நானும் நானும்

சரவணன் அபி

உணர்வின் வெளிப்பாடு
இயலாமல் ஆகிவிட்டவன்
சுயம் என்னவாகும்

உணர்தல் இயலும் அதை
உரைத்தல் இயலாதான இது
சுயமற்றவொரு சடப்பொருள் என
சூழ்ந்து நின்று விவாதிப்பதை நான்
விழியசைவின்றி கண்டும்
உடல் நகர்வின்றி கேட்டும்
கொண்டிருப்பதை
எப்படி உணர்த்துவேன்

நினைவுக் கோளங்களில்
பளிச்சிடும்
வெளிச்சத் துணுக்குகளில்
உங்களைப் போல் நானும்
அவ்வப்போது
விதிக்கப்பட்டவோர் ஒழுங்குடன்
நடந்து கொள்வதாக
நீங்கள் மகிழ்வது புரிகிறது

எனினும்
எனக்கும் உங்களுக்கும்
என்ன வேறுபாடு
என்னை உங்களைப் போலாக்கும்
தவிப்பெதற்கு

வலிகளில் எது பெரியது
என்றுதான்
நீங்களெல்லாம் பேசியும்
நான் பேசாமலும்
ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்

விட்டுவிடுங்கள்
நானும் நீயும் ஊடாடுவதின் மூலம்
நாமும் அவர்களும்
ஒன்றெனக் காட்ட முயலும்
இந்தச் சமன்பாடு
எனக்குப் பிடிக்கவில்லை

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.