பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி
அலையலையாய் ஆயிரம் கனவுகள் அந்தரக்கடலிலே
காலத்தின் படகில்
பயம் எதுவுமின்றி நின்று
வெவ்வேறு வீரிய விசையுடன் வீசப்படுகிறது
நீளும் கையில் நிகழும் தகவுகள் தக்கையைப் போலே.
வாழ்வெனும் பரந்து விரிந்த வலைக்குள் வட்டமடித்து உழன்றபடியே சுழலும் எண்ணற்ற சித்திர மீன்களில்
அன்பின் வலையில் அகப்பட்டு பிடிபடுதல் ஓர் சுகம்
தத்தளித்து விலகி விடுபட்டு தப்பித்தலோ ஒரு சாபம்.
இதோ அங்கே பிடிபடாமல் விடுபட்ட உதவாத ஒரு ஒளிரும் சுடர் நட்சத்திரமீன் உங்களின் விழிகளுக்கும்
மிக எளிதாகப் புலப்படுகிறது தானே
பரிதவிக்கும் பகிரப்படாத ஒரு நேசத்தின் திவலையாக.
மீப்பெருநம்பிக்கையுடன் இருப்பாய் ஒளிர் மனமே
இங்கே யாவும் ஒன்றல்லவே.
கனிவுடன்
காத்திரமாக இருப்பாய் கலை மனமே
தனித்து தெரிதலொன்றும் தவறில்லையே
காட்சிகள் மாறும்
ஆகவே கவலைப்பட ஏதுமில்லை