தாம்பரேயில் துருவ ஒளி

சோழகக்கொண்டல் 

தாகத்தில் தூக்கம் கலைந்த நள்ளிரவு
சலிப்புற்று எழுந்தேன்
எப்போதும் போல

அரைக்கண்ணில் கீழ்வானம்
பார்த்த நொடியில்
தேன் நிரம்பிய கொடுக்கோடு
தேள் ஒன்று கொட்டியது நெஞ்சில்

விழிப்புக்கும் எனக்கும் இடையில்
வந்து விழுந்துவிட்டது வானம்
இது உண்மைதானா கனவா
ஒளிதானா
பச்சைப்புகையா
பாஸ்பரஸ் விளக்கா

சட்டென்று குளிருறைகளை மாட்டிகொண்டு
சாலையில் இறங்கி ஓடுகிறேன்
நள்ளிருளின் புள்ளியிலிருந்து
நழுவுகிறது இரவு

நாம் அறிந்ததனைத்தையும்
அபத்தமெனக் காட்டி
அழகென்று நினைத்ததையெல்லாம்
அற்பமெனச் செய்கிறது
துருவ ஒளி

ஓட்டமும் நடையுமென
ஓடிக் கொண்டிருக்கிறேன்
ஒளியொரு நதியெனப்
பாய்ந்து கொண்டிருக்கிறது வானில்

கண்களின் துல்லியம் பறிக்கும்
மின்னொளியைத் தப்பித்து
இருள் பிசுபிசுத்துக் கசியும் பாதைகளில்
பாய்ந்திறங்கி விரைகிறேன்

உறைந்து பனிமூடிய
சோலையருவி எனும் ஏரி
அதன் மத்தியில் ஒரு மரத்தீவு
இருளுக்குள் இறங்கி வானம் பார்க்கிறேன்
தொடுவானத்தின் துருவங்கள் வரை தொட்டு
விண்ணில் கிடந்து நெளியும்
பச்சைப் பாம்புகள்

ஒளிரும் பொடியென
உதிர்ந்து பொழிகிறது
அந்த ஒளியின் உடல்

தரைக்கு வராமல் தலைமேல்
தேங்கும் மழையில்
பச்சைத் தீப்பிடித்துப்
பற்றி எரிகிறது
கீழே கிடக்கும் பனி

வானத்தின் உச்சியில் தொடங்கும் புன்னகை
தொடுவானத்தின் காதுகளைக்
கிள்ளி மீள்கிறது அரைநொடியில்

இலக்கின்றி பூத்திருக்கும் மீன்களையெல்லாம்
அள்ளிச்சூடி அசைகின்றன
பால்வெளியின் மறுமுனையில் இருந்து நீளும்
பச்சைக் கைகள்

அந்தரத்தில் கால்கள் ஊன்றி
ஆகாயத்தில் தலை நுழைத்து நிற்கும்
ஒளியாலான இந்த மாளிகையில்
ஓராயிரம் தூண்கள்

மாறாத வண்ணத்தை
கரைத்துக் கரைத்துக்
காற்றின்மேல் தன்னையே வரைந்தபடி
இன்றுதான் சேலைகட்டும் குழந்தையென
திசையெங்கும் அலைகிறது துருவ ஒளி.

*****
குறிப்பு : துருவ ஒளி – Aurora, தாம்பரே – Tampere (தென் பின்லாந்து நகரம்),
சோலையருவி – Suolajärvi .

ஒளிப்பட உதவி – @WOWPicsOfLife

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.