சிரிப்பே வரவில்லை
இப்படித்தானே சிரிக்கவேண்டுமென சிரித்துப் பார்க்க
இதுவெல்லாம் சிரிப்பில் அடங்குமா
இடதும் வலதும் உதடுகள் சைடு வாங்கிக் கொண்டதால்
தூரத்திலிருந்து பார்ப்பவர்கள்
சிரிக்கிறானென்றே பொத்தாம் பொதுவாக கூறி நகர்ந்தனர்
சிரிக்கவில்லை எனக்குத் தெரியுமாதலால்
பழைய பொசிசனுக்கு வருவதில் ரொம்பச் சிரமமில்லை
இப்பொழுது சிரிக்காமலா இருக்கிறேன் பெரிய பாவம் செய்ய பார்த்தேன்
உதடுகளைப் பழையபடி ரெண்டு பக்கமும் ஒதுக்கி வைத்துக்கொண்டேன்
அக்கேசனாக பார்த்தவர்கள் உள்ளம் களித்திருப்பார்கள்
பக்கத்தில் இருந்தவர்கள் தான்
பெரிய இனா வானா என்று முணுமுணுத்தபடியிருந்தனர்
சிரிப்பது மாதிரி ரொம்ப நேரம் செய்து
முடியவில்லை வாய் வலிக்க ஆரம்பித்துவிட்டது
திரும்பவும் நியூட்ரல் நிலைக்கு வந்து உதடுகளை
பாந்தமாகப் பிடித்து அமுக்கி விட்டுக் கொண்டேன்
என்ன செய்தும் சிரிப்பு வரவில்லை
சிரிப்பை நினைப்பதொன்றே சிரிக்கச் சிறந்த வழியென
காதுக்குள் வந்து பட்சி சொன்னதால் பிழைத்தேன்
அவ்வழியில் போனால் போகப் போக
கொஞ்சம் கொஞ்சமாக கண்ணில் நீர் பூக்க ஆரம்பித்து
ஒரே சிரிப்பு முழக்கம்
என்ன செய்தும் சிரிப்பை அடக்க முடியவில்லை
இப்படிச் சிரிக்கிறேனென்ற சொந்தச் சிந்தையே
கனிய வைத்துக் கனிய வைத்து வளம் குன்றாது காத்தது
சிம்ரன் சிரித்துச் சிரித்துப் பேசி எனக்கு ஒன்று தந்தாரே
அதுவா இது
சிரிப்பதையே வைத்த கண் வாங்காமல்
பார்த்துக் கொண்டிருக்கும் மரியாதை பொருந்தியோரே
உங்களிடம் தான் கேட்கிறேன்
இல்லையென்றாலும் ச்சும்மாவாது சொல்லுங்கள் எதாவதுனாலும்
Author: பதாகை
மழை இரவு – கமல தேவி சிறுகதை
கார்த்திகை வெளிகாத்துக்கு சிவகாமி அம்மாளின் வெள்ளை நூல்புடவை எத்தனை தூரத்துக்கு தாங்கும். உடலைக் குறுக்கினார். உள்கட்டில் ஜமுனா கண்மூடியிருக்கமாட்டாள் என்று அவர் மனசுக்குள் ஓடியது. சுவத்தில இருக்கற மஞ்ச பல்ப்பைச் சுத்தி வட்டமா வெளிச்சம்.
புகைமூட்டமாட்டம் வெளிச்சம் நெறஞ்சிருக்கு. முற்ற வாசல் மழைச் சத்தத்தால் சலசலங்குது. கேணிப் பக்கத்திலிருந்து ராப்பூச்சிகளோட சத்தம் கேக்குது. சிவகாமி அம்மாள் கண்களை மூடினால் இருட்டுக்குள் இருட்டா அவரின் எண்ணம் விரியுது. ஈரக்காத்து மேல படுறப்ப நெனப்புச் சொக்கிப் போனார்.
“அம்மா”ன்னு கதவைத் தட்டும் சத்தம். திரும்பிப் படுக்கிறேன். “அம்மா… சுருக்க கதவத் தெறன்னா. நனஞ்சு வந்திருக்கேன்,”என்கிறான். என்னால் எழுந்திருக்கமுடியவில்லை. அவன் இம்புட்டு கூப்பிட்டும் நான் எழுந்திருக்காம படுத்திருக்கறது இன்னைக்குதான்.
அவன் உள்ளே வந்து நான் படுத்திருந்த கயிற்றுக் கட்டிலில் கிடந்த பச்சை ஈரிழைத் துண்டை எடுத்து தலைய துவட்டுறான். எந்த வேலயாச்சும் துப்பா செய்யறானில்ல… தலைய அழுத்தித் துவட்டறானா பாரு? சொல்லலான்னு வாயெடுத்தா எனக்கு சொல்ல சாயல.
அவன் கைலிய மாத்திக்கிட்டு சட்ட, கால் சராய முற்றத்துக் கொடியில் விரிக்கும் சத்தம் கேக்குது. எதையாவது வயித்துக்குப் போட்டானா என்னவோ? இந்த சிங்காரி ஆக்கற சோத்த வாயில வைக்க முடியல. இத்தன வருசத்தில சோறாக்கத் தெரியாம ஒரு பொம்பள இந்த ஒலகத்தில உண்டா?
மழைச் சத்தம் ஓட்டு மேல கேக்குது. போன வருசத்துக்கும் சேத்துப் பெய்யுது இந்த கிறுப்புடிச்ச வானம். கம்பளிக்குள்ள சுருண்டுக்கிடறேன். அவன் முற்றத்தில் நடந்து வரான். இல்ல பின்கட்டில இருந்து வரான்… சத்தம் எங்க இருந்து வருதுன்னு கணிக்கமுடியல… எங்கிட்டு இருந்தோ வந்துட்டான்.
என் பக்கத்துக் கட்டிலில் ஜமக்காளத்தை விரித்து உட்கார்ந்து, “அம்மாடா…”ன்னு உடம்பை முறுக்கறான். பாவம் பிள்ளை… அவனும் அறுவது வயச பிடிக்கப் போறானில்ல. பொழுதுக்கும் பஸ்ஸில அந்த சூட்டில உக்காந்து ஓட்டறானே. இப்ப என்ன அந்தக் காலமா? நொடிக்கு ஒரு வண்டி. ரோட்டில அத்தன ரஸ்சு. அம்புட்டுக்கும் ஈடு கட்டி வண்டி ஓட்டனுமில்ல…
“அம்மா… நல்லா தூங்கிட்டியா?”
என்னன்னு தெரியாம நான் ஏதாச்சும் சொல்லியிருக்கனும், அவன் பேசறான்.
“அம்மா… இன்னக்கி துறையூரில அந்த வேணுவப் பாத்தேன். சின்னப்பிள்ளையாவே இருக்கான். கோலிக்குண்டு கண்ணுன்னு சொல்லுவியே, அவனேதான்”.
எனக்கு ஒரு பக்கமாக படுத்திருப்பது கையை இறுக்கவும் அவன் கட்டிலின் பக்கம் திரும்பிப் படுத்தேன்.
“கேளும்மா… நாதன் பெரியப்பா இருக்காருல்ல. அவருக்கு மூட்டுவாதம் படுத்துதாம். ஒரு நா பாத்துட்டு வரனும். வேணுதான் சொன்னான்”.
“ஆட்டுக்கால் ரசம் வச்சி குடுக்கனும்டா… ஆனா அவர் செத்து…”
“அம்மா… எனக்கும் இந்த முட்டிக்கு முட்டி வலிக்குது. ரிடையர்டு ஆனப்பிறகு… எங்கயாவது ஆயுர்வேதத்துக்கு போய் பாக்கனும்”.
“நான் சொன்னா நீ திட்டுவ… நீ மொதல்ல குடிக்கறத நிறுத்து. எல்லா வலியும் தெசைக்கொன்னா போயிரும்”.
“தெனமும் எதுக்குன்னாலும் குடிக்கறதையே சொல்லு. நான் குடிக்கலன்னா எல்லாம் சரியா போயிடுன்னு சொல்லு, குடிக்கல”.
“ஒனக்கு சரியாயிடுண்டா… சரியாயிடும்”.
“வெளிய மழயில நிக்கிற சுண்டக்கா, கருவேப்பில செடிங்கள பஞ்சாயத்துக்காரங்க எடுக்கச் சொல்றாங்கம்மா”.
“என்னவாம் அந்த பழிகாரங்களுக்கு? வெயிலில தாக்கு புடிச்சு நின்னதுகள, மழயில பிடுங்க சொல்றானுங்க. பாவமில்ல… அவனுங்க வீட்டுப் பக்கம் வரட்டும், பேசிக்கறேன்”.
“ஏம்மா ரொம்ப இருட்டா இருக்குல்ல?”
“எத்தன தடவ சொல்றது அமாவாசன்னா இருட்டா இருக்குன்னு. இந்தக் கட்டையில போறவனுங்க முக்கு வெளக்குக்கு எண்ண ஊத்தலயோ என்னவோ?”
வெளியே தெருவில் மின்விளக்குகள் ஔிர்வதை நிறுத்தியிருந்தன.
“ஒனக்கு நாக்குல அக்கா ஒக்காந்துட்டா. கார்த்திக காத்துக்கு அவன் என்ன பண்ணுவான்?”
“என்ன சிலுசிலுப்பு! மூணா வருசம் இப்படி பேஞ்சது. ஏகத்துக்கும் வெயிலில காயவிட்டு இப்ப பெய்யறதால சிலுசிலுப்பு ஒறைக்கிது”.
“அதில்லம்மா… வயசாவுதில்ல?”
“என்ன வயசு… எங்கம்மால்லாம் எப்பிடியிருந்தா?” ங்கறப்பவே எனக்கு தொண்டைய அடச்சுகிட்டு இருமல் வருது. அந்த புடையடுப்பில கிடக்கிற தண்ணியதான் எடுக்க எந்திரிக்கிறானா பாருன்னு நானே எழுந்து தண்ணிய சொம்பில் ஆற்றிக் கொண்டுவந்து கட்டிலில் உட்காரவும், கட்டில் மடமட என்று சத்தம் எழுப்புது. முட்டிஎழும்பும் களுக்களுக்ன்னு புலம்புது.
“சுடுதண்ணி ஒரு மொடக்கு குடிக்கறியாடா… வேணான்னா பதில் சொல்றனா பாரு?”
மழ விட்டுபோச்சு. பூச்சிகளின் சத்தம்கூட இல்லாம தெருவே வாய் மூடிக் கிடக்கு. கிணுகிணுன்னு சின்ன உடுக்கய திருப்பற சத்தம். அது வார வழி காதுக்குத் தெரியுது. பெருமா கோயில் தாண்டி கொழிஞ்சி மரத்து வீட்டுக்குக் கிட்ட கேக்குது. குடுகுடுப்பக்காரன் ஏதோ சொல்றான். தெருவிளக்கு பளீர்ன்னு எரியுதே? உள்ள நடை லைட்டு எரியல, அதான் அவ்வளவு இருட்டு.
“வேலையில்லாம வீட்ல இருக்க கைகாலெல்லாம் உசுறத்துப்போவுதும்மா”.
“அது சின்னப்பிள்ளயா இருக்கயில இருந்து உனக்கு சத்தில்லாத திரேகம்… வயசாவுதில்ல… வயசாறத ஏத்துக்கடா”.
“என் வயசுக்காரங்க எல்லாம் இப்படியா இருக்காங்க…”
“ஆண்டவன் கொடுத்த ஒடம்புடா தம்பி… ஒவ்வொன்னுக்கும் ஒரு சேர்மானம், பிடிமானம் கூடக் கொறய இருக்கும்… ஒன்னு போல இருக்கறது படைப்பில்ல… அது செய்யறது… நம்மள்ளாம் படைப்புடா தம்பி…”
“என் சமாதானத்துக்குன்னு எதையாச்சும் சொல்லு”.
“ஒவ்வொரு சீவன்லயும் ஒன்னத்தேடி கண்டுபிடிக்குமாம் சிவம்… ஒன்னுபோல இருக்கறத விட்டுட்டு போல இல்லாதத… தானா தனக்குள்ள ஆக்கிருமுன்னு எங்க அய்யன் சொல்வாரு…”
“ம்”
“அவரு இதெல்லாம் எங்களுக்கு சொல்லையில உன் பிராயந்தானிருக்கும்,”
“ம்”
“வேல செஞ்சது போதும்… வீட்ல எங்கக்கூட இரு…பேசு”.
“வேல இல்லன்னா மரியாத இல்லம்மா. ஒடம்பும் பலமில்ல…”
“ஏண்டா ருசியில்லாம போற… அது அப்படியே உன்ன இழுத்துக்கிட்டு போய் சலிப்பில நோயில தள்ளிரும்…”
“இப்ப மட்டும் நல்லாவா இருக்கேன்…”
“இது நோயில்ல… அதுப்பக்கமா போற…”
“என்னமோ போம்மா… இந்த வயசில நடக்க முடியாத நீ வாழ்க்கய பிடிச்சு வச்சிருக்க. எனக்குதான் விட்டுப்போச்சு”.
“நீ குடிக்கறத விடுடா”.
“கைகாலெல்லாம் நடுங்குதும்மா… விளையாட்டா பழகினது…”
அவன் குரல் தேயத்தேய புதர்லருந்து பாஞ்சு வராப்ல நாய் ஒன்னு கத்துது. நிறுத்தாம கத்துது. மத்ததெல்லாம் எங்க சுருண்டு கெடக்குதுக? ஒன்னு மட்டும் உயிரவிட்டு கத்துதேன்னு நெனக்கறதுக்குள்ள நாலஞ்சு நாய்ச் சத்தம் கேக்கவும் சரியா இருக்கு.
“பாத்தியாடா… மனசில நெனக்கறது நாய்க்கூட கேக்குது… நீ பேசி முடிச்சிட்டா வாய தெறக்க மாட்டியே?”
மறுவ மறுவ உடுக்கய அடிவயிறு கலக்க ஆட்டியபடி குடுகுடுப்பக்காரன் வரான்.
பெருமாளே… எதுமலயானே அவன அப்படியே எங்கவீட்டத் தாண்டி கடத்தி வுட்டுடேன். பாவி கருநாக்கு வச்சிடப் போறான்.
பக்கத்தில வந்திட்டான். நெசத்த ஒத்த சொப்பனம். எழுந்திருச்சி கதவுக்கிட்ட காத வச்சி ஏதாச்சும் சொல்றானான்னு கேக்கனும். நடராசு…ஏடா நடராசு ன்னு இவன கூப்பிட வாயெடுத்தா தொண்டய விட்டு சத்தம் வரல. கைகால உதறி எழுந்திருக்க உந்தறேன். கூப்பாடு போட்டுட்டேன்னு விருட்டுன்னு எழுந்திருக்கயில வாயே திறக்கல. கண்ணத் திறந்தா பாக்கறதுக்கு எதுவுமில்ல… கண்ண மூடிக்கிட்டா எத்தனையோன்னு கண்ணை மூடிக்கிட்டேன்.
மெல்ல நடராசு… நடராசுன்னே மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு. அதத் தாண்டி ஒரு நெனப்புமில்ல. அவனயே கூப்புட்டுக்கிட்டே இருந்தா வந்துருவானா?தலைக்கு மேல நிக்கற காத்தாடியில தொங்கறான் அவன். அவன வாசலத் தாண்டி கொண்டு போறாங்க.
வரவேமாட்டானா? வரவேமாட்டானா? ஓங்கி மாரில் அடிச்கிக்க எடுத்த கையால் ஒன்றும் செய்யமுடியல. நானே கொன்னுட்டேன்… நாந்தான்… வளஞ்ச தளிர நிமுத்தாம முதுந்து காஞ்சத நானே சாச்சுட்டனே…
ஒடம்பு முழுக்க தடதடப்பு. மண்டக்குள்ள மின்னல் வெட்றாப்பல, யாரோ கூப்படறாப்ல இருக்கு. படபடன்னு மாரடிக்குது. சிவனேன்னு அப்படியே படுத்துக்க ராசாத்தின்னு படுத்துக்கிட்டேன். கட்டில் சட்டத்தைப் பிடிச்ச கை நடுங்கிக் கொண்டேயிருந்தது. யாரையும் கூப்பிடத் தோணல… சின்ன சத்தம்கூட கேக்கல. இருட்டுக்குள்… இருட்டு.
காலை வெளிச்சம் விழுந்த முற்றம் இரவின் ஈரத்தில் மினுக்கியது. சிவகாமிஅம்மாள் நெஞ்சு தடதடங்க எழுந்து உட்கார்ந்தார். அவர் உடம்பு முழுக்க தடதடப்பு இருந்தது. எழுந்து நிற்க முடியாமல் மீண்டும் உட்கார்ந்தார். ஐமுனா சுடுதண்ணியோடு முத்தத்தில் இறங்கி வருகிறாள். அம்மாளுக்கு அவளைக் கண்டதும் உள்ளுக்குள் ஒரு ஆசுவாசம். இரவைச் சொல்ல வார்த்தைகளை தேடிச் சேர்க்கத் தொடங்கினார்.
மாசிலாமணி- ந. பானுமதி சிறுகதை
“மாசு, எலே, மாசு, எங்கிட்டடா தொலஞ்ச? இன்னெக்கு உன்ன பலி போடாம உங்கறதில்ல”. இரு கைகளாலும் வறட்வறட்டென்று தலையைச் சொறிந்து கொண்டே ராணி குடிசையிலிருந்து கத்திக் கொண்டு தெருவில் இறங்கினாள்.
“அய்ய, இம்மாம் கூப்பாடு ஏன் போடுதே? வருமில்ல. அத்த மணின்னு விளிச்சா என்ன?” என்றாள் கனகு.
“மணியாமில்ல, மணி, தாத்தைக்கு தாத்தன் பேரு நொண்டிப் பயலுக்கு! அவன் உனக்கு மச்சானா, சீறிக்கிட்டு வர, உள்ளார போயி கலயத்தை எறக்கிட்டு வெஞ்சனம் ஆக்கு. நாயம் பேசுதா?”
“குலவயிடாட்டா உனக்கு சாமி ஏறாது, அம்மையும், புள்ளயும் வாய் வலிச்சுக்கிட்டு நில்லுங்க”.
“இந்தா, கனகு, அத்த எம் புள்ளயின்னு இன்னொரு வாட்டி சொன்ன, சூட்டாங்கோலால நாவ அத்திடுவேன், ஆமா”.
ஊரின் கடைசி வீடு அவர்களுடையது. பழவூர் என்ற பெயருக்கு ஏற்றபடி மிகப் பழமையான ஊர் அது. மொத்தமே நாற்பது குடும்பங்கள்தான். புஞ்சையில் அவர்கள் பிழைப்பு ஓடிக் கொண்டிருக்கிறது. வடக்குத் தெற்காக ஓடும் வீதிகளில் அவரவருக்குத் தோன்றிய விதங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகள், குடிசைகள். சிலது தெருவையும் வளைத்து முன் துருத்தி நிற்கும். சில குடிசைகள் பம்மிக் கொண்டிருக்கும். அதனால் அதிகமாக கிழக்கு பார்த்த வீடுகள் காணப்படும். பெரும்பாலும், நாட்டு ஓடுகள் அல்லது கூரைகள்; தாழ் கூரை அமைப்புகள், குறுக்குச் சுவர் மட்டுமே எடுக்கப்பட்டு இரு அறைகளாகத் தோன்றும் வசிப்பிடங்கள். மிகச் சிறிய ஜன்னல்களும், மேற்கூரையில் ஒளிக்காக சிறு சதுரக் கண்ணாடிகளும் பதிக்கப்பட்டிருக்கும். ராணியின் குடிசைதான் குடித்தனங்களின் எல்லை. அதை அடுத்து பருவங்களில் சடைக்கும் காய்களோடு ஊராரின் பேய்க் கதைகள் வாழும் பெரிய புளிய மரம். அதை அண்டிப்படர யத்தனிக்கும் காட்டுக்கொடி. பிறகு உடைக்காடுகள், முள் மரங்கள், கத்தாழைச் செடிகள், குறும்பூக்களும், காட்டுப் பூக்களும் படர்ந்திருக்கும் பாதை வழிகள். அவற்றின் ஊடாகத்தான் எந்த கிராமத்திற்கும் செல்ல முடியும்.
முருகேசன் செட்டிகிட்ட எண்ணை வாங்கி வருவதற்காக சின்னம்மா கொடுத்தனுப்பிய குப்பியுடனும் பணத்துடனும், தன் வளைந்த காலை இழுத்து இழுத்து குறும்பூக்களிடம் நெருங்கி பேசிக்கொண்டிருந்தான் மாசிலாமணி. ”நீங்க பூமில காங்குறீங்க, என்னய மாரி வளஞ்சு வளஞ்சு அந்த மானத்தையே தொடப் பாக்குது அந்தால நிக்குற தென்ன. குள்ளயன், குள்ளயங்குது என்னய! பாத்துக்கிடுங்க, நான் தென்னய மாரி உசந்து மான நிலாகிட்ட போவன். உங்களுக்கு என்ன வாங்கியாரட்டம்?”
“தத்தாரி நாயே! எண்ணக்கு காத்துக் காத்து கூவுதேன். வரப்புல பெனாத்திக்கிட்டு கிடக்க,” என்று கத்திக்கொண்டே அவன் காலை அவள் எத்தவும் அவன் உருண்டு முள் படுகையில் விழுந்தான். உடலை இழுத்து இழுத்து அவன் மேடேறுகையில் அவளுக்கு ஒரு குரூர திருப்தி ஏற்பட்டது. சிராய்ப்புகளில் துளிர்க்கும் குருதிக்கோடுகளில் தன் மனம் கொக்கரிப்பதை அவள் உணர்ந்தாள். அவனை மேலும் இம்சிக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தது. இவனால் அல்லவா அவள் இந்த கேடுகெட்ட ஊருக்கு வாழ வந்தாள்? ”பச்ச புள்ள தாயீ, அப்பன் காட்டுல பாடுபடுதான், புள்ளய எப்படிப் பாக்க; உன்னக்க முறதான் தாயீ” என்று சொல்லிச் சொல்லி அவளை ஒரு பட்டி ஆட்டுக்கு அப்பன் இங்கே பத்தி விட்டு விட்டான். மறு வருடமே சீக்கில் விழுந்து செத்தும் போய்விட்டான். கனகுவும் இந்தப் பொட்டக்காட்டுக்கு வந்துவிட்டாள். ஆனால், இப்போது எண்ணை வேண்டும். இவளே போய் வாங்கி வரலாம். ஆனால், முருகேசன், கையைப் பிடித்து நேரம் காலம் தெரியாமல் வழியத் தொடங்கிவிடுவான். இவள் போய் நின்றால் கொஞ்சம் மளிகை கூடுதல் நிறையுடன் கிடைக்கும். மேலும் வீட்டில் கட்டியவனும், இவள் தங்கையும் தனியாக இருக்கிறார்கள்.
‘அய்ய, சின்னம்மை மூஞ்சி செவசெவன்னு கடக்கே. எண்ணதான இந்தா கொண்டிட்டு வாரேன்”.
‘ஆமா, நொண்டிக்கால வச்சுக்கிட்டு குருதையில வர மகராசரு.’.
அளவு குறைந்திருந்த எண்ணைக் குப்பியைப் பார்த்ததும் அவளுக்கு மீண்டும் ஆவேசம் அதிகமாகிவிட்டது. ”என்னடா எண்ணய குடிச்சுப் போட்டயா, பேதியில போக நீயி, உன்னய பெத்து அதால செத்தும் போனாளே மவராசி, என்னயக் கூட்டிக்கிடு தாயி. உம்மவங்கூட தாளல இம்ச,” என்று அவள் ஒப்பாரி வைக்கவும் அவள் கணவன் மணியை முறைத்தான். “ராஸ்கோல், என்ன முழிக்கே, என்ன புரணி பேசலாம்னு எண்ணிக் கிடக்கீரோ வாத்தியாரு? எண்ணைய எங்க கொட்டின?”
மாசிலாமணிக்கு பொய் சொல்லத் தெரியவில்லை. ”அங்கத்தாளுக்கு களுத்து சுளுக்கிட்டு. அத்தான் எண்ணய தெளிச்சு சுலட்டி விட்டன்,” என்றான். இப்போது அப்பன் பளாரென்று அறைந்தான். “காட்டுல சவமா சாவறேன் இதுல, எவளுக்கோ என்னலே கொடுக்கே? உந்தொடுப்பா அது?”
“ஆமாய்யா, உம்புள்ள மம்மத ராசா, தொடுப்பு வருவாளுகல்லா?” என்றாள் ராணி.
“இந்தா புள்ள, இன்னி முச்சூடும் இவனுக்குத் திண்டியில்ல. கட்ட தொட்டிக்கு உடச்ச ஒடமுள்ளு வோணும். அத்த செய்யச்சொல்லு. சோறு காட்டாதே.”
“கனகு எப்படியும் தின்னக் கொடுக்கும்,” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டே அவன் வேலையைத் துவங்கினான்.
“வெரசா குடிச்சுப் போட்டு சட்டியத் தா. உன் ஆயி பாத்துச்சோ பலி போட்டுடும்,” என்றவாறே வந்தாள் கனகு.
“வவுறு கத்துது கனகு, சோறு, சோறுங்குது. இம்மாம் வேல செய்யச் சொல்ல காந்திக் காந்தி வருது”.
“பொறவு? உன்னயைல்ல சொல்லோணும்? எங்கனாச்சும் ஓடிப் போயிரு, முழு கஞ்சியாச்சும் கிட்டும்.”
“மெய்யாலுமா சொல்லுறவ?” என்று கேட்டுக்கொண்டே அவன் தன்னை நோக்கி வாலைக் குழைத்து வந்த நாய்க்கு கஞ்சியில் துளாவி சில பருக்கைகளை எடுத்து வைத்தான்.
‘பிச்ச எடுத்த பெருமாளுகிட்ட புடுங்கித் தின்ன கதையாட்டமில்ல இருக்கு? உன் ஆயி வந்துடும், நா வாரேன்’.
“உனக்க அக்கையென சொல்ல நா வல்ல,” என்றவனைப் பார்த்து அவள் கழுத்தை நொடித்துப் போனாள்.
மாசிலாமணிக்கு என்னவோ போலிருந்தது- கனகு ஏன் போகச் சொல்லுது? எங்கிட்டுப் போவன்? என்னா வேல தெர்யும்? இங்கன அதுவாச்சும் கஞ்சி ஊத்துது. முகம் பாத்து சொல் எடுக்குது. அது எம்மாம் அளகாயிட்டே வருது. அதப்பாக்கச் சொல்ல மேலுக்கு சுரம் அடிக்குது, உள்ளுக்கு குளிரெடுக்குது. வடக்கால கோயிலில பாட்டு போடுற மாசம் ஊசிக் குளிரு அடிக்குதில்ல, அத்த மாரி. ஆனா, என்னைய எங்கிட்டு போச் சொல்லுது, அதுக்கும் என்னயப் புடிக்கலையா?
ஊருக்கே ஒரு ஊரணி. ஆடு, மனிதன் யாவரும் சமம். இவர்களைப் போல பாவப்பட்ட பிள்ளையார் தானும் முன்னேறாமல், இவர்களையும் முன்னேற்றாமல் அசையாமல் சலித்துப் போய் உட்கார்ந்திருந்தார். அவருக்கு மாசிலாமணிதான் பேச்சுத்துணை. அவர் இடைத் துண்டையே உருவி அந்த ஊரணியிலேயே அதை நனைத்து அவர் உடம்பை துடைப்பவன் அவன்தான். ஒரு குவளையைக்கூட அவருக்கென கொடுக்காத ஊர் அது. பிள்ளையார் சதுர்த்தி அன்று மட்டும் எட்டுக்கல் தொலைவிலிருந்து ஒருத்தர் புதுத் துண்டு, மாலை, விளக்கு, சர்க்கரைப் பொங்கல் என எடுத்து வருவார். அன்று மட்டும் ஊரும், பிள்ளையாரும் மகிழ்வாக இருப்பார்கள். படையாச்சி முனி என்ற அவர்கள் ஊரின் தெய்வமும்கூட எட்டுக்கல் தொலைவில்தான் இருந்தது. அந்த ஊர் பங்காளிகள் படையல் வைக்கும்போது இவர்களுக்கும் அழைப்பு உண்டு, விருந்தும் உண்டு.
மணி ஏன் சோகமாக இருக்கிறான் எனக் கேட்க பிள்ளையாருக்கு ஆசை எப்படியும் அவனாக சொல்லத்தானே போகிறான்?
“நீ சொல்லு சாமி, நீ மட்டும் அளகாவா இருக்க? உந்தொப்பை முன் நிக்குது, எம் மண்ட முன் நிக்குது, அம்மாம் பெரிசு நீ, உன் காலு சின்ன சில்லாட்டம் காங்குது. எங்காலு வளஞ்சு நிக்குது. உன்னய தூக்கிக்கிணு அந்த சுண்டெலி ஊர் சுத்துதாம். அய்ய, கோவிக்காத, நான் நாயம்தான் சொல்லுதேன். உன்னய விட்டா ஆரு கேப்பா? ஆனா, நீ சாமி, அல்லாம் உனக்கு அளகு. அல்லாம் உன்னால ஏலும். ஊரு சனம்தான் என்னய காங்கையிலெல்லாம் சிரிக்கு. கனகு இருக்கில்ல, கனகு, அதுக்கும் என்னையப் புடிக்கலை போல. என்னய ஊர விட்டுப் போங்குது. உனக்கும் சோடியில்ல, எனக்குமில்ல”.
தன் தனிமையை அவன் உணர்ந்த விதம் அவருக்குச் சிரிப்பாக இருந்தது. ”சரி, போயாரேன், உனக்கு இருட்ல பயந்து வராதில்ல? ஆமா, நீ சாமியில்ல, கால முச்சூடும் நீ இப்படித்தான்” பிள்ளையாருக்கு இதற்கும் சிரிப்புதான் வந்தது.
ஆனால், கனகு சிரிக்கவில்லை. கண்களால் சிரித்து, உதட்டைச் சுழிப்பாளே, அது இல்லை. அவனுக்குப் பசித்தது. ஆனால், யாரிடம் கேட்பான் அவன்? அலுமினிய தட்டை ஓசைப்படுத்திப் பார்த்தான். அவள் துளிக்கூட நகரவில்லை. இளித்துக் கொண்டே, அவள் பார்க்கச் சத்தம் செய்து தண்ணீர் குடித்தான். அப்பொழுதும் அசைவில்லை.
எங்கோ சென்றிருந்த ராணி நல்ல சேலை உடுத்தி குடிசையின் உள்ளே வந்தாள். வெளியில் போகப் போகும் சந்தோஷத்தில் அவனிடம், ”எலே, மாசு, அப்பனும் நானும் புல்லூர் கொடைக்கு போயாரோம். சாக்க விரிச்சு தெருவில படு. கனகு பயணம் வல்ல,” என்றாள். அப்பொழுதும்கூட கனகு ஒன்றும் சொல்லவில்லை.
அவள் போனபிறகு, “கனகு, கொடைக்குப் போவணுமா?” என்று கேட்டான். அவள் கண்களில் நீர் திரண்டது. “அழுவாத, புள்ள, உன் மாப்பிள உன்னய ப்ளேனில்ல அதிலயே கூட்டிப் போவான்.” அவள் இன்னமும் அழுதாள். மணிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வயிறோ கத்துகிறது, இவளோ அழுகிறாள். அவன் பிள்ளையாரை நினைத்துக் கொண்டான். தூக்கம் வரவே சாக்கை எடுத்துக்கொண்டு வெளியில் போனான்.
பூமியில் பார்க்கும் குறும்பூக்கள் வானத்திலும் சிதறிப் படர்ந்திருந்தன. காற்றில் பூக்களின் உயிர் தெரிவதைப் போல் அவைகளின் கண் சிமிட்டல்களில் உயிர் இருந்தது. ஆனால், இரண்டுக்குமே வாசமில்லையோ?கனகு வருவதை அவன் கவனிக்கவில்லை.
‘வா, உள்ளார, சோறு துன்ன,’ என்றாள்.
“நீ உங்கலயா?”
‘அத்தவிடு, நீ துன்னு. மெய்யாலுமே கொடைக்கா போறாஹ?’
“பொறவு?”
‘எனக்க பயந்து வருது. மாமாவும், அக்கையும் என்னைய என்னைய…’ அவள் விசும்பினாள்.
அவன் விழித்தான். ”அளுவாதே, அளுவாதே,” என்று சொல்வதைத் தவிர அவனுக்கு ஒன்றும் சொல்ல வரவில்லை.
பல நொடிகளுக்குப் பிறகு அவள் சொன்னாள், ‘நமக்கு கண்ணாலம் கட்டி விடுவாஹ போல’
மணியின் உணர்ச்சிகள் கலவையாயின. சின்னம்மையா கனகுவ எனக்குக் கட்டி வக்கும்? அப்பன் ஒக்கவே மாட்டாரு. இது சின்னப் புள்ள,என்னாத்தையோ போட்டு மசக்குது. “அய்ய, என்னய ஆருக்கும் புடிக்காது புள்ள. குருதயில வந்து மானத்ல உன்ன மவராசா தூக்கிக்கிணு போவாருங்கேன்.என்னயக் கட்டிக்கிட வேணாம் ஆத்தா, இதுக்கா அழுவரவ”
“உன்னய எனக்கு புடிக்கும். முன்னால எனக்கும் கட்டிக்கிட ஆசதான். ஆனா, இப்ப உன்னைய மோசம் செய்யப் பாக்குறாங்க.”
மாசிலாமணிக்கு அவள் சொல்வது புரியவில்லை. கனகுவை கண்ணாலம் செஞ்சா அது அவனுக்கு சோறு தரும், சிரிக்கும். அது தன்ன கட்டிக்கிட விரும்பலயா?முன்னால ஆசைன்னு ஏதோ சொல்லுது? கனகு பிச்சியைப் போல வெறித்துக் கொண்டிருந்தாள். “கனகு, நம்ம கண்ணாலம் வோணாம், அம்புட்டுத்தானே? நா ஓடிப்போயிடுதேன். அளுவாத புள்ள,” என்றான்.
“எம்மேல ஆண. நீ எங்கிட்டும் போயிடாத. நம்ம புள்ளயாருக்கு பூச செய்வாங்கள்ள, அது நெனைப்பிருக்கா?”
அவன் மறுபடியும் முழித்தான்.
“அந்த அய்யரு, அல்லா எடத்தையும் பெருக்கி, நீரு தெளிச்சு, கோலம் வரஞ்சு, சாமிக்கு குளியாட்டி, துண்டு கட்டி, பத்தி கொளுத்தி, தென்னங்காய் ஒடச்சு, பளம் வச்சு, சூடம் கொளுத்தி, அதான் பொங்கலு படயல் காட்டி நமக்கெல்லாம் தருவாரில்ல’.
“ஆமாங்கேன், அதுக்கு நா கெடக்கு”.
“அத்த மாரி நீ! உனக்கு பளுத என்னாத்துக்கு? என்னய உனக்கு கட்டி ஏமாத்தப் பாக்குறாவ,” என்றாள் கனகு.
“என்னா பேசுறவ, நீயி அம்சமில்ல!”
“இல்ல, மணி நானு அப்படியில்ல”.
சுவர்க்கோழிகளும், தெரு நாயின் ஊளையும் இவர்களின் ஊமைப் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டிருந்தன.
சில நாட்கள் ஒன்றும் சலனமில்லாமல் சென்றன.
அதிகாலையில் ஒரு நாள் கனகுவையும், மாசுவையும் புளிய மாரால் அடித்துக் கொண்டே குடிசையின் வாயிலுக்கு வந்த ராணியின் பெருங்குரல் ஊரை எழுப்பியது. “சீமயில வளந்த புள்ள சீப்பட்டுப் போனாளே! நொண்டி முடத்துக்கு முந்தி பந்தி விரிச்சாளே!”
“என்னாலே, முழிக்கச் சொல்ல ஒப்பாரி வக்கறவ,” என்றாள் அங்கத்தாள்.
“வாரி முடிஞ்சுக்கிட்டு வந்துட்டாளுக! சிரிச்சுப் போச்சே எம் பொளப்பு! அட, மாசு,எம்புட்டு நா கருவின நீ, சின்னப் புள்ளய… சீச்சீ…” என்று ராணி கூவுகையில் அவன் நடுங்கினான். இதெல்லாம் என்ன என்று மலைத்தான். தெரு நாய் அவனைப் பாவமாகப் பார்த்துவிட்டு கல்லடிபட்டு ஓடியது.
“இந்தக் குள்ளனா, இந்த மாசுவா, நொண்டிக்காலனா, அந்த சிறுக்கியா, எடுபட்ட கைகாரி” என்று ஊர் சுவாரசியமாக மேய்ந்தது. ஊர்ப்பெரியவர்கள் மாசுவை தாறுமாறாகக் கேள்வி கேட்டார்கள்.
“அது எனக்க சின்னம்ம மாரி. சின்னம்மைக்கு அது உடம் பொறப்புல்ல, அதும் புள்ளாட்டமா நானு. அதும் புள்ள என்னக்க தம்பி,’ என்றான் மாசு. “அவன் கிறுக்கன், நீ சொல்லு தாயீ,” என்றார் தலைவர்.
துடிக்கும் உதடுகளோடு கண்ணீர் மல்க நின்ற கனகு, மணியை ஏறிட்டுப் பார்த்தாள். “என்னய விட்டுப் போடாத, அன்னைக்கு நானு சொன்ன பேச்சு கியாபகம் வருதா?” என்று அவள் கண்ணீர் கேட்டது.
“பச்சப் புள்ளய கேக்குறீக நல்லா? அது தாயீ, நா மக்க. அம்புட்டுத்தான். அது இத ஒத்துக்கிடுச்சுன்னா நாயம் பேத்தறத நிப்பாட்டுங்க,” என்றான் மாசிலாமணி.
“கனகு, நீ என்னலே, சொல்ற, அந்தத் திருட்டுப் பயல தண்டிக்க வேணாம்?”
“வேணா, மணி சொன்னா சரி,” என்றாள் கனகு.
சாத்தன் மரம் – மந்திரம் கவிதை

அந்தியில் பூக்கின்றன
ஏலக்காய் வாசம் பொதிந்த
வெள்ளைப் பூக்கள்.
கொத்துக் கொத்தாய்
பச்சை இலைகளுக்குள்
பொங்கித் தெரிகின்றன.
மோகம் தலைக்கேறும்
அடர் வாசம்
அப்பெருமரத்தில்
குர்கானின் பனிக்காலம் வரை
மோனத்தவம் வீற்றிருந்து
நறுமணம் கிளர்ந்தெழும்
குளிர்க் காற்றில்
தாபமாய் மெல்லச் சூழ்கிறது.
காலநிலை தடம் மாறும்
ஓர் நாளில்
சுற்றி அலையும் பட்டாம்பூச்சி போல்
நகரின் மேல் தீராக் காமமென
கவிந்து விரிகிறது.
யாருமற்ற அதன் காலடியில்
அவள் தீராக் காதலை
எல்லா இரவுகளும் சுவாசிக்கிறேன்
நிலம் – ராதாகிருஷ்ணன் சிறுகதை
முதல் பார்வையிலேயே என்னை வெளியாள் எனக் கண்டுகொண்டு விட்டது. கண நேரத்தில் சுறுசுறுப்பாகி எழுந்து பாயும் தோரணையில் நின்று கத்த ஆரம்பித்துவிட்டது, பல முறை இவைகளிடம் சிக்கி கடிபட்டு தெறித்து ஓடி கற்றுக்கொண்ட ஞானமான அப்படியே அந்த இடத்திலேயே நகராது சிலையாகி நிற்கும் யுக்தியை கடைபிடித்தேன், ஆனாலும் இவைகளைக் கண்டால் உள்ளுக்குள் உருவாகும் நடுக்கம் எவ்வளவு அனுபவம் பெற்றாலும் மறைய மாட்டேன் என்கிறது. விடாமல் கத்திக் கொண்டிருந்தாலும் அது நின்ற இடத்திலிருந்து நகரவில்லை. நகராததைக் கண்டு இது கடிக்கின்ற ரகமல்ல என்று என் அனுபவ மனம் உணர்ந்து கொண்டதும் தன்னியல்பாகவே உடலிலிருந்த படபடப்பு குறைந்து நிம்மதி உண்டானது, சிறிது நேரத்திலேயே அதுவும் தன்னுடைய வேடத்தை நான் கண்டு கொண்டு விட்டதை உணர்ந்து அதை அப்படியே உதிர்த்து அமைதியானது, பிறகு ஒன்றும் நடக்காத பாவனையில் பழையபடி முன்னங்கால்களை நீட்டி அமர்ந்து கொண்டது, ஆனாலும் பார்வையை அது என்னிலிருந்து விலக்கவில்லை.
நாய் என்ன ரகமென்று சரியாகக் கண்டறிய முடியவில்லை, காதுகள் மேல்தூக்கி விடைத்திருந்தன, பளபளப்பான கரிய நிறம், காக்கிநிற கழுத்துப்பட்டை இறுகி நல்ல கொழுகொழுவென இருந்தது, இந்த தெருவின் செல்லப்பிள்ளையாக இருக்கலாம், சுகவாசி என்று எண்ணி கொண்டேன். பிறகு நாயை அப்படியே விட்டுவிட்டு தெருவில் கவனம் சென்றது, முதல் பார்வையிலேயே வசதியானவர்கள் குடியிருக்கும் சூழலுக்குரிய அழுக்கில்லாத சுத்தமானச் சூழலை உணர முடிந்தது, நல்ல பழுதில்லாத 20அடி தார்ச்சாலை, அதிகாலை பெய்திருந்த மழை காரணமாக தன் சுயநிறமான ஜொலிக்கும் அடர்கருப்பினை திரும்பப் பெற்று புதிது போல காட்சியளித்தது. வீடுகள் அளவான சுற்றுச்சுவருடன் கிட்டத்தட்ட ஒருபோலவே காட்சி அளித்தன. வீடுகளின் முன்பு பாதுகாப்புத் தடுப்பு கொண்ட பூக்களைச் சொரியும் அலங்காரச் செடிகளும், குட்டையான சிறு பூமரங்களும் இருந்தன, மேலும் இவையெல்லாம் அசல் வசதியானவர்களின் இயல்பிற்குரிய சுற்றுச்சுவர்க்கு வெளியே சாலையினை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டவைகளாக இருந்தன.
பாதையில் மனித நடமாட்டமே இல்லை, வீடுகளின் முகப்புகளிலும்கூட, அதற்கு பதிலாக இங்கிருக்கும் மனிதர்களின் இருப்பை, தோரணையை, மன இயல்பை மாறா வடிவம் கொண்ட வீடுகள் பறைசாற்றிக் கொண்டிருந்தன, வாய் மூடி,முகம் திருப்பி, முதுகு காட்டி என. இருப்பினும் ஒவ்வொன்றும் தான் அமைதியான இயல்பு கொண்டதைச் சொல்லியபடி இருந்தன. வீடுகளைத் தொடர்ந்து பார்க்கப் பார்க்க இந்த இயல்புள்ளேயேகூட சிறுசிறு வித்தியாசங்கள் தெரிந்தன, வெளித் தோற்றத்தின் நிறங்கள் வெண்மையின் வெவ்வேறு கலவைகளில் இருந்தன, இந்த வீடுகளை அமைதியானவையாக தோன்றச் செய்வதே இந்த வெண்மை நிறம்தான் என்று தோன்றியது.
திருப்பூரில் இப்படி அமைதியான பகுதிகள் மிக அபூர்வம், 7 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நகருக்கு வந்த புதிதில் இங்கிருந்த பரபரப்புச் சூழல் கடுமையான மனவிலக்கத்தைக் கொடுத்தது, திடீர் பணவரவால் வீங்கிய நகர் இது, குண்டும் குழியுமான நெரிசலான சாலையில் ஆடி கார் போய்க் கொண்டிருக்கும், எப்போதும் பரபரத்துக் கொண்டிருக்கும், டீக்கடை, டிபன் கடை, அதைவிட பிராந்திக்கடை, எப்போதும் திருவிழா போல கூட்டமிருக்கும், ஓட்டப்பந்தயத்தின் எல்லைக் கோட்டை நெருங்கும் அவசரத்திலேயே எல்லோரும் ஓடி கொண்டிருப்பார்கள், துரித ஸ்கலிதம் போல. ஆனால் சமீப காலங்களில் பரபரப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது, பணவரவு குறைகிறதா அல்லது அனுபவ முதிர்ச்சியா என்றறிய முடியவில்லை, அல்லது இரண்டும் காரணமாக இருக்கலாம்.
பரபரப்பு இல்லாத இந்தச் சாலை என் சொந்த ஊரை ஞாபகப்படுத்தியது. அப்படியே ஊர் ஞாபகங்களில் மனம் அலைந்தது. அமைதியான குளத்தில் சிறுமீன் மேல் வந்து எட்டிப் பார்ப்பதைப் போல எதிரில் ஒரு கேட் திறந்து அதில் நடுத்தர வயது பெண்ணுருவம் என்னைப் பார்த்து பின் பார்க்காததை போல பாவித்து கேட்டை சாத்தி மறைந்தது கற்பனையில் உலவிக் கொண்டிருந்த என் மனதை கலைத்து கவனத்தை மீண்டும் சாலையின் மீது கொண்டுவந்து நிறுத்தியது, மீண்டும் வீடுகளின் அமைப்பை பார்த்து கொண்டிருந்தேன், சட்டெனத் தோன்றியது இங்கிருக்கும் வீடுகள், அவற்றின் சுவர்கள், கதவுகள், படிகள் எல்லாமே சதுரம் மற்றும் செவ்வகங்களின் வெவ்வேறு அளவுகள் என, அதுதான் எல்லாவற்றையும் ஒருபோல காண்பிக்கும் சீர்மையை தருகின்றது என்று, ஓட்டு வீடுகள் இல்லாமல் ஆனதும் முக்கோணங்களும், சாய்வுக் கோணங்களும் வீடுகளின் புற அமைப்பிற்கு தேவையில்லாமல் ஆகிவிட்டன. அதுவும் இந்தத் தெருவின் கட்டிட அமைப்புகளில் முகப்பு அலங்காரங்கள் இல்லாதது இவற்றிற்கு ஒரு மேட்டிமைத் தன்மையை அளித்தது, வெண்ணிறத் துணிகளை போல. நின்றிருந்த சில மணி நேரங்களிலேயே இடம் மிக பிடித்ததாகி விட்டது, இங்கு வீடு கிடைத்தால் கோதை மகிழ்ந்து பரவசமடைவாள் என்பதை யோசிக்கவே குதூகலமாக இருந்தது.
நேற்றிரவு தமதமாகத்தான் வீடு வந்து சேர்ந்தேன், கோதை வாசலில் சுஸ்மியை மடியில் தூங்க வைத்தபடி அமர்ந்திருந்தாள், பைக்கை நிறுத்தியபடி, “ஏன் வெளியவே உட்கார்ந்திருக்கற, பனி பெய்து,உள்ள போக வேண்டியதுதான,” என்று சொல்லியபடி அவள் அருகில் சென்றபோதுதான் அவள் முகம் அழுது வீங்கியிருந்ததைக் கண்டேன்.
“என்னாச்சு,” என்று கேட்கத் துவங்கும்போதே பதில் சொல்லாமல் எழுந்து தூக்கத்திலிருந்த குழந்தையை மார்பில் போட்டு உள்ளே சென்றாள், குழந்தையை கட்டிலில் கிடத்திவிட்டு நாளைக்கும் இந்த வீட்டில் இருந்தேன்னா நான் செத்துடுவேன் என்றாள், அவள் முகத்தைப் பார்க்கத் தயங்கி வேறு பக்கம் திருப்பி, “சரிம்மா, தூங்கு போ,” என்று சொல்லியபடி என்னிலிருந்த பதட்டத்தை மறைக்க ஏதாவது செய்ய வேண்டி உடைகள் மாற்றத் துவங்கினேன், அவள் குழந்தை மீது கைவைத்தபடி ஒரு பக்கமாக படுத்துக் கொண்டாள், கட்டப்படாமல் விரிந்திருந்த முடி முகத்தைப் பாதி மறைத்திருந்தது, இடைவெளியில் கண்கள் கலங்கி நீர் பெருகுவதைக் காண முடிந்தது, ஒன்றும் சொல்லாமல் அருகில் அவள் நோக்கித் திரும்பாமல் படுத்து கொண்டேன், நீண்ட நேரம் விசும்பல் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.
இருமல் வந்த காசநோயாளியின் சத்தத்துடன் ஒரு புராதன மொபெட் மெதுவான வேகத்தில் என்னை நோக்கி வருவது தெரிந்தது, வீடு ப்ரோக்கர் லிங்கமூர்த்தியாகதான் இருக்கும் என எண்ணிக்கொண்டேன், இதுவரை நேரில் பார்த்ததில்லை, கொஞ்சம் பழுப்படைந்த வெண்மை நிறம்கொண்ட வேட்டிச் சட்டையில் வந்து நின்றார், முன்வழுக்கைத் தலை, கம்பீரமான உடல், பெரிய மீசையின் அதீத பளபளப்பு தான் சாயம் பூசி கொண்டதை அறிவித்தபடி இருந்ததைப் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது, வேட்டியின் கரையில் அவர் இன்னொரு பகுதி தொழிலாக அரசியல் வேலையும் செய்கிறார் என்பதும் தெரிந்தது, அறிமுகப்படலம் இல்லாமலேயே, ”தம்பி,கொஞ்சம் லேட்டாகிடுச்சு, இந்த வீடுதான் வாங்க,” என்றழைத்தபடி செயற்கையான பரபரப்புடன் முன்னால் நடந்தார், நாய் முன் நின்ற அதே வீடுதான், நான் பின்தொடர்ந்து வராததை உணர்ந்து திரும்பிப் பார்த்து பின் நாயை நோக்கி, ”இது கடிக்காது வாங்க,” என்றார், நாய் இப்போது என்னைப் பார்த்து கொஞ்சம் பயந்த தோரணை கொண்டிருந்த மாதிரி தோன்றியது.
கேட்டின் ஓரத்தில் இருந்த அலாரத்தை தேடிக் கண்டடைந்து அழுத்தினார், சத்தம் கேட்டு ஒரு முதியவர் நடந்து வருவது கேட்டின் இடைவெளியில் தெரிந்தது, துளி பரபரப்பின்றி பொன்நகையை கையாள்வது போன்ற கவனத்துடன் மெதுவாக கேட்டினை திறந்தார், அவரிடம், ”முனுசாமி, பெரியவர் இருக்காரா!” எனக் கேட்டு பதில் வாங்க முற்படாமலேயே உள்ளே நடந்தார், முனுசாமி என்னைப் பார்த்து, ”வீடு பாக்கவா, உள்ள போங்க,” என்று சொல்லியபடி கேட்டை அதே இயல்புடன் சாத்தினார், எங்களைப் பார்த்தபோது அவரில் இருந்த புன்னகை பிறகு கதவை சாத்தும் பொழுதும், பின் நடந்து செல்லும் பொழுதும் இருந்தது.
பெரிய வீடு, முன்வாசலுக்கு வெளியே நேர்த்தியான மூங்கில் இருக்கைகள் போடப்பட்டிருந்தன, வார்னிஷ் பூசப்பட்ட மூங்கில்களைப் பார்த்தபோது பாடம் செய்யப்பட்ட இறந்த உடல்கள் என்ற பதம் ஞாபகம் வந்து அதை வலுக்கட்டாயமாக மனதிலிருந்து நீக்கினேன். லிங்கமூர்த்தி அதில் அமரச் சொல்லி தானும் அமர்ந்து கொண்டார், உட்கார தயக்கம் உண்டாகி பின் அமர்ந்து கொண்டேன், வரவேற்பு மேசையில் தினமலர் பிரிக்கப்படாமல் இருந்தது. லிங்கமூர்த்தியின் உடலில் ஒவ்வொரு கணமும் ஏதாவது ஒரு உடலசைவு வெளிப்பட்டு கொண்டே இருந்தது, முகத்தை என் பக்கமாக திருப்பி இரகசிய குரலில், “தம்பி அட்வான்ஸ் கொடுக்கும்போதே கமிஷனை கொடுத்துடுங்க,” என்றார், அவர் மீது எரிச்சலும் அதேசமயம் பிரியமும் கலந்து வந்தது, காலையில் போனில் அழைத்து இன்னைக்கே வீடு வேண்டும் என்று மன்றாடிக் கேட்டபோது, “தம்பி, சாமான் சட்டியெல்லாம் தூக்கிட்டே வந்துடுங்க, வீடு ரெடியா இருக்கு,” என்று இவர் சொன்னபோது மொத்த பாரமும் அந்த நொடியிலேயே நீங்கியதைப் போல் உணர்ந்தேன்.
உள்ளே இருந்து 70 மதிக்கத்தக்க ஒரு பெரியவர் வெளியே வந்தார், முண்டா பனியனும், வெள்ளை வேட்டியுமாக. ஒட்ட வெட்டிய தலையில் புதிதாக முளைத்திருந்த வெண் நாற்றுகள் போன்று முடிகள் இருந்தன, கழுத்து வரை வெண் மார்புமுடிகள் பரவியிருந்தன, காதுகளின் ஓரங்களில்கூட நாற்றுகள் நட்டுவைத்ததை போல சில வெண்முடிகள் இருந்தன. லிங்கமூர்த்தி அவரை பார்த்ததும் எழுந்து நின்றதை பார்த்து நானும் எழுந்து நின்றேன், ”என்னடா இந்தப் பக்கம் ஆளை காணோம்,” என்று அவர் கேட்டதற்கு லிங்கமூர்த்தி பதில் சொல்லாமல் குழைந்து சிரித்தார்.
“இந்த தம்பிதாங்க” என்று என்னைக் காட்டினார், நான் பாதி எழுந்து வணக்கம் தெரிவிப்பது மாதிரி ஒரு செய்கையை செய்தேன். அவர் உட்காரச் சொல்லிச் செய்து எதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டார், முதல் வார்த்தையிலேயே ,”தம்பி என்னாளுக,” என்றார் சாதாரணமாக.
நான் அவர் சொல்வது புரியாததை போல பாவனை காட்டினேன், பிறகு அதெல்லாம் வேலைக்காகாது என்று புரிந்து கொண்டு, ”ஆசாரிங்க” என்றேன்.
“மர ஆசாரியா”
“இல்லைங்க, இரும்பு ஆசாரி”
“இல்ல, சும்மாதா கேட்டேன், என்ன பண்றீங்க”
“பிரின்டிங் காண்ட்ராக்ட்ங்க”
அவருக்கு பேசும் ஆர்வம் வந்ததை அவருடலும், முகமும் காட்டியது, ஆனால் அருகிலிருந்த லிங்கமூர்த்தியின் முகத்தில் சுணக்கம் தெரிந்தது.
“தம்பி, இந்த ஏரியாவே முன்னாடி எங்களோடதுதான், முன்னாடி பஸ் போற ரோடுல இருந்து பின்னாடி இருக்கற பி டி காலனி வரைக்கும், பி டி காலனிகூட அந்த காலத்துல எங்க பெரியவங்க வெளியிலிருந்து விவசாயக் கூலிகளா வந்தவங்களுக்கு தங்கறதுக்கு தானமா கொடுத்த நிலம்தான், அது மொத்தம் 5 ஏக்கர், இப்ப அங்க சென்ட் 9 லட்சம் போவுது”
நான் ஆர்வமாக கேட்பதைப் போல பாவனை செய்தேன், லிங்கமூர்த்தி பாதி எழுந்து நின்று, ”அப்ப வீட்டை பாக்களாங்களா,“ என்றார், பெரியவர் அவரைப் பொருட்படுத்தவே இல்லை, லிங்கமூர்த்தி ஏமாற்றமாகி என்னை திரும்பிப் பார்த்தபின் பழையபடி அமர்ந்து கொண்டார், ஏதோ வாய்க்குள் முணுமுணுப்பது தெரிந்தது.
“கடைசியா இந்த வீதி என்னோட பாகமா வந்துச்சு, நா பிளாட் போட்டு வித்துட்டேன், இப்ப ஐயோனு இருக்கு, வித்ததுக்கு இப்ப 10 மடங்கு விலை கூடி போச்சு”
“முன்னாடி விவசாயம்களா…”
“தம்பி அது காசை விடற பொழப்பு, ஆனா இப்பவும் மனசு அத விட மாட்டேன்கிது, இப்பக்கூட இரண்டு நாட்டுமாடு பின்னாடி கிடக்கு, தினம் 1.5 லிட்டர்தான் கறக்குது, நா ஜெர்சிதான் வாங்கச் சொன்னேன், நாட்டுமாடு வச்சாதான் கவுரவம்னு பையன் திட்டிவிட்டு இத வாங்கிக் கொடுத்தான்”
“பையன் என்ன செய்யறார்ங்க”
“பனியன் தொழில்தான், முன்ன நிறைய பணம் நாசம் பண்ணிட்டான், பிறகு மறுபடியும் கொஞ்சம் நிலம் வித்துக் கொடுத்து பணம் போட்டு, இப்ப நல்லா போகுது, முன்ன நிக்கறது அவனோட இரண்டு கார்ல ஒன்னுதான், இப்பதான் வாங்கினான், ஒரு காரை ரெண்டு வருஷம் கூட வைக்க மாட்டேன்றான், அதுக்குள்ள மாத்தி வேறொன்ன வாங்கிடறான்”
திரும்பி காரைப் பார்த்தேன், தான் பென்ஸ் என்பதை ஒவ்வொரு பாகத்திலும் சொல்லியபடி நின்றிருந்தது, அதன் வெண்ணிறம் ஏனோ வெள்ளைக்காரியை ஞாபகப்படுத்தியது.
லிங்கமூர்த்தி கடுப்பாகி இப்போது எழுந்தே நின்று விட்டார், பின் இடைபுகுந்து, ”அய்யா நேரமாச்சுங்க,” என்றார்.
பெரியவர் புதிதாக யாரையோ பார்ப்பதைப் போல லிங்கமூர்த்தியைப் பார்த்து பிறகு, ”சரி போய்ப் பாரு, திறந்துதான் இருக்கு, டே முனுசாமி…” என்று அழைத்தார்.
அடுத்த இரண்டு நொடிகளில் முனுசாமி அங்கு வந்து நின்றது ஆச்சிரியமாக இருந்தது, அதே மாறாத குழந்தைமை புன்னகை.
“போய் காட்டிக் கொடு, போடா”
“சரிங்க”
மூவரும் பின்பக்கம் நடந்தோம், பெரியவர் மறைந்ததும் லிங்கமூர்த்தி கோபத்துடன், ஆனால் சத்தமில்லாமல் என்னிடம் கத்தினார், ”வீடு பாக்க வந்தியா, அரட்டையடிக்க வந்தியா?” நான் பதிலேதும் சொல்லவில்லை, திரும்பி முனுசாமியைப் பார்த்தேன், அவர் சிரித்தார்.
வீடு நான் எதிர்பார்த்ததை விட பெரிதாகவும் அழகாகவும் இருந்தது, மெல்ல உள்ளுக்குள் ஒரு நடுக்கம் ஆரம்பித்தது. லிங்கமூர்த்தியிடம், ”வாடகை எவ்வளோ சொல்றாங்கண்ணே” என்றேன்.
“16 ஆயிரம்”
தொண்டை விக்கித்துக் கொண்டதை போல் உணர்ந்தேன், அட்வான்ஸ் பற்றி அவரிடம் கேட்காமலேயே மனதிற்குள் கணக்கிட்டேன், என்னால் திரட்ட முடியாத தொகை.
திரும்ப வெளிவந்தபோது பெரியவர் அங்கேயே அமர்ந்திருந்தார். “தம்பி வீடு பிடிச்சதா” என்றார் ஆர்வமாக.
“பிடிச்சதுங்க, வீட்டுல பேசிட்டு லிங்கம் அண்ணன்கிட்ட சொல்லிடறேங்க”
நான் சொல்வதிலேயே நான் வரமாட்டேன் என்பதை அவர் யூகித்துக் கொண்டதை அவர் முகம் காட்டியது.
“இரண்டு நாள்ல வந்துடுறேங்க,” சொல்லும்போதே இது சாத்தியப்படாது என மனதிற்குள் எண்ணம் வந்து போனது. கேட்டருகில் வந்தபோது முனுசாமி புன்னகையுடன் விடை கொடுத்தார்.
வெளியே வந்ததும் லிங்கமூர்த்தி, ”சரி தம்பி, யோசிச்சு சொல்லுங்க, வந்த பிறகு வாடகை ஜாஸ்தின்னெல்லாம் திணறக் கூடாது, முடியும்னா சொல்லுங்க,” என்றபடி மொபட்டுக்கு உயிர் கொடுக்கத் தொடங்கினார். பின் அந்தச் செயலை நிறுத்தி ஏதோ யோசித்து, ”தம்பி இவனுங்களுக்கு இது பரம்பர சொத்து, தொழில்ல நொடிஞ்சாங்கன்னா ஒரு துண்டு எடுத்து வித்தா போதும்,மீண்டுடுவானுக, நிலம்கிறது என்னனு நினைக்கற, தங்கப் புதையல் அது,” என்றார். நான் பதில் சொல்லாமல் புன்னகைத்தேன்.
” நீயும் நானும் இப்படி தெருத்தெருவா அலைஞ்சாதான் காசு, காலம் பூரா அலஞ்சாலும் ஒரு துண்டு நிலம் கூட வாங்க முடியாது”
“அண்ணே, அது அவங்க அதிர்ஷ்டம், முந்தின தலைமுறைக சம்பாதிச்சுக் கொடுத்ததை அவங்க அனுபவிக்கறாங்க, நமக்கு அந்த கொடுப்பின இல்ல, அவ்வளவுதான்”
” மண்ணாங்கட்டி, இது சம்பாதிச்சு வந்த சொத்தில்ல, முன்னாடி அவங்க பாட்டபூட்டனுக பிடிச்செடுத்த நிலம் இது, அவ்வளவுதான், முதல்ல அவங்க வச்சுருந்ததால அவங்களோடதாகிடுச்சு, பின்னாடி வந்தவன் எல்லாம் நிலம் இல்லாம ஆகிட்டானுக, இதான் நிஜம்”
பதில் சொன்னால் பேச்சை வளர்ப்பார் என எண்ணி வெறுமனே கேட்பதை போல முகத்தை வைத்து கொண்டேன்.
“தம்பி, இவங்க முன்ன விவசாயத்துக்காக சும்மா கிடந்த நிலத்தை பிடிச்செடுத்தாங்க, அப்படியே அவங்களோடதாக்கிட்டாங்க, இப்ப இந்த பனியன் தொழில் இங்கு வந்து நிலத்தை பொன்னு விலைக்கு ஏத்திடுச்சு, இவனுக கஷ்டப்படாமையே பணக்காரங்க ஆகிட்டாங்க, அவ்வளவுதான், தம்பி ஒன்னு மட்டும், எவனுக்கும் தன் தேவைக்கு மீறி இருக்கற நிலம் அவனொடதில்ல,” பேச்சில் பொங்கி உணர்ச்சியில் மேலேறியவர் சொல்லி முடித்ததும் அமைதியாகி நிதானமானார்.
பிறகு, ”சரி தம்பி, மறுபடியும் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க, அட்வான்ஸ் கொடுக்கும்போதே கமிஷன் கொடுத்துடுங்க, அலைய வச்சுடாதீங்க”
எனக்கு உடனே கோதையின் அவளுக்கு மிக பிரியமான தங்க முறுக்குச் சங்கலி ஞாபகம் வந்தது, அது பத்தாது என்று தோன்றியவுடனே மாமனார் சுஸ்மிக்கு போட்ட மெல்லிய வளையலும் ஞாபகம் வந்தது.
லிங்கமூர்த்தி, ”தம்பி ஊர்ல சொந்தமா வய வீடு ஏதும் இருக்குங்களா?” என்று கேட்டபோதுதான் புத்தி கணக்கிடலிலிருந்து வெளியேறி மீண்டது.
“இல்லைண்ணா, இருந்தது எல்லாம் போச்சு, இனிதான் வாங்கணும்”
“தம்பி, நமக்குன்னு ஒரு இடம் இல்லைன்னா வேர் இல்லைன்னு அர்த்தம், இப்படி வருசத்துக்கு ஒரு முறை, ஆறு மாசத்துக்கு ஒருமுறை தெருத்தெருவா தேடி அலைஞ்சுட்டு இருக்கணும், முதல்ல சம்பாதிச்சு ஒரு இடம் வாங்கி போடுங்க, பிறகு அங்க தன்னால அதுல வீடு கட்டிட முடியும், நிலம்கிறது நமக்கான சொத்து இல்ல, நமக்கு பிள்ளைகளுக்கு, பிள்ளையோட பிள்ளைகளுக்கு நாம கொடுக்கற நிம்மதி, உள்ள பார்த்தீங்கள கிழவனை, என்ன திமிரா, ஒரு கவலையுமில்லாம இருக்கான்னு?” பிறகு முகபாவத்தில் லேசான புன்னகையுடன் விடைபெற்றுக் கிளம்பினார்.
பைக் எடுத்துக் கிளம்பும் கிளம்பும்போது திடீரென ஞாபகம் வந்து அந்த நாயைத் தேடினேன், அங்கு முன்பு இருந்த இடத்தில் காணவில்லை, திரும்பிப் பார்த்தபோது எதிர் இடத்தில் இருந்தது, நிழல் காரணமாக இடம் மாறி இருக்கிறது, என்னைப் பார்த்ததும் எழுந்து நின்றது, ஆச்சரியமாக குரைக்காமல் வாலாட்டியது, பைக்கிலிருந்து இறங்கிச் சென்று அதன் புறங்கழுத்தை தடவிக் கொடுத்தேன்.