கவிதையும் கேள்வியும்

தமிழ் கவிதை வடிவம்

றியாஸ் குரானா

பதாகை – தமிழில் நீண்ட கவிதைகளைப் பார்ப்பது அரிதாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக கதை சொல்லும் கவிதைகளைப் பார்க்க முடிவதில்லை. ஒரு காலத்தில் எல்லா கதைகளும் செய்யுள் வடிவில்தான் வந்திருக்கின்றன, இப்போது அப்படி ஒரு கவிதை எழுதப்பட வாய்ப்பே இல்லை போலிருக்கிறது. ஆங்கிலத்தில்கூட விக்ரம் சேத் மரபார்ந்த sonnet வடிவ கவிதைகளைக் கொண்டு கதை சொன்னார், சில ஆண்டுகளுக்கு முன்பு. இனி கதைகள் கவிதை வடிவில் சொல்லப்படும் சாத்தியமிருக்கிறதா? தற்போதைய தமிழ் அழகியலில் இதற்கும் இடமுண்டா?

றியாஸ் குரானா –ஒற்றைக் கேள்விபோல தோற்றமளிக்கும் பல கேள்விகளின் கூட்டிணைவான கேள்வியே இது. ஆயினும் இந்தக் கேள்வி கடந்து வந்த தமிழின் குறித்த ஒரு இலக்கிய மனநிலையை கவனப்படுத்துகிறது. வரலாற்றின் ஏதோவொரு கட்டத்தில் தமிழ் இலக்கியம் தன்னை இயக்கத்தில் வைத்திருந்த கவிதை மனம் என்ற ஒரு முறைமையை பற்றி, அதைக் கடந்து வெகுதாரம் கடந்துவந்த நிலையில் சிந்தித்துப்பார்க்க தூண்டுகிறது. இப்படியான தூண்டுதல்களைத் தரும் கேள்விகளை உருவாக்கி அதற்கு பதில் சொல்ல முயற்சிக்காது போனால், நமது கவிதையை எப்படி வழிநடாத்திச் செல்லுவது என்ற சிக்கலில் விழுந்துவிட வாய்ப்புண்டு. கவிதை குறித்து விவாதிக்க வேண்டிய தேவையை இந்தக் கேள்வி உருவாக்கிவிடுகிறது. இந்தக் கேள்வி தனிப்பட்ட ஒருவரின் தற்செயலான ஒரு கேள்வி என்று எடுத்துக்கொள்ளும் நிலையைக் கடந்திருக்கிறது. அனேகமாக இன்றுள்ள அனைவரும் பெருகியிருக்கும் நமது கவிதைகளிடத்திலிருந்து தப்பிக்கவே விருமபுகின்றனர். அவ்வளவு சலிப்பை நமது இன்றைய நவீன கவிதைகள் ஏற்படுத்தியிருக்கின்றன. (more…)

கற்பனையும் மொழியும்

றியாஸ் குரானா

பதாகை – கற்பனைக்கும் மொழிக்கும் உள்ள உறவின் இயல்பு என்ன?

றியாஸ் குரானா – மேலோட்டமாகப் பார்த்தால் இது சாதாரணமான கேள்விபோலதான் தோன்றும். ஆனால், உண்மையில் இது சற்றுக்கடினமான கேள்வியே. இந்தக் கேள்வியை பொருட்படுத்தி பதில் சொல்லுவதெனில், முதலில் ஒரு விசயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். கற்பனைக்கும் மொழிக்குமிடையில் உறவு இருக்கிறது என்பதுதான் அந்த விசயம். இப்படி ஏற்றுக்கொள்ளுவது என்னுடைய புரிதல் நிலைப்பாட்டில் பெரும் மாற்றங்களை கோரும் ஒன்று. ஆனால், பொதுவாக மொழிக்கும் கற்பனைக்கும் ஒரு உறவு உண்டென்று நம்பப்படுகிறது. அந்த உறவின் இயல்பு எப்படியானது என்பதில்தான், பல வகையான கருத்துக்கள் இருக்கிறது என்றும் நம்பப்படுகிறது. அடிப்படையில் இது குறித்து வேறு கருத்துக்ளைக் கொண்டவன் நான். ஆக, இந்தக் கேள்விக்கான பதிலை நான் எப்படி சொல்ல வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டியுள்ளது.

மொழி என்பதே ஒரு கற்பனைதான் எனச் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்படிச் சொல்லுவதால், அடிப்படையில் மொழிக்கும் கற்பனைக்குமான உறவை மறுக்கிறேன். அப்படியானால், அதற்கிடையிலான உறவு குறித்து பேச எதுவுமில்லை. கற்பனையால் உற்பத்தி செய்யப்பட்ட மொழியே, மீண்டும் கற்பனையைப் பெருக்குவதற்கு தேவையான, மிக ஆற்றல் மிக்க உள்ளடக்கங்களையும், இயங்கு முறையையும் கொண்டிருப்பதால், இரண்டாம் நிலையில் மொழிக்கும் கற்பனைக்குமான உறவு உருவாகிவிடுகிறது. இந்த இடத்தில்- மொழிக்கும் கற்பனைக்குமான உறவின் இயல்பு என்ன என்பதை கற்பனை செய்யவும், உருவாக்கவும் முடிந்துவிடுகிறது என்பதும் ஒரு மர்மமான விசயம்தான். (more…)

அதிகாலை ஒரு வெள்ளைக் கதவு

றியாஸ் குரானா

 

வடிவமைத்த திரைச் சீலையை
ஆற்றங்கரையில் விட்டு நெடுநதூரம் வந்த நான்,
பின்னர் திரும்பிப் பார்க்கிறேன்
பயப்பட ஏதுமில்லை
பிரச்சினையை கடந்துவிட்டேன்
எனினும், அதிக விலைகொடுக்க வேண்டியிருந்தது
எவைகளை இழக்க வேண்டியிருந்ததோ
அந்நிலையில்தான் ஏற்கனவே இருந்தேன்
முழு நேரமும்,
புல்வெளியில் அலைய வேண்டியிருந்தது
கைகளில் நிரம்பியிருந்து காட்டுப் பூக்கள்
இறந்த ஏதோவொன்றை மறைக்கிறது
எல்லோரும் திரைச்சீலையிலுள்ள
அழகிய வேலைப்பாடுகளை காட்சியாகப் பார்க்கின்றனர்
நான் கிடந்து போராட வேண்டிவந்தது
கட்டாயம் இங்கிருந்து விலகிப்போய்
திரும்பிவந்து இவர்கள் பார்க்க வேண்டும்
திரைச் சீலையில் சுருக்கம் விழுந்திருப்பதை
யாரும் ஒப்புக்கொள்ளவில்லை
அதிகம் பேர் அதன் கரையில்தான்
வாழ்வைத் தொடருகிறார்கள்
நானோ, சிறிது நேரமே தங்குகிறேன்
திரைச் சீலை மாட்டப்பட்ட
அந்த வெள்ளைக் கதவிற்குப் பின்னால்
எனது மகனின் கனமான கைப்பை மறைந்திருக்கிறது
வட்டமான பிரகாசிக்கும் கைப்பையை
அவன் இன்னும் தொட்டுத் தூக்கியதில்லை
ராணி தனது படுக்கையில்
தனித்து உறங்குகிறாள்
ம்…திறக்க வேண்டாம்
திரைச் சீலையை மகன் திறந்துவிட்டான்
வைகறை மெதுவாக வெளிப்பட்டது
இரவு என்பது, வெள்ளைக் கதவின் மீது
நான் போட்ட திரைச் சீலை
கவிதையில் தேர்ந்த உளவாளி எனில்,
எப்படித் தயாரித்தேன் என்பதன் அத்தாட்சிகளை
நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.

கேள்வி: “கவிதைக்கும் அதன் வாசகனுக்கும் இடைப்பட்ட உறவு எத்தகையது என்று கருதுகிறீர்கள்?”

கவிதையும் வாசக மனநிலையும்

றியாஸ் குரானா

கவிதைக்கும் வாசகனுக்கும் இடையிலான உறவு எப்படிப்பட்டதென்று கருதுகிறீர்கள்?

கவிதைக்கும் வாசகருக்குமிடையிலான உறவு என்பது எப்போதும் முரண்பாடானதாகவே இருக்க வேண்டும் என்று விரும்புபவன் நான். வாசகன், கவிதைப் பிரதியோடு போராடி முடிவற்ற ஒரு வினையை செயலுக்கு கொண்டுவர வேண்டுமென்றும் விரும்புபவன்.

இலக்கியப் பிரதிகள் தம்மிடம் ஏதோவொரு அர்த்தத்தை கொண்டிருக்கிறது என நம்பும் ஒவ்வொருவரும் முதலில் வாசகராக மாறிவிடுகிறார். அடுத்ததுதான் இலக்கியப் பிரதியோடு எப்படி வினையாற்றுவதென்ற விசயமாகும். இலக்கியப் பிரதிகள் அதனதன் இயல்பிலேயே பெரும்பாலும் மறைமுகமாக எதையோ பேசுவதாகவே இருக்கும். அதிலும் கவிதைப் பிரதி கொஞ்சம் ஆழமாக இதை செய்துவிடும். அப்படிச் செய்வதினூடாகத்தான் தன்னை அது கவிதைப் பிரதியாக தக்கவைத்துக்கொள்கிறது. இலகுபடுத்தி இதை விபரிப்பதென்றால், சூழலில் சாதாரணமானது என கருதப்படும் ஒரு விசயத்தை நாம் இதுவரை சந்தித்திராத அசாதாரணமான ஒன்றாக மாற்றி உருப்பெறச் செய்வதுதான் கவிதைப் பிரதி. இது மிக அடிப்படையான ஒன்று. இதை விரிவாக பின்னர் சந்தர்ப்பம் கிடைத்தால் பேசுவோம். யதார்த்தத்தை பிரதிபலிக்கின்ற ஒன்றாக கவிதைப் பிரதி நெடுங்காலமாக இங்கு பயிலப்படுகிறது. அதன் மீது பெரும் விமர்சனம் எனக்குண்டு. (more…)