பதாகை – தமிழில் நீண்ட கவிதைகளைப் பார்ப்பது அரிதாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக கதை சொல்லும் கவிதைகளைப் பார்க்க முடிவதில்லை. ஒரு காலத்தில் எல்லா கதைகளும் செய்யுள் வடிவில்தான் வந்திருக்கின்றன, இப்போது அப்படி ஒரு கவிதை எழுதப்பட வாய்ப்பே இல்லை போலிருக்கிறது. ஆங்கிலத்தில்கூட விக்ரம் சேத் மரபார்ந்த sonnet வடிவ கவிதைகளைக் கொண்டு கதை சொன்னார், சில ஆண்டுகளுக்கு முன்பு. இனி கதைகள் கவிதை வடிவில் சொல்லப்படும் சாத்தியமிருக்கிறதா? தற்போதைய தமிழ் அழகியலில் இதற்கும் இடமுண்டா?
றியாஸ் குரானா –ஒற்றைக் கேள்விபோல தோற்றமளிக்கும் பல கேள்விகளின் கூட்டிணைவான கேள்வியே இது. ஆயினும் இந்தக் கேள்வி கடந்து வந்த தமிழின் குறித்த ஒரு இலக்கிய மனநிலையை கவனப்படுத்துகிறது. வரலாற்றின் ஏதோவொரு கட்டத்தில் தமிழ் இலக்கியம் தன்னை இயக்கத்தில் வைத்திருந்த கவிதை மனம் என்ற ஒரு முறைமையை பற்றி, அதைக் கடந்து வெகுதாரம் கடந்துவந்த நிலையில் சிந்தித்துப்பார்க்க தூண்டுகிறது. இப்படியான தூண்டுதல்களைத் தரும் கேள்விகளை உருவாக்கி அதற்கு பதில் சொல்ல முயற்சிக்காது போனால், நமது கவிதையை எப்படி வழிநடாத்திச் செல்லுவது என்ற சிக்கலில் விழுந்துவிட வாய்ப்புண்டு. கவிதை குறித்து விவாதிக்க வேண்டிய தேவையை இந்தக் கேள்வி உருவாக்கிவிடுகிறது. இந்தக் கேள்வி தனிப்பட்ட ஒருவரின் தற்செயலான ஒரு கேள்வி என்று எடுத்துக்கொள்ளும் நிலையைக் கடந்திருக்கிறது. அனேகமாக இன்றுள்ள அனைவரும் பெருகியிருக்கும் நமது கவிதைகளிடத்திலிருந்து தப்பிக்கவே விருமபுகின்றனர். அவ்வளவு சலிப்பை நமது இன்றைய நவீன கவிதைகள் ஏற்படுத்தியிருக்கின்றன. (more…)