நான் இரையானேன்

– பெ விஜயராகவன்-

சின்னஞ் சிறிய சிறுத்தையது
கன்னங் கரிய உடல் கொண்டு
பதுங்கிப் பாயும் இரை மீது
நகங்களின் கூரோ நடுங்க வைப்பது
குத்தி கிழித்து குடலுருவ வல்லது
தின்று தீர்த்த பின்னாலும்
தீராப்பசி அதன் கண்களில்
மாம்ச ருசி மயக்கம் கொள்ள
மறு இரைக்கு அலைக்கழிப்பு
இரை தேடும் அதன் கண்களில்
பெரு விருந்தாய் நான் விழ
வேறென்ன வேண்டமென
கூர் காட்டும் பல்லினிடைய
உண்ட மாம்சத்தின் உதிரி மிச்சங்கள்
இமைக்காது இரை நோக்கும்
அதன் கண்ணிணூடே
குவிந்தும் விரிந்தும்
ஓர் கரும்பாழ் வழித்தடம்
தடம் பற்றி உள் நுழைந்தே
யுகம் யுகமாய் ஒரு பயணம்
பெரும்பயணம்
கால்கள் சலித்து களைத்து ஓய
கண்டேன் அங்கொரு ஆதியின்
பெருங்காடு
காடு கொள்ள கரும்பூனைகள்
பெரும்பூனைகள்
நான் இரையானேன்
சிறு எலியென

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.