அகாலம்

சிபி சரவணன்

ஒரு பண்டைய வீடு பற்றி எரிகிறது
யார் யார் அதில் வசித்தார்களோ
எத்தனை உடல்கள் புணர்ந்தனவோ
கதவுகளற்ற அதன் வாசலில் நுழைந்த
மனிதர்கள் மீண்டதாய் சரித்திரமில்லை.
அவ்வீட்டின் தரைத்தளமெங்கும்
குப்பற படுத்துறங்கும் வேர்களும் புலிகளின் புழுக்கைகளும் சிதறி
கிடந்தன.
தீயால் முறியும் கிளைகளில்
பறவை குஞ்சுகளின் கீச்சோலிகள்
செவிசவ்வை அதிர வைக்கின்றது
எல்லா மனிதர்களும் உற்றுபார்த்துவிட்டு
அலுவலுகலுக்காக தங்கள் வாகனங்களைமுறுக்கி கடந்து போகிறார்கள்.
ஒரே ஒரு ஆதிக்குடி மட்டும்
(அவனுக்கு உடை இருந்தது)
எங்கிருந்து வந்தானோ என்னவோ
மூங்கில் துளைகளால் இசைத்தவாரே
இரங்கல் பாடிக் கொண்டிருந்தான்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.