தீரா விடாயுடன்
வாய்பிளந்து நிற்கும்
மலையிடுக்கில்
பொங்கி பிரவகிக்கிறது.
புளியேப்பக்காரர்கள்
துளிக்குறிப்புகளால்
நொடிக்கு எவ்வளவு நீர்
இடம்மாறுகிறதென
அளக்க முயல்கிறார்கள்
கிளிப்பிள்ளைகளின்
வாய்ச்சொற்களில்
அது எப்போதும்
மலைமகளின்
முகம் மறைக்கும் மணச்சீலை.
வெண்பனி நீர்த்துவாலை என்கிறார்,
வைரச் சொரிதல் என்கிறார்,
வானவில் வந்திறங்கும் நீர்மேடை என்கிறார்,
வண்ண ஒளிக்கற்றைகள் நடமிடும்
குதிரைக்குளம்பு என்கிறார்,
சொல் இல்லாதவன் என்னிடம்
புறங்கையில் உருண்டோடும்
சிறு திவலை,
அதன் பேரழகை
காட்டிச் செல்கிறது.