Author: பதாகை

பொம்மலாட்டம் – ப. மதியழகன் கவிதை

ப. மதியழகன்

1

மனக்குளத்தில் கல்லெறிந்துவிட்டு வேடிக்கை பார்ப்பது யார்
சஞ்சலமுடைய மனம் வாழ்க்கையின் ஒளிக்கீற்றை காண விடாது
என் மனவானை எண்ண மேகங்கள் சூழ்ந்த வண்ணமே இருக்கின்றன
ஏதோவொன்றை நினைத்து ஏங்கியே என் தூக்கம் தொலைகிறது
உறக்கம் ஓய்வைத் தராதபோது பகல் எனக்கு நரகமாகிறது
இரையை ருசித்த மீன் தூண்டிலின் ரணத்தை அனுபவித்துதானே ஆகவேண்டும்
எனது வேட்கையைத் தூண்டும் உடலும் ஒருநாள் சிதையில் எரியப் போவதுதானே
மோக வலையை கிழித்தெறியும் சூலாயுதம் சிவனிடம் மட்டுமே இருக்கிறது
வசீகரிக்கக்கூடிய அழகுடையவர்களெல்லாம் ஒருநாள் நெருப்புக்கு இரையாகத்தானே போகிறார்கள்
ஊசலாடும் மனது மாய உலகினை உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறது
எனக்கு நிம்மதியான உறக்கத்தை கல்லறை ஒன்றே கொடுக்கும்
இயற்கையின் சட்டதிட்டங்கள் கடுமையானவை என எனக்குத் தெரியாது
நடப்பவை அனைத்தும் என்றோ முடிவு செய்யப்பட்டவை என்பது உண்மைதான்
இந்த உலகம் அசாதாரண மனிதர்களை பைத்தியம் என்றுதான் அழைக்கிறது
இந்தச் சிறைச்சாலையில் விடுதலை உணர்வுக் கொண்டவர்களே தங்களைக்
கைதிகளாக உணருகிறார்கள்
இந்த அலைகளின் மோகம் தணிவதாகத் தெரியவில்லை
எனது ஆன்மாவின் ஏக்க கீதங்களைக் கடவுள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்
இன்று வரை மன்னிப்பின் ஒளி என்மீது படவில்லை
கடவுளின் கைக்கூலிகளுக்கு கருணையென்றால் என்னவென்று தெரியாது
கடவுளின் பிரதிநிதி இன்னும் இந்த உலகை வந்து அடையவில்லை
சாத்தான் ஒருவனால்தான் கடவுளைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற முடிந்தது
நியாயத் தீர்ப்பு நாளில் இந்தப் பாவியால் கடவுளின் கண்களை நேரிடையாக சந்திக்க இயலுமா
கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையே நடக்கும் சதுரங்க விளையாட்டில்
நகர்த்தப்படும் காய்கள்தான் மனிதர்கள்
சாத்தானுக்குப் பணிவிடை செய்யும் என்னால்தான் கடவுளின் மகத்துவத்தை உணர முடியும்
இந்த வாழ்க்கை கடவுளுக்கு விளையாட்டாக இருக்கலாம்
எனது துயர்மிகு வரிகளில் ஏதோவொரு உண்மை ஒளிந்திருக்கலாம்
துயரச்சிலுவையை சுமப்பவர்கள் எல்லோரும் கடவுளின் குமாரரர்களாக ஆகிவிட முடியாது.

2

ஆழ்கடலின் சலனங்களே அலைகளாகின்றன
வானமண்டலத்தின் கண்களே விண்மீன்கள்
வாழ்க்கை சிலருக்குப் பரிசாகவும் சிலருக்கு தண்டனையாகவும் ஆகிவிடுகிறது
வந்துபோகும் மனிதனால் கடவுளின் இருப்பைக் கண்டுகொள்ள முடியுமா
இந்த உடற்கூட்டிற்குள் சிறைப்பட்டிருப்பது இம்சையல்லவா
படைப்பு பூரணமடையும்வரை இந்த உலகம் இங்கு இருந்துகொண்டுதான் இருக்கும்
நடப்பவைகளை கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டிய துர்பாக்கிய நிலை எனக்கு
ஆசாபாசங்களை வைத்து கடவுள் மனிதனை பலவீனப்படுத்தி இருக்கிறான்
மரணம் சற்றே நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ள இடமளிக்கிறது
இயற்கை கடினமான ஆசிரியராக என்னிடம் நடந்து கொள்கிறது
என்னிடம் மட்டும் ஏன் பறித்துக்கொண்டாய் என்று உன்னிடம் நான் காரணம் கேட்க முடியாது
உனது குமாரனுக்கே சிலுவையை பரிசளித்தவன்தானே நீ
நீ கருணையுடையவனாய் இருந்திருந்தால் என்னை இங்கே அனுப்பியிருக்க மாட்டாய்
உன்னைப் பற்றிய ஒரு உண்மையை நான் சொல்லாமல் இருப்பதற்கு நீ காரணமல்ல
சத்தியத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கெல்லாம் நீ நரகத்தைத்தானே பரிசாக அளித்தாய்
உன்னால் வஞ்சிக்கப்பட்டவர்களின் மரண ஓலம் என் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது
பரிசோதனை எலிகளிடம் ஆராய்ச்சியாளனுக்குப் பரிவு ஏற்படுமா என்ன
எங்கே தொலைத்தேன் என்று தெரியாமல் தேடிக் கொண்டிருக்கிறேன்
உன்னைப் மறுப்பவனுக்கு வாழ்வில் ஏற்றம் தருவதுதானே உன் திருவிளையாடல்
உன்னைத் தேடுபவர்களிடம் நீ திருவோட்டைத்தானே பரிசாகத் தருகிறாய்
விலைகொடுத்து எதையும் வாங்கக் கூடிய தனவந்தர்கள் உனக்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள்
அன்பிற்கு என்ன விலையை நிர்ணயிக்க முடியும்
வாழ்வுப் புத்தகத்தில் என் பக்கம் மட்டும் வெற்றிடமாக இருக்கட்டும்
ஒவ்வொரு விடியலும் வேதனையைத்தான் தாங்கி வருகிறது
அமைதியான இரவு என்று எனக்கு வாய்க்கும்
நிசப்தமான அந்திப்பொழுதில் மலைப்பிரசங்கத்தை கேட்கும் ஜனத்திரள்களில்
நானும் ஒருவனாக நின்று கொண்டிருக்கிறேன்
பாழடைந்து கிடக்கும் எனது மனக்குகையில் பிரார்த்தனை ஒலி கேட்கிறது
வேதனைக் கிடங்குகளுக்கு உரிமையாளனாகத்தான் என்னை ஆக்கிவைத்திருக்கிறது இந்த வாழ்க்கை
எந்த வாதப்பிரதிவாதத்தையும் செவிமடுக்காமல் எதேச்சதிகாரமாய்
அவன் எடுக்கும் முடிவுகளுக்கு நான் எத்தனை நாள் ஆதரவளிப்பது.

3

இரவுப்பொழுதை நான் வாவென்று அழைப்பதற்கு கனவுகள்தான் காரணம்
இந்த நெடிய வாழ்வில் கனவுகள்தான் இளைப்பாறுதல் தருகின்றன
நீரோட்டத்தின் திசையில் செல்பவர்களை நதி தாங்கிக் கொள்கிறது
இந்த வெண்மேகங்கள் ஒன்று மாதிரி மற்றொன்று இருப்பதில்லை
இயற்கையின் உந்துதலுக்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ன
மரணத்தை விழைவிப்பவர்களுக்கு நீயாரென்பது முக்கியமல்ல
அந்திப் பொழுதில்தான் என்மனவிருட்சம் பூத்துக் குலுங்குகிறது
வெயிலில் வெறுங்காலுடன் நடப்பவர்களின் பாதங்கள் நிழலை நாடித்தானே செல்லும்
வார்த்தை தவறிவிட்டதற்காக உன்மீது எனக்கு வருத்தமில்லை
ஆட்டுவிப்பவனுக்கு மட்டும்தான் தெரியும் இங்கு நடப்பது பொம்மலாட்டம் என்று
செடியிலிருந்து பறிக்கப்பட்ட மலரிடம் மனிதன் நன்றியினை எதிர்பார்க்கலாமா
நிராகரிப்பின் வலி மரணத்தைவிடக் கொடியதென்று நீ உணரமாட்டாயா
குற்றம் புரிந்த என்னை என் நிழல்கூட வெறுத்து ஒதுக்குகிறது
நிமித்தங்கள் செய்த எச்சரிக்கையை நான் அலட்சியப்படுத்திவிட்டேன்
வார்த்தைகள் என்னைக் காயப்படுத்துகின்றன
எனது சுமையை வேறு யார் சுமப்பார்கள்
சுவர்க்கத்தின் கடவுச்சீட்டுக்காக இந்த உலகத்தில் உள்ளோரை நரகத்தில் என்னால் தள்ள இயலாது
எனது சக்திக்கு மீறிய செயலை என்னிடமிருந்து நீ எதிர்பார்க்காதே
என்னைச் சோதனைக்கு உள்ளாக்கும் முன்பு எனது தரப்பு நியாயத்தையும் நான் சொல்லிவிடுகிறேன்
நான் கதறி அழும்போது ஆறுதலாய் தலைகோதிவிட எனக்கென்று எவருமில்லை
எல்லாவற்றையும் என்னிடமிருந்து பறித்துக் கொண்டவர்கள் கடைசியாக என் உயிரையும் கேட்கிறார்கள்
ஆபிரகாமுக்கு முன்பிருந்த உனக்கு என்னைப் பற்றியும் தெரிந்திருக்குமே
திருச்சபைக்கு வரும் பாவிகளை நீ இரட்சிக்க மாட்டாயா
பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து நீ மட்டும் எப்படி தப்பினாய்
துயரக்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் கிழக்குக்கு ஒரே ரட்சகன் நீயல்லவா
உனது வருகையை நான் இந்த உலகுக்கு தெரிவிக்கிறேன்
ஏனெனில் மெசியாவுக்கு சாட்சியாக இங்கிருப்பது நான் ஒருவன் மட்டும் தானே.

கார்த்திக் பாலசுப்ரமணியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா

நரோபா

சொந்த ஊர், குடும்பம், குடும்பப் பின்னணி, படிப்பு, பணி பற்றி

கார்த்திக் பாலசுப்ரமணியன்: பிறந்தது வளர்ந்ததெல்லாம் இராஜபாளையம். பெற்றோர்களுக்கும் இராஜபாளையம்தான் பூர்வீகம். அப்பாவுக்கு நூல் வியாபாரம். நான் பத்தாம் வகுப்புக்குப் பிறகு உயிரியல் பிரிவைத் தேர்ந்தெடுத்தேன். கோவையில் கல்லூரிப் படிப்பு. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். மனைவியுடனும், இதோ இதை எழுதிக்கொண்டிருக்கும்போதுகூட தன் கன்னத்தை என் தோள் மீது உரசியபடி, “அப்பா என்ன எழுதுற,” என்று நச்சரித்துக்கொண்டிருக்கும் நான்கு வயது மகனுடனும் தற்போது சென்னையில் வசிக்கிறேன்

வாசிப்பு பரிச்சயம் எப்போது? நவீன இலக்கியத்தை வந்தடைந்த பாதை என்ன?

கார்த்திக்: அப்பா நிறைய வாசிப்பார். சிறுவயதிலேயே கி.ரா-வின் நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பை வாங்கிக் கொடுத்து என்னையும் தங்கையையும் வாசிக்கச் சொல்லுவார். எங்கள் ஊரில் புழங்கும் மொழியில், கதைகளை அச்சில் வாசித்தது அப்போது புதிய திறப்பாக இருந்தது. அவர் வழியாகவே சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன் என்று படிப்படியாக நவீன இலக்கியத்தை வந்தடைந்தேன். இப்போது அப்பாவுக்கு புத்தகங்களை நான் பரிந்துரைக்கின்றேன்.

முதல் கதை எப்போது வெளிவந்தது? எழுத தூண்டியது என்ன? எழுத்தாளர் என உணர்ந்தது எப்போது?

கார்த்திக்: 2011-ஆம் ஆண்டு, உயிர்மையின் சார்பாக வாராவாரம் வந்துகொண்டிருந்த ‘உயிரோசை’ இணைய இதழில்தான் என் முதல் சிறுகதை “பொதுப் புத்தி” வெளிவந்தது. எழுத ஆரம்பித்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் கழித்து என் முதல் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. இப்போது யோசித்துப் பார்த்தால் மிகக்குறைவாகவே எழுதியிருக்கிறேன் என்று தோன்றுகிறது. என்னைப் பாதித்த நிகழ்வுகளை எழுதிக் கடப்பதே எனக்குத் தெரிந்த ஒரே வழியாக இருக்கிறது. அப்படித்தான் எழுத ஆரம்பித்தது. நான் ஒரு எழுத்தாளன் என்ற உணர்வு என்னுள் எழாமல் வாசிப்பவனை உணரச் செய்ய முடியாது. அந்தத் தன்னுணர்வுடனே ஒவ்வொரு வார்த்தையையும் எழுதுகிறேன்.

தமிழ்/ இந்திய/ உலக இலக்கிய ஆதர்சங்கள்? பிடித்த படைப்புக்கள்?

கார்த்திக்: ஆதர்சம் என்றால் ஒருவர்தான் – அசோகமித்திரன். கன்னட எழுத்தாளர் விவேக் ஷான்பாக்கை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவரை மிகவும் பிடிக்கிறது. அவரைக்கூட சமீபத்தில் யாரோ ஒருவர் ‘கன்னடத்து அசோகமித்திரன்’ என்பதாகப் புகழ்ந்திருந்தார். உலக இலக்கியங்களிடத்தே கொஞ்சமாய்த்தான் பரிச்சயம் உண்டு. வாசித்தவரையில் தஸ்தாவஸ்கி ஈர்க்கிறார். போர்ஹேஸ் பிரமிப்பூட்டுகிறார்.

முதல் சிறுகதை தொகுப்பை அசோகமித்திரன் எனும் ஆசானுக்கு அர்ப்பணித்து உள்ளீர்கள். அமி உங்கள் மீது செலுத்திய தாக்கம் எத்தகையது?

கார்த்திக்: அசோகமித்திரனின் எழுத்துக்கள் நகர்ப்புற மத்திய வர்க்க மக்களின் வாழ்க்கையைப் பற்றி பேசுகின்றன. வாழ்வின் மீதான ஏமாற்றத்தையும், அதன் பொருட்டெழும் இயலாமையையும், சலிப்பையும் ஏற்று ஜீரணித்துக் கடந்து போகும் அவர்களின் வாழ்வே அசோகமித்திரனின் கதைகளில் திரும்பத் திரும்ப பதிவாயிருக்கிறது. அவரும்கூட தனது எழுத்தை சாமானியர்களுக்கே அர்ப்பணிக்கிறார். அவர்களைப் பற்றியே அவர் தொடர்ந்து எழுதினார். அன்றாடங்களின் வழியேகூட அற்புதமான இலக்கியம் படைக்கவியலும் என்னும் நம்பிக்கையை அவரிடமே நான் பெற்றேன். அதுவே எனக்குத் தொடர்ந்து எழுதுவதற்கான உற்சாகத்தையும் அளிக்கிறது. என்னுடைய கதைகளின் களமும் பெரும்பாலும் அவ்வாறாகவே இருக்கிறது. தொலைதூர நாட்டில் ஒரே ஊர்க்காரர்கள் தற்செயலாக அறிமுகமாகிக் கொள்ளும்போது அவர்களை முன்பின் அறிந்திராவிடினும் அவர்களிடத்தே நமக்கு ஒருவித வாஞ்சை பிறக்குமில்லையா? அப்படியான உறவே எனக்கும் அவருக்கும். அவர் வேளச்சேரியில் தங்கியிருந்த நாட்களில் நானும் அதே வேளச்சேரியில் தங்கியிருந்தேன். ஆனால் அவரை ஒருமுறைகூட நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றவே இல்லை. இத்தனைக்கும் அந்தக் காலகட்டத்தில்தான் அவரின் பெரும்பான்மையான ஆக்கங்கள் பலவற்றையும் தேடித் தேடி வாசித்துக் கொண்டிருந்தேன்.

சிறுகதையை வெளிப்பாட்டு களமாக தேர்ந்ததன் காரணம் என்ன, தமிழ் சிறுகதையாளராக இதிலுள்ள சவால்கள் என்ன? தற்கால சிறுகதையாளர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன?

கார்த்திக்: சிறுகதைகள் எனக்கு எப்போதும் ஆச்சர்யமளிக்கின்றன. குறைந்த பக்கங்களில் நாம் நினைப்பதைக் கதையில் கொண்டு வருவதும், மனித மனதின் நுட்பமான உணர்வுகளை வாசகனுக்கு கடத்துவதும் பெரும் சவாலாக இருக்கிறது. அந்தச் சவால் பிடிக்கவும் செய்கிறது. அதே நேரத்தில், வேறு எந்த இலக்கிய வடிவத்தைவிடவும் தமிழில் சிறுகதை அடைந்திருக்கும் உயரம் மிகப்பெரியது. இதில் பேசப்படாத பொருளோ, சோதிக்கப்படாத வடிவமோ இல்லை என்று சொல்லும் அளவுக்கு பரீட்சார்த்த முயற்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன. சிறுகதைகளில் அழுந்தத் தடம் பதித்த முன்னோடிகள் பலரும் இயங்கிய களத்தில் நாமும் இருக்கிறோம் என்பதே அதீத பொறுப்பையும், அவர்களை மீறி நாம் புதிதாக என்ன செய்துவிட முடியும் என்ற அச்சத்தையும் ஒரே நேரத்தில் அளிக்கிறது. இவற்றை மீறித்தான் இன்று எழுத வருபவர்கள் எழுத வேண்டியிருக்கிறது. படைப்பும் பிரசுரமும் டிஜிட்டலாகிவிட்ட இந்தக் காலத்தில் சரியான வாசகர்களிடம் ஓர் எழுத்தாளன் தன்னைக் கொண்டு சேர்ப்பதே அவன் முன் இருக்கும் மிகப்பெரிய சவால்தான். நூற்றுக்கணக்கான கதைகள் அச்சு, இணையம் என்று பல்வேறு தளங்களில் ஒரே நேரத்தில் வெளிவரும்போது, நல்லதோர் ஆக்கம் அதற்குரிய கவனத்தைப் பெறாமல் போவதற்கான சாத்தியம் அதிகம். எனவே இன்று எழுதுபவர்கள் தரமான படைப்புகளை, தொடர்ச்சியாகக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதன் மூலம் மட்டுமே அவர்கள் உரிய கவனத்தையும், அங்கீகாரத்தையும் பெறவியலும், அதற்காக இன்றைய எழுத்துக்காரர்கள் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கிறது.

தகவல் தொழில்நுட்ப துறையை களமாக கொண்டு கதைகளை எழுதி இருக்கிறீர்கள். அதன் தேவையும், சவால்களும் என்ன? ஏனெனில் சில வேளைகளில் அது இந்த துறையை புனிதப்படுத்தும் ஒற்றைப்படைத்தன்மை கொண்டதாக ஆகும் அபாயமும் இருக்கிறது

கார்த்திக்: நான் இந்தத் துறையில் அன்றாடம் புழங்குகிறேன். இத்துறை பற்றி இருக்கும் பொதுவான பிம்பத்துக்கும் உண்மையான நிலைமைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. பத்தாண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலைமை வேறு; இப்போது இருக்கும் நிலைமை முற்றிலும் வேறு. ஆனாலும் முன்பு எப்போதோ ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பமே இப்போதும் தக்க வைக்கப்படுகிறது. சரியாக பத்தாண்டுகளுக்கு முன்பு நான் வேலைக்குச் சேர்ந்தபோது வருடத்துக்கு மூன்று லட்சம் சம்பளமாகக் கொடுத்தார்கள். இன்றும் அவ்வளவே தருகிறார்கள். ஆனால் பணவீக்கமோ ஆண்டுக்கு பத்து சதவீதம் என்றளவில் போய்க் கொண்டிருக்கிறது. அவ்வாறே எதிர்மறையான அனுபவங்களும் அதீதமாகவே சொல்லப்படுகின்றன. ஐ.டி. வேலையென்றாலே ஒரே அழுத்தம், கொடுமை என்றெல்லாம். எல்லாருக்கும் அப்படியில்லை. காலை 9 மணிக்கு வந்து 5 மணிக்கு இடத்தை காலி செய்பவர்களே இங்கே அதிகம். ‘பாரிட்டோ தியரி’ கேள்விப்பட்டிருப்பீர்களே. அது ஐ.டிக்கு மிகவும் பொருந்தும். இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் கடந்த இருபது வருடங்களில் நல்லவிதமாகவோ அல்லாமலோ ஐ.டி.துறை நம் சமூக பொருளாதார நிலைமையில் பொருட்படுத்தத்தக்க பெரிய மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. எனவே அது குறித்த பதிவுகளை முடிந்த வரை நேர்மையாக சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.

அனுபவங்களை, நினைவுகளை கதையாக்குவதில் உள்ள சவால் என்ன?

கார்த்திக்: சொந்த அனுபவங்களை, நமது நினைவுகளை, விருப்பங்களை கதையாக்கும்போது நம்மையறியாமல் சமநிலை தவறிவிடும் வாய்ப்பு அதிகம். மேலும், நமது அனுபவங்களைப் பொதுவான ஓர் அனுபவமாக மாற்றத் தவறிவிட்டால் அது வெறும் சுயபுலம்பலாக பதிவாகிவிடும் சாத்தியமும் இருக்கிறது. நமது வாழ்வின் சில தெறிப்புகளில் இருந்து எடுத்தெழுதும் ஒரு படைப்பு, வாசகன் தன்னுடைய வாழ்வின் சில தருணங்களுடன் பொருத்திப் பார்க்கும்படி அமையும்போது மட்டுமே அது உயர்ந்த படைப்பாக நிலைபெறுகிறது. அசோகமித்திரனின் புலிக்கலைஞனை நான் பார்த்ததில்லை. ஆனால், ஷாமியானா பந்தல்கள் வந்த பிறகு, கூரைப் பந்தல்கள் வேயும் தொழிலை விட்டுவிட்ட பெரியவர் ஒருவரை எனக்குத் தெரியும். இருவருக்கும் ஒரே சாயல்தான்.

கதைக் களங்கள் ஆஸ்ட்ரேலியா, நொய்டா, சென்னை, கிராமம், சிறு நகரங்கள் என பல இடங்களில் நிகழ்கின்றன. இந்த வாழ்க்கை அனுபவங்கள் உங்கள் புனைவுலகை எப்படி செறிவூட்டி உள்ளன?

கார்த்திக்: சிட்னிக்கு நான் சென்று சேர்வதற்கு ஒரு மாதம் முன்புதான் அங்கு ஐ.டியில் வேலை பார்த்த பெண் ஒருத்தி அடையாளம் காணப்படாத நபர் ஒருவரால் ஒரு பூங்காவில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்தாள். மேலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் களத்தில் செய்யும் அட்டகாசங்கள் எல்லாம் சேர்த்து அங்கு செல்வதற்கு முன்பே ஒருவித எதிர் மனப்பான்மையை எனக்கு அளித்திருந்தன. ஆனால் நான் அங்கிருந்த இரண்டு ஆண்டுகளில் எனக்குக் கிடைத்தது முற்றிலும் புதிய அனுபவங்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பொழுதுகளில் ஒரு முறை கூட ஒருவரும் என் மனம் வருந்தும்படி நடந்து கொள்ளவில்லை. குறைந்தபட்சம் என் முன்னாவது. இந்திய கலாச்சாரத்தின் மீது பெரிய மதிப்பு வைத்திருக்கிறார்கள். நமது கூட்டுக் குடும்பங்கள் பற்றி சிலாகிக்கிறார்கள். பொதுவாக கட்டமைக்கப்படும் பிம்பத்துக்கும் உண்மை நிலைக்கும் எப்போதும் நிறைய வேறுபாடு இருக்கிறது. இது போன்ற அனுபவங்கள் என்னுடைய பார்வையை மாற்றியமைக்கின்றன. அவை என் படைப்புகளிலும் பிரதிபலிக்கின்றன.

கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதுண்டா?

கார்த்திக்: கவிதைகளை வாசிப்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன். புனைவைவிட கட்டுரைகள் அதிக உழைப்பைக் கோருகின்றன. அதே நேரத்தில், அதில் எழுதுபவனுக்கான சுதந்திரமும் குறைவு. காந்தியைப் பற்றி கேள்விப்பட்டதையோ, அவரைப் பற்றி அறிந்த ஒரு சில விசயங்களையோ முன்வைத்து ஒரு சிறுகதை எழுதுவது எளிது. ஆனால், ‘காந்தியம்’ குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டுமானால், காந்தியைப் பற்றியும் அவரது கொள்கைகள் பற்றியும் நிறைய வாசிக்க வேண்டும். புனைவில் உண்மைக்குப் பக்கம் இருந்தால் போதும். ஏன், அதற்கு முற்றிலும் எதிராக இருந்தும்கூட புனைவினைப் படைத்துவிட முடியும். ஆனால், கட்டுரைகளில் இம்மியளவும் உண்மையிலிருந்து விலகிவிட முடியாது. இப்போதுகூட ஒரு சிறுகதைத் தொகுப்பு பற்றிய வாசிப்பனுபவ கட்டுரை ஒன்று எழுதிக் கொண்டிருக்கிறேன். அதில் ‘நாகம்’ பற்றிய ஒரு கதை வருகிறது. அதை விமர்சிக்க தமிழில் இதுவரை வெளிந்துள்ள ‘நாகம்’ பற்றிய கதைகள் என ஏழெட்டு கதைகளை வாசிக்க வேண்டியிருக்கிறது. எனவே, இதுபோல எப்போதாவது தவிர்க்கவியலாத தருணங்களில் மட்டும் கட்டுரை பக்கம் போவதுண்டு.

வாசிப்பது தவிர்த்து, பயணம், உலக சினிமா, வரலாறு, ஓவியம், இசை போன்ற இதர துறைகளில் ஆர்வம் உண்டா?

கார்த்திக்: இல்லை. வீடு, வேலை, இலக்கியம் இவற்றுக்கே நேரம் சரியாக இருக்கிறது. தத்துவம் பற்றி அறிய ஆர்வம் இருக்கிறது ஆனால் இப்போதைக்கு நேரம்தான் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகத் தொடங்க வேண்டும்.

சிறுகதை தொகுப்பிற்கு எத்தகைய வரவேற்பும் விமர்சனமும் கவனிப்பும் கிட்டியது?

கார்த்திக்: நான் எதிர்பார்த்ததைவிட ஓரளவு கவனம் பெற்றதாகவே கருதுகிறேன். தொகுப்பை வாசித்துவிட்டு நல்லது கெட்டது இரண்டையும் அடிக்கோடிட்டு நண்பர்கள் எழுதியிருந்தார்கள். எழுத்தாளர் ஜீ.முருகன், பாஸ்கர் சக்தி, ரவி சுப்பிரமணியன் ஆகியோரும் சுரேஷ் வெங்கடாத்ரி, வினோத் ராஜ் முதலிய நண்பர்கள் சிலரும் எழுதிய குறிப்புகளும் முக்கியமானவை. விருட்சம் அழகிய சிங்கர் போனில் அழைத்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு மிகவும் திருப்தியளித்த தொகுப்பு இது என்றார். கவிஞரும் எழுத்தாளருமான பிரம்மராஜனும் இத்தொகுப்பு குறித்து நல்லபடியான விமர்சனங்களை முன்வைத்ததாக பதிப்பாளரும் நண்பருமான ஜீவகரிகாலன் கூறினார். அதே போல திடீரென்று முன் பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் பாராட்டுகள் மிகுந்த உற்சாகம் கொடுப்பவை. இன்னும் பொறுப்புடன் எழுத வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். இத்தொகுப்பை பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்றதில் நண்பர் ஜீவகரிகாலனுக்கு முக்கிய பங்கு உண்டு. அவருக்கும் யாவரும் பதிப்பகத்துக்கும் என் நன்றிகள். எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் இல்லையென்றால் இத்தொகுப்பே சாத்தியமாயிருக்காது. இக்கதைகளை தொகுப்பாக்க ஊக்கம் தந்து கூடவே அழகான முன்னுரை ஒன்றை எழுதியும் தந்த அவருக்கு எப்போதும் என் அன்பும் நன்றிகளும்.

நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் களம் எத்தகையது? சிறிய அறிமுகம்-

கார்த்திக்: இப்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவலும் நான் சார்ந்திருக்கும் தகவல் தொழில்நுட்பத் துறையைக் களமாகக் கொண்டதுதான். லட்சக்கணக்கானவர்கள் இங்கு வேலை பார்த்தாலும் அத்தனை பேரும் உதிரிகளே. யாரும் யாருடனும் இல்லை. இதைப் பின்புலமாக வைத்து, ஊடாக இன்றைய இளம் தம்பதிகளின் அகவாழ்வுச் சிக்கல்களையும் பேசும் நாவலாக இது இருக்கும். அகத்திலும் புறத்திலும் உதிரிகளாக உலவும் மனிதர்களைப் பற்றிய கதை என்பதால் “உதிரிகள்” என்றே தலைப்பும் வைத்திருக்கிறேன்.

எதற்காக எழுதுகிறேன் என கேட்டால் என்ன சொல்வீர்கள்?

கார்த்திக்: எழுதுவதால் மட்டுமே இருப்பதாக உணர்கிறேன். எழுத்தே என் அடையாளமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் எழுதுகிறேன்.

சின்ட்ரெல்லாவின் தேவகுமாரன் – பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி கவிதை

பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி

இனி யாரும்
அவனிடம் போய்
எப்போது சொல்வாய் என்று கேட்காதீர்கள்.
ஒரு மெல்லிய மௌனத்தினை கொஞ்சம் கொஞ்சமாய்
மொழிபெயர்க்க தொடங்கியதிலிருந்து
அவனிடம் சொற்கள் இல்லை
இப்போது
அதை எப்படி பிரயோகிப்பது என்பதையும் மறந்துவிட்டான்.
தெரிந்தும் தெரியாமலும்
ஒரு பரிபூரண சுழியத்துக்குள்
உழன்றுகொண்டிருக்கிறான்
உங்களுக்கு இதெல்லாம்
ஒருவிதமான மிரட்சியாய் இருக்கலாம்
எந்தவித பரிச்சயமுமில்லாமல் இருக்கலாம்
ஆகையால் அவனை அப்படியே விட்டுவிடுங்கள்.
அவன் சின்ட்ரெல்லாவின் பிரதிபதிலுக்காக காத்திருக்கும் தேவகுமாரன்.
கொஞ்சமும் சுவாரஸ்யமற்ற
அந்த சபிக்கப்பட்ட காத்திருப்பு நாட்களை
கடத்த இயன்றவரை
இதுவரையிலும் அவளுக்காக காகிதத்தில் மையலிட்டு
காதலை எழுதி நிரப்பிக்கொண்டிருக்கிறான்
சிலவற்றை
பத்திரப்படுத்திக் கொள்கிறான்
சில சமயங்களில்
வெற்றுக் காகிதத்தை
முத்தமிட்டு சிரிக்கிறான்
இப்படியே மெல்ல நகர்கிறது
இவனது நாட்கள்
நீளும் இந்த இரவின்
சப்தமற்ற நிசப்தங்களைப் போல..
ஆம்
அவனுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை
அவள் முடிவி்லா காலத்தின் தேவதைகளின் தேவதை சின்ட்ரெல்லாவின் பிரதி பதிலுக்காய்
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும்
தேவகுமாரன் என்று
அதனால்
இனி யாரும்
அவனிடம் போய்
எப்போது சொல்வாய் என்று கேட்காதீர்கள்

விமர்சனக் கலை: எதிர்பார்ப்புகளும் சவால்களும் – நரோபா

நரோபா

(விஷ்ணுபுரம் ஊட்டி காவிய முகாமில் மே 6 ஆம் தேதி ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்)

தேர்ந்த விமர்சகனின் இயல்புகள் எவை? விமர்சகனின் பங்களிப்புகள் எத்தகையவை? விமர்சகன் தவறும் இடங்கள் எவை? இக்கேள்விகளையொட்டி விமர்சனத்தின் சவால்களையும், முறைமைகளையும் இக்கட்டுரை விவாதிக்க முனைகிறது.

எதற்காக வாசிக்கிறேன்? கலை யாருக்காக? எழுத்தாளன் கருவியா, கர்த்தாவா? இலக்கியத்தின் பயன்மதிப்பு என்ன?- என காலம்காலமாக விவாதிக்கப்படும், இறுதி விடை என ஏதும் எட்டப்படாத, சில கேள்விகளை முதலில் விமர்சகன் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அக்கேள்விகளுக்கான விடையைப் பொருத்தே அவனுடைய விமர்சன அளவுகோல் உருவாகிறது.

எதற்காக வாசிக்கிறேன் எனும் கேள்விக்கான விடை ‘இதன் அழகியல் நுட்பங்களில்’ லயிப்பதற்காக என்றிருக்கும்போது என் விமர்சனப் பாணி ரசனை விமர்சனமாகவே இருக்கும். ரசனைப் பாணியை நான் முன்னெடுக்கிறேன் என்பதன் பொருள், மார்க்சிய, கட்டுடைப்பு, நவ-வரலாற்றுவாத, பெண்ணிய மற்றும் இன்னபிற கோட்பாடுகளின் மீதான அக்கறை எனக்கு இரண்டாம் பட்சம் என்பதே. ஒரு படைப்புருவாக்கத்தின் சமூக ஆற்றல்களின் பங்களிப்புகளை அறிந்து கொள்வது ரசனை வாசிப்புக்கு அடுத்தபடியான மேலதிக ஆர்வம் என்ற அளவில் அதற்கொரு இடமுண்டு என்பதையும் மறுக்கவில்லை.

ஹெரால்ட் ப்ளூம் அழகியல் வாசிப்பைத் தவிர பிற அனைத்தையும் வாசிப்பே அல்ல என்கிறார். இலக்கியத்தில் சமூக நீதிக்கு இடமில்லை என்று காட்டமாகவே சொல்கிறார். பிற வாசிப்புகளை முழுமையாக நிராகரிக்க முடியாது என்பதே நான் அவரிடமிருந்து வேறுபடும் புள்ளி. ஆனால் ஒரு படைப்பின் பெறுமதியை நிலைநாட்ட அது உருவான சமூக, வரலாற்று, அரசியல் பின்புலத்தை காரணமாக முன்வைக்கக் கூடாது. பிரதியின் அழகியல் வாசிப்பு பின்னுக்குத் தள்ளப்பட்டு அரசியல் காரணங்கள் அதன் இடத்தை நிர்ணயிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. அழகியல் ரீதியாக சாதாரண படைப்புகள் அரசியல் உள்ளடக்கத்தின் காரணமாக விதந்தோதப்படுவது இலக்கியச் செயல்பாடுக்கு எதிரானது. அழகியல் வாசிப்பிற்கு மேலதிகமாக கோட்பாட்டு சட்டகங்களை பயன்படுத்தும்போது அது வாசிப்பை மேன்மை செய்யும் வாய்ப்பு உண்டு. நவீன மனிதன் எப்படி உருவாகி வருகிறான், அவனுடைய கவலைகள் எத்தகையவையாக உள்ளன, என்பதை சமூக வரலாற்று சூழலைக் கருத்தில் கொண்டு வரையறை செய்யும்போது ஒரு இலக்கிய பிரதியின் உருவாக்கத்தை மேலதிகமாக உள்வாங்க முடிகிறது. ஜார்ஜ் ஆர்வெல்லை புரிந்துகொள்ள ஐரோப்பிய சர்வாதிகாரத்தின் வரலாறு தெரிந்திருப்பது வாசிப்பை ஆழப்படுத்துகிறது.

ப்ளூமின் பிரசித்தி பெற்ற மேற்கோள் ஒன்றுண்டு- “ஷேக்ஸ்பியரை ஃபிராய்டிய கண்ணோட்டத்தில் வாசித்தால் அது குறைத்தல்வாதம், நாம் பெறுவதற்கு எதுவுமே இல்லை, ஆனால் ஃப்ராய்டை ஷேக்ஸ்பியரின் கண்ணோட்டத்தில் வாசிக்கும்போது பல புதிய கோணங்களை திறக்கும்”. கோட்பாட்டு விமர்சனங்கள் வழியாக புனைவுகளைப் அறிவதைக் காட்டிலும் அக்கோட்பாட்டைப் பற்றிதான் நாம் அதிகம் அறிகிறோம். கொஞ்சம் மெனக்கிட்டு வாசித்தால் நாம் கோட்பாடுகளின் நிலைப்பாடுகளை அறிந்து கொள்ளலாம். புதிய நுட்பங்கள் என எதுவும் அங்கு வந்து சேர்வதில்லை. எனினும் காலப்போக்கில் புதிய கோட்பாடுகள், வரையறைகள் உருவாகியவண்ணம் இருக்கின்றன. ரசனை ரீதியாக முக்கியத்துவம் பெற்ற படைப்புகளின் மீதான மேலதிக வாசிப்பை அளிக்கும் வகையில் உலகம் முழுவதும் கோட்பாடுகள் பயன்படுத்தப்படும் சூழலில், தமிழில் மட்டும் தேர்ந்த படைப்புகளை உதாசீனப்படுத்துவதற்கே அவை பயன்படுத்தப்படுவது விந்தைதான்.

புனைவுகளைச் சமூக மாற்றத்திற்கான கருவியாக காண்பது இங்கு பெண்ணிய, தலித்திய (பொதுவாய் அரசியல் அதிகாரத்தை மையப்படுத்தும்) வாசிப்பு. விடுதலையைப் பேசவில்லை என்றால் அதை அவர்கள் ஏற்பதில்லை. வர்க்கப் போராட்டத்தில் புனைவின் நிலைப்பாடு என்ன, இப்பிரதி அதை துரிதப்படுத்துமா, என்ற கேள்விகளே மார்க்சிய கவலையாக இருக்கிறது. நவவரலாற்றுவாதிகள் இப்புனைவு எங்கே அதிகார மாற்றம் அல்லது அதிகாரக் குவிப்பை நிகழ்த்த உத்தேசிக்கிறது, எவருடைய பிரதிநிதி என்று கேட்கின்றனர். இந்த புனைவை உருவாக்கிய சமூக, வரலாற்று காரணிகள் எவை என ஆராய்கின்றனர். நவவரலாற்றுவாதம் எழுத்தாளனின் பங்களிப்பை மறுக்கிறது. சமூக வரலாற்று காரணிகள் திரண்டு நிற்கும்போது அதை வெளிப்படுத்தும் ஊடகமாக மட்டுமே எழுத்தாளன் இருக்கிறான் என்கிறது. கவிஞரும் விமர்சகருமான டி.எஸ். எலியட் அவருடைய புகழ்பெற்ற ‘மரபும் தனித்திறமையும்’ எனும் கட்டுரையில் வேறு வகையில் எழுத்தாளனை மறுக்கிறார். எழுத்தாளன் ஒட்டுமொத்த கவிமரபைக் கற்றவன். அவன் வழியாக ஏற்கனவே உள்ளவை தம்மை வெளிப்படுத்திக்கொள்கின்றன என்கிறார். எழுத்தாளனின் தனித்தன்மையைத் தேடித் தேடி கொண்டாடுவதையே அவர் ஏற்க மறுக்கிறார்.

இதுவரை பேசப்பட்ட மேற்கத்திய கோட்பாடுகளை அப்படியே இறக்குமதி செய்யாமல் அவற்றுக்கு மாற்றாய் இந்தியச் இலக்கியச் சட்டகங்களை உருவாக்க வேண்டும் எனும் வாதம் கவனத்துடன் பரிசீலிக்கப் படவேண்டும். அதுவும் மற்றுமொரு கோட்பாட்டு விமர்சனமாகி விடலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வாசிப்பு என்பது தனித்த அந்தரங்க செயல்பாடு என்பதே ரசனை விமர்சனத்தின் அடிப்படை.

எழுத்தாளனுக்கும் எழுத்துக்கும் என்னவிதமான தொடர்பு உள்ளது எனும் கேள்வியை நாம் எழுப்பிக்கொண்டால் நம் விமர்சன முறைமை மேலும் துலக்கமாகும். எழுத்தாளனின் தனித்தன்மையை, திறமையை, உழைப்பைக் கொண்டாடும்போது ரசனை விமர்சனமாகவும் அவனை மரபின் குரலாக அல்லது சமூக ஆற்றலின் குரலாகக் காண்பது கோட்பாட்டு விமர்சனமாகவும் ஆகும். ஏனெனில் இதன் உட்பொருள் மரபோ, சமூக ஆற்றல்களோ தமது ஊடகத்தை தேர்ந்து எடுக்கின்றன என்பதே. ஷேக்ஸ்பியரோ தால்ஸ்தாயோ தாஸ்தாயேவ்ஸ்கியோ இல்லையென்றால் வேறொருவர் வழியாக இவை வெளிப்படும் எனும் நம்பிக்கையை அடிநாதமாகக் கொண்டவை. எழுத்தாளன் கருவியா, கர்த்தாவா, என்ற கேள்விக்கு என்னிடம் தீர்மானமான விடையில்லை. கர்த்தா என நம்ப விழைந்தாலும் அவன் கருவியாகவும் இயங்குகிறான் என்றே தோன்றுகிறது. எனினும் கருவியாக கலையை வெளிபடுத்தக்கூட எழுத்தாளன் தொடர்ந்து தன்னைக் கூர்மை செய்து, முனைப்புடன் அயராத உழைப்பை செலுத்த வேண்டியிருக்கிறது. அதற்கொரு தனியாளுமை உருவாக வேண்டும்.

பொதுவாக மார்க்சிய/ நவவரலாற்றுவாத சட்டகங்கள், அல்லது அது போன்ற பிற கோட்பாட்டுச் சட்டகங்கள், நாம் அறியாமலேயே நமக்குள் இருப்பதைக் கண்டடைவதே விமர்சகனின் சவால். எனக்குள் ஒரு நவவரலாற்றுவாதி இருந்ததை விமர்சன முறைமை குறித்தான வாசிப்புகள் வழியாக கண்டடைந்து திகைத்தேன். ஒருவேளை அதுதான் நாம் செல்ல விரும்பும் பாதை என்றால், அதற்குமுன் புனைவின் பயன்மதிப்பு என்ன எனும் கேள்வியை கேட்டுக்கொள்ள வேண்டும். புனைவுகள் சமூக மேம்பாட்டிற்கான கருவி எனும் நம்பிக்கை நம்மிடமிருந்தால் நாம் ரசனை விமர்சகர் அல்ல.

இத்தருணத்தில் வு மிங் யி யின் சொற்களை பொருத்திக் கொள்கிறேன் “சில நேரங்களில் எல்லா கலைகளுமே கடைசியில் சுயநலம் மிகுந்தவை என்று தோன்றுகிறது, அது பிறர் மனதில் உறுதியாக மாற்றம் ஏற்படுத்தும் என்று சொல்லமுடியாது- ஆனால் என்ன மாறுகிறதோ அதை நாம் மட்டுமே அறிய முடியும்”. ப்ளூம் நாம் இலக்கியத்தின் வழியாக மேம்படுவோம் என்பதை மறுக்கிறார். நம் அகக்குரல், இன்னும் சற்று துல்லியமாக கேட்கும் என்பதை மட்டுமே இலக்கிய வாசிப்பின் பயன்மதிப்பு என்கிறார். இலக்கிய பிரதிகள் சமூகத்தை மேம்படுத்துமா, வரலாற்றுப் போக்கை மாற்றியமைக்குமா, என்று கேட்டால், அப்படி நிகழ வாய்ப்புள்ளது. சில முன்னுதாரணங்களையும் சுட்ட முடியும். ஆனால் இத்தகைய நோக்கத்தை பிரகடனப்படுத்திக்கொண்டு ஒரு இலக்கியம் படைக்கப்படுமேயானால் அதன் ஆதாரமான கலையம்சம் காணாமல் போய்விடும் அபாயம் உண்டு.

முதன்மையாக, விமர்சகன் ஒரு வாசகன்தான். ஆனால் வாசகனுக்கு இருக்கும் தேர்வும் சுதந்திரமும் விமர்சகனுக்கு இருப்பதில்லை. அவனுக்குரிய கூடுதல் பொறுப்பின் காரணமாக அவனுக்குப் பிடித்தது, பிடிக்காதது எனும் பேதமின்றி, வசதிகளை துறந்து, அவனை சங்கடப்படுத்தும், நேரத்தை விழுங்கும், புதிய உலகிற்குள்ளும் பயணித்தாக வேண்டும். பெரும்பாலான சமயங்களில் இது அவனுக்கு வாதையாக இருந்தாலும்கூட, வேறு எவரும் கண்டடையாத ஒன்றை, ஒரு புதிய வாசிப்பைக் கண்டறிந்து அதை உலகிற்கு அறிவிக்கும் சாத்தியம் அவனை இயக்குகிறது. அரிதான தருணங்களில் அப்படி நிகழும்போது ஏற்படும் போதையே அவனுக்கு இப்பாதையில் பயணிக்க ஆற்றல் அளிக்கிறது.

தமிழ்ச் சூழலில் எழுத்தாளர்களே விமர்சகர்களாகவும் இருப்பதால் இங்கு ரசனை விமர்சனமே மேலோங்கியுள்ளது. எழுத்தாளன் விமர்சகனாக இருக்கும் பட்சத்தில் அவனுக்கு சக எழுத்தாளனிடமும், முன்னோடிகளிடமும் கற்றுக்கொள்ள, உள்வாங்கிக்கொள்ள ஏராளமான நுட்பங்கள் கிட்டும். உள்ளூர அவன் தனது கலையுடன் ஒப்பிட்டு சுயமதிப்பீடு செய்துக்கொண்டே வருவான். ஆனால் எழுத்தாளன் விமர்சகனாக இருப்பதில் சில சிக்கல்கள் இல்லாமல் இல்லை. அவனுடைய படைப்பு மனம் சில சாதாரணமான சாத்தியங்களை கற்பனையாற்றலால் வளர்த்துப் பெருக்கிக் கொள்ளும். ஆகவே சில சமயங்களில் சாதாரண படைப்பும்கூட அவன் பார்வையில் அசாதாரணமாக ஆகிவிடும். ஒரு விமர்சகனாக அந்தப் படைப்பின் மேன்மையை அவனால் நிறுவ முடியாமல் போகும். ஆகவே எழுத்தாளர்- விமர்சகர்களை அவர்களுடைய சாய்வுகளுடன் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் ரசனை விமர்சனத்தின் அளவுகோல் என்பது முற்றிலும் விமர்சகனின் வாசிப்பு விசாலம் மற்றும் நேர்மையை சார்ந்தது. அவன் சுட்டிக்காட்டுவதாலேயே ஒரு படைப்பு மேலானதாக ஆகிவிடாது. வாசக பரப்பும் ஏற்கும்போதே அது நிகழ்கிறது. ஒரு பிரதியை அதன் எழுத்தாளனோ அல்லது விமர்சகனின் பட்டியலோ ‘கேனானாக’ உயர்த்த முடியாது என்பதை தெளிவாக சொல்கிறார் ப்ளூம். வாசகனை விடவும், எழுத்தாளனை விடவும் விமர்சகன் வாசிப்பில் ஒருபடி முன்னே செல்ல வேண்டியது அவசியமாகும். அதுவே அவனுடைய விமர்சனத்தின் எல்லையை தீர்மானிக்கும். கோட்பாட்டு விமர்சகர்கள் ரசனை விமர்சனத்தின் மிகப்பெரிய குறைபாடாகச் சுட்டிக் காட்டுவது இந்த அகவய அம்சத்தைத்தான். சமூக பொறுப்பிலிருந்து நழுவி, ரசனை விமர்சனத்தின் பெயரால் எதையும் நியாயப்படுத்திவிட முடிகின்ற அபாயம் உள்ளது. புறவயமான அலகுகள் ஏதுமில்லை. மேலும் படைப்பிற்கும், படைப்பாளிக்கும் சமூக அக்கறையும் பொறுப்பும் உள்ளதா எனும் வினாவை அவர்கள் எழுப்புவார்கள். என்னளவில் எழுத்தாளன் தான் எழுதிய சொற்களை அன்றி வேறெதற்கும் பொறுப்பில்லை.

பரந்த வாசிப்பு விமர்சகனுக்கு தேவை என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அதுவே தடையாகவும் ஆகிவிடக்கூடும். ஒவ்வொரு முறையும் படைப்பின் முன் தான் சேகரித்தவற்றை, சுமந்து வருபவை அனைத்தையும் களைந்து நிற்க வேண்டும். விமர்சகன் தனக்கென உருவாக்கிக் கொண்ட அளவுகோலை களையவில்லை என்றால் தன் அளவுகோலுக்கு பொருந்தாதவை அவனுள் புகாது. நல்ல விமர்சகன் தனது எல்லையைக் கடக்க முயல்வான். ஒரு திறந்த வாசகனாகவே இருப்பான். தீர்மானமான அளவுகோல் வாசகனுக்கும் விமர்சகனுக்கும் பேரிழப்பு. அவன் ஒரு போதும் பனைமரத்தைப் பார்த்து, “நீ ஏன் இத்தனை உயரமாக, குறைந்த இலைகளுடன் இருக்கிறாய், செறிவான மாமரத்தைப் போல் இல்லை?” என வினவமாட்டான். நவீனத்துவ பிரதியின் அளவுகோலாக செவ்வியல் பிரதியையோ பின்நவீனத்துவ பிரதியையோ பயன்படுத்தமாட்டான். வரலாற்று நாவலை மிகுபுனைவு நாவலுடன் ஒப்பிட முடியாது என்பதை அறிவான். படைப்புகளுக்குதான் அளவுகோலே ஒழிய அளவுகோலுக்கு உகந்த படைப்புகள் அல்ல.

விமர்சகன் வறண்ட மனநிலை கொண்ட நீதிமான் எனும் எதிர்பார்ப்பு போலியானது. நல்ல விமர்சகன் ஒரு படைப்பாளியும்கூட. படைப்பு மனத்தின் தடுமாற்றங்களும், தத்தளிப்புகளும் அவனுக்கு உண்டு. அவனுடைய பழக்கப்பட்ட வாசிப்பு தளத்திற்கு வெளியே வரும் புத்தகங்களை எதிர்கொள்ளும்போது அதை உள்வாங்கத் திணறுவான். எழுத்தாளனின் படைப்புடன் சேர்ந்தியங்கும் சக படைப்பாளி என்றே விமர்சகனைச் சொல்ல வேண்டும்.

விமர்சனம் யாருக்காக என்றொரு கேள்வியை எழுப்பிக்கொண்டால், ஒரு புனைவெழுத்தாளனாக, ரசனை விமர்சனம் எழுத்தாளனை நோக்கி எழுதப்படுவது அல்ல, என்பதை உணர்கிறேன். எழுதத் துவங்கும் காலகட்டத்தில் அவனுடைய செய்திறனுக்கு சில விமர்சனங்கள் உதவலாம். அதற்கப்பால் எழுத்தாளன் விமர்சனத்தால் உருவாவதும் இல்லை,மேம்படுவதும் இல்லை. தான் எழுதியவற்றை இப்படியெல்லாம் வாசிக்கிறார்கள் எனும் புரிதலுக்கு மேல் அவனுக்கு விமர்சனம் எதையுமே அளிப்பதில்லை.

தமிழ்ச் சூழலில் விமர்சகருக்கும், பிரதி மேம்படுத்துனர், பதிப்பாசிரியர் வேறுபாடுகள் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். படைப்பு குறித்து கருத்து சொல்பவர்கள் அனைவரையுமே நாம் விமர்சகர் என்றே சொல்கிறோம். நேர்மறை விமர்சனங்கள் சொற்ப காலத்திற்கு அவனை ஆற்றுப்படுத்தலாம். ஏனெனில் புனைவின் கருப்பொருள் அவன் தேர்வது அல்ல, அது அவனுக்கு அளிக்கப்படுகிறது.

விமர்சனம் வாசகரை நோக்கியே பேச வேண்டும். இத்தெளிவு இருந்தால் எழுத்தாளனை தனிப்பட்ட முறையில் அடித்து வீழ்த்தும் விசை அவசியமற்றது என்பது பிடிபடும். மார்க்சிய, நவ வரலாற்றுவாத விமர்சகர்கள் எழுத்தாளனின் நோக்கத்தின் மீது கேள்வி எழுப்பி அவனை முத்திரை குத்த முனைவது போல் ரசனை விமர்சகன் ஒருபோதும் செய்யக்கூடாது. அவனுடைய அக்கறை முழுவதும் படைப்பில் வெளிப்படும் கலைத்தன்மை பற்றியதாக மட்டுமே இருக்க முடியும். அதிலுள்ள போலித்தனங்களை, பாவனைகளை சமரசமின்றி சுட்டிக்காட்ட வேண்டும். ரசனை விமர்சகன் எழுத்தாளனை வகைப்படுத்த மாட்டான், வரிசைப் படுத்துவான் என்பதை இங்கு கவனிக்க வேண்டும். அவ்வரிசை எழுத்தாளனின் படைப்புகளில் இப்பிரதியின் இடம் என்ன, ஒட்டுமொத்த இலக்கிய மரபில் இந்த பிரதியின்/ எழுத்தாளனின் இடம் என்ன, என இருவகையானவை.

ஆகவே, ஒரு தேர்ந்த விமர்சகனின் வேலை என்பது வாசகனிடம் படைப்பின் புதிய வாசிப்பு கோணங்களை, நுட்பங்களை கொண்டு சேர்ப்பதே. இலக்கிய வரலாற்று ஆசிரியனைப் போல் எழுத்தாளனையும் அவனுடைய பிரதியையும் இலக்கிய வரலாற்று வெளியில் பொருத்திக் காட்டுவதே. அதன் அழகியலை வேறு ஆக்கங்களுடன் ஒப்பு நோக்குவதே. எழுத்தாளனின் தனித்தன்மையை அடையாளபடுத்தும் பொறுப்பு அவனுக்கு இருக்கிறது. எழுத்தாளனை, பிரதியை ஒரு வரிசையில் வைக்கும்போது முன்னோடிகளிடம் இருக்கும் தொடர்ச்சியையும் அதிலிருந்து இவன் கிளைத்துப் பிரியும் புள்ளியையும் அடையாளம் காட்ட வேண்டியது விமர்சகனின் கடமை. பல சமயங்களில் விமர்சகனின் இத்தகைய செயல்பாடு எழுத்தாளனுக்கு உவக்காது. வாசகனில் இருந்து விமர்சகன் மேலெழும் புள்ளி என்பது அவனால் தன் நிலைப்பாடுகளை ஓரளவு தர்க்கபூர்வமாக முன்வைக்க முடிவதில் உள்ளது. தர்க்கமும்கூட ஒரு எல்லை வரைதான். ஏனெனில் அழகியல் ரசனை அந்தரங்கமானதும் கூட.

விமர்சகனின் சுட்டிக்காட்டுதல்கள் அது எத்தனை அப்பட்டமாக, சில வேளைகளில் வன்மம் தொனிப்பதாக இருந்தாலும்கூட அவன் இலக்கியத்தின் மீதான பெரும் காதலினால் மட்டுமே அதைச் செய்கிறான் எனும் புரிதல் முதலில் சக விமர்சகனுக்கும் பின்னர் வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் அவசியமாகிறது.

இறுதியாக ஒன்று, ஒரு நல்ல விமர்சகன் கடல் அலையை அல்ல, அந்த அலைகளுக்கு அடியில், ஆழத்தில், நீரின் திசையை, அதன் விசையைத் தீர்மானிக்கும், டெக்டானிக் தட்டுக்களின் அசைவை காட்டுவதற்கே முயல்கிறான்.

அச்சாணி – பிறைநுதல் கவிதை

பிறைநுதல்

இயல்பானதொரு தேவைக்கு
இரண்டாயிரம் தேவை.
செலவுகள் எல்லாம்
கழிந்தபின் கொள்ளலாமென்றே
கழிந்த மாதங்கள் பல.
ஆயினும்
செலவுகள் மொத்தமும்
தீர்க்கத் தேவை மாதந்தோறும்
இன்னும் இரண்டாயிரம்.
வெளியில் சொல்ல
வெட்கம் கொண்டு
வெறுமனே கழியும்
திங்கள்கள்.
ஓய்ந்த இரவின்
ஒரு பொழுதில் திறந்த
மனைவியின் மனதிலிருந்தது
சில நூறுகளின் தேவை
சில வருடங்களாய்.
எனக்காகச் சில மாதங்களும்
பிள்ளைகளுக்காக
பல மாதங்களுமாய்
தள்ளிப் போன தேவை
தனித்தேயிருக்கிறது
இன்னும்
எங்களிடமிருந்து.