Author: பதாகை

பதிலடி – அரிசங்கர் சிறுகதை

அரிசங்கர்

ஐய்யனாருக்கும் முதலாளிக்கும் ஆகாது என்று பழனிக்கு வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் கழித்தே தெரிந்தது. தன்னை வேலைக்குச் சேர்த்ததும் ஐய்யனாரை சீக்கிரம் கணக்கு முடிக்கத்தான் என்று தெரிந்துகொண்டான். இதை ஏதோ உளவறிந்தெல்லாம் அவன் கண்டுபிடிக்கவில்லை. ஐய்யனார் இல்லாதபோது முதலாளியே வருவோர் போவோரிடமெல்லாம் சொல்லியதுதான். முதலாளியின் பல நண்பர்கள் கடைக்கு வந்து பலமணி நேரம் முதலாளியிடம் பேசிக்கொண்டிருப்பார்கள். வியாபாரமெல்லாம் பெரிசாக ஒன்று இருக்காது. அது வெறும் அரிசிக்கடைதான். முதலாளி ஒரு பொழுதுபோக்குக்குதான் இதை நடத்துகிறார் என்று பழனி நினைத்தான்.

பழனிக்குத் தெரியவில்லை, ஐய்யனார் நல்லவனா, கெட்டவனா என்று. அவன் வேலைக்கு என்று வரும்போதே ஐய்யனாருக்கு நிச்சயம் தெரியும் தனக்கு மாற்றாகத்தான் புதிதாக ஒரு ஆள் வந்துள்ளான் என்று. இருவருக்கும் நான்கு அல்லது ஐந்து வயது வித்தியாசம் இருக்கும். பழனிக்கு 17 வயது. கொஞ்சம் சதைப்பிடிப்பான உடல். நல்ல உயரம். ஆனால் ஐய்யனாரோ நல்ல ஒல்லியான உடலுடையவன். ஆனால் நல்ல பலசாலி. இருபத்தஞ்சி கிலோ அரிசி மூட்டையை அவன் தூக்கிச் செல்வதைப் பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். மூட்டையைத் தூக்கி தோளில் போட்டுக் கொள்வான். ஆனால் அதைப் பிடித்துக் கொள்ளமாட்டான். அதைத் தோளில் வைத்துக்கொண்டே சிரித்துக் கொண்டு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பான். அப்படி ஒன்று அவன் தோளில் இருக்கும் உணர்வே அவனுக்கு இருக்காது. பழனி வேலைக்கு வந்ததும் முதல் இரண்டு நாள் அவன் பழனியிடம் எதுவுமே பேசவில்லை. மூன்றாம் நாள் மதியம் முதலாளி இல்லாத நேரம் பார்த்து அவன் பழனியிடம் பேச்சு கொடுத்தான். அவன் நிலையையும் குடும்ப கஷ்டத்தையும் அறிந்து அவனிடம் பிறகு சகஜமானான்.

முதலாளி ஐய்யனாரை பற்றி சொல்லும் பெருங்குறை, ‘அவன் வெளியே போனால் சீக்கிரம் வரமாட்டான்’ என்பதுதான். மேலும் சமீபகாலமாக அவன் மேல் சிகரெட் நாற்றமும் சில முறை சாராய நாற்றமும் அடிப்பதாகக் கூறுவார். பழனிக்கும் தெரியும் ஐய்யனார் இதெல்லாம் செய்கிறான் என்று. ஆனால் அவன் இதுவரை எந்த வேலையையும் செய்யமாட்டேன் என்று சொன்னதே இல்லை.

ஒருநாள் மதியம் முதலாளி இல்லாதபோது திடீரென ஐய்யனார் அழ ஆரம்பித்தான். பழனிக்கு ஒன்றும் பிரியவில்லை. மெதுவாக அவனிடம் விசாரித்தான். ஐய்யனார் தன் காதல் கதையை சொன்னான். பெரிதாக எதிர்பார்த்த பழனிக்கு அந்தக் கதை சப்பென முடிந்ததில் கொஞ்சம் கடுப்புதான். அந்த வயதில் காதலிப்பதை விடக் காதல் கதையைக் கேட்பதிலேயே ஒரு அதிக விருப்பம் இருக்கும். இது ஒர தலைக் காதல். ஐய்யனார் பார்த்தான், பார்த்துக்கொண்டிருந்தான், அப்படியே இருந்துவிட்டான். அந்தப் பெண்ணுக்கு திருமணம் முடிந்துவிட்டது. அவ்வளவுதான் கதை. இதற்கு இவன் இவ்வளவு அலம்பல் செய்கிறானா என்று பழனி சற்று இளக்காரமாகக் கூடநினைத்தான். ஆனால் அதை காட்டிக்கொள்ளவில்லை.

வீடுகளுக்கு அரிசியைக் கொண்டுபோய் கொடுக்க பழனியே அதிகமாகப் போக ஆரம்பித்தான். முதலாளி ஐய்யனாரை அனுப்பவில்லை. அவனை வேலையை விட்டு அனுப்ப அவர்   நாள் பார்த்துக் கொண்டிருந்தார். அது ஐய்யனாருக்கும் தெரியும். இங்கிருந்து போனால் அவனை வேலைக்கு எடுத்துக் கொள்ள பல கடை முதலாளிகள் காத்திருந்தார்கள். அவன் வேலை அப்படி. ஆனால் அவன் அந்தக் கடையிலேயே ஒட்டிக்கொண்டிருக்கக் காரணம் அந்தப் பெண்தான். அவள் தினமும் அந்த வழியாகத்தான் வேலைக்குச் செல்வாள்.

அன்று மதியம் ஐய்யனார் சாப்பிட்டுவிட்டு வந்ததும் முதலாளி சாப்பிட புறப்பட்டார். வழக்கம் போல பழனி   அரிசி மூட்டை மேல் அமர்ந்திருந்தான். ஐய்யனார் முதலாளி இருக்கையின் அருகில் இருந்த எஃப்.எம் ஐ இயக்கிவிட்டு வந்து ஒரு மூட்டையின் மீது அமர்ந்தான். பழனி சோகமாக இருப்பதைப் பார்த்து, “என்னடா” என்றான்.

அவன் பதில் எதுவும் சொல்லவில்லை. அமைதியாகப் பாட்டுக்கேட்டுக்கொண்டு பேப்பர் படிக்க ஆரம்பித்தான். சிறிது நேரம் கழித்து கொஞ்சம் கடுப்பாக பழனியிடம், “டேய்… என்னானு கேக்கறன்ல…” என்றான்.

பழனி சொல்ல ஆரம்பித்தான். அவன் சோகமாகச் சொல்கிறானா அல்லது கோவமாக சொல்கிறானா என்று ஐய்யனாருக்கு புரியவில்லை.

“அண்ணே, நீங்கச் சாப்பிடப் போனதும் ஒரு போன் வந்தது. முதலாளி வெங்கட்டா நகர்ல ஒரு வீட்டுல போய் அரிசி கொடுத்துட்டு வாடானு சொன்னாரு.”

“எது அந்த ரோஸ் அப்பார்ட்மெண்ட்டா” என்றான் ஐய்யனார்.

குனிந்து கொண்டிருந்த பழனி இப்போது நிமிர்ந்து ஐய்யனாரை பார்த்து, “ஆமா” என்றான்.

“அப்பறம்” என்றான் ஐய்யனார்.

“நான் கஸ்டப்பட்டு அஞ்சி மாடி மூட்டைய தூக்கினு போய் அந்த வீட்டுப் பெல்ல அடிச்சன். கத துறந்தவரு என்ன பாத்துட்டு உள்ள கொண்டுவந்து போடுன்னாரு. நான் போய் சமையல் ரூம்ல வெச்சிட்டு திரும்பறன், அந்த வீட்டம்மா என்ன மேலயும் கீழயுமா பாத்துட்டு அப்பறம் கதவ துறந்தவர பாத்து, ‘அவாளெல்லாம் ஏன் உள்ள விடறேள், சாயங்காலம் பூஜைக்கு வீட்ட முழுக்க காலைலதான் கழுவி விட்டன். இப்போ ஏன் எனக்கு ரெண்டு வேலை வைக்கறேள்னு’ திட்டனாங்க. அவங்க திண்றதுக்குதான நான் அரிசி எடுத்துனு போனேன். அதுக்குக்கூட அவங்க வீட்டுக்குள்ள நாம போகக்கூடாதா?” என்றான் பழனி.

“இத முதலாளி கிட்ட சொன்னியா?” என்று கேட்டான் ஐய்யனார்.

“அவருகிட்ட சொல்லி என்ன ஆவப்போவுது, சொன்னாலும் அவர் இன்னா சொல்ல போறாரு ‘அவங்க சொல்றதெல்லாம் நீ ஏண்டா காதுல போட்டுக்குற, நமக்கு வியாபாரம் தான் முக்கியம்னு’ சொல்லுவார்” என்றான்.

சத்தமாகச் சிரித்த ஐய்யனார், “ஒரே மாசத்துல அந்தாள புரிஞ்சிக்கினடா நீயி” என்றான்.

அவனைக் கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்த ஐய்யனார், “சரி வுடு நாம் பொழப்பதான் பாக்கனும், காசு இல்லாதவனே ஜாதி வெறி புடிச்சி அலையறான். அவன் காசு இருக்கறவன் சொல்லவா வேணும். எல்லா முதலாளியும் காசு இருக்கறவனுக்குதான் கால கழுவுவானுங்க. வேலை செய்யறவன பத்திலாம் அவனுகளுக்கு கவலையே இல்ல” என்றான்.

ஆனால் பழனி அமைதியாகவே இருந்தான். அவனை சமாதானப்படுத்தும் விதமாக ஐய்யனார் பேசினான்.

“நாமதான் இவன் வேலைய விட்டு தூக்கிடுவானோன்னு பயந்துகினே இருக்கோம். ஆனா அவனுகளுக்கு நம்மள விட்டா நாதியில்ல. ஏன் என்னைய எடுத்துக்கோ, என்ன அனுப்பனும்ன்னுதான் உன்னைய வேலைக்கு வெச்சான். என்ன அனுப்பிட்டானா சொல்லு. ஏன் தெரியுமா, அவனுக்கு உன் மேலையும் சந்தேகம், நீ இருப்பியா ஓடிடுவியான்னு. நான் சொல்றதுலாம் ஒண்ணுதான் எவனையும் நம்பாத. உன் உழைப்ப மட்டும் நம்பு” என்றான்.

பழனி அமைதியாகவே இருப்பதைக் கண்ட ஐய்யனார் சற்று எரிச்சலுடன், “இப்பன்னாடா வேணும் உனக்கு, அந்த வீட்டுக்காரன ஓடவுடனும் அவ்வளவோதான, அடுத்த மாசம் வரட்டும் நான் பாத்துக்கிறன்” என்றான்.

பழனிக்கு உண்மையாகவே வேலையை விட்டுப் போக வேண்டும் போல்தான் இருந்தது. உடனடியாகச் செல்ல முடியாது. சேர்த்து விட்டவருக்குப் பதில் சொல்ல வேண்டும். பிறகு அவரிடம் உதவியும் கேட்க முடியாது. பல்லைக் கடித்துக்கொண்டு கொஞ்ச நாள் ஓட்ட வேண்டியதுதான் என்று முடிவெடுத்தான். ஐய்யனாரும் சில நாட்களாக முன்பு போல் இல்லை. ஒழுங்காக இருந்தான். முதலாளிக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஐய்யனாரை போன்ற ஒரு வேலைக்காரனை விட்டுவிட எந்த அறிவுள்ள முதலாளியும் விரும்பமாட்டான்.

ஒரு மாதம் ஓடியது. ஒரு நாள் மதியம் முதலாளி சாப்பிடக் கிளம்பும் நேரம் போன் அடிக்க, அதை எடுத்த முதலாளி வழக்கம் போல் வழிந்தார். அவர் அப்படி வழிந்தால் எதிரில் பேசுவது வாடிக்கையாளர் என்று புரிந்துகொள்ள வேண்டியது தான். “சரிங்க”

“………….”

“உடனே அனுப்பிடறன்”

“……………………………………….”

“அது பரவாயில்லங்க, போன தடவ குடுத்த அதே அரிசியே அனுப்பறன்”

“…………………………”

“இதோ பையன அனுப்பிட்டன், பத்து நிமிஷத்துல அங்க இருப்பான்” என்று போனை வைத்தார். பிறகு பழனியை பார்த்து, “டேய்… அந்த ரோஸ் அப்பாட்மெண்ட்ல பொன்னி ஒரு மூட்டைய போட்டுட்டு வா, சீக்கிரம் வா” என்று சொல்லிவிட்டு மதியம் சாப்பாட்டுக்குச் சென்றார். முதலாளி மறைந்ததும் இதற்காகவே காத்திருந்தது போல் மூட்டையிலிருந்து துள்ளி குதித்தான் ஐய்யனார்.

“டேய் பழனி… நீ இரு நான் போய்ட்டு வரன்,” என்றான் ஐய்யனார்.

“வேணாம்ன்னே அவர் வந்த கத்தப் போறார்,” என்றான் பழனி.

“அத நான் பாத்துக்கிறன்” என்று சொல்லிவிட்டு அரிசி மூட்டையை எடுத்துக்கொண்டு சென்றான் ஐய்யனார். அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான் பழனி.

அரிசியை எடுத்துக்கொண்டு கிளம்பிய ஐய்யனார் நேராக ராஜா தியேட்டர் அருகில் இருந்த முனியாண்டி விலாஸுக்கு சென்று நன்றாகச் சாப்பிட்டான். சைக்கிளை அருகில் இருந்த ஒரு தெரிந்த கடையில் நிறுத்தியிருந்தான். வழக்கமாகத் தான் சாப்பிடும் அளவைவிடச் சற்று அதிகமாகவே சாப்பிட்டான். முழு வயிறு நிரம்பியதும் அங்கிருந்து நேராக ஒரு ஒயின் ஷாப்பிற்கு சென்று ஒரு பியரை வாங்கி வேகமாகக் குடித்துவிட்டு, சைக்கிளை எடுத்துக்கொண்டு குபேர் பஜார், பாண்டிச்சேரியின் பழைய பேருந்து நிலையம் எனச் சுத்திவிட்டு அந்த அப்பாட்மெண்டை அடைந்தான். இப்போது ஐய்யானாருக்கு வயிறு கொஞ்சம் வீங்கியது போல் இருந்தது. ஆனால் தெளிவாகவே நடந்தான். நேராக அரிசி மூட்டையை எடுத்துக்கொண்டு ஒரே நடையாக ஐந்து மாடி ஏறிச் சென்று அந்த வீட்டு பெல்லை அடித்தான். அந்த வீட்டுக்காரர் வந்து கதவைத் திறக்க இவன் வாசனை தெரியாமல் இருக்கத் தலையை குனிந்துகொண்டான்.

அவர் இவனிப்பார்த்து,“தம்பி இப்படி வெச்சுட்டு போப்பா” என்றார்.

இவன் நிமிர்ந்து பார்த்து அவரை ஒற்றைக்கையால் விளக்கித் தள்ளி நேராக உள்ளே நுழைந்தான்.

அவர் “தம்பி, தம்பி, டேய்” எனப் பின்னால் ஓடிவர இவன் சமையல் அறைக்குச் சென்று அரிசியை வைத்துவிட்டு தன் விரலைத் தொண்டை வரை விட்டு வாந்தி எடுத்தான். வாந்தி எடுத்துக்கொண்டு அப்படியே வாசல் வரை ஓடிவந்து வாயைத் துடைத்துக்கொண்டு அவன் பாட்டுக்கு படி இறங்கினான். வீட்டுக்குள் பெருங்கூச்சல் கேட்டுக்கொண்டிருந்தது.

ஐய்யனார் சென்று வேகு நேரம் ஆகியும் வராததால் பழனி படபடப்புடன் இருந்தான். ஏதோ விபரீதமாக நடப்பது போல் அவனுக்குத் தோன்றியது. சாப்பிடச் சென்ற முதலாளி வந்துவிட்டார். ஐய்யனாரை காணாததை கண்டு பழனியுடன், “டேய், அவன் எங்கடா” என்றார். பழனி சொன்னான். உடனே அவர் கோவமாக, “உங்கிட்ட ஒரு வேலைச் சொன்னா அத நீ செய்ய மாட்டியா? அவனுக்கு ஊர் சுத்தாம இருக்க முடியாதே. கொஞ்ச நாள் நல்லா இருந்தானேன்னு நினைச்சேன். மறுபடியும் ஆரம்பிச்சிட்டான், வரட்டும்” என்று தன் இருக்கையில் அமர்ந்து காத்திருந்தார். போன் மணியடித்தது. வழக்கமான சிரிப்புடன் போனை எடுத்த முதலாளியின் முகம் வழக்கத்துக்கு மாறாக மாறத்தொடங்கியது.

“இல்ல… சார்…”

“…………….”

“அப்படியா பண்ணிட்டான், அய்யோ”

“………………………”

“போலிஸ்லாம் வேண்டாம் சார்”

“……………………………………….”

“நான் இன்னிக்கே அனுப்பிடறன் சார்”

பழனிக்குப் புரிந்துவிட்டது ஏதோ பண்ணி விட்டான் ஐய்யனார் என்று. முதலாளி தொலைபேசியில் காலில் விழாத குறையாக பேசிக்கொண்டிருந்தார். தொலைபேசியை வைத்த முதலாளி பழனியை எரித்துவிடுவது போல் பார்த்தார். அவன் அமைதியாக இருந்தான். இருவருமே ஐய்யனாரின் வருகைக்காகச் சாலையை பார்த்தவாறு காத்திருந்தனர்.

கூடு- கலைச்செல்வி சிறுகதை

கலைச்செல்வி

எனது பெருவிரலோடு தன் சின்னஞ்சிறு கைகளை கோர்த்துக் கொள்வதில் அவனுக்கு பெருவிருப்பமிருந்தது. அது கிட்டத்தட்ட அதிகாலை பனிக்குள் ஒளிந்துக் கிடக்கும் மலையடுக்குகளை சூரியன் அணுகி நெடுநேரம் கழிந்த பிறகும் நாளிக்குள் மூழ்கிக் கிடக்கும் விருப்பத்தையொத்தது. அதனாலேயே பகல் கனியத் தொடங்குவது அவனுக்கு வாதையாக இருந்தது. பிறகு அதை விட பெரும்வாதைகள் அங்கு நிகழத் தொடங்கின. மரங்களை வெட்டியதாகவும், பறவைகளை சுட்டதாகவும், பன்றிகளை உண்டதாகவும் அவர்கள் வெவ்வேறு காரணங்களை குறிப்பிட்டாலும் குறிகள் எங்கள் நிலத்திற்கானவை என்பதை உணரவியலாத வயது அவனுக்கு. மேற்கு வானில் மறைய எத்தனிக்கும் சூரியனின் செந்நிற ஒளிக்கீற்றுகளை போல நாங்கள் இரத்தம் சிந்தத் தொடங்கியிருந்தோம். அவனோ காடெங்கும் திரிந்தலைந்தலையும் வேட்கை கொண்டவனாக வளரத் தொடங்கினான். உயர்ந்த நெடிய தோற்றம் கொண்டவன் அவன். கரிய நிறமும் சற்றே வரிசை தவறிய பற்களுமாய் இருப்பான். கொழுத்து விளைந்த வயக்காட்டை இரவு நேரங்களில் அவனிடம் நம்பிக்கையாக ஒப்படைக்கலாம். சிறுத்தையின் காலடித்தடத்தில் தன் படர்ந்த பாதச்சுவடை ஒற்றி எடுப்பதில் பெருவிருப்பம் கொண்டிருந்தான்.

அன்று ஆபிசர்கள் கடமான் தேவைப்படுவதாக சொல்லியனுப்பியிருந்தனர். சமவெளிக்கும் எங்களுக்குமான இணைப்பை இவர்களிடமிருந்து நாங்கள் தொடங்கிக் கொண்டதெல்லாம் ஒரு காலம். எப்படியாவது இவர்கள் இணக்கமாகி விடமாட்டார்களா என்று ஏங்கிக் கிடக்கும் காலமிது. அசைவை நோக்கி குத்தீட்டியை எறிவது ஒன்றும் கடினமல்ல. கடமான் தட்டுதடுமாறி சொப்பங்குழிக்குள் விழுந்திருந்தது. கிடைத்த கிளைகளிலும் பிடிமானங்களிலும் கால் வைத்து புதர் அப்பிக் கிடந்த பள்ளத்தினுள் இறங்கினான். நின்று நிதானித்து விருந்து பரிமாறுமளவுக்கு கொழுத்த மான் அது. இவனை கண்டதும் துள்ளியெழ முயன்று, இயலாமையில் மடங்கியது. அதன் தொடையில் குத்தி நின்ற குத்தீட்டியின் வழியே குருதி பெருகிக் கொண்டிருந்தது, அப்போதுதான் அதன் வயிற்றை கவனித்திருக்க வேண்டும். நல்லவேளையாக உள்ளிருக்கும் குட்டிக்கு அடி விழுந்திருக்காது என்ற ஆறுதல்பட்டுக் கொண்டான். குத்தீட்டியின் காயம் வலி ஏற்படுத்தாதவாறு நோகாமல் ஊனான்கொடியால் அதன் கால்களை கட்டி சாக்கில் சாய்த்து வைத்து சாக்கை கயிற்றில் இணைத்தான். கூட்டாளிகள் புன்னைமர கமலையில் கயிறு கட்டி இழுக்க, கடமான் மேலே வந்து சேர்ந்தது.

சூரியன் மலைகளுக்குள் ஒளிந்துக் கொள்ள எண்ணிய தருணத்தில் ஆபிசரின் ஜீப் வந்திருந்தது. கடமான் கண்களுக்கு அகப்படவேயில்லை என்று வாதிட்ட இவனுடைய துணிச்சல் எனக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது. குத்தீட்டியின் காயத்தில் இருமுளிச்சாறை பிழிந்து காயம் ஆற்றி அதை ஓட்டி விட்ட பிறகும் நான் நடுங்கிக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் அவனோ இந்நேரம் அது குட்டி ஈன்றிருக்கும் என்று கணித்துக் கொண்டிருந்தான்.

யானையின் விநோதமான பிளிறலில் மலை அதிர்ந்தபோதும், கொன்றையில் நீர்மத்தியை தள்ளிக் கொண்டு காற்று எழுந்து வீசியபோதும், கேளை மான்கள் கத்தியபடி சோலைக்குள் ஓடியபோதும் காதுகளை பொத்திக் கொள்ள சொன்னார்கள். பொத்திக் கொண்டோம்.. அவனும் பொத்திக் கொண்டதாகதான் நினைத்தேன். அப்போது அவனுக்கு திருமணமாகியிருந்தது. பறவைகளின் அலமலந்த கீச்சொலிகளில் நல்லதை முன்கூட்டி தெரிவிக்கும் பெருமாட்டிக்குருவிகளின் கீச்சொலிகள் கலந்திருக்கவில்லை என்பதை அவன் உணர்ந்திருக்க வேண்டும். புற்றுக்கருகில் பிரிக்கிகள் சுற்றிக் கொண்டிருந்தன. எறும்புகள் சாரைசாரையாக அணி வகுத்தன. பெருநரிகள் விருகன்கனை கவ்விக் கொண்டு ஓடின. ஆனால் காட்சிகளை பார்க்கக் கூடாதென்றார்கள். யார் அவர்கள்..? எங்களுக்குள் கோழைத்தனமாக எழுந்த கேள்விகள் அவனை உசும்பி துாண்டியிருக்கலாம். எங்களின் கைகளை பின்புறமாக கோத்து கட்டி விட்டு காலால் உணவுத்தட்டுகளை எங்களிடம் எத்தி விட்டபோதுதான் அவனை சந்தர்ப்பங்கள் முடிவு செய்ய தொடங்கியிருக்கும். காடு மழைக்கானது.. பூமியின் செழுமைக்கானது என்பதில் அவர்களுக்கும் கருத்து வேறுபாடில்லைதான். ஆனால் அவர்கள் காட்டில் மழையும் அவர்கள் வீட்டில் செழுமையும் சேருவதை அவன் உணர்ந்திருந்தான். அவர்களுக்கான மாளிகைகள் மிகவும் சௌகரியமானவை. தங்களுக்காகவும் தங்களின் வழிதோன்றலுக்காகவும் அவர்கள் முன்திட்டமிட்டமிட்டுக் கொண்டே இருந்ததை அவன் அடையாளம் காட்டினான். அவனுக்கு கூட்டாளிகள் நிறைய உண்டாகியிருந்தனர்.

மத்தி மரக்கிளையிலிருந்த கூட்டுக்குள் கழிவையும் மெழுகையும் களிமண்ணையும் குழைத்துப்பூசி தன்னைத்தானே உள்ளிருத்திக் கொள்ளும் பெண்ணாத்திப்பறவையின் வழியே அவன் சிறையை உணர்ந்திருக்க கூடும். அது வெளிவரும் நாளுக்காக ஆணாத்தியைப் போல இவனும் ஆவல் கொண்டிருந்தான். உள்ளிருந்தபடியே அலகை நீட்டி ஆணாத்தியிடமிருந்து புழுவோ, பூச்சியோ, இச்சிப்பழமோ, இளுப்பைத்தோலோ பெற்றுக் கொள்வதை காண அவன் மணிக்கணக்கில் காத்துக்கிடப்பதை நானும் அறிவேன். அவனை தீவிரமானவன் என்றார்கள். வாழ்க்கை தொலைந்து விடக் கூடாது என்பதில் தீவிரமாகதான் இருந்தான். அவர்கள் குழுமமாக இருந்தார்கள். குழுமமாக எதிர்த்தார்கள். இவனையே தலைவன் என்றார்கள். அவனுக்கு தந்தையாக இருப்பதில் எனக்கு பெருமையே. ஆனால் ஊரெல்லாம் உறவான பின் அவன் இந்த உறவையெல்லாம் எப்போதோ கடந்திருக்கலாம்.

பதியில் அன்று குடிசைகள் கொளுத்தி விடப்பட்டபோது அவனது இரு மகன்களும் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தனர். விவசாயத்துக்காக காய்ந்த பயிர்களை கொளுத்துவதும் நிலங்களை மாற்றிக் கொண்டு செல்வதும், எங்களுக்கு புதிதல்ல. என்றாலும் நாங்களும் காய்ந்த பயிர்களாக்கப்பட்டு விடுவோம் என்ற பயத்தில் குஞ்சும் குளுவாணிகளுமாக வெளியேறிய தினத்தில் என் மகன் இல்லை. இல்லையென்றால் தலைமறைவாக இருந்தான். அது அவன் சிறைக்கு செல்வதற்கு முந்தைய காலம்.

உலகின் எங்கோ ஒரு மூலையில் தெளிவான சிந்தையுடன் எங்களின் தலைவிதிகள் தீர்மானிக்கப்பட்டன. இதில் இரத்தம் சிந்துவதும், இனம் அழிவதும் அவர்களைப் பொறுத்தவரை ஒருவித களிப்பான விளையாட்டு. அது கலவியையொத்த களிப்பு. அறிவியல் வளர்ச்சி… முன்னேற்றம் என்ற பதங்களை சாமானிய மக்களும் கைக்கொள்ள தொடங்கியிருந்தனர். போனதெல்லாம் போகட்டும்.. ரட்சகன் நானிருக்கிறேன் என்று யாராரோ அறைக்கூவல் விடுத்தார்கள். ஆனால் சமூக விதிகள் என்ற குப்பிகள் சமூகம் முழுமைக்குமானதல்ல. குப்பிகளில் அடைப்பட்டவர்கள் எளியோர் எனவும் குப்பிகளை கையிலேந்தியவர்கள் வலியோர் என்வும் நாங்கள் புரிந்துக் கொள்ள தொடங்கியிருந்தோம். அறைக்கூவல் விடுப்பவர்கள் குப்பிகளை கையிலேந்தியவர்கள். அவர்கள் காமமும் பசியுமாக அலையும் வசந்தகால கரடிகளையொத்தவர்கள். ஏதேனும் நல்லவை நிகழும் என்று கருதினால் அது எங்களை நாங்களே மிக மலினமாக ஏமாற்றிக் கொள்கிறோம் என்று சுலபமாக அர்த்தப்படுத்திக் கொள்ள முடிந்தது. பிறகு இந்த செயலுக்காக எங்களை நாங்களே வெறுக்கும்படியாகி விடும்.

ஆனால் என் மகனுக்கு தன்னை தானே வெறுக்கும் நிலை நிச்சயமாக ஏற்பட்டிருக்காது. அவன் தன் செயல்பாட்டுக்கான முழு காரணத்தையும் நன்றாக உணர்ந்திருந்தான். தனது போக்கில் மிக நிதானமானவனாகவும் துல்லியமான அமைதியும் கொண்டிருந்தான். பிடிப்பட்டபோதும் முரண்படவில்லை. யார் மீதும் அதிகாரம் செலுத்த அவன் விரும்புவதில்லை.

மத்தி மரம் அசைந்தசைந்து ஆணாத்தியின் ஏக்கத்தையும் தனிமையையும் அதிகப்படுத்திக் கொண்டிருந்து. இனி அது தன் பெண்டின் சிறகை கோதவோ… கொத்தவோ முடியாது. என் மகனின் குற்றம் நிரூபணம் ஆகி விட்டதாம். தீர்ப்பு மரணதண்டனையாம். இதன் பின்னணியில் கேள்விப்பட்டிராத தேசங்களின் சதிகள் அடங்கியிருக்கிறதாம். மொத்தமாக முடிந்த கதைக்கு முடிவுரையென்று எதை எழுதினால் என்ன.? தன் மீது யாரும் அதிகாரம் செலுத்துவதை அவன் விரும்புவதில்லை. நீங்கள் குற்றம் என்று சொல்வதை நான் வாழ்க்கை என்று சொல்கிறேன் என்று மட்டும் கூறினானாம்.

விசாரணை கைதியாக அடைப்பட்டிருந்த ஆறு வருடங்களில் ஒருமுறை மட்டுமே அவனை பார்க்க அனுமதி கிடைத்தது. அந்த சந்திப்பை அவனது மனைவிக்கும் மகன்களுக்கும் விட்டுக் கொடுத்திருந்தேன். அதில் சுயநலமில்லாமல் இல்லை. அவனில்லாத வாழ்க்கையை நான் பழகிக் கொண்டிருக்கும் தருணத்தில் அவனது சந்திப்பு அதை மொத்தமாக கலைத்து போட்டு விடும் என்று மனதார நம்பியதை நான் வெளியே சொல்லவில்லை.

கால்கள் தானாகவே வாழ்ந்த திசையை நோக்கி அழைத்து வந்திருந்தது. கூடவே அவனின் இரு மகன்களும். இன்று அவனுக்கு நாள் குறிக்கப்பட்டிருப்பதை அவன் மனைவிக்கோ மகன்களுக்கோ தற்காலிகமாகவேனும் எட்டவிடாமல் பார்த்துக் கொள்வது என் வரம்புக்குள் இருந்தது. சிறுவர்கள் விளையாடி களைத்து சோற்றுப்பொட்டலத்தை திறந்திருந்தனர். மத்தி மரத்தடியில் கால்களை நீட்டி அமர்ந்துக் கொண்டபோது கண்களும் இயல்பாக மூடிக் கொண்டன

வாழ்ந்த தடங்களெல்லாம் இந்நேரம் பூண்டோடு அழிந்திருக்கும். தாணிக்காயும் சாதிக்காயும் பூச்சைக்காயும் சீவேப்புல்லும் வள்ளிக்கிழங்குமில்லாத எங்கள் வாழ்க்கையை போல மீதி உயிர்களும் தங்களை பழக்கிக் கொண்டிருக்குமோ.. அல்லது பிடிவாதமாக செத்தழிந்து போயிருக்குமோ..? மனதின் நடுக்கம் கூடிக்கொண்டே போனது. இனி பனியில் நனைந்து உதிர்ந்த இண்டம் பூக்களி்ன் வாசனையில் அவன் கலந்து விடலாம். பாறைசந்துகளில் காத்துக் கிடக்கும் கருஞ்சிட்டுகளுடன் அவன் சுதந்திரமாக கதைக்கலாம். அல்லது வெட்டப்படும் மரத்தின் துகள்களுக்குள் கலந்து காட்டின் பெருவெளியில் கரைந்து போகலாம். கண்களிலிருந்து வழிந்த நீரை காற்று கன்னத்தில் கரையாக்கி கொண்டிருந்தது.

மூடிய விழிகளுக்குள் ஆணாத்தியின் படபடத்த சிறகுகள் பரபரத்துக் அலைந்துக் கொண்டிருந்ததை உணர முடிந்தது. பெண்ணாத்தி கூட்டை தகர்க்கும் நேரம் நெருங்கியிருக்கலாம். இஞ்சிப்புல்லின் மணத்தோடு கதிரிலிருந்து சிறிதுசிறிதாக பிரிந்து விழும் சாமைப்பயிரின் வாசம் காற்றில் கலந்து வீசியது. பெண்ணாத்தி சிறை மீண்டிருக்கும். இனி அவற்றின் வாழ்வு காதலாலும் கீச்சொலிகளாலும் நிறைந்து விடும்.

சிறுவர்கள் கையிலிருந்த சோற்றை ஆத்திகளுக்கு சிதற விட, எங்கிருந்தோ பறந்து வந்த காகமொன்று சோற்றை கவ்விக் கொண்டு பறந்தது.

தொலைவிலிருந்த வந்த ஒலி பெருமாட்டிக்குருவியின் கீச்சொலி போலிருந்தது.

***

 

 

 

 

இசைக்கண்ணாடி – வே. நி. சூரியா கவிதை

வே. நி. சூரியா

வெளியே வெயிலின் பிரம்மாண்ட தொட்டில்
ஆடிக்கொண்டிருக்கிறது
இது காலை
தனது பாதங்களை
கனவில் மாட்டிக்கொண்டு ஓடுபவர்களின் பொன்வேளை
ஏதோ தன் காதலை கூற
தயங்கித்தயங்கி வரும் பெண்ணின் முகச்சாயலோடு
காற்றிலிருந்து அலைபோல வருகிறது சோப்பினின் இசைக்குறிப்பு
மேகத்தில் அரங்கு இருக்கிறதாம்
நிசப்தத்தின் தூதுவனொருவன் சொல்லிச் சென்றான்
மகுடிக்காடும் நாகத்தை போல கண்களிலுள்ள பனிச்சிகரங்கள் அசைகின்றன
எதிர்பாராத கணத்தின் மாளிகையொன்று திறந்துகொள்ள
என் தலை ஒரு பியானோவாகிறது
அதையிசைக்கிறது காலத்தின் திருக்கரம்
புராணங்களின் மதில்களை
எகிறி குதித்துவந்து
தூங்குகிறான் கும்பகர்ணன்
தன்னைத்தானே தூக்கி
தன் கையில்
வைத்துக்கொள்கிறது கயிலாயம்
எனக்கு தெரியவில்லை இசை நிற்குமா அல்லது உலகம் நிற்குமா

பசியின் பிள்ளைகள்-1 சரவணன் அபி புனைவு மொழியாக்கம்

தமிழில்: சரவணன் அபி

(Children of Hunger – ஆங்கில மூலம் Karl Iagnemma)

அத்தியாயம் – 1

சௌல்ட் செயின்ட் மேரி, 1822

துப்பாக்கிப்புகையின் மணம் நீரிணை மேல் மிதந்து வந்த அந்த இரவை அவள் நினைவுகூர்ந்தாள். துடிக்கும் நெருப்புத்தழல்கள் ஆங்காங்கே நிழல் போல் நடனமாடும் வழிப்போக்கர்களைச் சித்தரிக்கின்றன; அவ்வப்போது பழங்குடி இளம்பெண்ணொருத்தி நெருப்பின் முன் தோன்றி ஆடுகிறாள். வியாபாரிகளும் பழங்குடி ஆண்களும் ஒழுங்கற்ற சிறுசிறு வட்டங்களாக அமர்ந்திருக்க, பனிமூட்டம் போல் கொசுக்கூட்டம் மிதக்கிறது. ஒற்றை வயலினின் கிரீச்சிடும் ஸ்தாயி சாம்பல் நிற வானில் கலந்து மறைகிறது.

குருமார் தேவாலயத்தின் அருகே அவர்களது சிறுமரக்குடிலுக்குள் ஒரு முனகல்; ஈரச்சதையின் மேல்விழும் ஓர் அறையின் சத்தம்; சன்னல் வழி நழுவி, தலையணையில் பரந்து கிடக்கும் அவள் வெண்ணிற தலைமுடியைச் சுட்டும் நிலவு விரல். கூர்ந்த கவனத்துடன், மெல்லிய பட்டுச்சருகு போல் சுருக்கங்களுடன் மூடிக்கிடக்கும் தன் கணவனின் கண்ணிமைகளை வெகு அருகே ஜூலியா பார்க்கிறாள். அந்தக் காட்சி அவளை மயக்குகிறது; ஏனோ மேலும் கிளர்ச்சியூட்டுகிறது. அவன் சட்டை அவள் கைகளில் கசங்குகிறது.

அப்போது மரக்கதவின் மேல் யாரோ படபடவென தட்டும் ஒலி: கரடுமுரடான பிரெஞ்சு மொழியில்: டாக்டர், அவசரம், கதவை திறவுங்கள்! தயவுசெய்து, டாக்டர்!

அவள் தனது கால்களை அவன் பின்புறம் பின்னிக்கொண்டாள். முடித்துவிடு, என்றாள்.

என்னை எழுந்திருக்க விடு.

வில்லியம், போகாதே, தயவுசெய்து.

கதவுக்குப்பின் இப்போது சத்தம் உரத்துக் கேட்கிறது, டாக்டர் கொஞ்சம் வருகிறீர்களா? தட்டலில் சமையலறை கொண்டியில் தொங்கும் சட்டிகள் ஆடி ஓசையெழுப்புகின்றன.

ஒரு நிமிடம்! அவள் கால்களை விலக்கிவிட்டு தள்ளாடி எழுந்தான். முட்டாள் பெண்ணே, என்றவாறு தன் கால்சட்டையை அணிந்து கொண்டான். இது போன்ற நேரங்கள் எவ்வளவு முக்கியம் என்று தெரியுமா உனக்கு?

வியர்வை பூத்த புருவத்தை அவள் நீவிக்கொண்டாள். யாராவது கலப்பின ஆள் வயிற்றுவலி என்று வந்திருப்பான்.

வில்லியம் எரிச்சல் தெரிய தனது காலணிகளை அணிந்து கொண்டான். சிறுபிள்ளை போல் நடந்து கொள்கிறாய்; அதற்கேற்றாற்போல் நான் நடத்தினால் குறை மட்டும் பட்டுக்கொள்கிறாய். யாருக்கும் ஒன்றும் ஆகியிருக்கக் கூடாதென்று வேண்டிக்கொள்; உன்னைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்காமல்.

தயவுசெய்து அப்படி சொல்லாதே வில்லியம். மனைவியுடன் படுக்கையில் இருக்கச்சொல்வது அப்படியொன்றும் மோசமான வேண்டுகோள் இல்லையே?

பதிலொன்றும் பேசாமல் ஓர் உறுமலுடன் தனது தோல்பையை எடுத்துக்கொண்டு நடந்தவன் கதவருகே சிறிது நிதானித்தான். கழுத்து நனைந்திருக்க, நெற்றியில் கேசம் வியர்வையில் ஒட்டிக்கிடந்தது. ஓங்குதாங்கான உடல்; எளிதில் எரிச்சலடையக்கூடியவன், தனது வேலையில் ஒரு வீம்புடன் ஈடுபடக்கூடியவன். குறிப்பேடுகளில் மணிக்கணக்காக எழுதிக் கொண்டிருக்கும்போது அவனை அழைப்பதோ அல்லது அவனில்லாத நேரங்களில் அவனது பாடப்புத்தங்களை தூசித்தட்ட தொடுவதோகூட அவளுக்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. அறையின் ஒரு மூலையில் தோல் உறையிட்டு ஒருவித வாசனை பரப்பியபடி குவிந்து கிடக்கும் புத்தகங்களை பார்க்கும்போது, ஒருசேர அவனது ஈடுபாட்டையும் அது அவளுக்கு உண்டாக்கும் தொல்லையையும் நினைத்துக் கொள்வாள். சில மாலைகளில், நிமிராமல் உணவை முடித்து, ஒரு வார்த்தையும் பேசாமல் சட்டையை மாற்றிக்கொண்டு படுக்கையில் சரிந்துறங்கும் அவனுக்கு தானொருத்தி இருப்பதே நினைவிருக்கிறதா என்றுகூட சமயங்களில் சந்தேகமாக இருக்கும். ஆனால் குறிப்பேட்டில் விசித்திரமான சொற்கள் நிறைந்த, அவர்களிருவரும் ஆளற்ற கடற்கரையில் தனித்திருப்பதாக, அவன் எழுதி வைத்திருக்கும் கவிதைகளை சிலசமயம் படிக்க நேரும்போதெல்லாம் ஜூலியாவுக்கு எங்கோ ஒருமூலையில் நம்பிக்கை துளிர்க்கும்.

ஒரு வார்த்தையும் கூறாமல் திறந்த கதவை அடைத்தவாறு அவன் வெளியேறினான்.

டெட்ராய்ட், 1860

ஜூலியாவைப் பற்றி பல வருடங்களாக நினைத்துக் கொண்டிருப்பதாக டாக்டர் பெயர்ஸ் கூறிக் கொண்டிருந்தார். காப்பியின் கசப்பான மணம் சுவாசத்தில் வீச அவளருகே சோபாவில் அமர்ந்திருந்தார். நாற்பது வயதிருக்கலாம் என்று ஜூலியா அனுமானித்தாள். ஆனால் தாடியை இளமையாக அலங்காரம் செய்துகொண்டு ஒரு துடுக்கான தன்னம்பிக்கையுடன் பேசுவதை பார்த்தால் குறைத்துச் சொல்லலாம் போலிருந்தது. டாக்டர் ஜேக்கப்ஸனையும் டாக்டர் லீயையும் விட இவர் பரவாயில்லை. அவர்களிருவரும் ஏற்கனவே இரவுணவுக்கான அழைப்பை நிராகரித்து விட்டவர்கள்.

“என்னைப் போல் ஒரு முதிய பெண்ணுக்கு துணையாக வருவதற்கும் தாராள மனம் வேண்டும்,” என்றாள் ஜூலியா. “அறை முழுதும் குடிபோதையில் பழம்பெருமை பேசிக்கொண்டிருக்கும் டாக்டர்கள் நிரம்பி வழியும் இது போன்ற மாலைகள் எளிதில் போரடித்துவிடக்கூடும்.”

“அது என் கௌரவம்,” என்றார் டாக்டர் பெயர்ஸ். “நகரின் அத்தனை முக்கியமான மருத்துவர்களும் இன்றிரவு இங்கிருப்பார்கள்; மட்டுமல்ல – உங்களுக்கொன்றும் அத்தனை வயதாகிவிடவில்லையே. உங்கள் மலர்ச்சியும் இளமையும் அமைந்தால் எந்த இளம்பெண்ணும் அதிர்ஷ்டசாலி என்றே கூறுவேன்.” அவர் பார்வை ஒரு நொடி அவளது க்ரினொலின் உள்ளாடையைத் தடவிச் சென்றது.

ஓரளவு இன்னும் அழகாகவே இருக்கிறேன் என்று அவள் நினைத்துக் கொண்டாள். கூந்தல் நரைத்து விட்டாலும் பளபளப்பும் அடர்த்தியும் குறையவில்லை. அவள் கணவனின் சக மருத்துவர்கள் எத்தனை பேர் ஓர் எதிர்பார்ப்போடு கூடிய ஆர்வத்துடன் அவளைப் பார்த்திருக்கிறார்கள்? ப்ரூசார்ட், மெக் ஆடம், லோவல். கிப்சன் – அந்த அழகிய இளைஞன். வேறுவேறான மனிதர்களாக இருந்தாலும் அவர்களின் பொறாமையின் அச்சு வில்லியம் செய்துவந்த அந்த ஆராய்ச்சி.

“நான் அவருடைய மாணவன்,” தொடர்ந்தார் டாக்டர். “அற்புதமான ஆள் உங்கள் கணவர் என்று எங்கள் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. ஒரு நாள் – எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது – அவர் அன்று எடுக்க வேண்டிய பாடத்திற்கான குறிப்பேட்டைக் கொண்டுவர மறந்துவிட்டார் என நினைக்கிறேன், எந்த உதவியும் இல்லாமல் நினைவிலிருந்தே அன்று இரண்டு மணிநேரம் பாடம் நடத்தினார் என்றால் பாருங்கள். நம்ப மாட்டீர்கள், அந்த பாடத்தின் குறிப்புகளை இன்னும்கூட வைத்திருக்கிறேன்!”

குறுஞ்சிரிப்புடன் தன் கோட் பைக்குள்ளிருந்து ஒரு சிறிய, கசங்கிய செந்நிற தோலட்டை போட்டிருந்த, முனைகளும் முதுகும் வளைந்துபோன ஒரு புத்தகத்தை எடுத்தார். வில்லியம் பார்பர் M. D எழுதிய ‘பசி பற்றிய பரிசோதனைகள் மற்றும் செரிமானத்தின் உடலியல் கூறுகள்’. ஜூலியா அதை வாங்கி புரட்டி பார்த்தாள்.

தான் அதைப் படித்ததில்லை என்று ஒரு சிறு குற்றவுணர்ச்சியுடன் எண்ணிக்கொண்டாள். ஆனால் அதன் பெரும்பாலான பக்கங்கள் அவளை பல இரவுகளில் படுக்கையில் தனியே புரள விட்டுவிட்டு வில்லியம் எழுதிய குறிப்புகளிலிருந்து உருவானவை என்பது அவளுக்குத் தெரியும். மறுநாள் காலைகளில் பேச்சொன்றும் இல்லாமல் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு ராணுவ மருத்துவமனைக்கு அவன் போய்விட்டபிறகு ஜூலியா மேசையிலிருந்து அந்தக் குறிப்புகளை எடுத்து படிப்பாள்.

டாக்டர் மேலே தொடர்ந்தார்: “ஒரு நான்கு வருடங்களுக்கு முன் பேராசிரியர் பென்சன் வீட்டில் நானும் உங்கள் கணவரும் இரவுணவு அருந்திக் கொண்டிருந்தோம் – அப்போதுதான் முதல்முதலாக உங்களைப்பற்றி அவர் பேசிக் கேட்டேன் .”

வியப்பை மறைத்தபடி அவள் கேட்டாள், “என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்ளலாமா?”

“அவரது ஆராய்ச்சிகளுக்கு நீங்கள் அதி முக்கியம் என்றார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது: ‘ஒவ்வொரு இளம் மருத்துவனும் தன் முதல் கருவியை வாங்குவதற்கு முன்பே செய்ய வேண்டியது, நான் செய்தது போல எதற்கும் ஒத்துப்போகிற ஒரு மனைவியைப் அடைவதுதான். அதுவே உங்கள் மருத்துவப்பணியில் செய்யக்கூடிய ஆகப்பெரிய முதலீடு.”

சட்டென்று எழுந்த சினம் ஜூலியாவிற்கு விரக்தியாக மாறியது. ஆம், முதலீடுதான். மிகச்சரியான வார்த்தை; மிகச்சரியான வர்ணனை. அவனது பணி முன்னேற்றத்திற்கு ஈடாக அவளுக்கு வில்லியம் என்ன கொடுத்தான்? நிச்சயமற்ற கணங்களை எண்ணிக் காத்திருந்த கணக்கற்ற நாட்கள்; ஒவ்வொரு சிறு சந்தோஷத்தையும் தொடர்ந்து ஆவலோடு ஓடி ஏமாற்றத்திலும் வேதனையிலும் முடிந்த நாட்கள். ஒரு மகன், ஜேக்கப், பிறந்ததனால் இந்த ஏற்பாடு அவ்வளவு ஒன்றும் மோசமில்லையோ என்னவோ?

“உங்கள் அன்பிற்கு நன்றி. நான் கிளம்ப வேண்டும், என் மகன் அங்கே இரவுணவிற்கு வருவதற்குள் நான் அங்கிருக்க வேண்டும்.”

“சரி, வண்டியை வரச் சொல்கிறேன்,” தடுமாறியபடி எழுந்தார் டாக்டர் பெயர்ஸ்.

புத்தகத்தை வாங்கும்போது அவள் கையை உரசிச்சென்றது அவர் கை. அந்த கணநேர வெம்மை அவள் கையில் படிந்திருக்க, முன் கதவைச் சாத்திக்கொண்டு அவர் வெளியேறும் சத்தம் கேட்டபிறகு அவள் மெல்ல படியேறி வில்லியமின் நூலகத்திற்குள் நுழைந்து கதவைச் தாழிட்டுக்கொண்டாள். சன்னமான செந்நிற ஒளி அரைகுறையாக மூடப்பட்டிருந்த சன்னல்வழி அறைக்குள் வழிந்து கிடந்தது. ஓர் ஈர மற்றும் பைப் புகை வாசம் காற்றில் விரவிக் கிடந்தது. அவன் கைவிரல் ரேகைகளைப்போல சன்னமான சுருக்கங்களுடன் பலவகையான மருத்துவ குறிப்பேடுகள்; தோல் அட்டையிட்ட புத்தகங்கள். குளிர் அறையை நோட்டம்விட்ட ஜூலியாவிற்கு அவளது முதலிரவு நினைவில் தோன்றியது. படுக்கையில் போர்வைக்குள் உடலெல்லாம் வலிக்க அவள் படுத்திருக்கிறாள்; வில்லியம் ஜன்னலுக்கு அருகே நின்றுகொண்டு தனது இதயத்துடிப்பை ஸ்டெதாஸ்கோப் வைத்து தானே கேட்டு கொண்டு தொலைவிலெங்கோ பார்த்துக்கொண்டு மேற்சட்டையில்லாமல் நின்றுகொண்டிருக்கிறான். என்ன ஓர் அற்புதம், அவள் எண்ணிக்கொண்டாள், எத்தனை உறுதியுடன் இருந்திருக்கிறேன், எவ்வளவு நம்பிக்கை, என்னுடனே எத்தனை போராட்டம். இருந்தும், இதோ இந்த இரவில் இங்கு நின்றிருக்கிறேன். மதகுருக்கள் சொல்வதுபோல் உலகமொன்றும் அத்தனை பயங்கரமானதில்லை போலும்.

***

மரக்குடிலின் நோயாளிகளுக்கான அறையில் அவர்கள் அடிபட்ட அந்தப் பையனைக் கிடத்திவிட்டுப் போன பிறகான நான்கு நாட்களுக்கு அவன் காய்ச்சலுக்குள் விழுவதும் நினைவு திரும்புவதுமாகக் கிடந்தான், ஏதேதோ பிதற்றிக்கொண்டும் உதடுகள் வலியில் சுளித்துக் கொண்டும். ஓரிரு வேளைகளில் அவன் அம்மாவென்று அலறியதில் ஜூலியா திடுக்கிட்டு ஓடிப்போய் பார்த்ததுமுண்டு. ஐந்தாம் நாள் காலை, அறையின் கதவுவழியே பார்த்தபோது அவள் கணவன் பையனின் காயத்தை துடைத்து மருந்திட்டுக் கொண்டிருக்கக் கண்டாள்.

கதவை சாத்திவிட்டு சாப்பிட்ட பாத்திரங்களைச் சேகரித்துக்கொண்டு கழுவச் சென்றாள் . குடில் சிறியதுதான். ஒரு சேமிப்பறை, ஒரு புகை படிந்த சமையலறை, ஒரு சிறிய படுக்கையறை மற்றும் நோயாளிகளை வில்லியம் பார்க்கும் அறை – அனைத்தும் நடுவிலிருந்த கணப்புமேடையைச் சுற்றி. தனியே மேசையேதும் இல்லாததால், சமையல் மேடையின் மீதே ஜூலியாவின் பொக்கிஷங்கள் வீற்றிருந்தன; பீங்கான் குடுவைக்குள் பதப்படுத்திய போன்சாய் மரமொன்று, தலையை சாய்த்துப் பார்க்கும், பஞ்சடைக்கப்பட்ட சிறுகுருவியொன்று; குழலூதும் தேவதை படம் போட்ட சிறுபெட்டி ஒன்று. தனது வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் பார்க்கவென்று அவள் டெட்ராய்ட்டில் இருந்து கொணர்ந்தவை. ஆனால் ராணுவ மருத்துவமனையில் வெறும் சிப்பாய்களும், வியாபாரிகளும், கருநிற தலைமுடி கொண்ட பழங்குடிமக்களும் புழங்குமிடத்தில் அவள் வீட்டிற்கு ஏது விருந்தாளிகள்? அவள் மட்டும் வீட்டின் மரப்பலகைகளின் ஒவ்வொரு முடிச்சையும் கீறலையும் அறிந்துகொள்ளவே நேர்ந்தது.

தண்ணீரைக் கொதிக்கவைத்துவிட்டு பாத்திரங்களை சுத்தம் செய்தாள். இனி வில்லியமின் கையுறைகளை தைக்க வேண்டும், படுக்கையறையை கழுவி சுத்தம் செய்யவேண்டும். பொதுவாக வெறுத்துப்போக வைக்கும் இந்த வேலைப்பட்டியல் அன்று ஏனோ வயிற்றில் ஒரு அமிலச்சுரப்பாக, வாயில் கசப்பாக உருவெடுத்தது.

பாத்திரங்களை அடுக்கி வைத்துவிட்டு, வில்லியமின் மேசையிலிருந்து தாளொன்று உருவி கடிதமெழுதத் தொடங்கினாள்.

ஆகஸ்ட் 10, 1822

அன்பும் அற்புதமுமான என் அழகிய சூசனுக்கு,

இன்று காலை ஒரு நூறு அணில்கள் என் வயிற்றுக்குள் ஓடி விளையாடுவதுபோல் ஒரு படபடப்புடன் கண் விழித்தேன். ஹென்றியை நீ சுமந்தபோது இப்படித்தான் உனக்கும் இருந்ததா? விரைவில் எழுதுவாயா? தினமும் எழுதுவேன் என்றாய், நான்கே கடிதங்கள்தான் வந்தன. என்ன கொடுமை! தனியே பேசிக்கொண்டு அலைகிறேன் என்பது உனக்கு தெரியும்; அதைவிட உன் கடிதங்களை படிப்பது மேலென்றும் உனக்குத் தெரியும். இருந்தும் இப்படிச் செய்கிறாய்!

எங்களுடன் ஒரு கனடிய படகோட்டும் பையனொருவன் இருக்கிறான், வயிற்றில் சுடப்பட்டு படுகாயத்துடன். சாவுடன் போராடிக்கொண்டு. வில்லியம் அவன் நினைவாகவே, அவனையே கவனித்துக்கொண்டு இருக்கிறார். டெபோராவின் தமக்கை மகனைத் தெரியுமல்லவா – அந்த உயரமான முரட்டுச் சிறுவன்? இந்தப் பையனும் அவனை போல…

அறைக்குள்ளிருந்து வெளிப்பட்ட வில்லியம் இரத்தக்கறை படிந்த துணியை மேசைமேல் எறிந்துவிட்டு, கோட்டை எடுத்து அணிந்துகொண்டான்.

ஏதோ சத்தம் கேட்டதே? பையன் விழித்திருக்கிறானா? என்றாள் ஜூலியா.

அவன் படுக்கையருகே மணி வைத்திருக்கிறேன். அடித்தானென்றால், வெண்ணிறமான உணவு ஏதேனும் கொடு – ரொட்டி, பால், உருளைக்கிழங்கு, பாலாடைக்கட்டி இப்படி. புரிந்ததா?

வெண்ணிற உணவு.

வில்லியம் தனது காற்சட்டைப்பையை தட்டிக் காண்பித்தான். இந்த வீட்டில் ஒரு சுத்தமான கைக்குட்டைகூட இருப்பதில்லை…

கோட் பொத்தான்களை அணிந்துகொள்வதை பார்த்தாள். அவன் கை மணிக்கட்டில் இரத்தக்கறையை பார்த்தாள். நாளை துவைத்து வைக்கிறேன், என்றாள்.

அவளை உற்றுப்பார்த்தான். அவன் பார்வை அவள் எழுதிக்கொண்டிருந்த கடிதத்தின் மேல் விழுந்தது. உன் அக்காவையும் எட்வர்டையும் கேட்டதாக சொல்லு. புதுப் பத்திரிக்கைகள் உனக்கு அனுப்பச் சொல்லு. எவ்வளவு நாள்தான் நீயும் பழையதையே படித்துக்கொண்டிருப்பாய்?

ஒரு கணம் அன்று காலையில் எழுந்த படபடப்பை அவனிடம் சொல்லவேண்டுமென தோன்றியது. வேறொன்றும் இல்லை, எல்லாம் பதட்டமென்று ஏதாவது தூக்க மருந்தைக் கொடுத்து விடுவான் என்று பட்டதால் சொல்லும் எண்ணத்தை கைவிட்டாள். எனக்கே உறுதியாகட்டும், பின் அவனிடம் சொல்லி அவன் முகம் மலர்வதை பார்க்கிறேன்.

சரி, எழுதுகிறேன். உங்கள் மருத்துவப் பத்திரிக்கைகள் வந்திருந்தாலும் அனுப்பச் சொல்கிறேன்.

எங்கோ நினைவாக புன்னகைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி ஏதோ நினைவாகவே நடந்துபோகும் தன் கணவனைப் ஜன்னல் வழியே பார்த்தாள்.

அவர்களின் முதல் சந்திப்புகளிலேயே அவனுக்குள்ளிருந்த இறுகிய தன்மையை அவள் உணர்ந்தாள். ஆனால் அவன் கடிதங்கள் அவளுக்குப் பிடித்திருந்தன. ‘இன்றிரவு நான் தனிமையில் நடந்து வரும்போது விண்மீன்களை பார்க்க விரும்பவில்லை; உன் கண்களின்முன் அவை எம்மாத்திரம்?’ அன்பின் வெளிப்பாட்டில் சிறிதென்ன பெரிதென்ன? அவனால் இன்னும் அவள்மேல் ஈர்ப்புடனும் அன்புடனும் இருக்கமுடியுமென்று அவளுக்குத் தோன்றியது.

டெட்ராய்ட் நகர் மருத்துவக்கழகத்தின் விருந்து நடன முதல் சந்திப்பின்போது அவள் கூறியது அவளுக்கு நினைவுக்கு வந்தது. மருத்துவர்கள் தேவதைகள்; வீழ்ந்த தேவதைகள். வலியும் துயரும் கொண்டு வரும் தேவதைகள். வெறும் ஒரு பார்வையிலேயே துக்கம் தருவிக்கக் கூடியவர்கள்… அவன் சங்கடத்துடன் புன்னைகைத்தான். ‘என்னைப் பார்ப்பது எப்படியிருக்கிறது?’ அவளும் பதிலொன்றும் சொல்லாமல் புன்னைகை செய்திருக்கிறாள். அவனது முப்பத்தி ஐந்து வயதிற்கு அவள் பதினான்கு வருடங்கள் இளையவளாய் இருந்தும், அபாரமான தன்னம்பிக்கை கொண்டிருந்தாள். ஆட அழைப்பான் என்ற எதிர்பார்ப்பை பொய்யாக்கிவிட்டு அவன் திடீரென்று எழுந்து, விரைந்து நடன அரங்கை விட்டு வெளியேறியதும் நடந்தது.

இப்போது அவனது மேசைக்குள்ளிருந்து அவனது குறிப்பேட்டை எடுத்து நேற்றைய இரவின் பதிவை படிக்கத் தொடங்கினாள்.

ஆகஸ்ட் 9, 1822

இன்று மாலை பையனின் சுரம் நின்றது; காயத்தின் வீச்சமும் குறைந்திருக்கிறது. இரத்தத் தமனியின் அழுத்தத்தைக் குறைக்க பதினைந்து அவுன்ஸ் இரத்தம் வெளியேற்றப்பட்டது. காயத்தின் பிளவைப் பிரித்து ஆராய்ந்ததில், பட்டாணி அளவுள்ள மூன்று ரவைக்குண்டுகள் தென்பட்டன. காய்ந்த வெளித்தோலை பிரித்தெடுக்க தொடங்கியிருக்கிறது. காயம் பொருக்கோடி இப்போது பார்ப்பதற்கு சுருக்கங்கள் நிறைந்த ஒரு வாய் போலிருக்கிறது. நாளை காலை வெளிச்சத்தில் அவன் உணவெடுத்த பிறகு, வெளியில் கொந்தளிக்கும் கடலைப் போல் நொதித்துப் புரளும் அவன் வயிற்றுக்குள் பார்க்கவேண்டும்.

பையனின் உடல்நிலை பிரமாதம்: அவனது செரிமான உறுப்புகளின் உட்புறச் செயல்பாட்டை என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது. டாக்டர் டங்க்ளிசனோ அல்லது டாக்டர் மகெண்டியோ அவர்களது கனவில்கூட இப்படியொரு வாய்ப்பை கற்பனை செய்துபார்த்திருக்க முடியாது.
ஹார்ன்பெக்குக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

கடலை நுரைக்கச் செய்யும்
அந்தக் காற்றில்
மலைக்குன்றின் முகட்டில் நின்றேன்
கடவுளின் பார்வையின் கீழ், தனியே
என் மன்றாடல்கள்
நீள்வெளிவானின் விரிவில்
கலந்து மறைய

அழைப்பு மணி ஒலித்தது. ஒரு கணம் தானில்லாத வில்லியமின் கவிதை உறுத்த, குறிப்பேட்டை மூடிவைத்துவிட்டு நோயாளிகள் அறைக்கதவை திறந்தாள்.

பையன் விழித்துக் கொண்டுதானிருந்தான். கண்கள் சுரத்தால் கனத்திருந்தன. அவன் தொடைகள் மேல் ஒரு போர்வை போர்த்தியிருக்க, வெறும் கால்களும் கைகளும் சிறிய கட்டிலின் இருபுறமும் விரிந்து கிடந்தன. கறைபடிந்த சாம்பல்நிற கட்டு இடையைச் சுற்றி.

காலை வணக்கம், என்றாள். இப்போது எப்படியிருக்கிறது?

அவளை வெறித்துப் பார்த்தான். ஒரு பிணத்தைப் போல.

அவன் கன்னங்கள் சதைப்பிடிப்புடன் வெளுத்திருந்தன. மெல்லிய ஆரஞ்சுநிற தாடி. வளைந்த உதடுகளுக்குள் முன்னிரண்டு பற்களில்லை. கழுத்திலிருந்து இருபுறமும் விரைத்த தசைநார்கள் செம்புள்ளிகள் படர்ந்த தோள்களில் பிணைந்தன. பதினேழு அல்லது பதினெட்டு வயதிருக்கலாம். பையனுமில்லாமல் இளைஞனுமில்லாமல், ஏதோ ஒரு பக்கத்திற்கான தகர்ந்த இலட்சியம் போல். அவன் பெயர் கில்லாமோ ரோலு.

ஒரு குவளை தண்ணீர் வேண்டுமா?

ரம். பற்களில்லாத இடைவெளியினூடே வார்த்தைகள் துப்பியதுபோல் விழுந்தன. அல்லது பிராந்தி. கொஞ்சம் மாமிசம் .

எங்களிடம் ரம் இல்லை. என்னால் பாலும் ரொட்டியும் கொண்டு வர முடியும், என்றாள்.

அதற்கு நீ என்னை இன்னொரு தடவை சுட்டுவிடலாம். சிரிக்க முயற்சி செய்தான். சிரிப்பு தவிர்க்கவியலாத இருமலில் முடிந்தது. சமையலறைக்குப் போகத் திரும்பினாள் ஜூலியா.

கொஞ்சம் இரு. இரு விரல்களை உயர்த்தினான். நான் அதைப் பார்க்கவேண்டும்.

அவள் தயங்கினாள். எங்கே இந்த வில்லியம்? மருத்துவமனையில் காசநோயில் உருக்குலையும் படைவீரர்களைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். அல்லது, சதுப்புக் காட்டுக்குள் ஏதேனும் வேர்களைத் தேடிக் கொண்டிருக்கலாம். அல்லது படைவீட்டுக்குள்ளே, கைகளை பின்னே கட்டிக்கொண்டு, அவர்களது வீட்டிலிருந்து ஒரே நேரத்தில் நூறடியோ அல்லது ஆயிரம் மைல் தூரத்திலோ நடந்து கொண்டிருக்கலாம்.
கட்டிலருகே முக்காலியை நகர்த்திப் போட்டு அமர்ந்தாள். அவனது இடையைச் சுற்றியிருந்த கட்டுத்துணியை மெல்ல அவிழ்த்தாள். பின் காயத்தின் மேல் காய்ந்துபோயிருந்த துணியையும் விலக்கினாள்.

மெதுவே, பையன் முனகினான். வலிக்கிறது.

பாத்திரத்தை எடுத்து அவன் வயிற்றின் மீதிருந்த துணியின் மீது நீரைச் சொட்ட விட்டாள். வெண்ணிற வயிற்றுப் பிரதேசத்தில் நீலநிற நரம்புகள் குறுக்கும் நெடுக்கும் பரவிக் கிடந்தன. துணியைப் பிய்த்து எடுத்தாள். இன்னும் ஆறாத, மென்சிவப்பில் திறந்துகிடக்கும் காயம் நெஞ்சின் கீழே தோன்றியது. காயத்தைச் சுற்றிலும் தோல் உரிந்தும், நெருப்பில் பொசுங்கியது போல் கறுத்துமிருந்தது. திறந்து கிடந்த காயத்திற்குள், வளைந்த நெஞ்செலும்பொன்றின் கீழ் செந்நிற நுரையீரலின் நுனி, ஜூலியா பார்த்துக் கொண்டிருக்கும்போதே சுருங்கி, விரிந்தது.

அவள் கணவனின் குறிப்பேட்டின்படி அது ஒரு விபத்து. துப்பாக்கியின் கோளாறால் ஏற்பட்ட வெடிப்பில் துணிச்சுருளைகளும், பறவைகளின் மிச்சங்களும் அவனது நெஞ்சுக்குள் புதைந்து விட்டன. அவனது சட்டை துப்பாக்கிக்குழலின் நெருப்பில் எரிந்துவிட்டது. வில்லியம் எழுதியிருந்த அன்றைய இரவின் குறிப்பு சுருக்கமாகவும், கச்சிதமாகவும் இருந்தது:

காயத்தின் வெளிப்புறம் இருந்த பிறபொருட்கள் துடைத்து சுத்தம் செய்யப்பட்டன. நொதித்த பௌல்டிஸ் மற்றும் அம்மோனியா கரைசலின் கலவை பூசப்பட்டது. காயத்தை பரிசோதிக்கையில், உள்ளிருந்து ஏறக்குறைய செரிமானமாகியிருந்த, கஞ்சி போன்றதொரு திரவம் வழிந்து தரையில் சிந்தியது. நிச்சயம் நாளைக் காலைக்குள் இறந்துவிடுவான்.

அதை மூடிவிடு, அவன் மூச்சிரைத்தான்.

அவள் ஒரு புது கட்டுத் துணியை காயத்தின்மேல் வைத்தாள். காயத்தின் வீச்சம் அவன் உடலின் வெங்காய வாடையுடன் கலந்து வீசியது.

வலது கையை நெஞ்சின் மேல் வைத்தவாறு கேட்டான், எப்பொழுது துடுப்பு வலிக்குமளவிற்கு எனக்கு தெம்பு வரும்?

எனக்குத் தெரியாது, மன்னித்துக் கொள்.

அவள் கையிலிருந்த அழுக்கு கட்டுத்துணியைப் உற்றுநோக்கினான். உன் பேரென்ன?

ஜூலியா.

ஜூலியா, திரும்ப சொல்லிக்கொண்டான். இங்கு கிடந்த இந்த இரவுகளில், உன்னை என் கனவுகளில் பார்த்திருக்கிறேன். நிச்சயமாகவே நீயொரு தேவதைதான்.

(தொடரும்)

oOo

19 அக்டோபர் 1972-ல் பிறந்த கார்ல் இயாக்னெம்மா அமெரிக்க விஞ்ஞானி, எழுத்தாளர். புகழ் பெற்ற MIT-ல் இயந்திர பொறியியல் துறையில் Ph. D பட்டம் பெற்ற கார்ல், இயந்திரவியல், ரோபாடிக்ஸ் துறைகளில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கிறார்.

பல பரிசுகள் பெற்ற நாவல்கள், சிறுகதைகள் எழுதிய இவரது பெரும்பாலான கதைகளின் கருப்பொருள் அறிவியல், கணிதம், மனித-இயந்திர உறவுகள் மற்றும் இத்துறை சார்ந்த உளச்சிக்கல்கள்.

ஒளிப்பட உதவி – PBS

‘டுடே’, ‘மாம்பழ சீஸன்’ – செல்வசங்கரன் கவிதைகள்

செல்வசங்கரன்

டுடே

ஒவ்வொரு கழுத்தையும்
சவரக்கத்தி முனையில் வைத்துக் கொண்டு
மாங்கா மண்டையைக்கூட அலங்கரித்தபடி
ஒவ்வொருவரையும்
கவனமாக வீட்டிற்கு அனுப்பிக் கொண்டிருக்கும்
அந்தச் சலூன்காரர்
இதுவரை யாரையும் கழுத்தறுக்காதது
இன்றைய தேதிக்கு
ஆச்சரியமாத்தான்டே இருக்கிறது

oOo

மாம்பழ சீஸன்

எத்தனைப் பதவிசாகத் தட்டினாலும்
ஒரு மாம்பழம் அதிலிருந்து நைஸாக நழுவி உருண்டோடி விடுகிறது
பின்னால் ஓடிய கைகளுள் ஒன்று
கழிவு நீர் வருவதற்குள் கபக்கென அமுக்கி
அதனைக் கையளித்தபோது
அவர் கண்ணிலிருந்து பீய்ச்சியடிக்கும்
அந்தக் கருணை ஒளியைக் காண்பதற்காக
இதுவரைக்குமான
பதற்றங்களும் மெனக்கெடல்களும் பாய்ந்து கவ்வல்களும்
எத்தனை எத்தனையோ
வேறு வேறு மாம்பழங்கள்
வேறு வேறு மாமனிதர்கள்
வேறு வேறு சந்துகள் பொந்துகள் அவ்வளவே
ஒரு உருண்டோடியின் பின்னாலோடும்
ஒரு வாய்ப்பு கிட்டிய நாளில்
மாம்பழ உருவாக்கியின் முதல் தொடுதலுக்கு
அந்த மாம்பழம் எவ்வளவு நெகிழ்ந்து கொடுத்திருக்குமோ
எவ்வளவு நெகிழ்வைக் கொடுத்திருக்குமோ
அத்தனைக் குழைவுகளையும்
அத்தனை இளக்கங்களையும் கையிலள்ளி
இந்தாருங்கள் பிடியுங்கள் என்றேன்
மாம்பழக்காரரே உடனே யேசுநாதராக மாறி
திவ்வியத்தின் ஒளியை என் மீது பாய்ச்சிடாதீர்
மாம்பழத்தின் பக்கமும் லேசாக அதைத் திருப்பி விடும்