ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்

ஏ.நஸ்புள்ளாஹ்

சொற்களை ஒரு பறவையாக
கற்பனை செய்து
அதன் றெக்கைகளில் ஏறி அமர்ந்து கொண்டேன்.
மிக வேகமாக பறவை
கடல்
மலைகள்
மற்றும் பாலை நிலம் என
என்னை அழைத்துச் சென்றது
நிலவின் கதவைத் திறந்து
நுள்ளே நுழைந்து
பறவையும் நானும் ஓய்வெடுத்துக் கொண்டோம்
விரிந்து வெற்றிடமாக கிடந்தது வெளி
அங்கே யாராவது வருவதற்கான
சாத்தியம் குறைவாக இருந்தது.
எனவே வெளியேறுவதற்காய் முயற்சித்தோம்.
அப்போது
மேகங்களால் ஆன ஒரு
உருவம் காட்சியளித்தது
ஆம் அது ஏவாள்தான்…
மீதிச் சம்பவத்திற்கு கற்பனையைத் தொடங்குங்கள்.

00

கதை சொல்லி
பிரதிக்கு வெளியே நின்றார்
வாசகன் பிரதிக்குள் நின்றான்
நெடுநாளாய் பிரதிக்குள் இருந்த வாசகன்
ஒரு நாள்
பிரதிக்கு வெளியே நின்றான்
அன்று பார்த்து
கதை சொல்லி பிரதிக்குள் நின்றார்
ஒரு நாள் கதை சொல்லி
கற்பனைக்குள் இளைப்பாறிக் கொண்டிருந்த தருணம் பார்த்து
பாதை ஒன்றை உருவாக்கி
கதை சொல்லியை நெருங்கினான் வாசகன்
பின் கதை சொல்லியின் பிரதிகள் மீது
வரிசையாக விமர்னங்களை முன் வைத்தான்
அப்போது கற்பனைக்குள்
நிறுத்தப் பட்ட
மரத்தில் இருந்து சில பறவைகள் வெளியேறின.
கதை சொல்லி
பறவைகள் வெளியேறிய மரத்தைப் பிடித்து உசுப்பினான்
அதிலிருந்து சொற்கள் பறக்கத் துவங்கின.

00

எனது சொற்கள் முதலில்
வெள்ளைத்தாளில் தாவின
இரண்டாம் முறை சொற்கள்
புத்தகம் ஒன்றுக்குள் தாவின
மூன்றாம் முறை சில சொற்கள்
வாசகனின் மேசைமீது தாவின
இன்னும் சில கொற்கள்
நூலகம் ஒற்றின் அலமாரிக்குள் தாவின
வாசகனின் மேசைமீது தாவிய சொற்கள்
பல இலட்சம் மனிதர்களை சந்தித்தன
நூலக அலமாரிக்குள் தாவிய சொற்கள்
தாங்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தன
எனக்கு நினைவெல்லாம் சொற்கள் மீதே இருந்தது
சொற்களை பெயர் சொல்லி அழைத்தேன்
பறந்து வந்து என் நெஞ்சின் மீதமர்ந்து அவை பல நூறு கதைகள்
சொல்ல முற்பட்டன.

 

One comment

  1. அருமையான கவிதைகள். சொற்களுக்குள் விரியும் பறவையின் இறகுகள் கவித்துவத்தை சுமந்து பறக்கிறது. வாழ்த்துக்கள்

Leave a reply to சுகன்யா ஞானசூரி Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.