கும் சாக்கிலாவது அப்பா வரமாட்டாரா என்றிருக்கிறது. தேரைப் பார்க்கக்கூட கூட்டிப் போக வேண்டாம். வந்து சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்தால் போதும். இந்த சில வரிகளில் நமக்கு கோமுவின் வாழ்வுச்சூழல் முற்றிலும் விவரிக்கப்பட்டுவிடுகிறது.   வீட்டு எஜமானியான, சீக்கில் கிடக்கும் பெரிய ஆச்சிகூட  ‘நீயும் சின்னப் பொண்ணுதான, போ.  போய் தேர்ப் பார்த்துட்டு வா’ என்றாலும், கோமு கிளம்புவதில்லை.  தொழுவில் நிற்கும் கன்றுக்குட்டியை இழுத்துக் கட்டிப்போட, அது அவள் புறங்கையை நக்கிக் கொடுப்பது போல, கோமுவும் ஆச்சியின் இளைத்த கால்களை அமுக்கிக் கொண்டு அங்கேயே இருக்கிறாள்.

முன்பு தொலைக்காட்சியில் வெளிவந்த சிறுகதைத் தொடர் ஒன்றில் ஆண்டன் செகாவின் கதையொன்றின் தழுவலைப் பார்த்திருக்கிறேன். தன்னுடைய தாத்தாவால், கிராமத்திலிருந்து நகரத்திற்கு, வீட்டு வேலைக்கென கொண்டு விடப்படுகிறான் சிறுவன் ஒருவன்.  ஊரே பண்டிகை கொண்டாடும்போது அவன் மட்டும் தனித்து உணர்கிறான்.  எப்படியும் தாத்தா வந்து தன்னை மீண்டும் அம்மாவிடம் அழைத்துக் கொண்டு போய்விடுவார் என நம்பிக்கையில், தாத்தாவிற்கு ஒரு கடிதம் எழுதுகிறான்.  அந்தக் கடிதத்தில் விலாசமாக ‘நதிக்கு அருகில் இருக்கிறது, எங்கள் கிராமம்’ என எழுதி தபால் பெட்டியில் போட்டுவிட்டு, உவகையுடன் நடந்து செல்வான்.  அங்கே தேரோட்டம் தொடங்குகிறது.  கோமுவிற்கோ தேர் நிலையில் வந்து நின்றுவிடுகிறது.

கிருஷ்ணன் வைத்த வீடு சிறுகதையிலோ, ‘ஒண்ணு போலப் போயீரலாம். ஒண்ணு போல வர முடியுமா’ என்றுக் கேட்கும் ஐஸ் விற்கிற முருகனின் அப்பா மூச்சுமுட்டக் குடித்திருக்கிறார்.  அத்தனை குடித்தனங்களுக்கு மத்தியில் ஒரு குடும்பத்தின் மொத்த தற்கொலையை அவரவர் எதிர்கொள்ளும் விதம்.  ஆங்காங்கே செருகி வைத்திருப்பது போன்ற  இழவு வீட்டு வர்ணனைகள் ஒன்றின் பின் ஒன்றாக நம்மை அந்த சூழலில் இழுத்துக் கொண்டு போகிறது.

எழுத்தாளன் யத்தனிப்பதும், வாசகனைச் சென்று சேரும் சித்திரமும் இயைந்து போகும்போது அதன் அழகியல் துலக்கம் பெறுகிறது.

கலையின் முழுமை:

ஒரு வகைமையை பிடித்திருக்கிறது என வரித்துக் கொண்டுவிட்டால், மற்றவையெல்லம் பிடிக்காமல் போய்விடுகிறது.  ரேஸ் குதிரைகளென அபிமானங்களை விகசித்துப் போற்றுவதற்கு இலக்கிய வாசிப்பு எதற்கு? ஒரு கலையின் முழுமை அதை அங்கீகரிக்கும் நிலைகளைக் காட்டிலும், அது தன்னகத்தே கொண்டிருக்கும் மதிப்பில் அல்லவா இருக்கிறது.

வண்ணதாசனின் சிறுகதைகள் ஒரு செறிந்த பூஞ்சோலை போலிருக்கின்றன.  கதையின் மையம் ஒரு பூச்செடி என்றால் அதைச் சுற்றிலும் பல பூச்செடிகளை அவர் நட்டுக் கொண்டே போகிறார்.  சுற்றிவளைத்து போவதால் மையப்புலன் அமுங்கி விடுகிறது என்கிறார்கள்.  அவ்வளவு துரிதமாக எங்குதான் போவார்களோ.  ஒரு கரண்டி இனிப்பு பாயசமும், அதற்கு நிகராக ஒரு கரண்டி துவர்ப்பு பச்சடியும், ஒரு வரிசை வெஞ்சனமும் வைத்து பிறகு சாதத்தை விளம்புவதுதானே விருந்து.

பள்ளிக்கூடத்தில் மேஜிக் நிகழ்ச்சி நடத்த வாய்ப்புக் கோரும் முழுக்கைச் சட்டையணிந்தவரை பெயர் சொல்லிக் கூட அறிமுகப்படுத்துவதில்லை.  அவருடைய உதவியாளரை ‘மிஸ்டர். கதிரேசன்’ என விளிப்பதன் மூலமே அவரைப் பற்றி சொல்லியாகி விடுகிறது. காமராஜருடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை எல்லாம் சங்கரநாராயணனிடம் காட்டி, அவர் வேலை செய்யும் கல்லூரியில் நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு கேட்டு, சன்மானம் பெறுவது பற்றியெல்லாம் பேசுகிறார்.  சங்கரநாராயணனுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்கிறபோது ‘இந்தக் காலனி சிறுவர்களைக் கூட்டிட்டு வாங்க. ஒரு நிகழ்ச்சி நடத்திக் காட்டுகிறேன்’ என்கிறார். அதுவும் நிகழாது என்கிறபோது, கிடைக்கும் சாப்பாட்டையும் துறந்து கிளம்பிப் போகிறார்.  உன்னதமான கலையின் முழுமை அடைவது, அதை நிகழ்த்தக் கிடைக்கும் வாய்ப்புகள்தோறும் நிகழ்த்தும் விழைவு கொள்வது.

பெயர் குறிப்பிடாத முழுக்கை சட்டைக்காரர் நமக்கு அந்நியமானவரில்லை. அசோகமித்திரனின் புலிக்கலைஞனில் வரும் காதரின் நீட்சி எனலாம்.  சத்யஜித் ரே-யின் சிறந்த சிறுகதையான ‘படோல் பாபு‘வில் வரும் நாடகக் கலைஞனும் அவர்தான்.  ‘டாயர் ஃபைட்’ காதர், படோல் பாபு, முழுக்கை சட்டையணிந்தவர் எல்லோரும் தங்கள் கலையை நிகழ்த்தும் தருணத்தை தவற விடுவதேயில்லை. அதில் அவர்களுக்கு அந்தரங்கமானதொரு பெருமை இருந்து கொண்டேயிருக்கிறது. சந்திரசேகர ராவ் மற்றும் சங்கரநாராயணன் போன்றோர் தங்களுடைய லௌகீக அளவுகோல்களுடன் அவர்களை அங்கீகரிக்கவியலாத போதாமையைப் பற்றி அவர்களுக்கு கவலையிருப்பதில்லை.  நிரம்பியும் நிரம்பாமலும் ஆனால் நிரம்பியபடிக்கு நிகழ்கிறது எல்லாம் வண்ணதாசனின் படைப்புலகில்

“ஆனாலும் காற்று
அப்பால் செல்லும்
மூடிய கதவுகளுக்கு
அப்பாலும்”

தொடரும் கண்ணிகள்:

வண்ணதாசன் நீண்ட நாவலோ புதினமோ எழுதியதில்லை.  ‘சின்னு முதல் சின்னு வரை’, ஒரு நெடுங்கதை.  ஆனால் அவர் படைப்புலகம் தொடர்ச்சியான கண்ணிகளால் கட்டப்பட்டு இருக்கிறது.  கவிதையுலகில் இருந்து கதைகளுக்கும், மீண்டும் கதைகளில் இருந்து கவிதைகளுக்கும் மாறி மாறி நம்மை இட்டுச் செல்கிறார்.  ஒரு கவிதையில், சுற்றியிருக்கும் அத்தனை பேருக்கு மத்தியில்,  தனிமையில், அரங்கில் தொடங்கும் ஒளிக்காக காத்திருக்கும் அனுபவத்தைப் பற்றி எழுதியிருப்பார். அக்கவிதையிலிருந்து வெளியே வந்தால், தனுஷ்கோடி அழகர் ‘கிருஷ்ணன் வைத்த வீடு‘ எப்படியிருக்கிறது என்று கேட்டுக் கொண்டு வந்துவிடுகிறான். அந்த அரங்கில் அவர் காத்திருந்தது இந்தக் கதையின் விரிவுக்காக எனத் தோன்றும்.  அடுத்து அழகரின் பார்வையில் புத்தகக் கடைக்காரர், சலூன் கடைகள், ஜூஸ் கடைக்காரர் என விவரிப்பு தொடர்கிறது.  இப்போது அழகர் கதைசொல்லிக்கு நெருக்கமானவனாகி விட்டான்.  இன்னும் சற்று யோசித்துப் பார்த்தால், அந்த வீட்டைப் பற்றிய Rhetorical கேள்விகளை எடுத்துக் கொடுக்கவே தனுஷ்கோடி அழகர் கதைக்குள் வந்திருக்கிறான் எனப் புரியும்.

சரசுவின் உலகம் அதன் அத்தனை தனித்துவங்களோடும், அவளுடைய கணவனின் உலகோடு பின்னிப் பிணைந்திருக்கிறது.  அவனுடைய உத்தியோகக் கவலைகள், லௌகீக பிரச்னைகள், அவனுடைய உறக்க போதாமை என அனைத்திலும், அவள் ஆதுரத்துடன் கைகொடுக்க காத்திருக்கிறாள்.  ஒரு புதிய போர்வையால் தன் அன்புலகிற்குள் அவனை பிணைத்துவிடக் காத்திருக்கிறாள்.  அவன் அகாலத்தில் அழைத்து வரும் விருந்தாடிக்கு உபசரணை செய்யும்போது, சிறிய இடறல். அவன் திரும்பிப் பார்க்கிற பார்வையோ, அடித்தால்கூட அவ்வளவு வலித்திருக்காது.  தானே தலையை வாரிக் கொள்கிறேன் என கலைத்துக் கொள்ளும் சிறுவனும், அவனைப் பிடித்து இழுத்து தலையை சரிசெய்ய முயலும் அம்மாவும் போலொரு இணை.  சரசுவின் நுண்ணியல்புகளை, அவள் கணவன் உணர்ந்தேத்தான் அப்படியொரு பாராமுகமாக இருக்கிறானோ எனத் தோன்றுகிறது. அவளுடைய அன்புக்கான மறுமொழியை அவனுக்கு சொல்லத் தெரிந்தது அப்படித்தான்.  ஒதுக்கியபடி ஓடுகிறவன், தனது வாக்குமூலமாக பிறிதொரு இடத்தில்  ‘பலிச்சோறு‘ எனக் கவிதையாக எழுதி வைக்கிறான்.

எஞ்சிய என் கருத்த கசடுகளின்
ரகசிய அம்பு எய்யப்படக்
காத்திருக்கிற உன் உந்திச்சுழி.

 அப்பழுக்கற்று இருப்பதாகச்
சொல்கிறார்கள்
வீட்டுக்கு வெளியில்
நான் விடுகின்ற மூச்சு.

எளிய காட்சிகளின் அற்புதத்தை எடுத்துரைக்கும் கவிதைகளிடையே ‘நீலத்தடாகம்‘ இரு வேறு தீவிர முனைகளிடையே எட்டிப் பாய்கிறது.  ‘ஒட்டுதல்‘ கதையில் வரும் மஹேஸ்வரி, தன் நெற்றியில் பொட்டு வைக்கும் செஞ்சுலட்சுமியின் மீது சாய்ந்து கொள்ளும் ஆறுதலை நினைவுப்படுத்துகிறது. உலகின் எல்லா கசப்புகளையும் செஞ்சுலட்சுமியின் கணவரின் சிரிப்புப் போல இலகுப்படுத்திவிட்டால் நல்லதுதானே.  உறிஞ்சப்படும் கசடுகளை எல்லாம் கழுவிப் போக கண்ணீருக்கா பஞ்சம்.

அலையலையெனப் பெருகும் நுணுக்கம்:

எங்கள் வீட்டருகே ஒரு கார்னிவெல் ஒன்றுக்கு சென்றிருந்தேன்.  மரமறுக்கும் மின்சார ரம்பம் கொண்டு ஒரு கலைஞர், நின்று கொண்டிருந்த மரத்தை சிற்பமாக செதுக்கிக் கொண்டிருந்தார்.  கழுகு இறகுகள் சூடிக் கொண்டிருக்கும், போர்த்தழும்புகள் கொண்ட, தூரப் பார்வை பார்த்துக் கொண்டிருக்கும், மரபான செவ்விந்திய தலைவரின் முகம்.  அத்தனை பெரிய கருவியைக் கொண்டு செய்ததா என கற்பனைகூட செய்து பார்க்க முடியாத நுணுக்கங்களுடன் செதுக்கியிருந்தார்.  இயற்கையின் ஒரு பகுதியை மரபின் ஒரு பகுதியாக அவர் மாற்ற முயற்சி செய்கிறார் எனப் புரிந்தது.  வண்ணதாசன் இயற்கையை வாசகனின் வாழ்க்கையின் ஒளிகொண்ட பகுதியாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.  குதூகலங்களும், ஏமாற்றங்களூம், கசப்புகளும், அற்புதங்களும், துயர்களும், போதனைகளும் நுணுக்கமாக பதிவு செய்யப்படுகின்றன.  அந்த நுணுக்கங்களின் விகசிப்பைத் தாண்டி நமக்கு ஒரு முழுமையான தரிசனத்தையும் கொடுக்க வல்லது அவருடைய படைப்புலகம்.

வண்ணதாசன் ஓவியக்கலை அறிந்தவர். நெல்லையப்பர் மாகாளையையும், வாள் ஓங்கும் மதுரை வீரனையும், குழுமூர் ஓடைக்கார ஆயியையும் வரைய ஆசைப்படுகிறார். சிறுகதைகளில் அப்படியான சித்திரங்களைத்தான் திரும்பத் திரும்ப செய்து கொண்டேயிருக்கிறார்.  பாக்குமரங்களும் தென்னை மரங்களும், புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் சிலையும், அதன் மேல் ஒளி உமிழும் நீல ரசகுண்டு விளக்கும் என ‘கிருஷ்ணன் வைத்த வீடு‘ நம் கண் முன்னே நிற்கிறது.  பிற பாத்திரங்களான அந்த வீட்டுக்காரர், சசியின் அம்மா, கதைசொல்லியின் அம்மா, போலீஸ்காரர், ஐஸ்வண்டிக்காரரின் அப்பா எனப் பலருக்கும் பெயர்களில்லை.  பெயர்களற்ற அடையாளங்கள் இன்னமும் அழுத்தமாக பதிகின்றன.  நீர் முகர்ந்து எடுத்த குவளையின் வெளிப்புறத்தை துடைத்துவிட்டுக் கொடுக்கும் அம்மா. அரிவாளைக் கையில் கொடுக்கக் கூடாதென தரையில் வைத்துக் கொடுக்கும் சசி. மின்சார கம்பியை உரசியபடி சலாரென விழும் தென்னை ஓலை என ஒவ்வொரு விவரிப்பும் மெருகேற்றி வைக்கப்படுகின்றன.  அவை வெற்று நுணுக்கங்களாக நின்று விடுவதில்லை. சொல்லிச் செல்லாமல் சுட்டும் கலையின் ஒரு பகுதியாக இருக்கிறது.  ஆதியில் எந்தப் பெயரும் இடப்படாத சிறு பூச்சியை வளையல் பூச்சி என்றோ கம்பளிப் பூச்சியென்றோ அவரவர் வசதிக்கேற்ப அழைத்தாலும், உயிர்த்தலின் நகர்தலாக அதைப் பார்க்கும் பார்வை அவருடைய படைப்புகளில் இருந்து கொண்டேயிருக்கிறது.

தூரக் காதுகள்:

பென்சில் சீவும்போது எங்கோ சரிகிற மரங்களும், அரவமற்ற இரவுப்பொழுதில் எங்கோ ஒருவர் பாடுவதும் கேட்கும் தூரக்காதுகள். தொலைபேசியில் அழைக்கும் உறவினரிடம் ‘சாரல் மழை பெய்திருக்கிறது என்கிறார். உடன் எதிர்முனையிலிருப்பவர் செடிகள் எல்லாம் உச்சிக் குளிர்ந்திருக்கும் என்கிறார்.  உலகின் எத்தொலைவிற்கும் அவர் காதுகள் நீண்டு, ஒரு சிறு விகசிப்பை, அற்புதத்தின் நிழலை தேடியவண்ணம் இருக்கின்றன.  வண்ணத்துபூச்சியின் சிறகசைவும், எரிமலையின் உள்ளுறுமலும் கவிஞனின் காதுகளில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது.  பெரும் அருவியில் பொழியும் நீரின் அளவுப் பற்றிய பிரமிப்பை விட, அந்த அருவியின் உயரத்தைத் தாண்டி பறக்கும் சிறிய பறவைகள் பிரமிப்பைத் தருகின்றன.  இன்னும் சில ஆயிர வருடங்களில் பெரிய அருவிகளும், அவற்றைத் தாண்டி பறக்கும் சிறிய பறவைகளும் அழிந்து போகலாம்.  ஆனால் மானுடத்தின் இந்த நுண்ணுணர்ச்சி மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.  கவிதைப் படிமங்களாகவோ, தானியங்கி இயந்திரங்களின் சேமிப்பு பெட்டகத்திலோ.

மனிதம் கிடக்கும் மிதிபடத் தெருவினில்
உன்னதம் அழைக்கும்
எங்கோ தொலைவில்.  

வண்ணதாசனை சாகித்ய அகதெமி கௌரவித்திருப்பது, இலக்கியத்தில் அழகியலை கௌரவப்படுத்துவது போல. பல்வேறு மொழிகளிலும் அவருடைய படைப்புகள், இன்னமும் அதிகமாக சென்று சேர வழிவகுக்கும். இதே நேரத்தில் விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தினரும் விருது வழங்கி விழா நடத்துவது போற்றுதற்குரியது.

வண்ணதாசனின் படைப்புலகம் வாசகனை கைநீட்டி அழைப்பதில்லை. அது இயல்பாக வந்து நம்மை சூழ்ந்து கொள்கிறது.  நீரென வந்து நம்மை நிரப்பிவிட்டுச் செல்கிறது. கொள்கலனின் வடிவத்துக்கு ஏற்ப, தகவமைத்துக் கொண்டாலும், தன்னைக் காணும் உலகைத் தன்னில் பிரதிபலித்துக் கொண்டே இருக்கிறது நீர்- துப்பாய்ந்த துலக்கமானதொரு வண்ண சித்திரமாக.

அந்தக்கால ஒர்க்மன்ஷிப் : ‘தில்லி அண்ணா’- ஆதவனின் சிறுகதை குறித்து வெ. சுரேஷ்

வெ. சுரேஷ்

வீடு, வாசல், பணம், நகைகள் போன்றவற்றை எல்லாம் வாரிசுகளுக்கு மாற்றிக் கொடுக்கலாம். ஆனால் ஞானம், கலை ஆர்வம், வித்வத் ஆகியவற்றை? மகத்தான கலைஞர்களின் வாரிசுகள் பெரும்பாலும் இன்னொரு நல்ல கலைஞர்களாக ஆவதில்லை. வாரிசுகள் அதிகம் உருவாகும் கலை, என்று குரலிசையைச் சொல்லலாம். ஏனெனென்றால் குரல் வளம் என்பது அடிப்படையிலேயே உடற்கூறு மரபு சம்பந்தப்பட்ட ஒன்றாக இருக்கிறது. மகத்தான பாடகர்கள்/ வாத்திய இசைக்காரர்களின் வாரிசுகள், ஓரளவாவது பாடவோ, இசைக்கவோ செய்கிறார்கள். அடுத்த சந்ததிகளிடம் அந்தக் கலை இறங்கி வராமற் போவது அரிதாகவே நிகழ்கிறது. ஆனால் அனைவரும் தம் தந்தை அல்லது தாய் தொட்ட உயரங்களை தொடுவதில்லை.

ஆனால், வாசிப்பு ஆர்வம், இலக்கிய நுண்ணுணர்வு, படைப்பு, போன்றவை மிக மிக அரிதாகத்தான் அடுத்த சந்ததியினருக்கு வந்து சேர்கிறது. நல்ல இசைக்கலைஞர்களாக தந்தை/ தாய் – மகன்/ மகள் ஜோடியைப் பார்க்க முடிகிற அளவுக்கு எழுத்தாள தாய்/ தந்தை– மகன்/ மகள் இருக்கிறார்களா? மிக அரிதாகவே இப்படி ஒரு ஜோடியை சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. ஏனெனில் இலக்கிய ரசனை ஒரு மனப் பயிற்சி, மரபணு ரீதியாக மாற்றப்பட வழியில்லை.

லௌகீக விஷயங்களைத் தாண்டிய அல்லது அதில் அதிகம்  பற்றில்லாமல், இலக்கியம், ஆன்மிகம், இசை போன்ற விஷயங்களைக் குறித்த தேடலும் அதில் திறனும் உள்ள மனிதர்களின் குடும்பத்தினர் அவர்கள் மீது கொண்டிருக்கும் உணர்வுகள்தான் உண்மையில் என்ன? இம்மாதிரியான மனிதர்கள் மீது அவர்களின் திறனை புரிந்துகொண்ட உண்மையான மரியாதையா? அல்லது அது அவர்களுக்கு தங்கள் பொருளியல் ரீதியான பலவீனங்களையும் தோல்விகளையும் மறைத்துக் கொள்ள பயன்படும் முகமூடியாக உதவும் மௌடீக பக்தியா?  அவ்விதமான பக்தி ஞானஸ்தர்களுக்கு திருப்தியை தருமா?

இந்தக் கேள்விகளே ஆதவனின் ‘தில்லி அண்ணா’ சிறுகதைக்கு அடிப்படை. வாசுதேவன் தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பதவியில் இருக்கும்போது  அதிகம் “சம்பாதிக்காமல்” ஞானஸ்தர் என்ற மரியாதையுடன் வாழ்க்கை நடத்துபவர். இப்போது அவர் இருப்பது தன் குமாஸ்தா மகனான அம்பியின் குவார்ட்டர்ஸில். அவரது மனைவிக்கும் மகனுக்கும் மகளுக்கும் தங்கள் தந்தையின் ஆளுமை குறித்த பெருமை உண்டு. ஆனால் அதற்கான அடிப்படைகள் மீது ஆர்வம் கிடையாது. இவர்களின் இந்தக் குணத்தை வாசுதேவன் கேள்விக்கு உள்ளாக்கும் தருணத்தை அவரது தம்பி குடும்பத்தினர் அவரது வீட்டிற்கு வரும் ஒரு சம்பவம் மூலம் கதையாக்கியுள்ளார் ஆதவன்.

வாசுதேவனின் தம்பி ராமச்சந்திரன் தன் அண்ணனைப் போலவே குமாஸ்தாவாக வாழ்க்கையைத் தொடங்கினாலும், ஒரு கட்டத்தில் தன் மனைவியின் சகோதரர்களின் உதவியால், நல்லதொரு தனியார் கம்பனியில் உயர் பதவி வகிப்பவர். பொருளியல் ரீதியாக தன் அண்ணனை விட பல மடங்குகள் முன்னேறியவர். அவருக்கு தன் அண்ணன் மீது கல்விமான், ஞானஸ்தர் என்ற மரியாதை உண்டு. ஆனால் ஆர்வம் கிடையாது. அவரது மனைவிக்கு, அண்ணா ஒரு ‘அரைக் கிறுக்கு’, பொருளியல் ரீதியாக வெற்றி பெற்று வாழ்க்கை நடத்தும் தன் சகோதரர்கள் மீதே உண்மையான மதிப்பு. அவர்கள் சென்னையிலிருந்து தில்லி வந்து நான்கு நாட்களாகியும் வாசுதேவனின் வீட்டுக்கு வராமல், வந்தபோதும் மிகக் குறைந்த நேரமே அங்கு இருப்பதன் மூலம் இதை அவள் காட்டிக் கொள்கிறாள்.

இந்தக் குறைந்தபட்ச நேரமேகூட சகோதரர்களுக்கிடையேயான நெருக்கத்தை, அல்லது முன்பிருந்த நெருக்கம் இப்போது இல்லாமல் போயிருப்பதை காண்பிக்க போதுமானதாக உள்ளது. பேசுவதற்கு அதிகம் பொதுவான விஷயங்கள் இல்லாத வேறு வேறு உலகங்களில் வாழும் இருவருக்கும் தத்தம் உடல் உபாதைகளை பகிர்ந்து கொள்வதே பொதுவான விஷயங்களாகின்றன. அப்போது மணியடிக்கும் பழைய கடிகாரச் சத்தமே அவர்கள் தாம் இருந்த நாட்களின் நெருக்கத்தை மீட்டுத் தருகிறது. “அந்தக் கால ஒர்க்மன்ஷிப்பே தனி இல்லை அண்ணா” என்கிறார் தம்பி. கூடவே ‘அந்தக் கால மனிதரான’ தம் அண்ணாவின் பெருமையை, அவர் தன் வீட்டுக்கு வந்திருந்தபோது பாடிய பாடல்களை, விளக்கிச் சொன்ன ஸ்லோகங்களை, நினைவு கூர்கிறார். இப்போது தான் ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கியிருப்பதையும், இவரது பாடல்களையெல்லாம் அதில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசையையும் சொல்கிறார். ஆனால் அண்ணாவின் மனதில் தன் தம்பியின் மனைவி தன்னை ஒரு ‘அரைக் கிறுக்காகப்’ பார்த்ததே நினைவில் எழுகிறது. உண்மையில் இப்போதுகூட, தம்பியின் பெருமை என்பது உண்மையில் மதிப்பறிந்து உணரப்பட்டது அல்ல என்றும் ஒரு மௌடீக பக்தி மட்டுமே என்பதையும் ஒரு போதும் தன் வாழ்க்கை முறையை அவர் மேற்கொள்ள விரும்ப மாட்டார் என்பதையும் புரிந்துகொள்கிறார்.

அவர்கள் கிளம்பிப்போனதும்,  வாழ்க்கையின் உன்னதமான விஷ்யங்களை ரசிக்க தெரியாதவர்கள் என்றும் அவர்களது பாவனைகளை கேலி செய்தும் வாசுதேவனின் மகளும் மனைவியும் பேசிச் சிரிக்கத் துவங்க, அவரது மகனும் அதில் சேர்ந்து கொள்கிறான். ஆனால் சட்டென்று வாசுதேவனுக்கு இதில் ஒரு அலுப்பும் எரிச்சலும் எழுகிறது. அவர் தன் மகனை நோக்கி, “உங்களுக்கு வெறும் கேலி பேசத்தான் தெரியும். நீ முடிஞ்சா ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கேன்,  பாக்கலாம்’, என்கிறார். அவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு, வியப்புடன் அவரைப் பார்க்கின்றனர். “நிஜம்மாத்தான் சொல்றேன்,” என்றபடி கையலம்பச் செல்கிறார் வாசுதேவன். இப்படி முடிகிறது கதை.

அங்கே வாசுதேவனின் மனம் ஒரு உண்மையைக் கண்டு கொள்கிறது. தன் தம்பிக்கு எப்படி தன் வாழ்க்கை முறையை, தம் குணநலன்களை அடிப்படையாகக் கொண்ட உண்மையான மதிப்புக்கு பதில் ஒரு மௌடீகமான பக்தி இருக்கிறதோ, அதே போல குடும்பத்தினருக்கும் தன் மேல் இருக்கும் பெருமை, அவரைப் புரிந்து கொண்டு வந்ததல்ல என்றே அவர் புரிந்து கொள்கிறார். தன் பொருளியல் ரீதியான போதாமைகளை, திறமையின்மையை  மறைத்துக் கொள்ள தன் தந்தையின் /கணவரின் திறன்களை, ஞானத்தை தனதாக வரித்துக் கொள்ளும் அறியாமையே அவருக்கு எரிச்சலூட்டுகிறது.

தம்பியின் சொத்துக்களுக்கு இணையான செல்வத்தை அவரது வாரிசுகள் அசாதாரண முயற்சி ஏதும் மேற்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் இவரது சொத்துக்களான, ஞானம், கலை, இலக்கிய ஆர்வம் ஆகிவை தாமாக வராது என்பதை அவரது மகளோ மகனோ உணரவில்லை என்பதை அவர் உணர்கிறார். மேலும், அவரது தம்பியாவது லௌகீக வெற்றியை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறையில் முழு மனதுடன் இறங்கி வெற்றியை அடைந்திருக்கிறார். ஆனால் இவர்கள் அந்தத் தேடலும் இல்லாமல் தங்கள் தந்தையின் அலௌகீக போக்குக்கு உண்மையில் எரிச்சலும் பட்டுக்கொண்டு, அதே சமயம், மற்றவர்களின் லௌகிகப் போக்கினை பரிகாசம் செய்யும் உரிமையும் தமக்கு இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்.

விழுந்தது என்ன?- ஹரன் பிரசன்னாவின் ‘சோழி’

பீட்டர் பொங்கல்

பதாகை இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளைப் பதிப்பித்திருந்தாலும், முதல் முறையாக எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் வாயிலாய் பதாகையில் வெளிவரும் சிறுகதைகளுக்கு முழுமையான முதல் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ‘தமிழ் சிறுகதையின் பத்து முகங்கள்‘ என்ற கட்டுரையில்  எஸ். ராமகிருஷ்ணன், இணைய இதழ்களில் வரும் சிறுகதைகளை தான் வாசிப்பதாய் எந்தச் சலிப்பும் இல்லாமல் சொல்லிக் கொள்வதோடல்லாமல், பதாகையில் எழுதும் காலத்துகள் சிறுகதைகள் குறித்து, “பதாகை இதழில் இவரது சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். இவர் யார் என்று தெரியவில்லை. அசோகமித்ரன் பாணியில் சிறப்பாகக் கதைகளை எழுதுகிறார். வேதாளத்தின் மோதிரம் என்ற சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது“, என்று எழுதியிருக்கிறார்.

யார் எவரென்றே தெரியாத ஒருவரை முன்னணி எழுத்தாளர் ஒருவர் வாசிப்பதில் தமிழ் இலக்கியத்தின் இனிய முகமொன்று வெளிப்படுகிறது- பாராட்டுகள் யாருக்குமே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் என்றாலும், மூத்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எந்த கோரிக்கையும் இல்லாமல் தன் கதைகளை வாசிப்பதாய்க் குறிப்பிடுவதற்கு மேல் புதிதாய் எழுத வருபவனுக்கு வேறென்ன அங்கீகாரம் வேண்டும்? எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு பதாகை மற்றும் காலத்துகளின் மனமார்ந்த நன்றிகள்.

எஸ். ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கும் பத்து முகங்களில் இன்னொரு முகமான ஹரன் பிரசன்னாவும் பதாகையில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்- ஹரன் பிரசன்னா குறித்து, “… வித்தியாசமான கதைகளை எழுதுகிறார். மெல்லிய பகடியுடன் கூடிய சரளமான எழுத்து. சில கதைகள் ஆதவனை நினைவூட்டுகின்றன. குரலை உயர்த்தாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது இக்கதைகளின் சிறப்பு,” என்று குறிப்பிடுகிறார் எஸ். ராமகிருஷ்ணன்.

ஹரன் பிரசன்னா பதாகையில் எழுதிய, ‘சோழி’ என்ற சிறுகதை இப்படி துவங்குகிறது

“முரளிதர ராவ் தனது எண்ணத்தின் கனம் தாங்காமல் எப்போது வேண்டுமானால் விழுந்துவிடுவார் போல அலைந்து அலைந்து நடந்தார். அவரது மெல்லிய உடலில் அதைவிட மெல்லிய பூணூல் காற்றில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது. பூணூலையும் அதோடு சேர்த்து தன்னைப் போர்த்தியிருந்த மேல் துண்டையும் இழுத்து, சூம்பி தொங்கிப் போயிருந்த தன் மார்பின் இரு கருநிறக் காம்புகளையும் அவர் மூடிக்கொண்டார். வழுக்கைத் தலையில் வெளிப்பட்டிருந்த ஒன்றிரண்டு வெண்மயிர்கள் மிக நீண்டிருந்தன. வழுக்கையைச் சுற்றி மயிர்கள் சீவாமல் சீரில்லாமல் படிந்து கிடந்தன. முன்நெற்றியில் அவரது நாமத்தைக் கரைத்துக்கொண்டு வியர்வை வழிந்தது. தன் தோள்துண்டால் முகத்தை அழுந்தத் துடைத்தார். நாமத்துக்கிடையே அவர் இட்டிருந்த கரிக்கோடுபட்டு துண்டு கருப்பாகியது. கண்ணாடி மாட்டிக் கொண்டு வெளுத்த உளுத்த மரக்கொம்பு ஒன்று நடந்து வருவதுபோல் அவர் நடை இருந்தது. தள்ளாத வயதிலும் மனதில் இருந்த குழப்பம் காரணமாக வேகமாக நடக்க முயன்று தோற்றுப் போனார். மீண்டும் வேகமாக நடந்தார்.”

குரலை உயர்த்தாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது இக்கதைகளின் சிறப்பு,’ என்று எஸ். ராமகிருஷ்ணன் மிகச் சரியாகவே சொல்கிறார். இந்த முதல் பத்தியில் நமக்குக் கிடைக்கும் சித்திரம் சிறிது புன்னகைக்க வைக்கிறது, கூடவே இக்கதையின் மிக முக்கிய இயல்பான நிலையின்மை, கதையின் துவக்கத்திலேயே வந்து விடுகிறது. முதல் வாக்கியத்தில் அலைந்து அலைந்து என்று அலைதல் இரு முறை வருகின்றன- இந்தத் தடுமாற்றம் எண்ணத்தின் கனம் தாங்காமல் ஏற்பட்ட ஒன்று, எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடுவார் போல் அலைந்து அலைந்து நடந்தார் என்று வாசிக்கும்போது தடுமாறிச் செல்லும் அவரது நடையின் கூடவே எண்ணங்களின் சுமையால் அழுந்திய அவரது முகமும் நம் கண் முன் தோன்றுகிறது- இந்த வாக்கியத்தில் மட்டுமல்ல, இந்தப் பத்தியில் அவரது முக பாவனை சொல்லப்படவே இல்லை. ஆனால், முரளிதர ராவின் முகத்தில் ஆடும் உணர்ச்சிகளைக் காண புற விவரணைகளே போதுமானதாய் இருக்கின்றன.

அவர் அலைவது போதாதென்று, அவரது மெல்லிய உடலில் தரித்த பூணூலும் காற்றில் அலைகிறது- கதை நெடுக ஒரு தீர்மானமான முடிவுக்கு அலையும் முரளிதர ராவ், இங்கு அலையும் பூணூலை மட்டுமல்ல, சூம்பித் தொங்கிக் கொண்டிருக்கும் மார்க்காம்புகளையும் மேல் துண்டு கொண்டு மூடிக் கொள்கிறார் (தொங்குவதால், அவையும் ஆடுகின்றன என்று நினைக்கிறேன்). இது போதாதென்று வழுக்கைத் தலையில் ஒன்றிரண்டு வெண்மயிர்கள் மிக நீண்டிருந்தன என்ற குறிப்பு வேறு – அவையும் காற்றில் அலைகின்றன என்று தோன்றுகிறது. வழுக்கைத் தலையில் இருக்கும் பிற மயிர்களோ சீவாமல் சீரில்லாமல் படிந்து கிடக்கின்றன – அவை ஓய்ந்து விட்டன போலிருக்கிறது. கதையின் சீரற்ற தன்மையை மேலும் உணர்த்தும் வகையில் வியர்வை வழிந்து அவரது நாமத்தைக் கரைக்கிறது, அதைத் துடைக்கும் துண்டோ நாமத்துக்கிடையே உள்ள கரிக்கோட்டை அழித்து கறுப்பாகிறது. தள்ளாத வயது, மனக்குழப்பம் அவரை வேகமாய்ச் செலுத்துகிறது, அவர் தோற்றுத் துவண்டு விரைகிறார் என்று துவங்குகிறது கதை.

ஹரன் பிரசன்னா இது போலவே எழுதிக் கொண்டு சென்றால் அவர் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். பாத்திர விவரணைகள், உரையாடல்கள் என்று இருக்க வேண்டியது எல்லாம் மிகச் சரியாக இருக்கின்றன. ஆனால், அவரிடம் உள்ள ஒரு குறை, அதிபுத்திசாலித்தனம்தான் (இதைத்தான் எஸ். ராமகிருஷ்ணன், “சில கதைகள் ஆதவனை நினைவூட்டுகின்றன” என்று எழுதுகிறார் என்று நினைக்கிறேன்). ஒரு நல்ல கதை என்பது எலிப்பொறி போலிருக்க வேண்டும். மசால் வடை வாசனைக்கு ஓடி வரும் எலி, தன் மீது பொறியின் கதவுகள் விழுவதை மிகத் தாமதமாகத்தான் தெரிந்து கொள்கிறது. இங்கு மசால் வடை மறைத்து வைக்கப்பட்டிருந்தாலும் அது மணக்கிறது என்பதால் அதுவல்ல, அதைச் சுற்றியுள்ள பொறிதான் பூடகம். கண் முன் முழுசாக இருந்தாலும், புலன்களின் மயக்கத்தில் பொறி காணப்படுவதில்லை- வேலையைக் காட்டும்போதுதான் அது புலனாகிறது.

எது முழுமையாய் விவரிக்கப்படுகிறதோ, அதன் இயல்பு இறுதி வரை மறைந்திருப்பதில் ஒரு கலை இருக்கிறது. வாசகன் மனதில் தெறிக்கும் ஸ்ப்ரிங்தான் பூடகமே தவிர, கதை வெளிப்படை. ஹரன் பிரசன்னா இதை மிகச் சிறப்பாய்ச் செய்யக்கூடியவர். ஆனால் அவர் வைக்கும் பொறிகளோ அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் வரும் மூத்த சகோதரனின் பொறிகள் போல் சிக்கலானவை, கண்கள் நிலைகுத்தி நிற்கச் செய்பவை- எலிப்பொறி போல் எளிமையானவையாய் இல்லாத அவரது பொறிகள் ஒரு தேர்ந்த தோட்டக்காரனின் maze போன்றவை: பொறி விழுந்து விட்டது என்று தெரிந்தாலும் நாம் எங்கேயிருக்கிறோம், நம் மீது விழுந்த பொறி எப்படிப்பட்டது என்பதில் ஒரு குழப்பம் இருக்கிறது: “கதை நல்லா இருக்கு ஸார், ஆனா என்ன ஆச்சு?” என்று கேட்கிறோம்.

சோழி கதை சிறப்பான கதையாக இருந்தாலும் அப்படிப்பட்ட கதைதான். படித்துப் பாருங்கள் – சோழி, ஹரன் பிரசன்னா.

ஈழக்கவிஞர் கருணாகரனின் கவிதைகளில் நிலம் சார்ந்த பார்வை- இரட்ணேஸ்வரன் சுயாந்தன்

இரட்ணேஸ்வரன் சுயாந்தன்

fb_img_1482501772782
“மிளாசி எரிந்தது பனங்கூடல்.

காற்றில் எரிந்தன பறந்த பறவைகளும் அவற்றின் கூடுகளும்”
-‘நடனம்’- கருணாகரன் கவிதைகள்.

2007 ம் ஆண்டில் வவுனியாவில் நான் சாதாரண தரம் (தரம் 10) கற்றுக்கொண்டிருக்கும்போது கருணாகரன், சேரன், ஒளவை, சோலைக்கிளி, முல்லை முஸ்ரிபா, செழியன், அனார், ஊர்வசி, மைத்திரேயி, ஆழியாள் முதலான ஈழக்கவிஞர்களின் கவிதைகளுடன் சேர்த்து ஆப்பிரிக்கக் கவிஞர் கெப்ரியல் ஓகராவின் கவிதைகளும் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்தன. இன்றிலிருந்து பத்து வருடங்களுக்கு முன்பு நான் வாசித்த கவிதைகளில் ஒன்று கருணாகரனின் “ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள்” தொகுப்பிலிருக்கும், “யாருடைய வீடு” என்ற கவிதையாகும். மறுபடியும் அந்தக் கவிதையைப் படிக்க நேர்ந்தது. அவரது சொல்-பொருள் வீச்சு விமர்சன ரீதியில் ஒரு தாக்கத்தை என்னுள் உண்டாக்கிற்று. அதன் பின்னர் கருணாகரனின் தேர்ந்தெடுத்த சில கவிதைகளை வாசித்த நேர்த்தியில் இந்தக் கட்டுரையை எழுதவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதனை இங்கு கூறக் காரணம், ஒரு கவிஞன் எங்களெதிரே இருக்கும்போதே அவரின் படைப்புக்களை எங்களது பாடப்புத்தகத்தில் படித்துள்ளோம் என்று அக்கவிஞனுக்கு அறிவித்துவிடத்தான்.

கருணாகரனின் கவிதைகளில் இடம்பெறும் வருணனைகள், உயிர்த்தெழுதல் பற்றிய ஓர்மைகள், வெறுமை பற்றியதான தோற்றப்பாடுகள், பாசிசம் என்ற உருவழிப்பு நிலை என்பன ஈழக்கவிதைகளின் இலக்கியவுணர்வுடனான தொடர்புமுறையை (Form of Communication) மேலும் அதிகரித்துவிடச் செய்யும். இவரின் அநேக கவிதைகளில் உள்ளார்ந்த (Endogenous) அனுபவங்கள் பெருமளவில் விகாசமாகி வளர்ந்தேயுள்ளது. இந்தக் கட்டுரைக்கான தலைப்பை “கருணாகரனின் கவிதைகளிலுள்ள மனித உந்துதல்களும், வேறுசில பண்புகளும்” என்றே தலைப்பிட்டிருந்தேன். பின்னர் அவர்தம் கவிதையின் லாகவத்தைக் கட்டுரைகளில் தருவிப்பதற்காக மாற்றிவிட்டேன். ஏறத்தாழ கட்டுரையின் பொருளும் அதேகதிதான். யுத்தகால, யுத்தத்தின் பின்னரான கவிதைகள் என்ற காண்நிலையை வைத்தும் இவர்தம் கவிதைகளை ஆராயலாம். ஆனால் அது ஒரு நீளமான பகுப்பாய்வாகவும், சவால் மிகுந்ததாகவும் மாறலாம். ஆதலால் பொதுவாக கருணாகரன் கவிதையிலுள்ள நிலம் பற்றி நோக்கலாம். கவிஞர் சேரனுக்குப் பிறகு “சேர்ந்த நிலம்” பற்றிய இடத்தில் இருந்து கவிதையை நகர்த்தும் வல்லமை கருணாகரனுக்குக் கிடைத்துள்ள சிறப்பு எனலாம்.

ஒவ்வொரு நிலத்துக்குமான பண்பாட்டியைபாக்கங்களை (Acculturation) கவிதைகள் பரந்து வெளிக்கொணர்ந்து விடுகின்றன. அந்த இடத்தில்தான் கவிஞனின் ஆளுகை நிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியும் விடுகின்றது.

‘பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது நிலம்.
பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது வாழ்க்கை.’

இக்கவிதை 2012 ல் எழுதப்பட்டிருந்தது. “வன்னி மரணவெளிக்குறிப்புகள்” என்ற கவிதையில் வன்னிப் பெருநிலப்பரப்புப் பற்றிய விவரணம் எவ்வளவு பிரக்ஞைபூர்வமானது. யுத்தம் முடிந்திருந்தாலும் அங்கு நடந்த மரண அவலங்கள் பற்றி எத்தனை முறை எழுதினாலும் துயரம் மீந்துவதுதான் உறுதி. பிணங்கள் என்ற ஜடத்தையும், சாவு என்ற உணர்வுநிலை விரக்தியையும் முன்வைத்தே இக்கவிதை நகர்ந்து விடுகின்றுது. ‘உயிரற்ற பிணம், உயிருள்ள சாவு‘ அதாவது எங்கு பார்த்தாலும் துயரத்தின், துன்பத்தின் ஞாபகங்கள் கூடவே ஒட்டிக்கொண்டது வாழ்க்கை என்ற துன்பியல் (Tragedy) உணர்வுடன் மண்ணை முன்னிறுத்திக் கவிதையாற்றுகிறார்.

தோமஸ் ஹார்டி (Thomas Hardy) எனும் இங்கிலாந்துக் கவிஞரின் கவிதைகளில் வருகின்ற பாத்திரங்களின் பிரயாசை, மற்றும் சமூகச் சூழ்நிலை முதலானவற்றை நிலம்சார்ந்து கூறும் வல்லமை மிக்கவராகக் கருணாகரன் உள்ளார்.

நாங்கள் கூரைகளற்ற
வெளியில் அலைந்தோம்.
போர்ப்பிரபுக்கள் வெற்றியென்ற போதையைத் தவிர வேறொன்றையும் கணக்கிற் கொள்வதில்லை
.”

அலைந்து திரியும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வெற்றி என்பதே இலட்சியம். ஆனால் இங்கு பாத்திரங்களின் போராட்டம் மீது சமூக இலக்கற்ற வெற்றிகள் திணிக்கப்பட்டு எதுவும் நிரந்தரமின்றி வெறுமையாக்கப்பட்டுள்ளது.

தோமஸ் ஹார்டியின் “The man he killed” என்ற கவிதை மிகவும் பிரபலமானது. இதில் தனிமனிதப் போராட்டம்/ உணர்வுந்துகை காட்டப்பட்டிருக்கும். மனங்கவரும் பழமையும், ஆர்வமும் யுத்தத்தின் நிலைப்பாடுகள் “Quaint and curious war is” என்ற வரியில் வெளிக்கொணரப்படுகின்றன. இந்தத் தன்மையில் இருந்து தான் கருணாகரனின் கவிதைகளிலுள்ள வெளிப்பாட்டுத் தன்மையைக் காணவேண்டி வரும். ஹார்டி தனிமனித உணர்வினை அகநிலை விவாதங்களுக்குள் விட்டுச் சென்றார். ஆனால் கருணாகரன் அதனை நிலம் சார்ந்த கருப்பொருளுடன் சேர்த்து அதீதமான கற்பனைகளை வரிகளில் இணைத்து கவிதையை வெளிக்கொணர்ந்துள்ளார். தான் கூறமுனையும் விடயங்களை தெளிவாக முன்னிறுத்தியுமுள்ளார்.

1. ஆற்றலுள்ளோரை அழைத்துச் சென்றன பாதைகள்.
அவர்களுக்குக் கடல் வழி திறந்தது.

2. புதைகுழிகள் எழுந்த சனங்களையும் இருந்த சனங்களையும் மூடின.

3. பிணங்களாலும் புதைகுழிகளாலும் நிறைந்தது மாத்தளன் மணற்பரப்பு.

4. தென்னாசியாவின் மிகப்பெரிய கொலைக்களம் நானிருக்கும் இந்த மலக்கரை என்று மணலில் எழுதிக்கொண்டிருந்தாள் ஒரு சிறுமி.

கடல், மணல், புதைகுழி, மலக்கரை போன்ற தொடர் சொற்கள் கவிதைகளில் இடையிட்டு வந்தாலும் தனது கவிதைகளின் ஆழ்மன ஓட்டங்களைக் கூற நெய்தல் நிலம் பற்றிய கோர்வையாக்கம் சிறப்பான வெளிப்பாடு என்றே கூறவேண்டும். வெளியிலிருந்து காணும்போது இந்தச் சொல்லாடல்கள் மிகச் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் தொடர்புபட்ட நிலத்திலிருந்து மேற்சொன்ன விடயங்களை அனுபவித்தால் அசாதாரணமானது என்ற எண்ணமே மேலோங்கும். இதே போன்ற கருத்தினாலான கவிதைகளைக் கவிஞர் சேரனும் எழுதியிருந்தார்.

“கடவுளரும் பிசாசுகளும் இணைந்து புரிந்த இனப்படுகொலையின் ஒரு குருதித்துளி பாலைப்பட்டினத்தின் ஒதுக்குப் புறத்தில் தெறித்து வீழ்ந்தது”
(‘மீண்டும் கடலுக்கு‘ தொகுப்பு- சேரன்)

சேரனின் அநேக கவிதைகளில் பாலைநிலத்தின் அழுகை காட்டப்பட்டிருக்கும். ஆனால் அவர் நெய்தல் நில மனவோட்டத்தில் இருந்து என்றும் நீங்கியதில்லை.

கருணாகரனும் தனது கவிதைகளின் வெளியை வெவ்வேறு தளத்தினின்று விபரித்திருந்தார். இதனை எடுத்துரைப்புக் கவிதைகள் (Narrative Poems) என்றும் கூறலாம். அதாவது சம்பவத்தை நேர்முக வருணனை போல துயர வெளிகளில் இருந்து அதற்குள் மூழ்கிவிடாமல் இடம், பொருள் என்பவற்றைப் பட்டை தீட்டிக் கவிதைகளை நகர்த்துவதாகும்.

ஒரு நிலத்தின் வளங்கள் என்பவை பரந்துபட்டவை. அதில் மனிதனை விலக்காக எடுத்தால், அவனுடன் பயணிக்கும் உணர்வுகள், காதல், சம்பிரதாயம் அனைத்தையும் தவிர்த்துவிடலாம். நிலம் எனும் கவிதைப் பொருளில் மனிதன் தவிர்ந்தால் அங்கிருக்கும் ஏனைய பொருட்கள் மனிதனுக்கான பாடுபொருளாகவும், உதாரண சமிக்ஞையாகவும் இருக்கலாம் அல்லவா? (காடு, மலை, மணல், நீரூற்று முதலானவை)

“எரியும் காட்டில் பழங்களையும் விதைகளையும் சேகரித்துக் கொண்டிருக்கும் குருவியிடம் காட்டின் ஆனந்தத்தைப் பற்றி யாரோ கேட்டுக் கொண்டிருந்தனர்”
(“கருணாகரன் கவிதைகள்”)

ஆரம்பத்தில் ‘நடனம்’ என்ற கவிதையில் கருணாகரன் கூறியது போலவே தனது கவிதைகளால் தானே மிளாசி எரிகிறார்- அதில் நிறைய நிலத்தையும், கொஞ்சம் காட்டையும், வானத்தையும், இன்னும் கொஞ்சம் மனிதர்களையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சேர்த்து பற்றி எரிய வைக்கிறார்.

கருணாகரனின் கவிதைகள் எப்போதும் அழுத்தம் திருத்தமாக ஒரு வெளியை நிறுவி வைத்திருக்கும். அதுதான் நிலம் பற்றிய பற்றுகை. அதில் அழகியலுணர்வுகளை உள்நுழைக்கும் வல்லமை கிடைக்கின்றபோது கவிஞனுக்கான அங்கீகாரம் ஏனைய மொழிக் கவிதாவாதிகளால் விரைவில் கிடைத்துவிடுகிறது. இது கருணாகரனுக்கு வாய்த்துவிட்டது. இவர்தம் கவிதைகள் மலையாளம், ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.

ஆதவனின் ‘இன்டர்வியூ’ – வெ. சுரேஷ்

வெ. சுரேஷ்

80களில் தங்கள் கல்லூரிப் பருவத்தினை கடந்தவர்களுக்கு, வேலை இல்லாத் திண்டாட்டம் ஒரு அச்சுறுத்தும் அன்றாடச் சொல். இன்று உள்ளது போல் தொழில்நுட்ப கல்லூரிகள் அன்று இல்லை. உயர்கல்வி என்றால் அது பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்தான். இவை எதுவும் தொழிற்பயிற்சி அளிக்கும் கல்வி அல்ல. அரசு வேலை வாய்ப்பும் குறைவு, தனியார் துறை வளர்ச்சியிலும் தேக்கம் என்றிருந்த அந்த நாட்களில் படித்து முடித்ததும் வேலை கிடைக்க, பரிந்துரை அவசியப்பட்டது. அப்படிப்பட்டவர்களின் அறிமுகம் இல்லாதவர்களுக்கு வேலைக்கான நேர்முகம் என்பது ஒரு சிம்மசொப்பனமாக இருந்தது. பணியிடம் சார்ந்த கல்வியும் அளிக்கப்படவில்லை, நேர்முகத்தை எதிர்கொள்வதற்கான பயிற்சியும் இல்லை, தெரிந்தவர்கள் இருந்தால்தான் வேலை கிடைக்கும் என்ற அவநம்பிக்கை- கல்விக்குப்பின் எங்கே வேலை செய்வது என்பதல்ல, என்ன வேலை கிடைக்கும் என்ற கேள்விதான் அன்று ஒவ்வொரு பட்டதாரி வாலிபன் தூக்கத்தையும் கெடுக்கும் கவலையாக இருந்தது. இந்த நாளைய “காம்பஸ்“ அல்ல, அது ஒரு வாழ்வா சாவா பிரச்னை.

80களின் ஏராளமான திரைப்படங்களில்  நேர்முக காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்நேர்முகங்களில் இடம்பெறும் அபத்தமான, நடைமுறை வாழ்க்கைக்குப் பொருந்தாத கேள்விகள், அவற்றைத் தொடுக்கும், அந்த அகலமான மேஜைகளுக்குப் பின் அமர்ந்திருக்கும் இறுக்கமான முகங்கள்- கோபக்கார கதாநாயகன் இந்த நாடகத்தைப் பழித்தபடி ஆத்திரத்துடன் வெளியேறும் காட்சிகளும் நிறைய உண்டு. ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘பாலைவனச் சோலை’ போன்ற பல படங்களை இங்கு நினைவு கூரலாம்.

80களின் தமிழ் இலக்கியத்திலும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டு தனக்குள் சுருங்கி வெதும்பி துயருறும் வாலிபர்கள் நிறையவே உண்டு. அவற்றில் பல கதைகளும் அந்தப் பிரச்னையால் உருவாகக்கூடிய லௌகிக விளைவுகளை பேசின. வண்ணநிலவனின், ‘கரையும் உருவங்கள்’ போன்ற சில கதைகள், அக்கால இளைஞர்களின் எதிர்வினைகளை உளவியல் ரீதியாகவும் வெளிப்படுத்தின. ஆனால் அந்த வகை  கதைகளில் தனித்து நிற்கும் ஒன்று.. ஆதவனின் “இன்டர்வியூ” என்றே பெயர்  கொண்ட ஒரு சிறுகதை

ஆதவனின் பெரும்பாலான கதைகளைப் போலவே இதுவும் ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களை, சொல்லப்போனால், இன்டர்வியூ என்ற ஒரே ஒரு சம்பவத்தைத்தான் விவரிக்கிறது. சுவாமிநாதன், சிறுவனாக தன் தந்தையுடன் கடைத்தெருவில் நடக்கும்போது, அவர் அவனுக்கு ஐஸ்க்ரீம் வேண்டுமா என்று கேட்கிறார். நான் என்ன குழந்தையா என்கிறான். அவர் சிரிக்கிறார். அப்போது அடிக்கிறது அலாரம். ஆம், அது ஒரு கனவு. அவனுக்கு இப்போது அந்தத் தந்தை இல்லை. மேலும், அன்றைய தினம் ஒரு இன்டர்வியூவும் இருக்கிறது. ஒரு வேலையில்லா இளைஞன் தன் வீட்டில் செய்யக்கூடிய அன்றாட வேலைகள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு அப்பாவின் நண்பர் ஒருவரிடம் நன்னடத்தைச் சான்றிதழ் ஒன்றையும் வாங்கிக் கொண்டு அவரது காரிலேயே இன்டர்வியூ நடக்கும் கம்பெனிக்குச் சென்று நேர்முகத்தில் பங்கேற்றபின் திரும்ப வரும் வழியில் ஒரு சினிமாவை பாதி பார்த்துவிட்டு வீட்டுக்கு வருவதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருப்பதில் முடிகிறது கதை.

கதை இரண்டு தளங்களில் பயணிக்கிறது. ஒன்று சுவாமிநாதனின் நேர்முகம், அங்கே அவன் காணும் மற்ற  இளைஞர்கள், நேர்முக அறைக்குள் நுழையும் முன்பு நடைபெறும் கலாட்டா பேச்சுக்கள், நேர்முகத் தேர்வு ஏற்படுத்தும் இறுக்கமான உணர்வு, அது முடிந்த பின்னர் ஏற்படும் ஒரு விடுதலை உணர்வு என்று ஒரு தளம். கூடவே சுவாமிநாதனின் எண்ணவோட்டங்களின் மூலமாக அவனது நிலையையும், வீட்டில் அவன்,  அவன் அம்மா மற்றும் அக்காவுடனான உறவின் தன்மையையும், அண்மையில் மறைந்த அவன் தந்தையைப் பற்றியும் வரும் சித்திரங்கள் இந்தக் கதையை தனித்த சிறப்பு உடையதாக ஆக்குகின்றன. உண்மையில், கதையில் ஒரு பாத்திரமாக சுவாமிநாதனின் தந்தை வருவதில்லை. ஆனால், சுவாமிநாதனது எண்ணங்களின் மூலமாக அவரது இருப்பு அல்லது இழப்பு அவர் இல்லாமலும் இருப்பதை நாம் உணரும் வகையில் மிக நுணுக்கமாகச் சொல்லப்படுகிறது.

வீட்டில் இரண்டு பெண்களுக்கிடையே இருக்கும் சுவாமிநாதன் இன்னொரு ஆணான தன் தந்தையின் இன்மையை உணருதல், அவர் அவனது பாதுகாப்பான உலகாக இருத்தல் ஆகியவை கதையின் துவக்கத்தில் வரும் அந்தக் கனவின் மூலமாக காட்டப்படுகிறது. பின் அவன் தந்தையின் நண்பர், அவர் தலையில் அவன் காணும் வழுக்கையின் துவக்கம், பேச்சுக்கிடையே ஏதோ ஒரு ராகத்தை முணுமுணுப்பது ஆகியவற்றிலெல்லாம், அவரில் தன் தந்தையை சுவாமிநாதன் அடையாளம் காண்பது அதிகம் சொல்லாமலேயே குறிப்பாக உணர்த்தப்படுகிறது. அதோடு, இரு பெண்களுக்கிடையே வாழும் இளம் சுவாமிநாதன் மேல்  அவர்களின் உடல் ஏற்படுத்தும் இனம்புரியாத ஈர்ப்பும் கவர்ச்சியும், அதற்காக அவன் கொள்ளும் குற்ற உணர்வும் கூட, கோடிட்டுக் காட்டப்படுகிறது.

பின் சுவாமிநாதனின் இன்டர்வியூ அவன் தாய் மற்றும் தமக்கையால் எதிர்கொள்ளப்படும் விதம், இருவருக்குமே சுவாமிநாதன் இந்த இன்டர்வியூவில் தேறி வேலைக்குப் போய்விட வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. ஆனால் கூடவே,  அது தங்கள் உலகை, அவனுடனான உறவின் தன்மையை, பாதிக்கும் விதத்தை பற்றிய கவலையும் இருக்கிறது. சுவாமிநாதனுக்கே கூட, அவனது அக்காவின் உழைப்பில்  வாழ்வதிலிருந்தும் அம்மாவின் சங்கடப்படுத்தும் பரிவிலிருந்தும்  விடுபட ஆவல். ஆனால், தன்னுடைய பகல் பொழுதுகள் வேற்று மனிதர்களுக்குச் சொந்தமாகி தன்னுடைய விடுதலையை இழப்பது குறித்தும் அச்சம்.

அவன் அக்காவிற்கு, சாமிநாதனின் இன்டர்வியூவின்  மூலம் அவனுக்கு அமையும் வேலை, அவளை இவர்களின் இந்த உலகத்திலிருந்து விடுவித்து அவளுக்கான உலகத்தை (அவளை  ஒரு கறுப்புக் கண்ணாடி இளைஞனோடு சுவாமிநாதன் சாலையில் பார்க்கிறான்) அடைய ஆவல். அதே சமயம், அவளது சம்பாத்தியத்தில் வாழும் அவளது அம்மா மற்றும் சுவாமிநாதன் மீதான ஒரு மேலாதிக்கத்தை இழப்பதிலும் உள்ள இழப்புணர்வு இருப்பதும் குறிப்பாக உணர்த்தப்படுகிறது.

சுவாமிநாதனது அம்மாவுக்கும் அவன் அந்த இன்டர்வியூவில் வெற்றி பெற வேண்டுமென்ற தவிப்பு  இருக்கிறது. அதன் மூலம் அவனில் அவன் அப்பாவைக் காணவும், கர்வத்துடன் மீண்டும் வெளியே செல்லவும் ஆசை. ஆனால், கூடவே அவனுடைய அக்காவைப் போலவே அவனும் அவளுடைய உலகத்தை விட்டு நழுவி வெளியே சென்று விடுவானோ என்ற அச்சமும் இருக்கிறது.

இதையெல்லாம் யோசித்துக் கொண்டு சுவாமிநாதன் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கிறான். சினிமாவுக்கும் நிஜ வாழ்க்கைக்குமுள்ள வேறுபாட்டையும் நினைத்து மருகுகிறான். இதே சினிமாவென்றால், அவனது அப்பா எப்படியோ இடைவேளைக்குப் பின் வந்துவிடுவார். இந்த இன்டர்வியூ அலுவலகத்தின் ரிசப்ஷன் அழகி ஒரு காரில் வந்து அவனை ஏற்றிக் கொள்வாள். அந்த கம்பெனியே அவளது அப்பாவுடையதாக இருக்கும். சினிமாவைப் போல வாழ்க்கை இருந்தால் கஷ்டமே இல்லை. ஆனால், இது வாழ்க்கை. அதனால் சுவாமிநாதன் பேருந்துக்காகக் காத்துக் கொண்டேயிருக்கிறான்.