சிகந்தர்வாசி

காதலைச் சொன்னது

என்ன செய்வேன்? என் மோகம் தீர்வது எப்படி?
அந்த முத்தழகியை யார் என்னிடம் அழைத்து வருவார்கள்?

தாமரை போன்ற முக அழகை வரைந்தேன்
அதன் நறுமணத்தை என்னால் வரைய முடியவில்லை
உன் கள்ளூரும் உதடுகளை, அழகியே, நான் வரைந்தேன்
அதன் தீஞ்சுவையை என்னால் வரைய முடியவில்லை

வசீகரிப்பவளே! சொக்கும் உன் கண்களை வரைந்தேனே தவிர,
அவை மிரளுவதை என்னால் வரைய முடியவில்லை
உன் கழுத்தின் மென்கோடுகள் தெரிய வரைந்தேனே தவிர
அதில் எழும் குயிலோசையை என்னால் வரைய முடியவில்லை

இள மங்கையே! நம் கூடலை நாகபந்தமாய் வரைந்தேன்-
ஆனால் பரவசத்துடன் முவ்வகோபாலா வாடா,
என்று ரதிகேளிக்கைக்கு மீண்டும் அழைக்கும்
உன்னை என்னால் வரைய முடியவில்லை.

– தெலுங்கிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது – க்ஷேத்ரையா, 126)

நமக்கும் ஒரு காலம் வரும்

சிகந்தர்வாசி

ஏழு அல்லது எட்டு பேர்தான் இருப்பார்கள்
முன்பு மூன்று முறை
எல்லோரும் எதிர்பார்ப்புடன் வந்து
ஏமாந்து திரும்பினார்கள்

இம்முறை காலன் அறிவிக்காமல் வந்தான்

குளிர் கண்ணாடி பெட்டிக்குள் அவர் முகத்தை
உற்று பார்க்கும்போது என் முகம் தெரிந்தது

தன் மிருதுவான கைகளினால்
விட்டுச் சென்ற தடம் எல்லாம்
மெதுவாக அழிக்கத் துவங்குகிறது காலம்

 

image credit – Genetologic Research

ஒளியும் இருளும்

சிகந்தர்வாசி

ஆத்திரப்பட்ட தகப்பன் மனம் வருந்தி
தன மகளை அணைக்கும் மென்மையுடன்
சூரியன் மண்ணை அணைக்கும் தருணம்

பூங்காவில் எல்லோர் முகத்திலும் அன்றைய தினத்தைக்
கடந்துவிட்ட மகிழ்ச்சி, இனி இரவின் அமைதியை நோக்கி
புன்சிரிப்புடன் பயணம்

மங்கலான ஒலி எல்லா பொருட்களையும்
அழகாக மிளிரச் செய்கிறது
இறைவன் கடைக்கண்ணால் மிருதுவாக
மனிதனை நோக்குகிறான்

இலைகளில் ஊடுருவி ஓடிவரும் கதிர்கள்
திட்டுத்திட்டாக என் கைமேல் வந்தமர்கின்றன
வாழ்க்கையைப் போல் என் உடல்
ஒளியும் இருளும் கலந்ததாகிறது

விளையாடும் குழந்தைகளின் கூச்சல்கள்
கூட்டிற்கு திரும்பிவிட்ட பறவைகளின் பேச்சு
பூங்காவிற்கு வெளியே வாகனங்கள்
ஒலிகள் சூழ்ந்திருக்கும் மாலைப் பொழுதில்தான்
ஒலிகளற்ற அமைதி கிடைக்கிறது

 

image credit: Todd McKimmey’s Website

தீபாவளி

சிகந்தர்வாசி

பால்கனியில் நின்றுகொண்டு வானம்
வண்ணமயமாவதைப் பார்க்கிறேன்
சீராக ஒளிக்கோடு போட்டுச் செல்லும் ராக்கெட்
வெடித்து பல பாதைகள் தோன்றுகின்றன
கடந்த பாதையின் தடம் அழிகிறது
வண்ணமயமான வரலாறு சில நொடிகளில்
காணாமல் போகிறது
இன்னொரு பாதை தோன்ற, இன்னொரு ராக்கெட் வெடிக்க
வானமெங்கும் சல்ஃபர் பூக்கள்

நாம் விட்டுச்சென்ற தடங்கள் இன்னும் ஒளிர்கின்றனவா?
யார் மனதில்?
விண்மீன்களை மறைத்துப் பூக்கும் இந்த பூக்கள்
நம் கனவுகளா?

இரவை இருள் ஏன் கவ்வுகிறது?
மழைக்கு எதிராக இங்கொன்றும் அங்கொன்றும் என
வெடிகள் குரல் எழுப்புகின்றன
காற்றையும் மழையையும் எதிர்த்துக்கொண்டு
ராக்கெட் ஒன்று புறப்படுகிறது
இருளுக்கு எதிரான புரட்சி வண்ணங்களால்

வெடித்துச் சிதறிய பிறகு மறுபடியும் இருள்
மறுபடியும் வண்ணக்கோலம்
ஆகாயப் பரப்பில் மறையும் ஓவியங்களை
பலர் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள்

சீராக வண்ணகளற்று ஓடிக்கொண்டிருக்கும்
வாழ்க்கையில் அவ்வப்பொழுது தோன்றும்
இருளும் வெளிச்சமும்

சகுனம்

சிகந்தர்வாசி

அந்த ஒரு வாக்கியத்தில் பல கதவுகள் திறந்தன
ஒரு மாய உலகம் கண் முன் விரிய
நான் எங்கோ பறந்தேன்
அழகான மாளிகைகள், சுத்தமான சாலைகள்
விதவிதமான கார்கள், விமானங்கள்
மேகங்களை கிழித்து வானத்துக்கு ஒட்டடை அடிக்கும் கட்டிடங்கள்
முதல் எது முடிவு எது என்று தெரியாத நீர்வீழ்ச்சிகள்

“பையன் அமெரிக்கால இருக்கான்”

உடம்பு சற்று நடுங்கியது, வார்த்தைகள் வழுக்கின
பார்வையை எங்கு நிறுத்துவது என்று தெரியாமல் தவித்தேன்
அவன் என்ன கேட்டான் நான் என்ன சொன்னேன்?
அந்த நினைவு மூளையில் பதிவாகாமல் சறுக்கி எங்கோ சென்றுவிட்டது
சிரித்தேன், மறுபடியும் நடுங்கினேன், பேசும்போதே கனவு
கண்டுகொண்டிருந்தேன்

“சகுனம் சரியில்லையாம்”

அன்று மூடிய கதவின் ஒலி இன்னும் எதிரொலிக்கிறது
நேராக என்னிடம் முடிவைச் சொல்லமுடியாத ஒரு கோழை
சுமாராக இருந்தும் அழகனாய் நினைத்துக்கொள்ளும் அற்ப ஜீவி
புகைப்படம் பார்த்தபின்தானே வந்தான்? நிராகரிக்கும் உரிமை
இருவருக்கும் உண்டு. அற்பஜீவி.  உன்னை நான் நிராகரிக்கிறேன்

“சகுனம் சரியில்லையாம்”

தடுமாறாமல் பேசியிருக்க வேண்டுமோ?
நவ நாகரீகப் பெண் என்று காட்டிக்கொள்ள வேண்டுமோ?
அழகு குறைச்சலோ? ஆங்கிலம் அதிகம் பேசவேண்டுமோ?
கணங்களில் ஏன் கண்ணீர்? மூடப்பட்ட கதவின் எதிரொலி.

“சகுனம் சரியில்லையாம்”

அந்த கனவு மறுபடியும் விரியவில்லை
திருமணம், மகன், மகள், பேரன்கள் , பேத்திகள்
பல முறை அமெரிக்க பிரயாணம்
ஆனாலும் மனதில் ஆழமாக பதிந்திருந்தது அந்த ஒரு நாள் கனவு

மனதில் நீங்காத கேள்வியாக அது நின்றுவிட்டது
ஏன் அன்று சகுனம் சரியில்லை?