அன்றைய சூர்யோதயத்தில்
பின்கொசுவப் புடவையை
செக்கச்செவேலென்றிருந்த
தனது முழங்காலுக்குமேல்
தூக்கிச் செருகியபடி ஒயிலாகத்
தலையுலர்த்திக் கொண்டிருந்தாள்:
மழைக்கால மரக்கீற்று
வெளிச்சத்துளிகளை உதிர்ப்பதுபோல்
வெண்சரடுக் கூந்தலிலிருந்து ஈரம்
மணிமணியாய் உதிர்ந்து கொண்டிருந்தது.
சற்றைக்கெல்லாம்,
கிளைத்துப் படர்ந்த
நரைமயிர்களினூடே மெதுமெதுவாய்
ஊடுருவிக் கொண்டிருந்தது
சிறு வெளிச்சக் கீற்று.
ஆஹா,
சூர்யோதயத்தின் கீழ்
தென்னைகள்தான் எவ்வளவு அழகு.