Month: October 2018

காத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை

ராதாகிருஷ்ணன்

“இன்னும் 10 நிமிடம் மட்டும்” என மனதிற்குள் சொல்லி கொண்டேன் , காலை 7 மணிக்கு வந்து நின்றது , வெயிலேறி  பின் வெயிலிறங்கி  இப்போது இருள் மூடும் நேரம் வரை வந்துவிட்டது . கிளம்பலாம் என எண்ணும்  போதெல்லாம் அம்மாவின் சோகமுகம் மனதில் வந்து  அந்த எண்ணத்தை தடுத்துவிடுகிறது  , அம்மாவின் ஞாபகம் வரும்பொழுது கூடவே  அம்மாவிற்கு என்னை விட அவனிடம்தான்  பாசம் அதிகம் எனும் ஞாபகம் வருவதை தவிர்க்க முடிவதில்லை , இப்போது இந்த எண்ணம்   புன்னகைக்க கூடிய விசயமாக மாறிவிட்டது , ஆனால்   சிறுவயதில் அப்படியில்லை , இதற்காக தினமும் அம்மாவிடம் மல்லுக்கட்டுவேன் , இத்தனைக்கும் எனக்குதான் எப்போதும் முதலிடம்  , இருந்தாலும் எப்படியோ என் மனம் அதை கண்டு பிடித்து விடும் .

சிறுவயதிலேயே அண்ணன் தொட்டாசுனுங்கிதான் , யாரோடும்  அளவாகத்தான் பேசுவான் , சொந்தக்காரர்கள்  வீட்டிற்கு வந்தால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் வரை வீடு பக்கமே எட்டி பார்க்க மாட்டான் , அவன் மலர்ச்சியாக  பேசுவது அபூர்வம்  , பெண்களை கண்டாலே நாணுவான்  , ஒளிந்து கொள்வான்  , அம்மா ,சித்தி தவிர அவன் வேறு பெண்களிடமே  பேசியதை நான் பார்த்ததே இல்லை . அவன் மாந்தளிர்  நிறம் , நெட்டையான உருவம் , பள்ளியில்  நெட்டை  என்ற கிண்டல் பெயரும்  உண்டு , ஆனால் நேரில் யாரும் அப்படி கூப்பிட மாட்டார்கள் , அடி விழும் . சுருள் முடியை எண்ணெய் வைத்து அடக்கமாக  சீவியிருப்பான்  , நீள முகம் , அப்பாவின் இளவயது புகைப்படத்தினை  பிரதியெடுத்தை  போலவே இருப்பான் .

அம்மா அடிக்கடி என்னிடம்  சொல்லும் ஓர் வாக்கியம் “அவனுக்கு நேரெதிர்டா நீ “என்று , ஆம் ,எனக்கென்று  பெரிதாக கவலை ஏதும் இல்லை , என் நண்பர்கள் , கல்வி மற்றும் பணி தோழர்கள்  எல்லோரும் இனியவர்களே  , எப்போதும் பேசிக்கொண்டிருப்பேன்  , திருகான் பழுதாகி  எந்நேரமும் ஒழுகும்  நீர்குழாய் போல . சிறு வயதுகளில்  பண்டிகைகளுக்காக நாட்கள் எண்ணிஎண்ணி காத்திருப்பேன்  , இப்போதும் அப்படிதான் , ஆனால் அதை வெளியே காட்டி கொள்வதில்லை , முன்பு எனக்கு ஆடைகள் எடுப்பதில் , கொண்டாடுவதில்  விருப்பம் இருந்தது , இப்போது அது அம்மாவிற்கு ஜெஸியாவிற்கும் வாங்கித்தந்து அவர்களை மகிழ்ச்சியடைய  செய்வதாக அது  மாறியிருக்கிறது , ஆம் ஜெஸியா என் தோழிதான்  , அண்ணன் திருமணத்திற்காக காத்திருக்கிறேன்  , பின் அவள் என் மனைவியாகி விடுவாள் .

அம்மாவிற்கு வெள்ளையும் சந்தனமும்  கலந்த கேரள வகை சீலையை  தேடி வாங்கி கொடுப்பேன் ,அவளுக்கு அந்த ரக சேலை மிக பிடிக்கும் , அம்மா அந்த சேலையை குழந்தையின் குதூகலத்துடன்  வாங்கி கொள்வாள் . அண்ணா என்னை விட இரு வருடம் மூத்தவன்  , கல்வி முடித்த சமயத்தில் அவனுக்கு வேலை அமைய வில்லை, இரண்டு ஆண்டுகள் வேலை கிடைக்காமல் இருந்து , பின் அம்மாவின் புலம்பலை  சகிக்காமல்  பிடிக்காத ஒரு வேலையில் சேர்ந்து கொண்டான் , வேலை கிடைக்காத  நாட்களில்  அவன் முகத்திலிருந்த பிற மனிதர்களை எதிர்கொள்ள விரும்பாத  வெறுத்த பார்வை அதன் பிறகு அவனில் இருந்து அகலவே இல்லை .  எனக்கு படிப்பு  முடித்தவுடனே  நல்ல பணி அமைந்தது , நான் அவனுக்கு￰ உடை வாங்கி கொடுக்கும் போதெல்லாம் ” ஏன் இவ்வளவு விலை கொடுத்து வாங்கினாய் ” என்று திட்டுவான்  , ஆனால் அவனுக்கு என் மீது தணியாத  பாசம் உண்டு ,ஆனால் வெளிக்காட்ட  மாட்டான் , சிறுவயதில் என்னை இரண்டுபேர் அடித்து விட்டனர் என்று கோபம்கொண்டு இரத்தம்  வரும்வரை  அவர்களை பிளந்தெடுத்தான்  , பின்பு வீட்டுக்கு வந்தும் எனக்கும் ஒரு அறை விட்டான்  , இவனிடம்  சொல்லாமலே  இருந்திருக்கலாம் என அப்போது நினைத்து கொண்டேன் .

இனி காத்திருப்பது வீண் என தோன்றிய சமயத்தில் தூரத்தில்  ஒரு வண்டியின்  சத்தம் தூரத்தில் இருந்து கேட்டது , இது அண்ணனின் பைக் சத்தம்தான்  , rx100 , அண்ணன் இந்த பைக் மீது  பைத்தியம் கொண்டவன்  , ஒருநாள் மூன்று முறை துடைப்பான்  , அம்மா அதை பார்க்கும்போதெல்லாம் “இது போல நீயும் தினமும் குளிடா ” என்று கிண்டலடிப்பாள்  , அவன் கண்டுகொள்ளாதது  போல குனிந்து நின்று துடைப்பான் , அவன் முகத்தில் புன்னகை இருப்பதை அப்போது காண முடியும் , ஆம் ,அம்மா பேசும் போதுதான் அவனில்  சிரிப்பை  காண முடியும் , அம்மா வருந்தி வேலை செய்வதை விரும்ப மாட்டான் , தன் முதல் வருமானத்தில்  அம்மாவிற்கு வாஷிங் மிசின் வாங்கி கொடுத்தான் , வீட்டின் முன் இருக்கும் தாழ்வான கூரை , அம்மாவின் பலகை இருக்கை, விறகுகள்  அடுக்கப்பட்டிருக்கும்  பெட்டி , குட்டிவீடு போல காட்சியளிக்கும்  கோழிபெட்டி,  சமையல்  பொருள் அடுக்க வைக்கப்பட்டிருக்கும்  ப்ளைவுட்டினால் செய்யப்பட்ட ரேக்  என  எல்லாம் அம்மாவுக்காக  அவன் செய்து கொடுத்தது , அவன் ஏதாவது இப்படி செய்யும் போது என்ன செய்து கொண்டிருக்கிறான்  என்றே கண்டு பிடிக்க இயலாது , கேட்டால் ஏதும் சொல்ல மாட்டான்

கூட நிற்க வைத்து  எடுபிடி  வேலை வாங்குவான் , பொருளை தொட்டால்  கூட திட்டுவான் , முடிவில் பாகங்களை இணைத்து பிரமாதமான பொருளாக  ஆக்கிவிடுவான் , “நீ எங்க போய் ஆசாரி  வேலையெல்லாம் கத்துகிட்ட  “என்று கிண்டலடிப்பேன்  ,  அப்போது அவனில் வெட்க சிரிப்பு தெரியும் .

படிப்பு முடிந்த பிறகுதான் அவன் மாற தொடங்கினான்  , பேச்சு மிக குறைந்தது , எங்களூரில்  அவனுக்கு சிநேகிதம்  என்று அவனுக்கு ஒரே அண்ணா தான் உண்டு , அவர் பெயர் ரகு , திருமணமாகாதவர்  , அரசியல், சித்தாந்தம் என சொல்லி வேலைக்கு எதுவும் போகாமல்  ஊரூராக  சுற்றி கொண்டிருப்பவர்  , தடிமனான  கண்கண்ணாடி  போட்டு , முடியை  மேல் நோக்கி வாரி சீவியிருப்பார்  , பசை  ஏதாவது தடவியிருப்பாரோ என சந்தேகம் வருமளவிற்கு  சீவும் முடி கணத்தில் எப்படியிருக்குமோ  அதுபோலவே எப்போதும் அவர் முடி இருக்கும் , அடர்த்தியான  தாடி , அவர் தன் அழகின்மையை மறைக்கத்தான்  தாடி வைத்திருக்கின்றார்  என தோன்றும் , ஒருநாள் அதை விளையாட்டாக அண்ணனிடம் சொன்னேன் , அவன் கடிந்து  கொண்டான் , “ரொம்ப அழகா இருக்கறதா  உனக்கு நினப்போ ”  என்று கேட்டான்  .  ஒருமுறை  அண்ணனை தேடி வந்தவர் அண்ணன் வெளியே போயிருந்ததால்  என்னிடம் பேச்சு கொடுத்தார் , அதன் பிறகு அவரை பார்த்தாலே தலைதெறிக்க ஓடி விடுவேன் , அகங்காரத்தின் உருவமாக  அவர் தெரிந்தார் , மக்கள் எல்லாம் மடையர்கள்  போலவும் ,இவர் பெரிய சிந்தனாவாதி போலவும் பேசினார் , பேச்சின் ஸ்வாரஸ்யத்தின் இடையே நான்  “அப்பறம் ஏன் னா எப்போதும் பேயறைந்த  மாதிரியே இருக்கீங்க”  என்றேன் ,” மடையன்” என என்னை திட்டினார் , “சரிங்க புத்திசாலி அண்ணா “என்று திரும்ப சொன்னேன் , கோவித்து  பதில் சொல்லாமல் கிளம்பினார் , பிறகு இரவு அண்ணன்  வீட்டிற்கு வந்து “எனக்கு திமிர் அதிகமாகி  விட்டது” என ஒரு மணிநேரம் அர்ச்சனை  பண்ணினான் , அவன் திட்டி  கொண்டே சமயலறைக்கு உள்ளே வர நான் தோசையை  மெய்மறந்து சாப்பிட்டு கொண்டிருந்தேன் , என்னை பார்த்தவன்  “உன்னை திட்டறதுக்கு  பதில் சும்மா  இருக்கலாம்” என்றான்  , கோபம் மறைந்து முகத்தில் சிரிப்பை கட்டுப்படுத்த திணறுவது தெரிந்தது .

பைக்கின் முகப்புஒளி இருளை  கிழித்து வந்தது , நிறுத்தியதும்  ஒளி அணைத்து மீண்டும்  இருள் சூழ்ந்து கொண்டது , என்னை அவன் கவனிக்க வில்லை , மாடி  ஏறி கதவு திறந்து உள்சென்றதும்  கதவை  சாத்தி கொண்டான் , வீட்டில் கூட இப்படித்தான் , தன் அறைக்குள் போய் தாளிட்டு  கொள்வான் , அம்மா உண்பதற்காக  தட்டும்போது  மட்டுமே வெளியே வருவான் , நான் அவன் அறைக்குள் வருவதை விரும்ப மாட்டான் , ஆனால் என் எல்லா விஷயத்திலும் தலையிட்டு  அவனே முடிவும்  எடுத்து என்னிடம் செயல்படுத்த மட்டும் சொல்வான் , பிடிக்கல என்றால் “மூடிட்டு  நான் சொல்றத செய் ” என்பான்  , ஆனால் எப்போதும் சரியானதை  மட்டுமே எனக்கு தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கிறான்  , என் சிவில் இன்ஜினியரிங் படிப்பு , என் பைக் என என்னுடையதெல்லாம்  பெரும்பாலும் அவன் தேர்ந்தெடுத்து  கொடுத்ததுதான் .

மூடிய கதவை பார்த்தபடி  ஒரு பத்து நிமிடம் பொறுத்திருந்தேன்  , பின் படியேறி  கதவை தட்டினேன்  , கதவை திறந்தவன்  ஆச்சிரிய முகபாவத்துடன்  என்னை பார்த்தான் , “வா “என்று உள்ளே போனான் , அறையில் இருக்கைகள் ஏதும் இல்லை , ஒரு பாயை  எடுத்து விரித்து அமர  சொன்னான்  அவன் எதிரில் வெறும் தரையில் அமர்ந்தான்  , தாடி வைத்திருந்தான்  , சட்டை இல்லாத  அவன் மேலுடம்பில்  அவன் மிக இளைத்திருந்தது  தெரிந்தது ,கோபம் வந்து “சோறெல்லாம்  திங்க  மாட்டாயா ” என்றேன் , அவன் சிரித்த முகத்துடன் என்னை பார்த்தான் , வீட்டில் இருக்கும் போது இருந்த அவன் முகம் அப்போதுதான்  திரும்ப வந்தது .  பின்

அறையில்  கண்களால் அலைந்தேன்  ,முதல் தோற்றத்தில்   பாழடைந்த  வீடு போல இருந்தது ,

பிறகு கவனிக்க அது புது வீடுதான் , சுவரின்  நிறமும் , வெளிச்சம் குறைவான மின்விளக்கும் அத்தகைய  தோற்றத்தை கொடுப்பதை  உணர்ந்தேன் , அவன் அமர்ந்த  சுவரின் வலதுஓரத்தில் இருந்த அடுக்கின் மேல் வரிசையில்  சில புத்தகங்கள் இருந்தன , அடுத்த அடுக்கில் துணிகள் சுருண்டு  கிடந்தன  . அவன் ”  என்ன பாக்கற ”  என்றான் , கொஞ்சம் “வெளிச்சமான  லைட்டையாவது  போட வேண்டியதுதான ” என்றேன் , அவன் பதிலேதும்  சொல்ல வில்லை

“எதுக்கு இந்நேரம் வந்திருக்க” என்றான் , “நான் காலைல வந்தது” என்றேன் ,அவன் முகத்தில் மெல்லதிர்ச்சியும்  சோகமும்  எட்டிப்பார்த்தன , “போன் பண்ண வேண்டியதுதான ‘என்றான் , “மாசத்துக்கு ஒரு நம்பர் மாத்தறவன்  நம்பரெல்லாம்  எனக்கெப்படி  தெரியும் “என்றேன் , அவன் பதில் சொல்லாமல் இருந்தான்

“ஏன் இப்படி காத்திருக்க  , நான்  இல்லைனா இன்னொரு நாள் வர வேண்டியதுதான ”  என்றான் ,   “அம்மா பார்த்துட்டு வர சொல்லிச்சு  , மூணு நாளா , அம்மாட்ட உன்னை பார்க்கல னு சொன்னா அழும் , அதான் எப்படியும் உன்னை பார்த்துட்டுதான் போகணும் னு இங்கயே  இருந்துட்டேன் ”  என்றேன் .

“சாப்ட்டயா  “என்றான் ,நான் அதை பொருட்படுத்தாது  அவனை நோக்கி பார்த்தபடி இருந்தேன் , கண்கள் சந்திப்பதை  தவிர்த்தபடி  பார்வை வேறுவேறு பக்கம் திரும்பியபடி  இருந்தான் .

பிறகு ”  ஏதாவது விஷயமா ”  என்றான் , ”  வேறென்ன  ,உன் பிறந்த நாள்தான் , சனிக்கிழமை ,அம்மா உன்னை வீட்டுக்கு கண்டிப்பா வர சொல்லிச்சு , என்னை அலைய விட்டுடாத , போன முறை நீ வராம போனதால  என்கிட்ட  கொடுத்துவிட்டு , நான் அதை வேற ஒருத்தருக்கு கொடுத்து ,  நீ  அதை சாப்பிட்ட  னு பொய் சொன்னேன் , இந்த முறை அப்படி ஏதும் பண்ணிடாத  ”  என்றேன் . எங்கள் இருவரின் பிறந்த நாளை அம்மா எப்போதும் விமரிசையாக  கொண்டாடுவாள்  , விமரிசை  என்பது உணவில்,  பாயசம்  ,அவில் ,இஞ்சிப்புளி  , இரண்டு பொரியல் ,கூட்டு என அமர்க்களப்படும் , என் பிறந்த நாளில் என் நண்பர்களை உணவிற்கு அழைத்து விடுவேன் , அவன் பிறந்த நாளுக்கு யாரையும் அழைக்க மாட்டான் என்பதால் அவன் பிறந்த நாளுக்கும்  என் நண்பர்களை  அழைப்பேன்!  , நாங்கள் வேலைக்கு போகும் வயது வந்தும்  அம்மா இவ்வியல்பை மாற்றிக்கொள்ள  வில்லை .

இந்த முறை அண்ணனின் பிறந்த நாள் நிகழ்விற்கு ஒரு மாதம் முன்பிலிருந்தே  நச்சரிக்க  ஆரம்பித்து விட்டாள் , “போய் அவனை பார்த்து வா ”  ஒவ்வொருநாள்  இரவும் எனக்காக வாசலில் காத்திருந்து  மலர்ச்சியோடு  ‘பார்த்தாயா ” என்பாள்  , சோகமும்  அண்ணன் மேல் கோபமுமாக  வரும் ,  நாலாவது  நாளாக காத்திருந்து இன்றுதான் இவனை பிடித்தேன்  , இவன் அறை புறநகர் தாண்டி இந்த பொட்டல்வெளியில்  நான்கைந்து வீடுகளில் ஒன்றில் இருந்தது , 7 மணிக்கெல்லாம் இங்கு  இருட்டும்  நாய்களும்தான்  இருக்கும் . இங்கு வரவே கூடாது என்று நினைப்பேன் , ஆனால் அம்மாவிடம் பதில் சொல்ல இயலாத குற்றஉணர்வு இங்கு கொண்டுவந்து என்னை நிறுத்தி  விடும் .இன்று  காலையில் அவள் இஞ்சிப்புளி  செய்து கொண்டிருந்தாள் , அண்ணனுக்கு பிடிக்கும் என்று. அவன் மெதுவான  குரலில் ” வேலையிருக்கு  ,இன்னொரு நாள் வரேன் ”  என்றான் ,

”  நீ மூடிட்டு வா ,வேலை நாசமா  போட்டும்  ”  என்று கத்தினேன்  , அவன் முகம் துளி கூட அதிர்வு  இல்லாமல் இருந்தது . அதை பார்க்க கோபம் வந்தது , பிறகு கோபம் கொள்வது வீண் என்று அமைதியானேன்  .

” அண்ணா , இப்ப அம்மாக்கு அடிக்கடி உடம்பு முடியாம ஆயிடுது , அடிக்கடி யதோ நினைச்சு அழறா , நீ வந்தா எல்லாம் சரியாகிடும் , வாரம் ஒருமுறை வா போதும் , அம்மா பழையபடி ஆயிடுவா  , என்னை விட உன் மேலதான் அம்மாக்கு பிரியம் அதிகம் “என்றேன் , அவன் தரையை  பார்த்தபடி  அமைதியாக  இருந்தான் .

பிறகு என் மனதிலிருந்ததை  வெகுநாளாக  அவனை பற்றி எண்ணியிருந்ததை  கொட்டிவிட்டேன்  .”  அண்ணா , நீ புக்கு  படிக்கறவன்  , அறிவாளி  , உன்னோட இந்த குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும் , நீ பேசறது உன்னோட பார்வை எல்லாமே எனக்கு புதுசா தெரியும் ,  மனசுக்குள்ள உன்னை பெருமையா  நினைச்சுக்குவேன் ” , ஆனா இது இப்படி உன்னை தனியாளாக்கும்  நான் நினைக்கவே இல்ல , அண்ணா எனக்கு தெரிஞ்சது இதுதான் , வாழ்க்கைக்கிறது  சந்தோசமா இருக்கறதுக்குத்தான்  , கூட இருக்கறவங்கள சந்தோசமா வச்சுக்கறதும்தான்  , ஆனா நீ இப்படி விலகி போயி ,நீயும் இப்படி  இருட்டுக்குள்ள உட்கார்ந்து , இதெல்லாம் எதுக்குன்னா ”  ,” சரி ,ஏதோ ஒரு விஷயம் சரி னு நம்பி அது பின்னாடி போற , அது கடைசில  தப்புனு தெரிஞ்சா என்ன பண்ணுவ  , வாழ்க்கையை , உலகத்தை அப்படி ஒரு தியரிலயோ  இல்லனா அந்த சோடாபுட்டி  ரகு அண்ணா ‘சித்தாந்தம் ‘னு ஒரு வார்த்தை சொல்லுவாரே அதுலயே கொண்டு வந்திட  முடியாது “,

” நீ என்ன வேணும்னாலும் செய் ,அதுக்காக ஏன் உன்னோட சந்தோசத்தை கை விடற , நான் உன் fb பக்கத்தை தினமும் பார்ப்பேன் , எப்பவும் யாரையாவது திட்டுவ  , கவர்மெண்ட் ,அரசியல்வாதி அதுஇது  னு , உன்னோட பிரண்ட்ஸ் லிஸ்ட் ல இருக்குறவனுகளும்  இதே ரகம்தான் , சந்தோசமான பதிவே  உன்னோடதுல  பார்த்ததில்ல , நீ  எழுதறது எல்லாம் சரியா கூட இருக்கலாம் , ஆனா சந்தோசம் இல்லாத சரி ங்றது உண்மைல சரியான ஒன்னா இருக்காது , அதுக்கு உதாரணமா உன்னையே  சொல்லலாம் , உனக்கு என்ன குறை இருக்கு , ஆனா எப்பவும் வீடு இடிஞ்சு  விழந்தவன் மாதிரியே இருக்க . ”  என எண்ணுவதையெல்லாம்  கொட்டினேன்  .

பிறகு அவன் திட்டுவான் என எதிர்பார்த்தேன் , மாறாக புன்னகைத்தான் , “பேசற அளவு வளந்திட்ட  ”  என்றான் , பின் கொஞ்ச நேரம் ஏதும் பேசிக்கொள்ள  வில்லை , பின் அமைதியான குளத்தில்  சட்டென சலனங்கள்  வந்ததை போல ” எனக்கு நான் கிற என்னமோ , என்னோட சந்தோஷமோ  பெரிய விஷயம் இல்ல ,எனக்கு ஒருசில கனவுகள் இருக்கு , நான் சில விஷயங்களை என் கடமையா  நினைக்கிறேன் , அதை நோக்கி போறது மட்டும்தான் எனக்கு நிம்மதி கொடுக்கும் , என்னால வீட்டுல உன்னை போல  இருக்க முடியாது .. அதான் எனக்கு பதில் நீ சந்தோசமா இருக்கையே அது போதும் ”  என்றான் .

மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் கொஞ்சநேரம் அமைதியாக இருந்தேன் ,பின் ” அண்ணா , எனக்கு நீ பேசறது ரகு அண்ணா பேசறததான்  ஞாபக படுத்தது  , அவரை நான் தன்னைத்தானே வருத்தி   கொள்ற ரகம் னு நினைப்பேன் , உண்மைல  இங்க ஒரு வசதியும்  இல்லாதவன் கூட சந்தோசமாதான்  இருக்கான் , சந்தோசம் என்பது வசதில இல்ல ,நீங்களா அவங்களை சந்தோஷமில்லாதவங்களா  நினைச்கறீங்க  ,  அதுக்கு காரணம் அவங்களை மேல இருக்கறவங்க சுரண்டராங்க  னு நினைச்சுக்குவீங்க  , ஆனா இது மனித குணம் , இதே வசதியில்லாதவன்  மேல போய்  இருந்தானாலும்  இப்படித்தான் மத்தவங்களை  சுரண்டிட்டு இருப்பான் ,இத மாத்த முடியாது , ஆனா இந்த இயல்புக்கும் சந்தோஷத்துக்கும் சம்பந்தமில்லை , எந்த நிலையிலும் சந்தோசமா இருக்க முடியும் , அம்மா நம்ம இரண்டு பேத்தை  அப்பா இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டு வளத்தாங்க  , நீயோ  நானோ என்ன சோகமாவா  வளந்தோம்  , அம்மாக்கு அப்பா இல்லாதத தவிர வேறென்ன சோகம் இருந்தது ”  என்றேன்

அவன் ஏதும் பதில் சொல்லாமல் எழுந்தான்  ,பின்  “டைம் ஆச்சு கிளம்பு” என்றான் , பிறகு ஆணியில்  மாட்டியிருந்த  சட்டையில் கைவிட்டு பணம் எடுத்து என்னிடம்  கொடுத்து “வைத்து கொள் “என்றான் , “அண்ணா ,எங்கிட்ட இருக்கு ,வேணாம் என்றேன் ”  “பரவால்ல வை ”  என்று என்  மேல்சட்டை பாக்கெட்டில் திணித்தான்  .

நான் முக அசைவினால்  விடைபெற்று  கிளம்பி வாசல் வந்தேன்  , அண்ணா பின்னால்  இருந்து ”  டே அந்த பொண்ணு கிறிஸ்டினா ”  என்றான் , தயக்கம் கலந்த வெட்கத்துடன்  திரும்பி பார்த்தேன்.

“பொண்ணு நல்லாத்தான் இருக்கா ” என்றான் சிரித்தபடி  , “சரி வரேன் ”  சொல்லி படியிறங்கி பைக் பக்கம் வந்த போதுதான் சாவியை  மறந்து மேலேயே விட்டு வந்தது ஞாபகம் வந்தது , திரும்பி அறைக்குள் போன போது அவன் ஒரு புத்தகத்தை திறந்து அதனுள் மூழ்கியிருந்தை பார்த்தேன் , அவன் திறந்த பக்கத்தில் அம்மாவின் ஒரு பழைய போட்டோ இருந்தது , சட்டென நான் வந்ததை உணர்ந்து புத்தகத்தை மூடி என்ன என்பது போல் என்னை பார்த்தான்   ,” சாவி  மறந்துட்டேன்” என்று சொல்லி எடுத்து வெளியே வந்தேன் , பின்தான் அவன் கண்கள் கலங்கியிருப்பதை  காண தாங்க முடியாமல் சட்டென வெளியேறியதை உணர்ந்தேன் .

பைக்கை எடுத்து கட் ரோட்டிலிருந்து  மெயின் ரோடிற்க்கு  வந்து நிறுத்தினேன் , பின்பு திரும்பி அவன் அறையை பார்த்தபோது கதவு மூடப்படாமல் இருந்ததை கண்டேன் .

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018

 

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, முற்போக்காளர்களிலிருந்து பிற்போக்காளர்கள் வரை, காந்தியவாதிகளும் கோட்ஸேக்களும், ஆன்மீகவாதிகளும் நாத்திகவாதிகளும் என எவ்வித வேற்றுமையுமின்றி அனைத்துத் தரப்பினராலும் நேர்மறையாகக் கூவி கூவி கொண்டாடப்பட்ட, எதிர்மறையாகப் பேசி பேசி விமர்சிக்கப்பட்ட, இன்னும் கூட தன்னைப் பற்றி பேச வைக்கக்கூடிய ஒரு மனிதர் உண்டு என்றால் அவர் மகாத்மா என்று அழைக்கப்படும் காந்திஜி மட்டுமே.

பொதுவாக நாம் ஏன் ஒருவரை கொண்டாடுகிறோம்..? பின் எதற்காக அவரை விமர்சிக்கிறோம்..? சில சமயங்களில் தூக்கியெறிந்தும் விடுகிறோம்..? கொஞ்சம் நம் சிந்தனையை அகழ்ந்து பார்த்தோமானால், அதன் காரணம் நமக்கு தெளிவாகவே புரியும்.

நம்மிடம் இல்லாத ஒன்றோ அல்லது நம்மால் செய்ய இயலாத ஒன்றையோ அவர் செய்யும் போது, நாம் அறிந்த மனிதர்களிடமிருந்து தனித்து தெரியும் போது, என இவ்வகையான சூழல்களில் நமக்கு அவர் மீது ஒருவகை பிரமிப்பு ஏற்படுகிறது. அது, அவரைப் பற்றிய நேர்மறையான ஒரு பிம்பத்தை மனதில் விதைத்து விடுகிறது. நாளடைவில், அவரைப் பற்றிய இயல்புகள் தெரிய வரும் போது, அவற்றை ஏற்க இயலாமல், தவிக்கிறோம். பிரமிப்பின் இடத்தில் குழப்பங்களும் சஞ்சலங்களும் ஆக்ரமித்துக் கொள்கின்றன. பின், அவையே ஒரு தெளிவிற்கு வரும் போது ஒன்று வெறுத்து விடுகிறோம் அல்லது அதற்குக் காரணங்கள் தேடி மீண்டும் அப்பிம்பத்திற்குள்ளேயே சிக்கிக் கொள்ள விழைகிறோம்.

ஆக மொத்தம் ஒருவரை அவரது இயல்பான குணங்களோடு ஏற்றுக் கொள்ள மனித மனது எப்போதுமே மறுத்து வந்திருக்கிறது. ஏனெனில், ஒருவரின் இயல்பான குணங்கள், கொண்டாட்டத்திற்கு உரியவை அல்ல என்று நாம் நம்புகிறோம். அசாத்தியமான குணங்களே எப்போதும் கொண்டாட்டங்களுக்கு உரியவையாக இருக்கின்றன. ஆனால், இயல்பான குணங்கள் சாதாரண நிகழ்வுகளில் வெளிப்படும் போது தான் அவை அசாத்தியமாக வெளிப்படுகின்றன என்பதை நாம் சிந்திக்கத் தவறி விடுகிறோம்.

இப்படிப்பட்ட உளவியல் சிக்கலுக்குள் தான் நமது பெரும்பாலான தலைவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். அதற்கு காந்திஜியும் விதிவிலக்கல்ல. இவ்வுலகில் காந்திஜி அளவிற்கு விமர்சிக்கப்பட்ட மனிதர் வேறு எவரும் இல்லை. ஆனால், இப்பிம்பங்களையெல்லாம் புறந்தள்ளி விட்டு தனது சத்தியசோதனையின் மூலம் இதுதான் நான் என்று, எவ்வித பாசாங்குகளுமின்றி, எவ்வகை சமரசங்களுமன்றி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட ஒரே மனிதரும் காந்திஜி மட்டுமே. அதற்கான மன தைரியமும் அவருக்கு மட்டுமே உரித்தான ஒன்று.

பிறரை அடக்கி ஆள்வது எவ்வளவு எளிதோ, அவ்வளவு கடினம் தன்னைத்தானே அடக்கி ஆள்வது. அதைத் தான் காந்திஜி தன்னுடைய வாழ்வின் எல்லா காலகட்டங்களிலும் கடைபிடித்து வந்திருக்கிறார். இத்தகைய தன்னாளுமை காட்டுவதும் அவரது துணிவையே.

அதைத் தொடர்ந்த மற்றொரு துணிவான முயற்சியே அவரது பிரம்மச்சரிய பரிசோதனைகள். இதிலும் கூட காந்திஜியின் துணிவு நம்மை அதிசயப்படவும் கூடவே அச்சப்படவும் வைக்கிறது. துணிவின் உச்சம் என்றால், அது அவரது பிரம்மச்சரிய பரிசோதனைகளின் வெளிப்படைத்தன்மையே.

எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடிய இன்றைய காலத்திலும் கூட, பேச வேண்டிய அவசியம் இருந்தும், ஆனால் நாம் பேச மறுக்கும், தயங்கும் ஒன்று என்றால் அது காமமும் அது சார்ந்த உணர்வுகளும் மட்டுமே. வார்த்தைகளாகவும், உரையாடல்களாகவும், விவாதங்களாகவும் எளிதாகக் கடந்து செல்ல வேண்டிய பாலியல் உணர்வுகள் சீண்டல்களாகவும், வக்கிரங்களாகவும், வன்முறைகளாகவும், வடிகால்களாகவும் வரையறையற்றுப் பல்கிப் பெருகிக் கொண்டிருப்பதைக் கண்டும், இன்னும் நமக்கு அதைப் பற்றிய புரிதலோ, அதைப் பேசுவதற்கான துணிவோ வந்து விடவில்லை.

ஆனால், காந்திஜியோ இதில் நமக்கு முன்னோடியாகவே நிற்கிறார். காமம் என்ற வார்த்தையை மறைபொருளாகக் கூட எவரும் பேசுவதற்கு விரும்பாத ஒரு காலகட்டம் அவருடையது. எனில், காந்திஜியின் இத்தகைய துணிவை என்னவென்று வரையறுப்பது..? இவைகளெல்லாம் இணைந்து தான் காந்திஜியை மகாத்மாவாக நிலைநிறுத்தியிருக்கிறது.

காந்திஜியின் அந்திம காலத்தையும், அதில் அவர் செய்த பிரம்மச்சரிய பரிசோதனைகளுமான காலத்தை தனது களமாகக் கொண்டிருக்கிறது சி.சரவணகார்த்திகேயனின் “ஆப்பிளுக்கு முன்” எனும் நாவல்.

இது ஒரு வரலாற்றுப் புனைவு. ஆனால், வாசிக்கும் போது புனைவு என்பதே மறந்து விடுகிறது. அந்த அளவிற்கு வரலாற்றோடு அவரது புனைவு இரண்டறக் கலந்து நிற்கும் நேர்த்தியான எழுத்து நடையில் சரளமாக கொண்டு செல்கிறார்.

மிருதுளா எனும் மநு என்ற சிறுமி, ஜெய்சுக்லாலின் மகள். உடல்நிலை குன்றி இருக்கும் கஸ்தூர்பாவிற்கு உதவியாக ஆகா கான் அரண்மனை சிறைக்கு வருகிறாள். அவருக்கான அனைத்து பணிவிடைகளையும் செய்து, பாவிற்கு அணுக்கமானவளாகிறாள். சிறுமியாக இருந்தாலும் அவரைத் தாயாகத் தாங்குகிறாள்.

அப்போதே, காந்திஜி தனது பிரம்மச்சரிய பரிசோதனைகளை ஆரம்பித்திருந்தார். அதில் பாவிற்கு உடன்பாடு இல்லையென்றாலும், அவர் மறுத்து எதுவும் சொல்வதில்லை. அவர் மறுப்புக்கு அங்கு எந்த மதிப்பும் இருக்கப் போவதில்லை என்று நினைத்தாரோ என்னவோ மௌனம் சாதித்தார். அதைப் பற்றிய வதந்திகள் காற்றை விட வேகமாக ஆசிரமத்தில் பரவின. அதனைத் தடுக்கும் பொருட்டு காந்திஜியே தனது பரிசோதனைகள் பற்றிய உண்மையை அவர் வெளிப்படையாக எல்லோருக்கும் அறிவிக்கிறார். விளைவு, அவரது உண்மையின் குணம் அங்கு தூற்றப்பட்டு ஒருவகை அசூயை எல்லோர் மனதிலும் நிலைக்கிறது. ஆனால், அதைப் பற்றிய கவலை அவருக்கு இல்லை.

எவ்வளவுக்கெவ்வளவு தன்னுடைய பரிசோதனைகளில் அவர் தீவிரம் கொண்டிருந்தாரோ, அந்த அளவிற்கு பாவின் உடல்நிலை சீரற்றுப் போக, அவர் இறந்து விடுகிறார். அவரது இழப்பு காந்திஜியை தாக்கியதில் அவர் உடைந்து போகிறார். அவரது உடல்நிலை சீரற்று, பின் மெல்ல மெல்ல சீராகிறது. நாளடைவில் நடைமுறை வாழ்க்கைக்குத் திரும்புகிறார்.

மநு இப்போது காந்திஜிக்கு அணுக்கமாகிறாள். அவளது எல்லாவற்றிலும் காந்திஜியே பிரதானமாகிறார். கல்வி முதற்கொண்டு எல்லாவற்றையும் காந்திஜியே அவளுக்குக் கற்பிக்கிறார்.

இந்நிலையில் கல்வியின் பொருட்டு, அவள் காந்திஜியைப் பிரிந்து வேறு ஊரில் சில காலங்கள் வசிக்கிறாள். பின்பு, நாளடைவில் அவரிடமே வந்து சேர்கிறாள். அவரது காரியதரிசியாகவும் செவிலியாகவும் மநுவே இயங்கலானாள். முழுக்க முழுக்க அவளைச் சார்ந்தே காந்திஜியும் இயங்கத் தொடங்கினார். இறுதியாக, தனது பிரம்மச்சரிய பரிசோதனைகளிலும் மநுவையே ஈடுபடுத்த ஆரம்பித்தார். அவளும் அதற்கு முழுமனதாக தன்னை அர்ப்பணிக்கிறாள்.

அவரது பிரம்மச்சரிய பரிசோதனைகளின் உச்சமான, நிர்வாணமாக பெண்களுடன் ஒன்றாகக் குளிப்பது, நிர்வாணமாக அவர்களுடன் ஒரே படுக்கையைப் பகிர்ந்து கொள்வது என மேலும் மேலும் கடும் சச்சரவுகளை ஏற்படுத்துகிறது. அவரைப் பொறுத்த அளவில் அது ஒரு வேள்வி. மநுவிற்கு அப்பரிசோதனைகளைப் பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லை. அதனால் விமர்சனங்களும் இல்லை. ஆனால், இருவரைப் பற்றிய விமர்சனங்கள் அவளைப் பாதிக்கிறது.

மநுவிற்கு முன் இச்சோதனைகளில் பங்கு கொண்ட சுஷீலாபென், பிரபாவதி, சரளா தேவி, ஆபா, கஞ்ச்சன் போன்ற பதினோரு பெண்களும் அவள் மீது பொறாமை கொண்டு மேலும் வதந்திகள் பரப்புகின்றனர். காந்திஜியின் சொல்படி அதனையும் மநு, புறம் தள்ளுகிறாள்.

இத்தகு நிலை ஆசிரமத்திற்குள்ளும் அரசியல் தலைவர்களுக்குள்ளும் கசப்பை விளைவிக்கிறது. கிருபாளனி, வினோபா பாவே, பட்டேல் ஆகிய தலைவர்கள், பிர்லா போன்ற நண்பர்கள், தேவ்தாஸ் என்கிற மகன், ஆசிரமத்தின் தொண்டர்கள் என அனைத்து புறத்திலும் கடுமையான எதிர்ப்பைப் பெறுகிறார். அதனால் அவரது பிடிவாதம் தளர்ந்தாலும், தொடர்ந்து தனது சோதனைகளை அவர் செய்து கொண்டேயிருக்கிறார்.

மநுவின் மனதில் காதல், திருமண ஆசைகளை பிறர் தூண்டுகின்றனர். ஆனால் அதனாலெல்லாம் அவள் இம்மியும் தளரவில்லை. ஆனால், காந்திஜியைப் பற்றிய அவதூறுகளினால் மனம் சஞ்சலமடைகிறாள்.

இறுதியாக தக்கர் பாபா வருகிறார். காந்திஜி மற்றும் மநு இருவரிடத்திலும் தனித்தனியாக உரையாடுகிறார். சில நேரங்களில் அது விவாதமாகவும் மாறுகிறது. காந்திஜியை விட, மநுவின் பதில்கள் அவருக்கு நம்பிக்கையை அளிக்க, அவள் மூலமாக காந்திஜியின் அச்சோதனை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

இதன் பின்னரும் காந்திஜி தனது பரிசோதனைகளை தொடர்கிறார். ஆனால், இந்த முறை வெளிப்படைத்தன்மையை மறைத்து விடுகிறார். ஒருவகையில் அது இரகசியமாக நடக்கிறது, இறுதியாக அதில் வெற்றியும் அடைகிறார்.

காமத்தை வெல்கிறார், நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கிறது, தனது உயிரையும் துறக்கிறார்.

சுதந்திரத்தை நோக்கிய தன்னுடைய செயல்பாடுகளில் எவ்வளவு தீவிரம் கொண்டிருந்தாரோ, அவ்வளவு தீவிரம் தன்னுடைய பிரம்மச்சரிய பரிசோதனைகளிலும் அவர் கொண்டிருந்தார். கூடுதலாக பிடிவாதமும் அதில் நிறைந்திருந்தது. அந்தப் பிடிவாதமே அவரது செயல்களில் வெற்றியைப் பெற்றுத் தருகிறது. ஆயினும் அதுவே அவரது பலவீனமாகவும் சுட்டப்படுகிறது. தன்னைத்தானே ஆள்வது அவரது பலமெனில், பிறரையும் ஆட்டுவிக்கும் மிகச் சராசரியான குணத்தையும் கொண்டிருப்பது அவரது பலவீனமாகக் கூறலாம். அதை இந்நாவல் மிக ஆணித்தரமாக சுட்டுகிறது.

காமம் என்பது உடலின் உணர்ச்சியா..? மனதின் உணர்வா..? அல்லது இரண்டும் கலந்த பிறிதொன்றின் வெளிப்பாடா..? இவற்றில் எதனை காமம் என்று பிரித்தெடுப்பது..? அப்படிப் பிரித்தறிதல் சாத்தியமா..? அவ்வாறு பிரித்தறிந்து விடில் அதனை வெல்வதும் சாத்தியமே. உடலின் நிர்வாணமே காம இச்சையின் முதல் நிலை. அந்த நிர்வாணம் எப்போது நம்மை சலனப்படுத்தவில்லையோ அல்லது உறுத்தவில்லையோ அப்போது நாம் காமத்தை வென்றவராகிவிடுகிறோம், என்பதன் அடிப்படையிலேயே காந்திஜி தனது பிரம்மச்சரிய பரிசோதனைகளை மேற்கொண்டு வெற்றி காண்கிறார்.

எந்த ஒன்றையும் உணர்வுப் பூர்வமாக அணுகும் போது அதன் நிறை குறைகள் நமக்குத் தெரிவதில்லை. மாறாக, உணர்வுகளுக்கு இடம் கொடாமல் நாம் அதனை ஆராய்ச்சிக்கு உட்படுத்தும் போது அதன் உண்மைத்தன்மையான நேர், எதிர் நிலைகள் நமக்கு புரியும்.

அப்படித்தான் காந்திஜியும் காமத்தை அணுகுகிறார். காமம் உணரப்படும் போது, அதில் தோய்ந்து முழுகவே உந்தித் தள்ளும். எனில், அதை நம்மால் வெல்ல இயலாது. ஆனால், அதை ஆராய்ச்சி நிலையில் வைத்து அணுகினால், அதன் பால் இருக்கும் நமது உணர்வுகள் மாறுபடும். அப்படித்தான் காந்திஜியும் காமத்தை வெல்கிறார்.

இதில் முக்கியமாக சொல்லப்பட வேண்டிய கதாபாத்திரம், மநு. அவள் ஒரு இடத்தில், “காந்திஜியின் இவ்வேள்வியில் நான் ஒரு செயப்படு பொருள்” எனக் கூறுவாள். ஆரம்பத்தில், காந்திஜியிடம் அவரது பிரம்மச்சரிய பரிசோதனை கஸ்தூரிபாவிற்கு திணிக்கப்பட்ட ஒன்றல்லவா..? என்று கேட்கும் துணிவு அவளிடம் இருப்பதையும் கூறுகிறது. ஆனால், உண்மையில் நாவல் முழுக்க அவள் செயப்படு பொருளாகவே வருகிறாள். அவளுக்கென பிரத்தியேகக் குணங்களோ, கோபங்களோ, கருத்துக்களோ என எதுவும் இருப்பதாக நாவல் கூறவில்லை. முழுக்க முழுக்க காந்திஜியின் கைப்பாவை ஆகிறாள் மநு, இல்லையில்லை மனப்பாவை என்று கூறினால் சரியாக பொருந்தும். அந்த அளவிற்கு அவரது மனதின் சிந்தனைகளுக்கு எல்லாம் செயல் வடிவமாகிறாள் மநு. அத்தகைய கதாபாத்திரம் எந்த அளவிற்கு நடைமுறையில் சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால், காந்திஜியின் வேள்விக்கு மிக வலுவான பாத்திரம் இது மட்டுமே.

தக்கர் பாபாவினுடனான காந்திஜி – மநு இருவருடைய வாத விவாதங்கள் நமது சிந்தனைகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் தர்க்கங்களுக்கும் அருமையான விருந்து. மிக ஆழமாக அழுத்தமாக தெளிவாக செல்லும் விவாதம், அதே நேரம் எவரை நம்மால் மறுக்க முடியும்..? எனும் பிரமிப்பிற்கு ஆளாக நேரிடுகிறது. அந்த அளவிற்கு உரையாடல்களில் அறிவின் செறிவும் உணர்வுகளின் நெகிழ்வும் சமமாக பாவிக்கிறது.

வர்ணனைகள் இல்லாத புனைவில் இரசிப்புத்தன்மையின் அளவு எத்தனை சதவீதம் இருக்க முடியும்..? சிறு சிறு அத்தியாயங்கள். சின்ன சின்ன வாக்கியங்கள். அடுத்தடுத்த நிகழ்வுகள், வர்ணனைகள் பெரும்பாலும் இல்லை. இவையெல்லாம் இணைந்து இவ்வரலாற்றுப் புனைவை, வெறும் வரலாறாக மட்டுமே பார்க்க வைக்கிறது அதுவே இதில் பலமும் பலவீனமாகவும் இருக்கிறது.

“காமத்தை கிசுகிசுப்பது உலக வழக்கம். அதில் இந்தியர்கள் இன்னமும் பிரத்யேகம்” என்பது நாவலில் வரும் ஒரு வரி. ஆனால், ஆசிரியர் இந்தியராக இருந்தும் அதை கிசுகிசுக்கவில்லை. மிக விரிவாகவே அலசி ஆராய்ந்திருக்கிறார். உணர்வுப்பூர்வமாகவும், ஆராய்ச்சிப்பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் என அனைத்துக் கோணங்களிலும் ஆராய்ந்திருப்பதே இதன் பலம்.

காந்திஜியே இதனை நேரடியாக எழுதியிருந்தால் கூட இந்த அளவிற்கு எழுதியிருப்பாரோ என்னவோ, ஆசிரியர் மிகச்சிறப்பாகவே படைத்திருக்கிறார்.

எதற்கும் காலம் என்ற ஒன்று இருக்கிறது. எதையும் விமர்சனத்திற்குள்ளாக்கும் இக்காலம் தான், எல்லாவற்றையும் புரிந்து கொள்ளவும் தயாராக இருக்கிறது. எனில், இந்நாவல் இக்காலத்திற்கான சிறந்த படைப்பு. மகாத்மா – காமம் – நிர்வாணம் – பிம்பம்  என்ற நால்வகை குறியீடுகளையும் நான்கு கோணங்களிலும் நாம் புரிந்து கொள்வதற்கான ஆரம்பத் திறப்பாக இப்படைப்பைக் கொள்ளலாம். அந்த வகையில், “ஆப்பிளுக்கு முன்” மனிதனின் பசிக்கு மிகச் சிறந்த உணவாக இருக்கும் அதே சமயம், அதன் தேவையின் அளவையும் உணர்த்தி விட்டே செல்கிறது.

ஆப்பிளுக்கு முன் : சி.சரவணகார்த்திகேயன்

எழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா

பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, பணி, குடும்பம் பற்றி சுருக்கமான அறிமுகம்.

1981-ல் மதுரையில் பிறந்தேன். மூன்று குழந்தைகள் இறந்த பின் வந்தவன் என்பதால் மண்ணில் தங்க வேண்டுமென பெற்றவர்கள் மதுரை பாண்டிமுனி கோயில் மண்ணில் போட்டு எடுத்தார்கள். அதுவே பெயருக்கும் காரணம். பள்ளிப்படிப்பு மதுரையில். வளர்ந்தது அம்மாச்சி வீட்டில். வாழ்ந்து கெட்ட குடும்பம் என்பதால் நிறையவே சிரமம். கல்விதான் காப்பாற்றியது. கோவையில் பொறியியல் பயின்ற காலத்திலும் ஆசிரியர் பணியே என் கனவாக இருந்தது. பணி செய்து கொண்டே தொடர்ந்த மேற்படிப்பு முனைவர் பட்டம் வரை அழைத்து வந்திருக்கிறது. ஓரிடத்தில் அதிகபட்சம் மூன்று வருடங்கள் என்ற கொள்கை காரணமாக திண்டுக்கல், பெருந்துறை, நெல்லை என பல ஊர்கள் சுற்றி தற்போது கோவையில். துணைவியார் பூமாவும் ஆசிரியைதான். கணிதம் பயின்றவர். ஒரு குழந்தை. நகுலன் அவன் பெயர

வாசிப்பு படிநிலை என்ன? பால்யகால வாசிப்பு எத்தகையது, எப்படியாக வளர்ந்தது?

நான் வாசிப்பதற்கு என் அம்மாதான் காரணம். வெகுஜன இதழ்களின் தீவிர வாசகி அவர். இன்று தீவிர இலக்கியமும் வாசிக்கிறார். பிள்ளை வெளியே சென்று விளையாடுகிறேன் என்கிற பெயரில் ஊர் சுற்றாமல் இருப்பதற்காக புத்தகங்களைக் கொடுத்துப் பழக்கியதாகச் சொல்வார். ஆனால் அவரைத் தாண்டியும் குடும்பம் மொத்தமும் வாசிப்பில் எனக்கிருந்த ஆர்வத்தை ரசித்தார்கள் என்று சொல்ல முடியும். 1985-86 காலகட்டம். சிறுவர் மலர் எனக்கு அறிமுகமாகி இருந்தது. வீட்டில் அனைவரும் திருப்பதி செல்லத் திட்டமிடுகிறார்கள். வியாழன் கிளம்பிப்போய் ஞாயிறு திரும்புவதாக ஏற்பாடு. வெள்ளிக்கிழமை சிறுவர் மலர் வாசிக்க முடியாமல் போய்விடும் என்பதால் நான் வர மறுக்கிறேன். யார் என்ன சொல்லியும் கேட்கவில்லை. இறுதியில் தாத்தா எனக்காக வீட்டில் தங்கி விட்டார். மற்றவர்கள் எல்லாம் ஊருக்குப் போனார்கள். அந்த சம்பவத்தை என்னால் இப்போதும் நினைவுகூர முடிகிறது என்பதுதான் ஆச்சரியம். அங்கிருந்து தொடங்கிய வாசிப்பு பிறகு காமிக்ஸின் வழியாக வளர்ந்தது. அவற்றின் பாதிப்பு எப்போதும் என் கதைகளில் காணக்கிடைக்கும்.

பள்ளிக்காலத்தில் சுபாவும் பட்டுக்கோட்டை பிரபாகரும் அறிமுகமானார்கள். மனித வேட்டை, இறந்தாலும் இந்திய மண்ணில் என கல்லூரிக்காலத்தில் சுபாவின் நாவல்களைத்தான் தூக்கிக் கொண்டு திரிந்தேன். மிகுதியான தொழில்நுட்ப தகவல்களைக் கொண்டிருந்தாலும் ஏனோ எனக்கு ராஜேஷ்குமாரை ரசிக்க முடியவில்லை. ஆனால் அமானுஷ்யத்தையும் ஆன்மீகத்தையும் கலந்து தந்த இந்திரா சௌந்திரராஜனின் கதைகள் வேறொரு உலகத்தில் உலாவிட எனக்கு உதவின. அவருடைய ஐந்து வழி, மூன்று வாசல் எப்போதும் மறக்கவியலாத நாவல். கல்லூரியின் இறுதிக்கட்டத்தில் விகடனின் வழியாக அறிமுகமான எஸ்.ராமகிருஷ்ணனின் துணைஎழுத்து என்னை மொத்தமாகப் புரட்டிப் போட்டது. அவருடைய கதாவிலாசம்தான் இலக்கியத்தில் எனக்கான திறவுகோல். வாழ்க்கையை வேறொரு கோணத்தில் பார்க்க புத்தகங்கள் உதவின. அதன் பிறகு கிடைத்த நண்பர் நேசமித்ரனின் அறிமுகம் புதிய காற்றைக் கொண்டு வந்தது. அதன் வழியாகவே எனக்கான உலகம் புலப்பட்டது

எழுதும் உந்துதல் எப்படி வந்தது? எழுத்தாளர் என்றுணர்ந்த கணம் என்ன?

2008 வாக்கில் நரனை ஒருமுறை மதுரையில் சந்தித்தபோது என்னுடைய வலைப்பதிவுகளை வாசித்திருந்த காரணத்தால் நீ எழுதலாமே என்று சொன்னார். அப்போதும் அதைச் சிரித்தபடி மறுத்தேன். வாசகனாக இருப்பதே போதும் என்பதுதான் என்னுடைய ஆரம்பகட்ட மனநிலை. ஒரு முறை உயிர்எழுத்தில் ஷங்கர ராம சுப்பிரமணியன் “நான் ஒரு தமிழ் பரோட்டா” என்றொரு கவிதை எழுதி இருந்தார். அதன் அரசியலைப் புரிந்து கொள்ளாமல் வாசித்த எனக்கு கடும் கோபமானது. ஏனெனில் ஷங்கர் எனக்கு அத்தனை பிடித்தமான கவிஞர். ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆத்திரத்தில் அவரைக் கிண்டல் செய்து ஒரு பத்தியை எழுதினேன். அதை மட்டும் தனியாகப் பார்த்தபோது நன்றாகயில்லை எனத் தோன்றியதால் முன்பின்னாக சில சங்கதிகளை சேர்த்து எழுதினேன். முடித்த பிறகு பார்த்தால் அந்த பகடியைத் தவிர மற்றவையெல்லாம் நன்றாயிருப்பதாக ஒரு உள்ளுணர்வு. அதை வெட்டி விட்டு மீதப் பகுதியை எல்லாம் திருத்தி எழுதினேன். அதுதான் என் முதல் கதையான நிழலாட்டம். கதை எழுதி விட்டோம் என்பதை விட நமக்கு எழுத வருகிறது என்பதே கொண்டாட்டமாக இருந்தது. நேசமித்ரனோடு இருந்த சமயத்தில் நிறைய உரையாடி இருக்கிறோம், அதன் வழியே எழுத்து பற்றி எனக்குள் ஒரு சித்திரம் உருவாகி இருந்தது – சில மதிப்பீடுகளும் இருந்தன. எதை எழுதலாம், எதை எழுதக்கூடாது என்றெல்லாம். ஆக, குறைவாக எழுதினாலும் என் மனதுக்கு நிறைவாக உணர்வதை மட்டுமே எழுத வேண்டும் என்றெண்ணிக் கொண்டேன்.

என்னுடைய மர நிறப் பட்டாம்பூச்சிகள் கதையை வாசித்து விட்டு போகன் சங்கர் சிலாகித்துப் பேசிய தருணமே எனக்குள் முழுமுற்றாக நானும் எழுதக்கூடியவந்தான் என்கிற நம்பிக்கையைத் தந்தது.

பிரசுரமான முதல் எழுத்து?

வலைத்தளங்களில் விளையாட்டாக எழுதிக் கொண்டிருந்தவனை உன்னால் எழுத முடியும் எனத் தொடர்ந்து உற்சாகமூட்டியவர் பொன்.வாசுதேவன். முடியாத கதை என்றொரு கவிதையை அகநாழிகையில் பிரசுரித்தார். கதை என்று பார்த்தால் நிழலாட்டம். யெஸ்.பாலபாரதி ஆசிரியராக இருந்த பண்புடன் என்னும் இணைய இதழில் வெளியானது. அதே கதை பிறகு மதிகண்ணனின் கதவு சிற்றிதழிலும் வந்தது.

உலக/ இந்திய/ தமிழ் இலக்கிய ஆதர்ச எழுத்தாளர்கள் யார்?

ஏனோ எனக்கும் என் அகவுலகத்துக்கும் ஐரோப்பிய எழுத்தாளர்களே நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். மனிதனின் அகவுலகை மிக விரிவாகப் பேசிய தஸ்தாவ்ஸ்கியை நான் ஒரு வரி கூட வாசித்ததில்லை என்று சொன்னால் நம்புவீர்களா? அவரை வாசிக்காமல் இருப்பது ஒருவகை அச்சம் என்று கூட சொல்லலாம். நம்முடைய குரூரங்களையும் ரகசியங்களையும் இழந்து விடுவோம் என்கிற பயம். போலவே லத்தீன் அமெரிக்க கதைகளையும் நான் குறைவாகவே வாசித்திருக்கிறேன். ரூல்போ ஒருவர் மட்டுமே எனக்கு சற்று உவப்பாயிருக்கிறார். ஆக வாழ்வை தற்செயல் நிகழ்வுகளின் தொகுப்பாகப் பார்ப்பவன் என்கிற வகையில் எனக்கான உந்துதல் ஆல்பர் காம்யூவிடம் இருந்தே கிடைக்கிறது. அந்நியன் எனக்குள் உருவாக்கிய தாக்கம் அளப்பரியது, இருப்பு சார்ந்த சிக்கலான பல கேள்விகளை மனதினில் விதைத்தது. அவருடைய எழுத்துகள் எனக்குள் கிளர்த்திய உணர்வையே நான் நம்முடைய நிலத்தில் நிகழ்த்திப் பார்க்கிறேன், அதன் வழியாக வாழ்வை விசாரணைக்கு உட்படுத்துகிறேன்.

நானும் ஒரு மொழிபெயர்ப்பாளனாக இருக்கும் சூழலில் இதைச் சற்று சங்கடத்தோடுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்திய அளவில் என்று சொல்லும்போது மலையாளமும் வங்காளியும் தவிர்த்து மற்ற மொழிகளில் இருந்து நிறைய மொழிபெயர்க்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனம். அப்படியிருக்க ஆதர்ஷம் என்றெல்லாம் உண்மையில் யாருமில்லை. பஷீரையும் சிதம்பர நினைவுகளுக்காக பாலச்சந்திரனையும் பிடிக்கும். பால் ஸக்காரியாவின் சிறுகதைகளின் மீது மகிழ்ச்சி கலந்த பொறாமை உண்டு.

தமிழைப் பொறுத்தவரை நான் எப்போதும் சொல்வது எஸ்.ராமகிருஷ்ணன். அவர் இல்லையென்றால் எனக்கு இலக்கியம் தெரிந்திருக்காது. எழுத்து மற்றும் சொல்முறை சார்ந்து என்னை மிகவும் பாதித்தவர்களெனில் கோபிகிருஷ்ணனையும் ப்ரேம்-ரமேஷையும் சொல்வேன்.

‘வலசை’ ஒரு முக்கியமான முயற்சியாக பட்டது. அதை நேசமித்திரனோடு இணைந்து முன்னெடுத்தீர்கள். அதில் உங்கள் பங்களிப்பு என்னவாக இருந்தது? வலசையின் பங்களிப்பு மற்றும் முக்கியத்துவம் பற்றி

2010-ன் பிற்பகுதி. கோவில்பட்டியில் கோணங்கியைச் சந்தித்து விட்டு நானும் நேசமித்ரனும் மதுரை திரும்பிக் கொண்டிருந்தோம். பேச்சு அப்போதிருந்த சிற்றிதழ் சூழல் குறைத்தும் இடைநிலை இதழ்களின் ஆதிக்கம் பற்றியும் திரும்பியது. குழு மனப்பான்மையால் புறக்கணிக்கப்படும் எழுத்துகள், மேலோட்டமான எழுத்துகளை தாங்கிப் பிடித்து இவைதான் இலக்கியம் என நம்பவைக்கப் பாடுபடும் இடைநிலை இதழ்களின் அரசியல் என எங்களுக்கு நிறைய கோபங்கள் இருந்தன. ஏன் இவற்றையெல்லாம் சரி செய்ய நாமே ஒரு சிற்றிதழ் ஆரம்பிக்கக்கூடாது என்று கேட்ட கேள்விக்கான விடைதான் வலசை. உலகம் முழுக்க இருக்கும் இலக்கியப் போக்கை தமிழில் பேசுவதற்கான ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என விரும்பினோம். எனவே மொழிபெயர்ப்புகளுக்கு முக்கியத்துவம் தரலாம் என்று முடிவு செய்தோம். பிறகு இதழ்களை வெறுமனே வழக்கமான சிற்றிதழாக இல்லாமல் வேறொரு வடிவத்தில் தருவதற்கான முயற்சியாக ஒவ்வொரு இதழுக்கும் ஒவ்வொரு கருப்பொருள் என்று முடிவு செய்தோம். வலசை மொத்தம் நான்கு இதழ்கள் வெளியானது. உடல் மீதான அரசியல், மூன்றாம் பாலினம், குழந்தைகளின் அகவுலகம், நாடு கடத்தப்பட்டவர்களின் படைப்புகள் என்கிற நான்கு வெவ்வேறு கருப்பொருளைப் பேசிய இதழ்கள். கடைசி இதழ் 2014 ஜனவரியில் வெளியானது. அடுத்ததாக ஓவியங்களைப் பேசுகிற ஒரு இதழைக் கொண்டு வரலாம் என்றெண்ணி பணிகளை ஆரம்பித்தோம். ஆனால் அது கனவாகவே நின்றுவிட்டது. இருவரும் அவரவர் எழுத்துகளில் கவனம் செலுத்திய காலகட்டம். இதழுக்கான நேரத்தைச் சரிவர ஒதுக்க முடியாமல் போக வலசை (தற்காலிகமாக?!!) நிறுத்தப்பட்டது.

வலசையைப் பொறுத்தமட்டில் நேசமித்ரனே அதன் ஆன்மா. நான் வலசையின் உடலாக இயங்கினேன் என்று சொல்லலாம். முதலில் கருப்பொருளைத் தீர்மானித்தபின் அதுசார்ந்த படைப்புகளை நேசன் தேர்ந்தெடுத்து அனுப்புவார். அவற்றை வாசித்து அதிலிருந்து தேவையான பகுதிகளைத் தேர்ந்தெடுப்போம். பின்னர் படைப்பாளிகள் யார் யாரென்பதையும் மொழிபெயர்ப்புகளை யாரிடம் கொடுத்து வாங்கலாம் என்பதையும் முடிவு செய்வோம். ஒவ்வொரு இதழுக்கும் எட்டு முதல் ஒன்பது மாதங்கள் ஆகும். இலக்கிய வாசகராக நிறைய எழுத்தாளர்களிடம் அறிமுகம் இருந்ததால் இதழுக்கு படைப்புகள் வாங்க அது பெரிதும் உதவியது. வடிவமைப்பில் எங்களுடைய தோழி தாரணிபிரியா மிகவும் உதவியாயிருந்தார். நான்காம் இதழை நண்பர் வெய்யில் வடிவமைத்தார். இதழை 300 பிரதிகள் அச்சிட ஆகும் பொருளாதாரச் செலவுகளை நேசனே ஏற்றார். அவற்றில் நூறு பிரதிகள் வரை இதழில் பங்கேற்றவர்களுக்கும் முன்னோடி எழுத்தாளர்களுக்கும் அனுப்பி வைப்போம். நூறு பிரதிகள் விற்பனைக்காகக் கடையில் கொடுப்போம். மீதி இருக்கும் புத்தகங்களையும் அவ்வப்போது சந்திக்கும் நண்பர்களிடம் கொடுத்து விடுவோம். இதழைத் தரமாகக் கொண்டு வந்தாலும் அவற்றை எல்லோரிடமும் சரியாகக் கொண்டுபோய் சேர்க்க எங்களுக்குத் தெரியவில்லை. என்னிடம் இப்போது நான்கு இதழ்களிலும் ஒரே ஒரு பிரதி மட்டுமே உள்ளது. நேசனிடம் அதுவும் இருக்குமா என்று தெரியவில்லை. வலசை எங்களைப் பொறுத்தமட்டில் ஒரு அற்புதமான கனவு. அதில் பணிபுரிந்த ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து வாழ்ந்தோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

வலசை வெளியான காலகட்டத்தில் அது நிறைய பேருக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. இணையத்தில் இருந்து வந்தவர்களால் சிற்றிதழ் சூழலில் என்ன பெரிதாக செய்து விட முடியும் என்று நேரடியாக எங்களிடமே சொன்னார்கள். இதழைத் தரமாகக் கொண்டு வருவதன் மூலமே அவர்களுக்கு பதில் சொல்ல முடியும் என்று நம்பினோம். ஆசிரியர்கள் என்று குறிப்பிடாமல் வலசையின் முதல் வாசகர்கள் என்று எங்களுடைய பெயரைப் போட்டதுகூட விமர்சனத்துக்கு உள்ளானது. எல்லாவற்றையும் மீறி வலசை அதற்கான நோக்கத்தில் தெளிவாக இருந்தது என்றே நம்புகிறேன். தமிழ்ச்சூழலில் அதிகம் அறியப்படாத படைப்பாளிகளைத் தேடி எடுத்து மொழிபெயர்த்தோம். இஸ்மாயில் கதாரேயின் கவிதைகளை வலசையின் முதல் இதழில் (ஆகஸ்டு 2011) சபரிநாதன் மொழிபெயர்த்தார். ஒவ்வொரு இதழுமே தனித்துவமான சில படைப்புகளைக் கொண்டிருந்தன என்று தைரியமாகச் சொல்வேன். இன்றும் எங்கிருந்தாவது யாராவது அழைத்து குழந்தைகளின் அகவுலகம் பற்றிய இதழையோ மூன்றாம் பாலினம் பற்றிய இதழையோ குறித்து உரையாடும்போது மனம் ஆசுவாசம் கொள்கிறது. காலத்தைப் போல சிறந்த நீதிபதி யாருமில்லை என்பதும் தெளிவாகப் புரிகிறது.

ஒரு மொழிபெயர்ப்பாளராக நீங்கள் தமிழுக்கு கொண்டு வரும் கதைகளை எதன் அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்? ஏனெனில் ஒரு புதிய எழுத்தாளனை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் போது அவனுடைய பலவீனமான கதையை வாசிக்க நேர்ந்தால் அவனைத் தேடிச் சென்று வாசிப்பது தடைபடும் ஆபத்து இருக்கிறதே.

மொழிபெயர்ப்பில் எனக்கு நான் வைத்துக் கொண்டிருக்கும் அளவுகோல்கள் இரண்டு மட்டுமே. 1) தமிழில் அதிகம் அறியப்படாத அல்லது வெறும் பெயராக மட்டுமே அறிமுகம் ஆகியிருக்கக்கூடிய படைப்பாளிகளையே நான் தேர்வு செய்கிறேன். போர்ஹேஸ், மார்க்குவெஸ், கால்வினோ போன்ற மாஸ்டர்கள் அதிகம் மற்றவர்களால் மொழிபெயர்க்கப்படுவதால் எனக்குள் அப்படியொரு கடப்பாடு. உதாரணத்துக்கு, டோனி மாரிசனை எடுத்துக் கொள்வோம். அவரொரு நாவலாசிரியராகத் தமிழில் நன்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால் தன் வாழ்நாளில் அவர் ஒரேயொரு சிறுகதை மட்டுமே எழுதி இருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருந்தது. அந்தக்கதையைத் தேடியெடுத்து வசனகவிதை என்ற தலைப்பில் நான் மொழிபெயர்த்தேன். 2) கதையின் சொல்முறையிலோ வடிவத்திலோ அல்லது உள்ளடக்கத்திலோ ஏதோவொரு விதத்தில் புதிதாக இருக்கும் கதைகளை மொழிபெயர்க்கிறேன்.

ஒரே ஒரு கதையை வாசித்து விட்டு யாரையேனும் மொழிபெயர்த்தால் நீங்கள் சொல்லக்கூடிய சிக்கல் நேரலாம். ஆனால் நிறைய எழுதியிருக்கும் ஒரு எழுத்தாளரை தமிழில் அறிமுகம் செய்யும்போது இயன்றமட்டும் அவருடைய மொத்தத் தொகுப்பையும் வாசித்து அதில் நெருக்கமாக உணரும் கதையைத்தான் தெரிவு செய்கிறேன். தவிரவும், இன்றைக்கு இருக்கக்கூடிய இணைய வசதிகளின் மூலம் ஒவ்வொரு கதையைப் பற்றிய அறிமுகமும் விமர்சனங்களும் எளிதில் கிடைப்பதால் மொழிபெயர்ப்பாளரின் பணி சற்று இலகுவாகிறது. நல்ல கதைகள் என்று குறிப்பிட்டுள்ள கதைகளை எல்லாம் தேர்ந்தெடுத்து வாசித்து அவற்றில் நமக்கான கதையைத் தேர்வு செய்வதும் எளிதாகிறது. என்னளவில், நான் மொழிபெயர்த்த கதைகளில் எனக்கு அத்தனை நிறைவு தராத பணி என்று சொன்னால், எருது தொகுப்பில் இடம்பெற்ற எட்கெர் கீரத்தின் டாட் என்னும் கதையைச் சொல்வேன். அதை மொழிபெயர்த்த பிறகே அதைக் காட்டிலும் நல்ல கதைகள் எனச் சொல்லும்படியான கீரத்தின் கதைகள் கிடைத்தன. அதை ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டு இப்போது இன்னும் கவனமாயிருக்கிறேன்.

இன்றைய தமிழ் சூழலில் மொழியாக்கத்தின் தேவை என்ன? நேரடியாக ஆங்கிலத்தில் வாசிக்கும் பழக்கம் பெருகியுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் பன்மடங்கு பெருகி தமிழ் வாசிப்பே அருகிவிடவும் கூடும். தன்னளவில் நீங்கள் ஓர் புனைவெழுத்தாளன் எனும்போது அதற்கு நீங்கள் அளிக்கும் முக்கியத்துவமும் உழைப்பும் நியாயம் எனப் படுகிறதா?

மீட்சி வெளியிட்ட லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள், காம்யூவின் அந்நியன் அல்லது ப்ரெவரின் சொற்களைப் போல ஒரு காலகட்டத்தின் போக்கை நிர்ணயிக்கும் மொழிபெயர்ப்புகள் இன்றைய சூழலில் சாத்தியமா எனில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இது சிதைவுகளின் காலம். நம்பிக்கைகள் தொலைந்து வேறொன்றாக உருமாறியுள்ளன. ஆனால் நிச்சயம் மொழிபெயர்ப்புகளுக்கான தேவைகளும் இருக்கவே செய்கின்றன. தற்காலப் புனைவுளின் போக்கை ஒப்பு நோக்கவும் நமக்கான பாதையைக் கண்டடையவும் மொழிபெயர்ப்புகள் கண்டிப்பாக உதவும் என்றே நம்புகிறேன். தமிழில் வாசிப்பது அரிதாகி நேரடியாக ஆங்கிலத்தில் வாசிப்பது அதிகரித்திருப்பதாகச் சொல்வதில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. மொழிபெயர்ப்புகளை அதிகம் வெளியிடும் எதிர் வெளியீடு பதிப்பகத்தோடு இணைந்து நான் செயலாற்றி வருகிறேன். மொழிபெயர்ப்புகளுக்கு மக்களிடையே இருக்கக்கூடிய வரவேற்பு அதிகரித்திருப்பதாகவே உணருகிறேன், மிகக்குறிப்பாக அபுனைவுகளில்.

தமிழின் மிக முக்கியமான கவிஞர் யவனிகா ஸ்ரீராம் மற்ற எல்லாரையும் விட தான் மொழிபெயர்ப்பாளர்களுக்கு அதிகம் கடமைப்பட்டிருப்பதாகச் சொல்வார். இல்லையெனில் ப்ரெவரும் ஃப்ரெட்டும் தனக்கு ஒருபோதும் தெரியாதவர்களாகவே இருந்திருப்பார்கள் என்று அவர் சொல்லும்போது எனக்கு மகிழ்ச்சியாயிருக்கும். எங்கோ ஒருவர் வாசித்து அவருக்கு மட்டுமே பயன்பட்டால் கூட மொழிபெயர்ப்பின் நோக்கம் நிறைவேறியதாகத்தானே அர்த்தம்? ஆக மொழிபெயர்ப்புக்கு நான் செலவிடும் நேரம் எனக்கு மன அமைதியையும் மகிழ்ச்சியையும்தான் தருகிறது. ஒரு புனைவெழுத்தாளனாக, வருடத்துக்கு அதிகம் போனால் இரண்டு கதைகள் மட்டும் எழுதக்கூடிய ஒருவனுக்கு, மொழியுடனான தொடர்பு அறுந்து போகாமலிருக்க இந்த மொழிபெயர்ப்புகள் உதவவே செய்கின்றன.

உங்கள் புனைவுகளின் மீது மொழியாக்கத்தின் தாக்கம் என்னவாக இருக்கிறது?

முடிந்தமட்டும் இதுபோன்ற சமயங்களில் இருவேறு மனிதர்களாகவே இருக்க முயற்சிக்கிறேன். என்னுடைய கதைகளை எழுதும்போது எனது வேர்கள் இந்த மண்ணில் ஆழப் புதைந்திருக்கின்றன, சூழல் என்னைச் சுற்றியதாக மட்டுமே இருக்கிறது. ஆனால் ஒரு மொழிபெயர்ப்பாளனாக நான் கூடுவிட்டுக்கூடு தாவ வேண்டியிருக்கிறது. அறிந்திராத நிலத்தையும் அதன் கலாச்சாரத்தையும் பேசும்போது இன்னும் கவனமாயிருக்க வேண்டியவனாகிறேன். சொல்லப்போனால், இந்தக் கேள்வியைச் சற்று மாற்றி கேட்டிருந்தால் சரியாயிருக்கும். ஒரு புனைவெழுத்தாளனாக மொழிபெயர்ப்புகளில் என்னுடைய குரல் தலைதூக்கி விடாமல் இருக்கவே நான் அதிகம் சிரமப்படுகிறேன். ஆடியின் பிம்பம் பிசகி விடாமல் தருவது மிக முக்கியமான கடமையாகிப் போகிறது. மற்றபடி, கதைகளை எழுதும்போது, சொல்முறையிலும் வடிவத்திலும் சில பரீட்சார்த்த முயற்சிகளைச் செய்து பார்க்க வாசிப்பும் மொழிபெயர்ப்பும் உதவத்தான் செய்கின்றன. Abstract தன்மையிலான கதைகளை எழுதும் என் பெருவிருப்பத்தை பிரெஞ்சு எழுத்தாளரான அலென் ராப் கிரியேவிடமிருந்தே பெற்றேன் எனச் சொல்லலாம்.

‘நரகத்தில் ஒரு பருவகாலம்’ பற்றிய உங்கள் முன்னுரை முக்கியமானதாக உணர்கிறேன். மொழிபெயர்க்க நீங்கள் வெவ்வேறு மொழியாக்கங்களை வாசித்து, ஒப்புநோக்குவது உங்கள் தீவிரத்தை காட்டுகிறது. ஒரு கவிதை நூலை மொழியாக்கம் செய்ததன் சவால் என்ன? ஏன் இந்நூலை தேர்ந்தீர்கள்? ஆத்மாநாம் விருது கிடைத்திருக்கும் இந்நூலை மொழியாக்கம் செய்த அனுபவத்தைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?

ரைம்போவை நான் மொழிபெயர்க்கக் காரணம் பிரம்மராஜனே. கோவையில் ஒரு நிகழ்வுக்காக வந்திருந்தவருடன் அவருடைய வீட்டுக்குப் போயிருந்தேன். என்னுடைய சிறுகதைகளை அவர் வாசித்திருந்தார். அதைப் பற்றிய உரையாடலில் கதைகளில் புலப்பட்ட மனித வெறுப்பைப் பற்றிப் பேசும்போது அவர் ரைம்போவைக் குறிப்பிட்டார். நரகத்தில் ஒரு பருவகாலத்தின் கவித்துவத்தை எடுத்துச் சொல்லி நிச்சயம் அதை வாசித்துப் பாருங்கள் என்றும் சொன்னார். வெறும் பெயராக மட்டுமே நான் அறிந்திருந்த ஒரு மகத்தான கவிஞனின் படைப்பை எனக்கு அறிமுகப்படுத்தி அதை மொழிபெயர்க்கவும் சொன்ன பிரம்மராஜனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆங்கிலத்தில் நான் வாசித்த ரைம்போவைப் பற்றிய கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டே நரகத்தின் நுழைவாயில் என்கிற அந்த முன்னுரைக் கட்டுரையை எழுதினேன். அவருடைய எழுத்துகளின் வழியே நான் ரைம்போவைப் பற்றி எனக்குள் உருவாக்கிக் கொண்ட சித்திரமும் அதற்கு உதவியது. நரகத்தில் ஒரு பருவகாலம் பற்றிப் பேசும் இந்த சமயத்தில் முக்கியமான இரண்டு சங்கதிகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1) Arthur Rimbaud என்பதன் சரியான உச்சரிப்பு ஆர்தர் ரேம்போ என்பதே. ஆனால் வேறொரு திரைப்பட நாயகனை நினைவூட்டியதால் அந்தப் பெயரை நான் பயன்படுத்த விரும்பவில்லை. தமிழ் சிற்றிதழ் சூழலில் பலகாலமாக ரைம்போ என்றே குறிப்பிட்டு வந்த காரணத்தால் அதை அப்படியே இருக்கட்டும் என விட்டு விட்டேன். 2) நரகத்தில் ஒரு பருவம் என்கிற தலைப்பில் நாகார்ஜூனன் ரைம்போவின் சில பகுதிகளை மொழிபெயர்த்து அவருடைய வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அதிலிருந்து மாறுபட வேண்டுமென்பதற்காகவே தலைப்பில் பருவகாலம் என்று குறிப்பிட்டேன். ஆனால் பாண்டிச்சேரியில் இருந்த அழைத்த பேராசிரியர் கண்ணன் பருவகாலம் என்பது நம் நிலத்துக்கு மட்டுமே உரியது என்பதைச் சுட்டினார். தலைப்பை மாற்றலாமா வேண்டாமா என்கிற குழப்பத்தோடு நண்பன் திருச்செந்தாழையிடம் பேசினேன். தலைப்பின் கவித்துவத்தை பருவகாலம் என்கிற வார்த்தையே தாங்கிப் பிடிக்கிறது என்றான் செந்தாழை. ஆக அறிந்தேதான் இந்தத் தவறுகளை நான் அனுமதித்தேன் என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

ரைம்போவின் மொழி மிக இறுக்கமானதாய் இருப்பதோடு பல்வேறு புரிதல்களுக்கான சாத்தியங்களையும் கொண்டது என்பதை வெவ்வேறு மொழிபெயர்ப்புகளை வாசித்ததன் மூலம் உணர்ந்தேன். ஒரே வரி மூன்று வடிவங்களில் மூன்று அர்த்தப்பாடுகளைத் தந்ததும் குழப்பியது. ஒன்றோடு ஒன்று தொடர்பற்ற சிதறுண்ட ஒரு பிரதியை பின்தொடர்ந்து அதன் நிழலையும் சரியாக மொழிபெயர்க்க வேண்டிய கட்டாயம். ஆக நான் என் உள்ளுணர்வை நம்பியே இந்த மொழிபெயர்ப்பில் ஈடுபட்டேன். மூன்று ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் ஒப்புநோக்கி ரைம்போவின் வரிகளுக்கு நெருக்கமென நான் உணர்ந்த வரிகளை மொழிபெயர்த்தேன். உரைநடைக் கவிதைகள் என வரும்போது அவற்றின் கவித்துவத்தை இழந்து வெற்று உரைநடை வரிகளாக மாறிவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்தோடு இருந்தேன். வார்த்தைகளைப் புதிதாகத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. நிறைய லத்தீன் மொழிச் சொற்களைப் பயன்படுத்தி இருந்தார் ரைம்போ. அவற்றின் அர்த்தம் தேடியெடுத்து வரிகளில் சரியாகப் பொருத்துவதும் அவசியமாக இருந்தது. வலசையில் சில கவிதை மொழிபெயர்ப்புகளில் ஈடுபடுத்திக் கொண்டிருந்ததும் ரைம்போவை மொழிபெயர்க்க உதவியது என்று சொல்லலாம். இதற்கு முன்னால் ரைம்போவை மொழிபெயர்த்த நாகார்ஜூனன் சங்ககாலக் கவிதைகளின் தொடர்ச்சியாக அவரைப் பார்த்தார். மொழிபெயர்ப்பிலும் அந்தத் தொனி இருந்தது. அந்த மொழியிலிருந்து வேறுபட்டு ரைம்போவை எந்த மாற்றமுமின்றி நான் வாசித்துணர்ந்த மொழியில் கொண்டு வருவதே ஆகப்பெரிய சவாலாகவும் இருந்ததென்பேன்.

சரியான ஒரு படைப்புக்கான அங்கீகாரம் என்கிற வகையில் ஆத்மாநாம் விருது ரைம்போவை மொழிபெயர்த்ததற்காக கிடைத்ததில் மகிழ்ச்சியே. அதற்கு நான் என் பதிப்பாளர் எதிர் வெளியீடு அனுஷுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பிடித்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவை எந்த வடிவத்திலிருந்தாலும் மொழிபெயர்க்க எனக்கிருக்கும் சுதந்திரம் அவரால் கிட்டியதே.

நீங்கள் கவிதை எழுதுவதுண்டா?

நான் கவிஞனில்லை என்பதை நன்கறிவேன். ஆனால் கவிதைகளை வாசிப்பது பிடிக்கும். அவை எனக்குள் வேறொரு மனநிலையை சிருஷ்டிக்கின்றன. ஒரு நல்ல தொகுப்பை வாசித்து முடித்த பிறகு அவற்றால் உண்டான இடைவெளிகளை எழுதி நிறைக்கும் முயற்சியாய் சில கவிதைகளை எழுதிப் பார்ப்பேன். அல்லது சட்டென்று தோன்றக்கூடிய படிமம் ஒன்றை வைத்து எழுதிப் பார்ப்பதும் உண்டு. கொம்பு முதல் இதழுக்கு ஒரு கவிதையை அனுப்பி இருந்தேன். வெய்யில் அதில் சில மாற்றங்களைச் செய்து ஒலிக்கிளர்ச்சி என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார். கவிஞர் ஸ்ரீசங்கரை முதன்முதலில் சந்தித்தபோது அந்தக் கவிதையை குறிப்பிட்டு நீதான் எழுதியதா என்றார். ஆமாம் என்றேன். இனிமேல் கவிதை எழுதாதே என்று சொல்லி விட்டுப் போனார். அதை எப்போதும் நினைவில் வைத்திருப்பதால் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடுவதில்லை.

நாவல் எழுதும் யோசனை உண்டா?

நாவல் எழுத வேண்டும் என்கிற ஆவல் நிச்சயம் உண்டு. ஆனால் அதற்கான பக்குவம் இன்னும் எனக்குள் கூடி வரவில்லை என்றே நினைக்கிறேன். நானும் எழுதினேன் என்றில்லாமல் வடிவரீதியாக சற்றுப் புதிதாக எதையாவது எழுத வேண்டும் என்கிற ஆசை. தமிழில் இதுவரை பொறியியல் கல்லூரி வாழ்க்கையை முழுதாகப் பேசிய ஒரு நாவலென்று ஏதும் வந்ததாகத் தெரியவில்லை, அதையும் எழுதுவேன் என்றே எண்ணுகிறேன்.

உலக சினிமா பரிச்சயம் மற்றும் ஆதர்சம் பற்றி? அவை உங்கள் எழுத்தின் மீது எந்த அளவிற்கு தாக்கம் செலுத்தியிருக்கிறது?

சாரு நிவேதிதாவின் சினிமா – அலைந்து திரிபவனின் அழகியல் என்கிற நூலின் வழியாக அறிமுகமான அலெஹாந்த்ரோ ஹொடரோவ்ஸ்கியே என் உலக சினிமா ஆதர்ஷம். காமிக்ஸிலும் அவர் வித்தகர் என்பது என்னுடைய ஈர்ப்புக்கு மற்றொரு காரணம். அவருடைய எல் டோபோவும் ஹோலி மௌண்டைனும் நான் மீண்டும் மீண்டும் பார்க்கும் படங்கள். எனவேதான் மீயதார்த்தப் புனைவாக நான் எழுதிப் பார்த்த சிலுவையின் ஏழு வார்த்தைகள் கதையை அவருக்கு சமர்ப்பணம் செய்திருந்தேன். தவிர, ஜி.முருகனின் ஏழு காவியங்களை வாசித்து விட்டு தர்க்கோவெஸ்கியின் படங்களைத் தேடிப் பார்த்திருக்கிறேன். கிம்-கி-டுக்கிடம் வெளிப்படும் வன்முறையின் அழகியல் எனக்கு நெருக்கமான ஒன்று. சமீபமாக அரனோவெஸ்கியின் (பை, ஃபௌண்டைன்) படைப்புகளை அப்படி மனதுக்கு நெருக்கமாக உணருகிறேன். அதிர்ச்சி மதீப்பீடுகளைத் தாண்டி இவர்களின் திரைப்படங்கள் உண்டாக்கும் மன அவசமும் சுயவிசாரணையும் என்னை நிறையவே தொந்தரவு செய்யக்கூடியவை. அப்படியான படைப்புகளையே நான் விரும்பிப் பார்க்கிறேன். ஒரு சில இடங்களில், வெகு குறைவாக என்றாலும், இந்தத் திரைப்படங்களின் தாக்கம் என் எழுத்தில் இருப்பதாகவே உணருகிறேன்.

பயணம், இசை, ஓவியம் போன்றவற்றில் ஆர்வம் உண்டா?

எழுத்தைத் தவிர்த்து என்னை உயிர்ப்போடு வைத்திருப்பது இசையே. ஹிந்தியில் நிறைய விரும்பிக் கேட்பேன். ரய் (Rai) இசையும் பிடிக்கும். எழுதவோ வாசிக்கவோ செய்யாத சமயங்களில் இசையோடுதான் இருக்கிறேன். பயணம் செய்வது பிடிக்குமென்றாலும் வலிந்து போவதில் உடன்பாடில்லை. மாறாக தனிமையிலிருப்பது ரொம்பப் பிடிக்கும். தேசாந்திரியை வாசித்து விட்டு ஒருமுறை இலக்கில்லாமல் பாண்டிச்சேரி, வடலூர், தஞ்சை என்றெல்லாம் சுற்றினேன். அது மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியான பயண அனுபவம். ஆனால் என் பெரும்பாலான கதைகளில் பயணமும் ஒரு முக்கியமான அங்கமாக இருப்பதை என்னால் உணர முடிகிறது. இயல்பில் என்னால் நினைத்தவுடம் போக முடியாத பயணங்களைத்தான் எழுதிப் பார்க்கிறேனோ என்னமோ? ஓவியங்களில் அவ்வளவாகப் பரிச்சயமில்லை. எனக்கு மிகப்பிடித்த மற்றொரு சங்கதி – கால்பந்து. ஆர்செனல் அணியின் தீவிர ரசிகன் நான்.

உங்கள் சிறுகதைகள் அதிர்ச்சி மதிப்பீட்டை உருவாக்க முனைகின்றன என்றொரு விமர்சனம் வைக்கப்படுவதைப் பற்றி

அதிர்ச்சி மதிப்பீடு எனும் வார்த்தைக்கு இன்னும் அர்த்தமிப்பதாக நம்புகிறீர்களா? புனைவுகளை விட வினோதமான சங்கதிகளை நாளிதழ்களில் தினந்தோறும் வாசித்துக் கடக்கும் வாழ்க்கையில் வெறும் அதிர்ச்சி மதிப்பீடுகளை மட்டும் வைத்து ஒருவர் கதை சொல்லி விட முடியாது என்றே எண்ணுகிறேன். ரயிலில் பாயும் குழந்தையும் பெருத்த மார்புகளைக் கொண்ட ஆணும் மகளின் வயதொத்தவளைப் புணர்கிறவனும் வாசிப்பவர்களுக்கு வெற்றுக்காட்சிகளாக மட்டுமே கடந்து போவார்களெனில் நான் அதை எழுத வேண்டிய அவசியமில்லை. உடலைத் தாண்டிய வெறுமையையே நான் மீண்டும் மீண்டும்  எழுதுகிறேன். இந்தக் கதைகளில் உடல் வெறும் உடலாக மட்டும் இருப்பதில்லை. இவையெல்லாம் கண்முன்னே தினம் தினம் நிகழும் வாழ்வின் அபத்தத்தையும் செய்வதறியாமல் மூச்சு முட்டி நிற்கும் மனதின் பதற்றத்தையுமே பேச விழைகிறேன். ஒரு இளம் எழுத்தாளர் சில காலத்துக்கு முன் என் கதைகளை வாசித்து விட்டு அவை நன்றாயிருப்பதாகச் சொன்னார். ஆனால் தன்னுடைய வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக சமீபத்தில் ஒரு குறுந்தகவலை அனுப்பி இருந்தார். மறுவாசிப்பில் வன்முறையைத் தவிர இந்தக் கதைகளில் வேறொன்றுமில்லை என்று உணர்ந்ததாகச் சொன்னார். எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. என் கதைகளை நான் நியாயப்படுத்த விரும்புவதில்லை. எழுதி முடித்தவுடன் அவற்றைக் கைவிடவே ஆசைப்படுகிறேன். என்றாலும், குறைந்தபட்சம் அவை விசாரணைக்குட்படுத்தும் சங்கதிகளைப் பொருட்படுத்தாமல், அவற்றைக் கடந்து போவதற்கான எளிய பாதையைத் தேர்வார்களெனில் நான் ஏதும் செய்ய முடியாது.  நவரசங்களில் அருவருப்பும் ஒன்றுதானே? ஜி.நாகராஜன் சொன்னதைத்தான் நானும் நினைத்துக் கொள்கிறேன்.

நவீன தனி மனிதனுக்கு தொன்மங்கள், நாட்டாரியல்போன்றவை தேவையில்லை என்று எண்ணுகிறீர்களா? அல்லது அதிலிருந்து துண்டித்து கொண்டவன் தான் நவீன மனிதன் என்பது உங்கள் பார்வையா? அரிதாகவே உங்கள் கதைகளில் தொன்மங்கள் கையாளப்படுகின்றன. அப்படி கையாளப்படும்போதும் அவை தலைகீழாக்கம் பெறுகின்றன.

நீ ஒரு அவாண்ட்-கார்டே ஆள் என்று போகன் சங்கர் அடிக்கடி என்னைக் கேலி செய்வதுண்டு. செவ்வியல் படைப்புகளில் எனக்கு அவ்வளவாக ஆர்வமிருப்பதில்லை. அவற்றை சரியாக உள்வாங்கிக் கொள்ளவியலாத என்னுடைய போதாமையும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். முழுக்கவே நவீன் தொழில்நுட்ப ஊடகங்கள் சூழந்திருக்கும் நவீன மனிதனின் வாழ்வில் தொன்மங்களும் நாட்டாரியலும் என்னவாக இருக்கின்றன என்கிற குழப்பம் எனக்கிருப்பது உண்மையே. துண்டித்துக் கொண்டவன் எனச் சொல்லுவதை விட துண்டிக்கப்படுகிறான் என்பதே சரியாக இருக்கக்கூடும். எனவேதான் அறத்தைப் பேசுகிற தொன்மங்களை எடுத்துக் கொண்டு அதற்கு நேரெதிர் நிலையில் தலைகீழாக மாற்றுகிறேன். காட்டிக் கொடுத்தவனை இயேசு கொலை செய்திட, கர்ணன் தன் வாக்கை மீறி அர்ஜூனனைக் கொல்வதோடு தன்னயும் மாய்த்து குந்தியைப் பழிவாங்குகிறான். இவையே இன்றைய சூழலுக்குப் பொருந்தும் என்கிற அறம் பேசும் எதையும் நம்பாத எளிய மனம் என்னுடையது. முழுக்க முழுக்க தொன்மங்களை மட்டும் பேசுகிற ஒரு கதையை எழுத வேண்டும் என்கிற ஆசையும் இருக்கிறது. அதற்கான மொழியும் மனநிலையும் வசப்படும் காலத்தில் நிச்சயம் எழுதுவேன்.

நவீன தனி மனிதனின் மிக முக்கியமான சிக்கல் என்னவென எண்ணுகிறீர்கள்?

காற்றுக்குமிழியைப் போல மனிதனைச் சுற்றிச்சுழலும் அவநம்பிக்கைதான் நவீன தனி மனிதனின் மிக முக்கியமான சிக்கல் என எண்ணுகிறேன். உறவுகள் மற்றும் நம்பிக்கைகளின் இடத்தை ஊதிப் பெருக்கப்பட்ட ஊடக பிம்பங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. என்றாவது ஒரு நாள் எதிர்பாராத தருணத்தில் அந்தக்குமிழி வெடித்துச் சிதறும்போது அவன் மொத்தமாகத் தன்னைத் தொலைக்கிறான். அதிலிருந்து ஒருபோதும் மீள முடியாதவனாக இருக்கிறான்.

உங்கள் எழுத்து அரசியலுடன் தொடர்பற்று உள்ளது என்றொரு விமர்சனம் வைக்கப்படுவதைப் பற்றி..

காலம் காலமாகச் சொல்லப்படும் விமர்சனம்தான். தனி மனிதனின் உலகை எழுதும்போதே அவனை அந்த இடத்துக்கு நகர்த்திச் செல்லும் சமூகத்தைப் பற்றிய விமர்சனம் மறைமுகமாக வைக்கப்படுகிறதுதானே? அவனுடைய சிக்கல் என்பது அவனுடைய பிரச்சினைகள் மட்டும்தானா? பிரச்சாரம் செய்யும் கதைகளை என்னால் எழுத முடியாது. எனது நம்பிக்கைகளின் பாற்பட்டே நான் இயங்குகிறேன். அரசியலற்றிருப்பதின் அரசியல் என்பதை கோணங்கியிடம் இருந்தே கற்றேன். அதை இன்றளவும் நம்புகிறேன்.

மர நிறப் பட்டாம்பூச்சிக்கு என்னவிதமான விமர்சனங்கள், கவனம் கிட்டின

தொகுப்பை வாசித்தவர்கள் அனைவருமே அந்தக் கதைகளை எளிதில் கடந்து போக முடியவில்லை என்பதையும் ஏதோ ஒரு இடத்தில் தங்களைப் பொருத்திப் பார்க்க முடிந்ததாகவும் சொன்னார்கள். ஒருவகையில் என் கதைகளின் நோக்கம் அதுதான் என்னும்போது மகிழ்ச்சியாக உணர்ந்தேன். லக்ஷ்மி சரவணகுமாரும் போகனும் தொகுப்பைப் பற்றிய அறிமுகக் குறிப்புகளை எழுதித் தந்தார்கள். தொகுப்பை வெளியிட்டுப் பேசிய அர்ஷியா கதைகளில் காணக்கிடைத்த புதிய குரலை சிலாகித்தார். முதல் விமர்சனத்தை எழுதிய வாமு கோமுவுக்கு கதைகளில் இடம்பெற்றிருந்த கனவுகள் ரொம்பப் பிடித்திருந்தன. வெளியான இரண்டு மாதத்தில் வாசகசாலையின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது கிடைத்தது. அந்த சமயத்தில் ராஜ சுந்தரராஜன் ஒரு விமர்சனம் எழுதினார். உலகத்தரத்திலான கதைகள் என்கிற அவருடைய வார்த்தை மிகுந்த உற்சாகத்தைத் தந்தது. மதுரையில் புனைவு செந்தி ஏற்பாடு செய்த கூட்டத்தில் கணேசகுமாரன் ஒரு கட்டுரை வாசித்தார். சிறிது காலம் கழித்து நெல்லையில் தமுஎகச சார்பில் நடந்த கூட்டத்தில் தோழர்கள் மணிமாறனும் உதயசங்கரும் தொகுப்பு குறித்துப் பேசினார்கள். இவை இரண்டைத் தவிர வேறு எந்த கூட்டமும் நடைபெறவில்லை. புத்தகம் வெளியான சமயத்தில் கிட்டத்தட்ட முப்பது பேருக்கு தொகுப்பை அனுப்பி வைத்தேன். முகநூலில் ஒரு சில நண்பர்கள் குறிப்புகளாக எழுதினார்கள் என்பதைத் தாண்டி பெரிய சலசலப்பு ஏதும் ஏற்படவில்லை. தொகுப்பு இன்னும் கொஞ்சம் கவனிக்கப்பட்டிருக்கலாமோ என வருத்தமாக இருக்கும்போதெல்லாம் ராஜ சுந்தரராஜன் எழுதிய விமர்சனத்தை எடுத்து வாசிப்பேன். சரியாகச் செய்திருக்கிறோமா என்பதை விடத் தவறாக ஏதும் செய்து விடவில்லை என்பதை எனக்குள் உறுதி செய்து கொள்ளும் வழிமுறையாக அதைப் பின்பற்றினேன். ஆத்மாநாம் விருது இப்போது வேறொரு வகையில் நண்பர்களிடம் என்னுடைய சிறுகதைகளையும் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது. சொல்வனத்தில் கிரிதரன் எழுதிய கட்டுரையை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. எல்லாவற்றையும் விட மகிழ்ச்சியைத் தந்த வேறொரு சங்கதியும் உண்டு. திருச்சியைச் சேர்ந்த வாசக நண்பரொருவர் தொகுப்பை வாசித்து விட்டு கைப்பட எழுதியனுப்பிய இருபது பக்க கடிதம் என்னளவில் ஒரு பொக்கிஷம்.

சிறுகதைகளை எழுத எடுத்துகொள்ளும் நேரம் எவ்வளவு? திருத்தி எழுதும் வழக்கம் உண்டா?

சிறுகதைகளை நான் மனதுக்குள்தான் முதலில் எழுதிப் பார்க்கிறேன். கதைக்கான கரு என்னுள் தோன்றும் சமயத்தில் அதை அப்படியே விட்டு விடுவேன். பிறகு அந்தக்கதைக்கான இன்னபிற சங்கதிகள் மனதுக்குள் சேகரமாகிக் கொண்டே இருக்கும். இதுதான் வடிவம் என்பது எனக்குள் ஒரு மாதிரி உருவாகி நிற்கும் தருணத்தில் வாய் வார்த்தையாக கதையை ந.ஜயபாஸ்கரனிடம் சொல்லிப் பார்ப்பேன். ஒரு முறை கூட அந்தத் தங்கமான மனிதர் நான் சொல்லும் எதையும் நன்றாகயில்லை என்று சொன்னதே கிடையாது. அந்த வடிவத்தில் எனக்கு திருப்தி என்றான மறுகணம் எழுத உட்காருவேன். என்னுடைய கதைகள் எல்லாமே அநேகமாக ஒரு நாள் இரவுக்குள் எழுதப்பட்டவைதான். கணிணியில் நேரடியாக எழுதும் பழக்கம் கொண்டவன் நான். முழுமூச்சாக எழுதி முடித்தவுடன் இரண்டு பேருக்கு அனுப்புவேன். அவர்களில் ஒருவர் போகன், மற்றவர் ஏற்கனவே சொன்னதுபோல ந.ஜயபாஸ்கரன். அவர்கள் சொல்லும் திருத்தங்களைச் செய்து முடித்தபிறகே கதைகளை பிரசுரிக்கத் தருவேன்.

எழுத்து சார்ந்து ஏதேனும் செண்டிமெண்ட்ஸ் உண்டா, இடம், கணினி, காலமென

அது மாதிரி ஏதும் கிடையாது. ஆனால் எழுதும் காலம் இரவாயிருந்தால் சற்று ஆசுவாசமாக இருக்கும்.

உலக இலக்கியங்களை வாசிப்பவர் எனும் வகையில், சமகால தமிழ் இலக்கிய சூழலின் நிலை எத்தகையதாக உள்ளது, அதன் செல்திசை என்னவாக இருக்க வேண்டும், அதன் சிக்கல்கள் என்ன?

நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம், என்றாலும் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம்தான். சமீபத்தில் சேலத்தில் நடந்த ஒரு கூட்டத்தின் போது ஜி.முருகனோடு வெகுநேரம் புனைவுகள் குறித்து உரையாட முடிந்தது. எத்தனை பேசினாலும் இறுதியில் நம் புனைவுகள் யதார்த்தத்தளத்தை விட்டு ஏன் வெளியேற மறுக்கின்றன என்கிற முக்கியமான கேள்வியை எழுப்பினார். மிகுபுனைவுகளிலும் வடிவங்களிலும் நாம் வெகு குறைவாகவே எழுதிப் பார்த்திருக்கிறோம் என்பதுதான் உண்மை. அதற்கான அடிப்படைக் காரணமாக உணர்வுகளுக்குப் பழக்கப்பட்டுப்போன தமிழ் மனதைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. மிகுந்த கவித்துவமான சுழல் வரிகளின் வழியாகக் கோணங்கியும் தன் பால்யத்தையும் தொலைந்து போன காலத்தையும்தான் (நாஸ்டால்ஜியா) பேசுகிறார் எனும்போது நம்மால் அதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். எல்லாவற்றிலும் இழந்த வாழ்க்கையையும் அதன் மென்னுணர்வையும் தேடும் மனம். அதிலிருந்து விலகி புதிய நிலங்களில் பாதைகளில் பயணிக்கும்போது தமிழ்ச் சிறுகதைகள் இன்னுமதிக உயரத்தை எட்டக்கூடும். பாலசுப்பிரமணியன் பொன்ராஜ், சிவசங்கர் எஸ்ஜே போன்றவர்கள் இன்று அதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது சற்று ஆறுதலான சங்கதி.

நவீன தமிழ் எழுத்தாளனின் சவால்கள் என எதைச் சொல்வீர்கள்?

நவீன தமிழ் எழுத்தாளனுக்கு இருக்கக்கூடியவை இரண்டு சவால்கள். முதலில், அவன் எதை எழுதுவது என்பது. எண்பதாண்டு காலம் பல ராட்சதர்கள் நடந்துபோன பாதையில் அவர்களனைவரின் எழுதிச்சென்ற பாரத்தையும் தாங்கிக்கொண்டு நடக்க வேண்டியவனாகிறான். அவர்களை எல்லாம் தாண்டி புதிதாக எதைச் சொல்கிறான் என்பதும் அதனை எத்தனை துல்லியமாகச் சொல்ல முடிகிறது என்பதும்தான் அவன் முன்னாலிருக்கும் ஆகப்பெரிய சவால். இரண்டாவதாக, இன்று உருவாகி இருக்கக்கூடிய வாசிப்புச்சூழல். மிகுந்த வருத்தத்தோடுதான் இதைச் சொல்கிறேன், வாசிப்பு ஒருவகை மோஸ்தராகிப்போன காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். முன்னெப்போதையும் விட கூட்டங்கள் அதிகமாக நடத்தப்படுகின்றன. நிறைய வாசிக்கிறார்கள். ஆனால் அவற்றுள் தரமானவற்றைத் தேடிக் கண்டடையும் வாசகர்கள் உண்மையில் எத்தனை பேர்? தேடல் என்பது அரிதாகி விட்ட சூழலில் அமர்ந்திருக்கும் இடத்தில் கிடைப்பதை வாசித்து விட்டு பெரிதாகப் பேசும் மக்களுக்கிடையேதான் ஒருவன் இன்னும் தீவிரமாக எழுத வேண்டியிருக்கிறது.

இறுதியாக எதற்காக எழுதுகிறேன் என்றொரு வினா எழுப்பினால் என்ன சொல்வீர்கள்

எழுத்து எனக்கான போதை. ஒரே போதை.

ஆழ்வகுப்பு, உயிர்க்கனம் – ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்

ஹூஸ்டன் சிவா

ஆழ்வகுப்பு

வகுப்பில் அன்றுவரை அமையாக் கவனம்
அவளில் கூர்மை கொண்டிருந்தது
அங்கே
ஆண்பெங்குவின்கள் அடைகாத்தன
வானவில்லின் வண்ணங்கள் கட்டவிழ்ந்தன
பூகோள அட்சரேகைகள் நிரைவகுத்தன
இருபடிச் சூத்திரங்கள் பொலிவு பெற்றன
வேதிச் சமநிலைகள் இறுக்கமடைந்தன
வெண்பாக்கள் வெளிச்சம் கொண்டன
சூரியனின் குறுக்கே கோள்கள் ஓடின
கருந்துளைகள் நட்சத்திரங்களை உண்டன
ஆழ் கிணற்றில் மட்டுமே அமையும்
சலனமின்மை அருகமைய
தன்னைச் சுற்றிப் பார்த்தாள்
வகுப்பெங்கும் அரவங்கள் அமர்ந்து
அசையா விழிகளுடன் பாடம் கேட்டன
சாளரக் கம்பிகளில் சுற்றியிருந்த
அன்னையின் வால்நுனி சுருண்டவிழ்ந்தது
அவள் படம் கூரை மேல் கவிந்திருந்தது
நேற்றிரவு கடவுள் கனவில் தோன்றி
என்ன வேண்டுமென கேட்டபோது
தன்னையும் தன் அன்னையையும்
பாதாள உலகமொன்றில்
அடைத்து விட வேண்டியிருந்தாள்
இவ்வுலகம் மிகவும் பிடித்துப் போயிற்று
இங்கேயே இருந்து விடுவதாக
முடிவெடுத்து விட்டாள்

உயிர்க் கனம்

புதிதாய்ப் பிறந்த ஈசல்கள்
விரைந்தெழுந்து விண்மீன்களை
விழுங்கத் தொடங்கின
விண்மீன்கள் குறைந்த கருவெளி
தன்னை நிரப்பிக் கொள்ள
மேலும் விண்மீன்களைப் பிறப்பிக்க
புதிதாய் பிறந்த விண்மீன்களை
தொடர்ந்து விழுங்கின ஈசல்கள்
பெரும் வெளிச்சக் குவியல் ஒன்று
பிரபஞ்சமெங்கும் அலைந்து திரிந்தது
நிலைகுலைந்து திகைத்த கருவெளி
ஈசல் கூட்டத்துடன்
ஒரு உடன்படிக்கை மேற்கொண்டது
ஈசல்கள் அனைத்தையும்
விண்மீன்களாக மாற்றி
அழியா வரம் அளிப்பதாக
ஒரு நிபந்தனை மட்டுமே;
இடம் பெயரால் ஓரிடத்தில் இருந்து
ஒளிர்ந்து கொண்டே இருப்பது தான் அது.
பெரும் ஆர்ப்பரிப்புடன் எழுந்து
விண்ணை நிரப்பின ஈசல்கள்
தமக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில்
நிலைபெற்று ஒளிரத் தொடங்கின
இயங்காமையின் இயலாமையில்
ஒரு கணத்திலேயே மனம் பிரண்டன
பிரபஞ்ச விதியின் மூர்க்கம்
உயிரின் துள்ளலை நிறுத்திய
அதே கணத்தில்
விண்மீன்களை உமிழ்ந்து
மடிந்து கருவெளியை நிரப்பின
மேலும் மேலும் விண்மீன்கள்
பிறந்த வண்ணம் இருந்தன

அழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018

உணவே மருந்து என்றொரு கூற்றுண்டு. உடலை வருத்தாமல் அதை மகிழ்விக்கும் உணவை உண்பவர்களுக்கு வேறு மருந்து தேவையில்லை. உணவின் சாறை மருந்தென பிரித்தெடுத்து, அது தேவையான உடலுக்கு வழங்கப்படுகிறது. வாசிப்பை மனதின் ஒருவகை உணவென்று கூறலாம். தத்துவ வாசிப்பு, மனதைக் கூர்மையாக்கி நுண்ணுணர்வுடன் வாழ உதவுகிறது. தத்துவத்தின் சாறை பிழிந்தெடுத்து புனைவென்னும் இனிப்பைக் கலந்து வைத்திருக்கும் மருந்தாக, இமைக்கணம் நாவல் தத்துவத்தின் செறிவுடனான வாசிப்பை வழங்குகிறது. இதை தீவிரமான மனநிலையுடன் மட்டுமே வாசிக்க முடியும். அவ்வாறு வாசிக்க முடிந்தால், மனதின் அடியாளம் வரை உள்ள நோய்மையை அகற்றவும் கூடும் – விடுதலை, அடையும் ஒன்றல்ல. மாறாக தளைகளற்ற இருப்பே அது..

ஜெயமோகனின் வெண்முரசு நாவல் வரிசையில் பதினேழாவது நாவல் இமைக்கணம். பாண்டவர் தரப்பு பாரதப் போருக்கான தயாரிப்புகளில் இருக்கும் நிலையில், கிருஷ்ணன் போரில் நேரடியாக கலந்து கொள்வதில்லை என உறுதியெடுத்திருப்பதால், நைமிஷாரண்யம் என்னும் காட்டில் சென்று தன்னில் ஆழ்ந்திருக்கிறார். திரேதாயுகத்தில், ராமாவதாரத்தின் இறுதியில், யமன் அடைந்த அறச்சிக்கலுக்கு விடை காணும் பொருட்டு, காத்திருந்து, துவாபரயுகத்தின் இறுதியில் நைமிஷாரண்யத்தில் இருக்கும் கிருஷ்ணனிடம் யமன் கேட்கும் கேள்விகளும், அவற்றிற்கு கிருஷ்ணனின் பதில்களும், பதில்களை அடைவதற்கு யமன் அடைந்த அனுபங்களுமாக இமைக்கணம் நாவல் புனையப்பட்டுள்ளது.

மனிதர்கள் அடையும் பெருந்துன்பமும், துன்பத்திலிருந்து மீட்சிக்கான வழிகளுமே இதன் களமாகும். உச்சக்கட்ட துன்பத்தில் உழல்வதை வேள்வி என்றும், அதை யாதனாயக்ஞம் என்னும் சொல்லாலும் இமைக்கணம் குறிப்பிடுகிறது. யாதனா என்னும் சொல்லை தொடர்ந்தபோது, பைரவயாதனா (https://youtu.be/rgDQoGx0czY) என்னும் இந்தக் குறிப்பு கிடைத்தது. இக்குறிப்பின்படி, மரணத்திற்கு முந்தைய கணத்தில், கணநேரத்தில் மனிதர்கள் அவர்களுக்கான அனைத்து கொடுந்துன்பங்களையும் மிகமிக வேகமாக அனுபவித்துத் தீர்ப்பது பைரவயாதனா எனப்படுகிறது. இது வாழ்க்கையின் தளைகளிலிருந்து விடுதலை பெற்று மரணிக்கும் வாய்ப்பை மனிதர்களுக்கு வழங்குகிறது. இமைக்கணத்தின் பேசுபொருளும் கிட்டத்தட்ட இதுவேதான். நைமிஷாரண்யத்தில் கிருஷ்ணனை சந்திக்கும் ஆளுமைகள், கணநேரத்தில் தங்கள் நெடுவாழ்க்கையை வாழ்ந்தறிகிறார்கள். அறிவின் விடுதலையோடு மீள்கிறார்கள்.

இந்த நாவல் பன்னிரண்டு பகுதிகளாகக் விரிந்துள்ளது. முதல் பகுதி ‘காலம்’. காலத்தை நாமறியும் காலத்திலிருந்து விலக்கி உள்ளத்தின் காலமாக விரித்தும் சுருக்கியும், தத்துவக்களத்தை உள்வாங்கும் மனநிலையை இப்பகுதி வாசகனுக்குள் ஏற்படுத்துகிறது. தன் செயலில் எழுந்த அறச்சிக்கலை உணர்ந்த யமன், அதைப் போக்கும்பொருட்டு தன் தொழிலை விடுத்து, தவத்தில் மூழ்குகிறார். இதனால் பூமியில் இறப்பு இல்லாமல் போகிறது. இறப்பிலிருந்து விடுபடும் உயிரினங்கள் முதல் கணத்தில் அதைக் கொண்டாடுகின்றன. ஆனால் அவை இறப்பிலிருந்து விடுபடவில்லை, இறப்பு இல்லாமல் போவதால் அங்கு விடுபடுதல் என்பதற்கான கேள்வியே இல்லை என்பதை அறிவதுடன், இருப்பும் இல்லாமல் போய்விடுகின்றன என்பதை, அந்த நேரத்திலும் தன்னுணர்வை இழக்காமல் இருக்கும் தியானிகன் என்ற புழுவும் பிரபாவன் என்ற பறவையும் அறிகின்றன. தியானிகனும் பிரபாவனும் ஒன்றையொன்று எதிர்கொள்ளும் தருணத்தில் அவை அடையும் சிக்கல்களும், விளைவாக அவற்றின் செயல்களும், செறிவான தத்துவம் தொன்மம் குறியீடுகள் ஆகியவற்றின் மூலம் விவரித்து, இந்த நாவலுக்கான களத்தை உருவாக்குகிறது. அனைத்து உயிர்களுக்கும் மரணம் தவிர்க்க முடியாத ஒன்று என்பதையும், இறப்பினாலேயே இருப்பு அர்த்தம் கொள்கிறது என்பதையும், இறப்புக்கும் இருப்புக்கும் இடையே உள்ள ஊடாட்டங்கள், செயல்கள், இன்ப துன்பங்கள் மூலம் வாசகனுக்கு உணர்த்துகின்றது. தியானிகனும் பிரபாவனும் தமது கூட்டுச் செய்கையால், கிருஷ்ணனின் மூலம் யமன் தன் சந்தேகத்துக்கான விடையை அடைய முடியும் என்பதை நாரதர் வழியாக யமனை அறியச் செய்து, தன் தொழிலுக்கு மீளச்செய்கின்றன.

இரண்டாம் பகுதி ‘இயல்’. இதில் கிருஷ்ணன் நைமிஷாரண்யத்துக்கு வந்ததை அறிந்த யமன், தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக பூமிக்கு மானுட வடிவில் வருகிறார். மானுட வடிவென்பதால் அவர் எண்ணங்களும் மானுட மொழியிலேயே அமைந்திருக்கிறது. தன் சந்தேகங்களை மானுட மொழியில் வெளிப்படுத்த இயலாத யமன், அவை  மானுட வாழ்க்கையில் என்னவாக நிகழ்கிறதென்பதைக் கொண்டே சொல்வடிவாக்க முடியும் என்பதை அறிகிறார்.

மனிதன் வாழ்ந்த வாழ்வை நனவு மனம் தொகுக்கிறது. கனவு மனம் அவற்றை நினைவுகளாக்குகிறது. ஆழ்மனம் அவற்றை குறியீடுகளாக்குகின்றன. துரியம் அவற்றை இன்னும் செறிவடையச் செய்து மாத்திரைகளாக மாற்றுகின்றன. மனதின் இந்த நான்கு நிலைகளும் சேர்ந்து மனித ஆளுமையை உருவாக்குகிறது. எனவே கிருஷ்ணனைக் கண்டு, தன் ஐயங்களை வினவ தீவிரத்துடன் இருக்கும் மனிதனின் மனதில் புகுந்து, மனதின் நான்கு நிலைகளிலும் கண நேரம் அமைந்து எழுந்தால் அந்த மனிதனாகவே மாறிவிட முடியும் என்று மனித ஆளுமையின் வரையறையை அளித்து, ஒரு மனித மனதின் இந்த நான்கு நிலைகளையும் அறிவதன் மூலம் அந்த ஆளுமையாகவே மாறிவிடமுடியும் என்றும் யமனுக்கு நாரதரால் கூறப்படுவதாக புனையப்பட்டுள்ளது.

அந்தக் கணத்தில் கிருஷ்ணனைக் காண வேண்டும் என்னும் பெருவிருப்புடன் தன் அரண்மனையில் இருந்த கர்ணனின் மனதில் கணநேரம் புகுந்து வெளிவந்த யமன், நைமிஷாரண்யத்தில் கர்ணனாக கிருஷ்ணனின் குடிலுக்குச் செல்கிறார். கர்ணன் இயல் வாழ்க்கையில், ஷத்திரியன் இல்லை என்னும் காரணத்தால் புறக்கணிக்கப்பட்டவன். கிடைக்க வேண்டியவை மறுக்கப்பட்டவன். விரிவான தத்துவ விளக்கங்களின், கனவு நிலைக்காட்சிகளின் மூலம் வாழ்க்கை எவ்வாறு இருக்கிறதோ அவ்வாறு இல்லாமல் அவன் விரும்பியபடி இருந்தால், வாழ்வு எவ்வாறு துயரமானதாக பொருளற்றதாக இருக்கும் என்பதையும், இயல் வாழ்க்கையில் இயைந்து செயலாற்றுவதே கர்ணனுக்கான மெய்மையின் வழி என்பதையும் இப்பகுதி விளக்குகிறது.

மூன்றாம் பகுதி ‘ஒருமை’. இயல்வாழ்க்கைக்கான மெய்மையில் மட்டும் நிறைவடையாத யமன், அடுத்ததாக இயல் வாழ்க்கையில் இயைந்து வாழ்ந்து ஆனால் அதைக் கடந்து செல்ல முடியாமல் வருந்தும் பீஷ்மரின் உளத்தில் புகுந்து, பீஷ்மராக நைமிஷாரண்யத்திற்கு வருகிறார். அவருக்கு செயலை யோகமெனச் செய்து அதைக்கடந்து செல்வதற்கான செயல் யோகம் உரைக்கப்படுகிறது.

அடுத்ததாக ‘அறிவு’ என்னும் பகுதியில், தன் ஒற்றை நோக்கத்தில் சந்தேகத்தை அடையும் சிகண்டிக்கு சந்தேகம் போக்கப்பட்டு செயல் ஞானம் போதிக்கப்படுகிறது. ‘விடுதல்’ என்னும் பகுதியில் விதுரராக வரும் யமனுக்கு, தான் கொண்டவையிலிருந்து விடுபட்டு செல்லும் விடுதலை குறித்து உணர்த்தப்படுகிறது. ‘ஊழ்கம்’ என்னும் பகுதியில் சொல் விளைவிக்கும் வியாசருக்கு, சொல் அடங்கும் ஊழ்கம் சொல்லப்படுகிறது. ‘மறைமெய்’ என்னும் அடுத்த பகுதியில், அனைத்தையும் கற்றறிந்த யுதிஷ்டிரருக்கு கற்றறிந்தவற்றிற்கு அப்பால் இருக்கும் மறைஞானம் கூறப்படுகிறது. ‘சுடர்வு’ என்னும் பகுதியில். திரௌபதியின் உள்மன ஆழங்களை அவளுக்கு உணர்த்தி, சுடரொளி போல் கனிவால் அனைத்தையும் ஒளி பெறச் செய்வதன் மூலம் அவளுக்கான மெய்மையை அடைய வழிகாட்டப்படுகிறாள். ‘சொல்’ பகுதியில் வேதம் உரைக்கும் வைதிகர்கள், தாங்கள் உரைக்கும் வேதத்தின் மீதும் இயற்றும் வேள்விகளின் மீதும் கொள்ளும் சந்தேகங்கள் கிருஷ்ணனால் அகற்றப்படுகின்றன. ‘பொருள்’ என்னும் பகுதியில், உதங்கர் என்னும் வேதாந்தி, வேதாந்த தத்துவங்களின் மேல் கொள்ளும் ஐயங்கள் உரிய விளக்கங்களால் அகற்றப்படுகிறது. இறுதியாக ‘முழுமை’ என்னும் பகுதியில் முழுமையடைந்த சுகர் என்னும் முனிவர் வழியாக முழுமையின் இயல்பு யமனுக்கு உணர்த்தப்படுகிறது. இந்த பத்து நிலைகளில் யமன் அறக்குழப்பபத்திலிருந்து முழுமையாக விடுபட்டு யம உலகிற்கு மீண்டு செல்கிறார். நாவலின் இறுதிப்பகுதியான இறைப்பாடலில், முந்தைய பத்து நிலைகளில் கூறப்பட்டவைகள் தொகுக்கப்பட்டு, பகவத்கீதையாக அர்ஜூனனுக்கு கிருஷ்ணனால் உரைக்கப்படுகிறது.

இங்கு உரைக்கப்படும் மெய்மைகள், யமனுக்கு உரைக்கப்படுகிறதா அல்லது, யமனாக வரும் ஆளுமைகளுக்கு உரைக்கப்படுகிறதா என வாசகனுக்கு இயல்பாகவே எழும் சந்தேகம், அவர்கள் தங்கள் ஆழ்கனவில் அவற்றை உணர்ந்தார்கள் என இறைப்பாடல் பகுதியில் யுதிஷ்டிரனாலும் அர்ஜூனனாலும் போக்கப்படுகிறது.

இமைக்கணம் ஆசிரியர் ஜெயமோகன், ”சுத்த அத்வைதம்” என்னும் தத்துவமுறையை தனக்கானதாகக் கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். எனவே இயல்பாகவே இதில் கூறப்பட்டிருக்கும் தத்துவ விளக்கங்கள், அத்வைதத்தை நோக்கியே இருக்கக் கூடும். அதனால் பிற தத்துவ மரபுகளை தங்களுக்கானதாகக் கொண்டவர்களுக்கு இந்த நாவல் ஆர்வமூட்டுவதாக இல்லமலாகலாம். ஆனால் எவ்வித முன்முடிவுகளும் இல்லாமல் இதில் நுழைபவர்கள், குறைந்தபட்ச தத்துவ ஆர்வமுடையவர்களாக இருந்தால், இந்திய மெய்யியல்கள் பெரும்பாலானவற்றின் செறிந்த வடிவத்தையோ அல்லது அவை இருப்பை வகைமை படுத்தியுள்ள முறைகளையோ இங்கு கண்டடைவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

தத்துவத்தை களமாக கொண்ட நாவல் என்பதால், புனைவின் சாத்தியங்களால் கதை மாந்தர்களின் வாழ்க்கையின் இடர்கள் மூலம் தத்துவம் பேசப்படுகிறது. புனைவாக கூறப்படுவதால், தத்துவத்தை அதன் வடிவில் வாசிப்பதன் சலிப்பு தோன்றவில்லை. தத்துவத்தின் மேல் சற்றும் ஆர்வமில்லையெனில் இதை ஒரு நாவலாக வாசிக்க இயலாமல் போகலாம். ஆனால் வாழ்க்கையிடர்களுக்கான கருத்தியல் விளக்கங்களே தத்துவம் என்பதை உணரும் வாசகருக்கு, இதில் கூறப்பட்டிருக்கும் பத்து வாழ்க்கைகளின் தரிசனங்கள் மூலம், தன் வாழ்க்கையில் எதிர்கொள்ளக்கூடும் பெரும்பாலான சூழ்நிலைகளுக்கேற்ற கருத்தியல் விளக்கங்களை இமைக்கணத்திலிருந்து பெற முடியும். அந்த வகையில் இதை வாழ்விற்கான வழிகாட்டி எனவும் கொள்ளலாம்.

தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள இந்த நாவல் அச்சில் வரும்போது கிட்டத்தட்ட எண்ணூறு பக்கங்கள்வரை வரலாம். வெறும் எண்ணூறு பக்கங்களில், பத்து வெவ்வேறு நிலைகளிலிலிருக்கும் ஆளுமைகளின் வழியாக அனைவரின் வாழ்க்கையிலும் சாத்தியமான அனைத்து மெய்யறிதலுக்கான தேடுதல்களையும் மிக விளக்கமாக வேதாந்தத் தத்துவத்தை சாரமாகக் கொண்டு கூறுவதென்பது சாத்தியமில்லாதது. இந்த நாவல் அதைச் செய்ய முயல்கிறது. எனவே ஒவ்வொன்றும் மிகமிகச் செறிவாகவே கூறப்பட்டிருக்கிறது.

வியாசர், கிருஷ்ணனுடனான உரையாடலின் இறுதியில், தன் மகன் சுகன் முழுமையடைந்து விண்மீனாக இருப்பதை தன் அகஉணர்வில் அடைந்த பின், அவற்றை சொற்களாக வெளிப்படுத்துவது, அழகான ஒரு கவிதையாக இந்நாவலில் இடம்பெற்றுள்ளது. அக்கவிதையின் இறுதியில், இந்நாவலின் முதல் பகுதியாக வரும் தியானிகன் பிரபாவன் கதையை எழுதுவதாக வருகிறது. இது கதைக்குள் கதை அமைந்திருப்பதாக தோற்றமளிக்கிறது. மேலும் கனவுக்குள் கனவு, அதற்குள் இன்னுமொரு கனவு எனவும் கதை சுழல்கிறது. இந்த வடிவம், தத்துவத்தை களனாகக் கொண்ட கதையின் மேல் ஆர்வத்தை மேலும் எழுப்புகிறது.

தத்துவம் போதாமையாக எழும் இடங்களையும், அது அடையும் முரண்களையும், முரண்களிலிருந்து விடுபடும் முறைகளையும் இந்த நாவல் ஆங்காங்கு கூறிச் செல்கிறது. உதாரணமாக, ஒரு தத்துவ நிலைப்பாட்டை எடுத்தவன் மெய்யறிவிற்கான வாய்ப்பை முழுவதும் இழந்து விடுகிறான். இது பீஷ்மர்-கிருஷ்ணன் உரையாடலில் வரும் “அறிந்ததைக் கைவிடாமல் அறிபவர் அறிந்ததையே மீண்டும் அறிகிறார்” என்பதிலும், சிகண்டி-கிருஷ்ணன் உரையாடலில் வரும் “மெய்யை தேடுபவர்கள் தேடும் மெய்யை கண்டடைகிறார்கள்” என்பதிலும் விதுரர்-கிருஷ்ணன் உரையாடலில் வரும் ”அறிந்தவை அறிவனவற்றுக்கு முன்சொல்லாக அமைவதன் மயக்கம் சொல்லுக்கு பொருள் அளிக்கும் புலமென்றாகி அனைத்தையும் தானெனக் காட்டுகிறது. முன்னறிவால் வருமறிவு வகுக்கப்படுவதனால் முன்னறிவே அறிவின் எல்லையென்றாகிறது” என்பதிலும் உணர்த்தப்படுகிறது

“அவையில் முன்வைக்கப்படும் தத்துவம் சொல்நுரையையே கிளப்பும். அகத்தே விதையென விழும் தத்துவம் அங்கிருந்து மெய்மையென எழும்” என்னும் விதுரருடனான உரையில் வரும் வாக்கியம், அனுபவமாகாமல் வெறும் உரையாடலாக எஞ்சும் தத்துவத்தின் பொருளின்மையை விளக்குகிறது.

தன்னைவிட பெரியவர்களாக உணர்பவர்களிடம், அகங்காரத்தை முற்றிலும் அகற்றிவிட்டே அணுக வேண்டும் என்பதை சிகண்டியுடனான உரையாடலில் வரும் இந்த வாக்கியத்தை விட தெளிவாகக் கூறிவிட முடியாது. “தன்னுள் ஐயம் கொண்டவன் அறிந்துகொள்ளக்கூடும். ஐயத்தை கவசமென்றும் வாளென்றும் கொண்டவன் வெல்லப்படுவதே இல்லை. தன்னைவிடப் பெரியவற்றால் வெல்லப்படுவதே கல்வி என்பது”

பீஷ்மருடனான உரையாடலில் வரும் இந்த வாக்கியம், வெறும் இருபத்தைந்து வார்த்தைகளுக்குள் மனிதன் தன் செயல்களின் மூலம் வாழ்க்கையின் வலைகளில் முடிவின்றி சிக்கியிருப்பதையும், அதை அறியாமலே முழுவாழ்வையும் முடித்துவி டுவதையும் கூறுகிறது. “பீஷ்மர் “யாதவரே, முடிந்தவரை அகன்றிருக்கிறேன். முழு வாழ்வும் எதையும் செய்யாதிருந்திருக்கிறேன். இருந்தும் இத்தனை கட்டுகளா?” என்றார். இளைய யாதவர் புன்னகைத்தார். “அவ்வாறென்றால் இங்கு ஒவ்வொன்றிலும் தாங்களே சென்று சிக்குபவர்கள் சிக்கியிருக்கும் வலைதான் எவ்வளவு பெரிது!” என்றார் பீஷ்மர். “அறுக்கமுயலாதவரை அந்த வலை இல்லை என்றே இருக்கும்” என்றார் இளைய யாதவர்.”

நாவலின் செறிவான பகுதிகளை மேற்கோள் காட்டுவதென்றால், அதன் பெரும்பகுதியை இங்கு கூற வேண்டியிருக்கும். இதன் செறிவின் காரணமாக, வருங்காலத்தில் இமைக்கணத்திற்கு விளக்க நூல்கள் வெளிவந்தாலும் ஆச்சரியம் இல்லை. வேறு எதற்காக இல்லாவிடிலும், இந்த நாவலை தமிழுக்கு அளித்ததற்காக, வரும் பல நூற்றாண்டுகளுக்கு, ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேனும் ஜெயமோகன் பெயர் வாழ்ந்து கொண்டிருக்கும்.. ஆனால் என்ன, பகவத்கீதை எவ்வாறு விளக்குபவர் சார்ந்திருக்கும் தத்துவமுறைகளுக்கேற்ப விளக்கப்படுகிறதோ அதைப்போலவே அவரவர் எடுத்திருக்கும் தத்துவ நிலைப்பாடுகளுக்கேற்ப இமைக்கணமும் விளக்கப்படலாம்.

இந்தியத் தத்துவங்கள் என்றாலே, பெரும்பாலான கலைச்சொற்கள் சமஸ்கிருதத்தில் இருக்கும். ஆனல் இமைக்கணம் தமிழ் வார்த்தைகளையே உபயோகப்படுத்துகிறது. மிகக்குறைவான இடங்களில் சமஸ்கிருத மூலச் சொல்லை ஒரு முறை கூறி, பின் அதற்கான தமிழ்ச்சொல்லை மட்டுமே உபயோகப்படுத்துகிறது. இது சமஸ்கிருத கலைச்சொற்களுடன் தத்துவ அறிமுகம் பெற்றவர்களுக்கு, சற்றே இடராக இருக்கலாம்.

தத்துவ ஆர்வமுள்ளவர்களின் சிந்தனை முறையை இமைக்கணம் மேலும் செறுவூட்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தத்துவ ஆர்வமுள்ளவர்களில் கணிசமானவர்கள் முன்றிவை துறக்க சாத்தியமில்லாதவர்களாக இருப்பார்கள் என்பதும் வேதனையான முரண்.

இமைக்கணம் – ஜெயமோகன்