Author: பதாகை

பொதுபுத்தி – ராதாகிருஷ்ணன் சிறுகதை

ராதாகிருஷ்ணன்

வாசலில் நுழையும்போதே அந்தப் பெண் இன்னும் போகாமல் உள்ளே இருப்பது தெரிந்தது, தயங்கி வெளியேவே நின்று விட்டேன். உள்ளே ராஜன் அண்ணனின் குரல் கேட்டுக் கொண்டிருந்தது கொஞ்சம் ஆசுவாசம் அளித்தது, அவர் சூழலை சமாளிப்பார் என்பது கொஞ்சம் தைரியம் அளித்தது, இருந்தாலும் உள்ளே சென்று அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்க்க தைரியமில்லை, வெளியேவே பைக்கின் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தேன். உள்ளிருந்து டீ வாங்க வெளியே வந்த சாம், “ஏனே இங்கயே நின்னுட்டீங்க, எல்லாரும் உள்ள இருக்காங்க போங்க,” என்றான், சாமின் பேச்சு சத்தம் கேட்டு உள்ளே ஜன்னல் பக்கம் இருந்த அங்குராஜ் அண்ணா திரும்பி பார்த்தார், ” உள்ள வாடா ” என்றார், தப்பிக்க வழியின்றி உள்ளே சென்று காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தேன், அந்தப் பெண்ணைப் பார்க்க சங்கடப்பட்டு தலை தூக்காமல் அமர்ந்திருந்தேன்.

சங்க அலுவலகம் வரத் தொடங்கி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது, 18 வயதில் அங்குராஜ் அண்ணா வழியாகத்தான் உள்ளே வந்தேன், வந்த புதிதில் இங்கேயே பலியாக கிடப்பேன், எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வேன், சங்கம் என் பலத்தை பன்மடங்கு பெருக்கியதாக எண்ணினேன், எந்த அநீதியையும் சங்கம் வழியாக எதிர்த்து வெல்ல முடியும் என்று நம்பினேன், ஆனால் நாளாக நாளாக யதார்த்தம் புரிந்தது, பிறகு ஆர்வம் குறைய ஆரம்பித்தது, எனினும் பழக்கம் காரணமாக தினமும் காலையில் இங்கு வந்துவிட்டுத்தான் பிறகு எங்கும் செல்வேன், வேலைகள் ஏதும் இல்லாத சமயங்களில் இங்குதான் இருப்பேன், இன்று இந்த ஊரில் எங்கு சென்றாலும் அங்கு எனக்கு பரிச்சயமான ஒருவர் இருப்பதற்கு காரணம் இந்த சங்கம்தான். அனைத்து நாளிதழ்களும், பத்திரிக்கைகளும் வாங்கிவிடுவார்கள், இந்த இதழ் வாசிப்புகள் வழியாகத்தான் எனக்கு புத்தக வாசிப்பு பழக்கம் உருவானது.

சங்கத்தில் சேர்ந்த காலங்களில் எல்லாவற்றிற்க்கும் என் கருத்துக்களை சொல்வேன், நல்ல கருத்துக்கள் என பாராட்டுக்கள் எல்லாம் கிடைக்கும், ஆனால் முடிவுகள் என வரும்பொழுது அது மேலிருந்து வரும் முடிவுகளாகவோ அல்லது அதிகாரம் கொண்டவர்களின் செயலாகவோ இருப்பதை உணர்ந்த பிறகு கருத்துக்கள் வைத்து வாதிடுவது தன்னாலேயே குறைந்தது. கருத்துக்களுக்கு ஒரு மதிப்பும் இல்லை என்பதுதான் நான் இங்கு பயின்ற முதற் பாடம். பெரும்பாலும் சாதாரண வேலைகளை பெரிய பணி என்று சொல்லி ஒப்படைப்பார்கள், சாதாரண வேலைகள் என்பது அலைச்சல் வேலைகள் மற்றும் எடுபிடி பணிகள், ஆனால் எனக்கு இந்த வகை வேலைகளில் இயல்பாகவே ஆர்வம் இருந்ததனால் இவற்றினையெல்லாம் சந்தோசமாகவே செய்வேன், இந்த வேலைகள் வழியாக எல்லோருடனும் பழகவும் அவர்களை அறியவும் முடிந்தது, இந்தப் பழக்கம் வழியாகத்தான் ராஜன் அண்ணா எனக்கு வழிகாட்டியாக, ஆசிரியனாக கிடைத்தார்.

பல நேரம் என் குரல் எடுபடாமல் போகும்பொழுது ராஜன் அண்ணாதான் தேற்றுவார், “எதுவும் ஒரே நாளில் மாறிடாது, உனக்கு மாற்றம் கொண்டு வர விருப்பம்னா அதை, அதன் பலன்களை மற்றவர்களுக்கு புரிய வைக்கணும், விழிப்பு மட்டும்தான் மாற்றத்தை உருவாக்கும்,” என்பார். இப்பொழுதெல்லாம் எதற்கும் வருத்தப்படுவதும் எதையும் பொருட்படுத்துவதும் இல்லை, மாறாக கொஞ்சம் உற்சாகம் கொண்டு இயங்குகிறேன், காரணம் இங்கு எனக்கு ஜுனியர்கள் வந்து விட்டதுதான்! அந்த வகையில் சாம் அப்படியே என் நகல்.

நேற்று இரவு சாம் அழைத்து ஒரு பெண் வந்து அழுது கொண்டு நின்றிருக்கிறாள் என்று சொன்னவுடனே எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு விரைவாக வந்து பார்த்தேன். மிக ஒல்லியாக இருந்தாள், நீளமான முகம், கழுத்தில் தங்கநிறம் மங்கிய பித்தளை செயின் சுற்றிலும் தேமல் இருந்தது, முடி எல்லாம் எண்ணை படாமல் செம்பட்டை நிறம் கொள்ளத் துவங்கியிருந்தது, மலிவான சேலை உடுத்தியிருந்தாள், பிளாஸ்டிக் செருப்பு அணிந்திருந்தாள், அருகில் சிறு பெண் ஒருவள் நின்றிருந்தாள், அப்படியே இந்தப் பெண்ணின் சிறு வடிவம், நிறம் மங்கிய, அழுக்கானதைப் போல தெரிந்த கவுன் அணிந்திருந்தாள், காலில் செருப்பு இல்லாமல் இருந்தது. அருகில் சாம் மட்டும் நின்றிருந்தான், அவன் முகத்தில் சூழ்நிலையை எப்படி கையாள்வது என்பது தெரியாத குழப்பத்தை காண முடிந்தது. என்னைப் பார்த்ததும் “அக்கா, பயப்படாதீங்க, வந்துட்டாங்க,” என்றான். அவள் திரும்பி என்னைப் பார்த்து அழுதபடி கை கூப்பினாள்.

அவளிடம் காணப்பட்ட பய உணர்வு எனக்கு மனதிற்குள் நடுக்கத்தை அளித்தது. “அழாதீங்கம்மா, என்னனு சொல்லுங்க,” என்றேன், திரும்பி சாமை நோக்கி, “ராஜன் அண்ணாக்கு தகவல் சொல்லு,” என்று பணித்தேன், அவன், “கூப்பிட்டேன், உங்களைக் கூப்பிட்டு பேசச் சொன்னாரு, ” என்றான், மனதிற்குள் திக்கென்று ஆகி விட்டது, நான்தான் இனி பொறுப்பு, இந்தச் சிக்கலை என் தலையில் கட்டி விட்டார்கள், காலையில் சாவகாசமாக வந்து என்னிடம் விசாரிப்பார்கள் என்பதை எண்ணும்போதே எரிச்சலாக வந்தது.

“என்னன்னு சொல்லுமா,” என்றேன். அவள், “வீட்டைப் பிடுங்கிட்டாங்க, எங்கள வீட்டுல இருந்து வெளிய போகச் சொல்லிட்டாங்க,” என்றாள், அவளால் சீராகப் பேச முடியவில்லை, பேசப்பேச அவளின் அழுகையும் பயமும் அதிகமாகியது. “வீட்டுக்காரர் எங்கே?” என்றேன், “அவரு பயந்து ஓடிப் போயிட்டாரு,” என்றாள், எனக்கு அவன் மீது கோபமாக வந்தது.

“அவங்ககிட்ட கடன் வாங்கியிருந்தோம் , அவங்க காசுக்கு பதிலா வீட்டை மிரட்டி எழுதி வாங்கிட்டாங்க”

“வீட்டுக்காரர் என்ன தொழில்ங்க?”

“சலூன் வச்சுருந்தோம், அப்பறம் இவரு சரியா நடத்தாம அது போயிடுச்சு”

வலுவில்லாத சாதியினர் இந்த பெண் என்பது உறைத்தது, வீடு திரும்ப கிடைப்பது கடினம் என நினைத்துக் கொண்டேன்.

ஏதோ தோன்றி அவளிடம், “வீட்டுக்காரரு குடிப்பாரா?” என்றேன், அவள் தயங்கி, “குடிப்பாருங்க,” என்றாள், பின் அவளாகவே, “அதனாலதாங்க தொழில் போயி கடனாளி ஆனோம்,” என்றாள்.

“வீட்டுக்காரர் எங்க இருப்பார்னு ஏதாவது தெரியுமா?”

“தெரியலீங்க, அவர இவங்க அடிச்சாங்க, அடிச்சுதான் எழுதி வாங்கினாங்க, இரண்டு நாளா அழுதுட்டே இருந்தாரு, இனி என்ன பண்ணப் போறேன்னு தெரியலையேன்னு சொல்லி என்கிட்ட அழுதுட்டே இருந்தாரு”

“எப்ப போனாரு?”

“இன்னைக்கு காலி பண்ணச் சொல்லி கெடு கொடுத்திருந்தாங்க, நேத்து நைட்டு தூங்காம அழுதுட்டு இருந்தவர்ட்ட, “நாம காலுல விழுவோம் கேட்பாங்க”ன்னு சொன்னேன், அவரு, “இல்லைடி” னு சொல்லி அழுத்துட்டுருந்தாரு, “விடிஞ்சு ஏதாவது செய்வோம்ங்க”னு சொல்லி தூங்க வச்சேன், காலைல பாயில அவரு இல்ல, சுத்தி எங்க தேடியும் காணோம்”

“பணம் கொடுத்தவங்க யாரு?”

“அவங்கள முன்னாடி பழக்கம் இல்லைங்க, அவங்க பத்து ஆளுகளுக்கு மேல கூட்டிட்டு வந்து, “வீட்டை எங்களுக்கு எழுதி கொடுத்துட்டாரு, கிளம்பு” னு சொன்னாங்க, அவங்களைப் பார்க்கவே பயமாயிருந்தது, வெளிய வந்துட்டேன்”

“ஸ்டேஷன் போனீங்களா”

அவள் பதில் ஏதும் சொல்லவில்லை, திரும்பவும் கேட்டபோது, “பயமா இருக்குங்க” என்றாள்.

சாம் இடையில் புகுந்து, “ஷீலா அக்காதான் இங்க அனுப்பி விட்டுருக்காங்க, அவங்ககூட வேலை செய்யறவங்களாம் இவங்க”

அந்தப் பெண்ணை நோக்கி, “உங்களுக்கு இங்க சொந்தக்காரங்க இருக்காங்களா?” என்றேன்.

“இல்லைங்க”

சாமை நோக்கி, “ஷீலா அக்காட்ட கூப்பிட்டு அவங்க வீட்டுல தங்க வை,” என்று சொல்லி பெண்ணை நோக்கி, “கவலைப்படாதமா, வீட்டுக்காரரை கண்டுபிடிச்சிடலாம், எல்லாம் சரியாகிடும், கவலப்படாத,” என்றேன்.

சாமை அழைத்து 500 கொடுத்து, “சாப்பாடு இவங்களுக்கு வாங்கிக் கொடு, நாளைக்கும் இவங்ககூடயே இரு,” என்றேன்.

பிறகு கிளம்பி வீட்டுக்கு வந்தேன், நெடுநேரம் தூங்க முடியாமல் தவிப்பாக இருந்தது, அந்தப் பெண்கூட இருந்த சிறுமியின் முகம் கண்ணுக்குளேயே நின்று கொண்டிருந்தது. கிட்டத்தட்ட விடியும் நேரத்தில்தான் தூக்கம் வந்தது.

 

“ஏன்டா லேட்டு” என்று ராஜன் அண்ணா கேட்டபோது முகம் தூக்கி அவரைப் பார்த்தேன், அவர் முகத்தில் துக்கமோ சந்தோஷமோ எதுவுமே வெளிப்படாது, அவர் சிரித்தே இத்தனை வருடங்களில் பார்த்ததில்லை, அதிசயமாக முகம் எப்பவாவது புன்னகைக்கும். ராஜன் அண்ணா முழுநேர சங்கப் பணியாளராக இருக்கிறார், காலையில் பத்து மணிக்கு அலுவலகம் வருவார், மதியம் 3 மணிக்குச் செல்பவர் திரும்ப மறுநாள் காலைதான் வருவார், மதியத்திற்கு மேல் லைப்ரேரியில் அல்லது அவர் அறையில் அல்லது ஸ்டார் பேக்கரி வாசலில் இருக்கும் நீள் மர பெஞ்சில் இருப்பார். மிக அவசரம் என்று இருந்தால் மட்டுமே வருவார், வெள்ளை வேட்டி சட்டை எப்போதும் சுத்தமானதாக இருக்கும், மர விளிம்பு கொண்ட கண் கண்ணாடி அவரை பேராசிரியர் போல எண்ண வைக்கும், நல்ல உறுதியான பழைய சைக்கிள், அதில்தான் எங்கும் போவார், நான் ஸ்கூட்டி அல்லது மொபெட் வாங்கச் சொல்லி பலமுறை கெஞ்சியிருக்கிறேன், அவர் பொருட்படுத்தியதே இல்லை.

அந்த பெண் கொடுத்த நிலத்தின் நகல் பத்திரத்தை பக்கங்கள் மாற்றி மாற்றி பார்த்து கொண்டிருந்தார். பிறகு கண் கண்ணாடியை மேசையின் மீது வைத்து அந்த பெண்ணை பார்த்தார். “குழந்தை பேர் என்னமா?” என்றார்.

“கிருத்திகாங்க” என்றாள், அவள் முகத்தில் கொஞ்சம் தெளிவு இருந்ததை இப்போதுதான் கவனித்தேன், இரவு அவளைப் பார்த்தபோது தற்கொலை செய்து விடுவாளோ என பயந்தேன், இப்போது அவளில் இருந்த சிறு தெளிவு ஆச்சரியம் தந்தது.

ராஜன் அண்ணா நிதானமாக, “உன் சொந்த ஊர் எது, அம்மா அப்பா இருக்காங்களா?”

“துறையூர்ங்க, அப்பா இல்ல, அம்மாவும் தம்பியும் மட்டும்தான், அவங்ககிட்ட இதை சொன்னா பயந்திடுவாங்க”

“வேற யாராவது சொந்தத்துல பெரியவங்க இருக்காங்களா?”

“இருக்காங்க”

“சரி ஒன்னு செய்யு, ஊருக்கு கிளம்பு, இப்ப கிளம்பினா சாயிங்காலத்துக்குள்ள போயிடலாம், இரண்டு நாள் கழிச்சு வீட்டுல சொல்லி பெரியவங்கள கூட்டிட்டு இங்க வா, பேசிக்கலாம்”

“வீட்டுக்காரர்…”

“அவரு எங்கயும் போயிருக்க மாட்டாரு, இங்க வந்தார்னா நாங்க உனக்கு தகவல் சொல்றோம்”

அவள் மேலும் ஒன்றும் சொல்லவில்லை, ராஜன் அண்ணா சட்டையின் பைக்குள் இருந்து நான்கு 500 ரூபாய் தாள்களை எடுத்து அந்தப் பெண்ணிடம் நீட்டினார், “செலவுக்கு வச்சுக்கம்மா”.

அவள் எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டாள், ராஜன் அண்ணா ஒரு நாளைக்கு 100 ரூபாய் செலவு செய்யாதவர் என்பது ஞாபகம் வந்தது.

ராஜன் அண்ணா சாமை அழைத்து பஸ் ஏற்றி விட்டு வருமாறு பணித்தார்.

அறையில் சிறிது நேரம் யாரும் பேசவில்லை.

மெதுவாக அங்குராஜ் அண்ணா அசைந்தபோதே அவர் பேசப் போகிறார் என்பது தெரிந்தது, “இனி வீட்டை இந்த பொண்ணு மறந்திட வேண்டியதுதான்,” என்றார், நான் ஏற்கனவே அதை உணர்ந்திருந்தாலும் இவர் சொல்லும்போது இவர் மேல் வெறுப்பு வந்தது.

“ஆனா வீட்டை பிடுங்கவுள்ள செஞ்சிருக்காங்க, நாம போயி பேசி இந்த பொண்ணுக்கு ஏதாவது பண்ணிக் கொடுக்கணும்,” என்றேன்.

“நடக்கற காரியம் சொல்லுடா,” என்றார்.

“இந்த ஏமாற்று வேலையை கண்டுக்காம இருக்க சொல்றீங்களா?” என்றேன்.

அவர் சிரித்து, “சரி, நீ போய் கேளு,” என்றார்.

நான் மேற்கொண்டு அவரைப் பார்க்காமல் திரும்பி ராஜன் அண்ணாவை நோக்கினேன், அவர் மேசையை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்.

“அண்ணா, நீங்களும் இப்படித்தான் நினைக்கிறீங்களா?” என்றேன், அவரைப் பார்த்து, ஏறிட்டு என்னைப் பார்த்தவர் ஏதும் சொல்லாமல் திரும்பவும் மேசையை ஒழுங்குபடுத்தும் வேலையைச் செய்தார். எனக்கு உள்ளுக்குள் விரக்தி தோன்றி பிறகு அதை அப்படியே விட்டு கைகளை மேல் தூக்கி சோம்பல் முறித்தேன், அங்குராஜ் அண்ணா, “அப்ப நான் பிறகு வரேன்,” என்று சொல்லிக் கிளம்பினார்.

ராஜன் அண்ணாவும் நானும் மட்டும் அறையில் இருந்தோம். அவர் மேஜையை ஒழுங்குபடுத்தும் வேலையை எல்லாம் முடித்து, இருக்கையின் பின்பக்கம் சாய்ந்து உடலைத் தளர்வாக்கி பின் நிதானமாக பேச தொடங்கினார். “டே வெறும் நியாயத்தை மட்டும் வச்சு ஒன்னும் பண்ண முடியாது, நாம காந்தி இல்ல, காந்திக்கு இருக்கற ஆன்மபலம், காந்தியவாதிகள்கிட்ட இருக்கற ஆன்மபலம் என்பதெல்லாம் இயல்புலயே ஒரு சிலர்க்கு இருக்கக்கூடிய விஷயங்கள், நீ நானெல்லாம் சாதாரண மனுஷங்க, சாதாரண மனுஷன் என்ன பண்ண முடியுமோ அதைத்தான் நம்மால பண்ண முடியும்”.

நான் பதில் ஏதும் சொல்லாமல் அவரைப் பார்த்தேன், அவரில் இருந்த நிதானம் எரிச்சல் கொடுத்தது.

“அந்த நிலத்தை பிடுங்கனவனுகளுக்கு போலீஸ் உட்பட எல்லா இடத்திலும் ஆள் பலம் இருக்கும், என்ன மோதினாலும் கஷ்டம், எழுதி வாங்கிட்டானுக, சட்டம் அவங்க பக்கம்தான் பேசும்”

” ஆனா நியாயம் இந்த பொண்ணுகிட்ட இல்ல இருக்கு”

“வெறும் நியாயத்தை வச்சுட்டு என்ன பண்ண, அதை நிலைநிறுத்த பலம் வேணும், இவ ஊருல இருந்து ஆட்களை கூட்டிட்டு வந்தா நாம இவளுக்கு உதவலாம், அதும் நேரடியா இல்ல “.

நான் பதில் ஏதும் சொல்லாமல் கவனிப்பது போல பாவனை செய்தேன், அவர் பேசும்போது இடையில் பிறர் பேசினால் மேற்கொண்டு பேசுவதை நிறுத்தி அமைதியாகி விடுவார்.

“நாம இதைச் சார்ந்து ஏதாவது பண்ணனும்னு நினைச்சா பொதுபுத்தியில இதைப் பற்றின விழிப்பை உருவாக்க முயற்சி பண்ணலாம், அதுதான் ஏதாவது பலனை கொடுக்கும்”

நான் என்ன என்பது போல முகத்தை வைத்து கொண்டேன்.

“பொதுவா நிலம் வைத்திருந்து இரண்டு மூணு தலைமுறை தாண்டினவங்களுக்கு இந்த புத்தி இருக்காது, நிலம் இல்லாதவன், நிலம் வாங்க நினைக்கறவன், புதுசா சம்பாத்தியம் பெறவன் எல்லாத்துக்கும் இந்த அபகரிப்பு புத்தி இருக்கும், இதைச் சரி செய்யறது ரொம்ப கஷ்டம், ஒன்னு மட்டும்தான் பண்ண முடியும், சமூக ஒழுக்க விதியில் இதை தீவிரமா வலியுறுத்தலாம். சமூகத்துல பொது ஒழுக்கம் என்பதே கண்காணிப்புக்கு பயந்து உருவாகிற ஒன்னுதான், கண்காணிப்பு மட்டும்தான் இவனுகள கட்டுப்பாட்டுல வைக்கும். இப்படி திருடறவங்களை சமூகத்தில் விலக்குவது மாதிரியான மனநிலை உருவாக்கணும், அதாவது நேர்மை மனநிலையை மதிப்பானதாவும், ஏமாற்றுத்தனத்தை சில்லறத்தனமாவும் பொதுபுத்தில உருவாக்கறது, இது மாதிரியான விஷயங்களதான் நம்ம சங்கம் செயல்பாடுகளா முன்னெடுக்கணும் .”

யதார்த்தம் பற்றிச் சொல்ல வாயெடுத்து பின் எதிர்மறையாக சொல்லவேண்டாம் என நினைத்து விட்டுவிட்டேன். அவர் தனக்குள்ளேயே பேசுவதைப் போல தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். “இதெல்லாம்விட ஒன்னு இருக்கு, ஒரு கூட்டம்கிறது ஓரளவுக்கு மேல இருக்கக் கூடாது, அப்படி அதிகமாகிடுச்சுனா ஆதிக்கம் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க, ஓரளவுக்கு மேல எந்த கூட்டமும் உடையனும், சமூகத்தோட மிகப் பெரிய எதிரியே இந்த கும்பல் மனோபாவம்தான், கும்பலா தன்னை உணர்ந்தாங்கன்னா பிறகு அவனுகளுக்கு ஒரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயம் ஆக்கிடுவானுக, அந்த மனநிலை என்பது பிறகு அவங்ககிட்ட இருந்து மறையவே மறையாது”

சரி என்பதைப் போல ஆமோதித்தேன், பிறகு ஏதோ தோன்றி, “ஒற்றுமையே தப்புனு சொல்ல வரீங்களா?” என்றேன்.

“தான் பிறன்னு பிரிக்காத எந்த ஒற்றுமையும் நல்லதுதான், ஆனா நடைமுறைல மனுசங்க பிறப்பு சார்ந்த ஒற்றுமைக்குள்ளதான் போவாங்க, நாம அதை உடைக்கணும்,” என்றார்.

“இது ஆகற காரியமா?”

“எதுவும் கிளை பிரிந்து தனித்தனியா பிரிவுகளாக ஆகும், அதுதான் இயல்பு, அதை தடுக்கற விஷயங்களை உடைத்தால் போதும்”

பாதி புரிந்த மாதிரியும் பாதி புரியாத மாதிரியும் இருந்தது. பிறகு இருவரும் ஏதும் பேசிக்கொள்ளாமல் அமர்ந்திருந்தோம், இடையிடையே இப்படி நடந்து விடுவதுண்டு, பேச்சின் இடையே உருவாகும் மவுனம் அப்படியே விரிசலாகி உரையாடல் அப்படியே நின்றுவிடுவது என. அவர் பேசினதையே மறந்து தனக்குள் மூழ்கி விட்டிருந்தார். நான் வெறுமனே அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன், நாளாக நாளாக அழகாகிக் கொண்டே வருகிறார் என்று தோன்றியது, முடி நரைகூட லட்சணமாக, பொருந்தி அமைவதைப் போல இருந்தது.

அவர் இப்படி அமைதியாகி சிந்தனையில் மூழ்கினார் என்றால் அருகிலிருப்பவர்களைக்கூட மறந்து விடுவார். தொந்தரவு தர வேண்டாம் என்று நினைத்து வெளியே எழுந்து செல்ல நினைத்தேன், டீ குடிக்க வேண்டும் என தோன்றியது. அவரிடம் ஏதும் சொல்லாமல் வெளியே வந்தேன்.

அலுவலகத்தின் நேர் எதிரில்தான் பேக்கரி, இது எங்களுக்கு இரண்டாவது அலுவலகம் போல, அங்கு இல்லையெனில் இங்கு இருப்போம். பேக்கிரியின் முன் திண்ணையில் அங்குராஜ் அண்ணா பேப்பர் படித்து கொண்டிருந்தார். “நீங்க இன்னும் கிளம்பலையா?” என்றேன், அவர் என்னைப் பார்த்தவுடன் பேப்பரை மடித்து கீழே வைத்தார், அவர் அருகில் போய் அமர்ந்து கொண்டேன். அவர் கிண்டலாகச் சிரித்தபடி, “என்ன சொல்றார் உங்க குரு?” என்றார்.

“உங்க தலைமைல கொடி பிடிச்சு ஒரு போராட்டம் நடத்த சொன்னாப்புல!” என்றேன் சிரித்து.

சிரித்தவர், “பரவாலயே, நான் உண்ணாவிரதம் இருக்கச் சொல்லுவாருனுல்ல நினைச்சேன்!”

நான் பதில் சொல்லாமல் புன்னகைத்தேன் .

” டே , நான் இந்த திருப்பூர் வந்து 20 வருஷம் மேல ஆயிடுச்சு, இது போல பல சம்பவங்களைப் பார்த்துட்டேன், பொண்ணுக கொஞ்ச நாள்ல தெளிவாயிடுங்க, அடுத்தது என்னனு போயிடும்ங்க, ஆனா ஆண்கள் மரை களண்டவனுக போல ஆயிடுவானுக, குடி ஒன்னுதான் மீட்பு, அதுவும் குடிக்கற சமயத்துலதான்.”

“இப்படி ஏமாத்தறவனுகளுக்கு ஒன்னும் ஆகறது இல்லையா?”

அவர் சிரித்து, “அப்படி ஆனதே நான் பார்த்ததில்லை, நல்லாத்தான் இருக்கானுங்க”.

இதை பற்றி பேசுவதை விட்டு விடலாம் என எண்ணி ” டீ சொல்லவா?” எனக் கேட்டு இரண்டு டீ ஆர்டர் செய்தேன்.

அவர் திடீரென ஞாபகம் வந்ததைப் போல, “டே, ராஜன் அண்ணா அந்தப் பொண்ணுக்கு ஏன் அவ்வளவு பணம் கொடுத்தாரு தெரியுமா?” என்றார், அவர் முகத்தில் சுவாரஸ்யம் சொல்லப் போகும் ஆர்வம் இருந்தது, அதைக் கேட்ட ஒருசில கணத்திற்குள் என் மனம் சொடுக்கி என்னென்னவெல்லாமோ யோசிக்கத் துவங்கி விட்டது, பிறகு மனமே தீர்வு கண்டு, ‘ அவர் நல்லவர்’ என்று சொல்லியது. அங்குராஜ் அண்ணனிடம், “ஏன்?” என்று கேட்டேன்.

“ராஜன் அண்ணா சொத்தையும் இப்படித்தான் பிடுங்கனானுக, பிறகுதான் ஊரை விட்டு ஓடி இங்க வந்து சேர்ந்தாரு, வந்து இருபது வருசமாச்சு, இப்ப வரை அவரு ஊருக்கு போனதில்ல,” என்றார். எனக்கு அப்போது அந்தப் பெண்ணும் கூட இருந்த சிறுமியும் மனதில் வந்து சென்றார்கள்.

ஏ. நஸ்புள்ளாஹ் கவிதைகள் – நினைவுகளால், பாதை, சம்பவங்களை உருவாக்குதல், கவிதை ஒரு கடலாகிறது

ஏ. நஸ்புள்ளாஹ்

நினைவுகளால்
பாதை
சம்பவங்களை உருவாக்குதல்
கவிதை ஒரு கடலாகிறது

நினைவுகளால்

முதலாம் நிறுத்தத்தில்
நிற்கிறேன்
நீ சொன்ன
பேருந்து வந்துவிட்டது
நான் அதில் ஏறவில்லை

சன்னலுக்கு அருகில்
இருக்கை கிடைத்திருக்கிறது
நான் அதில் உட்காரவில்லை

நகரத்தின் நிசி கடந்திருப்பேன்
வித்தியாசமாக
இரண்டு பாதைகள்
நான் எதையும் தெரிவு செய்யவில்லை
எதை தெரிவு செய்தாலும்
பேருந்தை நடத்துனன்தான் கொண்டு செல்ல போகிறான்

ஊரை விசாரித்துக் கொண்டிருக்கும்போது
பேருந்து அங்கும் இங்கும் அசையவில்லை
நான் வாசலில் விழப் பார்த்தேன்
ஒரு வாசகன் என்னைப் பிடித்துவிட்டான்

இது நகரத்தின்
கடைசி நிறுத்தமென நினைக்கிறேன்
புதிய வாசகன் ஒருவன்
வீட்டை காட்டித் தருகிறான்
பறவைகளின் ரெக்கைகளால்
அது அமைக்கப்பட்டிருக்கிறது

இந்த வீட்டுக்கு ஏன்
பேருந்தில் ஏறாமல் நினைவுகளால்
ஏறி வந்திருக்கிறேன்
நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும்
கவிதையை இங்கு வைத்துதான்
நான் எழுதப் போகிறேன்.

பாதை


இந்தப் பாதையை நீங்கள்
கடந்து என்னிடம் வருவதெனில்
காற்றில் ஏறவேண்டும்.
காற்றில் ஏறுவதற்கு
உங்களுக்கு இரண்டு தெரிவுகள் உண்டு
ஒன்று ஏணி தரப்படும்
மற்றொன்று சிறகுகள் தரப்படும்.

பயணத்தைத் தொடரலாம்
வழங்கப்பட்ட நிமிடங்களுக்குள்
பாதையைக் கடக்க வேண்டும்
சரியான தெரிவு முறை அவசியம்
இல்லையெனில்
ஏணியும் சிறகுகளும் மறைந்துவிடும்.

சிறிதளவு யோசிக்க
இலவச நேரம் தரப்படுகிறது
எல்லோரும்
மிக எளிதாகவே
பாதை கடந்து வருகிறார்கள்.

எனக்கு ஒரே ஆச்சரியம்
இது எப்படி சாத்தியமாச்சி
ஒருவனை பிடித்துக் கேட்டேன்
அவன் சிரித்துவிட்டுச் சொன்னான்
நீங்கள் ஏறிய கற்பனையில்தான்
நாங்களும் ஏறிப்
பாதையைக் கடந்து வந்தோம்.

சம்பவங்களை உருவாக்குதல்


காட்சியின் ஒருபுறத்தில்
கடலை பறவைகள்
தம் சொண்டில் அள்ளிச் செல்வதாய்
சம்பவம் தொடங்குகிறது

காட்சியின் மறுபுறத்தில்
எறும்புகள் சில
கடலை இழுத்துச் செல்வதாய்
சம்பவத்தை உருவாக்குகிறேன்

எப்படியாயினும்
சில பொழுது
நான் பறவையாகின்றேன், ஏனென்றால்,
எப்படியாயினும்
சில பொழுது
நான் எறும்பாகின்றேன், ஏனென்றால்,
… …

கடலை அள்ளிச் செல்லும்
பறவைகளுடனும் எறும்புகளுடனும்
புதிய உரையாடலை தொடங்க வேண்டியிருக்கிறது

உரையாடலின் மய்யத்தின்போது
எனது இரண்டாம் பரம்பரை
பறவைகளாய் வனத்தில் வாழக்கூடும்

உரையாடல் முடிவுறும்போது
எனது மூன்றாம் பரம்பரை
எறும்புகளாய் ஆங்காங்கே வாழக்கூடும்

காட்சி வேறு வேறு ஆயினும்
சம்பவம் உங்களைக் கடந்து செல்லும்
சிறு கணத்தில்
கடலை ஒரு கிண்ணத்தில்
நீங்கள் பருகிக் கொண்டிருக்கலாம்.

கவிதை ஒரு கடலாகிறது

கடல் குடித்த
சாம்பல் நிறப் பறவை
என்னை ஊமையாய்க் கடந்து செல்லும் சிறு கணத்தில்
அதன் சொண்டிலிருந்து
மீனொன்று என் அருகில் விழுகிறது.

பேப்பரொன்றில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த
சொற்கள் மீனைக் கவ்வி
எனது கவிதையில் அமர்த்துகின்றன.

கவிதை முழுக்க மீன் குஞ்சுகள்
கவிதை ஒரு கடலாகிறது.
மீன்கள் பசியில்
சொற்களை தின்ன
கவிதை மணலாகிவிடுகிறது

மீன்கள் வாழ்வதற்கு நீர் இல்லை
பெரும் துயர் மரண வலி
மீன்களுக்கு வாழ்வு கொடுப்பதற்காய்
எனது பேனா
மேலும் மேலும் கவிதைகளை வரைகிறது.

கவிதை பெரும் கடலாய் வளர்ந்து
நிரம்பித் ததும்புகிறது சொற்கள்.
பேனாவிடம் உள்ள கற்பனைக்கு
மீன்கள் விருப்பம் தெரிவித்தால்
இன்னுமொரு கடலை உருவாக்கவும்
தயாராக இருக்கிறது.

சரவணன் அபி கவிதைகள் – இருக்கலாம், இல்லப்பணிப் பெண்டிரின் ஒரு நாள்

 சரவணன் அபி

இருக்கலாம்
இல்லப்பணிப் பெண்டிரின் ஒருநாள்
ஒரு காலை நேரச் சலனம்

இருக்கலாம்

வடிவதற்கேதும் வழியின்றி
பொங்கி நிரம்பி
ஆவியாவதொன்றல்லாமல்
தன்னைக் கரைத்துக் கொள்ளவியலா
இந்தக் கடல்
ஈர்ப்பு விசையனைத்துக்கும் மேலென
ஏதோவொன்று அழுத்தி வைத்திருக்கும்
அத்தனை நீரும்
பொதிந்து வைத்திருக்கும் இருள் அறியா
அத்தனை அந்தகாரங்களும்
என் சுயமாகக்கூட இருக்கலாம்.

வெண்ணிற பனித்துகில்
தொங்கும் திரைச்சீலை
அசைவற்ற நிசப்தம்
கொதித்தடங்கிய பாலின்
மென்சருகாடை மோனம்
கரையின் மீது காத்திருந்து
பறக்கத் துவங்கும்
முதல் சிறகசைவில்
கலையும் நீர்ப்பரப்பு
என் சிந்தையாகக்கூட இருக்கலாம்.

அசைந்து கொண்டேயிருக்கும் உணர்வுகளை
அசையா ஒரு காட்சியென
பிழையேதுமின்றி ஒரு முறை
ஒரே முறை
வடிக்க முடிந்துவிட்டால்
ஓய்ந்துவிடும் இதுவென்
ஆவியாகக்கூட இருக்கலாம்.

இல்லப்பணிப் பெண்டிரின் ஒருநாள்

எதிரும் புதிருமான
தெருக்களிலெல்லாம்
காலடி ஓசைகள்

அதிகாலை
அத்தனை பாதங்களும்
அழகிய பெரும் வீடுகளின்
தானியங்கிக் கதவுகள் திறந்து
சாலைகள் நோக்கி
சாரி சாரியாக நடக்கும்

பேருந்து நிறுத்தங்கள்தோறும்
இந்தோனேசிய தலைமுக்காடுகள்
இந்திய கைப்பைகள் குளிர்க் கண்ணாடிகள்
பிலிப்பினோ விரிந்த கூந்தல் அலங்காரங்கள்
சந்தனச் சுண்ணம் பூசிய பர்மிய கன்னங்கள்
குறைவும் நிறைவுமாக விதவிதமான ஆடைகள்
ஏதேதோ மொழிகள்

சுழலும் அத்தனைக் கண்களிலும்
ஒன்றே தாபம்
ஊடலும் கோபமும்
மகிழ்வும் பிணக்கும்
பேருந்து நிறுத்தங்களில் தொடங்கி
பேரங்காடிகளில் தொடர்ந்து
நிறுத்தங்களில் நிறையும் இன்று
சிங்கப்பூரில் ஞாயிறு

ஒரு காலை நேரச் சலனம்

அலுவலகம் செல்லும்
அவசரத்தில் அனைவரும்
தத்தம் பேசியில், புத்தகத்தில், உரையாடலில்.
அமர்ந்திருந்த எனக்கெதிரே
தலைநிமிர்ந்து அமர்ந்திருந்தாள்.
மறுமுறை நோக்க வைக்கும் முகம்,
ஏதோவோர் எண்ணம்,
ஏதோவொரு நாடகம்,
எங்கோ நோக்கிய
தளும்பிய விழிகள்
கணப்போதும் இமைக்காமல்,

பார்வையேதும் அசையாமல்
தன்னிச்சையாக மேலெழும்பும் கை
யாருமறியாமல்
நீரூறும் நாசியைத் துடைக்கும்,
சிறிதே விரிந்த உதடுகளிலும்
உறைந்த சலனம்;

யாருமே அவளைப் பார்க்கவில்லை,
அவளைத் தவிர யாரையுமே நான் பார்க்கவில்லை.
இருக்கையைவிட்டு எழாமல்,
வெறித்து எதுவும் பார்த்துவிடாமல்,
வழியப்போகிற அந்தத் துளிகள்
ஏன் என் தோள் விழக் கூடாது?

பேய் உலகம்- மந்திரம் கவிதை

மந்திரம்

இருட்டு அறைகளில்
கவிந்து கிடக்கிறது அச்சம்.
அநாதரவான தனிமையில்
உயிர்பெறுகிறது
அமானுஷ்யம்.
சிறு ஒலித்துணுக்கில்
பேரமைதி அதிர்கிறது.
நினைவின் அடுக்கில்
பேய்க்கதைகள்
மேலெழுகின்றன.
உள்ளறைகளில்
என்னைத் தவிர
இன்னொன்று நிறைகிறது,
சட்டென வெளிச்சம் மீள்கிறது.
இனி இருளுக்கென
பிறந்துவிட்டது ஓர் உலகம்.

பேராசிரியர் கி. நடராசனின் ‘கம்பனும் ஷேக்ஸ்பியரும்’- ரா. கிரிதரன் நூல் மதிப்பீடு

ரா கிரிதரன்

கம்பராமாயணத்தைப் பற்றிய திறனாய்வு புத்தகங்கள் நிறைய இருந்தாலும், உலக இலக்கியத்தை ஒப்பிட்டு ஆய்வு நூலை முதலில் எழுதியவர் வ.வே.சு ஐயர். அவரது ‘Kambaramayanam – A Study’ எனும் நூல் கிரேக்க இலக்கியங்களில் வரும் கதாபாத்திரங்களை ராமாயணத்தோடு ஒப்பிட்டு எழுதப்பட்டிருக்கும் ஆய்வாகும். காவிய அழகியலை மேலோட்டமாகத் தொட்டுப் பேசியிருந்தாலும் வ.வே.சு. ஐயரின் நூல் பாத்திரங்களின் உணர்வு நிலைகளை ஒப்பிட்டுப் பேசுவதை மட்டுமே மையமாகக் கொண்டிருக்கிறது. தனது வாழ்நாளில் இந்த ஆய்வை அவரால் முடிக்க முடியவில்லை என்பதால் முழுமையாக அவர் எழுத நினைத்ததை நாம் கற்பனை மட்டுமே செய்ய முடிகிறது. வ.வே.சு. ஐயர் வாழ்ந்த காலத்திலேயே சென்னையில் இருந்த பேராசிரியர் சி.பி. வெட்கட்ராம ஐயர் 1913 ஆம் ஆண்டு ‘Kamban and His Art’ எனும் ஆய்வு நூலை எழுதியுள்ளார். காவிய ரசனை சார்ந்த அழகியல் நுணுக்கங்களில் அமைந்திருக்கும் இந்த பெருங்காப்பியத்தின் தொகுப்புப்போக்கை நயம்பட ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த வரிசையில் சமீபத்தில் நான் ரசித்துப் படித்த நூல் பேராசிரியர் கி. நடராசன் எழுதிய ‘கம்பரும் ஷேக்ஸ்பியரும்’ (பாவை வெளியீடு, ராயப்பேட்டை, சென்னை)

கன்னனொடு கொடை போயிற்று, உயர் கம்பநாடனோடு கவிதை போயிற்று என பாரதி சொன்னதுபோல அனைத்துவிதமான சந்தங்களிலும் அமையும் இந்த பெருங்காப்பியத்துக்கு இணையான காப்பியம் தமிழில் இதுவரை இல்லை. மொத்தம் 96 வகையான சந்தங்களில் விருத்தப்பாடல்களாக கம்பராமாயணம் அமைந்துள்ளது. கானகத்தில் கிடைத்த கனி என வால்மிகி ராமாயணம், அக்கனியை கீறி தேன் தடவி உண்ணுவது கம்பநாடகம் என்று நாமக்கல் கவிஞர் எழுதியுள்ளார். சோழ ராஜ்ஜியம் தமிழக வரலாற்றின் மகுடம் எனச் சொல்லும்போது கோவிற்கலை, ஓவியம் மற்றும் இசைக்கலை போன்றவற்றுடன் கம்பனின் தீந்தமிழ் காவியத்தையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கம்பநாடகம் பாடப்பெற்ற வரலாறு இன்று கம்பமண்டபமாக ஶ்ரீரங்கத்தில் அமையப்பெற்றிருக்கிறது. இத்தனை சிறப்புபெற்ற கம்பராமாயணம் நம் தமிழர் வாழ்வில் எந்தளவுக்குக் கலந்திருந்தது? சங்கப்பாடல்களில் வரும் சில ராமாயண நிகழ்வுகள் வால்மிகியில் கூட இல்லை எனும்போது தமிழர் வாழ்வில் ராமாயணத்தைப் பற்றிய ஈடுபாடு கம்பருக்கு பல காலம் முன்பிலிருந்து இருந்தது எனலாம்.

கம்பநாடகம் தென் தமிழ்நாட்டில் நாடகமாக இயற்றப்பட்ட வரலாறு அ.கா. பெருமாள், ஸ்டுவேர்ட் ப்ளாக்பெர்ன் போன்ற ஆய்வாளர்களால் தொகுக்கப்பட்டுள்ளது. தோல்பாவைக்கூத்து, ராக்கூத்து எனும் வடிவங்களில் கம்பனின் வரிகள் எட்டு நூற்றாண்டுகளாக நிகழ்காவியமாக மேடையேறிக் கொண்டிருக்கின்றன என்றாலும் திரளான மக்கள் கண்டு களித்தார்கள் எனச் சொல்வதற்கில்லை. ராவணவதம், கும்பகர்ணனின் கதை, சுந்தரகாண்டம் எனச் சில நிகழ்வுகள் கூத்துகளில் நிகழ்த்தப்பட்டன என்றாலும் தொல்பாவைக்கூத்து அளவு வேறெந்த நிகழ்வும் விரிவாக அமையவில்லை. இன்று வரை வட கேரளத்தில் மட்டுமே தொல்பாவைக்கூத்து நிகழ்த்தப்பட்டுவருகிறது. இதைப்பற்றி ஸ்டுவேர்ட் ப்ளாக்பெர்ன் ‘Inside the Drama House’ எனும் சுட்டு நூலை எழுதியுள்ளார்.

கி. நடராஜனின் நூலில் ஒப்பிடப்படும் மற்றொரு மேதையான ஷேக்ஸ்பியரின் 37 நாடகங்கள் அவர் வாழ்ந்த காலம் தொடங்கி இன்றுவரை மக்கள் நாடகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. எத்தனை நவீன, பின் நவீன நாடகங்கள் வந்தாலும் ஷேக்ஸ்பியர் நாடகங்களின் மீதான வரவேற்பு குறைவதில்லை. ஒவ்வொரு வருடமும் இங்கிலாந்தின் பல நாடக அரங்குகளிலும் அவருக்காகவே உருவாக்கப்பட்ட லண்டனின் குளோப் அரங்கிலும் (Globe Theatre) திரளான கூட்டத்துக்கு இடையே அவரது நாடகங்கள் நிகழ்த்தப்படுகின்றன. குறிப்பாக, குளோப் அரங்கின் மேடை நாடக அமைப்பைப் பற்றி தனி கட்டுரை தான் எழுதவேண்டி வரும். ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், குளோப் அரங்கில் நடக்கும் நாடக நடிகர்கள் பார்வையாளர்களையும் கதைக்குள் ஒரு அங்கமாக்கிவிடுவார்கள். பார்வையாளர்கள் ஆக்ரோஷமாகத் தங்கள் கருத்துகளை தெரிவித்தபடி நாடகத்தில் பங்கு பெறுவதை நான் பார்த்திருக்கிறேன். முதல் பத்து நிமிடங்களிலேயே பார்வையாளர்கள் யார் பக்கம் எனத் தெரிந்துவிடும். அந்தளவுக்கு மக்கள் நாடகமாக ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அமைந்திருக்கின்றன.

இப்படி இருவேறு வகையான வரவேற்பைப் பெற்ற காவியங்களை எழுதிய ஆசிரியர்களை ஒப்பிடும்போது சிக்கல்கள் பலதும் ஏற்படும். நாடகாசிரியரும், காவிய கர்த்தாவும் ஒப்பிடக்கூடியவர்களா? வெவ்வேறு மொழியில் கவிதை எழுதியவர்களை எந்தத் தராசு கொண்டு அளவிடுவது? 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இருவரைப் பற்றியும் உரை நிகழ்த்தி வரும் பேராசியர் கி. நடராசன் மிகக்கவனமாக கதாபாத்திரங்களையும், அவர்களது பண்பாட்டின் குணாதிசயங்களையும் மட்டுமே கருத்தில் கொள்கிறார். கால வித்தியாசங்களைக் கருத்தில் கொள்ளாது பாத்திரங்களின் உணர்ச்சி நிலை, நெடும் பண்பாட்டு உரையாடலில் அவ்வுணர்ச்சிகளின் இடம், இயற்கை விவரணைகள், நாடகத்தின் உச்சகட்ட தருணங்கள் என காவிய அழகைக்கொடுக்கும் ரசனையை மட்டும் ஒப்பிடுகிறார். இதனால் கி. நடராசன் காட்டும் உண்மைகள் மானுடம் தழுவிய உண்மைகளாக அமைந்திருக்கின்றன. கால தேச வர்த்தமானங்களைக் கடந்து இரு மகா கலைஞர்களை ஒப்பிட்டுப் பார்க்கும் அளவுகோலாகவும் கச்சிதமாக அமைந்துவிடுகின்றது.

முதலில் நூல் தோற்றம் குறித்த ஒப்பீட்டில் கம்பனும் ஷேக்ஸ்பியரும் தங்கள் மூதாதைகள் காட்டிய வழியைப் பிந்தொடர்வதில் ஒற்றுமை கிட்டுகிறது. வான்மீகியிலிருந்து ராம காதையையும், தமிழ் சங்க நூல்களிலிருந்து துறை ரசனையையும் எடுத்துக்கொண்ட கம்பர், சந்தங்களின் ரசனைக்குப் பல சைவ பாடல்களையும், வைணவ பாசுரங்களையும் நிழலெனத் தொடர்ந்திருக்கிறார். கிரேக்க மற்றும் ரோமானியக் காவியங்கள் மற்றும் இங்கிலாந்து நாட்டின் பழங்கதைகளிலிருந்து தனது நாடகங்களுக்கான பாத்திரங்களையும், கருக்களையும் தொடர்ந்த ஷேக்ஸ்பியர் கம்பனைப் போலப் பல புதிய சொல்லாட்சிகளை உருவாக்கியுள்ளார்.

எளிமை, இனிமை, இயல்பான உரையாடல்கள், மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், எல்லாவற்றையும் ஷேக்ஸ்பியரின் பாத்திரங்கள் இயல்பான நகைச்சுவை உணர்வோடு அலசி ஆராய்வதாக அமைந்திருக்கின்றன. இது மக்களிடம் நேரடியாக உரையாடியது. கலகத்தை உண்டு செய்தது. கோபத்தையும் கண்ணீரையும் வரவழைத்தது. மக்கள் தங்களில் ஒருவராக பாத்திரங்களோடு பயணம் செய்தனர். இதற்கு நேர்மாறாக, கம்பனின் காப்பியம் அதீதங்களின் ருசியை படிப்பவருக்கு அளிக்கவல்லது. அன்றாட வாழ்வின் ரசனைக்கு இடம் கொடுத்தாலும், உணர்ச்சிகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன. காட்சிகளில் பிரம்மாண்டமும், உயர்வுநவிற்சி அணியும் அதிகமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளதால் படிப்பவரின் முயற்சி மூலம் காவியகர்த்தாவை எட்டிப்பிடித்து தொடரும் நிலையில் கம்பனின் காப்பியம் உள்ளது. ஷேக்ஸ்பியரின் சானெட்டுகள் போல இறங்கி மக்களுக்கு அருகே வருவதில்லை. நாடகம் என்பதால் அதன் உணர்ச்சிகள் அதீதமாக இருந்தாலும், மக்களிடம் கடத்தும் தன்மையில் அது சமநிலை மாறாமல் இருக்கிறது என கி. நடராசன் சொல்கிறார்.

Shall I compare thee to a summer’s day
..my mistress’s eyes are nothing like the sun

என மிகச் சாதாரணமாக அணிகளைப் பயன்படுத்துகிறார் ஷேக்ஸ்பியர்.

இதை சீதையை வர்ணிக்கும் இடத்தோடு ஒப்பிடும்போது:

கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவை எல்லாம்
வெல்லும் வெல்லும் என மதர்க்கும் விழி கொண்டாள்
சொல்லும் தன்மைத்து அன்று இது குன்றும் கவரும் திண்
கல்லும் புல்லும் கண்டுருகப் பெண் கனி நின்றாள்

எனவும், பொய்யோ எனும் இடையாளோடும் எனும் உவமைகளைக் கொண்டு விவரிப்பது அதீத அணிகளைக் கொண்ட விவரிப்பு என்பதாகிறது.

இதைப் படிக்கும்போது நமக்கு ஒன்று தோன்றலாம். ஒரு காவியகர்த்தாவையும், நாடக ஆசிரியரையும் நாம் ஒப்பிட முடியுமா?அப்படியே ஒப்பிடுவது நாம் இருவருக்கும் செய்யும் நியாயமாக அமையுமா? இப்படிப்பட்ட கேள்விகளை ரெண்டு விதமாக நாம் அணுக முடியும். இரு மொழிகளின் உச்சகட்ட கவிகளை ஒப்பிடுவது இருவேறு கலாச்சாரப் பின்னணியில் வளர்ந்த ரசனையை அணுகுவதற்குச் சிறந்த முறை. ரெண்டாவதாக, அழகியல் ரீதியில் காப்பியச் சுவையை செறிந்த நாடக கதாபாத்திரங்களின் அனுபவத்தோடு சேர்த்துக்கொடுத்ததில் கம்பருடன் ஒப்பிடக்கூடிய தகுதி ஷேக்ஸ்பியருக்கு உள்ளது என்கிறார் கி. நடராசன்.

கம்பராமாயணம் universal brotherhood எனும் தத்துவத்தை வலியுறுத்தும் காவியம். தன்னலங்கருதாத தியாகத் திருவுருவாக, நட்பின் அணிகலனாக, ஒரு தொண்டனாக என ஒவ்வொரு மனித குணநலனுக்கும் ஒரு பாத்திரம் கம்பராமாயணத்தில் அமைந்துள்ளது. ‘Merchant of Venice’, ‘Two Gentlemen of Verona’ என பல நாடகங்களிலும் ஷேக்ஸ்பியர் வலியுறுத்தும் நட்பும் உறவும் கம்பனின் தத்துவத்துக்கு அருகே வருகின்றன. கம்பன் இதையும் மீறி நிற்கும் இடங்கள் பல உண்டு. பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே என ‘இன்று போய் நாளை வா’ எனும் சரண் என்றால் மன்னிக்கும் தத்துவம் கம்பனுக்கு மட்டுமே உரிய ஒன்று.

மாயங்கள் நிரம்பிய கருக்களை இரு காவிய ஆசிரியர்களும் படைத்துள்ளனர். மாயா சனகப்படலம், இந்திரஜித்தனின் மாயங்கள், மாயமான் என கம்பனின் காவியத்தில் பல இடங்கள் மாயங்கள் நிரம்பியுள்ளன. குறிப்பாக மாயத்தை ஒரு உத்தியாக மட்டும் பயன்படுத்தாது, பாத்திரங்களின் தனித்தன்மையை வெளிக்கொணரும் நாடக தருணங்கள் பலவற்றை கம்பன் இயற்றியுள்ளார்.

மாயா சீதைப் படலத்தில், சனகன் இறந்தது போல ஒரு மாயை உருவாக்கி சீதையைக் கலங்கச் செய்யும் செய்யுளில்

எந்தையே எந்தையே என் பொருட்டினால் உனக்கும் இக்கோள்
வந்ததே என்னைப் பெற்று வாழ்ந்தவாறு இதுவே மண்ணோர்
தந்தையே தாயே செய்த தருமமே தவமே தவமே என்னும்
வெந்துயர் வீங்கு தீவிழ் விறகு என வெந்து வீழ்வாள்

சீதையின் வருத்தத்தைக் கண்டு ராவணனின் சித்தம் கலங்குகிறது. அவனது காம உணர்ச்சிகள் மதி மயக்கத்தை உண்டு செய்கிறது. சித்தம் கலங்கியவன் , ‘உனது தந்தையைக் கொல்ல மாட்டேன் அழாதே’ என உண்மையை உடைத்துவிடுகிறான். மனம் இறங்கி உண்மையை சொல்லிவிடுகிறான். அதன் மூலம் இது ஒரு மாயை என அவள் அறிகிறாள். இங்கு மாயை ஒரு வித்தைக்காக மட்டும் அல்லாமல், ராவணனின் உடையும் பனிக்கட்டி போன்ற பலகீனமான உணர்ச்சியை நமக்குக் காட்டவும் பயன்படுகிறது.

ஷேக்ஸ்பியரில் வரும் மாயங்கள் ஒரு கதையை விளக்கவோ, மாயத்தைக் காட்டி பிறரை மயக்கவோ மட்டுமே பயன்படுகிறது என்பதால் கம்பன் அளவுக்கு மாயக்காட்சிகள் கதையின் போக்கை செறிவுபடுத்தாமல் போய்விடுகிறது என்பது ஆசிரியரின் அபிப்ராயம்.

சில நேரங்களில் பாத்திரங்கள் பேசும் பாணியிலிருந்து அவர்களின் உணர்ச்சிகளை கம்பன் உணர்த்திவிடுகிறார். உதாரணமாக குகனுக்குத் தன் தாய் கைகேயியை அறிமுகப்படுத்த விரும்பாத பரதன் அவளது முறை வரும்போது தன் எல்லையற்ற வெறுப்பை வெளிப்படுத்தி அவளை அறிமுகப்படுத்துவதாக கம்பன் காட்சி அமைப்பான்.

இந்நின்றாள் என்னை ஈன்றாள்

என மூன்று வார்த்தைகளில் சொல்லிக் கடத்திவிடுகிறார்.

one may smile and smile and be a villain

எனச் சுருக்கமான வரிகளின் மூலம் படிப்பவரின் மனதில் கதாபாத்திரத்தின் தீவிரத்தையும் உணர்ச்சி வேகத்தையும் குறிப்பிடுவதில் இருவருக்கும் கடும்போட்டி உண்டு.

காவியத்தில் புலம்பல்கள் என்பது ரசனையைக் கூட்டிக்காட்டும் செயல். படிப்பவர்கள் மனதில் தனிப்புலம்பல்கள் மிகப்பெரிய நாடகக்காட்சியை உருவாக்கிக் காட்டிவிடும். தனிப்புலம்பல்கள் அமைப்பதில் கம்பனும் ஷேக்ஸ்பியரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்களல்ல. அதுவும் soliloquy எனும் வடிவத்தின் பிதாமகனாகவே ஷேக்ஸ்பியர் காணப்படுகிறார். அவருக்கு முன் கிரேக்க துன்பியல் நாடகங்களில் மட்டுமே இப்படிப்பட்ட நீண்ட தனிப்புலம்பல்கள் வந்துள்ளன.

மண்டோதரியின் புலம்பல் காவியத்தின் ஓலம். விந்தையான சொற்சித்திரத்தை கம்பர் நமக்குக் காட்டுகிறார்.

வெள் எடுக்கஞ் சடை முடியான் வெற்பு எடுத்த
திருமேனி மேலும் கீழும்
எள் இருக்கும் இடம் இன்றி உயிர் இருக்கும்
இடம் நாடி இழைத்தவாறே
கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை
மனச்சிறையில் கரந்த காதல்
உள் இருக்கும் எனக் கருதி உடல் புகுந்து
தடவியதோ ஒருவன் வாளி!

வாளி – அம்பு

சீதை மேலிருக்கும் காதலை உள் புகுந்து தேடியிருக்கிறது ராமனின் அம்பு எனப் புலம்புகிறாள் மண்டோதரி. ஆரம்பத்திலிருந்து ராவணன் மீது கோபத்தில் இருந்தவள் தன் கையறு நிலையை தனிப்புலம்பலாக்கியிருக்கிறாள். சீதை மீது கொண்ட காமம், தன்னைத்தாண்டிச் சென்ற காமம் எனும் tragic flaw தனது கணவனை வீழ்த்தியிருக்கிறது. இங்கு ராவணனின் காமத்தை பகிர்ந்திருந்த மண்டோதரிக்கு அவனை வீழ்த்தியிருந்த அம்பு காமத்தைத் தேடியிருப்பதாகப் பட்டிருக்கிறது.

அண்ணனின் உடலைக் கண்ட வீடணன்,

உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு
சனகி என்னும் பெரு நஞ்சு உன்னைக்
கண்ணாலே நோக்கவே போக்கியதே
உயிர் நீயும் களப்பட்டாயே!
எண்ணாதேன் எண்ணிய சொல் இன்று இனித்தான்
எண்ணுதியோ எண் இல் ஆற்றல்
அண்ணனே அண்ணாவோ அசுரர்கள் தம்
பிரளயமே அமரர் கூற்றே

சீதை எனும் பெரு நஞ்சு நீ பார்த்த நேரத்திலேயே உன்னில் கலந்து உயிரைக் குடித்துவிட்டது எனப் புலம்புகிறான் வீடணன். இங்கு நாம் காண்பது சீதை எனும் பூமாதேவி மீது இருக்கும் அளவில்லாத பக்தி.

கம்பனின் தசரதனையும், ஷேக்ஸ்பியரின் மகத்தான கதாபாத்திரமான லியர் மன்னனையும் ஆசிரியர் ஒப்பிடுகிறார்.

காதோரம் நரை தெரிந்த காலத்தில் தனக்குப் பின்னால் குழந்தைகள் இல்லை எனும் வேதனையோடு பிள்ளைப்பேறுக்காக வேண்டி நின்றவர் தசரதன். முதுவயதில் தனது அதிகாரத்தை பகிர்ந்து அளித்துவிட்டு தன் மகள்களுடன் வாழலாம் என முடிவெடுக்கிறார் முதியவர் லியர். உண்மையான பாசத்தை உடையவரை அடையாளம் காணத்தெரியாத குருடனாக லியரின் சரிவு நமக்கும் தசரதனின் வாழ்வைவிட திருதிராஷ்டிரனின் வீழ்ச்சியையே ஞாபகப்படுத்துகிறது.

பிறிதொரு குறையிலை யெற்பின் வையகம்
மறுகுறு மென்பதோர் மறுக்க முண்டரோ

ஆனால், லியரைக் காட்டிலும் தசரதன் தயாநிதியானவர். அதிகாரத்தைப் பகிர்ந்தளித்த பின்னரும் தனக்கென ஒரு படையும், தன் சொல் கேட்டு நடக்கும் பிள்ளைகளும் வேண்டுமென அதிகாரத்தை விட்டுக்கொடுக்க இயலாத கிழவர் லியர். மாறும் உலகத்தைக் கண்டும் காணாமலிருக்கும் குருட்டுத்தனமும், அதிகாரத்தை கைவிடமுடியாத அகங்காரமும் நிறைந்தவர்.

தசரதன் இரு முறை தன்முடி துறக்கத் தயாராக இருந்தவர். காடு சென்று தவமேற்கும் வாழ்வை மேற்கொள்வதற்காக ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய எடுத்த முயற்சி ஒரு முறை. கைகேயி மனம் மாறியபின்னர், பெற்ற வரங்களைத் திரும்பப்பெற்று ராமன் காடேறுவதைத் தடுக்கும் பொருட்டு அதிகாரத்தை துறக்க நினைத்தது ரெண்டாம் முறை. இரு சமயங்களிலும் தான் பெற்ற பிள்ளைகளின் மீது அதீதப்பாசம் கொண்டவராகவே தசரதன் வருகிறார். நிலைமை கைமீறிப்போகும்போது கைகேயியை மனைவி இல்லை எனவும் பரதன் மகனல்ல எனவும் கோபத்தில் முடிவெடுப்பது தவிர ராமனின் தயாள குணம் மொத்தமும் தசரதனிடமும் குடி கொண்டிருக்கிறது.

Lear: better thou
Hads’t not been born the not to have
pleased me better

என்னைப் பாராட்டாத நீ பிறக்காமலேயே இருந்திருக்கலாம் என மூன்றாவது மகளான கார்டெலியாவைப் பார்த்துக் கூறும் லியரளவு பரதனை பிள்ளையல்ல எனும் போது தசரதன் தாழ்கிறார். மற்றபடி லியரிடம் இருந்த அதிகார போதை துளியளவு கூட இல்லாதவர்.

சொன்னேன் இன்றே இவள் என் தாரமல்லன் துறந்தேன்
மன்னே யாவான் வருமப் பரதன் தனையும் மகன் என்று
உன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக் கென்றான்

என கைகேயியையும், பரதனையும் துறந்துவிடுகிறார் தசரதன்..

முடிவில் மீட்சிப்படலத்தில், தசரதனிடம் மீண்டும் பரதனையும், கைகேயியையும் ஏற்றுக்கொள்ளும்படி ராமன் சொல்லும்போது ராம காவியம் லியரின் காவியத்தை எஞ்சிவிடுகிறது.

ஆயினும் உனக்கு அமைந்தது ஒன்றுரை என
தீயள் என்று நீதுறந்த என் தெய்வமும் மகனும்
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக எனத் தாழ்ந்தான்.

கம்பராமாயணத்தில் வரும் சகோதர பாத்திரங்களைப் போல நல்லவை மட்டும் நிறைந்த சகோதர பாத்திரங்கள் ஒன்று கூட ஷேக்ஸ்பியரில் இல்லை. பரதனும் லஷ்மணனும் கோபம் நிறைந்தவர்கள் என்றாலும் நியாயம் இருக்கும் இடங்களில் கோபத்தைக் காண்பிப்பதில்லை.

தாய் எனும் பெயர் என்னைத் தடுக்கற் பாலதோ?

தாய் எனும் உறவில் இருப்பதால் உன்னைக்கொல்ல முடியாமலாகிறது என பரதன் கைகேயியிடம் கோபப்படுகிறான்.

ஷேக்ஸ்பியர் நாடகங்களில் துன்பியல் நாடகங்களே இன்று வரை புகழ்பெற்றவையாக இருக்கின்றன. அவற்றில் மாக்பெத் நாடகம் மிகுந்த சிறப்பைப் பெற்றது. பேராசை எப்படி ஒரு மனிதனை அடியோடு சாய்த்துவிடும் எனக் காட்டும் நாடகம். லேடி மாக்பெத் பெண்மையின் எந்த இலக்கணமுமின்றி மாக்பெத்தை தூண்டிவிட்டு கொடிய கொலைகளை செய்யவைக்கிறாள். அவளைப் போல நயவஞ்சகியாக கூனியும், கைகேயியும் இல்லாதது ஒருவகையில் ராமாயண காப்பியத்தை நடுநிலையோடு அணுக வைப்பதோடு, கதாபாத்திரங்களின் இயல்புக்கு ஆழத்தையும் அளிக்கிறது. கைகேயியை ‘தீயவையாவையினும் சிறந்த தீயாள்’ என விவரித்தாலும் அவளது தீயச்செயல் பஞ்சமாபாதகங்களில் ஒன்றாக அமைவதில்லை. சூழ்நிலையினால் மனம் தடுமாறிப் போனவள் – இராவணனின் காமமயக்கம் போலொரு திரிபு நிலை. அதாவது, கதாபாத்திரங்கள் அடிப்படை குணத்தில் வஞ்சகர்களாக அல்லாது, சூழ்நிலை அவர்களை அப்படி மாற்றும் விதமாக கதையைக் கையாள்வதில் ராமாயணத்துக்கு ஈடில்லை.

மாக்பெத் நாடகத்தில்,

I have given suck and know
How tender tis to love the babe that milks me
I would, while it was smiling in my face
Have plucked my nipple from his boneless gums
And dashed the brains out, had I so sworn as you
Have done to this

பிள்ளையைத் தரையில் அடித்து முக்குளத்தை சிதறவைக்க வேண்டுமென்றாலும் செய்துவிட்டு என் வேலையைத் தொடருவேன் என்கிறாள் லேடி மாக்பெத். லேடி மாக்பெத் பெண்ணே அல்ல அவள் ஒரு அரக்கி என விமர்சகர்கள் கருதுமாக இது போல பல நிகழ்வுகளும் மாக்பெத்தில் உண்டு.

ராமாயணத்தில் சூர்ப்பனகை கூட இப்படிப்பட்ட அரக்கக் குணத்தோடு வருவதில்லை. அவள் ராம லஷ்மணன் இருவர் மீது கொண்ட காமத்தைக் கணக்கில் கொண்டால் கூட அவள் சூழ்ச்சி செய்து இராவணனை ஏவி விட்டாளே தவிர கொடூர செயல்களில் இறங்கவில்லை.

Tragic Hero வரிசையில் இந்திரஜித்துக்கு நம் மரபில் பெரிய இடமுண்டு. சொல்லப்போனால் இராவண ராமரிடையே நடந்த போரை விட கிட்டத்தட்ட இருமடங்கு பாடல்கள் இந்திரஜித் லஷ்மணன் இருவருக்கும் இடையே நடந்த போரைப் பற்றி கம்பர் எழுதியுள்ளார். மாய வித்தைகளில் இராவணனை விட மிகவும் திறமை உள்ளவன் இந்திரஜித். மாயா ஜனகப் படலத்தில் ஜனகரைப் போல மாய உருவைப் படைத்து சீதையை மனங்கலங்கச் செய்தவன். அதே போல, சீதாதேவி இறந்தவிட்டதைப் போன்ற மாயத்தை ராமர், லஷ்மணர் முன்னே நிகழ்த்திக் காட்டியவன். ஒரே நேரத்தில் பல இடங்களில் உருவங்களை ஏற்படுத்துவதோடு, இயற்கை சீற்றங்களையும் அமைத்துக்காட்டுகிறான். கண் இமைக்காத தேவர்கள் கூட சிதறி ஓடும் விதமாக உலகம் தெறிக்கிறது.

அவனது ஆற்றலை லஷ்மணனே கண்டு வியந்து நிற்கும்போது இந்திரஜித்தனின் மாயப்போர் பற்றி வீடணன் உரைக்கிறான்

தேரினைக் கடாவி வானிற் செல்லினுஞ் செல்லுஞ் செய்யும்
போரினைக் கடந்து மாயம் புணர்க்கினும் புணர்க்கும் போய்க்
காரினைக் கடந்து வஞ்சங் கருதினுங் கருதும் காண்டி
வீரமெய் பகலினல்லால் விளிகிலனிருளின் வெய்யோன்

அரக்கருக்கு சக்தி இருளில் எனும்படியாக இந்திரஜித்தின் வீரம் பகலில் அல்லாது இருளின் சூரியன் போல இரவில் பலங்கொண்டு எழுவான் என்கிறான் வீடணன். இராவணனை எதிர்த்து இந்திரஜித் பெண் பாவத்தின் கெடுதல்களை சொல்ல முயன்றான். கும்பகர்ணன், மண்டோதரி, மகோதரன், இந்திரஜித் என இராவணனைச் சுற்றி இருந்த அனைவருமே அவனது தீய எண்ணத்தின் விளைவுகளைப் பற்றி அவனுடனேயே விவாதித்தவர்கள். யார் சொல்லையும் கேட்கத் தயாராக இல்லாதபடி காமம் அவனது கண்களை மறைந்திருந்தது. கடைசிவரை அது அவனுக்கு சரியான வழ புகட்டவில்லை.

ஷேக்ஸ்பியர் நாடகங்களில் வரும் தீயவர்கள் நம்மைப் போன்ற சாதாரணமான உணர்ச்சிகளுக்கு ஆட்படும் சாமானியர்கள். புரூட்டஸ், லேடி மாக்பெத் போன்ற எதிர் நாயகர்கள் மனித உணர்ச்சிகளை ஒரு நிலையில் வைக்கத் தெரியாதவர்கள். ஆனால் வஞ்சினத்தில் இந்திரஜித்தின் மாயத்தைப் போன்றவர்கள். இவ்விதத்தில், மனித மனதின் ஆழமான இருட்டை காட்டியவர்களாகிறார்கள்.

வாழ்நாள் முழுவதும் தோய்ந்து கிடக்கும்படியான நாடக தருணங்களும், ரசனையும் அமையும்படி படைப்புகள் கம்பன் ஷேக்ஸ்பியர் இருவரிலும் இருக்கின்றன. ஷேக்ஸ்பியரின் பாத்திரங்கள் இயல்பான நடையில், உயிர்ப்பாக அமைந்திருக்கும். கம்பனின் காட்சிகளும், உணர்வுகளும் பிரம்மாண்டமான பின்புலத்தில் அமைந்திருக்கும். மேலோட்டமான பார்வையில் இருவேறு வகையினராகத் தெரிந்தாலும் கவித்திறனிலும் கற்பனைவளத்திலும் இருவரும் ஒப்புநோக்கத் தக்கவர்கள் என்பதை இந்த நூலில் பேராசியர் கி. நடராஜன் நிறுவியுள்ளார். கம்பன் மற்றும் ஷேக்ஸ்பியரின் ரசனையின் ஒரு துளியைப் பருக நினைப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.