நரோபா

திருமிகு. பரிசுத்தம்

நரோபா

Thirumigu Parisuttam

ஒவ்வொரு முறையும் இது இப்படிதான் நிகழ்கிறது. எப்போது வரிசையில் நின்றாலும், எங்கிருந்தோ வரும் நபர் அவருக்கு முன் உரிமையுடன் வந்து நிற்பார்.

பதவி உயர்வு கிடைக்காததற்கும், கார் வாங்காததற்கும், மனைவியுடன் சேர்ந்து மாமனாரின் சொத்துக்கு மல்லுக்கு நிற்காததற்கும் என்ன காரணமிருக்க முடியும் என ஆராய்ந்து பார்த்ததில் அவருக்கு ‘வெல்லும் விசை’ இல்லை எனக் கண்டறிந்து சொன்னார் உளவியல் நிபுணர். ஆகவே ‘வெல்லும் விசை பெருக்கி ஆலோசகர்’ திருமிகு. பரிசுத்தத்தை அவரது அலுவலகத்தில் சந்திக்க வந்தார்கள்.

திருமிகு. பரிசுத்தம் எழுதிய “வெறுப்பெனும் ஏணியில் ஏறி வெற்றிக்கனியை ருசி” எனும் புத்தகம் மாண்டரின், பைசாசிகம், ப்ராக்ருதம், பாலி, மைதிலி, சமஸ்க்ருதம், போஜ்புரி, உருது உட்பட 82 உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ட்யூஷனுக்கு விட வேண்டும் எனக் கோரிய பதின்ம வயது பெண்ணையும் அவள் தந்தையையும் கோரிக்கையின் நியாயத்தின் பொருட்டு வரிசையில் அவருக்கு முன் அமர இடமளித்தார். பின்னர் அவர்களுடன் ஒட்டிக்கொண்டு வந்த, சட்டைக்கு பொருந்தாத நிறத்தில் டை கட்டியிருந்தவரையும் அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பதில் அவர் மனைவிக்கு வருத்தம். “இத நிறுத்தத்தானே வந்திருக்கோம்” என முணுமுணுத்தாள்.

ஆனால், நொடிக்கு மூணு முறை செருமிக்கொண்டிருந்த அந்த முதியவர் அவர்கள் இருந்த நாற்காலிக்கு அருகே வந்தபோது அவள் அத்தனை கடுமை காட்டியிருக்க வேண்டிய தேவையில்லை. “இவருக்கு சுகர்… மயக்கம் வந்துடும்,” என்றாள் அவரைக் காண்பித்து. முதியவர் சற்று நேரம் செருமிவிட்டு வரிசையின் கடைசிக்குச் சென்றார்.

திருமிகு. பரிசுத்தம் அவர்களின் அறைக்குள் நுழைந்ததும் ஒரு புராதன நெடி நாசியில் நுழைந்தது.  திருமிகு. பரிசுத்தம் கார்ல் மார்க்ஸ், மாஜினி, முசோலினி, ஹிட்லர், புஷ், ஒபாமா, செங்கிஸ்கான், ஒசாமா மற்றும் நான்கைந்து அடையாளம் தெரியாத கனவான்கள் உட்பட பலருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சுவற்றை அலங்கரித்தன. பனிமலையில் வைகிங் உடையில் ஒரு மாமூத்தின் தலை மீது அவரும் அவருடைய சகாவும் கால் வைத்தபடி நின்றிருந்த புகைப்படம் அவருடைய நாற்காலிக்கு நேர் பின்னே மாட்டப்பட்டிருந்தது. அப்பழுக்கற்ற வெள்ளுடை அணிந்திருந்த திருமிகு. பரிசுத்தம், தனது கண்ணாடியை மூக்கின் மீது விரலால் தள்ளிவிட்டுவிட்டு, அவரது கோப்பை ஆராய்ந்து நோக்கினார். அவரது பெயரின் பொருட்டு வேறு பலரும் குழம்பியது போல், திருமிகு. பரிசுத்தமும் குழம்பியிருக்க வேண்டும்.

“இந்துவா? முசல்மானா?’

“பவுத்தன்”

“ரொம்ப வசதி… குறைய ஒப்ஷன்ஸ் உண்டு” என்றார் தனது டைரியில் குறித்தபடி.

“கிரிக்கெட் பாப்பீகளா?”

“பாப்பேன்”

“ஆராக்கும் பிடிச்ச பிளேயர்?”

“இன்சமாமும் டிசில்வாவும்”

சற்றுநேரம் யோசித்த பின்னர் தனது கட்டை மீசையை நீவியபடி “எந்த சினிமா நடிகர பிடிக்கும்? ரஜினியா கமலா? இல்ல எம்ஜிஆர், சிவாஜி, விஜய், அஜித்… இப்புடி யார வேணாலும் சொல்லலாம்” என்றார்.

“மார்கன் ஃப்ரீமேன்”

மெல்ல டைரியிலிருந்து தலை தூக்கி கண்ணாடிக்கு மேலிருந்து நோக்கினார். அவர் மனைவியிடம் திரும்பி,

“உங்களுக்குள்ள சண்ட ஏதும் உண்டா?”

“நான் போடுவேன், ஆனா அவர் எப்போதும் போட்டதில்ல… நகந்து போயிடவும் மாட்டார்… முழுசா திட்டுறத பொறுமையா கேட்டுட்டுதான் நகர்வார்” என்றாள்.

“வயசு பருவத்துல ஏதும் காதல் தோல்வி, விரக்தி, கோபம்? ஏதுமுண்டா?”

“அப்போ நான் அனுமார் உபாசகன்”

“அப்ப இந்த கல்யாணத்த பண்ணதுக்காக அப்பன் மேல கோபமுண்டோ?”

“இல்ல. அவரு நல்லதுக்குத்தான செய்வார்”

“ஆபீஸ்ல குற ஏதும் உண்டோ? மேலதிகாரியோட தொந்தரவு… சகாக்களோட பிணக்கம் ஏதும்?”

“நான் உண்டு என் வேலையுண்டுன்னு இருப்பேன் சார்”

“பேஸ்புக்ல உண்டோ?”

“இருக்கேன்”

முகம் பிரகாசமானது.

“என்ன செய்வீங்க?”

“தினமும் பூ படம், இல்லைன்னா அழகான குழந்தைங்க படம் போட்ட குட் மார்னிங், குட் நைட் மெசேஜ் போடுறதோட சரி”

திருமிகு. பரிசுத்தத்தின் முகத்தில் எரிச்சலின் ரேகை படர்ந்தது.

“சார் உங்க வண்டிய வேகமா இடிச்சிட்டு, இண்டிகேட்டர ஒடச்சிட்டு, இல்லன்னா கண்ணாடிய ஒடச்சிட்டு போறவங்க கிட்ட சண்ட போட்டதில்லையா?’ என்றார் சற்றே வேகமாக.

“இல்ல சார்… நான் நடந்துதான் போவேன்… நடந்துதான் வருவேன்”

“சில்லற தராம போகும்போது, பஸ்ல இடிக்கும்போதுகூட கடுப்பானதில்லையா?” அவருடைய குரல் மேலும் உயர்ந்தது. முகம் சிவந்து வியர்க்க எழுந்து நின்றார்.

“இல்லையே சார்… பாவம் அவுங்களுக்கு என்ன கஷ்டமோ”

வேகமாக எழுந்து அவரது சட்டையை உலுக்கியபடி, “எழவெடுத்தவனே, உனக்கு எது மேலையும் வெறுப்பே இல்லையா?”

அவரது மனைவியின் உடல் நடுங்க துவங்கியது.

“இல்லையே சார்” என்றார் பாவமாக.

அந்நொடியில் அறையிலிருந்த செவ்வொளி மறைந்து எங்கும் நீல நிறம் சூழ்ந்தது. திருமிகு. பரிசுத்தம் சட்டென ஒரு அழகிய பெண்ணாக உருமாறினார். “ஆதிமூலமே பரம சோதியே, உலகிற்கெல்லாம் காரணப்பொருளாய் இருப்பவனே… தீர்ந்தது எமது சாபம்,” என்று கூறிவிட்டு சாளரத்தின் வழியே வானத்தில் பறந்து கொண்டிருந்தவளை நோக்கியபடி திகைத்து அமர்ந்திருந்தார் அவர்.

934

நரோபா

 வரிசை நெடுக கூட்டமோ கூட்டம்.

வாயில் கதவு ஒரு தொலைதூர கருந்துளை என  எங்கோ தெரிந்தது.

ரொம்ப காலமாக நின்று அலுத்துவிட்டது.

வரிசையில் கடைசியாக வந்து சேர்ந்த எனக்குப்பின் முன்னிருப்பது போல் பெருங்கூட்டம் சேர்ந்துவிட்டது.

விட்டுவரவும் மனமில்லை.

வியர்வை வழியும் கழுத்தில் பவுடர் பொதிந்த கைக்குட்டையைச் சுற்றியிருந்தார் முன்னாலிருப்பவர்.

பேண்ட் பாக்கெட்டில் கையை நுழைத்து நெடுநேரமாகத் துழாவியபடி இருந்தார் பின்னாலிருப்பவர்.

யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

தொலைவில் துவங்கிய பரபரப்பு அலையாக என்னை வந்தடைந்தது.

தாழ் திறக்கப்பட்டுவிட்டது.

கதவு கொஞ்சம் கொஞ்சமாக எங்களை உள்ளிழுத்துக் கொண்டது.

“தகுதியுடையவர்கள் இவ்வழி,” என வலப்பக்கம் ஒரு பாதை திரும்பியது.

தயக்கமே இன்றி திரும்பினேன்.

“தனித்துவமானவர்கள் இவ்வழி,” என மற்றொரு பாதை பிரிந்தது.

ஐயமே இல்லை. அதுவே என் வழி.

“சிறப்புடையவர்கள் இவ்வழி,” என திறந்தது மற்றொரு பாதை.

அவ்வழியில் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை எவரையும் காணவில்லை நான்.

முன்னவரின் பவுடர் நெடி மட்டும் அங்கே சுற்றிக் கொண்டிருந்தது.

நெடுந்தூரப் பாதை மற்றுமொரு பிரிவில் சென்று முட்டியது – “தன்னம்பிக்கை கொண்டவர்கள் இவ்வழி” என்றது.

நானறிவேன் என்னம்பிக்கையை என பீடு நடை போட்டேன்.

குறுகியும் இருண்டும் சுழன்றும் குளிர்ந்தும் சென்றது அப்பாதை.

தொலைவிழியாக தெரிந்த ஒளி மெல்ல கீற்றாக மாறியது.

பாதையின் முடிவில் வானுயரத் தெரிந்த வெள்ளை மதில் சுவர் ஓரமாக பலரும் அமர்ந்திருந்தார்கள்.

சுருட்டு பிடித்தப்படி திரும்பிய அவன், “இதோ வந்துட்டான்யா 934… சவுத்த மூதி எம்புட்டு தடவதான் திரும்பி வருவானோ,” என்றான்.

மலங்க மலங்க விழித்தபடி நானும் அந்த மதில் சுவரைப் பார்த்தப்படி குந்தி அமர்ந்தேன்.

 

ஒளிப்பட உதவி – Ripley Auctions

எதற்காக எழுதுகிறேன் – அறிமுகம்

நரோபா

yetharkkaha-228x228

 

அண்மையில், சந்தியா வெளியீடாக வந்துள்ள “எதற்காக எழுதுகிறேன்” என்ற சிறு நூலை வாசிக்க நேர்ந்தது. தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சி,சு,செல்லப்பா, க,நா.சு, ந.பிச்சமூர்த்தி, கு.அழகிரிசாமி, லாசரா, ஆர்.ஷண்முகசுந்தரம் உட்பட அக்காலகட்டத்து எழுத்தாளர்கள் பலரும் இந்த கேள்வியை எதிர்கொண்டு எழுதி (பேசி) இருக்கிறார்கள். அன்றைய காலத்தில் பிரபலமாக இருந்த தொடர்கதை எழுத்தாளர் ஆர்.வியின் கட்டுரை கூட இடம் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு விதம், ஒவ்வொரு தொனி.

எனக்கே எனக்காக எழுதுவதைப்பற்றி என்ன சொல்ல முடியும்? விஸ்தாரமாக சொல்ல என்ன இருக்கிறது? எனக்கே எனக்காக எழுதவேண்டும் போலிருக்கிறது எழுதுகிறேன். அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல் செய்கிற இன்பம் அதிலிருக்கிறது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப்போதல், வேதனை- எல்லாம் அதில் இருக்கின்றன. இன்னும் உள்ளபடி சொல்ல வேண்டும் என்றால் பிறர் மனைவியை காதலிக்கிற இன்பம், ஏக்கம், நிறைவு – எல்லாம் அதில் இருக்கின்றன.,“ என்று எழுத்து அளிக்கும் கிளர்ச்சியை, அதனால் தனக்கு கிடைக்கும் இன்பத்தை, அந்த நிலையை மீண்டும் மீண்டும் அடைந்து நிலைத்திருக்கும் வேட்கையை எழுதுகிறார் தி. ஜானகிராமன்..

ஜெயகாந்தன் அவருக்கே உரிய முறையில் தனது தரப்பை வலுவாக வைக்கிறார். எழுத்தாளன் தனக்குள் சுருண்டுகொள்ளும் குகைவாசி அல்ல என்று அவனை இழுத்து கொண்டுவந்து நிறுத்துகிறார்-

எழுத்தாளன் சோம்பேறியோ, பொறுப்புக்களற்றவனோ அல்ல. அவன் உலகத்து இன்பங்களை, அல்லது குறைந்தபட்ச வசதிகளை அனுபவித்துக்கொண்டு தனக்குதானே, தன் மன அரிப்புக்காக வாழும் மனமைதுனக்காரன் அல்ல.

அரசியல்வாதியும், விஞ்ஞானியும், கலைஞனும் இந்த உலகத்தை நிர்ணயிக்கிறார்கள். இதன் தன்மையை மாற்றியமைத்து வளர்க்கிறார்கள்.

அவர்களது இந்த போராட்டத்தில் நான் எனது கடமையைச் செய்கிறேன். இதை மறுத்தால் நான் வாழும் காலத்திற்கும், எனது உடன் பிறந்தோர்க்கும் நான் துரோகம் செய்தவனானேன்.

ஆர்விக்கு வேறு கவலைகள் இருக்கின்றன. “எழுத்தைக்கொண்டு என்னவும் செய்யலாம். “இன்னும் நேரில் திட்ட முடியாத ஆட்களை, எஜமானர்களை, எதிரிகளை பெயரை மாற்றிபோட்டு இஷ்டப்படி தீர்த்து கட்டுகிறபோது ஏற்படுகிற இன்பத்துக்குப் பெயர் எதாவது இருந்தாள் அது என்ன? அதிலும் ஆத்மதிருப்தி இருக்கிறது என்று சொல்ல முடியாதோ?

அழகிரிசாமி, க.நா.சு, பிச்சமூர்த்தி ஆகிய மூவரின் கருத்துக்களும் ஆன்மீக தளத்தில் விரிகின்றன.

ஆகவே, எழுதுவதால் நான் மனிதனாக இருக்கவும், நான் மனிதனாக வாழவும், மனிதனாக வளரவும் முடிகிற காரணத்தால் எழுதுகிறேன் ..எழுத்துப் பணியின் உச்ச நிலையில், நான் மற்றச் சகல உயிர் வர்க்கங்களுனுடனும் ஒன்று கலந்து ஐக்கியமாகிவிடுவதால் நான் எனக்கு செய்யும் மனித சேவை, மண்ணுயிர் சேவையாகவும் இருக்கிறது. நான் உயர்ந்தால், உலகமும் உயர முடிகிறது. இப்படிப்பட்ட காரியத்தை கலைகளினாலேயே சாதிக்க முடியும். நான் பயின்ற கலை எழுத்து, அதனால் எழுதுகிறேன்,” அழகிரிசாமி எழுத்தின் வழியாக தான் அடையும் இரண்டற்ற நிலையை பேசுகிறார்

ஈடுபாடில்லாமல் கண்டு, கண்டதைத் திரும்பச் சொல்லி, பிறரையும் அதேபோல காண செய்வதுதான் கலையின் லட்சியம். காண்பதிலும், கண்டதை திரும்ப சொல்வதிலும் ஆனந்தம் காண்பதே இலக்கிய ஆசிரியர்களின் லட்சியம். இந்த ஆனந்தத்துக்காகத்தான் நான் எழுதுகிறேன்,” என்று க.நா.சுவும் ஏறத்தாழ இதே போன்ற ஆன்மீக தளத்தில் நின்று தான் தன் எழுத்தை பற்றி மதிப்பிடுகிறார்.

இப்போது எதற்காக எழுதுகிறேன்? சுத்தமாக பணத்திற்காக எழுதுகிறேன் என்று சொல்லிக்கொள்வதில் நான் வெட்கம் கொள்ளவில்லை!..ஆம் வீடுகட்டும் என்ஜினீயர் மாதிரி பணம் கொடுத்தால் – நாவலோ, சரித்திரமோ – தயார் செய்து கொடுக்க வேண்டியதுதானே? …வீட்டிலுள்ள உயிர்கள் – நம்மை நம்பி இருக்கின்ற ஜீவன்கள் சோர்ந்து கிடக்கையில், ‘என் கொள்கை, என் லட்சியம்’ என்று அலட்டிகொள்வதில் என்ன பிரயோஜனம்?” என்று ஆர்.ஷண்முகசுந்தரம் எழுதும் போது மனம் கனக்கிறது.

ஆனால் பிச்சமூர்த்தி அதை உறுதியாக மறுக்கிறார். “உண்மையில் கலைஞனும் விதையைபோல. பணமும் புகழும் பிரச்சாரமும் கலைக்கு நேரடியாக காரணங்கள் அல்ல. புஷ்பத்தை சந்தையில் விற்கலாம், ஆனால் வியாபாரம் நடத்துவதற்காக மல்லிகை மலர்வதாக நினைத்துவிட முடியாது… சிருஷ்டி இயற்கையின் லீலை. ஆன்மீக விளையாட்டு.

இதில் எது சரி? எது தவறு? எனக்கு எல்லாமே சரி என்று தான் தோன்றியது. .

அண்மையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கவிஞர் இசை ‘ஏன் எழுதுகிறேன்’ என்றொரு கட்டுரையை அந்திமழை இதழில் எழுதி இருக்கிறார். ஆர்வெல், ஹெமிங்க்வே, புக்கோவ்ஸ்கி போன்ற எழுத்தாளர்கள் எழுத்தை பற்றியும் ஏன் எழுதுகிறேன் என்பதை பற்றியும் விளம்பி இருக்கிறார்கள்.

இந்த கேள்வி எனக்கு முக்கியமானதாக பட்டது. காலந்தோறும் எழுப்பப்பட வேண்டிய கேள்வியாகவும் பட்டது. எழுதுபவரே வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு பதில்களை கண்டடையும் சாத்தியம் கொண்டதாகவும் இருக்கிறது. இன்றைய இணைய யுகத்தில் கவனம் சிதையாமல் எழுதுவது ஒரு சவாலாக இருக்கிறது. அன்றைய சூழ்நிலையுடன் ஒப்பிடும் போது, பணம் இன்று எழுத அத்தனை முக்கிய காரணி இல்லை என்றே தோன்றுகிறது. இணையத்தின் எழுச்சி வேறுவகையில் அதிகம் எழுதி குவிக்கவும் சாத்தியம் உள்ள காலகட்டமும் இதுவே.

எழுதும் அந்த நேரத்தில் வேறு எதை எதையோ செய்திருக்கலாம்.  உண்மையில் ஒருவன் ஏன் எழுத வேண்டும்? நம்முள் எழுத்தாக வெளிப்படத் துடித்து நம்மை உந்தித் தள்ளிக் கொண்டிருக்கும் அது என்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விடை இருக்கலாம். எல்லா சமயங்களிலும், எல்லோருக்கும்  எழுத்து ஒரு கொண்டாட்டமாக இருப்பதில்லை. பெரும் எழுத்தாளர்கள், வளரும் எழுத்தாளர்கள், இளம் எழுத்தாளர்கள், எழுத துவங்கியவர்கள் என எல்லோரையும் நோக்கி இக்கேள்வியை கேட்க வேண்டும் என தோன்றியது. அந்தரங்கமாக ஒரு சின்ன கடைதலை இக்கேள்வி நிகழ்த்தி தனக்கான விடையை அவர்கள் கண்டுகொண்டு நமக்களிக்கும்போது அது நமது விடையாகவும் இருக்க கூடும். திஜாவின், பிச்சமூர்த்தியின், அழகிரிசாமியின் விடை என்னுடையதும்தான். புனைவாளர்கள், கட்டுரையாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் என பல தரப்பட்டவர்களை நோக்கி இக்கேள்வியை கேட்க விரும்பினேன். தமிழில் வெகு அரிதாக வாசிக்கப்படும் அறிவியல் கட்டுரையை இத்தனை மெனக்கெட்டு ஏன் எழுத வேண்டும்?

பதாகை சார்பாக நாங்கள் அறிந்த பலரிடமும் இக்கேள்வியை வைத்தோம். பெரும்பாலும் எவரும் மறுக்கவில்லை. மேலும் பலரையும் கேட்பதாக இருக்கிறோம். இதை வாசிக்கும் வாசகர்கள் எழுத்தாளர்கள் அவசியம் எழுத வேண்டுமாய் கேட்டுகொள்கிறோம். இந்த இதழ் துவங்கி ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து, எழுத்தாளரின் சிறிய அறிமுகத்துடன் இனைந்து,  பல்வேறு எழுத்தாளர்களின் பார்வை வெளிவரும் என நம்புகிறேன்.

Picture courtesy: சந்தியா பதிப்பகம்

ஞானக்கூத்தன்: காலத்தின் குரல் – 2

நரோபா

முந்தைய பகுதியின் தொடர்ச்சி..

FRONT_PAGE_01_CORRCTION_02_for web

யவனிகா ஸ்ரீராம் ஞானகூத்தனை பற்றிய அவரது கட்டுரையில், 80களிலும் 90களிலும் மிக அதிகமாக விமர்சிக்கப்பட்டவரும், அவற்றுக்கு கவிதைகள் வழியாக எதிர்வினையாற்றியவரும் ஞானக்கூத்தன்தான் என குறிப்பிடுகிறார். அதற்கான காரணங்களை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது.

“நான் காப்பியங்களில் நம்பிக்கை கொண்ட கவிஞன்” என வெளிப்படையாக அறிவித்துகொள்ளும் அவர் “கவிதைன்னு வரும்போது அப்போ திராவிட இயக்கம் உதிக்குது. திராவிட இயக்கத்தின் கொள்கைகள் கிட்டத்தட்ட பிரிட்டீஷ் கொள்கையை ஒட்டி இருந்தன. நம்ம கலை இலக்கியங்கள் மேல நமக்கு மதிப்பு குன்றச் செய்யறது, அவற்றால நமக்குப் பிரயோஜனம் இல்லை, நமக்கு அவமானமே தவிர வேறொண்ணுமில்ல அப்படிங்கற கருத்த அறிமுகம் செய்தது” எனவும், “அதுக்கு தமிழ்லயெல்லாம் ஆர்வம் கிடையாது. திமுக தமிழப் பத்தி பேசுச்சே தவிர தமிழுக்கு உருப்படியான காரியம் எதுவும் செய்தது கிடையாது” எனவும் திராவிட இயக்கங்களை பற்றி தீவிரமாக விமர்சிக்கிறார் (காலச்சுவடு நேர்காணல்). (more…)

ஞானக்கூத்தன்- காலத்தின் குரல்

நரோபா

அன்பைத் தவிர வேறொரு செய்தி

விளம்பத் தகுந்ததாய் உலகிலே இல்லை

நீண்டதாய் எங்கும் செல்வதாய்

இருக்க வேண்டும் என் அன்பு

சக்கரம் பொருந்தி சுமையை

எல்லாப் பொழுதும் எதிர்பார்த்துக் கொண்டு.

– உபதேசம், ஞானக்கூத்தன்

ஞானக்கூத்தன் எனும் கவிஞர் எனக்கு பரிச்சயமானது என்னவோ அசோகமித்திரனின் ஒற்றன் நாவலின் வழியாகத்தான். எழுத்தாளர்கள் அவையில் ஞானக்கூத்தனின் ‘அம்மாவின் பொய்கள்’ கவிதையை தியாகராஜன் மேடையில் வாசிப்பார். பின்னர் அங்கு விக்டோரியா இயக்கிய நாடகத்திலும் அந்தக் கவிதை உணர்ச்சிகரமான ஒரு தருணத்தில் இடம்பெறும். அதில் ஒரு உணர்வுபூர்வமான மன்றாடல் இருக்கும். அம்மாவிடம், “வயதானவர்களுக்கு பொய் சொல்லும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உரியது என எண்ணினாயா?” எனக் கேட்பார்.

அவருடைய எனது பிள்ளைத்தமிழ் எனும் கட்டுரையில் இப்படி ஒரு வரி எழுதுகிறார்- “பௌராணிகச் சூழலில் வாழ்ந்ததால் நான் எதையும் நம்பினேன். தகுந்தவர் சொன்னால் போதும், நான் நம்புவேன். பகுத்தறியப்பட்டால் வீணாகிவிடும் அந்தக் கதைகள் ஏராளம்”. பொய்கள் வாழ்க்கையை எத்தனை எளிதாக்குகின்றன, அழகாக்குகின்றன. கொஞ்சம் இளைப்பாற அவகாசம் அளிக்கின்றன என எண்ணிக்கொண்டேன். அம்மாவின் பொய்கள் என்றென்றைக்கும் நம்மை பிள்ளைகளாகவே வைத்திருக்கின்றன. (more…)