ஒரு காகம் பல நம்பிக்கைகள் – மஜீஸ்

மஜீஸ்


இரவு கழித்து
தூங்கிய ஒர் பொழுதில்
நிர்வாணக் கனவுகளுக்கு
இடைஞ்சலாய்
கிணற்றடி வேலியில் தனித்திருந்த
நரை கலந்த ஓர் கிழட்டுக் காக்கை கத்தி
ஆடை களையாமலே
கனவு முடிந்தாயிற்று
 

காக்கைகளின் தொன்மையான
ஜீவியத்தில் இது வரவுச் செய்தியென்று
அதன் அழுகை வந்த திசை பார்த்து
பழைய கதையை
புதுமையாக சொல்லி முடித்தாள்
அம்மா
 

இனந்தெரியாதோரால்
இணங்காணப்பட்ட என் அப்பனும்
வெற்றிடம் நிரப்பிய விடயம் தெரியாமல்
எழுதிப்போட்ட வேலையும் வரப்போவதாக
ஆரூடம் சொன்னாள் அம்மா
 

பகல் கடத்தி
பவுடர் பூசிய சாயங்காலப் பொழுது
நிறத்தால் தனித்துவம் காட்டிய
அந்த காகம்
சொண்டுசொரியத்தான்
போயிருக்கனும் போல
 

மின்சாரக் கம்பியில்
அதன் இறுதி அத்தியாயம்
எழுதப்பட்டிருந்தது
கிணற்றடி வேலியில்
அதன் சாவை அது முன்னறிவிப்பு
செய்திருந்தது
 

பாவம் அம்மா
நாளையும் எனக்கு விரசமாய்
கனவுகள் வரலாம்
ஒன்றல்ல பல நூறு காக்கைகள்
கிணற்றடி வேலியில்
ஒன்று சேர்ந்து கத்தலாம்


ஒளிப்பட உதவி – palemaleirregulars

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.