வீட்டுக்கு வெளியே வட துருவம்

காஸ்மிக் தூசி 

அமைதியாய் வந்து அமர்ந்திருக்கும்
நடு இரவில்
வீட்டுக்கு வெளியில்
வட துருவம்

குளிரின் கொடுங்காற்று
கூரையின் மேல்
சரிந்து இறங்குகையில்

எவரின் மீதோ
ஒரு வசை
வாழ்த்து
விமர்சனம்.
மற்றும்
இவை யாதுமற்ற
வெறுமையின் சலிப்பு.

ஊளையிட்டு சண்டையிடும்
இவ்வளவு காற்றும் வருவது
எங்கிருந்து?
இவ்வளவு பனியும் இதுவரையும்
இருந்தது எவ்விடத்தில்?

இதையெல்லாம்
கண்டுபிடிக்கதான்
பொழுதுபோகாத
அந்த மூதாட்டி

கையில் குழவியுடன்
வெற்றிலையை இடித்து
கடவாயில் வைத்தபடி

நிலவில்
காலை நீட்டி
அமர்ந்து
பார்த்துக் கொண்டிருக்கிறாளோ
பூமியை?

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.