கவிதை

சான்றோர்

– செந்தில் நாதன் –

leighton_frederic_-_acme_and_septimius_-_c-_1868

தங்கள் தவறுகளை மறந்த வழுக்கைத் தலையர்கள்,
மெத்தப் படித்த, மரியாதைக்குரிய, வயதான வழுக்கைத் தலையர்கள்,
காதல் நோயால் பீடிக்கப்பட்டுப் 
படுக்கையில் புரண்ட இளைஞர்கள்
சவுந்தர்யத்தின் மடக்காதுகளுக்காக யாப்பமைத்த புகழுரை
வரிகளைத் திருத்தி உரை எழுதுகிறார்கள்.
இவர்கள் எல்லோரும் இங்குமங்கும் செல்வார்கள்;
எல்லோரும் புத்தகங்களுக்குள்ளேயே இருமுவார்கள்
எல்லோரும் வகுப்பறைக் கம்பளங்களைக் காலணிகளால் தேயச் செய்வார்கள்;
எல்லோரும் அடுத்தவர் நினைப்பதையே நினைப்பார்கள்;
எல்லோருக்கும் அடுத்தவருக்குத் தெரிந்தவனையே தெரிந்திருக்கும்.
கடவுளே, இவர்களது காட்டுலஸ்* இந்தப் பக்கமாய்க் கடந்தால்
என்ன தான் சொல்வார்கள் இவர்கள்?

The Scholars - W B Yeats

* காட்டுலஸ் – 2000 வருடங்களுக்கு முற்பட்ட ரோம் நகரக் கவிஞன். காதல் கவிதைகளுக்காகப் புகழ் பெற்றவன்.

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா

4′33″ ப்ளூஸ்

 
சுட்டுகளற்ற கவிதை
சுட்டுதலாகி
முற்றிடினும்
இடைவெளிகளின் வெண்ணொலி.
ஒளிப்பட உதவி – animalnewyork.com

ஒரு காகம் பல நம்பிக்கைகள் – மஜீஸ்

மஜீஸ்


இரவு கழித்து
தூங்கிய ஒர் பொழுதில்
நிர்வாணக் கனவுகளுக்கு
இடைஞ்சலாய்
கிணற்றடி வேலியில் தனித்திருந்த
நரை கலந்த ஓர் கிழட்டுக் காக்கை கத்தி
ஆடை களையாமலே
கனவு முடிந்தாயிற்று
 

காக்கைகளின் தொன்மையான
ஜீவியத்தில் இது வரவுச் செய்தியென்று
அதன் அழுகை வந்த திசை பார்த்து
பழைய கதையை
புதுமையாக சொல்லி முடித்தாள்
அம்மா
 

இனந்தெரியாதோரால்
இணங்காணப்பட்ட என் அப்பனும்
வெற்றிடம் நிரப்பிய விடயம் தெரியாமல்
எழுதிப்போட்ட வேலையும் வரப்போவதாக
ஆரூடம் சொன்னாள் அம்மா
 

பகல் கடத்தி
பவுடர் பூசிய சாயங்காலப் பொழுது
நிறத்தால் தனித்துவம் காட்டிய
அந்த காகம்
சொண்டுசொரியத்தான்
போயிருக்கனும் போல
 

மின்சாரக் கம்பியில்
அதன் இறுதி அத்தியாயம்
எழுதப்பட்டிருந்தது
கிணற்றடி வேலியில்
அதன் சாவை அது முன்னறிவிப்பு
செய்திருந்தது
 

பாவம் அம்மா
நாளையும் எனக்கு விரசமாய்
கனவுகள் வரலாம்
ஒன்றல்ல பல நூறு காக்கைகள்
கிணற்றடி வேலியில்
ஒன்று சேர்ந்து கத்தலாம்


ஒளிப்பட உதவி – palemaleirregulars

பாவனைகள்

 purple_play_dough

பர்ப்பிள் வண்ண களிமண்ணில்
ஒரு கோப்பை செய்கிறாள்.

நாவால் நக்கி சுத்தமாக்கப்பட்ட
ஐஸ்க்ரீம் டப்பாவிலிருந்து
பால் விட்டதும்,
கோப்பையில்
அப்பாவிற்கான காப்பி நிறைகிறது.

சற்றே கோணலென
நீண்டிருக்கும் விளிம்பின் ஓரத்தை
பிடித்துக் கொண்டு வந்து கொடுக்கிறாள்.

அகமலர்ச்சியோடு கோப்பையை வாங்கி
உறிஞ்சுகிறான்.
உடன் புரைக்கேறி விடுகிறதாம்.

அப்பாவின் செருமலும் இருமலும்
அவளை சிரிக்க வைக்கின்றன

கைப்பிடியை சரியாகப்
பிடித்துக் கொண்டு
கோப்பையை கவிழ்க்காமல்
செருமும் வித்தையை
அவனுக்கு செய்துக் காட்டுகிறாள்.

பாவனைகளற்ற உலகம் ஒன்று
அவர்களைச் சுற்றி பரவுகிறது.

pic courtesy: Mommypotamus

செல்பி – எஸ். சுரேஷ்

செல்பி  எடுத்துகொண்டிருந்த எங்களை பார்த்துவிட்டு

லங்கூர் குரங்கொன்று மரத்திலிருந்து கீழிறங்கி
“என்னையும் ஒரு செல்பி எடுங்கள்” என்றது

நான், மனைவி மற்றும் லங்கூர் உள்ள ஒரு செல்பி எடுத்தேன்

செல்பியை பார்த்துவிட்டு
“ஹ்ம்ம். இதுக்குதான் தனியா எடுத்துக்கணும்னு சொல்றது”
என்று பெருமூச்சு விட்டுவிட்டு
மரத்தில் மறுபடியும் ஏறியது