Author: பதாகை

அகாலம்

சிபி சரவணன்

ஒரு பண்டைய வீடு பற்றி எரிகிறது
யார் யார் அதில் வசித்தார்களோ
எத்தனை உடல்கள் புணர்ந்தனவோ
கதவுகளற்ற அதன் வாசலில் நுழைந்த
மனிதர்கள் மீண்டதாய் சரித்திரமில்லை.
அவ்வீட்டின் தரைத்தளமெங்கும்
குப்பற படுத்துறங்கும் வேர்களும் புலிகளின் புழுக்கைகளும் சிதறி
கிடந்தன.
தீயால் முறியும் கிளைகளில்
பறவை குஞ்சுகளின் கீச்சோலிகள்
செவிசவ்வை அதிர வைக்கின்றது
எல்லா மனிதர்களும் உற்றுபார்த்துவிட்டு
அலுவலுகலுக்காக தங்கள் வாகனங்களைமுறுக்கி கடந்து போகிறார்கள்.
ஒரே ஒரு ஆதிக்குடி மட்டும்
(அவனுக்கு உடை இருந்தது)
எங்கிருந்து வந்தானோ என்னவோ
மூங்கில் துளைகளால் இசைத்தவாரே
இரங்கல் பாடிக் கொண்டிருந்தான்.

மாயா

தருணாதித்தன்

 “சார், கார்லுக்கு நம்ம பிலிப்பைன்ஸ் அலுவலகத்திலிருந்து கோபி லுவாக்  என்ற காபி வர வழைக்க வேண்டும் “ என்றான் ரகுராவ்.

“என்னது? நம் ஊரில் கிடைக்காத காபியா? உள்ளூர் காபி பிடிக்காது என்றால் ஸ்டார்பக்ஸ் காபி வர வழைக்கலாம்,“  என்றேன்.

“சார் அவர் அந்தக் காபிதான் சாப்பிடுவாராம் . அது என்ன சிறப்பு தெரியுமா, புனுகுப் பூனை உண்ட காபிப் பழங்கள் செரித்து , கழிவில் வெளியே வரும் கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்படுவது. ஒரு கிலோ காபிக் கொட்டை ஆயிரம் டாலருக்கு மேல் விலை“

நான் முகம் சுளித்தேன்.

“தலை எழுத்து, கழிவுக் காபி, அந்தக் கழிவை நாம் வெளி நாட்டிலிருந்து வரவழைக்க வேண்டும் “

நாங்கள் கார்ல் ஷ்மிட் என்கிற எங்களுடைய பன்னாட்டு நிறுவனத்தின் உலக சி இ ஓ வின் வருகைக்குத் தயார் செய்து கொண்டிருந்தோம். அவர் சுமார் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை இந்தியா மற்றும் சில ஆசிய நாடுகளுக்கு வருகை புரிவார். நம் பிரதமர் நாகாலாந்து ,அந்தமான் என்று விஜயம் செய்து அங்கே பழங்குடியினருடன் நடனம் ஆடி படம் எடுத்துக் கொள்வதைப் போல. நான் எங்கள் கம்பெனியின் இந்தியத் தலைவராக ஆன பிறகு  கார்ல் முதல் வருகை. ஒரு தவறும் இல்லாமல் கவனித்துக் கொள்ள  வேண்டும்.  சென்ற முறை கார்ல் வந்தபோது நடந்த சிறு சம்பவத்தினால் பெரிய பின் விளைவுகள் ஆயின. அவர் தங்கிய  ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நிறைய மரம் செடிகள் இருந்தன. இரவு ஜன்னலைத் திறந்து வைத்ததில் அவருடைய படுக்கையில் ஏதோ ஒரு பூச்சி வந்து அவரை பயமுறுத்தி விட்டது. எனக்கு முன்பு இந்தியத் தலைவராக இருந்தவர் திடீரென்று இங்கிருந்து ஆப்ரிக்காவுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டதற்கு அதுவும் ஒரு காரணம் என்று பேசப்பட்டது.

எல்லா ஏற்பாடுகளையும் ரகுதான் கவனித்துக் கொண்டான். ரகுதான் சரியான ஆள்.

என்னை, “சார் இன்றைக்கு தொண்டை சற்று சரி இல்லை போல இருக்கிறதே, எதற்கும் வென்னீரே குடியுங்கள், நாளை டெல்லியில் உங்கள் பேச்சு இருக்கிறது,“  என்று கவனித்துக் கொள்ளுவான்

“சார், அடுத்த மாதம் உங்களுடைய மனைவி பிறந்த நாள், காலண்டரில் மீட்டிங் எதுவும் இல்லாமல் வைத்திருக்கிறேன், எம் ஜி ரோடில் புதிய நகைக் கடை திறந்திருக்கிறார்கள். வைர நகைகள் எல்லாம் பாம்பே டிசைன்,“ என்று நினைவுபடுத்துவான்.

என்னை மட்டும் மட்டும் இல்லை, எங்கள் கம்பெனி டைரக்டர்கள், விருந்தாளிகள், எங்கள் தலைமை அலுவலகத்திலிருந்து மத்திய ஆடிட் குழு என்று முக்கியமான யார்  வந்தாலும், அவர்களை மிகக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுவான்.

நான் இதுவரை கார்லை இரண்டு முறைதான்  நேரில் பார்த்துப் பேசி இருக்கிறேன். அதுவும் மிகக் குறைவான நேரம் மட்டுமே. கார்ல் ஆறு அடி உயர ஜெர்மன். முகத்தில் முதலில் பெரிய மூக்குதான் தெரியும்.  எப்போதும் தீவிரமாக நேற்றியைச் சுருக்கிக் கொண்டு யோசிப்பவர், ஏதாவது எங்களிடம் பேசும்போது கண்ணாடி மூக்குக்கு பாதியில் வந்து விடும். அவரைத் திருப்திப்படுத்துவது மிகக் கடினம் என்று எல்லோரும் சொல்லுவார்கள். ஜெர்மனியில் என்னுடைய நண்பர்களிடமிருந்து கார்லை எப்படிக் கையாள்வது என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன். முக்கியமாக அவர் கேள்விகள் கேட்கும்போது. நமக்கு பதில் தெரிந்திருந்தாலும், வரிசையாக சரியான பதில் அளிக்கக் கூடாது. அவர் கேள்வி மேல் கேள்வி கேட்டு இன்னும் கோபம் கொள்ளுவார். அவர் தோண்டித் துருவ ஆரம்பித்தால், முன்றாவது கேள்விக்கு மேல், அவருடைய மூக்கு சிவப்பதற்குள் பணிவாக தெரியவில்லை என்று சொல்வது நலம். கார்ல் மகிழ்ச்சி அடைந்து  நீண்ட விளக்கம் கொடுப்பார். கையில் ஒரு சின்ன நோட்டுப் புத்தகம் வைத்துக் கொண்டு குறிப்பு எழுதிக் கொண்டால் இன்னும் நலம்.

ரகு இருபத்து ஐந்து வயதானவன். மில்லனியல் எனப்படும் தலைமுறையைச் சேர்ந்தவன். தலையில் குடுமி மாதிரி கட்டிய போனிடெயில், ஒரு காதில் கடுக்கன், இந்தியச் சராசரிக்குச் சற்று அதிக உயரம். எப்போதும் கையில் மொபல், வாட்சப், இன்ஸ்டகிராம் என்று பார்ப்பதற்கு அடுத்த தலைமுறையாக இருந்தாலும், பழகுவதில் மிக அருமையானவன்.

அவன் சேர்ந்த புதிதில் நான் சொன்னேன், “ரகு உனக்கு வரப் போகும் மனைவி கொடுத்து வைத்தவள். இந்த மாதிரி பரிவுடன் கவனிக்கும் கணவன் எங்கே கிடைப்பான்? யார் அந்த அதிர்ஷ்டசாலியோ”

“ஸார், மயாதான் அந்தப் பெண், அவளை அடைவதற்கு நான்தான் அதிர்ஷ்டசாலி என்று சொல்ல வேண்டும் “

“ஓ, ஒரு முறை அவளைச் சந்திக்க வேண்டும்,“ என்றேன்

சென்ற ஆண்டு புத்தாண்டு பார்ட்டிக்கு எங்கள் வீட்டுக்கு அவளை அழைத்து வந்திருந்தான். மிக நல்ல பெண்ணாக இருந்தாள். இரண்டு பேரும் இழைந்து, சிரித்து, ரகு கிடார் வாசிக்க அவள் சேர்ந்து பாட்டுப் பாடி எல்லோரையும் மகிழ்வித்து அந்தப் பார்ட்டியே கலகலப்பாக இருந்தது.

அவளிடன் சொன்னேன், “மாயா, ரகு மாதிரி ஒருவன் கிடைப்பது அபூர்வம். மிகவும் பரிவாக உன்னை வாழ் நாள் முழுவதும் கவனித்துக் கொள்ளும் நல்ல கணவனாக இருப்பான், வாழ்த்துகள்”

அவளும் பெரிய புன்னகையுடன் அவன்மேல் சாய்ந்து, “ஆமாம் சார், என் அப்பாகூட இப்படிக் கவனித்துக் கொண்டதில்லை,” என்றாள்

“ரகு,மாயா உங்கள் இருவரையும் பார்த்தால் எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. எப்போது திருமணம் ?’

“திருமணம் என்ன சார், அது உலகத்துக்காக, நாங்கள் மனதால் ஒன்றாகி விட்டோம். சென்ற மாதம் மாயா என்னுடன் வந்து விட்டாள். நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்து விட்டோம்,“ என்றான்.

நான் அதை எதிர்பார்க்கவில்லை, இருந்தாலும் முகக்குறிப்பு மாறாமல் இருவரையும், “ ஓ அப்படியா, என்னுடைய வாழ்த்துகள்,“ என்றேன். அன்றிரவு நானும் என் மனைவியும் அதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம். என் மகளும் படித்து முடித்து வெளிநாட்டில் வேலையில் இருக்கிறாள்.

கார்ல் வருகைக்கு முன்பே, ரகு அவருடைய செக்ரெடரி மற்றும் உதவியாளனிடம் பேசி நிறைய தெரிந்து கொண்டு விட்டான். அவருக்கு விமான நிலையத்திலிருந்து என்ன கார், தங்கும் இடம், அறை, அறையிலிருந்து பார்த்தால் என்ன காட்சி  ( இந்த முறை மரம் செடி எல்லாம் பூச்சிகள் வராதபடி சற்று தூரத்தில்), தலையணை எவ்வளவு மென்மையாக இருக்க வேண்டும், அறையில் குளிர்பதனம் எவ்வளவு இருக்க வேண்டும் என்று ஆரம்பித்து ஒரு நீண்ட பட்டியலே தயாரித்து விட்டான். தவிர சென்ற முறை முன் இந்தியா வந்தபோது என்ன எல்லாம் குளறுபடி ஆயிற்று என்று  தெரிந்து கொள்ள அவருடைய உதவியாளனுடன் ஒரு வீடியோ கால் ஏற்பாடு செய்தான். “வீடியோ இருந்தால்தான் நல்லது, பேசுவதற்கும் மேலே முகத்தை பார்த்து நிறைய அறிந்து கொள்ளலாம்,“  என்றான்.

அவருடைய உதவியாளன், “அவர் பெர்ரியர் என்ற பச்சை பாட்டிலில் வரும் தண்ணீர்தான்  குடிப்பார்,” என்று ஆரம்பித்து வரிசையாகச் சொன்னான். அப்படித்தான் கோபி லுவாக் எங்கிற கழிவுக் காபி வரவழைத்தோம். இவை எல்லாம் தவிர மிக முக்கியமான  ஒன்று சொன்னான். அவர் சாப்பாட்டில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.  அவருக்கு புதிதாக, “நட் அலர்ஜி” வந்திருக்கிறதாம். அதாவது நிலக் கடலை, பாதாம் என்று எந்தக் கொட்டையும் ஆகாது. சிறு அளவு உண்டால்கூட அவருக்கு மூச்சுத் திணறி மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு மோசமாக ஆகி விடுமாம்.  ரகு அவர் எந்த டாய்லட் பேப்பர் உபயோகிப்பார் என்று கேட்டான். நான் இது என்ன கேள்வி என்று பார்த்தேன்.

பிறகு  என்னிடம், “இல்லை சார் நாம் அலுவலகத்தில் கான்ஃபரன்ஸ் ஹால் அருகில் இருக்கும் டாய்லட்களில் அவர் வழக்கமாக  உபயோகிக்கும் டாய்லட் பேப்பர் வாங்கி வைக்க வேண்டும்,“ என்றான்.

நாங்கள் சில வாரங்களுக்கு முன்புதான் புதிய கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்திருந்தோம். இங்கே நிறைய இடம் இருந்தாலும் மரம் செடிகள் எதுவும் இல்லை.  கார்லுக்கு இயற்கையின் பசுமை மிகவும் பிடிக்கும். ரகு அவர் வருவதற்குள் மரம் செடிகள் வேண்டும் என்றான்.

“செடிகள் சரி, கொண்டு வந்து தொட்டிகளில் வைக்கலாம், மரத்துக்கு என்ன செய்ய முடியும்>” என்றேன்.

“சார், இங்கே லால்பாக் அருகில் ஒரு நர்ஸரி இருக்கிறது. பிரதமர் வருகைக்கு அவர்கள் வளர்ந்த மரங்களை இடம் பெயர்த்துக் கொண்டு வந்து  நட்டார்கள் என்று செய்தி வந்தது, அவர்களிடம் பேசி விட்டேன். சற்று செலவு ஆகும், நீங்கள் ஒப்புதல் கொடுத்தால் செய்து விடலாம்,” என்றான். செய்தும் காட்டினான். இரண்டு நாட்களில் எங்கள் வளாகமே மரங்களுடன் மிக அழகாகி விட்டது.

மறு நாள் காலை அவர் சார்டட் விமானத்தில் வந்து இறங்குவார்.  நாங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பட்டியலை ஒருமுறை கடைசியாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். எல்லாம் தயாராக இருப்பது போல இருந்தது. நான் ரகுவுக்கு என்னுடைய நன்றியைப் பல முறை தெரிவித்தேன்.

கார்ல் காலை அலுவலகத்துக்கு வரும்போது மகிழ்ச்சியாக இருந்தார். ரகு காலை உணவின்போது ஜெர்மன் பேக்கரியிலிருந்து  அவர் வழக்கமாக சாப்பிடும் செங்கல் மாதிரியான ரொட்டியும், சீஸும், கழிவுக் காபியும் ஏற்பாடு செய்திருந்தான். அவர் மகிழ்ச்சியுடன் அதற்கு நன்றி சொன்னார். நாள் முழுவதும் எல்லா  நிகழ்ச்சிகளும் கிரமமாக நடந்தன. எல்லோரும் சொல்லிக் கொடுத்தபடி மூன்றாவது கேள்விக்குமேல் தெரியாது என்று சொன்னார்கள். கார்ல் விளக்கம் கொடுத்தபோது குறிப்பு எடுத்துக் கொண்டார்கள். கார்ல் மிக உற்சாகமாக இருந்தார். மாலை விருந்தும்  நல்ல படியாக முடிந்தால் வெற்றி என்று நினைத்துக் கொண்டேன். வேறு எதுவும் குளறுபடி ஆகாமல் முடிய வேண்டும்.

ரகு இரவு விருந்து  ஒரு புதிய நட்சத்திர ஹோட்டலில் பிரத்யேக ஹாலில் ஏற்பாடு செய்திருந்தான். நாங்கள் மொத்தம் பனிரெண்டுபேர்தான். இந்திய நிறுவனத்தின் தலைமை ஆட்கள் மட்டும்.  யார் எங்கே உட்காருவது என்று ரகு திட்டம் வகுத்திருந்தான். கார்லுக்கு நேர் எதிரே நான். அலுவலக விஷயங்களை விட்டு விட்டு உலக, நாட்டு நிலைமைகளைப் பற்றிப் பேசினோம். சைனா, அமெரிக்கா எல்லா விவகாரங்களையும் அலசினோம். மிக விரிவான மெனு. வரிசையாக உணவுகள் வந்து கொண்டே இருந்தன. ஏழு கோர்ஸ் என்றான் ரகு. நிறமும் அலங்காரமும் சுவையும் உணவு மிக அருமை. கார்லுக்கு இந்திய உணவு பிடிக்கும், காரம் இல்லாத வரை. அதனால்    கேரளத்து வாழை இலை சுற்றி சமைத்த மீன், அதிகம் மசாலா சேர்க்காத ஹைதராபாத் பிரியாணி என்று விதம் விதமாக அமைத்திருந்தார்கள்.  அந்த நட்சத்திர விடுதியின் தலைமை செஃப் தானே வந்திருந்து விசாரித்தார்.

கார்ல் அவரை பாராட்டி, திடீரென்று, “கார்லிக் நான் கிடைக்குமா?“ என்று விசாரித்தார். நான் ரகுவைத் திரும்பிப் பார்த்தேன்.  நாங்கள் அதை மெனுவில் சேர்த்திருக்கவில்லை.

ரகு என்னிடம் மெல்லிய குரலில் சொன்னான் “சார், அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் போல, அப்படி இருந்தால்தான் பூண்டு எல்லாம் சாப்பிடுவார் என்று அவருடைய உதவியாளன் சொன்னான்,” என்றான்.

தலைமை செஃப் மகிழ்ந்து போய் உடனே கார்லிக் நான் செய்து கொண்டு வரச் சொன்னார். கூடவே ஷாஹி பன்னீர் காரம் இல்லாமல் நன்றாக இருக்கும் என்றார். நான், “பனீர் என்பது இந்திய சீஸ், தவிர பனீரின் மென்மை சுவையை வைத்தே ஒரு ரெஸ்டாரன்டின் தரத்தை மதிப்பிடலாம்,” என்று விளக்கம் கொடுத்தேன்.  கார்ல் கேட்டு வாங்கிச் சாப்பிடுவது எனக்கும் மிக மகிழ்ச்சியாக இருந்தது.

கார்லிக் நான் பெரிதாக, அங்கங்கே தந்தூரில் சுட்ட கரியுடன், தாராளமாகத் தூவின பூண்டுத் துண்டுகளுடனும், உருகிய வெண்ணெய் ஒழுக பார்த்தாலேயே நாவில் எச்சில் ஊற வந்தது.  கூடவே ஷாஹி பன்னீர். அதுவும் அருமையான  ஆரஞ்ச் வண்ணத்தில், மேலே க்ரீமினால் செய்த அலங்காரத்துடன் வந்தது. கார்ல் அதற்குள் தானாக கார்லிக் நானை எடுத்து கையினாலேயே பிய்த்து சாப்பிட ஆரம்பித்தார். ஆச்சரியமாக இருந்தது. அவர் வெறும் கைகளால் எதுவும் சாப்பிட மாட்டார் என்று எங்கள் குறிப்புகளில் இருந்தது. நான் ரகுவைப் பார்த்து புன்னகைத்தேன். ஆனால் அவன்  மொபலைப் பார்த்து ஏதோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான். நான் இளைய தலைமுறைக்கு ஐந்து நிமிடம் கூட மொபைலைப் பார்க்காமல் இருக்க முடியாது என்று நினைத்துக் கொண்டேன்.

செஃப் தானே வந்து பன்னீரை பரிமாற ஆரம்பித்தார். ரகு மொபைலைப் பார்த்தபடி ஓடி வந்து அவர் கையைப் பிடித்து தடுத்தான். “நிறுத்துங்கள், நிறுத்துங்கள் “ நாங்கள் எல்லோரும் துணுக்குற்றுப் பார்த்தோம். “இதில் முந்திரிப் பருப்பு அரைத்திருக்கிறீர்கள் அல்லவா?” செஃப் “ ஆமாம், அதனால்தான் வளமையான சுவை வரும்,“ என்றார்.

அதற்குள் கார்லுக்குப் புரிந்து, ரகுவுக்கு மிகவும் நன்றி சொன்னார். நான் அவனை நன்றியுடன் பார்த்தேன். ரகு செஃபிடம் கார்லுக்கு நட் அலர்ஜி என்று விளக்கி,  வேறு கொண்டு வரச் சொன்னான். செஃப் காலாதால் எடுத்து வரச் சொன்னார். அந்த உணவகத்தில் அது பெயர் போனதாம். ஊற வைத்த கருப்பு உளுந்து பல மணி நேரம் நேரம் மெல்லிய தீயில் சமைக்கப் பட்டது. கார்லுக்கு அது மிகவும் பிடித்தது. தெற்கு ஜெர்மனியில் அவர்கள் சாப்பிடும் லின்ஸென் போல இருக்கிறது என்று நிறையச் சாப்பிட்டார். விருந்து தொடர்ந்தது.

எல்லாம் முடிந்து கார்ல் மிக மகிழ்ச்சியாக இருந்தார். இந்தப் பயணம் நன்றாக இருந்ததாக மனதாரச் சொன்னார்.கிளம்பும்போது ஏற்பாடுகள் மிகச் சரியாக இருந்ததாக பாராட்டினார். ரகுவைத் தனியாக அழைத்து மறுபடியும் நன்றி சொன்னார்.

ஒருவழியாக அவரைக் காரில் ஏற்றி, நல்ல இரவு ஆகட்டும் என்று சொல்லி வழி அனுப்பி பெரு மூச்சு விட்டேன். ரகுவின் கையைப் பற்றி நன்றி சொன்னேன். அவனும் நிறைவாக இருந்தான்.

அப்போதுதான் இன்னொரு பக்கம் பான்க்வெட் ஹாலில் நிறைய விளக்குகள், ஓசையுடன் பார்ட்டி நடந்து கொண்டிருப்பதைக் கவனித்தேன். சிவப்பு நிறத்தில் இருதய வடிவத்தில் பலூன்கள். நிறைய இளம் ஜோடிகள் நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள். ஓ! காதலர் தினம். கார்ல் பயண சந்தடியில்   நினைவிலேயே இல்லை. அப்போதுதான் இன்னொன்று நினைவுக்கு வந்தது. திடுக்கிட்டுத் திரும்பினேன்.

“ரகு, இன்றைக்கு காதலர் தினம். நீ மாயாவுக்கு மோதிரம் கொடுத்து திருமணம் செய்து கொள்ளக் கேட்பதாக இருந்தாயே ? கார்ல் பயணத்தினால் தள்ளிப் போட்டு விட்டாயா ?”

ரகு என்னிடம் சென்ற மாதம் சொல்லி இருந்தான். இருவரும் இப்போது சேர்ந்து வாழ்ந்து, ஒரு மாதிரியாக ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு விட்டார்களாம். மாயாவுக்கு இப்போது பாரம்பரியப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசையாம். ஒரு பெரிய சாலிடேர் வைர மோதிரம் காண்பித்தான். காதலர் தினம் அன்று கொடுப்பதாக இருந்தான்.

“இல்லை சார் கொடுக்கவில்லை,“ என்றான் எங்கோ இருளில் பார்த்துக் கொண்டு.

நான் உறைந்து போனேன். என்ன ஆயிற்று, ஏன் என பல கேள்விகள். இருந்தாலும் உடனே கேட்கத் தோன்றவில்லை.

அவனுக்கு புரிந்திருக்க வேண்டும்.

“சார், எங்கள் இருவருக்கும் சரிப்பட்டு வரவில்லை, பிரிந்து விட்டோம்“ என்றான்.

 

 

பணக்காரன்

கா. ரபீக் ராஜா 

 

சுந்தரம் சற்று முன்புதான் பணக்காரனாக மாறியிருந்தான். சுந்தரத்துக்கு இருக்கும் ஒரே சொத்து நான்கு ஏக்கர் வானம் பார்த்த பூமியான நிலம் மட்டும்தான். பெயருக்குதான் விவசாயி. வேலை பார்ப்பதெல்லாம் இன்னொருவர் பண்ணையில். இவனுக்கு மனைவி, ஒரு மகன், மகள். சொற்ப ஊதியத்தில் குடும்பத்தை நடத்துவதே பெரும்பாடு. இவனது ஊரில் மூன்று மாதங்களுக்கு முன்புதான் நான்கு வழிச்சாலை போடப்பட்டது. அதன் விளைவாக கிராமம் கொஞ்சம் கொஞ்சமாக உருமாற்றம் அடைந்து கிராமமும் அல்லாமல் நகரமும் அல்லாமல் ரெண்டுங்கெட்டானாக மாறிவிட்டது.

நான்கு வழிச்சாலை முக்கிய நகரத்தின் இணைப்பு சாலையாக  மாறிப்போனதன் விளைவாக ஊருக்குள் நிறைய தொழிற்சாலைகள் வரத்தொடங்கியது. அதில் சுந்தரத்தின் நான்கு ஏக்கர் குறிப்பிட்ட கார்ப்ரேட் கம்பெனியின் கண் பட்டு எவ்வளவு விலையேனும் கொடுக்க தயாராக இருந்தார்கள். இந்த தகவல் சுந்தரத்துக்கு போனது. சுந்தரத்தின் மனைவி எல்லாம் சேர்த்து ஒரு பத்து லட்சத்துக்கு தள்ளிட்டு வாங்க என சொல்லியனுப்பி இருந்தாள்.

சுந்தரத்துக்கு நா வறண்டு கண்ணீர் வந்தது. கூடவே கீழ் உடுப்பும் ஈரமாகியிருந்தது. அந்த கார்ப்ரேட் செயல் அதிகாரி எடுத்த எடுப்பில் இரண்டு கோடிக்கு செக் கொடுத்தால் யாருக்குதான் வராது. கூடவே இந்த பெரிய தொகையை கையாள்வது எப்படி என்பதை ஒரு உதவியாளர் சொல்லிக் கொடுத்தார்.  அந்தளவுக்கு அது எதோ கனிம வளம் கொண்ட புதையல் பூமி என்று பின்னாளில் அறிந்து கொண்டான். அது குறித்து கவலை இல்லை. இரண்டு கோடி மகிழ்ச்சியில் இருந்தான்.  இரண்டொரு நாளில் எல்லாம் மாறியது. பிடித்தம் போக ஒண்ணே முக்கால் கோடிக்கு அதிபதியாக மாறிப்போனான் சுந்தரம்.

பக்கத்துக்கு நகரத்துக்கு குடியேறிப் போனான். பழைய வீட்டில் இருந்த பொருட்களை ஏரியாவாசிகளுக்கு பிரித்துக் கொடுத்தான். புதிய வீட்டில் எல்லா வீட்டு உபயோகப் பொருட்களும் இருந்தது. ஒண்டிக் குடித்தனத்தில் நெருக்கியடித்து படுத்துக் கிடந்தவன் மகன், மகள் என அனைவர்க்கும் தனியறை ஒதுக்கப்பட்டது. வீட்டுக்கு படித்த வேலைக்காரியை வைத்தார்கள். அவள் இங்கிலீஷ் பேசுவதாக சுந்தரத்தின் மனைவி குறைபட்டுக்கொள்ள படிக்காத சமையல் தெரிந்த வேலைக்காரி நியமிக்கப்பட்டாள்.

அந்த நகரத்திலேயே ஒரு பெரிய சூப்பர் மார்கெட் திறக்கப்பட்டு தொழிலதிபரானான். அன்று இரவு மிகுந்த யோசனைக்கு உள்ளானான் சுந்தரம். காரணம் இன்று காலை நடந்த சம்பவம். வங்கியின் வரிசையில் நின்றபோது வங்கி பணியாளர் இவரை பார்த்து ஒழுங்கா வரிசையில் நில்லுய்யா என்பது போல ஒருமையில் பேசியதை விட அருகில் நின்றவனை பார்த்து ஸார் என்று சொன்னது சுந்தரத்தை மிகவும் பாதித்துவிட்டது. காரணம் வங்கிக்குள் நுழையும்போது அந்த “ஸார்” ஆசாமி சைக்கிளில் ஸ்டாண்டு போட்டான். சுந்தரம் வந்தது  காரில். வங்கி புத்தகத்தில் ஆயிரத்து சொச்சம் வைத்திருப்பவனுக்கு கிடைக்கும் மரியாதை கூட கோடியில் புரளும் நமக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் அன்றிரவு தூக்கத்தை கெடுத்தது.

சுந்தரத்துக்கு வசதி வாய்ப்பு வந்ததும் பழைய நட்புக்களை எல்லாம் கவனமாக துண்டித்துவிட்டான். ஆகையால் யோசனை கூற யாருமில்லை. பணக்காரனாக வாழ்வது எப்படி என்கிற குறுகியகால பயிற்சி வகுப்புகள் இருந்திருந்தால் நிச்சயம் ஒரு அட்மிஷன் போட்டிருப்பான். பணக்காரனாக மாறுவது எப்படி என்ற தலைப்பில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருக்கிறது. ஆனால் வாழ்வது எப்படி என்று யாரும் எழுதவில்லை. அவன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் இவனை எப்படி பார்க்கிறார்கள் என்பதை கவனிப்பதே இவனது அன்றாட பணியாகிப்போனது. பணியாளர்களுடன் சகஜமாக பேசமாட்டான். காரணம் பணக்கார முதலாளி ஏழை தொழிலாளியிடம் பேசமாட்டான்.

இவன் பழைய ஊரில் இருக்கும் போது மில் ஓனர் ஒரு கிளப்பில் மெம்பராக இருந்தார். கிளப் பெயர் நினைவில் இல்லை. அதே போல சுந்தரமும் ஒரு கிளப்பில் அவசரமாக மெம்பரானான். அது ஏழைகளுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் ஆதரவற்றவர்களுக்கு நேசக்கரம் நீட்டும் அமைப்பு. பகலில் ஒரு மீட்டிங் போட்டிருந்தார்கள். அதில் சுந்தரம் பொன்னாடை போர்த்தப்பட்டு கவுரவிக்கப்பட்டான். அதே கூட்டத்தில் நடக்க முடியாதவர்களுக்கு சக்கர நாற்காலி வாங்க ஒரு செக் கொடுத்திருந்தான். நகரின் மிகப்பெரிய திரையரங்கு வைத்திருக்கும் தொழிலதிபர் தான் கிளப்பின் தலைவர். இவனுக்கு கொஞ்சம் நிறைவாக இருந்தது. கூட்டத்தில் இனி எதிர்காலத்தில் இந்த கிளப் செய்யவேண்டிய நலத்திட்ட உதவிகள் பற்றி பேசிவிட்டு இரவில் ஒரு பாரில் தண்ணியடித்துவிட்டு சபையை கலைத்தார்கள்.

கிளப்பில் இருக்கும் செல்வந்தர்களை கவனித்தான். எல்லோரும் சிகப்பாக இருந்தார்கள். கருப்பாக இருந்தாலும் மெருகுடன் இருந்தார்கள். சிரிக்கும்போது அனைவரது பல்வரிசையும் சீராக இருந்தது. முக்கியமாக உயரமாக இருந்தார்கள். அந்த கூட்டத்தில் சுந்தரம்தான் சற்று குள்ளமாக இருந்தான். பணத்துக்கும் உயரத்துக்கும் அறிவியல்பூர்வமான தொடர்புகள் இல்லாவிட்டாலும் ஒருவேளை இருக்கலாம் என்பது சுந்தரத்தின் நம்பிக்கை. உயரத்தை மூன்று இஞ்ச் செருப்பணிந்து ஓரளவு சரிசெய்தான்.

சுந்தரத்தின் பற்கள் அப்படி ஒன்றும் துருத்திக்கொண்டு இல்லாவிட்டாலும் சிரிக்கும்போது ஒரு எளியவனின் தோற்றம் கொடுத்தது. நகரத்தின் பெரிய பல் மருத்துவமனைக்கு சென்றான். பல்லுக்கு மூவாயிரம் என்றார்கள். ஒரு டஜனுக்கு இரண்டு குறைவான பற்களை சீரமைப்பு செய்தான். இரண்டுநாள் தங்க வேண்டும் என்றார்கள். வாழ்நாளில் தேக ஆரோக்கியம் இருந்தும் மருத்துவமனையில் தங்கியது அன்றுதான். மேலும் ஒரு பல் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேரும் பாக்கியம் எல்லோருக்கும் கிட்டிவிடாது. பற்களை சீரமைத்த பெண் மருத்துவரை இவனுக்கு மிகவும் பிடித்துப்போனது. காரணம் வேண்டுமென்றே தன் இடுப்பை பார்த்தாலும் அதை கண்டுகொள்ளாத அந்த மனப்பாங்கு மிகப்பெரிய நாகரீகவாதிகளிடம் மட்டுமே இருக்கும் குறிப்பாக செல்வந்தர்களிடம் என்று தனக்குதானே கூறிக்கொண்டான். மறுநாள் மருத்துவமனையில் இருந்து விடை பெறும்போது ஒருகட்டு ரூபாய் தாளை அந்த பெண் மருத்துவரிடம் திணித்தான். பணத்தை ரிசப்சனில் கட்டுங்கள் என்று சொல்லிவிட்டு நடந்த மருத்துவரை நீண்ட பெருமூச்சுடன் கவனித்தான்.

புதிய பல்லை எப்படி காண்பிப்பது என்ற வெட்கம் கூட வந்து போனது. வீட்டில் ஆளுக்கு ஒரு மூலையில் உட்காந்திருந்தார்கள். பிரச்சனை குழந்தைகளிடம் என்று விளங்கியது. காரணம், இரண்டு குழந்தைகளும் அரசு பள்ளியில் படித்தவர்கள். வாழ்க்கை வேறு திசையில் பயணித்ததால் ஒரு ஆங்கிலப்பள்ளியில் சேர்ந்துவிட்டான். புதிய பள்ளியில் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்பதாலும் தமிழில் பேசினால் அபராதம் என்பதாலும் சுந்தரத்தின் இரு குழந்தைகளும் அந்த பள்ளியில் தனித்து விடப்பட்டு இருந்தார்கள். மேலும் பழைய பள்ளியில் சேர்ந்து விடுமாறு அழுது ஆர்ப்பாட்டம் செய்தார்கள். சுந்தரம் தன்னைத் தவிர குடும்பத்தில் யாருக்கும் பணக்காரனாக வாழ ஆசையே இல்லையே என்று வருத்தமாக இருந்தது. மனைவியும் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறாளே என்கிற ஆதங்கம் வேறு.

எல்லாவற்றையும் மறக்க ஒரு ஹோட்டலுக்கு சென்றார்கள். அது ஒரு மூன்று நட்சத்திரம் இருக்கலாம். சாப்பிட உட்காந்ததும் ஒரு எலுமிச்சை பிழிந்த வெதுவெதுப்பான நீர் வைத்தார்கள். அதை சுந்தரத்தின் மனைவி உட்பட அனைவரும் சூப் நினைக்க, பரிமாறும் சிப்பந்தி அது கை கழுவுவதற்கு என்று சொல்லிவிட்டு லேசாக சிரித்துவிட்டான். இவனுக்கு தாங்க முடியாத அவமானத்தை பெற்றுத் தந்தது. பேசாமல் வேறு மனைவியை பார்க்கலாமா என்ற எண்ணம் கூட வந்து போனது. மெனு கார்டு கொண்டு வந்து கொடுத்தார்கள். அது அவனது தாயாரின் இறப்பு சான்றிதழை நினைவுப்படுத்தியது. அதிலும் ஆங்கிலம். வாங்க வேற ஹோட்டலுக்கு போகலாம் என்று மனைவி நச்சரிக்க தொடங்கிவிட்டாள். பார்வையால் அதட்டிவிட்டு சற்று அமைதியாக இருந்தான். இவர்களது தவிப்பை புரிந்துகொண்ட பக்கத்துக்கு டேபிள் பெண்மணி ஒவ்வொரு மெனுவாக எடுத்துரைத்தாள். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் இந்த பெண்ணே மனைவியாக வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

மறுநாள் சுந்தரத்தின் சித்தப்பா இறந்துவிட்டார் என்ற தகவல் வந்தது. சுந்தரத்துக்கு தந்தை கிடையாது. தாயின் பராமரிப்பில் வளர்த்தவன். தந்தையின் வழி வந்தது தான் இந்த நாலு ஏக்கர். தந்தையுடன் கூடப்பிறந்த ஒரே தம்பிதான் இப்போது இறந்தது. அண்ணன் இறந்து போனதும் நல்ல வளமான சொத்துகளை தன் வசப்படுத்தி மழையே பார்க்காத நாலு ஏக்கர் இடத்தை அண்ணன் குடும்பத்துக்கு தள்ளிவிட்டார். அந்த நாலு ஏக்கர் தான் இப்போது இவனை கோடிஸ்வரனாக மாற்றினாலும் அவர் செய்த துரோகத்தை இவன் மறக்கவே இல்லை. சுந்தரம் வாலிபனாக இருந்த போது நோய்வாய்பட்டு கிடந்த தாயும்  போய் சேர்ந்துவிட்டாள். வேறு வழியில்லாமல் சித்தப்பா வீட்டில் வளர்ந்தான். அவனுக்கென்று திருமணமாகும் வரை சித்தப்பா வீட்டில் இருந்த அந்த எட்டு வருட அவஸ்தை சொல்லில் அடங்காது. வீட்டில் மீன் குழம்பு வாசம் வீசும் போதும் இவனுக்கு பழைய சோறே உணவாக கிடைத்தது. இவனுக்கு அந்த மீன் குழம்பு கிடைக்க இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டும். சின்னம்மா செய்த கொடுமைகளை ஒருவார்த்தை கூட தட்டிக்கேட்டதில்லை. அவர் காத்த அமைதி சின்னம்மா கொடுமையை விட கொடியதாக இருந்தது.

கொஞ்ச நாளில் சின்னம்மாவுக்கு அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்தது. இருவர் சம்பாதித்து சற்று வசதியாக வாழ ஆரம்பித்தனர். அவர்களது குழந்தைகள் பெரிய பள்ளியில் படிக்க அவர்கள் வீட்டிலேயே குழந்தை தொழிலாளராக சுந்தரம் இருந்தான். அப்படிபட்ட சித்தப்பா தான் இறந்து போனார். தொண்டையில் கான்சர். வார்த்தையே பிறக்காத அந்த தொண்டையில் எப்படி கான்சர் வந்தது என்று தனக்குள் கேட்டுக்கொண்டான்.

ஒரே ஆச்சரியம்  தனக்கு வசதி வாய்ப்பு வந்தது தெரிந்தும் கூட சித்தப்பா குடும்பம் தன்னிடம் உதவி என்று கேட்டு நின்றதில்லை, சுந்தரத்தின் விருப்பமும், பிரார்த்தனையும் அதுவே. சித்தப்பா சாவுக்கு போகும்போது எந்த மாதிரியான தோரணையில் போவது என்ற குழப்பம் இருந்தது. ஒரு செல்வந்தனாக தான் செல்லும் முதல் சாவு எந்த குழப்பமும் வந்துவிடக்கூடாது என்று நினைத்துக் கொண்டான். சாவுக்கு வரும்போது  பொருள் படைத்தவனின் செய்கைகள் எப்படி இருக்கும் என்பதை ரைஸ்மில் முதலாளியிடம் கற்றிருக்கிறான். வெள்ளை உடையில் பளீரென்று வருவார்கள். முகத்தில் ஒரு செயற்கை சோகம் இழையோடும். முகத்தில் கொஞ்சம் பூச்சு வேலைப்பாடு இருந்தாலும் அதை சோகமான முகம் மிகச்சரியாக மட்டுப்படுத்தும். யாருக்கும் தெரியாத  வகையில் கூடுமானவரை நுகரும் வகையில் ஒரு வாசனை திரவியம் பூசியிருப்பார்கள். அது இறப்பு வீடுகளுக்கு செல்லும்போது உபயோகப்படுத்தும் பிரத்யேக திரவியமா என்பது கூட சுந்தரத்துக்கு நெடுநாள் சந்தேகமாக இருந்திருக்கிறது. கூடவே ஒரு அல்லக்கை அல்லது கார் ட்ரைவர் அந்த பெரிய மாலையை சுமந்து வருவார். சாவு வீடே ஒருநிமிடம் அழுகையை நிறுத்திவிட்டு அந்த செல்வந்தனை ஏறிடும். இந்த பெருமையில் பாதி அந்த பணக்காரர்களுக்கு சென்றாலும் மீதி படுத்து கிடக்கும் அந்த சவத்துக்கு சேரும்.

சுந்தரம் ஒருமுறை ஒத்திகை பார்த்துவிட்டுத்தான் காரில் ஏறினான். வரும் வழியில் ஒரு பெரிய மாலையை வாங்கி டிக்கியில் வைக்க சொன்னான். காரணம் கடையில் இருந்த பொழுது மணம் வீசிய ரோஜா மாலை இவன் கைக்கு வந்ததும் சாவு வாசம் அடித்தது. கூடவே ஒரு இறந்த உடலுடன் பயணிப்பது போன்ற உணர்வு. ட்ரைவரிடம் நீதான் மாலையை எடுத்துக்கொண்டு என் பின்னால் வரவேண்டும். காரணம் நிறைய பேர் எனக்கு வணக்கம் வைப்பார்கள். பதில் வணக்கம் வைக்க இந்த மாலை இடையூறாக இருக்கும் என்றான். கூடவே இறந்த உடலை பார்த்து வணக்கம் வைத்துவிட்டு உன் பக்கம் திரும்பும்போது மாலையை கொடுக்க வேண்டும். மேற்கண்ட செய்முறை விளக்கத்தை சொல்லும்போது ட்ரைவர் தன்னை ஒரு மாதிரியாக பார்த்ததை கவனித்தான்.  முன்பின் ஒரு பணக்காரரிடம் வேலை பார்த்ததல்லை போல என நினைத்துக்கொண்டான்.

சித்தப்பா வீட்டை நெருங்கினான். கடைசியாக பார்த்தது போலவே இருந்தது. வாசலில் ஒரு மாங்காய் மரம். இவன் இந்த வீட்டுக்கு சிறுவனாக வந்தபோது கன்றாக வைத்தது. சித்தப்பா இந்த மரத்தை பார்த்துக்கொண்ட அளவிற்கு கூட தன்னை பார்த்துக் கொண்டதில்லை என்பது சுந்தரத்தின் சற்று முந்தய குற்றச்சாட்டு. இதையெல்லாம் தன் ட்ரைவரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது போல இருந்தது. ஆனால் பணக்காரர்கள் யாரும் தன் வாழ்வியல் சோகங்களை ட்ரைவரிடம் பகிர மாட்டார்கள் என்பதால் அமைதியாக இருந்தான்.

வீட்டின் முன் சாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. அது கிழிந்து நைந்து போன பந்தல். இழவு வீட்டுக்கு போடவே எடுத்து வைத்த பந்தல் போல இருந்தது. வீட்டுக்கு முன் ஒரு அறுபது அடி தூரத்திலேயே காரை நிறுத்தினான். நிறுத்தும் போது ஒரு ஹாரன் அடிக்க சொன்னான். முகம் முன் பக்கம் இருந்ததால் பின்னால் உட்காந்திருந்த சுந்தரத்தால் ட்ரைவர் முகம் என்ன மாதிரியாக இருந்திருக்கும் என்பதை பார்க்க முடியவில்லை. ஹாரன் அடிக்கப்பட்டது. எதிர்பார்த்தது போல இழவு வீட்டின் பந்தலில் உட்காந்திருந்த கூட்டம் காரை திரும்பி பார்த்தது. சுந்தரத்துக்கு கொஞ்சம் பெருமையாக இருந்தது. கார் கதவை தானே திறக்கலாமா இல்லை ட்ரைவரை விட்டு திறக்க சொல்வோமா என்ற எண்ணம் எழுந்தது. ட்ரைவர் முடியாது என்று மறுத்துவிட்டால்? திரும்பி போக என்ன செய்வது தனக்கும் கார் ஓட்ட தெரியாது என்று பழைய சுந்தரம் செய்த எச்சரிக்கை காரணமாக கதவை தானே திறந்து கொண்டு வெளியே வந்து நின்றான்.

மொத்த கூட்டமும் இவனை பார்த்துக்கொண்டு இருந்தது. ட்ரைவர் வேகமாக ஓடிவந்து டிக்கியை திறந்து மாலையை எடுத்துக்கொண்டு இவன் பின்னால் நின்றான். மெதுவாக அல்லாமலும் வேகமாக இல்லாமலும் ஒருவிதமாக நடந்தான். இப்போது மொத்த கூட்டத்தின் கண்கள் இவனை மொய்ப்பது இவன் பார்க்காமலே புரிந்தது. இது தவிர தூரத்தில் உட்காந்து தண்ணியடித்து கொண்டிருந்த ஒரு கூட்டம் இவனையே வெறித்து பின்பு திரும்பி வேலையைத்  தொடர்ந்தார்கள். தண்ணியடிக்க யாரேனும் காசு கேட்டால் கொடுப்பதற்கு ட்ரைவரிடம் காசு கொடுத்திருந்தான். பணக்காரன் பணத்தை தொடமாட்டான். அதுதான் அவனை தொடவேண்டும்.

சித்தப்பாவின் மூத்த மகன் அதாவது சுந்தரத்திற்கு தம்பி வெளியே சட்டையின்றி நின்று கொண்டு வருவோர்களின் துக்கத்தை ஏற்றுக்கொண்டிருந்தான். அவனும் கவனித்துவிட்டான். தான் கையை பிடிக்கும்போது அவன் உதறிவிட்டால் என்ன செய்வது? மெதுவாக வந்து வீட்டை அடைந்தான். கூட்டத்தை பார்த்து பொத்தாம் பொதுவாக ஒரு வணக்கம் வைத்தான். அதற்கு கைமேல் பலனாக பதிமூன்று பதில் வணக்கங்கள் கிடைத்தது. தம்பியின் கை பிடித்து அழுத்தினான். அந்த அழுத்தம் கையில் போட்டிருக்கும் மோதிரத்தையும் கட்டையான பிரேஸ்லெட்டையும் பார்க்குமாறு அறிவுறுத்தியது. செருப்பை உள்ளே போகும்போது எங்கே கழற்றி வைப்பது என்றே குழப்பம் வந்து போனது. பழைய சுந்தரம் புது செருப்பு வாங்கி இதுபோன்ற ஜனநெருக்கடி இடத்திற்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டால் ஜோடி செருப்பில் ஒரு செருப்பை ஒரு இடத்திலும் இன்னொரு செருப்பை மற்றொரு இடத்திலும் கழற்றி வைப்பான். இது செருப்பு திருடர்களின் தொழிலை பாதிக்கும் உத்தி என்று நம்பினான். ஒரு உயர் ரகமான பேட்டா செருப்பு பக்கத்தில் தன் செருப்பை கழற்றி வைத்தான். பணக்காரன் இன்னொரு பணக்காரன் நட்பையே விரும்புவன். பணக்காரனின் செருப்பு கூட இதை கடைபிடிக்க வேண்டும் என்ற கொள்கையை சுந்தரம் சற்று முன் மனசாசனத்தில் எழுதினான்.

சித்தப்பாவின் வீடு அப்படியே இருந்தது. முன்னால் இருந்த திண்ணையில் தான் சுந்தரம் படுத்து தூங்குவான். வீட்டின் மெயின் ஹாலில் தான் சித்தப்பா படுத்து கிடப்பார். இன்றும் அதே இடத்தில் தான் ஒரு ஐஸ் பெட்டியில் உறைந்து கொண்டிருக்கிறார். பிரீசர் பாக்ஸில் இரண்டு மொபைல் போன் நம்பர்கள் எழுதப்பட்டு இருந்தது. இந்த எண்ணை யாரெல்லாம் தன் போனில் பதிந்து வைத்துக் கொள்வார்கள் என்று யோசித்து பார்த்தான். சுந்தரம் சேர்ந்த கிளப்பில் கூட ஏழை எளிய மக்களின் பயன்பாட்டிக்கு ப்ரீசர் பாக்ஸ் வாங்க போவதாக சொல்லியிருந்தார்கள்.

சித்தப்பாவை உற்றுப் பார்த்தான். இன்றும் அதே அமைதி. பாதிக்கண் திறந்தே இருந்தது பார்க்க பயமாக இருந்தாலும் தூங்கும்போதே இப்படி தான் அரைக்கண் திறந்தே இருக்கும். ஒரு மூக்கில் சரியாக பொருத்தப்பட்டு இருந்த பஞ்சு மறுதுவாரத்தில் கீழே விழுந்து கிடந்தது. ஒருவேளை சித்தப்பா மூச்சு விட்டிருக்கலாம் என் மனதிற்குள் சொல்லி சிரித்துக்கொண்டான். தொண்டையில் பெரிய கட்டு ஒன்று போடப்பட்டு இருந்தது. சித்தப்பா கொஞ்சமல்ல நிறைய வலியில் வாழ்ந்திருப்பார் என்பதை நினைக்க சற்று பாவமாக இருந்தது. அதற்காக அழுதுவிடக்கூடாது. அது எளியவர்கள், இயலாதவர்கள் செய்யும் காரியம். திரும்பி பார்த்தான். சரியான நேரத்தில் ட்ரைவர் மாலையை கொடுத்தான். சுந்தரத்திற்கு சற்று கௌரவமான மனநிலையை தந்தது. மேலும் மனைவியை அழைத்து வராமல் இருப்பது நல்ல யோசனையாகப்பட்டது. சித்தப்பாவுக்கு ஒரு வணக்கம் வைத்தான். அசூசையாக பதில் வணக்கத்திற்கு ஒரு நொடி காத்திருந்துவிட்டு சின்னம்மாவை தேடினான். ஒரு மூலையில் உட்காந்து அழுதே ஓய்ந்து போயிருந்தாள். இவனை கவனித்து விட்டு குனித்து கொண்டு அழுதாள்.

வெளியே பந்தலில் வந்து தன் கௌரவத்திற்கு ஏற்ற மரியாதைக்குரிய நபர்கள் யாராவது தென்படுகிறார்களா என்று தேடினான். கூட்டத்தில் தன் தகுதிக்கு ஏற்றவர்கள் யாருமில்லை என்பதை உறுதி செய்துவிட்டு, சித்தி வேலைபார்க்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரை இவனுக்கு தெரியும், அவர் அருகிலேயே போய் அமர்ந்தான். கூட்டத்தில் இருந்தவர்கள் இவனை பற்றி பேசினார்கள். சுந்தரம் தானே இவன்? என்பது மட்டும் பிரமையாக இவன் காதில் விழுந்தது. வந்த வேலை முடிந்தது. இனி ஒன்றுமில்லை என்று முடிவு செய்து எழுந்து நின்றான். துக்கத்தை வாங்கிக் கொண்டிருந்த தம்பியிடம் நின்று ட்ரைவரை பார்த்தான். ட்ரைவர் ஓடி வந்து ஒரு பழுப்பு நிறமேறிய கவரை கொடுத்தான். அதை சுந்தரம் தம்பியிடம் கொடுத்துவிட்டு நடந்தான். தான் கவர் கொடுத்ததை ஒரு பத்து பேர் பார்த்தாலே ஊர் முழுக்க பரவிவிடும் என்று நம்பினான்.

காரில் ஏறி உட்காந்தான். நில்லுடா என்பது போன்ற சப்தம். வண்டியை ட்ரைவர் இயக்க முற்படும் போது டேய் சுந்தரம் என்கிற குரல் தெளிவாக கேட்டது. அது சித்தியின் குரல். சித்தி ஆவேசமாக காரை நோக்கி வந்து கொண்டிருந்தாள். வண்டியை கிளப்ப சொல்லி விடலாமா என்ற யோசனை வேறு. ஓடுவது பணக்காரனுக்கு அழகல்ல. நின்று சமாளிப்பது அவனுக்கு இன்னும் கம்பீரத்தை கொடுக்கும் என்று எண்ணி வண்டியை விட்டு கீழே இறங்கினான். டிரைவர் வண்டியை ஆப் செய்தான்.

சித்தியை வெகு அருகில் நின்று பார்க்கும் போதே கொஞ்சம் பயமாக இருந்தது. முகத்தில் ஆவேசம்.

“யாருக்கு வேணும் உன் பணம்? நாங்க நல்லாத்தான் இருக்கோம். நான் சாகுற வரைக்கும் பென்ஷன் வரும். எந்த நாய்கிட்டையும் கை கட்டி நிக்க வேண்டிய அவசியமே இல்ல!” என்று பணத்தை கவருடன் எறிந்தாள். கவருக்குள் இருந்த பணம் கட்டில் இருந்து பிரிந்து கொட்டியது. உள்ளுக்குள் இருந்த பழைய சுந்தரம் வெளியே குதித்து பணத்தை பொறுக்க தொடங்கினான். கடைசி நோட்டை எடுத்து முடிக்கும்போது உள்ளுக்குள் படுத்திருந்த சித்தப்பாவை தவிர எல்லோரும் அவனை பார்த்தார்கள். கடைசி நோட்டு வரை பொறுக்கிய சுந்தரம் அமைதியாக காருக்குள் அமர்ந்து கொண்டான்.

 

இங்கேயே இருந்திருக்கலாம்

பத்மகுமாரி 

“ச்சுஸ்ஸ்” என்ற சப்தம் அம்மா முன் அறையில் வரும்பொழுதே கேட்டிருக்கிறது. அம்மா தினமும் இறைவனின் முகத்தில் தான் விழிப்பாள். கேட்டால் அது பல வருட பழக்கம் என்பாள். எத்தனை வருடம் என்று அம்மாவும் சொன்னதில்லை, எனக்கும் கேட்க வேண்டும் என்று தோன்றியதில்லை. ஆனால் என் பெயரை நான் விவரமாக சொல்ல தெரிந்து கொண்ட நாட்களிலிருந்து அம்மா இப்படி செய்வதாக தான் எனக்கும் ஞாபகம்.

அன்றும் அப்படிதான் செய்திருக்கிறாள். கட்டிலில் இருந்து எழுந்தவுடன் கண்களை சரியாக திறந்தும் திறவாமலும் சுவரில் தடவி அறையின் விளக்கை ஒரு விநாடி எரியவிட்டு, எதிர் சுவரில் மாட்டியிருந்த ‘ராதா கிருஷ்ணர்’ படத்தை பார்த்திருக்கிறாள். அந்த படம் எங்கள் படுக்கையறை சுவற்றில் ஏழு ஆண்டுகளாக தொங்கிக் கொண்டிருக்கிறது. சில சமயம் மின்விசிறி முழு வேகத்தில் சுற்றும் பொழுதுகளில் லேசாக அங்குமிங்கும் அசையும்.  முதன்முறையாக அந்த படத்தை வாங்கி கொண்டு வந்து மாட்டியது நான்தான்.

‘பெட்ரூமில சாமி படம் போட கூடாதுலா’ அம்மா சந்தேகமாக கேட்டாள்.

‘அப்படிலாம் ஒன்னுமில்ல’ சொல்லிக் கொண்டே நான் அடுக்களைக்கு தண்ணீர் குடிக்க போய்விட்டேன்.

‘பெட்ரூமில சாமி படம் போட கூடாது ராதா அம்மா. சாமி குத்தம் ஆயிரும்’ சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள அம்மா கேட்க எதிர் வீட்டு அகிலா அத்தை சொன்னது இது.

ஆனால் அந்த படத்தை இடம் மாற்றக் கூடாது என்று நான் மனதில் தீர்மானம் செய்து வைத்திருந்தேன். அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் எனக்கு தெரியாது. காரணத்தோடு தான் எல்லாமே நடக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லைதானே.

‘சாமி தூணுலயும் இருக்கும், துரும்பிலும் இருக்கும் என்றால் பெட்ரூம் சுவற்றிலும் இருக்குந்தான? அப்புறம் தனியா படமா மாட்டுறதுனால என்ன குத்தம் வந்திரும்? ‘ அம்மா பிடிவாதமாக அந்த படத்தை கழற்ற சொல்லியிருந்தால் இந்த பதிலை சொல்லி அம்மாவிடம் வாதாடி சம்மதம் வாங்கி விட வேண்டும் என்று மனக்கணக்கு போட்டு வைத்திருந்தேன். ஆனால் அதற்கு அவசியம் ஏற்படவில்லை. அகிலா அத்தை சொன்ன பதிலுக்கு ‘ம்ம்’ கொட்டிய அம்மா, வாசலில் இருந்து வீட்டிற்குள் வந்தபிறகு அந்த படத்தை இடம் மாற்றவுமில்லை, இடம் மாற்ற வேண்டும் என்று என்னிடம் சொல்லவும் இல்லை. அம்மா மனதில் என்ன நினைத்துக் கொண்டாள், ஏன் அதை இடம் மாற்றவில்லை என்று இன்று வரை எனக்குத் தெரியாது. அம்மா படத்தை இடம் மாற்ற சொல்லாமல் விட்டதே போதும் என்ற எண்ணத்தில் நானும் அதன்பிறகு அதைப்பற்றி மேலும் பேசாமல் அப்படியே விட்டுவிட்டேன்.

படுக்கையில் இருந்து எழுந்து பூஜை அறை வரையிலும்,பாதி கண்ணை திறந்தும் திறவாமலும் போய் சாமி படங்களை பார்க்கும் அம்மா         ‘ராதா கிருஷ்ணர்’ படம் வந்த அடுத்த நாளிலிருந்து முதலில் அந்த படத்தை பார்த்துவிட்டு முழுக் கண்களை திறந்தபடி பூஜை அறைக்கு சென்று சாமி படங்களை பார்க்க ஆரம்பித்து இருந்தாள். கடந்த ஏழு வருடங்களாக இந்த முறை மாறியதே இல்லை.

**************

“ச்ஸ்வு” சப்தம் கேட்டு அம்மா வேகமாக பூஜை அறையில் வந்து பார்த்தபொழுது அந்த ‘மூஞ்சி எலி’ பூஜை அறையின் கீழ் வரிசையில் அன்னபூரணி சிலை முன் வைத்திருந்த அரிசியை கொரித்துக் கொண்டு இருந்திருக்கிறது. அம்மா பக்கத்தில் சென்று “ச்சூ…ச்சூ” என்று விரட்டியத்திற்கும் கூட கொஞ்சமும் அசைந்து கொடுக்காமல், அப்படியே அரிசியை கொரித்த படி இருந்ததாம். அம்மா அதனோடு போராட பயந்து கொண்டு வாக்கிங் போயிருந்த அப்பா வந்தபிறகு அப்பாவிடம் சொல்லி அதை விரட்டிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு முன்வாசல் தெளித்து கோலம் போட சென்றிருக்கிறாள்.

அப்பா திரும்புவதற்கு முன்பே எழுந்து வந்திருந்த என்னிடம் அம்மா இதை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அந்த ‘மூஞ்சி எலி’ அடுக்களையில் ஓடிக்கொண்டிருந்த சலனம் எங்கள் இருவருக்கும் தெளிவாக கேட்டது. அது எப்பொழுது பூஜை அறையிலிருந்து அடுக்களைக்கு இடம் பெயர்ந்திருந்தது என்பது அந்த அன்னபூரணிக்கே வெளிச்சம்.

இருவரும் அடுக்களையில் சலனம் வரும் திசையில் அதனை தேட ஆரம்பித்திருந்தோம். ‘எப்படி இது உள்ள வந்ததுனே தெரில. எப்படி இத விரட்ட போறோமோ’ அம்மா அலுத்துக் கொண்டாள்.

‘போகாட்டா விடும்மா. அது பாட்டுக்கு சுத்திகிட்டு போகட்டும். நம்மளதான் ஒன்னும் செய்யலேலா’ இது என்னுடைய பதில்

‘ம்ம்….அது சரி…. அதுபோக்குல சுற்றி குட்டி போட்டு குடும்பம் பெருக்கி வீட்ட நாசம் பண்ணட்டும் சொல்றியா’ அம்மா என்னை முறைத்தபடி கேட்டாள்.

அம்மாவிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே நான் அதை விரட்ட, அது அடுக்களை வலது முக்கில் குவித்துப் போட்டிருந்த தேங்காய் குவியலுக்குள் மறைந்துக் கொண்டது. அங்கிருந்து எப்படியோ கஷ்டப்பட்டு விரட்ட அடுக்களையின் மறு முக்கில் வைத்திருந்த காலி சிலிண்டர் பின்னால் சென்று ஒளிந்துக் கொண்டது.

‘எம்மா, எங்க ஓடுதுனு பாத்துக்கோ’ என்றபடியே காலி சிலிண்டரை இடது கையால் ஒருபக்கமாக சுழற்றி தூக்கி பார்த்தபோது அது அந்த சுவர் முக்கில் இல்லை. ‘எங்க போச்சு பாத்தியாம்மா?’ நான் கேட்டதற்கு, அது அங்க இருந்து வெளிவரவில்லை என்று அம்மா சொன்னாள்.

‘அது எப்பிடி.. இங்கேயும் இல்ல…. மாயமாவா போகும். எங்கேயோ எஸ்கேப் ஆயிருச்சு பாரு… உன்ன கரெக்டா பாரு சொன்னம்ல’ அம்மாவை கடிந்து‌ கொண்டேன்.

அதன்பிறகு வாக்கிங்கில் இருந்து திரும்பி வந்த அப்பாவிடம் சொல்லி வீடு முழுவதும் தேடியும் அந்த ‘மூஞ்சி எலி’ அகப்படவில்லை.

‘அது நீங்க விரட்டினதுல பயந்து வெளிய ஓடிருக்கும்.நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க’ என்று முடித்துவிட்டு அப்பா அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டார்.

இரண்டு நாட்கள் கழித்து அடுக்களையில் துர்நாற்றம் அடிக்க, நானும் அம்மாவும் சுற்றி தேட ஆரம்பித்தோம். அதற்கு விடையாக செத்துப்போன மூஞ்சி எலியை காலி சிலிண்டர் அடியிலிருந்து கண்டெடுத்தோம். அன்று சிலிண்டரை ஒரு பக்கமாக தூக்கி பார்த்து போது இல்லாத மூஞ்சி எலி  எப்படி பிணமாக அங்கு மறுபடி வந்தது என்று எங்களுக்கு விளங்கவில்லை.

அம்மாவும் நானும் ஒருவர் முகத்தை ஒருவர் மெளனமாக பார்த்துக் கொண்டோம். இந்த மூஞ்சி எலி இங்கேயே சுற்றி குட்டி போட்டு குடும்பம் கூட பெருக்கியிக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. அம்மா அதன் பிணத்தை மிகுந்த மரியாதையோடு அப்புறப்படுத்தினாள். இப்பொழுதெல்லாம் ‘ராதா கிருஷ்ணர்’ படத்தை பார்த்ததோடு பூஜை அறைக்கு செல்லாமலேயே அம்மா வாளி எடுத்துக் கொண்டு வாசல் தெளிக்கச் சென்று விடுகிறாள்.

 

விசிறி

லட்சுமிஹர் 

ஒவ்வொரு முறையும் அவள் திட்டிக்கிட்டு எழும்போதும் “முருகா” என்று தவறாமல் சொல்லிவிடுவாள். பதட்டமிருந்தாலும் போர்வையோடு அதை உதறிவிட்டு அப்பாவிடம் செல்வதுதான் வழக்கம்.  இரவானால்  முருகன் தன்னிடம் வந்து பேசுவதாக சொல்லுவாள். தினம் ஒரு கதை. கதைகள் எப்போது தொடங்கியது என்று மறந்திடும் அளவுக்கு முருகன் அவள் கனவுகளில் வந்து கொண்டிருக்கிறான்.

மரங்கள் நிறைந்த வனத்தின் ஊடாக நடந்து கொண்டே செல்கிறார்கள்.  கதையை முடிக்கும் வரை இடையில் யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பது அவளின் நிபந்தனை. அதுவும் அப்பா எப்போதும் எதையோ கேட்டுக்கொண்டே இருப்பார். அதனால் கட்டளைக்கு பணிந்து அமைதி நிலவியது.

அவர்கள் அந்த வனத்தினை விட்டு வெளியேறும் பாதையை கண்டு பிடித்துவிட்டனர். உடன் வந்த முருகன் “இங்கிருந்து நீ உன் வீட்டுக்கு செல்லலாம்” என்றான். இதுவரை சிரித்துப் பேசி வந்தவளின் முகம் சுருங்கி விட்டதை  அறிந்த முருகன் அதற்கு பதில் சொல்ல நினைத்து பின் வேண்டாம் என்று நிறுத்திக் கொண்டது எதற்கு என்ற காரணங்கள் தெரியாது. முருகனை பற்றிக் கொண்ட பிஞ்சுக் கைகள் “எங்க வீட்டுக்கு வரியா” என்று கேட்டதற்கு தலையை வேகமாக ஆட்டி சிரித்துக் கொண்டான். “நாளைக்கு அவன கூட்டிட்டு வரேன்” என்று கதையை முடித்தவள் உடனே ஒரு கேள்வியையும் கேட்டாள். “உனக்கெல்லாம் முருகன் கனவுல வந்தது இல்லையா அப்பா” என்று சொல்லிக்கொண்டே தூக்கி கொள்ளுமாறும் கைகளை மேல் ஏற்றினாள்.

வாழ்நாளில் ஆறுமுகம் இதுவரை அப்படி கனவுகள் ஏதும்  கண்டதில்லை. அதுவும் அவர் மகளின் கனவுகளுக்கு எப்படி ஈடு கொடுக்க முடியும். கனவுகளில் முருகனுடன் பேசுவதாகச்  சொல்லும்போது “அப்பனுக்கு இதுவரை காது கொடுக்கலனாலும் மகளோட பேச்சப் பாரு” என்று விளையாட்டுத்தனமாக மனைவியிடம் சொல்லும் போது மகள் கோவித்துக் கொள்வதும் அழகு.அந்த முகத்தை பார்க்க எத்தனை வருடம் தவமிருந்தார்.  ஆறுமுகத்தின் ஐம்பது வயதில்தான் மகள் வள்ளியாய்  வந்து தோளை  அணைத்துக் கொண்டாள். அவளின் கனவுகள் பற்றிய பேச்சு எப்படி சலித்துவிடும்.

அலைகள் ஓயாத கடற்கரையில் அமைந்திருக்கும் கோவிலுக்கு காலையில் நடை திறந்ததும் ஆறுமுகம் கூடை நிறைய விசிறிகளை எடுத்துக்கொண்டு ஸ்பெஷல் தரிசனம் கவுன்ட்டர் அருகில் வியாபாரத்திற்காக நின்று விடுவது வழக்கம். “ஒன்னு பத்துரூபா ..ஒன்னு பத்து ரூபா” என்று கைகளில் அந்த விசிறியை வைத்து பெயர் தெரியாது லைனில் நிற்பவர்களுக்கு விசிறிக்கொண்டே இருப்பார். நேரம் ஆக ஆக அறுபது வயதை நெருங்கிய உடல் சோர்வைக் கொடுக்க நா வரண்டு போய் கைகளில் விசிறியை மட்டும் வைத்து லைனில்  நிற்பவர்களின் பார்வையில்  படும்படி நீட்டிக் கொண்டிருப்பார். அவரை போன்ற பலரை அங்கு காணலாம். பெரிய வருமானம் இல்லை என்றாலும் உடல் ஒத்துழைக்கும் வேலையாக அமைந்தது, அவ்வளவுதான். முதல் பூஜைக்கு வந்தால் இரவு நடை சாத்தும் வரை அந்த கவுன்ட்டர் தரிசனம் அருகிலேயே நின்று விற்றுக் கொண்டிருப்பார்.

கோவில் நடைபாதையில் தன் நண்பன் சாரதியினுடைய  சாமி படங்கள் விற்கக்கூடிய கடைக்கு கூட்டி போய் வள்ளியிடம் ஆறுமுகம் “உன் கனவுல வந்து பேசும்ல முருகன், இதுல எது கணக்கா இருக்கும்” என்று கேட்டவருக்கு பதில் சொல்வதற்காக  அங்கிருந்த படங்களை நின்று நிதானமாகப் பார்த்துக்கொண்டே சென்றவள் குழந்தை முருகனிடம் ரொம்ப நேரமாக நின்றிருந்தாள். ஆறுமுகம் “இது மாட்டமால” என்று கேட்க, காது கொடுத்து அதை கேட்காதவள் போல் அடுத்த போட்டோவுக்கு நகர்ந்தாள். சாரதி ஆறுமுகத்தைப் பார்த்துச் சிரித்துக்கொண்டார். “உன் புள்ள எப்புடி கத சொல்லுதுடே, எங்க முருகன்ல சொல்லுது” என்று சொன்ன சாரதி தான் திருச்செந்தூர் வந்ததிலிருந்து ஆறுமுகத்திற்கு சொந்தம் போன்ற ஆறுதல்.

“ஒண்டிக் கட்டையாவே காலத்த ஓட்டிரலாம்னு நெனைக்காதீங்க அண்ணா” என்று ஆறுமுகத்தின் மனைவி பேச்சு வாக்குல பொண்டாட்டி வேனுங்குரத ஞாபகப்படுத்துரேன்ற பேருல சாரதிக்கு அவங்க அம்மா அப்பா இல்லாத நினைப்ப இழுத்து விட்டுரும். சாரதி கடை திறக்காத நேரங்களை கடற்கரையில் கழிப்பது தான் வழக்கம். “கடலுனா பாத்துட்டே இருப்பையோ” என்ற ஆறுமுகத்தின் கேள்விக்கு  சாரதி எல்லாத்துக்கும் பதிலென சிரித்துக் கொள்வார். அதற்கு பின் இருக்கும் கதை சாரதிக்கு மட்டும் தெரிந்ததே. அதை இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொண்டது இல்லை .ஆறுமுகத்தின் அந்த கேள்வியை  உள்வாங்கிக் கொண்டது போல கடல் வீச்சு. “கடலுனா பாத்துட்டே இருப்பையோ” என்பதை சாரதியின் காதிற்குள் கொண்டுவந்து சேர்த்தது மீண்டும் மீண்டும்.   .

மதிய சாப்பாட்டிற்கு எப்போதும் ஆறுமுகம் வீட்டிற்கு வந்து விடுவார். “முருகன் பாத்தா தெரியனும்ல அதுனால தான் கோவில் பக்கத்துலையே இருக்கோம்” என்ற அம்மாவின் பேச்சிற்கு ஊம் கொட்டும் வாய் அன்று நேரத்திற்கு வராத அப்பாவை பற்றி கேட்க “இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாரு” என்று மட்டும் சொல்லி வைத்தவளுக்கு கோவிலில் ஆறுமுகம் மயக்கம் போட்டு விட்டார் என்று கூட்டி வந்தனர்.

“ஒன்னும் இல்லடே, வெயிலு” என்று சமாளித்தாலும் அன்றிலிருந்து ஆறுமுகத்திற்கு உடல் ரீதியாக தன் உடம்பில் இருக்கும் குறை என்ன என்ற கேள்வி எழுந்தது. அதன் பிறகு இரண்டு மூன்று முறை மயக்கம் போட்டு இருந்தாலும் அதை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்தார். வேண்டி உருகி தன் குறை நீக்கச் சொல்லும் லட்சக்கணக்கான பக்தர்களுள் ஆறுமுகமும் அந்த முருகனின் காதிற்கு தன் கஷ்டத்தை சொல்லாமல் இல்லை. எத்தனை முகங்கள் ஆறுமுகத்தை தினமும் கடந்து போகிறது எத்தனை வேண்டுதல்கள். எத்தனை நம்பிக்கைகள். எத்தனை எத்தனை ..எத்தனை.. என்று முருகன் நிரம்பிக் கொண்டிருக்கும்போது ஒரு கட்டத்தில் முருகனிடம் முறையிடுவதை நிறுத்திக் கொண்டார். “என் கவலைய தீக்கத்தான் முருகன் இத்தன பேர என்னத் தாண்டி சாமி பாக்க வைக்குறான்” என்று நினைத்துக் கொள்வார்.

திருச்செந்தூருல செத்தாலும் புண்ணியம் தாண்டே நீ ஏன் ஒலட்டிட்டு இருக்க என்ற சாரதியின் சிரிப்புக்கு “வாழ்க்க சத்துக்கு கொடுக்கலேனாலும் பரவால சோத்துக்கு கொடுக்கனுல” என்பார் ஆறுமுகம். வீட்டிற்கு தெரியாமல் சாரதியுடன் ஒருமுறை  மருத்துவமனை சென்று பார்த்து வந்தார். “ஒன்னும் இல்ல சரியாகிடும் சத்தா சாப்பிட்டு கவலை இல்லாம இருங்க” என்று டாக்டர் சொன்னதாக சாரதி வள்ளியிடம் சொன்னதற்கு அன்று அவள் கண்ட கனவை தன் பங்கிற்கு சாரதிக்கு சொல்லத் தொடங்கினாள்.

“ரெண்டு பேரு கடலுக்குள்ள தெரியாம மாட்டிக்கிட்டாங்க, அல பெருசு பெருசா அடிக்க யாராலயும் கடலுக்குள்ள போய் காப்பாத்த முடில, நேரம் போகப் போக அவங்களோட சத்தமும் கொறஞ்சு போய் தண்ணிக்குள்ள போய்ட்டாங்க. அவங்கள காப்பாத்த முடியாம கடலையே பாத்துட்டு  கரையில நின்னுட்டு இருந்த அவங்க பையன தூக்கிக்கிட்டு வந்து இனிமேல் நான் வளக்க போறேன்னு முருகன் சொன்னான்” என்ற வள்ளி சாரதியின் கை பிடித்து  “அந்த பையன நான் எங்கையோ பாத்துருக்கேன் சாரதி மாமா….”  என்றாள். சின்னப் புள்ள எப்படி வாயடிக்குது பாரு நேத்து டிவில போட்ட செய்திய அப்படியே சொல்றா என்ன முருகன் கனவு காணுதோன்னு அம்மா கிண்டலுக்கு சிறு வயதில் தாய் தந்தையை கடலுக்கு பலி கொடுத்து ஏதும் செய்ய முடியாமல் அதிர்ச்சியோடு  நின்றிருந்த அதே கண்களுடன்.   வள்ளியின் இறுக்கப் பிடியிலிருந்த சாரதியின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.

தரிசன வரிசையில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்ககையில் விசிறியுடன் நின்றிருந்த ஆறுமுகத்திற்கு மனதில் உடல் ரீதியான பயம் தொத்திக்கொண்டு “செத்துட்டா.. நம்ம குடும்பம் அடுத்து என்னா பண்ணும்,  நம்ம அவங்களுக்கு என்னத்த சேமுச்சு வச்சுருக்கோம், பொண்டாட்டி வள்ளிய பாத்துப்பா இருந்தாலும்.. இந்த விசிறிய வித்து இன்னும் எத்தனைய சம்பாரிக்க முடியும், நின்னு சம்பாதிக்கிற அளவுக்கு தெம்பு இருந்துருந்தா நான் ஏன் இத வித்துட்டு இருக்க போறேன், சொந்தமா ஒன்னும் இல்லையே” என்று அவருக்குள் பல கேள்விகள் எழும்பி அரட்டிக் கொண்டேயிருந்தது. ஆறுமுகம் கையில் வைத்திருந்த விசிறியை இன்னும் விற்காமல் இருந்த விசிறிகளுடன் கூடைக்குள் போட்டுவிட்டு நடுங்கும் கால்களுடன் கல்திட்டில் அமர்ந்தார். இப்படி ஒரு போதும் இதற்கு முன் ஆறுமுகம் நினைத்தது இல்லை. உடல் அவர் பேச்சை கேட்க நிறுத்தியது முதல்தான் இந்த பிரச்னை ஆரம்பித்தது.

“ஐயா ..விசிறி கொடுங்க” உட்கார்ந்திருந்தவர் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை இளைஞனின் வேகத்திற்கு ஈடாக கூடைக்குள் இருந்த விசிறியை எடுத்துக் கொடுத்து கையில் காசை வாங்கிக் கொண்டார். இன்று வீட்டிலிருந்து கிளம்பும்போதே வள்ளி கேட்ட அந்த மூக்குத்தி ஒன்றை வாங்கிக் கொண்டு போக வேண்டும் என்ற முனைப்பின் உந்துதல் இதுவரை உலட்டிய அனைத்தையும் எட்டி உதைத்தது.

“ஒன்னு பத்து ரூபா.. ஒன்னு பத்துரூபா..” என்று சத்தமாக விற்கத் தொடங்கியதை சாரதி மகிழ்ச்சியுடன் பார்த்தார்.

எப்பொழுதும் விற்க வேண்டிய, விற்று முடித்,த கணக்கு வழக்குகள் பெரிதும் வைத்துக் கொள்வதில்லை ஆறுமுகம். இன்று இன்னும் எத்தனை இருக்கிறது, எத்தனை விற்றிருக்கிறது, கையில் எவ்வளவு இருக்கிறது,  என்ற நினைப்பும் புதிதாக சேர்ந்திருந்தது. அது என்ன ஏன் பிள்ளைக்கு நான் வாங்கிக் கொடுக்காத மூக்குத்தி என்று இன்னும் சத்தமாக விசிறியை விற்கத் தொடங்கினார்.

கையில் வைத்திருந்த கூடைக்குள்ளிருந்து விசிறிகள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கி வெளிகொண்டு வந்த  மகிழ்ச்சி நீண்ட நேரத்திற்கு இல்லை. மீண்டும் மண்டைக்குள் ஓடிய விசயங்கள் குரல்வளையினை நெருக்கி  வார்த்தைகளை கொன்று கொண்டிருந்தது. கண்கள் மயக்கம் கொள்ளும் அறிகுறியாக உடல் வேர்க்கத் தொடங்கியிருந்ததை  அறிந்து மீண்டும் சாய்வுக்கு தோதான கல்தூனை துணைக்கு  அழைக்க கோவிலை அழகுற செய்யப்  பொருத்தப்பட்டிருந்த இரவுக்கான விளக்குகள் தலையில் இறங்குவது போல இருந்தது. முருகனைப் பார்க்க குறையாதக் கூட்டம் அனாதையாக ஆறுமுகத்தை ஒரு மூலைக்கு தள்ளியிருந்தது.  விற்காமல் மீதியிருந்தவைகள் கவலைகளையும் இன்னும் இன்னும் என்று ஓட வேண்டிய தூரத்தை நினைவுபடுத்தும் விதத்தில் கையில் எவ்வளவு வச்சுருக்க அந்த பணம் பத்துமா மூக்குத்திக்கு என்று எண்ணிப் பார்க்கச் சொல்ல பையில் இருந்த பணத்தை எடுத்து எண்ணத் தொடங்கும் போதே மயக்கம் கண்களை சொருகியது.

உடல் முழுவதும் பரவத் தொடங்கிய வலி ஏனோ அவருக்கு  இன்று நாம் கண்டிப்பாக செத்து விடுவோம் போல தோன்றியது. எப்படியோ மிச்சமிருந்த விசிறிகளை விற்று வள்ளி கேட்டதை வாங்கிக்கொண்டு போய் கொடுக்க வேண்டும் என்கிற வைராக்கியம் இருந்தாலும் நாளைக்கு நாம் இல்லாதபோது வேண்டியதை எதிர்பார்த்து அப்பா இருந்துருந்தா வாங்கி தந்துருப்பாருன்னு ஏமாந்து போகுங்கிற நெனப்பும் எந்திரிக்க விடாமா செய்ய கண்கள் சொருகியது. கண்கள் இருளுக்குள் போக போக அதை தடுத்திர முடியாமல் பிடிகூண்டினை ஒத்திருந்தவைகளை என்னவென்று தெரியாது அதனுள் கேட்பார் யாருமின்றி சுற்றிக் கொண்டிருந்தவரை நோக்கி வந்த காற்றை புயல் என்று தெரியாது அனுபவித்தவருக்கு அது எங்கிருந்து வருகிறது என்று அறிய வேண்டும் அல்லது அது என்னவாக இருக்கும் என்கிற கேள்வி எழுந்து அதன் விசையை நோக்கி அவரால் எவ்வளவு வேகத்தில் செல்ல  முடியுமோ அதை அடைந்திட விரைந்தவருக்கு அப்புயல் பெரிய விசிறியின்  வெளியாய்  உருமாறிக்கொண்டிருப்பதை கவனிக்கத்  தொடங்கி திகைக்க வைக்கும்   அப்புயலின் விசையினை  கொண்டிருக்கும்   பிடியின் நுனி தோகையென நீண்டு ஆறுமுகத்திற்காக  விசிறுவது யாராக இருக்கும் என்று அறிந்திட விளைந்தவரிடமிருந்து விலகிக்கொண்டே இருக்க  ஆடும் மயிலேறி இதுவரை விளையாடிய அம்முகத்தை அறிந்தவராய் கண்கள் கூச்செறிய  “முருகா” என்று படுக்கையிலிருந்து அரண்டு எழ அருகில் ஏதும் அறியாது படுத்திருந்த மகள் முருகனுடன் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தாள் .அவளை மீறி ஆறுமுகத்திற்கு அவள் அணிந்திருந்த மூக்குத்தி கண்களை கவர்ந்தது.