அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018
நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்த பொழுது ஒரு முறை ஒரு பெண்ணை கிண்டல் செய்ததாக அவளின் காதலன் என்னையும் என் நண்பர்களையும் அடிப்பதற்காக வந்தான். உண்மையில் அவன் முதன்மையாக அடிக்க வந்தது என்னைத்தான். ஆனால் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவன் என் நண்பனைப் பார்த்து ஒனக்கும் இந்த பிரச்சனைக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என கேட்க என் நண்பன் என்னை மட்டும் தனியாக விட மனதின்றி உண்டு என சொன்னதால் அடிக்கப்பட்டான். நான் உட்பட நண்பர்கள் எதுவுமே செய்யாமல் நின்றிருந்தோம்.
இதில் உண்மை என்னவென்றால் அந்தப்பெண்ணிடம் நான் பெரிதாக பேசியதோ கிண்டல் செய்ததோ இல்லை. ஆனால் அவள் காதலன் என் நண்பனை அடித்ததன் மூலமாக அங்கே ஒரு குற்றம் நிகழ்ந்தது. இங்கே உண்மையில் குற்றவாளி யார் என்று யோசிக்கலாம். தவறுதலான புரிதலின் அடிப்படையில் இந்த குற்றம் நடப்பதற்கான காரணமாக அமைந்த அந்தப் பெண்ணா அல்லது குற்றத்தை நேரடியாக நிகழ்த்திய அவள் காதலனா அல்லது அந்தப் பெண் அவ்வாறு புரிந்து கொள்ளும்படியாக நாங்கள் செய்த செயலின் மூலமாக நாங்களா. இதில் இன்னுமொரு கோணமும் இருக்கிறது. என் நண்பன் அடிக்கப்படும் பொழுது பார்த்துக்கொண்டிருந்த நாங்கள் என் நண்பனின் பார்வையில் ஒரு வகையில் குற்றவாளிகளே.
அப்படியானால் குற்றம் என்பது என்ன. இப்படிச் சொல்லலாமென்று நினைக்கிறேன். குற்றம் என்பது ஒரு பிறழ் நிகழ்வு மட்டுமே. அது நிகழும் பொழுது அந்த நிகழ்வில் அதோடு தொடர்புடைய எல்லாவரும் ஏதோ ஒரு வகையில் காரணமாக அமைகிறார்கள். அது ஒரு பிறழ்நிகழ்வு என்பதனாலேயே விரும்பியோ அல்லது இன்றியோ அதில் மனிதர்கள் பங்காளர்களாக ஆகிறார்கள். ஆனால் குற்றம் என்பதை வெறும் பிறழ் நிகழ்வாக விளங்கிக்கொள்வதின் சிக்கல் என்பது ஒரு சமூகம் குற்றத்திற்கான தண்டனையை, அது மேலும் நிகழாவண்ணம் தடுக்கும் பொருட்டு அதில் ஈடுபடுபவர்க்கு வழங்க வேண்டியிருக்கிறது என்பதிலிருக்கிறது. அப்படியானால் சமூகம் ஒரு பிறழ் நிகழ்வில் ஒரு அனுமதிக்கப்பட்ட எல்லையை வகுத்துக்கொண்டு அதற்கப்பால் செல்பவர்களை தண்டிக்கும். அதன் மூலம் அந்த எல்லையை தாண்டாதவாறு எளிய மனிதர்களை கட்டுக்குள் கொண்டு வந்து தன் ஒழுங்கு சிதையா வண்ணம் தற்காத்துக்கொள்வது அதன் நோக்கம்.
நிழலின் தனிமை என்ற இந்த பழியின் கதை சமூகம் தன்னை காத்துக்கொள்ள ஏற்படுத்தியிருக்கும் இந்த எல்லைக் கோடும் அதை ஒரு பொழுதும் மீற இயலாத எளிய மனிதர்களையும் தீவிரமாகச் சித்தரிக்கிறது. கதைசொல்லியின் முன்னே அந்த எல்லைக் கோடு அவனால் மீறப்படுவதற்காக நாவலில் நான்கு முறை வந்து நிற்கிறது. வீரப்பூர் திருவிழாவில் தூங்கிக்கொண்டிருக்கும் கருணாகரன் முன்னால் கத்தியோடு அவன் நிற்கும் தருணமும்,கடைசியாக நலிவுற்று சாவை அணைத்தபடி குடிசையில் படுத்திருக்கும் கருணாகரனை எதிர்கொள்ளும் தருணமும், மருத்துவமனையில் வைத்து சுலோவின் கணவனுடனான சண்டையிலும், பின் சுகந்தியின் கணவனான பழந்துணி வியாபாரி இருமும் அந்த இரவும். ஆனால் அந்த மூன்று தருணங்களையுமே எதுவும் செய்ய இயலாதவானாக , கையறுநிலையிலிருப்பவனாக அவன் தாண்டிவருகிறான். உண்மையில் அவன் அந்த கோட்டை சற்றேனும் நெருங்குவது சுலோவின் கணவனுடன் மருத்துவமனையில் வைத்து வரும் சண்டையில் மட்டுமதான். ஆனால் அதிலும் அவன் சாத்தியமான ஒரு எல்லைக்குள் நின்று அவனுக்கும் சுலோவுக்குமான உறவை அம்பலப்படுத்திவிட்டு ஓடிவிடுகிறான். மாறாக கருணாகரனோ அல்லது அவன் மகனோ இயல்பாகவே அந்தக் கோட்டை மீறிச் செல்கிறார்கள். அது சார்ந்த குற்றவுணர்ச்சிகள் எதுவும் அவர்களிடம் இல்லை. இந்த மனநிலை இவர்களுக்குள் எவ்வாறு உருவாகி வருகின்றது.
அது மிக மிக இளமையிலேயே உருவாகிவிடுகிறது என்று தோன்றுகிறது. அதை நாம் கதைசொல்லியின் பால்யகால சித்தரிப்பிலிருந்து அவதானிக்கலாம். அவன் சிறுவயதில் குருவி வேட்டையில் ஈடுபடும் சித்திரத்தில் அவன் நண்பனை பின்தொடர்ந்து செல்பவனாகவும், அதை வேடிக்கைப் பார்ப்பவனாகவும், அந்தக் குருவிகள் அடித்துவீழ்த்தப்படும் பொழுது குற்றவுணர்வு கொள்பவனாகவும் இருக்கிறான்(அவன் வளர்ந்த பிறகு கருணாகரனுடன் செல்லும் வேட்டையிலும் அவனுள் அந்த மாறாச்சிறுவனை நாம் காணலாம்).பால்யகால கருணாகரனுடைய அல்லது அவன் மகன் கௌதமனுடைய சித்திரமெதுவும் நாவலில் நேரடியாக இல்லையென்றாலும் கதைசொல்லியின் நண்பனாக அவனுடன் வேட்டையில் ஈடுபடும் தங்கவேலு பாத்திரத்தின் மூலம் ஓரளவு அவதானிக்கமுடியும். ஆனால் கதைசொல்லி தாண்டமுடியாமல் தவிக்கும் அந்தக்கோட்டை நாம் மானுட அறமென்று வரித்துக்கொள்ளலாமா. முடியுமென்றே நினைக்கிறேன். கதைசொல்லியின் முன்னால் அந்தக்கோடு நின்றிருக்கும் தருணங்களில் அவன் செயல்களை புரிந்துகொள்வதின் வழி அதைச் செய்யமுடியும். கருணாகரனிடம் அவன் கடைசிக் காலத்தில் நடந்துகொள்ளும் முறை, சுலோவின் கணவனுடனான சண்டையில் சுலோ தற்கொலை செய்துகொள்ளவில்லை என்பதை அடுத்தநாள் காலைவரை காத்திருந்து உறுதிசெய்துகொள்வது, சுகந்தியுடனான அந்த கடைசி இரவில் அவளை விட்டு ஓடுமுன்பு அவள் கணவனுக்கான மருத்துவரை ஏற்பாடு செய்தல் என நீளும் பட்டியலில் இருந்து நாம் அவன் குற்றவுணர்வின் முன்பும் கருணையின் முன்பும் மாறி மாறி மண்டியிடுயிடுவதைக் காணலாம். மானுட அறமென்பது குற்றவுணர்வு, கருணை ஆகியவற்றின் மூலம் உருவாக்கப்பட்டு நிலைநிறுத்தப்படுவதே.
நாவலின் கடைசியில் வரும் நாடகத்தனமான முடிவு வாசகனுக்கு நாவலை இரண்டு விதமாக படிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. ஒன்று கதைசொல்லியால் பழிவாங்கப்படவேண்டிய கருணகரன்தான் கதையில் அவன் பழிவாங்க பின்தொடரும் கருணாகரன் அல்லது கதையின் கடைசியில் சாரதா குறிப்பிடுவதைப்போல இவன் வேறு கருணாகரன். என்னளவில் அவன் உண்மையிலேயே சாரதாவைப் பாலியல் வல்லுறவு செய்த அதே பழைய கருணாகரன் தான்.
அதற்கான காரணம் நாவலில் அவன் வேட்டைக்கு செல்லும் சித்திரம் அளிக்கும் தெளிவு , மற்றொன்று அவன் மகன் கொலை செய்துவிடுவது(கருணாகரனின் இளமையின் மூர்க்கம் அவனுள்ளும் இருந்ததா). இவையிரண்டையும் அத்தனை வலுவான காரணமாகக் கொள்ளமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால் இவற்றை ஒரு காரணமாக் கொள்வதின் மூலம் நாம் நாவலில் வரும் இரண்டு கருணாகரன்களின் சித்திரங்களையும் இணைத்துக்௧ொள்ள முடியும்.
ஆனால் இவன்தான் பழைய கருணாகரன் என்றால் சாரதா ஏன் இவன் அவனில்லை என்று சொல்கிறாள்.இதற்கான காரணத்தை நாம் சாரதா பாத்திரத்தை புரிந்துகொள்வதின் மூலம் அறியலாம். ஒன்று இந்த மொத்தக் கதையையும் இயக்குபவளாய் இருக்கும் சாரதா ஒருபொழுதும் தான் நேரடியாக இதில் ஈடுபடுவதில்லை. அவள் கதைசொல்லியை ஒரு பகடையாக பயன்படுத்துகிறாள். ஆனால் உள்ளுக்குள் கதைசொல்லியால் ஒருபொழுதும் கருணாகரனை கொலை செய்துவிட முடியாது என அவள் அறிவாள். ஆனால் கடைசியில் கருணாகரனை முற்றிலும் கைவிடப்பட்டவனாக சாவின் வாலைப் பற்றிக்கொண்டு கிடப்பவனாக அந்தக்குடிசையில் சந்திக்க நேரும் அந்த நொடியில் கதைசொல்லியால் அதை நிறைவேற்றமுடியும் என்று அறிந்து அவள் சட்டென்று அதிர்வுடன் பழிவாங்கும் கதையிலிருந்து விலகிவிடுகிறாள்.
சுலோ நாவல் முழுக்க வருகிறாள். ஆனால் மிகச்சாதாரணமான பெண் அவள். தொடக்கத்தில் மிக உற்சாகமாக இளமைக்கேயுரிய துள்ளலுடன் கதைசொல்லியை காதலிக்கும் பொழுதும்,
பின் அவன் அவளைக் கைவிடும் பொழுது பெரிதாக எதுவும் சொல்லாமல் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதுமாக அவளின் கதாப்பாத்திரம் மிகச்சாதாரண ஒரு பெண்ணுக்கேயுரியது. ஆனால் நாவலில் கருணாகரனின் பழியை அவள் தான் ஏற்கிறாள். உண்மையில் காமம் தாண்டிய பழியின் வன்மத்தோடு அவளோடு உடலுறவுக் கொள்ளும் கதைசொல்லியைப் பற்றி எதுவும் அறியாமல் தன் அப்பாவின் பழியை ஏற்றுக்கொள்ளுகிறாள் அவள்.
இந்த நாவலில் வரும் நிறத்தினூடான வர்ணணைகள் என்னை வெகுவாகக் கவரந்தன. வன்மம் மற்றும் பழியின் உணர்ச்சியை குறித்த சித்திரங்களிலெல்லாம் சாம்பல் நிறமும் காமம் அல்லது காதல் குறித்த சித்திரங்களிலெல்லாம் பிங்க் நிறமும் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகின்றன. இந்த நாவல் பயன்படுத்தும் புனைவு உத்தியை பற்றி குறிப்பிட்டேயாகவேண்டும். இந்தக் கதை முழுக்க மிகப் பழக்கமுள்ள சினிமாத்தனமான திருப்பங்களும் நிகழ்வுகளும் நிறைந்திருந்தாலும் கதைக்குள்ளே கதைசொல்லியே அதை மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதன் வாயிலாக ஒருவித நேரிய spoof தன்மை வாசக மனதில் உருவாக உதவி புரிகிறது.