தேய்விளக்கு- நரோபா குறுங்கதை

நரோபா

மனம் அலைவுற்று சொற்கள் வசப்படாத அந்நாளின் சாமத்திலே செய்வதறியாது திகைத்திருந்தார் பழுவேட்டையர். மொட்டை மாடியிலிருந்து பார்க்க, மேகத்தால் விழுங்கப்பட்ட நிலவின் மென்னொளி மேக விளிம்புகளை மிளிர செய்தது. காகிதத்தைக் கசக்கி வீசிவிட்டு வேகவேகமாக இறங்கி பரணில் கிடக்கும் பழைய மரப்பெட்டியை இறக்கினார். அதனுள் கிடந்த துணிப் பொதியை பிரித்தார்.

நீள்மூக்கும் அகன்ற வயிறும் கொண்ட பொன்னிற அற்புத விளக்கு துகில் நீத்து மினுமினுத்தது.

கண்ணாடியை ஒரு முறை மூக்கில் ஏற்றிவிட்டு பளபளப்பான வயிற்று வளைவில் தன் முக பிம்பத்தை ஒருகணம் நோக்கிப் பின், பாதியில் ஊசலாடி கொண்டிருக்கும் கதையொன்று எழுதப்பட்டிருந்த தாளால் அதைத் தேய்த்தார்.

அப்போது விளக்கிலிருந்து வெளிறிய பொன்னிற அரைக்கைச் சட்டை அணிந்த காலில்லா வான் நீல பூதம் மெதுவாக கையூன்றி தவழ்ந்து வந்து அவர் முன் அலுப்புடன் கைகட்டி நின்றது. அதன் பழைய அடர் நீல நிறத்தை நினைவுறுத்தும் திட்டுக்கள் தோல் மடிப்புகளிள் ஆங்காங்கு தென்பட்டன.

“ப்ச்… திரும்பவும் நீதானா?” என்றார் ஏமாற்றமாக.

“ஹுசூர்… அதே விளக்கு, அதே இடம்… வேற என்ன வரும்?” என்று பணிவாகச் சொன்னது பூதம்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.