வான்மதி செந்தில்வாணன்

காலச்சுழி, வினோதத் தரை – வான்மதி செந்தில்வாணன் கவிதைகள்

காலச்சுழி

மதில்மேல் தாவியேறி
விறுவிறுவென நடக்கத் துவங்கியது
புலிவால் பூனையொன்று.
சுவரோ, அடுத்த காலம்வரை நீண்டிருந்தது.
கும்மிருட்டிலும்
வாலை ஒருவாறு தாவிப்பிடித்து மேலேறிவிட்டேன்.
சீறிப்பாயும் நோக்கில்
எனை முறைத்த அதன் விழிகள்
ஒளிரும் கோலிக்குண்டுகளென மினுங்கின.
மதிற்சவாரி
சர்க்கஸ் உயரம்போல் அலாதியெனினும்
கடந்துவந்த காலச்சுழிகளை துழாவியபடி
பின்னோக்கிப் பார்வையைத் திருப்புகிறேன்,
என் வாலைப் பிடித்தபடி
வரிசையில் சாகசிக்கின்றன
புலித்தலையுடன் நான்கு பூனைக்குட்டிகள்.

 

வினோதத் தரை

நழுவி, கீழே விழும் யாவற்றையும்
மலைப்பாம்பென விழுங்கித் தீர்க்கிறது
வீட்டின் வினோதத் தரை.
சமீபத்தில், உளுந்து டப்பாவிலிருந்து உருண்டோடிய கறுப்புளுந்துகள்.
பழைய மாயாஜாலப் படம்போல் சுவாரஸ்யமாய் இருக்கவே,
இருப்பின் மொத்த தானியங்களை சிதறவிடுகையில்
நொடியில் மாயமாயின அவ்வளவும்.
அப்போதுகூட சிமெண்ட் தரை
கிட்டத்தட்ட மொசைக் தரை போலிருந்தது.
நம்புங்கள்
இப்போதில்லாவிட்டாலும்
பிரம்மாண்ட வாய்பிளந்து
எனையும் விழுங்கி ஏப்பமிடும் அதிசயநாளில்
இவ்வளவும் உண்மையென
நிச்சயம் புரிந்துவிடும் உங்களுக்கு.

‘அகாலம்’ தொகுப்பிலுள்ள இரு கவிதைகள் குறித்து வான்மதி செந்தில்வாணன்

கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு சமயவேல் அவர்களின் அகாலம்எனும் கவிதைத் தொகுப்பை இரண்டாம் முறையாக வாசிக்க நேர்கையில் தொகுப்பின் முதல் கவிதையான வயலின் மனிதன்ஐ சட்டென கடக்க இயலவில்லை.’’வயலின் மனிதன்தலைப்பின்கீழ் இரு கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இரண்டுமே இசை சம்பந்தமான கவிதைகள். இக்கவிதைகளை மீண்டும் மீண்டும் வாசிக்கையில் மனதிற்குப் பிரியமான இசையினை இன்னும் நெருக்கமாய்க் கேட்கத் தோன்றியது. மட்டுமன்றி கவிதை வாசித்தல், இசை கேட்டல் எனும் இரு நிகழ்வுகளும் ஒன்றைத் தொடர்ந்து ஒன்றென இரட்டை மகிழ்வினை ஒருசேர அனுபவிக்க வாய்த்தது மனதிற்கு அலாதியான ஒரு உணர்வினை அளித்தது. அத்தகையதொரு மனநிலையில்தான் மெல்லமெல்ல இக்கட்டுரை உருவாக்கம் பெற்றது.

வயலின் மனிதன்

வயலின்களும் இசைப்பர்களும் மறைந்துவிட
இசை என்னைச் சுருட்டி எறிகிறது
பூமிக்கு வெளியே

குரல்களின் அடுக்குகளுக்குள்
பதுங்கியிருக்கும் வண்டுகள்
பாய்ந்து வெளியேறி
என் தலையை மூடுகின்றன

எந்த வடிவத்திற்குள்ளும் அடங்கமுடியாத
உயிரின் துக்கம்
ஒரு ஒற்றை வயலினிலிருந்து
கறுப்பு வானமாய் பெருகுகிறது.

இன்னொரு உடுமண்டலத்தில்
நானும் பியானோவும் தொங்குகிறோம்
ஒரு புல் நுனியில்
தினசரி வாழ்விலிருந்து
மில்லியன் மைல்களுக்கு அப்பால்
ஓர் அமானுஷ்யப் பரப்பில்
தாளங்களின் காலக்கணக்கு
சிம்பனியின் அடியாழத்தில்ந
ஒரு தனிமனிதனின் விம்மல்

நடத்துனனின் ஒரு சிறு தவறில்
முழு ஆர்க்கெஸ்ட்ராவும்
என்மேல் பாய்கிறது.
ஒவ்வொரு உறுப்பாய் என்னைக் கழற்றி எறிந்துவிட்டு
ஓய்கிறது இசை.

(To – Trivendrum male voice and Tirunelveli chamber orchestra)

ஒரு ஆர்கெஸ்ட்ராவின் அற்புதமான நிகழ்வு கவிதையாக்கம் பெற்றுள்ளது. டேப்ரிக்கார்டரில் பாடல் கேட்கையில் ஒலிநாடாவில் ஏற்படும் குறைபாடுகளாலோ, பள்ளி மற்றும் கல்லூரி விழாக்களில் மைக் முன் அரங்கேறும் நிகழ்வுகளை மனமொன்றிக் கவனிக்கையில் திடீரென ஏற்படும் உச்சஸ்தாயிலான கீச்சொலியிலோ அல்லது மனதிற்குப் பிடித்தமான பாடல் ஒலிக்கையில் வானொலியில் ஏற்படும் கரகர அதிர்விலோ இப்படி ஏதேனுமொரு நிகழ்வில் இம்மாதிரி மனம் கூசும்படியான அதிர்வினை அனைவரும் சந்தித்திருக்க அநேக வாய்ப்புகளுண்டு. இசையில் இன்புற்றிருக்கும் மனமானது திடுமென இரைச்சலுக்கு உட்படுத்தப்படுகையில் அதுவரை தான் அனுபவித்த, தனக்குப் பிடித்தமான ஸ்பரிசத்தினை முழுமையாக இழந்துவிடும் நிகழ்வே இங்கு கவிதையாக்கம் பெற்றுள்ளது. இந்நிகழ்வானது, கிட்டத்தட்ட காற்றிற்கு அசைந்து இசையெழுப்பும் மரமொன்றை வேரோடு பிடுங்கி எறிவது போலத்தானென எண்ணத் தோன்றுகிறது. கவிஞர்களின் இருப்பானது பூலோகமாக இருப்பினும் அவர்களின் அகவெளியானது அவ்வப்போது பூமிக்கு வெளியிலான சஞ்சரிப்புகளில் திளைத்தூறி தனது விருப்பங்களுக்கும் , அறிவுத் தேடல்களுக்கும் தீனியிட்டுக் கொள்கின்றன என்பதற்கு முதற்பத்தி சான்றாக அமைகிறது. கண்கள் மூடியபடி நாம் ரசிக்கும் இசையானது நம்மைச் சுருட்டி பூமிக்கு வெளியே வீசவேண்டுமாயின் அது மனதிற்கு இசைவானதாகவோ அல்லது ஏற்புடையதாகவோ இருக்க வேண்டும்.் இசையின் மீது அனைத்து உயிர்களுக்கும் மயக்கமுண்டு எனும் நிதர்சனத்தை எண்ணுகையில், ‘இசையால் வசமாகா இதயம் எது?’ எனும் பாடல் வரியானது நினைவில் ஊர்கிறது. இசையும், குரலும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து ஒன்றையொன்று தழுவி நம் மனதின் ஆழத்தை வசீகரிக்கும் தன்மை வாய்ந்தவை. உயிரின் துக்கமென வயலினிருந்து கசியும் இசை அரூபமானது. கறுப்பு வானம் என்பது காட்சிப்படிமம். எனவே கறுப்பு வானமாகப் பெருகும் உள்ளுணர் வரிகள் வாசகருக்கு ஒரு அழுத்தமான புறவெளிக்காட்சியை அகத்துள் தோற்றுவிக்கிறது. மனித அறிவானது தெரிந்ததிலிருந்து தெரியாததை நோக்கி நகர்வது போல மூன்றாம் பத்தியின் வரிகள் அரூபத்திலிருந்து மெல்ல ரூபம் நோக்கி நகர்கின்றன.

சில பாடல்கள் சுமையான மனதை சட்டென இலகுவாக்கும் தன்மை வாய்ந்தவை. ஒரு பருப்பொருளோ அல்லது மனிதனோ சிறு புல்நுனியில் தொங்கவியலாதுதான். மனமானது இலேசாகிப் பறக்கும் தருணத்தில் அப்படியொரு அரிதான வாய்ப்பு அவருக்கு கிட்டியதை அறிவதோடு குரலின் ரிதம் குறித்த அவரின் புரிந்துணர்வையும் நாம் அறியப்பெறுகிறோம். எந்தவொரு மனமும் இரைச்சலை விரும்புவதில்லை. ஆர்க்கெஸ்ட்ரா நடத்துனனின் சிறு தவறால் சட்டென தன்னுணர்வு நிலைக்குத் திரும்புவதைத்தான் இறுதிப்பத்தி சுட்டுகிறது. இசை இரைச்சலாக மாறும் தருணம் மனம் சந்திக்கும் அதிர்வில் அவர் ஏதுமற்ற ஒன்றாகி எதுவுமே இல்லாமல் ஆகிறார். The Pianist திரைப்படத்தில் இசையைத் தொடர்ந்துவரும் இரைச்சலும், இரைச்சலினூடான இசையுமென சற்று கனத்த மனஅதிர்வினை உண்டாக்கிய காட்சிகளை அசைபோடுகிறது மனம்.

 

அரங்கை விட்டு வெளியேறுகிறேன்

ஒரு பிரும்மாண்டப் பியானோவின் இசை நகர்மேல் பொழிந்து கொண்டிருக்கிறது.
பஸ் ஸ்டாப், கடக்கும் வாகனங்கள்,
விருட்டென்று வந்து எனை ஏற்றிக்கொண்ட சிட்டிபஸ்; வெளியில் விடைதரும் சிநேகிதி
ஓரத்தில் ஒளி கசியும் கட்டிடங்கள்
வேப்பமரங்கள், கறுப்புச் சாலை, கடைகள்,
வேதக்கோயில், த்யேட்டர், ரிக் ஷா வரிசைகள்
எல்லாவற்றுக்குள்ளும் இருந்து
எட்டிப்பார்க்கிறது ஒரு வயலின்.

எந்த ஸ்டாப்பிலோ இறங்குகிறேன்
எந்தத் தெருவிலோ நடக்கிறேன்
எந்த வீட்டையோ தட்டுகிறேன்
ஓர் உயிருள்ள வயலினாக நான்
எப்பொழுதோ மாறிவிட்டிருந்தேன்.

(To – Trivendrum male voice and Tirunelveli chamber orchestra)

கவிதை என்பதை மௌனம் மலர்த்தும் அலாதியான இசை எனவும் குறிப்பிடலாம். இசையானது எல்லோர் வீட்டின் கதவுகளையும் தட்டக்கூடியது. நாம்தான் செவிமடுக்க மறுத்து அலட்சியமாய் அவைகளைக் காற்றில் உதிர்த்துக் கொண்டிருக்கிறோம். இசையானது ஒலியுணர்திறன் கொண்டது மட்டுமன்றி காட்சி மயக்கத்தினையும் உணரப்பெறுவதுமாகும். இக்கவிதையைப் பொறுத்தமட்டில் ஓரத்தில் ஒலி கசியும் கட்டிடங்கள், ரிக் ஷா வரிசை போன்ற காட்சி பிம்பங்களிலிருந்து ஒரு வயலின் எட்டிப்பார்க்கிறது எனும் நேர்த்தியான வரியானது காட்சிமயக்கத்தின் அற்புதத்தை மனதினுள் நிகழ்த்திக் காட்டுகிறது. மிகுந்த மெல்லதிர்வை உண்டுசெய்யும் இக்காட்சியானது ஒரு சிலிர்ப்பான நுண்ணிசையைக் கசிந்து கொண்டே மனம் முழுக்க அடர்வாக விஸ்தரிக்கிறது. ‘ஓரான் பாமுக்’ ன் “பனி” நாவல் முழுக்க விசித்திர நிலமான துருக்கியின் ‘கார்ஸ்’ நகரக் கட்டிடங்கள் பனியினூடாக இப்படியொரு நுண்ணிசையைக் கசிந்துகொண்டே இருக்கும்.

பொதுவாக மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நேர்மறையானாலும் சரி, எதிர்மறையானாலும் சரி சில பொழுதோ, காலமோ தொடர்ந்து அதன் நிழல்களில் சஞ்சரித்தவாறு மற்ற அனைத்தையும் புறந்தள்ளிவிடுகிறது. இங்கு நேர்மறை உணர்வு கவிதையாக்கம் பெற்றுள்ளது. சில நிகழ்வுகளின் பொருட்டு ஒரு புள்ளியில் குவிந்து அங்கேயே நிலைபெறுகிற நம் கவனமானது அதன்பிறகான எவ்வித பிரம்மாண்டங்களின் லயிப்பிலும் ஈர்ப்பு பெறுவதில்லை அல்லது அவ்வாறு இயங்கவென மனம் நம்மை அனுமதிப்பதில்லை. மழை நனைப்பதுபோல் ஒரு நகரை இசை நனைப்பதை உணர்வதென்பதே பேரின்பம். அம்மாதிரியான மனோநிலையில் தன்னைச் சூழ்ந்துள்ள உயர்திணை, அஃறிணை யாவற்றிலும் வயலின் இசை கசிந்துகொண்டிருப்பதை உணர்வதென்பது பேரின்பத்தினூடான மற்றுமொரு பேரின்பம். இசையில் மயங்கிய ஒரு மனமானது இந்த உலகத்தை இசையாகவே காணும் அறிவுமயக்கத்தில் சஞ்சரிப்பதுடன் அதை கொண்டாடிக் களிக்கிறது. ஒரு மனிதனின் இசைவயப்பட்ட மனப்பிரியத்தை வெளிப்படுத்தும் பெருங்கடத்தியாக தன்னை நிறுவிக்கொண்டுள்ளது இக்கவிதை.
உயிரின் வேர்வரை ஊடுருவி ஒரு உணர்வினை முழுமையாய் கவித்துவமாக்க வேண்டுமெனில் தான் அதுவாகவே மாறுவதன்றி வேறெப்படி இயலும்? எந்த ஸ்டாப்பிலோ இறங்கி, எந்தத் தெருவிலோ நடந்து, எந்த வீட்டையோ தட்டினாலும் திறந்துகொள்ளும் எல்லாக் கதவுகளும் அவருடையதாகவே இருக்கிறது என்பதாக விரிகிறது எனது சிந்தனை.

மேற்கூறிய இரு கவிதைகளிலும் வயலின் மற்றும் பியானோ ஆகிய இரு இசைக்கருவிகளின் தாக்கம் தெளிவாகிறது. முதற்கவிதையானது பாழ்பட்ட இசை குறித்த உணர்வையும், மற்றது ஒரு இசையூறிய மனதின் உணர்வுப் பிரவாகத்தினையும் நயமாக எடுத்துரைக்கிறது. முதற்கவிதையில் மன அடுக்குகளைச் சீர்குலைத்தபடி தன்னிலிருந்து விடுபட்டுச் சுழன்றோடி மறையும் இசையானது மற்றதில் அதே வேகத்தில் அவ்வளவையும் சீர் செய்வதெனும் கருத்தானது உணரக் கிடைக்கிறது. வாழ்வின் உன்னத தருணங்களை உயிர்ப்போடு மலர்த்துகிற இதுபோன்ற கவிதைகளை அவ்வளவு எளிதில் கடக்க முடிவதில்லை. சில சமயங்களில், அண்டை வீட்டில் கமழும் தாளிப்பு மணமானது நம் வயிற்றுப்பசியைக் கிள்ளிவிட்டு வேடிக்கை பார்ப்பதுபோல, கவிஞரின் இவ்விதமான இசைத்தாளிப்பானது மனத்தின் இசைப்பசியைத் தூண்டும் விதமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

தொகுப்பு _ அகாலம்
ஆசிரியர் _ சமயவேல்
வெளியீடு _ சவுத் ஏசியன் புக்ஸ்
முதல் பதிப்பு _ 1995

வான்மதி செந்தில்வாணன் கவிதைகள்: ஆதி, புதிர்

ஆதி

ஒரு நிர்மல வெளியின் விளிம்பிலமர்ந்து

அதிகாலை வானம் உற்றுக்கொண்டிருந்தேன்.

மெதுமெதுவாய் கீழிறங்கி

கையெட்டும் உயரத்தில் நின்றுவிட்ட வானத்தை

மயிலிறகாய் வருடுகையில்

விசுக்கென கடலைப் பொழிந்துவிட்டது.

விசைதாளாது நிர்தாட்சண்யமாய்க் கிடத்தப்பட்டேன்

பெருவெளியொன்றில்.

கழன்றவிழும் மரத்தின்

கடைசி வெண்சிறு மலர்போல்

தற்போது எனைநோக்கிக் கீழிறங்கும்

இக்கடைசி துளியில்

என் ஆதியைக் காண்கிறேன்

நானற்ற ஒரு நானாய்

இந்நிலத்தின் பெரும்பேராய்.

புதிர் உலகம்

பூ வரையச் சொல்லி கேட்டாள்

இரண்டரை வயது மகள்.

எனக்குத் தெரிந்த மாதிரி

வரைந்து தந்தேன்.

முட்டைபோல் ஏதோவொன்றை வரைந்து

பூவெனக் காட்டினாள்.

சிரத்தையோடு சில நேர்க்கோடு வரைந்து

அதன்மேல் அச்சு தீட்டச் சொன்னேன்.

அசட்டையாக

எண்ணற்ற வளைகோடுகளை

சளைக்காது வரைந்து தள்ளினாள்.

பின்பு

பல்பம் தேய்ந்துவிட்டதென

மீண்டுமொன்றைப் பெற்றுக்கொண்டு

கண்கள் மூடுமாறு கட்டளையிட்டாள்.

அரைநிமிடம் கழித்தே காண வாய்த்தது

அவள் தீட்டிய ஒரு அற்புத உலகம்.

அவள் மட்டுமே விடையறிந்த

அப் புதிர் உலகினுள் நுழைய இயலாமல்

வெறுமனே ஒருமுறை

எட்டிப்பார்த்துவிட்டு மட்டும்

நகர்ந்துவிட்டேன்.

அழகு – வான்மதி செந்தில்வாணன் கவிதை

வான்மதி செந்தில்வாணன்

அன்றைய சூர்யோதயத்தில்
பின்கொசுவப் புடவையை
செக்கச்செவேலென்றிருந்த
தனது முழங்காலுக்குமேல்
தூக்கிச் செருகியபடி ஒயிலாகத்
தலையுலர்த்திக் கொண்டிருந்தாள்:
மழைக்கால மரக்கீற்று
வெளிச்சத்துளிகளை உதிர்ப்பதுபோல்
வெண்சரடுக் கூந்தலிலிருந்து ஈரம்
மணிமணியாய் உதிர்ந்து கொண்டிருந்தது.
சற்றைக்கெல்லாம்,
கிளைத்துப் படர்ந்த
நரைமயிர்களினூடே மெதுமெதுவாய்
ஊடுருவிக் கொண்டிருந்தது
சிறு வெளிச்சக் கீற்று.
ஆஹா,
சூர்யோதயத்தின் கீழ்
தென்னைகள்தான் எவ்வளவு அழகு.

ரமேஷ் பிரேதனின் ‘சாராயக்கடை’: வான்மதி செந்தில்வாணன் அறிமுகம்

வான்மதி செந்தில்வாணன்

தொகுப்பு _ சாராயக்கடை
ஆசிரியர் _ ரமேஷ் பிரேதன்
வெளியீடு _ உயிர்மை

மரக்கிளையில் தானாகக் கனிந்த கனியின் சுவையானது அவற்றைப் பதப்படுத்திக் கனியச்செய்வதைக் காட்டிலும் அலாதியானது. அதுபோல ஒரு படைப்பானது தன்னைத்தானே படைத்துக்கொள்வதென்பது தனிச்சிறப்பு. அத்தகைய தனித்துவம் ததும்பும் படைப்புகள் மட்டுமே கலை இலக்கிய உலகில் வெற்றிவாகை சூடுகின்றன.

கவிஞன் ரமேஷ் பிரேதனின் “சாராயக் கடை” கவிதைத் தொகுப்பானது டிசம்பர் 2008 ல் உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இத்தொகுப்பைக் கையிலெடுக்கையில் சாராயக்கடை என்ற பெயர்ப்பலகை மாட்டப்பட்ட கூடத்திற்குள் நுழைவதைப் போலிருந்தது. பிரெஞ்சு ஆதிக்கத்திற்கு ஆட்பட்டிருந்த புதுச்சேரி நிலத்தில் அயோக்கியன், காமுகன், பயங்கரவாதி எனப் பெயர் பெற்ற ஒருவனுக்குள்ளிருந்து எழும் கூக்குரல்களும், கூச்சல்களும் கவிதைகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனக்கு வாய்த்த சூழியல் அனுபவங்களின் கருத்து சாரங்கள் மற்றும் தனது கற்பனை வளம் ஆகியவற்றைக் கொண்டு உருவமைக்கப்பட்ட இத்தொகுப்பானது வாசகருக்கு வேண்டுமட்டும் நனையக் கிடைத்த சாராயச் சாரலென திருப்தி கொள்ளலாம்.

சாராய வாசனை பிடிக்காதவர்களுக்கு அதை நெடியாகத்தான் நுகர இயலும். மாறாக, பருகிப் பழக்கப்பட்டவருக்கோ அது அமிர்தம். ஒரு படைப்பு எவ்வாறு தன்னைத்தானே படைத்துக்கொள்கிறதோ அதுபோல் இத்தொகுப்பில் பாரபட்சம் எதுவுமின்றி சாராயம் தன்னைத்தானே எதார்த்தமாக எழுதிக் கொண்டுள்ளது என்பது மறுக்க இயலாத உண்மை. ஒவ்வொரு கவிதையாய் உள்வாங்குகையில் மனம் ஒருவித உச்சகட்டத் தாக்கத்திற்கு உள்ளாகிறது. கவிஞர், சிந்தனையை அதன் போக்கில் ஓடவிட்டு தன் சார்ந்த அவலங்களையும், ஓலங்களையும், வலிகளையும் எவ்வித நெருடலுமின்றி அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துள்ளார். தனது தவிர்க்க இயலாத அனுபவங்களைத் திரட்டி ஒரு நிதானப்பட்ட எழுத்தினை வாசகர்களுக்கு வாசிக்கத் தந்துள்ளார்.

கவிதை வரிகள் ஒவ்வொன்றும் சிக்கனத்துடன் ஒருவித அழகியலோடும், பொருட்செறிவோடும் புனைவு பெற்றிருப்பதாலும், எளிமையான மொழி மற்றும் சொற்கட்டமைப்பைக் கொண்டிருப்பதாலும் கவிதைக் களத்தில் சஞ்சரிக்கும் உத்தியானது இங்கு பாந்தமாகக் கையாளப்பட்டிருப்பதாகக் குறிப்பிடலாம். இவரது கவிதைகளில் எதார்த்தங்களும், எதார்த்தத்தை மீறிய அணுகுமுறைகளும், எதார்த்தத் தத்துவங்களும் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன.

oOo

ஒரு பிரெஞ்சு ஆதிக்கச் சமூகத்தில் பாலின வேறுபாடு எதுவுமின்றி அதிகப்படியான வயது வித்தியாசத்துடன் கூடிய பாலியல் வன்புணர்வு, பாலியல் சீண்டல்கள் மற்றும் பாலியல் சுரண்டல்கள் உள்ளிட்ட பாலியல் துன்புறுத்தல்களுக்கு நிர்பந்திக்கப்படுகிற ஒரு பதின்வயதுப் பாலகனின் உளக்குமுறல்களின் பிரதிபலிப்போடு துவங்குகிறது தொகுப்பின் முதற்கவிதையான “சாக்லேட் நகரம்”.

“………………….
எனக்குப் பன்னிரண்டு வயது
என் அம்மா வீட்டுவேலை செய்துவரும்
வெள்ளைக்காரப் பெண்மணிக்கோ
நாற்பது வயது
விதவையா விவாகரத்து ஆனவரா
ஞாபகமில்லை
இரவில் என்னை வீட்டோடு வைத்துக்கொள்வார்
…………………………………
நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது
ஒரு வெள்ளைக்காரக் கிழவனால் புணரப்பட்டேன்
ஒரு வாரத்திற்கும் மேல்
பின்புறத்தில் வலியிருந்தது
பெரிய பிரெஞ்சு சாக்லேட்டைக் கொடுத்தார்
எனது பதின் பருவத்தில் என்னை
பிரான்சுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி
அறுபது வயது மதிக்கத்தக்க
வெள்ளைக்காரக் கிழவி
படாதபாடுபடுத்தினார்
எனது முகத்தில் அவரின்
மூத்திரவாடை எந்நேரமும் கமழும்
…………………………………………”

அனைத்து சீவராசிகளும் இயல்பூக்கத்தின் காரணமாகவோ அல்லது தீவிர மன அழுத்தத்தின் தாக்குதலிலிருந்து கூடுமானவரை விரைந்து விடுபடவோ அவ்வப்போது புணர்வில் ஐக்கியமாவது அவசியமாகிறது. ஒரு மனிதன் தன் வயிற்றுப் பசிக்கென புணர்ச்சி கொள்வதென்பது தவிர்க்க இயலாத நிகழ்வாகிவிடுகையில் அவன் தன் மனதை அதற்கென வலிந்து பழக்கிக்கொள்ளத் துணிந்துவிடுகிறான்.

மேலும் தன் பதின் வயதைப் பசியின்றி கடத்துவதற்கு இடப்புறம் மட்டும் வளரும் மார்பும், அச்சிறு வயதிலேயே அளவுமீறிய வளர்ச்சியுடைய அவனது குறியுமே காரணமாக அமைவதென்பது எவ்வளவு பரிதாபத்திற்குரியது! அத்தகையதொரு வாழ்வை ஏற்றுக்கொண்டு தனது நாட்களைக் கடத்தும் அவனது மனநிலையின் ஸ்பரிசங்களை கவிதை வரிகள் நம்முள் இயல்பாக கடத்துகின்றன. தனது வாழ்வின் அடிமைத்தனத்தையும், தான் நேசிக்கும் வெள்ளைப் பெண் தனது காதலை நிராகரிக்க அவனது கறுப்புநிறமே காரணமெனும் உளப்பிரேமையினையும் பெருவலியுடனும், பேரேக்கத்துடனும் எடுத்தியம்புவதாக வரிகள் அமையப்பெற்றுள்ளன. கவிதையில் காமத்தினூடே மென்மையான காதல் ஒருவித குமுறலோடு இழையோடுகிறது. இக்கவிதை முழுக்க அநேகக் காட்சிகள் நிர்வாண அடுக்கமைவு கொண்டவையாகவும், வக்கிரம் ததும்பும் ஆதிக்க மக்களின் பெருங்கூச்சல்களோடும் விரிகின்றன.

oOo

நினைவுகளை அசைபோடுவதென்பது மனிதர்களின் வாழ்வில் தவிர்க்க இயலாத ஒன்றாகவே இதுநாளதுவரை தொடர்கிறது. நமக்கு விருப்பமான சில நினைவுகளை அசைபோடுகையில் உடன் நமது கற்பனைகளும் சேர்ந்து அந்த இனிமையான நிமிடங்களை மேலும் களைகட்டச் செய்கின்றன. நமக்கு விருப்பமான நிகழ்வுகளை எண்ணிக்கொண்டே காலம் கடத்துகையில் வாழ்நாட்கள் வெகுவிரைவாகத் தீர்ந்துபோகின்றன அல்லது உற்சாகமாகக் கரைந்துவிடுகின்றன. மாறாக, நாம் வெறுக்கும் அல்லது ஒதுக்கும் நினைவுகள் அவ்வப்போது மேலெழும்புகையில் அவைகளின் தலைதட்டி அப்போதைக்கு மனக்குழியின் ஆழத்திற்குள் தள்ளும் உத்தியை நாம் திறம்பட தெரிந்துவைத்திருக்கிறோம் ஒருநாள் அவை விஸ்வரூபமெடுக்குமென அறிந்திருப்பினும்கூட. அப்படியானஅனுபவம் வாய்ந்த ஒரு இறந்தகால சிலிர்ப்பூட்டும் நிகழ்வுதான் இங்கு கவிதையாக்கம் பெற்றுள்ளது.

“வாழ்ந்த நினைவுகளை
அசைபோட்டபடி வாழ்ந்து கொண்டிருக்கிறான்
குறுக்காக ஒரு வெள்ளைப் பசு
சாலையைக் கடக்கிறது
உணவகத்தின் வாசலில் வைத்துக் கறக்க
சைக்கிள் கேரியரில்
வைக்கோல் திணித்த கன்றோடு
அவன்
வாழ்ந்த நினைவுகளை அசைபோட்டபடி
வாழ்ந்துகொண்டிருக்கிறான்
சாலையைக் குறுக்காகக் கடக்கிறான்
பசுவைப் பின்தொடர்ந்து”

முதலிலிருந்து தொடங்கி ஒவ்வொரு வரியாய் வாசித்துக்கொண்டே வருகையில் ‘மடி கனக்கிறது’ என்ற வரியில் நமது மொத்த அசைவும் நின்றுபோகிறது. உண்மையில் உணர்வானது மனம் முழுக்க சுரந்து வழிகிறது. கன்றினை இழப்பது அல்லது பறிகொடுப்பதென்பது கிட்டத்தட்ட மடி அறுந்து விழுவது போலத்தான். ஒரு கன்றானது பிறப்பின்போதோ அல்லது பிறந்த சில தினங்களிலோ உயிர்துறக்க நேரும்போது அதனது தோல்களை உலரச்செய்து பதப்படுத்தி பின்பு அதனுள் வைக்கோல் திணிக்கப்பட்டு கிட்டத்தட்ட கன்றைப்போலவே ஒரு பொதி உருவாக்கப்பட்டு பால் கறக்கவென உபயோகப்படுத்தப்படும். பசுவின் தாகமும் சரி உரிமையாளரின் தாகமும் சரி இவ்வாறுதான் தீர்க்கப்படுகிறது. இவ்வாறான நினைவு நிச்சயம் வலிகூட்டக்கூடியதுதான். கடைசி இரு வரிகளில், நினைவுகளின் பின்னே அவன் ஓடும் நிகழ்வில் அவ்வளவு அழகாய்ப் பிறக்கிறது இக்கவிதை. நல்லதொரு உளவியற்பாங்குடனும் அளவான சொற்பிரயோகத்துடனும் நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ள வரிகள் இவை. நமது வாழ்வில் மிகத் தரமான அழுத்தப்பொதிகளை அவ்வப்போது எண்ணிப்பார்க்கையில் இப்படியொரு சிறப்பில் யதார்த்த அடித்தளத்துடன் கூடிய நற்பாங்கான கவிதை அமையப்பெறுவது சாத்தியமாகிறது. இத்தொகுப்பைக் கையிலெடுக்கும்போதெல்லாம் முதலில் இக்கவிதையினை வாசித்தபிறகே மற்ற கவிதைகளில் கவனத்தினை அனுமதிக்கிறது மனம்.

oOo

“தாமரைப் பூக்குளம் அழகு
அழுகி அமிழும் பூவின்
மரணம் குறித்து யாருக்கும்
கவனமில்லை

புதிய பூ மறுநாள் காலை
குளம் தேடுகிறது
நேற்று செத்த மகளை”

ஒரு தாய் தன் குழந்தையைத் தொலைக்கவோ அல்லது பறிகொடுக்கவோ நேர்கையில் அவளது உள்ளத்தின் பதைபதைப்புகள் தாங்கவொண்ணாத மனவேதனையினை அவளது எஞ்சிய வாழ்நாள்களுக்கு அனிச்சையாய்க் கடத்தி விடுகிறது. கவிஞரது இக்கவிதையில் , அனுதினமும் காலையில் மலரும் தன் மகளைப் பறிகொடுத்தபடி தவிக்கும் குளமானது நிதானமாக ஒரு தாய் ஸ்தானத்தில் இருத்தப்படுகிறது. ஆக, குளத்தில் இருப்பது வெறும் தண்ணீரல்ல, முழுக்க முழுக்க கண்ணீர் என்று கதறும்படியான எண்ண அலைகள் மனதினுள் சுழன்றடிக்கின்றன. உண்மையில் வாடிய மலர்கள் பற்றி யாருக்கு என்ன கவலை? ஒருவேளை அம்மரமும், மலரும் வேண்டுமானால் வருத்தப்படலாம்.

பொதுவாக நமது எண்ணங்களிலும் , செயல்களிலும் வாடிய மலர் என்பது குப்பையாகவோ அல்லது கழிவாகவோ ஒருவித எதார்த்தத்துடன் சுதந்திரமாக அனுமதிக்கப்படுகிறது. ஆனால் கவிஞர் அம்மலரை ‘செத்த மகள்’ எனக் குறிப்பிடுகையில் அவை மட்டுமே நமது சிந்தனையை ஆக்கிரமிப்பு செய்து அதன்பின் பலவித கிளை ஓட்டங்களுக்கு வழிவகை செய்கிறது.

முதல் நான்கு வரிகள் மிகச் சாதாரணமாக இருப்பினும் தொடர்ந்து வரும் மூன்று வரிகள் வாசகரிடையே அசாதாரண கவன ஈர்ப்பைப் பெறுகின்றன. இக்கவிதையைப் பொறுத்தமட்டில் முதல் நான்கு வரிகள் கழிவு பெற்றிருப்பினும் கூட அடுத்ததான வரிகளில் தெளிவான மற்றும் ஆழமான புரிதலை உள்வாங்கியிருக்க இயலும். இறுதி மூன்று வரிகள் ஹைகூ வடிவில் தோற்றம் பெற்றிருப்பினும் ஹைகூவாகக் கருத இயலாது. இம்மூன்று வரிகளை எண்ணிக்கொண்டு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உறைந்துபோய் உட்கார்ந்திருக்கலாம். அது ஒரு வாசகனுக்குக் கிடைக்கும் பொன்னான நேரத்தைச் சார்ந்தது மட்டுமன்றி கவிதையினூடாகப் பயணிக்கவென அவனுக்கு வாய்க்கும் மனநிலையையும் பொறுத்தமைகிறது.

oOo

சர்வமும் சாராயமென்கிறார் கவிஞர்.

“மாமது போற்றுதும்” எனும் கவிதையின் இறுதியில், ஒரு தாய் தன் மகனிடம் கூறுவதாக, “அப்பாவைக் கலக்காமலேயே சாராயத்தால் உன்னைக் கருத்தரித்தேன்” எனும் வரிகள் இடம் பெற்றுள்ளன. இது சாராயத்தின் மீது தீராக்காதல் கொண்ட கவிதை என்று எண்ணத் தோன்றுகின்றதே தவிர இந்நிகழ்வு எப்படி சாத்தியம் என்றெல்லாம் ஆராயத் தோன்றவில்லை. இப்படியான சில புலகாங்கிதங்களை உள்வாங்க முடிகிறதே ஒழிய உணர்வுகளை முழுக்க முழுக்க வார்த்தைகளால் எடுத்தியம்ப இயலவில்லை.

“சாத்தானும் கந்தசாமியும்” எனத் தலைப்பிட்ட கவிதையானது புதுமைப்பித்தனின் “கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்” எனும் சுவராஸ்யம் ததும்பும் சிறுகதையினை நினைவூட்டுகிறது. கதையில், குழந்தை கதாபாத்திரமான வள்ளி கடவுளைப் பார்த்து “ஆட்டம் தெரியாமே ஆட வரலாமா?” என்று எழுப்பிய வினாவிற்கு ஆட்டவிதிகளைப் பற்றிய வர்ணனைகளை இக்கவிதை எடுத்தியம்புவதாக அமைந்துள்ளது. குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் சாராயம் குடிப்பதற்கான ஆட்டநெறி.

ஆண்டானுக்கும், அடிமைக்குமிடையே அறம் ஒரு ஊறுகாய் மட்டையெனில் தோல்வியுற்ற நபருக்கென கடவுள் சாராயக்கடையில் ஊறுகாயோடு காத்திருப்பதெனும் கூற்றானது அறத்தோடு காத்திருப்பது என்றாகிறது. ஆனால்,ஒரு ஆட்டம் வெற்றியில் முடிந்தாலோ அல்லது தோல்வியைத் தழுவினாலோ பாடுபொருளான சாராயமே அறம் என்கிறது இத்தத்துவார்த்தக் கவிதை. இப்படியாக இவரின் பெரும்பான்மையான கவிதைகள் அயோக்கியனாக வாழத்தெரிந்த யோக்கியதை மட்டுமே பழகிக்கொண்டுள்ள ஒரு யோக்கியனின் கூற்றுகளாக ஒலிக்கின்றன. மேலும் எவ்வித போலித்தனமுமற்ற சுய பிதற்றல் இவரது கவிதைகளில் மிகுந்து காணப்படுகிறது.

இன்னும் இத்தொகுப்பில் ‘போகமார்க்கம்’, ‘பீர்பாட்டில்’, ‘சூன்யபோகம்’, ‘எலி’, ‘புறவழிச்சாலை’, ‘சிதை’ போன்றதலைப்புகளில் இடம்பெற்றுள்ள கவிதைகளில் ததும்பும் உள்ளுயிர்ப்பின் தாக்கம் மிகுந்து காணப்படுகிறது.

’நத்தையின் வரலாறு’ எனும் தலைப்பிலமைந்த கவிதை தவிர்த்து பிரேதன், யவனிகா ஸ்ரீராம் , கரிகாலன், இத்தியாதி, இத்தியாதி பெயர்களை இடையீடாகக் கொண்டமைந்த கவிதைகள் வாசிப்பில் சற்று அயற்சியை ஏற்படுத்துகின்றன. புத்தக வாசிப்பென்பது இன்றியமையாத இக்காலகட்டத்தில் “நகர்வு” என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. ஆகவேதான் ஒரு வாசகன் , சமகால வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பொதுவாக எல்லா படைப்பாளிகளையும் வாசகர்களென்றோ, எல்லா வாசகர்களையும் படைப்பாளிகளென்றோ கூறிவிட இயலாது. ஒரு தரமான படைப்பாளி என்பவன் ஒரு தரமான வாசகனென்று உறுதியாகக் கருதலாம்.

ஒரு படைப்பாளியின் தனியொரு படைப்பை வாசிப்பதன் மூலம் அவரது எண்ண ஓட்டங்களின் மொத்த பரிமாணங்களையும் அளவீடு செய்வதென்பது இயலாத காரியம். அவரது மொத்த படைப்புகளின் ஆழங்களுக்குள் ஊடுருவுகையில் வாசகருக்கு ஒரு நூலளவு பிடிப்பு கிடைக்கப்பெறலாம். இருப்பினும் , நாம் வாசிக்கும் சில நூல்கள் நம் மனதின் உள்ளடுக்கில் தாக்கத்தினை உண்டுசெய்வதால் அவை பற்றி எழுதும் உந்துதல்கள் நம்முள் எழுவது இப்படியாக சாத்தியமாகிறது.