விமரிசனம்

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: காவல் கோட்டம் – ரஞ்சனி பாசு

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018

மதுரையின் புதிய தரிசனம்

“பாட்டி பூமியெங்கும் கதைகளை
புதைத்து வைத்திருக்கிறாள்
பிரசவிக்கும் குழந்தை கதை வாசம்
பட்டே பூமி பார்த்து வருகிறது
பாட்டி காற்றெங்கும் கதைகளை தூவி
வைத்திருக்கிறாள்
கல்லாய் மாறிய அகலிகை போல்
காற்றாய் மாறிய கதைகள்
பாட்டியின் சுவாசம் பட்டு மறுமொழி
கொள்கிறது
கதை மொழியாகும் பொழுது பாட்டி
கதையாகிறாள்”

சு.வெங்கடேசன் தனது ஆதிப்புதிர் கவிதையில் சொன்னது தான் காவல்கோட்டத்திற்குள் பயணப்படும் ஒவ்வொரு வாசகருக்கும் ஒளியூட்டி. கதைகள் கூறும் விந்தை உலகங்கள், வடிவமைக்கும் மனிதர்கள், ஏற்படுத்தும் பரவச அனுபவங்கள் நம்மில் பலருக்கு பால்யத்தில் கடந்த உன்னத தருணங்கள். கதைகள் கடத்தும் அதிர்வலைகள் சொல்பவரின் திறனையும், கேட்பவரின் கற்பனையையும் ஊடுபாவாய் நெய்து முப்பரிமாணமாய் விரிகிறது. கதை சொல்லியின் திறன், கேட்பவர் மனதில் உணர்வெழுச்சியை ஏற்படுத்துவதில் மதிப்பிடப்படுகிறது. விரியும் கதையின் தளத்தின் வழியே தான் நாம் நமது அனுபவங்களைக் கொண்டு, வாழ்வின் மேன்மையை, துயரங்களை, இழப்புகளை தரிசிக்கிறோம். சொல்லும் கதையும், எழுதும் கதையும் வேறு வேறா என்ன? நாவலாசிரியர் தன் உயிருள் கரைந்த உணர்வை, எழுத்துக்களில் நெய்து விரிக்கிறார். வாசகர் தன் அனுபவ உணர்வுகளால், நாவலாசிரியர் சொன்னதை, சொல்லாததை எல்லாம் தேடிக் கண்டடைகிறார். அப்புள்ளியில் தான் நாவல் முழுமையடைகிறது.

காவல் கோட்டம் நாவலைப் பற்றி வெங்கடேசன் குறிப்பிடும் போது “மதுரையின் காவல் , காவல் நிலை என்கிற புள்ளியிலிருந்து முன்பின் பயணிப்பது தான் காவல்கோட்டம்” என் கிறார். பொதுவாக மதுரையின் 600 ஆண்டுகளின் வரலாறு என்று சொன்னாலும், 550 வருடங்களை 200 பக்கங்களிலும், மீதம் உள்ள 50 வருடங்களை 800 பக்கங்களிலும் விவரித்துள்ளார். காவல் கோட்டம் நாவலைப் பற்றிய பகிர்வு என்பது, மதுரையின் பல்வேறு பரிணாமங்களின் பகிர்வே!!

மல்லல் மூதூர்

மதுரை நகரத்தின் வசீகரமே அது தன்னுள் பொதித்து வைத்திருக்கும் பழமை தான். ஷாப்பிங்மால்கள், மேற்கத்திய உணவகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என்று மதுரை நவீனமயமாக்கப்பட்டாலும், கிராமத்துச்சிறுமியின் பொருந்தா நவீன ஒப்பனையைப் போல் தான் அது தோற்றமளிக்கிறது. மீனாட்சி திருக்கல்யாணம், தேர்த்திருவிழா, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும் போது, அது தனது நவீனப்பூச்சினை உதிர்த்து விட்டு, தனது உண்மைத் தோற்றத்தில் பழமை ஒளிர அழகாய் காட்சியளிக்கும். மதுரை நகரத்தின் சிறிய சந்து, சிதிலமான ஒற்றைச்சுவர் கூட ஆயிரமாண்டுகால வரலாற்றின் மெளன சாட்சியமாக நிற்கும். வரலாற்றின் பக்கங்களில் மதுரையின் குறிப்பைத் தேடிப் போனால், கி.மு மூன்றாம் நூற்றாண்டில், கிரேக்க யாத்திரிகர் மெகஸ்தெனிஸ் “கிழக்கின் ஏதென்ஸ்” என்று மதுரை நகரைப் பற்றி பதிவு செய்துள்ளார். தொடர்ச்சியாக சங்க இலக்கியங்களில் மதுரை பற்றிய விவரணைகள் இருக்கின்றன. மதுரையின் பழம்பெருமைக்கு ஆதாரம் புனைவுகளில் மட்டுமல்ல, தொல்லியல் ஆய்வுகளும் சான்றளிக்கின்றன. சமீபத்தில் நடந்தேறிய கீழடி அகழாய்வு, 2200 ஆண்டுகளுக்கு முன் இருந்த நகரத்தின் தொல்லியல் பொருட்களைக் கண்டுபிடித்திருக்கிறது. 258 கிமீ நீளமுள்ள வைகைநதியின் கரைகள் தொடர்ச்சியாக மக்களின் வாழ்விடங்கள் கொண்டதாக அன்று முதல் இன்று வரை இருக்கிறது என்பதே அதன் தனிச்சிறப்பு.

மதுரை நகரின் அமைப்பு அந்தந்தக் காலங்களில் மாற்றி அமைக்கப்பட்டு வந்துள்ளது.

“மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்”

என்று நெடுநல்வாடை குறிப்பிடுகிறது.

“தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண்போர்க்கதவின்
மழையாடு மலையினி வந்த மாடமொடு
வையையன்ன வழக்குடை வாயில்”

என்று கூறும் மதுரைக்காஞ்சி, வலிமிக்க தெய்வமாகிய கொற்றவையின் உருவம் செதுக்கப்பட்ட நெடுநிலை என்றும், அதில் விளக்கேற்றியதால் நெய் உருகிக் கரிந்த கதவு என்றும் கோட்டை அமைப்பை விளக்குகிறது. ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கேற்ப நகரின் அமைப்பு மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டே வந்துள்ளது என்பதை இலக்கியச் சான்றுகளின் வழி தெரிந்து கொள்கிறோம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மையப்புள்ளியாகக் கொண்டு, பல அடுக்குகளாய் இதழ்கள் கொண்ட தாமரை மலரைப் போல் மதுரை நகர் அமைந்திருக்கிறது என்பது அழகியலும், வரலாறும் முயங்கும் தகவல். நாயக்கர் காலத்து நிர்வாகம் உருவாகத் துவங்கியது முதல், பல மாற்றங்களை சந்தித்து, ஆங்கிலேயர் நிர்வாகத்தில் மதுரை அமைப்புரீதியாக, நிர்வாகரீதியாக இறுதிவடிவம் பெற்றதையே காவல்கோட்டம் கூறுகிறது.

இரவின் ஒளியில்

இரவு எல்லாக் காலத்திலும் ரகசியங்களின் பொக்கிஷமாகவே திகழ்கிறது. இரவின் அழகை, இரவின் மயக்கும் தன்மையை கவிஞர்கள் எல்லாக் காலத்திலும் பதிவு செய்திருக்கின்றனர். பதுமனாரின் “ நள்ளென்றன்றே யாமம்” என்னும் குறுந்தொகைப் பாடல், காலம் கடந்து நிற்கும் இரவின் விவரிப்பு. மதுரைக்காஞ்சியில் இடம் பெற்ற
“குடமுதல் குன்றம் சேர குணமுதல்

நாள் முதிர் மதியம் தோன்றி நிலாவிரிபு
பகல் உரு உற்ற இரவு வர”

என்ற இரவின் வருகையின் வர்ணனை மதுரையை இரவின் ஒளியில் காணச் செய்கிறது.

“ இரும்பிடி மே எந்தோல் அன்ன இருள் சேர்பு
கல்லும் மரனும் துணிக்கும் கூர்மைத்
தொடலை வாளர் தொடுதோல் அடியர்
குறங்கிடைப்பதித்த கூர்நுனைக் குறும்பிடி
சிறந்த கருமை நுண்வினைநுணங்கு அறல்
நிறம் கவர்பு புனைந்த நீலக்கச்சினர்
மென்நூல் ஏணிப் பல்மாண் சுற்றினர்”

இரவில் கள்வர் களவுக்கு செல்வதையும் கூட, பெண்யானையின் தோலை ஒத்த கருமை சூழ் இரவில் கூர்மையான உடைவாள் ஏந்தி, மெல்லிய நூலாற் செய்த ஏணியை இடுப்பில் சுற்றி சென்றனர் என விவரித்து, அவ்வாறு செல்பவரை களிறை இரையெனக் கொள்ளும் புலியைப் போல் காவலர் தெருக்களில் உலவினர் என்ற மாங்குடி மருதனாரின் வர்ணனையில் துவங்குகிறது காவல்கோட்டத்தின் அஸ்திவாரம். 2500 கால மதுரையின் வரலாறு களவையும், காவலையும் பல்வேறு ஆட்சி மாற்றங்களின் ஊடே, இணைத்துப் பார்க்கப்பட வேண்டியதே என்ற புரிதலோடு,காவல்கோட்டத்தினை வாசிப்பதே அதனை முழுமையாக உள்வாங்க உதவும்.

வடிவமற்ற வடிவம்

தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் முதல் இன்று வெளியாகும் நாவல் வரை, நாவல் பல வடிவங்களைக் கடந்து வந்துள்ளது. வாசகராய் கையில் காவல் கோட்டத்தை ஏந்துகையில், எவ்வாறு இது ஒரு நாவல் எனப்படுகிறது என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுவதற்கு, காவல்கோட்டம் வெளிவந்த புதிதில் எழுந்த பலதரப்பட்ட விமர்சனங்கள் முக்கியமான காரணியாகும். 1054 பக்கங்கள் கொண்டதாலேயே வேறு பேச்சின்றி நாவல் எனப்படுவதா? இதற்கான துலக்கம், ஜெயமோகன் எழுதிய “நாவல் கோட்பாடு” புத்தகத்தில் கிடைக்கிறது. “ஒவ்வொரு படைப்பாளிக்கும் தனியாக வடிவப் பிரக்ஞை உள்ளது. எனவே வடிவங்கள் பற்றிய விவாதம் என்பதுஎல்லா படைப்பாளிகளுக்கும் உள்ள பொது அம்சங்களை ஷரத்துகளாகக் கொண்டு ஒரு வடிவ நிர்ணயத்தை உருவாக்குவது எப்படி என்பதாக இருக்க முடியாது. மாறாக, எப்படி ஒவ்வொரு படைப்பாளியும் தன் இலக்கிய வடிவத்தை மேலும் மேலும் செம்மைப்படுத்திக் கொண்டு முன்னகர உதவ முடியும் என்பதாகவே இருக்க முடியும். மிகச்சிறந்த உதாரணங்களாக, “போரும் அமைதியும்” “கரமசோவ் சகோதரர்கள்” போன்ற பெரும் படைப்புகளின் மிகச்சிறந்த இயல்பாக அவற்றின் “வடிவமற்ற வடிவம்” தான் விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது. அவற்றை வாசகர்கள் மீண்டும் மீண்டும் படிப்பதற்கு காரணம் இந்த விரிவு தான். பெரும் காடு போல தழைத்து ஈரமுள்ள நிலமெங்கும் பரவி நிறைந்திருப்பது ஒரு சிறந்த நாவலின் இலக்கணம் எனக் கொள்ளலாம். மலைகள் போல, வடிவமின்மையும் வடிவமாக இருப்பதே நாவல் எனப்படுகிறது.” அவ்வகையில், காவல் கோட்டம் வடிவார்த்தமாக நாவல் என ஏற்றுக்கொள்ளப்படுவதில் எந்த தயக்கமும் இல்லை.

வரலாற்றின் மறுவாசிப்பு

வரலாற்றுத் தகவல்கள், தரவுகளை ஆகியவற்றை மறுவாசிப்பு செய்வதே வரலாற்றுப் புனைவின் அடிப்படையான நோக்கம். துண்டுகளாய் கிடைப்பவற்றை அடுக்கி, அவற்றை தன் கற்பனையில் சித்திரமாய் இணைக்கும் வேலையை நாவலாசிரியர் செய்கிறார். மதுரையை நாயக்கர்கள் ஆட்சி செய்தனர் என்பது வரலாறு. மாலிக் கபூர் படையெடுத்து வந்தான் என்பதும் வரலாறு. அவற்றை காவல்காரர்களின் வாழ்வோடு இணைத்தது புனைவு. கிபி.1371 ஆம் ஆண்டு குமாரகம்பணனின் மதுரைப்படையெடுப்பு, சுல்தான் களை வென்றெடுக்கிறது. அவரது மனைவி கங்காதேவி சமஸ்கிருதத்தில் புலமை பெற்றதால், “மதுரா விஜயம்” என்ற காவியத்தை இயற்றினார். இன்றளவும், அன்றைய செய்திகளை அறிந்து கொள்ள ஆதாரநூலாக மதுராவிஜயம் திகழ்கிறது. வெங்கடேசன் கங்காதேவியை அமணமலையில், காவல் பணி செய்யும் கருப்பணனின் மனைவி சடச்சியை சந்திக்க வைக்கிறார். அவரது சித்திரத்தின் முதல் கோடு அதுவே. வரலாற்றில் கிடைக்கும் வெற்றுத்தகவல்களை அழகிய சித்திரமாக மாற்றுவதே வெற்றிகரமான வரலாற்றுப்புனைவாக அமையும். தமிழில் பிரபல சரித்திர நாவல்களாக அறியப்படும் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்றவை காலம் கடந்து நிற்பவை. ஆனாலும், மொழிநடையிலும் கூட நாடகத்தன்மையுடன் இருக்கும். ஒரு சரித்திர நாவலை வாசிக்கும் உணர்வு வாசகர் மனதில் மேலோங்கி இருக்கும். ஆனால், காவல் கோட்டம் நாம் காலஎந்திரத்தில் ஏறிச்சென்று அந்நிகழ்வுகளின் ரத்தசாட்சியாக இருந்ததாக உணரச் செய்கிறது. இதுவே, வெங்கடேசனின் வெற்றி. காவல்கோட்டத்தின் தனித்துவத்திற்கு சான்று.

காவல் கோட்டம்

நகரத்தின் பாதுகாப்பை, கட்டுக்கோப்பை உறுதி செய்யும் கோட்டையின் அமைப்பு, ஆட்சியாளர்களின் கெளரவச் சின்னமாக அறியப்படுகிறது. அது வெவ்வேறாக உருவாகும் சூழல் நகரம் சந்திக்கும் மாற்றங்களின் சாட்சியமாக அமைகிறது. குமாரகம்பணனின் மதுரை விஜயத்தின் போது, மதுரைக் கோட்டை குட்டையாக, முதுமைபூண்டு, சுட்ட செங்கல்களின் அடுக்காக காட்சியளிக்கிறது. அதன் பின்னர் விஸ்வநாத நாயக்கர் காலத்தில், மிகச் சிறப்பான திட்டமிடலோடு கல்கோட்டை எழுப்பப்படுகிறது. அதிலிருந்து, ஏறத்தாழ 400 ஆண்டுகள் கழித்து, பிளாக்பர்ன் தலைமையில், கோட்டையை இடிப்பது வரை, மதுரையின் தலைமை பல கைகள் மாறிவிட்டது. சிறிய அத்தியாயத்தில் சொல்லப்பட்டாலும் கூட, கட்டபொம்முவின் கதை அழுத்தமாய் இருக்கிறது. ஆங்கிலேயர்களின் பீரங்கி தாக்குதலைத் தாக்குப்பிடித்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டை ஒரு முறை நின்றது ஆச்சரியமே. கட்டபொம்மு நாயக்கரை, வீரபாண்டிய கட்டபொம்மனாக ஆக்கி, வீரவசனம் பேச வைத்த தமிழ்த் திரையுலகத்தின் வரலாற்று உணர்வு ஏனோ மனதில் வந்து போகிறது.

மதுரைக் கோட்டையை இடிக்கும் முடிவை எடுத்த கலெக்டர் பிளாக்பர்ன், அதை முழுமையாய் நிறைவேற்றி மதுரையை விட்டு வெற்றிகரமாய் வெளியேறும் வரைக்குமான சித்தரிப்பு காவல்கோட்டத்தின் மையமான, உயிரோட்டமான பகுதியாக அமைந்துள்ளது. மாடத்தை தாங்கி நிற்கும் கோட்டை வாயில் சித்திரம் ஒன்றை ஒரு இளைஞரின் தோளில் வழிகிற இரத்தத்தினூடே பச்சை குத்தும் குறத்தி மிக அழகான படிமம். கோட்டைச் சுவரை காவல் காத்த இருபத்தோரு சாமிகள், கோட்டை வாயிலை காவல் காத்த நான் கு சாமிகள் மக்களின் நம்பிக்கையில் ரத்தமும் சதையுமானவர்கள் . கோட்டைச்சுவரை இடிக்க பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் மக்கள் ஒப்புக் கொள்கின்றனர். இரவு பரிகார பூஜை செய்யப்படுகிறது. ஒவ்வொரு சாமியாய் கோட்டையில் இருந்து இறங்க ஆரம்பிக்கின்றன. வெங்கடேசன் களமாடிய பகுதி இது. வெங்கடேசன் மிகுந்த சிரத்தையோடு வரிக்கு வரி அத்தனை அழகாய் செதுக்கியிருக்கிறார். எட்டுப்பேர் இழுத்துப்பிடிக்க சங்கிலிக்கருப்பன் இறங்கிய வேகத்தில், அவர்மீதான வெற்று விமரிசனங்கள் காற்றோடு கலந்து விட்டன.

இரவின் மடியில்

காவல்கோட்டம் நாவல், தாதனூரின் காவல் பணியையும், களவு நுணுக்கங்களையும் கொண்டு பின்னப்பட்டது. மதுரையின் ஆட்சி மாற்றங்கள் நடந்த 600 ஆண்டுகால வரலாற்றில், தாதனூரின் காவல் உரிமை பறி போனது. திரும்பக்கிடைத்தது. திரும்ப பறிக்கப்பட்டது. சடச்சியின் வாரிசுகள் இரவின் மடியில் வளர்ந்தவர்கள். இரவின் ருசியை துளித்துளியாய் உணர்ந்தவர்கள். திருமலை நாயக்கர் அரண்மனையை விட்டு இருள் வெளியேறிய போது, அவரின் கெளரவமும் வெளியேறுகிறது. தாதனூர்க் களவின் முத்திரை, ராஜமுத்திரையை வெல்கிறது. காவல் உரிமையைப் பரிசாக வெல்கிறது. வெங்கடேசன் அதை “நான்மாடக் கூடலின் வீதிகளில் திரிகிற இருளின் கழுத்தில் வடம்போட்டு, சாவடியின் தூண்களில் தாதனூர்க்காரர்கள் கட்டி வைத்திருந்தனர்” என் கிறார். பார்வையால் அல்ல, புலன் களின் விழிப்பால் காவல் காக்கிறார்கள். சப்தங்களின் வழி களவுக்கு நேரும் அபாயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஏட்டு வீராச்சாமியின் வீட்டிற்கு இரவில் வரும் காவல்காரர்கள் ஓசையின்றி பித்தளை செம்பில் தண்ணீர் குடித்துச்செல்லும் ஒரு காட்சி போதும் அவர்களின் இயக்கத்தை சொல்ல. இரவின் அழகை, இரவின் ரத்தவேட்கையை, இரவின் ரகசியங்களை, இரவின் மடியில் விளையாடியபடி, கரும்பளிங்குச் சிலையென மதுரையை விவரிக்கிறார் வெங்கடேசன்.

கோட்டத்தினுள்ளே…

மதுரையின் முழுமையான தொகுக்கப்பட்ட வரலாறு என்று நெல்சன் அவர்களின் “மதுரா கன்ட்ரி மானுவல்” கூறப்படுகிறது. நாயக்கர்களின் வரலாறு தனியாக “ஹிஸ்டரி ஆப் மதுரை நாயக்” என்ற சத்தியநாதய்யரின் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. வரலாற்றில் இருப்பதை அடுக்கி வைப்பது வரலாற்று ஆசிரியரின் வேலை. தன் மனதின் கற்பனையை வடிவமாக்குவது நாவலாசிரியரின் வேலை. வரலாற்று நாவலாசிரியர் முன்னால் உள்ள பெரும் சவால், இவ்விரு வேலைகளையும் பொருத்தமான புள்ளியில் இணைத்து, வரலாற்று இடைவெளிகளை தன் கற்பனையால் நிரப்பி அழகிய வேலைப்பாடு மிகுந்த படைப்பாக வாசகர் முன் வைப்பது. வெங்கடேசன் வரலாற்றின் சட்டகத்திற்குள் தன் கற்பனையை செதுக்கி இருக்கிறார். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். எனினும், சில அவசியமான இடங்களை வெற்றிடமாகவே விட்டிருக்கிறார்.

வெங்கடேசன் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். ஒரு வாக்கியத்திற்குள் மூன்று தலைமுறைகளைக் கடக்க வேண்டிய தேவை இருந்தது என்று. முதல் அத்தியாயத்தில், நிறைசூலியாய் மதுரை நகரை விட்டு வெளியேறும் சடச்சி, இரண்டாவது அத்தியாயத்தில் கிழவியாய் பேரக்குழந்தைகளோடு தோன்றுகிறாள். இத்தனை வேகமான பாய்ச்சல், அவசியமானாலும் கூட, சில விடுபடுதலுடனே இருக்கிறது. நாயக்கர் ஆட்சியாளர்களுக்கும், கிறிஸ்தவ மிஷனரிகளுக்குமான உறவு நிலை குறித்த சித்திரம் அத்தனை தெளிவாக இல்லை. அக்காலகட்டத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்பட்ட, திருமலை நாயக்கரின் மிஷனரி ஆதரவு நிலைபாடு குறித்த ரகசியக் கதைகள் இன்றும் உலவுகையில் நாவல் அது பற்றி மெளனம் சாதிக்கிறது. மதுரையில் மீனாட்சி கோவிலின் விரிவாக்கம் ஒவ்வொரு காலத்திலும் எவ்வாறு நடந்தது என்பதைச் சொல்லும் போது, “இருந்தையூர்” என்று பரிபாடலில் குறிப்பிடப்பட்ட, திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்ற, இன்றும் இருக்கும் கூடலழகர் கோவிலைப் பற்றிய குறிப்பு நாவலில் எங்கும் இல்லை. நாயக்கர்களின் குலங்கள், உட்பிரிவுகள், அவற்றிற்கிடையேயான ஏற்றத்தாழ்வுகள், மண உறவுகள் போன்றவற்றை மிக விரிவாக இந்நாவல் பேசுகிறது. எனினும், அது அங்கங்கே சிறிய வெளிப்பாடுகளாக உள்ளன. பின் இணைப்பாகவேனும், இப்பிரிவுகள் குறித்த தெளிவான விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம். அது கூடுதல் புரிதலுக்கு வழிவகுத்திருக்கும். அமண மலையில் உள்ள தீர்த்தங்கரது சிலைகள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. நேமிநாதன் செட்டியார் மட்டுமே சமணராய் வந்து போகிறார். 600 ஆண்டுகால வரலாற்றில், சமணக்குடும்பங்கள் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. 280 பக்கங்களிலேயே யூனியன் ஜாக் அத்தியாயம் துவங்குகிறது. அது வரை நாயக்கரின் போர் தந்திரங்களும், தாதனூரின் களவு நுணுக்கங்களும் மாறி மாறி சொல்லப்படுகின்றன. அதிகாரம் வகுக்கும் சட்ட திட்டங்களுக்கும், வாழ்க்கை முறையிலிருந்து சாமானியர்கள் வகுக்கும் சட்ட திட்டங்களுக்கும் தான் எத்தனை வித்தியாசங்கள்!!

எல்லா காலகட்டத்திலும் எளியவர்களின் உயிர்துறத்தில் கற்பனை செய்ய முடியாத தீரத்துடனும், எளிய மதிப்பீடுடனும் வெளிப்படுகிறது. நாவலின் துவக்கத்தில் கனகநூகாவின் தற்பலி, கோட்டை வாசல் வாணம் தோண்ட திம்மன் உள்ளிட்ட நான் கு இளைஞர்களின் பலி ஆகியவை அதிகாரவர்க்கத்தின் விதிமுறைகள் என்றால், எளியவர்களின் விதிமுறைகள் அநியாயமாய் பலி கொள்ளும் சின்னானின் உயிர். இது ஒரு புறம் என்றால், உயிர்ப்பலி கொத்து கொத்தாய் நிகழும் தாது வருஷப் பஞ்சம் பற்றிய விவரிப்பு. மிகத் துல்லியமாக பஞ்சத்தின் அனைத்துக் கூறுகளையும் செய்த ஒரே பதிவு காவல்கோட்டம் தான்.

சிறிய சிறிய சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமேயில்லை. ரெட்டியைக் கெடுத்த வெள்ளி, தாதனூரில் களவாடிய குறவன், ஆஞ்சநேயரின் வடிவங்களை மூட்டையில் களவாடி வரும் பெருசு, கிழவிகளுக்கு பயந்து ஒதுங்கிப் போகும் பெருசுகள் என ஆங்காங்கே இளைப்பாறிச் செல்லவும் இடமிருக்கிறது.

பெண்மையின் பேருரு

ஆண்ட வர்க்கத்திலும், எளிய வர்க்கத்திலும் வெங்கடேசனின் பெண் பாத்திரங்கள் சுயமரியாதையுடன், தெளிவாய் சிந்திப்பவர்களாக, அன்பால் அரவணைப்பவர்களாக, பன்முகத்திறமை கொண்டவர்களாகவே இருக்கின்றனர். ராஜாளியைப் பார்த்த நிமிடத்தில் போரைத் துவங்க ஆணையிடும் கங்காதேவி, தன் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காத ராயரின் மூன்றாம் பட்டத்தரசி துக்காதேவி, மாமனாருக்காக ராயரிடம் வாதாடும் விஸ்வநாத நாயக்கரின் மனைவி வீரநாகம்மா,, என்று துவங்கும் பட்டியல் நல்லாட்சி வழங்கிய ராணி மங்கம்மாள், ராணி மீனாட்சி என தொடர்கிறது. எல்லையற்ற தைரியம் கொண்ட சடச்சியில் துவங்குகிறது தாதனூரின் வீரப்பரம்பரை.அது பல தலைமுறை கடந்து, வெள்ளை சிப்பாயை தனியொருத்தியாய் தலையை அறுத்து கையில் ஏந்திச்செல்லும் கழுவாயி வரை கடத்தப்பட்ட உள்ளுணர்வாய் மிளிர்கிறது. ஆதிக்க வர்க்கப் பெண்களின் வாழ்வு வீரமரணம் அடைந்த கணவன்மார்களோடு உடன் கட்டை ஏறுவதில் கருகும் போது, எளிய வர்க்கப் பெண்களின் வாழ்வு சுதந்திரமான வாழ்க்கைத்துணைத் தேர்வில் மலர்கிறது. தாதுவருஷப் பஞ்சத்தில் பேசப்பட வேண்டிய இரு வேறு பெண்களான நல்லதங்காள் மற்றும் குஞ்சரம்மாளின் சித்தரிப்பு . ஒன்று கையறு நிலையின் குறியீடு. மற்றொன்று களிமிகு வாழ்க்கையில் ஊறியவர், பேருரு கொண்டு மக்களின் துயர்துடைத்த மூதன்னையின் வடிவமானவர்.

சித்தாந்தப் பார்வையில் பொருள் முதல்வாதம் மார்க்சியத்தின் அடிப்படை. “மனித சமூகம் பொருளாதாரத்தை அடிக்கட்டுமானமாகவும், கலாச்சார – பண்பாடு – அரசியல் அம்சங்களை மேல் கட்டுமானங்களாகவும் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. அடித்தளமே மேல் கட்டுமானங்களின் உருவாக்கங்களையும், தன்மைகளையும், இயக்கப் போக்குகளையும் தீர்மானிக்கிறது. எனினும் மேல்கட்டுமானங்களின் வீரிய கருத்தியல் வீச்சினால், அடிக்கட்டுமானம் பாதிப்படையும் சாத்தியங்கள் உண்டு” என்பதே மார்க்சியம் வரையறுக்கும் சமூகப்பார்வை. மார்க்ஸ் இந்தியச் சமூகத்தைப்பற்றி குறிப்பிடுகையில் “ தீர்க்க முடியாத முரண்பாடுகள் உள்ள பல்வேறு இனங்கள், குலமரபுகள், சாதிகள், சமயக்கோட்பாடுகள், அரசுகள் ஆகியவைகளை ஒன்று சேர்த்து, உருவாக்கப்பட்டிருக்கும் பூகோள ஒற்றுமையைத் தான் இந்தியா என்று அழைக்கிறோம்” என் கிறார். இந்தச் சித்திரமே விரிவாக காவல்கோட்டமாய் நம் கைகளில் உள்ளது. ஆதிக்க வர்க்கங்களுக்குள் இருந்த அதிகாரம் கைப்பற்றுதல் தொடர்பான முரண்பாடு, சமூகக் கட்டமைப்பின் பண்பாட்டு ஏற்றத்தாழ்வுக் கூறுக்களிடையே ஆன முரண்பாடு இந்த இரு அம்சங்கள் ஆங்கிலேயர் இந்தியாவில் ஆட்சி அமைக்க வழி வகுத்தவை. பள்ளிக்கூடம் அமைத்ததும், ரயிலின் வருகையும் சாதிய வேறுபாடுகளைக் களையும் கருவிகளாயின.
வரலாறு என்பது தனித்தனியான சம்பவங்களின் தொகுப்பே. அத்தொகுப்பை சித்தாந்த சட்டகத்திற்குள் வைத்துப் பார்த்தால், அதன் சீர்மை புரியும். தொடர்ச்சியான முரண் இயக்கத்தில் பின்னப்பட்டது வரலாறு என்ற தெளிவு கிடைக்கும்.

எந்த ஒரு நாவலும் முதல் பக்கத்தில் துவங்குவதுமில்லை, கடைசிப்பக்கத்தில் முடிவதுமில்லை. வாசகர் தனது அனுபவத்தின் வழியாக அவற்றின் இடைவெளிகளை இட்டு நிரப்பி, படைப்பாளியை கூட சில தருணங்களில் வென்று புதிய தரிசனங்களைக் கண்டடைகிறார்கள். அதுவே, ஒரு நாவலின் ஆகச்சிறந்த வெற்றியாகும்.

தமிழிலக்கத்தின் மிகச்சிறந்த வரலாற்று நாவலாக மட்டுமல்லாமல், மார்க்சிய அழகியலின் மிகச்சிறந்த படைப்பாகவும் காவல் கோட்டம் திகழ்கிறது.

அன்னையென ஆதல் – ‘ஆப்பிளுக்கு முன்’ நாவலை முன்வைத்து

நரோபா

சி. சரவணகார்த்திகேயன் 1984 ஆம் ஆண்டு பிறந்தவர். பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணி. சமூக ஊடகங்களில் முனைப்புடன் இயங்கி வருபவர். முன்னரே கவிதை தொகுப்பு, சிறுகதை தொகுப்புகள் வெளியாகியுள்ளன. கட்டுரைகளும் வனைகிறார். ‘மின் தமிழ்’ எனும் மின் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியராகவும் திகழ்கிறார். அதன் நீண்ட நேர்காணல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. சரவணகார்த்திகேயனின் முதல் நாவல் ‘ஆப்பிளுக்கு முன்’ சென்ற ஆண்டு வெளியானது. சமூக வலைதளங்களில் அதிகமும் வெளிபடுவது அவருடைய திராவிட இயக்கச் சார்பு முகமே. அந்நிலையில் காந்தியின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு ஒரு புனைவை தன்னுடைய முதல் நாவலின் களமாக தேர்ந்தது ஒரு வாசகனாக சன்னமான குறுகுறுப்பை ஏற்படுத்தியது. குறுகுறுப்புக்கு காந்தியைப் பற்றி சரவணகார்த்திகேயன் என்ன எழுதியிருக்கிறார் என்பதொரு காரணமென்றால் மற்றொரு காரணம் நாவலின் பேசுபொருள். காந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனைகள்.

தமிழ் புனைவுப் பரப்பில் காந்தி கையாளப்படுவது புதிதல்ல. புதுமைபித்தனின் ‘புதிய நந்தன்’ துவங்கி மணிக்கொடி எழுத்தாளர்கள் பலருடைய கதைகளில் காந்தி ஒரு பாத்திரமாகவோ அல்லது அவருடைய தாக்கத்தில் வாழ்வை விளக்கிக்கொள்ளும் முயற்சிகளோ, அவருடைய இயல்புகளை தமதாக கொண்ட லட்சியவாத சாயல் கொண்ட கதைமாந்தர்களோ பல்வேறு எழுத்தாளர்களின் புனைவு வெளியில் உலவுகிறார்கள். அசோகமித்திரனின் ‘காந்தி’ சிறுகதை ஒரு உதாரணம். ஜெயகாந்தனின் ஹென்றியும்கூட காந்திய சாரத்தை தமதாக்கிக் கொண்ட ஒருவன்தான். சி.சு. செல்லப்பா மற்றுமொரு முக்கியமான காந்தியுக எழுத்தாளர். ‘சுதந்திர தாகம்; ‘சத்தியாகிரகி’ போன்ற கதைகள் காந்தியின் மீது வழிபாட்டுணர்வு கொண்ட படைப்பூக்கமிக்க ஆளுமைகளில் ஒருவராக அவரைக் காட்டுகிறது. சிதம்பர சுப்பிரமணியனின் ‘மண்ணில் தெரியுது வானம்’, எம்.எஸ்.கல்யாண சுந்தரத்தின் ‘இருபது வருடங்கள்’ போன்ற நாவல்களில் காந்தியொரு பாத்திரமாக வந்து போகிறார். ஜெயமோகனின் ‘பின்தொடரும் நிழலின் குரல்’ நாவல் காந்தியத்தையே தனது தரிசனமாக கொண்டுள்ளது. உன்னத கொள்கைகள் லட்சியவாதத்தின் பொருட்டு ஒருவனை இறுக்கும்போது அடிப்படைவாதத்தை நோக்கி நகர்வதைப் பற்றிய சித்திரத்தை அந்நாவல் அளிக்கிறது. ஊடாக அய்யன்காளி காந்தி சந்திப்பை மையமாக்கிய ‘மெல்லிய நூல்’ நாவலின் தரிசனமாக மேலெழுகிறது. வெகுமக்கள் இலக்கிய பரப்பில் நா. பார்த்தசாரதி, அகிலன், கல்கி என பலரும் காந்திய தாக்கம் கொண்ட புனைவுகளை எழுதி இருக்கிறார்கள். காந்தியை முதன்மை பாத்திரமாக கொண்டு ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், தேவிபாரதி, உட்பட பலரும் சிறுகதைகள் எழுதி இருக்கிறார்கள். ஆனால் காந்தியை முதன்மை பாத்திரமாக கொண்டு தமிழில் இதுவரை இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே வெளிவந்ததுள்ளன என்று எண்ணுகிறேன். ஒன்று மாலனின் ‘ஜனகணமன’ மற்றொன்று ‘ஆப்பிளுக்கு முன்’.

“காந்தி இந்திய மனவெளியில் அவருடைய மரணத்தின் ஊடாகவே மீள்பிறப்பு எடுத்தார்” என்கிறார் மகரந்த் பரஞ்சபே. தமிழ் காந்திய புனைவுப் பரப்பில் காந்தியின் மரணம் ஆழ்ந்த தாக்கம் செலுத்தியிருப்பதை வாசிப்பின் ஊடாக உணர முடிகிறது. தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’, அசோகமித்திரனின் ‘பதினெட்டாம் அட்சக்கோடு’ ஆகியவை காந்தியின் மரணத்தை தம் பிரதிகளில் தீவிரமாக சித்தரிக்கின்றன. காந்தி சென்ற யுகத்தின் லட்சியவாதத்தின் குறியீடாக, பின்னர் அதன் வீழ்ச்சியின் சாட்சியாக புனைவு வெளியில் நடமாடுகிறார். ஞானக்கூத்தன், இசை, சபரி, மனுஷ்யபுத்திரன் என காந்தி தமிழ் நவீன கவிதைகளில் லட்சியவாதத்தின் பகடியாக உருமாறுகிறார். தேவிபாரதியின் ‘பிறகொரு இரவு’, மாலனின் ‘ஜனகணமன’, சரவணகார்த்திகேயனின் ‘நான்காவது தோட்டா’, மற்றும் ‘ஆப்பிளுக்கு முன்’, நரோபாவின்  ‘ஆரோகணம்’ என இவை அனைத்துமே காந்தியின் மரணத்தை பேசுபவை. மரணத்திலிருந்து காந்தி இந்திய சமூகத்திற்கு அளித்தவை என்ன என்று ஆராய்பவை. அவருடைய பெறுமதியை மதிப்பிடுபவை. நிதர்சனத்தில், இறந்த காந்தி மீளெழவில்லை- ஆனால் புனைவுகளில் ஒவ்வொரு முறையும் மேலும் ஆற்றலுடன் காந்தி உயிர்த்தெழவே மரிக்கிறார்.

பொதுவெளியில் வெளிப்படையாக விவாதிக்கப்படாத, அதே சமயம் கிளர்ச்சி தரும் கிசுகிசுக்களுக்கே உரிய ஆற்றலுடன் பன்மடங்கு வீரியத்துடன் உலவும் கதைதான் காந்தியின் ‘பிரம்மச்சரிய பரிசோதனைகள்’. காந்தியைப் பற்றிய பொதுவெளி விவாதங்களில் அவர் தரப்பை வீழ்த்தவும் அவரை சிறுமை செய்யவும் இறுதியாக பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமும் இதுதான். காந்தியை வாசிப்பவர்களிடத்தேகூட இது சார்ந்து ஒரு மவுனமும் உறுத்தலும் ஐயமும் நிலவுவது உண்டு. ஜெயமோகன், பிரேம், மற்றும் லாய்ட் ஐ ருடால்ப் பிரம்மச்சரிய பரிசோதனைகள் குறித்து சில புரிதல்களை அளித்தனர். இந்தச் சூழலில் இதை பேசுபொருளாக தன் முதல் நாவலுக்கு கைகொள்வதற்கு ஒரு துணிவு வேண்டியதாய் இருக்கிறது. அவ்வகையில் எழுத்தாளர் சரவணகார்த்திகேயன் சவால் மிகுந்த, சற்றே சமநிலை இழந்து அடி பிறழ்ந்தாலும் தலைகுப்புற விழும் கழைக்கூத்தாடிபோல் சமநிலையுடன் பயணிக்க யத்தனித்து, சில உதறல்கள் மற்றும் அதிர்வுகள் இருந்தாலும்கூட விழாமல் மறு எல்லையை அடைந்துவிட்டிருக்கிறார்.

காந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனைகள் முப்பதுகளின் பிற்பகுதியில் துவங்குகிறது. தரம்பால் 37ல் காந்திக்கு தூக்கத்தில் நேர்ந்த விந்து விரயம் பற்றி வருத்தத்துடன் எழுதிய கடிதத்தைப் பற்றி ‘காந்தியை அறிதல்’ நூலில் எழுதுகிறார். தன் பிரம்மச்சரியம் கறைபடியாமல் இருக்க மக்கள் பிரார்த்திக்க வேண்டும் என்று அவர் எழுதிய கடிதத்தை காந்தியின் சகாக்கள் எப்படியோ பிரசுரம் ஆகாமல் தடுக்கிறார்கள். சுஷீலா நய்யார், பிரபாவதி துவங்கி மநு வரை பலரும் காந்தியுடன் பிரம்மச்சரிய சோதனையில் வெவ்வேறு காலகட்டங்களில் ஈடுபட்டிருந்தார்கள். நாவல் மநுவுக்கும் காந்திக்கும் இடையிலான உறவையே பேசுகிறது.

காந்தியின் இந்த சோதனைகள் கஸ்தூரி பா உயிருடன் இருக்கும்போதே துவங்கிவிடுகிறது. அவருடைய எதிர்வினை என்னவாக இருந்திருக்கும்? நாவல் மிகச் சன்னமாக இதை தொட்டு காட்டுகிறது. ஆகாகான் சிறையில் தனக்கு உதவியாக இருக்கும் மநுவை காந்தியிடம் இருந்து விலக்கி வைக்கவே அவர் முயல்கிறார். கஸ்தூரி பாவின் மரணத்திற்கு பிறகு வரும் ஒரு நிகழ்வு மநுவின் தூய்மையான வெள்ளந்தித் தன்மைக்கு சான்றாக திகழ்கிறது. பாவிடம் ஒவ்வொரு நாள் நிகழ்வையும் மநு சொல்வது வழக்கம். இறந்த பிறகும் பாவின் நினைவிடத்தில் சென்று அன்றைய நாளைப் பற்றி சொல்கிறாள் மநு. காந்தி இதைப்பற்றி கேட்கும்போது மநு ஒரு பதில் அளிக்கிறார். “பா இருப்பதும் இல்லாததும் என் தேர்வல்ல, ஆனால் சொல்வது என் தேர்வல்லவா?” மெதுவாக அவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு பரிணாமம் கொள்கிறது. காந்திக்கு அணுக்கமாக இருந்த பிறர் பின்னுக்குச் செல்கிறார்கள். மகாதேவ் தேசாயும், பாவும் இருந்த இடத்தை ஏறத்தாழ மநு நிரப்புகிறார். காந்தியின் அணுக்கர்கள் அனைவரும் பொறாமை கொள்ளும் அளவுக்கு அந்த உறவு வலுப்படுகிறது. பியாரிலாலுக்கு மநு மீதிருந்த ஈர்ப்பு, அதை பியாரிலாலின் சகோதரி சுஷீலா தனக்கு சாதகமாக பயன்படுத்தி காந்தியை மநுவிடமிருந்து விலக்க முற்படும் ஆசிரம அரசியல்களையும் நாவல் தொட்டுக் காட்டுகிறது. நாவலின் பாத்திர வார்ப்பில் மநுவின் பாத்திரம் காந்தியைக் கடந்து மேலெழுந்து செல்கிறது. துவக்க காலத்தில் இருக்கும் அவளுடைய குறுகுறுப்பு, மெல்ல தன்னை காந்தியிடம் பூரணமாக ஒப்புவித்தல், பிற்பாடு தக்கர் பாபாவுடன் நிகழும் உரையாடல், மன உறுதிக்கும் ஆசிரம சில்லறை அரசியலுக்கும் இடையில் ஊசலாடுதல், நாவலின் இறுதியில் தேவதாஸ் காந்தி மநு சார்ந்து எந்த செய்தியும் பரவுவதை விரும்பவில்லை என்பதால் அவரை அவசர கதியில் வெளியேற்றிய பின்பான வெறுமை, எல்லாவற்றிற்கும் மேலாக மநுவிண் பதின்ம வயதிற்கே உரிய வெள்ளந்தித்தனம் (காந்தி அதை தூய்மை என்றே கருதுகிறார்).

காந்தி பிடிவாதக்காரராக, பிறழ்வு கொண்டவராக, ஏறத்தாழ சர்வாதிகாரியாக தோன்றக்கூடும். ஆனால் இவற்றை மீறி அவருடைய ஆளுமை பேருரு கொள்ளும் தருணங்களும் நாவலில் உண்டு. நவகாளி யாத்திரையின்போது ஒரு கிராமத்தில் காந்தி வரும் வழியில் சில இஸ்லாமிய இளைஞர்கள் மலத்தை இட்டு வைத்தனர். காந்தி தானே சுத்தம் செய்யத் துவங்குகிறார். பிறர் வேண்டாம் எனச் சொல்லியும் மறுக்கிறார். “இது மனித மனதினைவிட நாற்றம் கொண்டதல்ல” என்கிறார். நவகாளி பயணத்தின்போது மாலை பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தி தனது பிரம்மச்சரிய பரிசோதனைகளைப் பற்றி பேசுகிறார். அதை மொழியாக்கம் செய்ய வேண்டிய நிர்மல் குமார் போசுக்கு பெரும் சங்கடம். இதை இப்படி பொதுவெளியில் பேசித்தான் ஆக வேண்டுமா என மறுக்கிறார். உயிருக்கே ஆபத்தாக போய்விடலாம் என எச்சரிக்கிறார். ஆனால் காந்தி தன்னுடன் நவகாளியில் பயணத்தில் இருக்கும் சகாக்களின் நடத்தையால் புண்பட்டிருந்தார். “எதுவும் என்வரையில் அனாவசியம் இல்லை. என்னை எதிரியாய் பாவிப்பவர்களோ, வெறுப்பவர்களோ செய்யும் செயல்களைக் காட்டிலும் என் மீதான அக்கறையில், அன்பில் என்னைச் சுற்றியுள்ளோர் செய்வதே என்னைப் பெரிதும் புண்படுத்துகிறது,” என்கிறார்.

நாவலின் உயிர்த்துடிப்பான பகுதி என்பது காந்தி- தக்கர் பாபா மற்றும் தக்கர் பாபா- மநு ஆகியோருக்கு இடையே நிகழும் உரையாடல் பகுதி. செய்தி ஆவணத்தன்மை கொண்ட பெரும்பகுதிகள் உள்ள புனைவில் இந்த விவாதப் பகுதியே ‘ஆப்பிளுக்கு முன்’னை நாவலாக்குகிறது என்றுகூட துணிந்து சொல்லலாம். தக்கர் பாபாவுடனான உரையாடல் புனைவெழுத்தாளனாக சரவணகார்த்திகேயனை அடையாளம் காட்டக்கூடிய இடம். தக்கர் பாபா சொல்கிறார், “உடல் என்பது நினைவில் காடுள்ள மிருகம். அது எப்போதும் காமத்தை மறவாது.” காந்தி காமத்தை தாய்மையின் மற்றொரு பரிமாணம் என வாதிடுகிறார். காமத்தை, பால்தன்மையை கடந்து தாய்மையை அடைய வேண்டும் என்கிறார் காந்தி. காந்தியின் மனப்பிறழ்வுக்கு அவர் அளிக்கும் பாசாங்கு என்பதாக இது பொருள் படக்கூடும். ஆனால் காந்தி அப்படி எண்ணவில்லை. கீழை ஆன்மீக மரபில் பிரம்மச்சரியம் செயலூக்கத்துடன் தொடர்புறுத்தப்படுகிறது.

லாய்ட் ஐ ருடால்ப் எழுதிய பின் நவீனத்துவ காந்தி பற்றிய அர.சு. ராமாவின் கட்டுரை இப்படிச் சொல்கிறது. “நான் என் வாழ்நாள் எல்லாம் தொடர்ந்த பிரமச்சர்யத்தைக் கடைபிடித்திருந்தால் என் உற்சாகமும் உத்வேகமும் இன்றுள்ளதைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமாக இருந்திருக்கும் என்று முழுமையாக நம்புகிறேன். அதை என் தேசத்துக்கும் என் உய்வுக்கும் பயன்படுத்தியிருக்க முடியும்,” என்றார் காந்தி. மேலும், “உயிர் தோன்றக் காரணமாக இருக்கும் ஜீவசக்தியை வீணாக்காமல் சரியான வழியில் பயன்படுத்துபவனுக்கு அனைத்து ஆற்றலும் கிடைக்கிறது… முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட சிந்தனைக்கு எண்ணற்ற ஆற்றல் உண்டு, அது தானாகவே செயல் வடிவம் பெற்று வெற்றி காண்கிறது… தன் சக்தியை விரயம் செய்பவனுக்கு இந்த ஆற்றல் எட்ட முடியாத ஒன்று”.

நாவலில், ஆன்மாவையும் உடலையும் மிகவும் எளிமைபப்டுத்துகிறீர்கள் என்கிறார் தக்கர் பாபா. அதற்கு காந்தி அளிக்கும் பதில் கூர்மையானது. “எல்லா மதத்திலும் பாவ மன்னிப்பு என்பது உடலின் குற்றங்களிலிருந்து ஆன்மாவை விடுவிக்கும் நோக்கம் கொண்டது. அப்படி ஓர் ஓட்டையைப் போட்டு தள்ளுபடி தருவதன் மூலம் உண்மையில் பாவ மன்னிப்புகளே பாவங்களை அதிகரிக்கின்றன.”

மேலும் பின் நவீனத்துவ காந்தி நூலில் காந்தியின் புலனடக்கம் குறித்து உள்ள ஒரு கோணம் எனக்கு முக்கியமானது-

தன்னை வென்றவன் தரணியை வெல்வான் என்பது போன்ற புராதன நம்பிக்கைகள் கொண்டிருந்தார் காந்தி. விஸ்வாமித்திரர் கதையே அவர் காமத்தையும் கோபத்தையும் வெற்றி கொண்டு இந்திரிய ஜெயத்தின் ஆற்றலால் திரிசங்கு சொர்க்கம் போன்ற உலகங்களையும் படைக்கும் தவவலிமை பெற்றதைத்தானே சொல்கிறது? இவற்றை வெறும் கட்டுக்கதைகள் என்று புறந்தள்ளாமல், தன் புலனடக்கத்தால் தன்னோடு வாழ்ந்த மக்களின் துயர்களைக் களைந்து அவர்கள் வாழ்வில் அமைதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்த முயன்றார் காந்தி. அவர் தன் புலனடக்கத்தால் படைக்க நினைத்த உலகம் மிக எளிமையானது. திரிசங்கு சொர்க்கத்தைப் போல் தேவலோகத்துக்கு இணையான பிரம்மாண்டம் கொண்டதல்ல அது- ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்ற எளிய இலக்கு கொண்ட சாதாரண கனவு. எளியவர்கள், ஏழைகள் இவர்கள் துன்பமற்று வாழ ஒரு உலகைப் படைக்க விரும்பினார் காந்தி.

காந்தியின் தாய்மைத் தரிசனமும் பெண்ணிய மற்றும் அகிம்சை நோக்கில் முக்கியமான புரிதல் அளிப்பவை. வந்தனா சிவா இக்கோணத்தை வளர்த்தெடுத்ததைப் பற்றி பிரேம் தனது கட்டுரையில் விவரிக்கிறார். ‘பின்தொடரும் நிழலின் குரலில்’ கூட அதீத ஆண் மைய அரசியலுக்கு எதிராக காந்தி கைக்கொண்டது பெண் மைய அரசியல் எனும் கோணம் துலங்கும். ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றிக்கூட பால் கடந்த நிலையை நோக்கி சென்றவர் எனும் கோணம் உண்டு. காந்தி தனது பரிசோதனைகளை மறைக்கவில்லை. பிரார்த்தனை கூட்டங்களில் பேசுகிறார், கடிதங்கள் எழுதுகிறார், கட்டுரைகள் எழுதுகிறார், இதை எல்லாம்விட ஒரு படி மேலே சென்று, பிரம்மச்சரிய பரிசோதனையின் அனுபவங்களை மநுவை நாட்குறிப்பில் எழுதச் சொல்லி அதை தானே திருத்தியும் கொடுக்கிறார். சார்ந்தோரின் பூரண சம்மதத்துடன், அவர்கள் வீட்டாரின் அனுமதியுடன் சோதனையில் ஈடுபடுத்துகிறார். அவர்களுக்கு விருப்பம் இல்லை எனும்போது விடுவிக்கவும் செய்கிறார். மநு எழுதிய நூலின் பெயர் “பாபு என் தாய்”. காந்தியே சொல்வது போல் அவர் இத்தேசத்திற்கே தந்தை, ஆனால் மநுவுக்கு மட்டும் அவர் அன்னையாக தன்னை நிறுவிக்கொள்ள முயல்கிறார். பிறரிடம் அப்படியான உணர்ச்சிகளை ஏற்படுத்தத் தவறிய காந்தி மநுவைப் பொருத்தமட்டில் அந்த இலக்கை அடைகிறார். பிரம்மச்சரிய பரிசோதனைகள் தடைபட்டு மீண்டும் துவங்கியபோது முன்பிருந்த வெளிப்படைத்தன்மை இல்லையென சரவணகார்த்திகேயன் நாவலில் எழுதியிருப்பது எனக்குமே ஆச்சரியமாக இருந்தது.

இத்தனை சொன்ன பிறகும், நாவல் காந்திக்கோ அல்லது மநுவிற்கோ சார்பு நிலை எடுக்கிறதா? என்றால் இல்லை. காந்தியை புரிந்துகொள்ள சில கோணங்களை திறந்து வைக்கிறார். அவற்றை ஏற்பதும், நிராகரிப்பதும் வாசகரின் பொறுப்பு. பெரும்பான்மையினருக்கு காந்தியின் பிரம்மச்சரிய சோதனைகளின் தர்க்கம் உவப்பாக இருக்காது. இந்நாவல் அவர்களை தொந்திரவு செய்யும் என்பதே என் அவதானிப்பும். மநு எனும் தனி மனுஷி மீது எவ்வித தாக்கத்தை காந்திக்கு பின்பான அவருடைய நெடிய வாழ்வில் இவை ஏற்படுத்தி இருக்கும் என்பதை கணிக்க முடியவில்லை. மனித நேய நோக்கில் வாசக மனம் அவர் நோக்கி இரங்குவதை தவிர்க்க முடியவில்லை.

ஆகாகான் சிறைச்சாலையில் மநுவின் வருகையுடன் துவங்கும் நாவல் காந்தியின் மரணத்துக்கு பின்பான மநுவின் வெறுமையுடன் நிறைவுறுகிறது. காந்தியைப் பற்றிய மதிப்பீடுகள் உயர்வதோ, தாழ்வதோ, மாறாமல் இருப்பதோ வாசகரின் வாசிப்பைப் பொருத்ததாகும். என் நோக்கில் காந்தி மேலும் அணுக்கமாகவே ஆகிறார்.

நாவல் முழுக்கவே படர்க்கையில் நகர்கிறது. விவரணைகளற்ற, தட்டையான இதழியல் மொழி. இந்நாவலையே இதழியல் நாவல் என்று வகைபடுத்தலாம். புனைவுத் தன்மை குறைவாக கொண்ட நாவல். ஆகவே வழக்கமான நாவல் போன்ற வாசிப்பனுபவத்தை மொழிரீதியாக இது அளிக்காமல் போகலாம். பெரும் முரண்கள், நாடகீய தருணங்கள் ஏதுமற்று பயணித்தாலும்கூட ஒரே அமர்வில் வாசிக்கத்தக்கதாகவும் இருக்கிறது. நாவலின் மிகப்பெரிய சிக்கல் அதன் மொழி. வெகுஜன தளத்திற்கு நெருக்கமாக இருக்கிறது. தேய்வழக்குகளும் நிறைய இருக்கின்றன. “நண்பகல் ஒரு குறியீடு போல் அனலைக் கக்கிக் கொண்டிருந்தது,” போன்ற பயன்பாடுகள் நாவலின் ஓட்டத்திலிருந்து விலகியிருக்கின்றன. நாவலின் உணர்வு நிலைக்கு தொடர்பில்லாத, வெகுஜன இலக்கியத்திற்கே உரிய கிளர்ச்சி ஏற்படுத்தும் தன்மை சில இடங்களில் வாசிப்பின் கவனத்தை சிதறடிக்கிறது. வெகுஜன – தீவிர இலக்கியம் இரண்டிற்குமான நடுவாந்தர போக்கில் மொழி நிகழ்கிறது. உணர்வுரீதியாக பெரும் பாதிப்பை நிகழ்த்த தவறுகிறது. எனினும் இந்த உணர்வு விலக்கம்கூட இதழியல் நாவல்களின் ஒரு கூறுமுறைதான். சரவணகார்த்திகேயன் இக்கருவை மிகுந்த பொறுப்புடன், விழிப்புடன் கையாள முயன்றிருக்கிறார். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். ஆனால் ஒரு விலையோடு- அது நாவலின் கலைத்தன்மையை மட்டுப்படுத்துகிறது. மநு- காந்திக்கு இடையிலான உறவை காமத்திலிருந்து, எக்காலத்திற்கும் உரிய அறக் கேள்வியாக, தத்துவச் சிக்கலாக வளர்த்தெடுத்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். எனக்குள் இருக்கும் காந்தியர் அடைந்த நிறைவை புனைவு வாசகன் அடையவில்லை என்பதே உண்மை.

இத்தகைய ஒரு கருவை எழுத்தில் வார்க்கும் திறன் மற்றும் துணிவும், ஒரு களத்திற்காக வாசித்து உழைப்பை அளிக்கும் தீவிரமும் சரவணகார்த்திகேயனிடம் இருக்கிறது. இந்த இரண்டு அம்சங்களோடு அவருடைய ‘ஆப்பிளுக்கு முன்’ நாவல் ஒரு முக்கியமான முயற்சியாக அடையாளம் பெறுகிறது. வருங்காலங்களில் மேலும் பல சுவாரசியமான புனைவுக் களங்களில் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்.

 

 

வாழ்வற்ற வாழ்வைப் பாடுதல்: சேரனின் கவிதைவெளி – ஜிஃப்ரி ஹாஸன்

-ஜிஃப்ரி ஹாஸன் – 

ஈழக்கவிஞர்களில், குறிப்பாக வடபுலத்தில் உருவான சேரன், வ.ஐ.ச. ஜெயபாலன், சி. சிவசேகரம், திருமாவளவன், செழியன், சு. வில்வரத்தினம், கருணாகரன், எஸ்போஸ், அஸ்வகோஷ், சித்தாந்தன், தீபச்செல்வன் போன்ற கவிஞர்களின் கவிதைகள் ஒரே அரசியலை, வாழ்க்கையை, நிலக்காட்சியை, அனுபவங்களைப் பேசுபவை. அவர்களுக்கிடையிலான வித்தியாசம் என்பது கவிதையின் அகம் சார்ந்து நிகழாது புறம் சார்ந்து மட்டுமே நிகழ்கிறது. அதிலும் குறிப்பாக கவிதையின் மொழி மற்றும் ஓசை சார்ந்ததாக  மட்டுமே அந்த வித்தியாசங்களை கண்டடைய முடியுமாக உள்ளது. அவர்களின் கவிதைகளில் வேறு தளங்களில் முகிழ்க்கும் வித்தியாசங்கள் மிக நுண்ணிய அளவில்தான் (அதுவும் ஒருசில கவிஞர்களால்) நிகழ்த்தப்பட்டிருக்கிறது. எஸ்போஸ், அஸ்வகோஷ், சித்தாந்தன் போன்றோரின் கவிதை மொழி கிளர்த்தும் உணர்வுகளும், அது வெளிப்படுத்தும் ஒருவகை உக்கிரத் தன்மையும் இந்த மூவரையும் ஏனையவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் முக்கிய புள்ளிகளாகும். ஆயினும் அவர்கள் ஏனையவர்களோடு ஒப்பிடும்போது அதிகம் எழுதவில்லை. இப்பொதுக் கவிதைப் போக்கின் (common trend) முன்னோடி கவிஞர்களுள் ஒருவராக சேரனைக் குறிப்பிட முடியும். இந்தக் கவிதை இயக்கத்துக்கான பாதையை வடிவமைத்ததில் அவருக்கு ஒரு தனியான பங்கு இருக்கிறது.

இவர்களின் புற வாழ்வும், அகவாழ்வும் ஒன்றிப்போயிருக்கின்றன. ஒரே கனவின் வெவ்வேறு கிளைகளாக விரிந்து நிற்பவர்கள் இவர்கள். கவிதையில் வெளிப்படும் உணர்வு சார்ந்தும் இவர்கள் அனைவரும் ஒரே வரிசையில் நிற்பவர்கள்தான். அவர்களின் வாழ்வும், அது கொடுத்த அனுபவங்களும் ஒரே நிலத்திலிருந்து, ஒரே அரசியலிலிருந்து, ஒரே கனவிலிருந்து உருக்கொண்டவை என்பதால்தான் இந்தப் பொதுமைப்பாடு. ஆம், இவர்களில் யாரும் அரசியல் எனும் பரப்பைத் தாண்டி விரிவுபட்டிருக்கவில்லை. அவர்கள் எல்லோரும் இணைந்திருந்த ஒரே புள்ளி அரசியல் களமே ஆகும். காதல், காமம் போன்ற விசயங்களை இவர்கள் தொட்டிருந்தாலும் அதற்குள்ளும் ஓர் அரசியல் தளம் உள்ளோடி இருக்கும்.

ஆக, இவர்களின் வேர் ஒன்றுதான். மரத்தின் இலைகளுக்கிடையிலான வித்தியாசங்களைப் போன்றுதான் நாம் இவர்களுக்கிடையிலான வித்தியாசங்களைத் தரிசிக்க முடியும். இதனால் தான் ஈழத்துக் கவிதைகள் என்று சொல்வதை விடவும் ஈழத்துக் கவிதை இயக்கம் என்று சொல்லத் தோன்றுகிறது. ஈழப்போராட்டம் தொடங்கிய பின் அங்கு உருவான கவிஞர்களின் கனவு ஒன்றாகத்தானிருந்தது. அந்தக் கனவுகளைக் கண்ட கண்கள் மட்டுமே வேறாக இருந்தன. புலக்காட்சிகள் ஒன்றாகத்தானிருந்தன. உணர்வுகள், வெளிப்பாடுகள் ஒன்றாக இருந்தன என்பதுதான் இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை.

அது தவிர வேறொரு காரணமும் இருக்கிறது. 1980களில் ஈழத்தில் அறிமுகமான பலஸ்தீனக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு ஈழத்துக் கவிஞர்களிடம் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியது. தங்களது கவிதைகளுக்கான உள்ளீட்டை, மொழியை அவர்கள் அங்கிருந்து பெற்றுக் கொண்டார்கள். பலஸ்தீனக் கவிதைகளை மட்டுமே தம் முக்கிய உசாத்துணையாக அவர்கள் வரித்துக் கொண்டார்கள். அதன் தாக்கத்திலிருந்து அவர்கள் எழுதிய கடைசி கவிதை வரைக்கும் அவர்களால் விடுபட முடியவே இல்லை. அது அவர்களின் மாறாத வாழ்வையும், மனநிலையையுமே முதலில் வெளிக்காட்டுகிறது. ஈழத்தில் பலஸ்தீனக் கவிதைகளுக்கு ஏற்பட்ட மதிப்பளவுக்கு வேறெங்கும் ஏற்படவில்லை. தமிழகத்தில் அத்தகையதொரு அரசியல் சூழல் இல்லாததனால் போதிய கவனத்தை அங்கு அது பெறவில்லை. அங்கு எந்தவித தாக்கத்தையும் அக்கவிதைகள் ஏற்படுத்தவில்லை. ஆனால் ஈழத்தில் நிலமை தலைகீழாக இருந்தது. பலஸ்தீனக் கவிதைகளை வாசிக்காமல் யாரும் கவிதை எழுத முடியாது என்பது இங்கு ஒரு எழுதப்படாத விதியாகவே பின்பற்றப்பட்டு வந்தது.

இதனால் ஈழத்துக் கவிதைகள் பலஸ்தீனக் கவிதைகளை உசாத்துணையாகக் கொண்டு எழுதப்பட்ட கவிதைகளாக தோற்றங்காட்டின. ஆனாலும் பலஸ்தீனக் கவிதைகளில் அரசியல், விடுதலை வேட்கை, காதல், பிரிவு, இயற்கை, குழந்தைமை, கனவுகள் என பலவிடயங்கள் உட்பொதிந்திருந்தன. துரதிருஸ்டம் ஈழக்கவிஞர்கள் அதற்குள்ளிருந்த வெறும் அரசியலால் மட்டுமே ஊட்டம் பெற்றனர். அதனையே முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டனர். அதைத் தாண்டி அவர்களின் பேனை நகர மறுத்துவிட்டது.

பலஸ்தீனக் கவிதைகளில் என்ன உணர்வுகள், என்ன துயரங்கள் பேசப்பட்டனவோ அவையும் இங்கு அனுபவிக்கப்பட்டன. அதனை அதே தளத்தில் அதே மொழியில் ஈழத்துக் கவிஞர்களும் எழுதத் தொடங்கினர். இந்தக் காலப்பகுதியிலும் ஈழத்தில் இயற்கை இருந்தது, காதல் இருந்தது, தீண்டாமை இருந்தது, பாலுறவு சார்ந்த பிரச்சினைகள், பிணிகள், உள்மன முரண்பாடுகள், வாழ்க்கைப் பிரச்சினைகள் என ஒரு கவிஞனுக்கான உந்துதலைத் தரக்கூடிய அனைத்து விடயங்களும் இருந்தன. ஆனால் அவை எதுவும் போதியளவில் கவிஞர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. பலஸ்தீனக் கவிதைகள் பொது அவலத்தை தனிமனித அகத்தினூடாகப் பேசியளவுக்கு ஈழத்துக்கவிதைகள் பேசவில்லை. பலஸ்தீனக் கவிதைகளின் அரசியல் தளத்தை மட்டுமே தங்கள் கவிதைகளின் முக்கிய உசாத்துணையாக கொண்டதன் விளைவு அது.

ஈழக்கவிஞர்கள் போரின் பொதுவான துயரங்களைத் தனிமனித அக நெருக்கீடுகளுக்கூடாக மிக மிகக் குறைவாகவும், சமூகத்தின் கூட்டுத் துயரமாகவும், பிரக்ஞையாகவுமே அதிகம் வெளிப்படுத்தினர். தமிழீழ போராட்டம் குறித்து இக்கவிஞர்களில் பலரிடம் எந்தவித மாற்றுப் பார்வைகளோ, சுயவிசாரணைகளோ இருக்கவில்லை. புலிகளின் செயற்பாடுகள் மீது விமர்சனங்களை முன்வைப்பது தற்கொலைக்குச் சமமானதாக இருந்தபோதும் ஒரு சில கவிஞர்கள் தங்கள் கவிதைகளில் அத்தகைய மாற்றுக் குரல்களைப் பதிவு செய்திருந்தனர். அந்த மாற்றுக் குரல்கூட முஸ்லிம்களுக்கெதிரான புலிகளின் வன்முறைகளை விமர்சிப்பதாக மட்டுமே அமைந்திருந்தது. வேறு களங்களை நோக்கி அவை நகரவில்லை. அதுவும் ஒன்றிரண்டு கவிதைகளுடன் நின்றுவிட்டன.

வ.ஐ.ச. ஜெயபாலன், சு. வில்வரத்தினம், சேரன் போன்றவர்களிடம் இருந்துதான் இந்த மாற்றுக்குரல்களும் எழுந்து வந்தன. மற்றப்படி ஏனையவர்கள் புலிகளை புனிதர்களாக மட்டுமே கருதி வழிபட்டு வந்தனர். எஸ்போஸிடம் அத்தகைய வழிபாட்டுக் குணம் இருந்ததாகத் தெரியவில்லை. கருணாகரனிடம் மாற்றுக் கருத்துகள், புரிதல் என்பன இருந்தாலும் அவர் தன் கவிதைகளில் அவற்றைப் பதிவு செய்யவில்லை என்றுதான் நினைக்கிறேன். புலிகள் குறித்த அச்சத்தினால் அப்படி நிகழ்ந்திருந்தால் புலிகளுக்குப் பின்னும் அவரிடமிருந்து எந்தவித மாற்றுப் பார்வைகளும் வெளிவரவில்லை. வெளிப்படையாக இதனை சொல்லும்போது இந்தக் கவிஞர்கள் என்மீது கோபப்படக்கூடும். ஆனால் ஓர் ஆழ்ந்த சுயவிசாரணைக்குப் பின் அவர்கள் என் கருத்தைப் பின்தொடர்வார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கிருக்கிறது.

தமிழீழத்தின் மீதான வேட்கையில் எழுதப்பட்ட கவிதைகளாக ஈழக்கவிதைகள் அமைந்து விட்டதனால் அவற்றின் முகமே அரசியல் முகமாக மாறிப் போனது. அரசியல் அவர்களின் கவிதைகளில் ஆழமாக ஊடுறுவி அவற்றின் இலக்கியத் தரத்தை குன்றச் செய்தது. ஒரு நல்ல இலக்கியப் பாரம்பரியமும் கவித்துவ மரபும் உள்ள ஈழத்துக் கவிதைவெளி வெறுமனே அரசியல்மயமாகி சீரழிந்தது. இந்த சீரழிவைப் பல கவிஞர்கள் கூட்டாக, சாவகாசமாகச் செய்து கொண்டிருந்தனர். அது அப்போது அவர்களைப் பொறுத்தவரை நியாயமானதாகப்பட்டது.

அத்தருணத்தில் அவர்களது கவிதைகள் குறித்து சீரியசான இலக்கிய மதிப்பீடுகள் என்று எதுவுமே வரவில்லை. வெறும் பாராட்டுகளும், புகழுரைகளும் மட்டுமே வந்து குவிந்த வண்ணமிருந்தன. அவை கொடுத்த உற்சாகத்தில் கவிதைகள் என்று சொல்லிக்கொண்டு வெறும் செய்திக் குறிப்புகளை மேலிருந்து கீழாக பல ஈழக்கவிஞர்கள் புதிது புதிதாகத் தோன்றி எழுதிக் குவித்துச் சென்றனர். இதனால் ஈழத்துக் கவிதைகள், “செய்யப்பட்ட” கவிதைகளாகவும், “செயற்கைத்தன்மையான” கவிதைகளாகவும் உருமாற்றம் பெற்று வந்தன. ஒரே கவிதையையே திரும்பத் திரும்ப வாசிப்பது போன்ற அருட்டுணர்வுக்கு வாசகன் ஆளானான். கவிதை இலக்கியக் கருவியாகவன்றி படிப்படியாக ஓர் அரசியல் கருவியாக அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டது.

2

இந்தப் பொதுப்போக்கின் பிரதிநிதிகளாக இருந்துகொண்டு குறிப்பிடத்தக்களவு இலக்கியத் தரத்துடன் எழுதிய அரசியல் கவிஞர்களாக நான் மேலே பெயர் குறிப்பிட்டுள்ள கவிஞர்களை ஈழ இலக்கியம் உலகுக்களித்தது. சேரனின் கவிதைகளில் சமூக கூட்டுப் பிரக்ஞையைத் தாண்டி தனிமனித அகவுணர்வுகள் ஓரளவு பேசப்பட்டன. எனினும் அதற்குள்ளும் ஒருவித இழப்பும், சமூகக் கூட்டுப் பிரக்ஞையும்தான் உள்ளோடி இருந்தது.

ஆயினும் அவரது ’நீ இப்பொழுது இறங்கும் ஆறு’ தொகுப்பிலுள்ள கவிதைகள் அதே அரசியலையும், விடுதலைக்கான கூட்டுப் பிரக்ஞையையும் அழகியல் மொழியில் வெளிப்படுத்தும் கவிதைகளை அதிகம் கொண்டுள்ளன. பிற கவிஞர்களிடமிருந்து அவர் விலகிச்செல்லும் புள்ளிகளும் இந்தத் தொகுப்பு கவிதைகளில் பதிவாகி இருந்தன. அவரது கவிதைகள் அடைந்து வந்த மாற்றங்களை வாசகன் புரிந்துகொள்வதற்கான வரைபடமாக விரிந்து நிற்கும் தொகுப்பு அது.

கவிஞன் என்பவன் யார்? அவன் அரசியல் பிரச்சினையால் மட்டுமே தீண்டப்படுபவனா? அல்லது மக்கள் வாழும் சூழலில் அரசியல்தான் முதன்மைப் பிரச்சினையா? ஈழத்தில் ஒரு தொகை கவிஞர்கள் ஏன் அரசியலை மட்டுமே தம் கவிப்புனைவின் மையஉள்ளீடாக கொண்டார்கள்? இந்தக் கேள்விகள் ஈழத்துக் கவிதைகளை வாசித்த பின் ஒருவருக்கு சாதாரணமாக எழக்கூடியவைதான். அரசியலுக்கு அப்பால் மற்ற அனைத்தின் மீதும் ஈழக்கவிஞர்களால் நிகழ்த்தப்பட்ட புறக்கணிப்பு, அலட்சியம் இப்போது அவர்களுக்குள் ஓர் இலக்கியக் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கலாம். ஆனாலும் அந்த தளத்தில் அவர்களின் கூட்டுப் பங்களிப்பை எந்த சந்தர்ப்பத்திலும் நாம் குறைத்து மதிப்பிடுவதோ, இருட்டடிப்புச் செய்வதோ நமது நோக்கமல்ல. அவர்கள் காணத் தவறிய, பேசத் தவறிய பக்கங்களைப் பற்றிப் பேசுவது மட்டுமே இங்கு எனது நோக்கம். மற்றப்படி அவர்கள் பேச வேண்டியதை சிறப்பாகவே பேசி இருக்கிறார்கள். சொல்லப்போனால் அவர்கள் தங்களது காலத்து மக்களின் பொதுவான அரசியல் வாழ்க்கையை பிரதிபலித்திருக்கிறார்கள். அது மிக மிக அவசியமானதுங்கூட. அது மட்டுமே கவிதை என்பதில்தான் நான் முரண்பட்டு விலகி நிற்கிறேன். காலத்தின் அரசியல் நெருக்கீடுகளிலிருந்தும், சூழ்நிலைமைகளிலிருந்துமே கவிஞர்கள்  உருவாகி வரும்போது அவர்கள் காலமும், சூழலும் உருவாக்கிய கவிஞர்களாக மட்டுமே தங்களை நிறுவிக் கொள்கின்றனர். வாழ்க்கை உருவாக்கிய கவிஞர்களாக அவர்கள் தங்களை தங்களது படைப்புகளூடாக முன்வைப்பதில்லை.

சேரன் தன் கவிதை சார்ந்து இரு பரிமாணங்களாகத் தெரிபவர். அவரை காலமும், வாழ்க்கையுமாக சேர்ந்து உருவாக்கி இருக்கிறது. இப்படி இன்னும் ஒருசில கவிஞர்களை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். காலம் மட்டும் உருவாக்கிய கவிஞர்களால் கவிதையின் எல்லா அடுக்குகளுக்குள்ளும் நுழைய முடியாமல் போய்விட்டது. வாழ்க்கையின் எல்லாவிதமான சூட்சுமங்களையும் புரிந்துகொள்ள முடியாததாகப் போய்விட்டது.

சேரனின் கவியுலகு போராட்ட எழுச்சி மனநிலையை முன்னிறுத்துகிறது. ஆனால் அவரது மொழி தமிழின் கவிதை மரபையும், மொழி அழகியலையும் தனக்குள் வைத்திருக்கிறது. அவரது கவிதைகள் எழுச்சிக் குரலாகவும், காதலைப் பாடுவதாகவும் ஒலிக்கின்றன. அந்த வகையில் அவர் அகத்தையும், புறத்தையும் பாடும் கவிஞராக இருக்கிறார். வாழ்வற்ற வாழ்வைப் பற்றிப் பாடும்போதும், வாழ்வு மீதான எந்தவிதப் பிடிப்புமற்ற மரணத்துள் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் பற்றிப் பாடும்போதும் அவர் கவிதையின் ஓசை நயத்தில் (பிற்பட்ட காலத்தில் குறிப்பாக ‘நீ இப்பொழுது இறங்கும் ஆறு’ தொகுப்பு கால கவிதைகளில்) அதிக சிரத்தை எடுத்துக்கொள்கிறார்.  ஆனால் அதிலும் காதலுக்குள்ளும், வாழ்வின் எல்லாவிதமான துயரங்களுக்குள்ளும் மிக மெளனமாக புரட்சியை உட்புகுத்திவிட முனையும் போக்கு அவரிடம் வெளிப்படுகிறது. சமூக அரசியல் எழுச்சியைச் சுற்றியே அவர் கவிதை மனம் அலைகிறது.

3

சேரனின் அநேகமான கவிதைகள் உயிர் வாழ்வது நிச்சயமற்ற பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்த காலப்பகுதியிலும், தமிழீழப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட காலகட்டத்தினதும் குரலாக இருப்பவை. இதனால் மக்களின் அரசியல் சார்ந்த பதட்டங்களையும், போராட்டத்துக்கான எழுச்சியையும் கோருபவையாக இருப்பது தவிர்க்க முடியாதது. அவரைப் பொறுத்தவரை உயிர் வாழ்வதே இங்கு ஒரு துடிப்பு.

ஒவ்வோரடியும் தடங்கள் பதிக்கும்

ஒரு வாழ்க்கை நிகழ்வாம்

என்று அவர் சொல்லும்போது இங்கு வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது. நிச்சயமற்ற வாழ்வின் மீதான கருணையைக் கோரும் அதே கவிதையிலேயே போராட்டத்தின் மீதான நம்பிக்கைத் தொனியும் ஒலிக்கிறது.

காலமெனும் வெப்பக் கதிர்

வீசிச் சூடடிக்க எல்லாத் தடமும் உதிரும்

தனித்தபடி எஞ்சுகிற ஒன்றோ

மீண்டும் தடங்கள் பதிக்கும்

வாழ்வற்ற வாழ்வு மீதான கவனத்தை ஏற்படுத்துவதும் போராட்டத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதுமாக இரு நிலைகளில் அவரது பயணம் நிகழ்கிறது.

காதலும் காத்திருப்பும்கூட அந்த வாழ்க்கையில் இருந்ததை சேரன் பதிவு செய்கிறார். சேரன் நெருக்கடியான அரசியல் பொது வாழ்க்கைக்குள்ளும் வாழ்க்கையின் தனியான, சில பிரத்தியேக உணர்வுகள் தனக்குள் முகிழ்த்திருந்ததை வெளிப்படுத்துகிறார். ஈழத்தின் குறிப்பாக வடபுலக் கவிஞர்கள் ஒருசிலரிடம்தான் இந்தப் பண்பைக் காணமுடியும்.

பிரிதல்’  என்ற கவிதை. இக்கவிதையை ஒரு பெண் எழுதியதாக, ஆண் குறித்த ஒரு பெண்ணின் கனவுகளைப் பேசுவதாக, அக்கவிதையின் குரல் பெண்ணுக்குரியதாக நாம் கற்பனை செய்து கொள்ளும்போதே அதன் ஆழ்ந்த உணர்வுத் தளத்தை நம்மால் தரிசிக்க முடிகிறது. அந்தக் கவிதைக்குள் முகிழ்க்கும் ஒருவித அகத்தனிமையான உணர்வை அதன் பெண் குரலால் மட்டுமே ஏற்படுத்த முடியும்.

சேரன் அப்போதைய வடபுல இளைஞர்களின் வாழ்க்கையையும், அவர்களின் கனவுகளையும் போர் எப்படி உருச்சிதைத்தது என்பதை அநேகமான கவிதைகளில் சொல்லிவிடுவது கிட்டத்தட்ட அவர் கவிதைகளின் ஒரு பொதுவான பண்பாக இருக்கிறது. ‘இரு காலைகளும் ஒரு பின்னிரவும் ‘என்ற கவிதை ஒரு இளைய தலைமுறையின் கருகிப்போன வாழ்வையும் கனவுகளையும் பதிவுசெய்கிறது.

எங்கே அவன்? என்று கேட்பார்கள்

கேட்கையில் பிழைபட்ட தமிழ்

நெஞ்சில் நெருட எழுந்து வரும்

இராணுவத்தினர் விசாரிக்கும் விதத்தில் தன் தாய்மொழி தமிழே பிழையாக வெளிப்படும் சம்பவம் ஒரு அற்புதமான கவிதை நிகழ்வாக தோன்றும் அதேநேரம் ஓர் ஆழ்ந்த துக்க உணர்வையும் ஏற்படுத்துகிறது.

4

போராட்ட காலத்தில் அது நிகழ்ந்த மண்ணிலிருந்து எழுதிய பல கவிஞர்களாலும் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டிருந்த அல்லது பின்னர் பார்க்கலாம் என தவணை முறையில் ஒத்திப் போடப்படடிருந்த பெண்களின் வாழ்க்கைப் போராட்டம் மீதும் சேரன் ஓர் அழுத்தமான பார்வையை முன்வைக்கிறார். ‘மழைக்காலமும் கூலிப்பெண்களும்’, சமாந்தரம் கொள்ளாத உலகங்கள்’ போன்ற கவிதைகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ள முடியும்.

மழைக்காலமும் கூலிப்பெண்களும் கவிதையில்-

வெயிலுக்கு மேனி தந்து

வெங்காயம் கிண்ட வரும்

என் அழகுக் கிராமத்துப் பெண்களது கால்

இனிமேல் வெள்ளத்துள் ஆழும்

விரல்களுக்குச் சேறெடுக்கும்

எப்போதும் போல் இவர்கள்

நாற்று நடுகையிலே

எல்லை வரம்புகளில் நெருஞ்சி மலர் விரியும்

மீண்டும் இவர்கள் திரும்பி வருகையிலோ

நெற்கதிர்கள் குலை தள்ளும்

நீள் வரம்பு மறைந்து விடும்

எனினும் இவர்களது பூமி இருள் தின்னும்

பொழுது விடிந்தாலும்”.

என எழுதுகிறார்.

எனினும் இவர்களது பூமி இருள் தின்னும்

பொழுது விடிந்தாலும்

இந்த வரிகளில்தான் இந்த கவிதையின் முழுமையும் பொதிந்திருக்கிறது. பெண் ஒடுக்குமுறை பற்றி வெறித்தனமாக முழக்கமிடும் தொனி இக்கவிதைக்குள் இல்லை. தேவைக்கதிகமான வார்த்தை விளையாட்டுகளும் இல்லை. இது கடத்த முனையும் செய்தி ஒர் அதிர்வாக கவிதையின் இறுதி வரிகளில் வந்து நிற்கிறது.

ஒரு கிராமத்துக்கு மின்சாரம் வருகிறது ‘ இலங்கைக் கிராமமொன்றின் ஒரு காலகட்டச் சித்திரத்தை வரைபடமாக காட்டும் கவிதை. புதிதாக மின்சாரம் வரும்போது அந்தக் கிராமத்தில் நிகழும் சிறு சிறு மாற்றங்களை இக்கவிதை முன்வைக்கிறது. கவிதையின் மொழியில் கிராமியம் பொங்கி வழிகிறது.

மழைநாள் காதலைப் பேசும் கவிதை. காதலின் இழப்புணர்வை, மனிதர்களின் பிரிவை ஈரமான சொற்களில் சொல்கிறது இக்கவிதை.

அருகில் நீ.

குடிலுக்குள் நசநசத்த ஈரம்

திரண்டிருந்த விசும்பு மழைக் கறுப்பில்

மின்னல் கோடாய் எழுந்து அலைந்து அழிகிறது

காதலின் பிரிவுணர்வைப் பேசும் இக்கவிதையில் மழையின் இசையும், தனிமையின் தவிப்பும், காதலின் கனத்து வழியும் துயரும் சொற்களில் பிண்ணப்பட்டிருப்பதைக் காணலாம். ஆயினும் இதுபோன்ற கவிதைகளில் கனத்து எழும் துயரம் மனதைக் கவ்வும் விதமாக எழவில்லை. கைக்குள் வந்த கவிதை நெஞ்சுக்குள் வராமல் திரும்புகிறது.

சாதிக்கெதிரான புரட்சிகர மனநிலையை உடையவர் சேரன். அந்த மனநிலை அவரை கவிதையில் கலகம் செய்யத்தூண்டுகிறது.

ஆலயக் கதவுகள்

எவருக்காவது மூடுமேயானால்

கோபுரக் கலசங்கள்

சிதறி நொறுங்குக

இந்தக் கலகக் குரலில் யாழ்ப்பாணத்தை,

யாழ்ப்பாணத்தின் சராசரி இதயமே

என விளிக்கிறார்.

உனது உலகம் மிகவும் சிறியது

என்கிறார்.

இது சமூக மாற்றத்துக்கான ஒரு கவிஞனின் அழைப்பு. சமூகத்தை மூர்க்கமாக தாக்கும் இந்த விபரணங்கள் கவிஞனின் ஏக்கங்கள்.

5

கவிதையை ஒரு கோட்பாட்டுச் சட்டகத்துக்குள் நின்று கொண்டு ஏற்பது அல்லது மறுப்பது ஒரு வேடிக்கையான செயல்பாடாகும். நவீனத்துவ, பின்-நவீனத்துவ கோட்பாடுகளின் எல்லைக்குள் வலிந்து ஒரு கவிதையை அடக்க முடியாது. கவிதைக்குள் எல்லா கோட்பாடுகளும் அடங்கலாம். ஆனால் கோட்பாட்டுக்குள் கவிதை அடங்காது. சேரனின் கவிதைகளுக்கும் ஒரு கோட்பாட்டுத் தளம் இல்லை என்பது புரிகிறது. தமிழின் மரபான கவிதைப் பாங்கும், நவீனத்தன்மையும் கலந்த ஓசைநயத்துடன் கூடிய கவிதைகள் பல அவரால் எழுதப்பட்டுள்ளன. வித்துவச் செருக்கற்ற, கூடுதல் புதிர்த் தன்மையற்ற, தமிழின் எல்லா வாசகனுக்குமானது சேரனின் கவிதைகள். எனினும் சில கவிதைகளில் இதனை மீறவும் செய்திருக்கிறார். சாதாரண வாசகன் அறிவால் கண்டடைய முடியாத புதிர்த்தன்மையான சில வரிகள் அவரது கவிதைகளில் இருக்கின்றன. அவற்றை வாசகன் இதயத்தால் உணர்ந்து கடந்து செல்கிறான். இத்தகைய கவிதைகள் கவிதையை மிகவும் எளிமைப்படுத்தி ஜனரஞ்சகப்படுத்தும் போக்குக்கும், சேரனுக்குமிடையில் ஒரு இடைவெளியை பேணிக்கொண்டு வருகின்றன.

அவரது கவிதைகளின் மையம் போராட்ட கால மக்களின் வாழ்க்கைத் துயரும், போராட்ட எழுச்சி மனநிலையும்தான். ஆனாலும் வேறு சில மையமற்ற பக்கங்களும் அவரின் கவிதைகளுக்குள் உள்ளன. ஒரு காலகட்டத்தின் மையமான பிரச்சினைகளை அக்காலக் கவிதைகள் பிரதிபலிப்பது இலக்கியத்தின் பண்புதான். அந்த சூழல் மாறியதும் அந்தக் கவிதையின் முக்கியத்துவமும் குறைந்துசெல்வதும் ஒரு இயல்பான நிகழ்வுதான். காலத்தைக் கடந்து நிற்கும் கவிதைகளை மட்டும்தான் எழுதுவது என்றிருந்தால் சமகாலச் சூழல் பிரதிபலிப்புகளை கவிதையால் வெளிப்படுத்த முடியாமல் போய்விடும். எனவே தான் வாழும் காலத்தின் பிரச்சினைகளை தன் கவிதைகளில் பிரதிபலிக்க வேண்டியது கவிஞனின் முக்கிய பணியாக மாறுகிறது. சேரன் இந்தப் பணியைச் செய்யும் கருவியாகவே கவிதைகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்.

 

செல்வசங்கரனின் ‘பறவை பார்த்தல்’

வான்மதி செந்தில்வாணன்

கவிஞன் என்பவன் காலம் முழுக்க மனதில் கருவைச் சுமந்து திரிவதோடு, தன் கருவை ஊட்டமுடன் உருப்பெறச்செய்து , பிரசவித்து, சிலாகித்து மகிழும் கொண்டாட்டக்காரன்.

அனுதினப் பொழுதுகளில் நமக்குத் தோன்றுவனவற்றையெல்லாம் ஒரே மூச்சில் எழுதித் தள்ளிவிடலாம். ஆனால், எழுதும் அவ்வளவும் தனிச்சிறப்பு பெறும் வாய்ப்புகளை வென்றெடுக்கின்றனவா? இல்லை. எழுதவென எவ்வளவோ நிகழ்வுகள் மனதின் ஆழத்தில் அடுக்கடுக்காய்த் தேங்கியிருப்பினும் உள்ளிருந்து வெள்ளமென ஆர்ப்பரித்தெழும் நிகழ்வு மட்டுமே ஒரு வெற்றிகரமான படைப்பை உருவாக்க இயலும்.

கவிதை என்பது அவரவர் ஆழ்மன இருப்பின் கிளர்ந்தெழுதலின் சிறப்பு. பூமியிலிருந்து நோக்குகையில் காட்சிக்குத் துளியளவு தென்பட்டாலும் மிகுந்து ஒளிர்பவை வானில் மிதக்கும் நட்சத்திரங்கள். அதுபோல் அளவில் சிறிதாக இருப்பினும் பளிச்சென்ற வரிகளால் ஆழ்மனதினை வெகுவாய் அசைத்து சிலிர்ப்பூட்டுபவை கவிதைகள். நொடிப்பொழுதில் ஆழமான உணர்வுகளை நம்முள் கடத்திவிடுபவை அவை. எவ்விதமனோநிலையிலும் ஒரு படைப்பாளிக்கு கவிதை என்பது எழுச்சி பெறலாம். குறிப்பாகச் சொல்லப்போனால் உயிரின் ஆழமான வேர்ச்சரடுகள் மலரும் தருணமது. ஒரு படைப்பாளிக்கு தன்னியல்பு மற்றும் மெனக்கெடல்கள் மூலம் தரமானதும் ஆத்மார்த்தமானதுமான படைப்புகள் கிட்டுகின்றன. ஒருவரது உணர்வுகளின் உந்துதல் வழி வடிவமைப்பு பெறும் கவிதைகள் ஆத்மார்த்தமானவை.

படைப்பாளிகள் தங்கள் வாசிப்பில் ஆழம் செல்லச் செல்ல அவர்களின் எண்ணக்கிடங்குகள் உருப்பெற்று, அவை உயிர்ப்பிக்கும் அசாதாரண படைப்புகள் தனித்துவம் பெறுகின்றன. ஒரு படைப்பாளியின் முதற்போதை அவனது மூச்சு போன்ற வாசிப்பு. இரண்டாம் பட்சம்தான் எழுத்து. எழுதியாகவேண்டிய கட்டாயமென்பது இங்கு எவர்க்கும் இல்லை. ஒரு படைப்பானது தன்னளவில் தனக்கே உரிய தனித்தன்மையுடன் அப்படியேதான் இருக்கிறது. அதை அணுகுவதற்கான முழுப்பொறுப்பும் வாசகனைச் சார்ந்ததே.

கவிஞர் செல்வசங்கரன் அவர்களின் முதல் தொகுப்பு “பறவை பார்த்தல்”. பல வருடங்களின் திறனார்ந்த சேகரிப்பு இவரது கவிதைகள். இத்தொகுப்பில் இவரது மன உணர்வுகள் மிக நேர்த்தியான ஒரு பாங்குடன் வடிவமைப்பு பெற்றிருப்பதுடன் தனித்தன்மை பொருந்தியகவிமொழி கையாளப்பட்டுள்ளது. எவ்வித ஆர்ப்பரிப்புமின்றி வரிகளில் அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார் செல்வசங்கரன்.எண்ண அலைகளின் விரிவு, அன்றாடஅகவய மற்றும் புறவய நிகழ்வுகளை உரசிச்செல்லும் நினைவுகள் போன்றவற்றை நுணுக்கமுடனும் நுட்பம் வாய்ந்த சொற்தேர்வுகளுடனும்வெகு சுவாரஸ்யத்துடனும் இருக்கும்படி இத்தொகுப்பினை மிகவும் கவனமாகச் செதுக்கியுள்ளார். சுருங்கச் சொல்லவேண்டுமாயின் ததும்பும் உள்ளுயிர்ப்பின் தாக்கம், சரியான சொற்கோர்வை மற்றும் அழகியல் கொண்டு கட்டமைக்கப்பட்ட சிறப்பான தொகுப்பு இது.

கவிதைகள் சற்று நீளம் கொண்டவையாக இருப்பினும், வாசிப்பின் மூலம் சுவாரஸ்யமான வரிகளை மென்மையாய்ப் பற்றிக்கொண்டு ஒரு செழிப்பான நீரோட்டம்போல் பக்கங்களை திருப்திகரமாய்க் கடக்க முடிகிறது.

1.

“கடல்” என்பது எப்போதும் அனைவரின் பார்வையில் ஒரு பிரம்மாண்டமாகவே இருந்திருக்கிறது. இவரைப் பொறுத்தமட்டில்

“கடல் அருகாமையில்
உபரி வெளிச்சமும்
பின்பு கடலுமே இருந்தது”

என்ற தனது அசாதாரண பார்வையில் பிரம்மாண்டமான கடலை சாதாரணப்படுத்துகிறார். இத்தொகுப்பின் முதல்கவிதை இது.

“பிள்ளை விளையாட்டில்
வசிக்காமற் சென்ற
மணல்வீடுகள் சில
சற்றுக்கு முன் அதனோடிருந்தன”

பிள்ளைகள் கடற்கரையில் மணல்வீடு கட்டி விளையாடுகிறார்கள். அவர்கள் வசிக்காமல் விட்டுவிட்டுப்போன அவ்வீடுகளில் தான் வசித்துவிடும் முயற்சியில் அவைகளை முற்றிலும் கரைத்துவிட வருகுகின்றன கடலலைகள். இவ்வரிகள், நம்மை அவ்வீடுகள்மீது ஒருவித ஏக்கப் பார்வையினை மெலடியாய் வீசச் செய்கின்றன.
முடிவில்

“எப்பொழுதும் கடலென்பது
பரசிய மண்ணும் உப்பு நீரும்
சில பூச்சிகளுமே”

என்ற வரிகள் மூலம் தனது பார்வை விரிவை இவ்விடம் பதிவு செய்கிறார்.

2.

மூக்கினுள்ளிருந்து நீண்டு வளர்ந்திருக்கும் ஒரு முடி பற்றிய அற்புதமும், சுவாரஸ்யமும் கலந்தநினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

“கண்ணாடி முன் நின்றுஎனது
மூக்கை வெகு அருகாமையில்
பார்த்த அன்று
மூக்கினுள்ளிருந்து ஒரு முடி
நீண்டு வளர்ந்திருந்தது
லேசாகச் சுருண்டிருந்தது
நெளிவின் நுனி பிடித்து
மெதுமெதுவாய் இழுக்க
உள்ளிருந்து ஒரு அதிர்வு கிளம்பி
நினைவு பிசகியது”

எனத் தொடங்குகிறது இக்கவிதை.

“ குறுகுறுப்பை, ஒரு மாதிரியான
நினைவுச்சுருக்கை
வேண்டுமளவிற்குப் பெற்றுக்கொண்டேன்”

எனும் இடைவரியின் நினைவுச்சுருக்கில் அகப்பட்டுக்கொள்கிறது மனம்.

“வீரியத்தினை மட்டுப்படுத்த
கத்தரியை உள்ளே துழாவிய அன்றிலிருந்து
குறுகுறுப்புடன் உச்சத்தில் வலி புரட்டியெடுத்தது.
அன்று எனது மூக்கை அறுத்துக்கொண்டிருந்தேனென
நம்பத்தகுந்த சிலர் கூறினார்கள்”

இவ்வாறு மனதினுள் சுவாரஸ்யமான குறுகுறுப்பை இக்கவிதை உண்டு செய்கிறது. இத்தொகுப்பில் மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் கவிதை இது. இவ்விடம் அம்முழுக்கவிதையினையும் உங்களுக்கு அறியத் தருகிறேன்.

நினைவுச்சுருக்கிலிருந்து நீண்ட குறுகுறுப்பு

“கண்ணாடி முன் நின்று எனது மூக்கை
வெகு அருகாமையில் பார்த்த அன்று
மூக்கினுள் விருந்து ஒரு முடி
நீண்டு வளர்ந்திருந்தது
லேசாக சுருண்டிருந்தது
நெளிவின் நுனி பிடித்து
மெதுமெதுவாய் இழுக்க
உள்ளிருந்து அதிர்வு கிளம்பி
நினைவு பிசகியது
காட்சி மயக்கில் ஒருவித குறுகுறுப்பினை உணர்ந்தேன்
மயிர்க்காலை இழுத்து இழுத்து
குறுகுறுப்பை ஒருமாதிரியான நினைவுச்சுருக்கை
வேண்டுமளவிற்குப் பெற்றுக்கொண்டேன்
ஒற்றை மயிர் கையோடு வந்த பின்பு
குறுரோமங்களை
சிரமத்துடன் இழுத்துக்கொண்டிருந்த நாட்களில்
அதிலொன்று சற்று நீண்டு வளர்ந்திருந்தது
எப்பொழுதும் குறுகுறுப்பிலே கிடந்தேன்
தும்மல் கட்டுக்கடங்காது போக
வீரியத்தினை மட்டுப்படுத்த
கத்தரியை உள்ளே துழாவிய அன்றிலிருந்து
குறுகுறுப்பின் உச்சத்தில் வலி புரட்டியெடுத்தது
அன்று எனது மூக்கை அறுத்துக்கொண்டிருந்தேனென
நம்பத்தகுந்த சிலர் கூறினார்கள்.”

இக்கவிதையானது ததும்பும் உள்ளுயிர்ப்பின் தாக்கம் நிறைந்து காணப்படுகிறது. வாசிக்கும்போது மூக்கினுள்ளிருந்து சிறிது நீட்சியுடனிருக்கும் ஒரு முடியைப் பிடித்திழுத்து கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ள காட்சி மயக்கு, நினைவுச்சுருக்கு இவற்றை அனுபவிக்கவென அனிச்சையாய் மூக்கினுள் நுழைகிறது கைவிரல்.

3.

இவரது கவிதைகளில் பெரும்பாலும் சில தொடர்நிகழ்வுகள் உள்ளடக்கம் பெற்றிருப்பதால் வரியமைப்பு நீள்தன்மை கொண்டதாக அமையப்பெற்றுள்ளது. ஆகையால்தான் குறிப்பிட்ட சில வரிகளை மட்டும் முக்கியமென எடுத்தெழுதஇயலவில்லை.

இன்னும் நன்றாகத் தட்டுங்கள்

“விழா நாயகர்களென செல்லமாக அழைக்கப்படும்
உங்கள் கைகளை நன்றாகக் தட்டுங்கள்
சிறிதும் இடைவெளி விட்டுவிடாதீர்கள்
அவரது மனையாளின் முன்னால்
அவருக்குக் கூச்சத்தை வாரி வழங்குங்கள்
அவர் எழுந்து போகும்போது
கண் அகலாது பார்த்து
அவரது உடலைக் கூனிக் குறுகவையுங்கள்
சரோஜாதேவி பயன்படுத்திய சோப்பு டப்பாவை வாங்கித் திரும்பி
உங்களை நோக்கி வணங்கும்போது
அவர் வழிவதை தாராளமாகப் பாருங்கள்
மேடையின் நடுவே அப்படியே நிறுத்தி
தாளமுடியாத அளவு சங்கோஜத்தைத் தந்து
அவரது கண் பல் உதடு எல்லாவற்றையும் துடிக்க விடுங்கள்
நா தழுதழுக்கட்டும்
அப்படியும் விட்டுவிடாதீர்கள்
எல்லோரும் ஒன்றுகூடி இன்னும் நன்றாகத் தட்டுங்கள்
இன்னும் பற்றைக்குள் கீழிறங்கிவிடுவார்போல
கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு
தட்டிக்கொண்டேயிருங்கள்
ஓங்கி ஓங்கி தட்டுங்கள்
அவர் பாவமென்ற நினைப்பு மட்டும்
உங்களுக்கு ஒருபோதும் வந்துவிடக்கூடாது
செல்வங்களே
நீங்கள் இன்னும்
மண்டை கனத்த எத்தனையோ பேரை
சொறிந்துவிட வேண்டியிருக்கிறது.”

இன்றைய சூழலில் , மண்டை கனத்த மனிதர்கள்தான் கைதட்டல் பெறுகிறார்களா? அல்லது கைதட்டல் பெறுபவர்கள் மண்டை கனத்தவர்களா? எனும்படியான வினாக்களில் சிந்தனை நுழைவதில் முனைகிறது.

எப்போதும் ஏற்றம் என்பது படிப்படியாகவே நிகழும் ஒன்று. ஆனால் இறக்கம் என்பது தடாலடியாக சறுக்கி விழுவது. ஒரு நபருக்கான சொறிதலை (பாராட்டு, புகழ்ச்சி) முன்னிருத்தி அவர்களது படைப்புகளைமுடிவுசெய்துவிட இயலாது. ஆகையால்தான் ,சொறிபவர்கள் சொறிவதை நிறுத்திவிட்டு செறிவில் கவனம் செலுத்தவேண்டுமென்ற எண்ணத்தை இக்கவிதை நம் மனதில் அழுந்த ஊன்றி விதைக்கிறது.

4.

ஒரு கவிதையானது எல்லோர்க்கும் ஒரே கோணத்தில் புரிய அவசியமில்லை. ஒரு கவிதை பற்றிய புரிதல் வெவ்வேறு அடர்த்தியில் வெவ்வேறு கோணங்களில் வாசகர்களுக்கு அமையப்பெற்றிருப்பதை அவசியம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
உதாரணமாக,

“வேண்டுமென்றே
பல்லை இந்தச் சுத்தியல் கொண்டுடைத்து
கதற முடியும்
இப்பொழுது
சுத்தியலைக் கீழே வைத்துவிட்டு
அந்தக் கடையில் போய்
டீ குடித்து வரலாம்
அடித்துவிட்டால்
கண்டிப்பாக உட்கார்ந்து அழவேண்டும்.”

இக்கவிதையினைக் குறிப்பிடலாம். அவரவர் உணர்விற்கேற்பமேற்கண்ட கவிதையின் ஆழ்வரிகளைப் புரிந்துகொள்ளலாம்.

நேர்மையான எண்ணங்கள் கலவையாய்க் கலக்கப்பெற்று , தரமான அடித்தளத்துடன் கவனமாகக் கட்டமைத்து பொருத்தமான வண்ணங்கள் பூசப்பட்ட நேர்த்தியான வீடென இத்தொகுப்பைக் குறிப்பிடலாம்.

தொகுப்பு- பறவை பார்த்தல்
ஆசிரியர் – செல்வசங்கரன்
வெளியீடு – மணல் வீடு.

ஊர் சுற்றி – யுவன் சந்திரசேகர்

கடலூர் சீனு

கப்பலில் பணிபுரியும் நண்பர் அழைத்திருந்தார். புவியில் நான் நிற்கும் நிலப்பரப்பின் நேர் பின்பக்கம், எங்கோ கடல்பகுதியில் மிதந்து கொண்டிருந்தார். இயல்பாக அ. முத்துலிங்கம் கட்டுரைத் தொகுதியின் தலைப்பை சொன்னேன். “அங்கே இப்போ என்ன நேரம்?” எனக்கும் அவருக்கும் கிட்டத்தட்ட எட்டு மணிநேர வித்தியாசம். அவருக்கு தற்போதுதான் விடிந்திருந்தது. எனக்கு மதியத்தை கடந்திருந்தது. வியப்பை சொன்னேன். நண்பர் கொட்டாவி விட்டபடி, அதுக்கு என்ன இப்போ, என்றார். இந்த நிமிடத்தில் நின்று என்னைக் கடந்து போய்விட்ட எட்டாவது மணி நேரத்தை ஊடுருவி நான் பேசிக் கொண்டிருக்கிறேன். இந்த நிமிடத்தில் நின்று அவருக்கு இனிமேல்தான் வரப்போகிற எட்டாவது மணி நேரத்தை ஊடுருவி அவர் பேசி க்கொண்டிருக்கிறார். அவர், அதுக்கு என்னா இப்போ, என்று கடந்த விஷயம், எனக்கு என் குரலை மட்டும், மொபைல் என்ற காலப்பயண எந்திரத்தில் ஏற்றி அனுப்பி வைத்ததைப் போல பரவசமாக இருந்தது.

பகுத்து அடுக்கும் அனைத்து ஆய்வுகளுக்கும் அப்பால் காலம், லஸ்காக்ஸ் குகை ஓவியங்கள் போல ஒன்றன் மேல் ஒன்றெனப் படிந்திருப்பதாக அன்று மயக்கமெழுந்தது. அந்த குகை ஓவியங்கள் பதினையாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு துவங்கி ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான காலம் வரை, ஒன்றன் மீது ஒன்றென, அடுத்தடுத்த தலைமுறை மூதாதை மனிதர்களால் வரையப்பட்டவை. பொதுப் புழக்கத்துக்கு அல்லாத தனிமையான வழிபாட்டுத் தலம் என காலகாலமாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கும் குகை. இதே போல உலகின் வேறு பல குகை ஓவியங்களில் ஊகித்து அறிய சிரமம் அளிக்கும் ஓவியங்கள் பல அந்த ஓவியன் தனது கனவில் கண்டடைந்ததாக இருக்கும். அந்தக்கால மனிதனுக்கு கனவுக்கும் யதார்த்தத்துக்கும் இடையே ஆன வேறுபாட்டுக் கோடு அவ்வளவு துல்லியமான ஒன்றல்ல என்கிறது குகை ஓவியங்கள் மீதான ஆய்வு ஒன்று.

காலம், பருண்ம உலகு, நனவு, கனவு, இவை ஒவ்வொன்றிலும் அதன் அலகுகளுக்கு இடையே, துல்லியமாக வேறுபடுத்தும் கோடு ஒன்றினை அறிவியலின் அனைத்து புலங்களும் வளர்த்தெடுக்க முயன்று, நரம்பியலும் குவாண்டம் பிஸிக்சும் கொண்டு அப்படி ஒரு துல்லியக் கோடு சாத்தியம்தானா எனும் நிலைக்கு வந்து நிற்க, கலைவரலாற்றில் பின்நவீனத்துவ அழகியல் வழியே இதே இடத்தை வந்தடைந்திருக்கிறது. தமிழ்ப் புனைவுகளில் நவீனத்துவத்துக்குப் பிறகான இந்த பார்வையை, அழகியலை, கொண்டு கலாபூர்வமான உயரத்தை அடைந்த புனைவுகளில் யுவன் சந்திரசேகர் புனைவுகளுக்கு- அதிலிருக்கும் ”கதைசொல்லி” தன்மைக்காவும் அதில் துலங்கி வரும் ஆத்மீக நோக்குக்காவும்- தனி இடம் உண்டு.

யுவன் சந்திரசேகரின் நாவல், ‘ஊர் சுற்றி’. இதிலும் யுவனின் தனித்துவமான, கதைசொல்லி பாணியும் ஆத்மீக நோக்கும், வேறுபட்ட கதைக் களங்கள், காலங்கள், கதைகள், கூறுமுறைகள், வழியே புதிய பரிமாணம் ஒன்றினை நோக்கி பயணிக்கின்றன. திரைத்துறையில் பணிபுரியும் கமலக்கண்ணன். பத்து வருடங்களுக்கு முன்பு,படப்பிடிப்புக்காக சென்ற கிராமத்தில் அவன் சந்தித்த சீதாபதிக் கிழவர் சொன்ன கதைகளை தனது கருவியில் பதிந்து வைத்திருக்கிறான். குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் அந்த கதைகளை தொகுத்து நூலாக மாற்ற எண்ணுகிறான். சீதாபதிக் கிழவரின் மீதான நினைவுகளாகவும், அவர் ”சொன்ன ” வாழ்க்கைச் சம்பவங்கள், கதைகள், கேட்டுச் சொன்ன கதைகள், இவற்றின் ”எழுத்து ”வடிவமாகவும், மந்திரவாதி இளவரசி கதைகள், நாட்டுப்புறக் கதைகள் போல பல்வேறு வடிவ கதைகளின் தொகையாகவும் அ-நேர்க்கோட்டு கூறுமுறையில் வடிவமற்ற வடிவம் கொள்ளும் நாவல்.

தாய் தந்தையரின் அகால மரணத்துக்குப்பின் அந்த கிராமத்தில் இருக்க இயலாது [1936-ல் என துல்லியமான கணக்குடன் துவங்குகிறது நாவல்] இலக்கின்றி தனது பதினாறாவது வயதில் தேசாந்திரியாக வெளியேறுகிறான் சீதாபதி. எண்பதுகளைக் கடந்த வயதில் தனது இறுதிக்காலத்தை தான் பிறந்த கிராமத்திலேயே கழிக்க எண்ணி ஊர் திரும்புகிறார் சீதாபதிக் கிழவர். அந்த கிராமத்துக்கு படப்பிடிப்பு காரணமாக வந்து சேரும் கமலக்கண்ணன், தனது இயக்குநருக்காக ”கதை பிடிக்கும் ” உந்துதலில் நிறைய கதைகளை வைத்திருக்கும் சீதாபதிக் கிழவரை சந்தித்து நட்பு கொள்கிறான். சீதாபதி கதைகள் சொல்கிறார். தனது வாழ்க்கைக் கதை, பயணக் கதை, ஆண்கள் கதைகள், பெண்கள் கதைகள், குழந்தைகள் கதைகள், உறவுகளின் கதைகள், பிரிவுகளின் கதைகள், நட்பின், துரோகத்தின் கதைகள், பசியின், காமத்தின் கதைகள், வாழ்க்கைகளின், மரணத்தின் கதைகள், அனைத்தாலும் ஆட்டுவிக்கப்படும் மனிதர்கள் கதைகள், கதைகளாக எஞ்சி நிற்கும் வாழ்க்கைகளின் கதைகள், வாழ்க்கையாக விரிக்கத்தக்க கதைகளாக எஞ்சும் கதைகள். கிராமத்தில், இந்தியாவின் வெவ்வேறு நிலங்களில், வைத்தியர்களுடன், சாமியார்களுடன், வேலை தரும் முதலாளிகளுடன், லம்பாடிகளுடன், பொம்மலாட்ட நாடோடிகளுடன், மும்பை டப்பாவாலா தொழிலாளிகளுடன், அணைக்கட்டு தொழிலார்களுடன், என விதவிதமான வேலைகளுடன், பசி, காமம், தனிமை, பயம், மரணம் என அடிப்படை உணர்சிகளுடன் அலைக்கழிந்து, ஊர் சுற்றி முடித்து தனது அந்திமகாலத்தில் சொந்த கிராமம் வந்து சேரும் சீதாபதி காணும் வாழ்க்கைகள் எல்லாம் அவருக்குள் கதையாக மாறுகின்றன. ஒரு எல்லைக்கு மேல் காலம் கனவு போதமகூட அழிந்து அவருக்கு நிகழ்ந்தது எல்லாமே கதையாகிறது. விதவிதமான மானுடத் தருணங்களை உள்ளடக்கிய கதைகளாகிறது.

சீதாபதியின் பெண் நாட்டக் கதைகள் குறித்து கமலக்கண்ணன் விமர்சிக்கும்போது, எல்லாம் எம்ஜியார் படம் மாதிரி இருக்கு, எல்லா பெண்ணும் சீதாபதியை தானா தேடி வராங்க, அவர் யாரையும் தேடிப் போறதில்லை, என்கிறான். கதைகள் வழியே பெண்கள் சார்ந்து துலங்கும் சீதாபதி ஆளுமை மீது இது கமலக்கண்ணனின் பார்வை. சீதாபதி தனது தந்தை குறித்த கதைகளைச் சொல்கிறார். மர்மமான தினங்களுக்குப் பின் அவர் தந்தை காமாந்தகன் ஆகிறார். தராதரம் இன்றி பெண் பித்தாக அலைகிறார். அவரது கொலைக்குப் பிறகே சீதாபதி கிராமத்தை விட்டு வெளியேறுகிறார். அப்பா கொலை செய்யப்பட விதத்தை அவன் காணும் வயது முக்கியம். பதினாறு வயது. பாலுறுப்பு துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அப்பாவின் பிணம். இங்கே துவங்கும் சீதாபதியின் ஓட்டம், அவராக பெண் விஷயத்தில் ‘அத்து மீறும் ‘ நிலை ஏன் நிகழவில்லை என்பதைச் சொல்லிவிடுகிறது. பீகாரில் அவரை எடுத்துக்கொள்ளும் பெண் துவங்கி, காட்டுக்குள் அவரை எடுத்துக்கொள்ளும் நிர்வாணப் பெண் வரை, அவர் ஒப்புக் கொடுப்பவராக மட்டுமே இருக்கிறார். அணைக்கட்டு தொழிலாளியாக இருக்கும்போது வலிய வரும் பெண்ணையும் அவர் புறக்கணிக்கும் பின்புலமும் இதுதான். வீடு புகுந்து பெண்ணை சூறையாடிய ஜமீன் மகன், ஊராரால் அடித்தே கொல்லப்படுவதைப் பார்த்தவர், குறி இழந்த தகப்பனின் நிர்வாண உடலைக் கண்டவர், இதைத் தவிர வேறு என்ன செய்வார் ?

சீதாபதி, அவரது அப்பா துவங்கி இறுதிக்கால வெங்கிட்டு கிழவர் எனும் நண்பர் வரை விதவிதமான ஆண்கள், விதவிதமான குணாதிசயங்கள். ஒழுக்கம் தவறும் ஆண்கள், துரோகம் செய்யும் ஆண்கள், பெண் பித்தேறித் திரியும் ஆண்கள், முதுமையிலும் வாத்சல்யத்துடன் காதல் குறையாமல் குடும்பம் நடத்தும் ஆண்கள், ஆண்மையற்ற ஆண்கள், புணர்ந்து புணர்ந்தே உயிரின் இறுதித் துடிப்பில் நின்று உயிர் விடக் காத்திருக்கும் ஆண்கள், தனது மாட்டை தரைமட்ட விலைக்கு கேட்டவனையும், அத்தகையதொரு அவமதிப்புக்கு தன்னை ஆளாக்கிய தனது காளையையும் ஒன்றாக வெட்டித் தள்ளிவிட்டு போலீசில் சரணடையும் ஆண், மனைவி ஒழுக்கமற்றவள் என அறிந்தும் அவள் மேல் சற்றும் பிரியம் குறையாத ஆண், நித்ய இளமையில் பெண்ணை உறையவைத்து தினம் இரவு அவளைச் சுகிக்கும் ஆண், என சீதாபதி சொல்லும் கதைகள் வழியே விதவிதமான ஆண்கள் மற்றும் ஆண்மை எனும் கருத்துருவை, சொல்லப்பட்ட கதைகள் வழியே, எல்லாம் கதைதானே எனும் மிதமான பாவனை வழியே, அதன் தீவிரத்தை அணுகிப் பார்க்கிறது நாவல்.

கணவனின் நிலைபிறழ்வால் மனம் கசந்து தற்கொலை செய்து கொள்ளும் சீதாபதியின் அம்மா துவங்கி, கணவனை பழிவாங்க தாசியாக மாறும் மிருதுளா தொடர்ந்து, கொள்ளைக்காரனை காதலித்து கல்யாணம் செய்து கொண்டு,கொள்ளைக்காரனை தருமவானாகவும் நல்ல இல்லறத்தானாகவும் மாற்றி நிறைவாழ்வு வாழும் வசுந்தரா வரை கதைகளுக்குள் விதவிதமான பெண் நிலைகள் துலங்கி வருகிறது. சீதாபதியை விரும்பும் நாடோடிப் பெண் லத்திகா, காதலனால் ஏமாற்றம் அடைந்து குடும்பத்தை உதறி தேசாந்திரி ஆகும் பெண், இறுதிக்காலத்தில் சீதாபதிக்கு தோழியாக அமையும் பால்ய கால நட்புக் கிழவி, தாசி இல்லம் நடத்தும் பெண், அந்த இல்லத்தில் இருக்கும், அந்த தொழிலுக்கு வந்து சேர்ந்த பெண்கள், சர்க்கஸ் கம்பனி பெண், மந்திரவாதியால் சிறை எடுக்கப்பட்ட பெண், சிலை என மாற்றப்பட்ட பெண், காமத்தைச் சுகிக்க கிளியாக மாற்றப்பட்ட பெண், என பெண்களால் அவர்களின் அலைக்கழிப்புகளால் கொட்டி நிறைக்கப்பட்ட கதைகள். குழந்தைகள். கொள்ளை நோய் கொண்டு சாகும் குழந்தைகள், பிரசவத்தில் சாகும் குழந்தை, பஞ்சத்தில் உணவுக்கு அடித்துக் கொள்ளும் குழந்தைகள், அன்னை மடி கிடந்த முலை அருந்தும் அமைதியில் லயித்த குழந்தைகள், முயல், பாம்பு,கிளி என சக ஜீவன்கள் அடங்கிய கதைகளின் உலகம். கதைகளாக சிதறுண்ட உலகம்.

‘என்னை கொசு கடிச்சா உனக்கு வலிக்குமா? அப்டித்தான் நான் சொல்லும் கதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சில கதைகள் கொஞ்சம் தொண்டை கரகரக்க வெச்சி கண்ணை கலங்க வைக்கும். அது அவ்ளோதான், அதுக்கு மேல அதுல ஒண்ணும் இல்லை”. தான் சொல்லும் கதைகளை உம் கொட்டி கேட்கச் சொல்லும் சீதாபதி, தனது கதைகளை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கமலக்கண்ணனுக்கு சொல்லி விடுகிறார். அப்படி விவேகத்துடன் கேட்டாலும் கூட, அதைக் கடந்து உணர்வெழுச்சி கொள்ள வைக்கும் பல சித்திரங்கள் நாவலுக்குள் உண்டு.குறிப்பாக இரண்டு சித்திரங்கள், தற்கொலை மனநிலையில் இருந்த தனக்கு வாழ்வை நோக்கி திரும்பும் சாத்தியங்களை திறந்து காட்டிய தாசியை நடுச்சாலையில் மனைவியுடன் காலில் விழுந்து ஆசி வாங்கும் இளைஞனின் சித்திரம். இரண்டாவது பார் விளையாட்டில், பற்ற வந்த கரங்களை விடுத்து, அப்படியே பறந்து வானில் ஏறி மறைந்துவிடும் சர்க்கஸ் பெண் அம்மணியின் சித்திரம்.

காமம், தனிமை, வாழ்க்கை, ஆத்மீகம் என இலக்கியம் பரிசீலிக்கும் அடிப்படைக் கேள்விகளை, அப்படி மையம் கொண்ட கேள்வி என ஒன்றில்லை என்ற பாவனையுடன் அணுகி பரிசீலித்துப் பார்க்க முனைகிறது நாவல். பெண் கொண்ட காமம் ஏன் இவ்வாறு இருக்கிறது என்றொரு வினா இந்த நாவலின் கதைகள் வழியே தோன்றி வந்தால் அதற்கான பதிலை, காட்டுக்குள் வாழும் அந்த நிர்வாணக் குடும்பத்தின் கதைக்குள் வைத்து வினாவை பரிசீலித்துப் பார்க்கிறது நாவல். இப்படி இந்த நாவலின் கதைகளுக்குள் மையமற்ற ஒன்று போலும் சித்தரிக்கப்படும் ஒவ்வொன்றும் அதற்கான வினாக்களை இந்த கதைச் சிதறல்களில் எங்கெங்கோ பொதிந்து வைத்திருக்கிறது. ஒட்டுமொத்த வாழ்வு சார்ந்த வினாக்களையும் அவற்றின் மீதான பரிசீலனைகளையும் கதைகளை கலைத்துப் போட்டு விளையாடுவதன் வழியே, முதுமையின் கண் கொண்டு இந்த வாழ்வு சார்ந்து துலங்கி வரும் ஒட்டுமொத்தமும் விலகலும் கனிவும் கொண்ட பார்வையை, வாசகனுக்குக் கையளிக்க முனைகிறது இந்த நாவல்.

முற்றிய போக்குவரத்து நெரிசலில் எது குறித்தும் கவலை இன்றி, தனது மழலைக்கு முலையளித்தபடி லயித்து கிடக்கிறாள் ஒரு தாய். அக்காட்சியில் உறைந்து போகிறார் சீதாபதி. மும்பையில் அவரது வாழ்வு அந்த நொடி முடிவுக்கு வந்து தனது தேசாந்திரத்தை தொடர்கிறார். சீதாபதி போலவே அன்னையின் மரணத்தால் மனமுடைந்து, ஆத்மீக அலைக்கழிப்பில் இருந்த சாமியாரைச் சேருகிறார் சீதாபதி. அந்த சாமியார் அவரது அலைக்கழிப்பில் இருந்து இந்த சித்திரம் வழியேதான் மீளுகிறார். சீதாபதிக்கு காட்சியாக அந்த சித்திரம் எதை அளித்ததோ, அது அந்த சாமியாருக்கு தரிசனமாக மாறுகிறது, பூவில் அமரும் வண்டு துவங்கி, அந்திச் சூரியன் வரை அவரைச் சூழ இருக்கும் அனைத்தும் அன்னை மடியில் கிடந்து, அமுதருந்துவதில் லயித்து கிடக்கும் குழந்தையாக, இந்தப் புவி மொத்தமும் அன்னை மடியாக அவருக்கு தரிசனம் அளிக்கிறது.

பதின்பருவத்தில் வீட்டை விட்டு ஓடிய சீதாபதி முதியவராக கிராமம் திரும்புகிறார். மந்திரவாதி கதையில் வரும் இளவரசி, மந்திரவாதியின் பிடி நீங்கியதும் அதுவரை அவள் கொண்ட இளமை நீங்கி தொண்டுக் கிழவியாக காட்சி தருகிறாள். சீதாபதியின் நிலைக்கும் இந்தக் கதைக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? ஊரெல்லாம் சுற்றிவிட்டு வருகிறார் சீதாபதி. ஊர் விட்டு எங்கும் போகாதவராக இருக்கிறார் வெங்கிட்டு கிழவர். இந்த இளவரசி கதையை வெங்கிட்டுவாக இருந்து கேட்டால் எழுபது வருடம் கழித்து அவர் சீதாபதியை சந்திக்கும் தருணத்தின் அபத்தம் புரியும். இப்படி கலைந்து கிடக்கும் இந்தக் கதைகளை தொடுத்துக்கொள்ளும் புள்ளிகளும் இந்த நாவலின் கதைகளுக்குள் கலைந்தே கிடப்பதே, முன் பின்னாக கற்பனை ஓடி, இவற்றை தொகுத்து அடைவதே இந்த நாவல் தரும் முதன்மை வாசிப்பின்பம்.

நாவலுக்குள் ‘வக்கணையாக ‘ எழுந்து ஒலிக்கும் சீதாபதி கிழவரின் மதுரை பேச்சு வழக்கு இந்த நாவலின் வாசிப்பு சுவாரஸ்யத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அடுத்ததாக அவரது வர்ணனைகள். மெதுவாகப் போகும் பேசின்ஜர் புகைவண்டியின் வேகத்தை இப்படி விமர்சிக்கிறார்- ”தான் போய்ச்சேரப் போற ஊர் இருக்குற உலகம் பிறக்கரத்துக்கு இன்னும் அஞ்சு நாள் இருக்கு அப்புறம் என்ன” எனும் வேகத்தில் போகிறது புகைவண்டி. அடுத்ததாக மழையில் கரைந்து மறையும் உடல், சதுரமான யானை, தலையில் சுடருடன் எண்ணைக் கடலுக்குள் இறங்கும் மனிதன் என புத்தம் புதிதான,கனவுகளை கிளர்த்தும் படிமங்கள். இவற்றைப் போல பல நாவலின் பலம் எனில், நாவலின் பலவீனம் [அதைப் பூசி மெழுகும் அத்தனை கூறுகளும் நாவலுக்குள் வெற்றிகரமாக தொழில்பட்ட போதிலும்] இதில் மிக குறைவாக, அல்லது இல்லவே இல்லாத நிலக் காட்சிகள். சீதாபதியை தவிர்த்து கமலக்கண்ணன் வாசகருக்கு சொல்லும் கிராமச் சித்தரிப்பு கூட குறைவாகவே இருக்கிறது. குன்று, அதன் மேல் கோவில், ஊர் முடிவில் ஜமீன் பங்களா, கிராமச் சாலை, பிரதான சாலையுடன் நிகழ்த்தும் சந்திப்பு இவை தாண்டி கிராமம் எனும் சித்தரிப்பில் மேலதிகமாக எதுவுமே இல்லை. வருடத்தில் ஆறு மாதமும் தண்ணி ஓடும் அந்த மதுரை, சோழவந்தான் பக்கத்து தெக்கத்திகிராம வாய்க்காவுக்கு அதன் தண்ணிக்கு மூலம் எது?- வாசகனுக்கு தேவை இல்லை எனக் கருதி கமலக்கண்ணன் விட்டுவிட்டான் என வைத்துக்கொண்டாலும். கிழவர் பாரதம் முழுதும் சுற்றியவர் அவர் சொல்லும் கதைகளில்கூட நிலம் சார்ந்த தனித்தன்மை கொண்ட காட்சிகள் என எதுவும் இல்லை.

நிலக்காட்சி சார்ந்த சித்தரிப்பு இன்மையின் காரணமாக நிகழும் பிரதான பலவீனம் இந்த நாவலின் ஆத்மீக நோக்கை, அது வெளிப்படும் விதத்தை பலவீனப்படுத்திவிடுகிறது என்பதே. இந்த நாவலில் சித்திரிக்கப்படும் ஆத்மீக நிலை அல்லது வியக்தியை ஒரு புரிதலுக்காக பௌத்தத்தின் [அதாவது மதத்துடன் தொடர்பற்ற] சென் நிலை என வகுக்கலாம். நிறுவனமயப்பட்ட ஒன்றின் பிரதிநிதியாக இங்கே சைவ துரையை துரத்தும் நாகா பாபாவும், பௌத்தனும் வருகிறார்கள். நேரெதிராக சீதாபதி சத்திரத்தில் சந்திக்கும் பைராகி இந்த நிறுவனத்துக்கு வெளியில் உள்ளவர். அதாவது மெய்மையை அறிந்தவர். அவர் பசி காமம் என அடிப்படை விசைகளான இவை மட்டுமே கொண்டு, அதற்கு மேலான அனைத்தும் கற்பிதமே என்று இந்த உடலை தூய விலங்காக பார்க்கிறார். இதற்கு மேலான அனைத்தும் கற்பிதமே என்பதற்கு, ஆளுமை ஆளுமையாக மாறி அவரது குரு விளையாடிப் பார்த்த பாவனை விளையாட்டை குறிப்பிடுகிறார்.[சென் குருமார்களின் கதை போல ] இரவில் ஒளிர்கிறார். சென்றபிறகு அவர் அமர்ந்திருந்த திண்ணையில் வாழைப்பூ அளவு பெரிய மல்லிகைப்பூ இருக்கிறது. அந்த திண்ணையில் அமர்ந்து சீதாபதி இயற்கையுடன் கரைகிறான். ஏகாந்தம் என்பதை உணர்ந்து அந்த நொடி முதல் தனிமைத் துயரை இழக்கிறான்.

அகம் சார்ந்த நிலைபேறு எப்போதும் புறம் சார்ந்த ஒன்றால் ஒரு நாணயத்தின் இரு பகுதி போல சமன் செய்யப்பட்டிருக்கும். சாமியார், பால் கொடுக்கும் அம்மாவில் இருந்து அகவயமாக அடைந்த ஒன்று, புறத்தில் அவர் காணும் யாவும் அன்னை தரிசனம் என மாறுவது, என அதன் நிலை இந்த நாவலுக்குள்ளேயே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. மாறாக சீதாபதி அகம் கொள்ளும் படிமங்கள் [சதுர யானை, சுடர் எரியும் தலையுடன் எண்ணைக் கடலில் இறங்குவது,மழையில் உடலே கரைந்து வெறும் வியக்தியாக எஞ்சுவது] அந்தரத்தில் இருந்து அவருக்குள் விழுந்து கவிந்தது போலவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறாகவே எஞ்சுகிறது. அக உணர்வாக இயற்கையில் கரைந்து அழியும் சீதாபதி, நாவலுக்குள் எங்குமே புறவயமாக இயற்கையில் தோய்ந்து லயிக்கும் சித்திரங்களே நாவலுக்குள் இல்லை. காரணமாக அந்த வியக்தி நிலை ஒரு நிலைமாற்றம் என வாசிப்பில் உள்வாங்கப்படாமல் ஒரு கவித்துவ அனுபவமாகவே உள்வாங்கப்படுகிறது. சீதாபதி கொண்ட இந்த நிலை மாற்றம் ”அந்தரத்தில்” நிகழ்வதால் இறுதியாக அவர் கமலக்கண்ணன் வசம் இந்த வாழ்வு குறித்தும், வாழ்ந்துவிட்டுப் போகும் விதம் குறித்தும் சொல்லும்போது, பல விஷயங்கள் கண்டு, கடந்து, வாழ்ந்து முடித்த கிழவன் சொல்லும் விவேக ஞானம் கொண்ட’ கூற்றாக’ ஒலிக்காமல், சீதாபதி சொல்லும் மற்றொரு அபிப்ராயம் போலவே நின்றுவிடுகிறது.

ஒருமுறை பழுதுநீக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த தேர் ஒன்றின் [சக்கரத்தின் அச்சு மையம் ஐந்து அடி உயரத்தில்], முன் பின் சக்கரங்களுக்கு இடையே உள்ள நான்கடி அகல இடைவெளியில் நின்றுதேரின் அடித்தட்டை அண்ணாந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கணம் பெண் ஒருவளின் தொடைகளுக்கு இடையே சிறுத்த உருவம் கொண்டு நின்று, அவளது பிரும்மாண்டமான இடைக்கரவை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பதாக தோன்றி, சிலிர்ப்போடும் வெட்கத்தோடும் பார்வை நகர்ந்த கணம், அடித்தட்டில் இடுக்கிலிருந்த, கண்மறைவாய் செதுக்கப்பட்டிருந்த அந்த மரச்சிற்பம் கண்ணில் பட்டது. வளைந்த வில்லாக தலைகீழாக நிற்கிறாள் பெண்.அவள் பின்னால் அந்த வில்லின் நாண் என நிற்கிறான் ஆண். கலவி. [விசித்திர கோணத்தில் நிகழும் அந்தக் கலவியை நிஜத்தில் முயன்றால், உச்சம் நிகழ்ந்ததும் பாடையை எண்கோண வடிவில் அமைக்கவேண்டிவரும்]. அந்தச் சிற்பத்தின் உன்மத்தத்தை சமன்வயப்ப்படுத்தும் ஒன்றாக மாற்றிக் கொண்டிருந்தது, தலைகீழாக வளைந்து நிற்கும் அந்தப் பெண் முன் தவழும் நிலையில் அமர்ந்து, அவளிடம் முலையமுதம் அருந்தும் அவளது மழலை.

பாரத நிலம் முழுதும் பரவி ஆட்கொண்ட சிற்பத் தொகைகளில் எங்கும் சேராத, பெரும்பாலும் கண்ணிலேயே படாத, உன்மத்தம் கிளர்த்தும், என்றோ கண்ட அந்தச் சிற்பத்தின்,அது கிளர்த்திய உணர்வு நிலைக்கு, முகம் அளித்தது இந்த ‘ஊர் சுற்றி’ நாவல். காட்டுக்குள் தனது மழலைக்கு முலையளித்தபடியே சீதாபதியுடன் கலவி கொள்ளும் பெண்ணுக்கு, அந்த நாவலில் வரும் பெரும்பாலான பெண்களைப் போலவே பெயர் இல்லை. லஸ்காக்ஸ் குகைக்குள் பதினைந்தாயிரம் வருடங்களுக்கு முன் வரையப்பட்ட ஓவியங்களில், ஒரே ஒரு மனித உருவம் உண்டு. அது பெண். வணங்கப்பட்டவளோ, அல்லது வதைக்கப்பட்டவளோ, அவள் பெயர் என்ன என்பது தெரியாது. அந்த குகைப்பெண்ணில் துவங்கி இந்த நாவலின் வனப் பெண் தொடர்ந்து, சீதாபதியின் அந்திமக்கால கிழத் தோழி வரை ஒரு கோடு இழுத்துவிட முடியும். அப்படித் தோன்ற வைப்பதே இந்த நாவலின் உத்தேசம். அந்தக் கோட்டை வாசக மனம் போட முயல்கையில், அதை எவ்வளவு தூரம் அழித்து விளையாட முடியுமோ அவ்வளவு தூரம் அழித்து விளையாடுகிறது இந்த நாவல். இதன் அழகு.

ஊர் சுற்றி -யுவன் சந்திரசேகர் -காலச்சுவடு பதிப்பகம்.