வெளியே வெயிலின் பிரம்மாண்ட தொட்டில்
ஆடிக்கொண்டிருக்கிறது
இது காலை
தனது பாதங்களை
கனவில் மாட்டிக்கொண்டு ஓடுபவர்களின் பொன்வேளை
ஏதோ தன் காதலை கூற
தயங்கித்தயங்கி வரும் பெண்ணின் முகச்சாயலோடு
காற்றிலிருந்து அலைபோல வருகிறது சோப்பினின் இசைக்குறிப்பு
மேகத்தில் அரங்கு இருக்கிறதாம்
நிசப்தத்தின் தூதுவனொருவன் சொல்லிச் சென்றான்
மகுடிக்காடும் நாகத்தை போல கண்களிலுள்ள பனிச்சிகரங்கள் அசைகின்றன
எதிர்பாராத கணத்தின் மாளிகையொன்று திறந்துகொள்ள
என் தலை ஒரு பியானோவாகிறது
அதையிசைக்கிறது காலத்தின் திருக்கரம்
புராணங்களின் மதில்களை
எகிறி குதித்துவந்து
தூங்குகிறான் கும்பகர்ணன்
தன்னைத்தானே தூக்கி
தன் கையில்
வைத்துக்கொள்கிறது கயிலாயம்
எனக்கு தெரியவில்லை இசை நிற்குமா அல்லது உலகம் நிற்குமா