Author: பதாகை

தற்செயல் – வே. நி. சூரியா கவிதை

வே. நி. சூரியா

கால் ஊனமுற்ற குழந்தைகளின் சாக்லேட்டை நான் திருடுவது போலவும்
அவர்கள் துரத்திவருவது போலவும்
ஒரு கனவு
விழித்தவுடன், என்னை சீக்கிரம் எமதூதர்கள் கூட்டிச்செல்வது நல்லதென்று
முணுமுணுத்துக் கொண்டேன்
யாரோ கைதட்டும் சப்தம் கேட்கிறது

பாலசுப்பிரமணியன் பொன்ராஜின் ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’யை முன்வைத்து – நரோபா

நரோபா

‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ அதன் வடிவமைப்பில், பொருளில் என எல்லாவற்றிலும், எனை வழமையான கதைப் புத்தகமாக நடத்தாதே, நான் கூடுதல் கவனத்தை கோருபவன், என அறைக்கூவல் விடுக்கிறது. முன்னுரையே, “கடவுள் வாசகர்களாகிய உங்களை நீள முன்னுரைகளில் இருந்து காப்பாராக” எனும் போர்ஹெசின் மேற்கோளோடு துவங்குகிறது. அடுத்து ‘தோரணம்’ பகுதியில் சில மேற்கோள்கள் உள்ளன. அவை உண்மைக்கும், புனைவுக்கும், அசலுக்குமான உறவைச் சுட்டுகின்றன. அவருடைய ‘வலை’ கதையில் இந்த வினா விரிகிறது. நான் வாசிக்கும் பொருளடக்கம் இல்லாத முதல் சிறுகதை தொகுப்பு இதுதான். இத்தனை கதைகள் கொண்ட பாலசுப்பிரமணியன் பொன்ராஜின் சிறுகதை தொகுப்பு, என்று கட்டுரையை துவங்குவதற்கு முன் பக்கங்களைப் புரட்டியோ அல்லது நினைவுகளைத் தோண்டியோதான் எழுத வேண்டியிருக்கிறது. சிறுகதை தொகுப்பின் இறுதியில் குறிப்புகளுக்காக இரண்டு மூன்று பக்கங்கள் விடப்பட்டுள்ளன. இதுவும் தமிழ் சிறுகதைகளில் புதிய முன்மாதிரிதான்.

‘தந்திகள்’ ‘புடவு’  ‘உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்பவர்கள்’ ‘உடைந்துபோன ஒரு பூர்ஷ்வா கனவு’ ‘ஜங்க்’ ‘நாளை இறந்து போன நாய்’ ‘பன்னிரண்டு மரணங்களின் துயர் நிரம்பிய தொகுப்பேடு’ ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ ‘வலை’ என ஒன்பது சிறுகதைகள் கொண்ட தொகுப்பு ‘யாவரும்’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது (பட்டியலிடவில்லை என்றால் மனம் ஆறாது). இக்கதைகள் வழமையான சிறுகதை வடிவத்திற்கு பொருந்தாதவை. கடினமான, திருகல் எனக் கூறத்தக்க மொழியில் எழுதப்பட்டவை, அவசியம் என்றால் ஆங்கிலத்தைப் பயன்படுத்த தயங்காதவை, பெரும்பாலான கதைகள் தமிழ் நிலத்துடன் (அல்லது நிலத்துடன்) தொடர்பற்ற அந்நியத்தன்மை கொண்டவை. இவை யதார்த்தவாத கதைகளை மதிப்பிட உள்ள கருவிகள், பின்நவீனத்துவ கதைகளுக்குப் பொருந்தாது என்றொரு வாதம் வைக்கலாம். ஆனால் பின்நவீனத்துவ கதைகளுக்குரிய கட்டுடைப்பையோ, மொழி விளையாட்டையோ பாலாவின் கதைகளில் காண முடிவதில்லை. ஒரு எழுத்தாளரை, அவருடைய படைப்புகளை  நிராகரிக்க மேற்கண்ட காரணிகள் போதும்.

ஆனால் பாலா இவற்றைத்தான் தனது படைக்கலமாக கொள்கிறார். தனது படைப்புலகை தான் பிரத்தியேகமாக கண்டடைந்த சட்டங்களைச் சேர்த்து முடைகிறார். அதன் அத்தனை கோணல்கள், பிசிறுகள், துருத்தல்கள், பிழைகளோடும் அவை  கலையாகின்றன. காரணம் அவை கலைஞனின் தனிப்பட்ட தேடலை அவனுக்கே உரிய அசலான குரலில் பதிவாக்குகின்றன. அவ்வகையில் ஒரு வாசகனாக இத்தொகுதியில் உள்ள அனைத்து கதைகளுமே என்னை ஈர்த்தன. புதிய வகையான எழுத்தை வாசிக்கும் பரபரப்பு என்னை தொற்றிக் கொண்டது. கதை சொல்லல் முறையில் தமிழ் புனைகதை உலகில் பாலா தாக்கம் செலுத்துவார் என்றே எண்ணுகிறேன்.

பாலாவின் கதைமாந்தர்கள் அனைவரும் நடுத்தர, உயர்- நடுத்தர வர்க்கத்து நகரவாசிகள். எல்லா கதைசொல்லிகளும், அல்லது முக்கிய கதைமாந்தர்களும் ஆண்கள். பெண்கள் வலுவான பாத்திரங்களாக மனதில் நிலைகொள்ளவில்லை. பொருளாதார மந்த நிலை காரணமான வேலையிழப்பு ஒரு கதைமாந்தரைப் போல் சில கதைகளில் வலுவாக தனது இருப்பைப் பிரகடனப்படுத்திக் கொள்கிறது. ‘தந்திகள்’ கதையில் மாதக்கணக்கில் வேலையின்றி இருக்கும் கணவனை விட்டு மனைவி அகன்று செல்கிறாள். ‘உடைந்து போன பூர்ஷ்வா கனவு’ கதையிலும் சம்பத் எட்டு மாதங்களாக வேலையில்லாமல் இருக்கிறான். மெல்ல கணவன் மனைவிக்கு இடையே விரிசல் நேர்கிறது. நவீன வாழ்வு குடும்ப அமைப்பை என்னவாக மாற்றி இருக்கிறது? உறவுப் பின்னலின் வலுவிற்கும் பொருளாதார காரணிகளுக்கும் உள்ள தொடர்பு என்ன? இது போன்ற கேள்விகள் கதைகளில் விவாதப் பொருளாக ஆகின்றன.

‘தந்திகள்’ கதையில் இப்படி ஒரு வரி வருகிறது- ‘அவனுடைய விதியை விலங்கின் பெயரால் அழைக்க வேண்டுமென்றால் தயங்காமல் அது ஒரு பூனை என்பான்.’ மூன்று மாதமாக  புதிய சான்றிதழ் படிப்புக்கும் சேர்ந்திருக்கிறான். வேலைக்கான முனைப்பை இழந்தவனாக இருக்கும் அவனை விட்டு அவன் மனைவி அகன்று செல்கிறாள். ஒன்றுக்கு பதிலீடாக மற்றொன்று வரும் எனும் நம்பிக்கை அவனுக்கு உண்டு. மனைவி அவனை விட்டுச் சென்ற அன்று இந்தப் பூனை வந்து சேர்கிறது. இறந்து மூன்று மாதமாகியும் அழுகாமல் கிடக்கும் பூனையை புதிய சமையலறை கத்தியின் சோதனைக்காக பயன்படுத்த எண்ணுகிறான். ‘அழுகாத பூனையை அறுக்கவும் முடியாது’ என அதை தவிர்த்து விடுகிறான். எப்போதும் பிள்ளையை சுமந்து கொண்டு வரும் குடியிருப்பு காவலரின் ஒடிசலான மனைவி மீனாவின் சித்திரம் வருகிறது. பன்றி வேட்டையில் ஓலமிடும் பன்றியின் ஓலத்தைக் கேட்டு மருத்துவம் படிக்க வந்த ஈரானியர்கள் அவன் வீட்டிற்குள் நுழைகிறார்கள். உதிரிச் சரடுகளான இவை யாவும் எப்படி இசையாகிறது என்பதே ‘தந்திகள்’. மனிதர்கள் கதைகளால் பிணைக்கப்படுகிறார்கள்.

‘உடைந்து போன பூர்ஷ்வா கனவு’ நவீன முதலாளித்துவ நுகர்வு சார் வாழ்வு குடும்ப அமைப்பிற்குள் செலுத்தும் பாதிப்பைப் பற்றிய நல்ல பகடி. இரண்டு நண்பர்கள் அவர்களின் குடும்பங்கள், நவீன உயர் வர்க்க வாழ்வின் கொண்டாட்டங்களில் திளைப்பவர்கள். ஒவ்வொரு முக்கிய நாட்களிலும் பரஸ்பரம் அத்தியாவசியமான பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொள்பவர்கள். அந்த திருமண நாளுக்கு என்ன பரிசு கிடைக்கும் என வேலையிழப்பின் அழுத்தத்தில் நாக்கைத்’ தொங்கப் போட்டுக்கொண்டு காத்திருக்கும்போது மகேந்திரன் ஜோடி அவர்களுக்கு மிகவும் அவசியமான ‘அழுக்குக் கூடையை’ பரிசளிக்கிறது. உறவுகளின் ஊடே ஊடுருவும் பொருளியல் சமன்பாடுகள் குறித்தான அபார சித்திரம் அளிக்கும் கதை.

பாலாவின் மிக முக்கியமான பலம் என்பது நுண்ணிய காட்சிச் சித்தரிப்பு. அவை கவித்துவமாகவும் திகழ்கின்றன. ‘சித்திரையில் பெய்த கோடை மழையின் ஈரம் வற்றிய ஓடைத்தடத்தின் நுண் துகள் மணலில் வெய்யிலுக்கு முதுகைக் காண்பித்துக் கிடக்கும் கூழாங்கற்களை மிதித்து மேலேறினர் மூவர்.’ ‘காமிக்ஸ் வேதாளத்தின் கண்கள்’ போல பாறையின் பொத்தல்கள் தென்படுகின்றன. சுடப்படும்போது ‘கரையான் புற்றின் வாயிலிருந்து பாம்பு வெளியேறுவது போல என் உடலில் இருந்து குருதி வெளியேறியதைப் பார்த்தேன்.’ அதே போல், பாலா அசலான சிந்தனைத் தெறிப்புகளை ஒற்றை வரிகளில் சொல்லி விடுகிறார். அண்மைய கால எழுத்தாளர்களில் அதிகமாக மேற்கோள் காட்டத்தக்க எழுத்தாளர் பாலாவாகவே இருப்பார். ‘கண்களால் நாக்குகளைவிட அதிகமான வரலாற்றை சொல்லிவிட முடியும். ஓவியம் கண்களின் வரலாறு.’ ‘மெதுவாக இயங்கும் இணைய தொடர்பே போர்னோகிராபியிலிருந்து நம்மை குணப்படுத்த போதுமானது’ போன்றவை சில உதாரணங்கள். இந்த ஒற்றை வரிகள் சில நேரங்களில் கதையை விட்டு மனம் அகன்ற பின்னும்கூட மனதில் தங்கிவிடுகின்றன.

‘புடவு’ கதையில் அகஸ்டின், சாமிநாதன், கதிரேசன் ஆகிய மூவரும் ‘ஃ’ வடிவ பாறைகளில் ஒளிந்திருக்கும் சமணப் புடவினைக் காண செல்கிறார்கள். அப்போது ஒரு தவிட்டு குருவியை இரண்டு அண்டங்காக்கைகள் துரத்துகின்றன. மகாவீரர், சாமானியன், நீட்ஷே என விவாதம் நகர்கிறது. பாலாவின் கதைகளில் இந்த ‘தளமிடுதல்’ (layering) உள்ளது. உறவிணைப்பை சித்தரிக்கிறார். அகஸ்டின் நடைமுறைவாதி. கதிரேசன் – சாமிநாதனின் உரையாடல்களில் அவனுக்கு ஆர்வமில்லை. தொல்மனிதர்களின் ஓவியங்களைக் காணும்போது ‘கண் முன்னாடி நிற்கிற சேணம் ஏந்திய குதிரையை ஓட்டுவதைவிட நீங்க பேசும் லாஸ்கோ குகையின் ஓவியக் குதிரைகளைப் பார்க்குறது எனக்கு விருப்பமில்லை’ என்கிறான். ஜைனம், மகாவீரரின் உடல் மறுப்பு, துறவு ஒரு பக்கம், மறுபக்கம் உடலை மையமாக கொண்ட நீட்ஷே பற்றிய விவாதம் வருகிறது. அகஸ்டின் இரண்டிலும் விலகி நடைமுறை நோக்குடன் பேசுகிறான். கதை இறுதியில் இரண்டு காக்கைகளுக்கு இடையில் உயிர் பிழைக்கப் போராடும் குருவியை கல்லைக் கொண்டு வீழ்த்துகிறான். “இப்ப எல்லாருக்கும் விடுதலை” என்கிறான்.     செறிவான மெய்யியல் உரையாடல்களும் குறியீட்டுத் தன்மையும் கொண்ட மிக நல்ல கதை. அகஸ்டின் இருத்தலியல் சிக்கல்களை எதிர்கொள்ளாமல் நிராகரிப்பதன் வழியாகவே கடக்கிறான். மரணத்திற்கு முன் அவை பொருளிழப்பதை சுட்டிக் காட்டுகிறான். எல்லா உன்னதங்களையும் மறுக்கிறான். அமரத்துவம் பற்றிய கேள்விகள் பாலா தனது புனைவுகளின் ஊடாக விவாதிக்கிறார். ‘வலை’ கதையையும் சேர்த்துக் கொள்ளலாம். ‘புடவி’ கதையில் மட்டுமே பாலா மரபை கையாண்டுள்ளார். ஒரு தத்துவச் சிக்கலை வெவ்வேறு மெய்யியல் நோக்குகள்  அணுகுவதை கதையாக்குகிறார். இக்கதைகள் பெரும் உள்விவாதங்களின் தீர்மானமான முடிவுகளை உலகிற்கு அறிவிக்கின்றன. பாலா தனது சிந்தனைகளை, மெய்யியல்களை, வெளிப்படுத்தும் ஊடகமாக புனைவைக் கையாள்கிறார் என்றொரு எண்ணம் ஏற்பட்டது. ஆனால் ‘பன்னிரண்டு மரணங்களின் துயரம் மிகுந்த தொகுப்பேடு’, ‘வலை’ ஆகிய கதைகளில் இந்தப் போக்கை மீறுகிறார் எனச் சொல்லத் தோன்றுகிறது.

‘உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்பவர்கள்’ கதை இத்தொகுப்பில் என்னை அவ்வளவாக ஈர்க்காத (பிடிக்காத அல்ல)  கதை என்று சொல்லலாம். வேறொருவனாக தன்னை மாற்றிக்கொள்ள முயன்று தோற்பவனின் கதை. நுட்பமாக உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்பவர்களின் உளவியலை பாலா காட்டுகிறார். தன் காதலி ஏற்கனவே இருவருடன் உறவு முறிந்தவள் என்று அறிந்து விலகுகிறான். அவளுடைய வெற்றிடத்தை தன்னால் நிரப்பமுடியும் என நம்பியவன் தன்னால் அது இயலாது என்பதை உணர்ந்து கொள்கிறான். எனை ஈர்க்காத மற்றொரு கதை என தொகுப்பின் தலைப்பிற்குரிய கதையான “துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை”யை சொல்லலாம். நிகழ் காலத்தில், இறந்த காலத்தில், என இரு வேறு காலங்களில் நிகழ்ந்த கப்பல் தரைதட்டும் நிகழ்வை ஒன்றாகப் பிணைந்து எழுதி இருக்கிறார். அப்பிணைப்பு அளிக்கும் மயக்கமே இக்கதை. இரண்டு காலகட்டங்களுக்கும் சென்று மீளும் உத்திக்காக முக்கியத்துவம் வாய்ந்த கதையாகச் சொல்லலாம்.

பாலாவின் கதைகள் நிகழ்வுகளின் ஊடே அசாதாரண தருணங்களை உருவாகின்றன. அழுகாத பூனையை போல், ‘ஜங்க்’ கதையில் போர்னோகிராபி அடிமைகள் மீட்கும் ரகசிய சங்கம் வருகிறது. தொடர்பறுந்து போன வடகிழக்கு காதலி கிடைப்பதற்கு முன், போர்னோவில் முங்கி கிடக்கும்போது ‘எனக்கு என்ன தேவையென்பதை பிரபஞ்சத்தின் மூலையில் யாரோ அறிந்திருக்கிறார்கள்.’ என பாவ்லோ கொஹெல்ஹோத்தனமாக புளங்காகிதம் அடையும் கதைசொல்லி, இறுதியில் அவளிடமிருந்து, சந்திக்க வேண்டும், என ஒரு குறுஞ்செய்தி வந்தவுடன்  ‘எனக்கு என்ன தேவையில்லை என்பதையும் பிரபஞ்சத்தில் யாரோ அறிந்திருக்கிறார்கள்’, என முடிக்கிறார். பின்னை- வாய்மை காலகட்டத்தில் உற்பத்தியாகி நம்முன் வந்து குவியும் போலி தகவல்கள் நினைவுக்கு வந்தபடி இருந்தது.

அசாதாரண தருணங்களுக்கு மற்றுமொரு உதாரணம், கதையின் தலைப்பே சொல்லிவிடுவது போல் “நாளை இறந்து போன நாய்”. இந்த தலைப்பு எனக்களித்த கற்பனைகள், பரவசங்கள், சாத்தியங்கள் அற்புதமானவை. கதைசொல்லி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறான். அவன் வளர்க்காத நாய் இறந்து போய்விட்டதாக எதிர்க் குடியிருப்பில் இருந்து சொல்லிச் செல்கிறார்கள். அதன் உடமைகளை அளிக்கிறார்கள். அதன் சடலத்தை கூவத்தில் கண்டெடுத்தவர்கள் அப்புறப்படுத்த பணம் கேட்கிறார்கள். அதற்கு உணவு வாங்கிய வகையில் கட்டணம் செலுத்த கோருகிறார்கள். அவனுடைய பிரக்ஞையில் நாய் வளர்த்ததற்கான தடயமே இல்லை. நாட்குறிப்பில் தேடுகிறான், அறிந்தவர்களிடம் பேசிப் பார்க்கிறான், அம்மாவிடம், காதலியிடம், கேட்டுப் பார்க்கிறான். வலுவான புறச் சான்று, தடயமற்ற அகச் சான்றுக்கு இடையிலான போராட்டத்தில் ஒருவழியாக சமரசப் புள்ளியை அடைந்து விடுகிறான். புறச் சான்றின் கை மேலோங்கி விடுகிறது. ஏறத்தாழ காஃப்காவின் ‘விசாரணை’ கதையை ஒட்டியதுதான். செய்யாத, அல்லது என்னவென்றே சொல்லப்படாத, குற்றத்திற்கு எதிராக போராடி கே அதை ஏற்றுக்கொண்டு தண்டனையை சுவீகரிப்பான். இக்கதைக்குள் காஃப்காவின் தொடர்பைப் பற்றிய குறிப்பும் வருகிறது.

எனது சிறுகதை வெளியீட்டு விழா அறிமுக உரையில் இரண்டுவிதமான சிறுகதை போக்குகள் தற்காலத்தில் நிலவுகின்றன, என குறிப்பிட்டு இருந்தேன். நாவலின் தன்மை கொண்ட கதைகள், கவிதைக்கு நெருக்கமான கதைகள். நண்பர் விஷால் ராஜா ‘கவிதைத்தன்மை’ கொண்ட கதைகளுக்கு சில உதாரணங்கள் அளிக்கமுடியுமா என கேட்டபோது சட்டென்று எனக்கு எந்தப் பெயரும் சொல்லத் தெரியவில்லை. பாலாவின் கதைகளை வாசிக்கும்போது அவரின் கதைகளை அப்படி வகைப்படுத்த முடியும் என்று தோன்றுகிறது. கவிதை ஏதோ ஒரு வகையில் குழந்தையின் கற்பனையுடன் நெருக்கமானதும்கூட. தேர்ந்த எழுத்தாளனின் சவால் என்பது, தான் சேகரித்த மேதமைக்கும் தனக்குள் இருக்கும் குழந்தைமைக்கும் இடையிலான சமநிலையை பேணுவதே.

இத்தொகுப்பில் எனை ஈர்த்த, அல்லது முற்றிலும் சாய்த்த, கதைகள் என இரண்டைச் சொல்வேன். ‘வலை’ மற்றும் ‘பன்னிரண்டு மரணங்களின் துயர் நிரம்பிய தொகுப்பேடு’. ‘பன்னிரண்டு மரணங்கள்…’ கதை அதன் தலைப்பு சுட்டுவதைப் போல் பன்னிரண்டு மரணங்களின் கதையைச் சொல்கிறது. கல்லடிபட்டு இறக்கும் சிட்டுக்குருவி, குளியலறையில் தட்டில் மூழ்கி எலும்புக்கூடான வாலறுந்த பல்லி, சாலையில் அடிபட்டுச் சாகும் தெரு நாய் என உயிர்ப் பிராணிகளில் துவங்கி இப்பட்டியல் சிகரட், ஷூ லேஸ், சதுப்பு நிலம், இரவு, மகாராணியின் வீரப்பதக்கம், கூர் மழுங்கிய கத்தரிக்கோல் என நீள்கிறது. ‘வேறு எவற்றையும்விட விளக்குகள்தான் இப்போது வரை நிகழ்பவைகளின் சாட்சியமாக இருக்க முடியும். விளக்குகளின் இருப்பில் அல்லது இன்மையில் மட்டுமே இப்போது வரை அத்தனையுமே நிகழ்ந்திருக்கின்றன,’ எனும் வரி கவிக்கூற்றுக்கு சான்று. கழிவறைத் தொட்டியில் மூழ்கி மரித்துப் போன பல்லிக்கும், இற்றுப் போன சப்பாத்துக்களின் உள்ளே மரித்துக் கிடக்கும் கொசுக்களுக்கு இரங்கும் அகம் கலைஞனுக்கு உரியது. இக்கதை என்னை நெகிழச் செய்தது. விரட்டி வரும் நான்காவது தோட்டா பற்றிய அச்சுறுத்தல் எல்லாம் சிறுத்துப் போயின. ‘வலை’ மற்றும் இக்கதையின் வழியாக தென்படும் பாலா ஒரு ‘அனிமிஸ்ட்’ என சொல்லத் தோன்றுகிறது. அசையும், அசையா பொருட்கள் என எல்லாவற்றிலும் உயிர்த்துடிப்பை கண்ட பழங்குடியின் நீட்சியாக, உயிர்ப் பரப்பின் வலைப் பின்னலை காட்டி விடுகிறார் என தோன்றியது. பாலாவைப் போல் சொல்வதாக இருந்தால், “ஒரு சிட்டுக் குருவியை விடவோ, ரப்பர் சக்கரங்களில் நசுங்கிச் சாவும் நாயை விடவோ மனிதனின் மரணம் வேறானது அல்ல”.

தொகுப்பின் இறுதி கதை ‘வலை’ சந்தேகமின்றி இத்தொகுதியின் சிறந்த கதை. சிந்தனையின் ஊடகமாக பயணித்த கதைகள் எனும் பாணி மறைந்து கதை தன் போக்கில் விருட்சமாக வேர் கொண்டு வளர்ந்த கதை. பொதுவாக ‘நல்ல கதைகளை’ இரண்டாக வகுக்கலாம். தொழில்நுட்ப நேர்த்தியுடன் நம் உணர்வுகளை கிளர்த்தி, அல்லது உணர்த்தி முடிபவை ஒரு வகை. பெரும்பாலான சிறந்த கதைகள் இவ்வகையையே சாரும். மற்றொரு வகையான ‘நல்ல கதைகள்’ படைப்பாளியாக நமது படைப்பு மனத்தின் மீது தாக்கம் செலுத்தித் தூண்டும். ‘வலை’ இரண்டாம் விதமான கதை. ஓர் எழுத்தாளனாக நான் எழுத விரும்பும் கதை. ‘வலை’ நவீன தேவதைக் கதையின் அம்சம் கொண்டது. ‘சோபியின் உலகம்’ வாசிக்கும்போது ஏற்பட்ட ஆச்சரியம் எனக்கு வலை வாசிக்கும்போதும் கிடைத்தது. மிகுபுனைவு தேவதைக் கதையாக பயணிக்கும் அதே சமயத்தில் உயர் தத்துவ சிக்கல்களை, கேள்விகளை, கதை எதிர்கொள்கிறது. முடிவற்ற ஊழின் நெசவை, வாழ்க்கைச் சுழலை, சித்தரிக்கிறது. அ. கா. பெருமாள் தொகுத்த நாட்டாரியல் ராமாயண கதைகளைக் கொண்ட தொகுப்பான ‘இராமன் எத்தனை இராமனடி’யில் ஒரு கதை வரும். சீதையைக் காண இலங்கை செல்வதற்கு முன் ஹனுமான் குளித்து ஓய்வெடுத்துச் செல்வான். அப்போது ராமன் அளித்த கணையாழியை அங்கு தவம் செய்யும் துறவியிடம் ஒப்படைப்பான். அவர் அதை நீர்ச் செப்பு கலத்தில் போட சொல்வார். கிளம்புவதற்கு முன் அனுமான் தனது கணையாழியை எடுக்கும்போது அதில் ஒரே மாதிரியான பல கணையாழிகள் கிடக்கும். குழம்பி முனிவரிடம் கேட்பான். அப்போது அந்த முனிவர் நீ எத்தனையாவது அனுமானோ, உன்னுடையது எத்தனையாவது கணையாழியோ, எத்தனையோ அனுமான்கள் வந்து செல்கிறார்கள், என்பார். சட்டென இக்கதை அடையும் காலாதீத தன்மை, உயரம், ‘வலை’ கதையின் முடிவில் அடையப்படும் உணர்வு நிலைக்கு நெருக்கமானது. பாலா புதிய கடவுள்களை, அவர்களுக்கென கதைகளை உருவாக்குகிறார். ஜெசியாவை உதாரணமாகச் சொல்லலாம். நாமறிந்த தொன்மங்களை உருமாற்றுகிறார். மூன்று ராஜ்ஜியங்களின் கதை பைபிள் கதையுடன் தொடர்புடையதாக வாசிக்க முடியும். ‘வலை’ கதையைப் பற்றி மட்டுமே தனியாக ஒரு கட்டுரை எழுத வேண்டும்.

பரந்த வாசிப்பும், கூர்ந்த அவதானிப்புகளும் ஒருங்கே அமையும்போது தேர்ந்த எழுத்தாளன் உருவாகிறான். ஒவ்வொரு சொல்லுக்கும் பொறுப்பேற்று பிரக்ஞைபூர்வமாக கதைசொல்லல் ஒருமுறை. அவ்வப்போது நழுவிச்செல்லும் பிரக்ஞையை கதைசொல்லி பின்தொடர்ந்து செல்வது மற்றொரு முறை. பாலா இரண்டு வகைகளையும் பின்பற்றி கதைகளை எழுதுகிறார். பேசுபொருள், கூறும் விதம் என இரண்டு காரணங்களினாலும் பாலா தமிழின் தனிக்குரலாக ஒலிக்கிறார். அண்மையில் சொல்வனம் இதழில் வில் செல்ஃப் வாசகர்களுக்கு வாசிக்க ‘கடினமாக’ இருக்கும் நாவல்களின் முக்கியத்துவத்தைப் பற்றி எழுதிய கட்டுரையின் மொழியாக்கம் வந்துள்ளது. “விமரிசகர்கள் எங்களைப் புகழ்ந்தபோதும், எங்கள் பிரதிகளோடு ஒரு எச்சரிக்கை வாசகத்தைச் சேர்க்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறார்கள். ‘கடினம்,’ என்று சொல்கிறார்கள்- கூடவே அச்சுறுத்தும் உள்ளர்த்தமாய்-, ஓர் எதிரொலி, டெர் ஸ்டெப்பென்வுல்ஃபின் தாக்கமாய் இருக்கலாம்-, “இந்தப் புத்தகம் அனைவருக்குமானது அல்ல,” என்கிறார்கள்.”… நவீன டிஜிடல் யுகத்தில் வாசிப்பை எளிமைப்படுத்தும், பக்கங்களை விரைவாக விரட்டிச் செல்லும் ஆக்கங்களை உருவாக்குவதில் ஆர்வம் செலுத்துகிறார்கள். இவை பெருவாரியான மக்களை சென்று சேரும். ஆனால் அதே நேரம் லட்சிய வாசகன் தன்னை திருப்திப்படுத்தும், உழைப்பைக் கோரும் கடின ஆக்கங்களுக்காக தேடி அலைகிறான். வில் செல்ஃப் நவதாராளவாதம் ‘கடின’ நாவல்களின் விற்பனையை உண்மையில் பெருக்கியுள்ளன, என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். ஒரு வகையில் இந்த அளவுகோளின்படி பாலாவின் புனைவுலகை அறிமுகம் செய்யும்போது அவரையும் “எல்லோருக்குமான எழுத்தாளர்” அல்ல என்றே அறிமுகம் செய்ய முடியும் என தோன்றுகிறது.

மகரந்த் பரஞ்சபே எழுதிய நூலுக்கு ஆஷிஷ் நந்தி எழுதிய முன்னுரையில் பிற விஷயங்கள் பின்னுக்குச் சென்றால்கூட காந்தி, ‘நவீனத்துவத்தின் விமர்சகராக’ எப்போதும் முக்கியமான குரலாக திகழ்வார் என்கிறார். பாலசுப்பிரமணியன் பொன்ராஜின் துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதையை வாசித்து முடித்தவுடன் ஏற்பட்ட முதல் மனப்பதிவு என ஆஷிஸ் நந்தியின் இக்கருத்தை சொல்லலாம். நவீன வாழ்வின் அபத்தங்களைப் பாடும் புதுயுக பாணன் பாலா.

 

 

எண் குறிக்காத டிக்கெட், கோச், துலக்கமானதொன்றின் – செல்வசங்கரன் கவிதைகள்

செல்வசங்கரன்

 

எண் குறிக்காத அந்த டிக்கெட்டை பாதியாகக் கிழித்து உள்ளே விட்டார்கள்

மேஜிக் ஷோவில் கையிலுள்ள டிக்கெட்டிற்கு
எந்த ச்சேரிலும் அமர்ந்து கொள்ளும் வாய்ப்புகளில்
எந்த ச்சேரில் அமர்வதெனத் தெரியாது
இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட்டதில்
அந்த ச்சேர் கிடைத்தது
இன்றைய நாளிற்கான ச்சேர் அது தான் போல
என்றதுமே
வேறு ஒரு ச்சேரில் என் குண்டி
தேமே என்று பொத்திக்கொண்டிருந்தது
அந்த ரெண்டு ச்சேர்கள் மட்டும்
டிக்கெட்டில் இன்பில்டாக செய்யப்பட்டிருக்குமோ
அய்யய்யோ வந்து விட்டதா
இனி என் குண்டியை பொத்திக்கொண்டிருக்க
வைக்க முடியாது யாராலும்
அந்த ச்சேர் இந்த ச்சேரென அது இஷ்டத்திற்குத் தாவ
திடீரென்று பாதியிலிருந்து துவங்கி
ஒரு மேஜிக் ஷோ அங்கு ஓடிக்கொண்டிருந்தது
அதுதான் அரங்கத்திற்கு வெளியிலேயே
பாதி கிழித்துவிட்டார்களே
காக்கா பிரியாணிக்கு காக்கா குரல் வராமல்
பின்னென்ன உன்னிகிருஷ்ணன் குரலா வரும்

******

கோச்

சர்வீஸ் லிருந்து கிளம்பும் ஃவெதர்
உள் விளையாட்டரங்கின் தரையில்
எங்கு விழுமென்பதை அறிய
கணித சூத்திரங்களுள் போனால் ஒரு வாய்ப்புள்ளது
அது மிக நீளமான பாதை
எதிராளியோடு கோர்த்து உள்குத்து செய்தால்
ஓரளவு கை கொடுக்கலாம்
ஆட்ட தர்க்கத்திலிருந்து விலகிய பங்கம்
வந்து சேருமென்பதால்
அதை அதிகம் பரிந்துரைப்பது கிடையாது
பிய்ந்து போன ஃவெதர்களை சதா பொறுக்கியபடி
வாய்ப்பு கிடைத்தால்
உடலைக் கோணித்துத் திருகி புரட்டி எம்பி
அக்கோர்ட்டிலே கிடையாய் கிடப்பது
மிகவும் உசிதம்
ரொம்பவே ட்ரெண்டியான இன்னொரு வழியுமுள்ளது
சைடில் குத்திட்டு அமர்ந்தபடி
இடதுபக்கம் நெளித்து அடி
இப்பொழுது தேர்ட் கோர்ட்டுக்கு தூக்கு
அவனது கால்கள் முன்னோக்கியுள்ளதால்
காக் ஐ தலைக்கு மேலே வீசு
உனது ஸ்டெமினா குறைந்து கொண்டு வருவதால்
ஒவ்வொரு பாய்ண்ட்டுக்கும்
எனது சைகையைக் கூர்ந்து கவனி
எனது சங்கேத பாஷைகள் பற்றி
நீண்ட காலங்கள் பேசியுள்ளதால் அது தெரியுமல்லவா
என அக்குளில் கைவிட்டு அரிக்கும் வழி
ஸ்மரணை இல்லாதவர்களுக்காக
மிகவே மெனக்கெட்டு செய்யப்பட்டது அது

******

துலக்கமானதொன்றின்

முதல் முறையா அழப்போகிறாய்
மறைப்பதற்கு இவ்வளவு சிரத்தை கொள்கிறாய்
உனக்கு அழத்தெரிவது
யாருக்கும் தெரியாதென நினைத்தாயா
புழுக்கங்களே இல்லையெனக் கூறிவிடுவாயா
காரணமென்ன மண்ணாங்கட்டி காரணம்
இவ்வளவு லகுவாய் மாற்றுவதற்கு
ஒன்றைக் காட்ட முடியுமா
ஆனந்தக் கூத்தில் நீ அமிழ வேண்டாமா
சுதந்திரத்தின் மகோன்னத நிலைக்குப் பொருள் வேண்டாமா
அதன் புரண்டோடுகையில் மிதப்பது வரை
மிதப்பதென்றால் யாருக்குத் தெரியும்
அறிவுப்பெருக்கால் வந்த இறுமாப்பென்று கூறுகிறாய்
இன்னுமா இது உன்னை சொறிந்து கொடுக்கிறது
சில்லரைத் துக்கடாவில் நின்று கொண்டு
சகிக்கமுடியாதவாறு பல்லைனாலும் காட்டுவாய்
அழ மாட்டாய் அப்படித்தானே

அதிநாயகனின் குதிகால் – காலத்துகள் சிறுகதை

காலத்துகள்

மேகபுரி சாகசம் 

‘ஹி வாஸ் டிராப்புடு பிகாஸ் ஆப் ஹிஸ் பார்ம். பார்ம், தட் மீன்ஸ் அவன் ஒடம்பு ஷேப்ல ஏதோ பிராப்ளம், சரியில்ல. அதனால அவன டீம்லேந்து எடுத்துட்டாங்க.’ உடலை இடுப்பருகில் வளைத்து மேற்பகுதியை குறுக்கி, ‘பார்மில்’ ஏற்படக்கூடிய பிரச்னையை செவென்-எப் வகுப்பறையில் மைக்கேல் சார் விளக்கிக் கொண்டிருந்தார்.

தலையை குனிந்தபடி சந்துரு பக்கம் திரும்பி, ‘என்னடா பார்ம்க்கு இப்படி ..’ என்று சொல்ல ஆரம்பித்து, ஜன்னலுக்கு வெளியே வானில் மூக்குரசிக் கொண்டிருந்த பழுப்பு நிற ஆமையையும் பன்றிக் குட்டியையும் பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டவன், ‘என்னடா’ என்று கேட்ட சந்துருவுக்கு பதில் சொல்லாமல் தலையசைத்தான். சில மாதங்களாக,எதைப் பற்றிய பேச்சு எழுந்தாலும் இடைச்செறுகலாக ஸார் சொல்லும், ‘ஒங்கள விட மூணு நாலு வயசு தான் பெரியவன் சச்சின் பாத்துக்குங்க’விற்குச் சென்று விட்டார்.

நோட்டில் எழுதுவது போல் குனிந்து மீண்டும் வெளியே பார்த்தபோது, வாலும், பின்னங்கால்களும் மறைந்துவிட்ட பன்றிக்குட்டி, முதலையாக மாறிவிட்ட ஆமையுடன் முகமுரசிக் கொண்டிருந்தது. இரண்டைச் சுற்றியும் சுற்றி புதிதாக இன்னும் சில மேகங்கள் வெவ்வேறு உருவங்களில். ‘நீங்களும் சச்சின் மாதிரி யுங் ஏஜ்லையே அச்சீவ் பண்ணனும்’. சிறிது நேரம் முன்பு வரை உணராத குளிர் வகுப்பறையில். க்ளாஸ் நோட்டில் எழுதிக் கொண்டிருக்கும் பக்கத்தின் வலதோர நுனியைப் பிய்த்து வாயில் போட்டு மென்றவன், பின் இடது உள்ளங்கையால் வாயை மூடிக் கொண்டு இரண்டு மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டு, ஜன்னலுக்கு வெளியே பார்க்க வேண்டுமென்ற உந்துதலைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஸார் பின்னாலிருக்கும் கரும்பலகையின் மீது முழு கவனத்தை செலுத்தினான்.

பலகையில் இன்று பூத்திருந்த ஐம்பத்தி எட்டு ‘பட்ஸும்’ மறைந்து மைதானத்தில் பேட் செய்து கொண்டிருக்கிறான். வகார் யூனிஸின் பந்து முகத்தில் மோதி விழுபவனின் அருகே பதறி வருகிறார் சச்சின். சமாளித்து எழுந்து தொடர்ந்து ஆடுவதாகச் சொல்பவன் அடுத்த பந்திலேயே பவுண்டரி அடிக்க, சச்சின் உற்சாகமாக அவன் தோளில் குத்துகிறார். டெஸ்ட் டிராவில் முடிந்ததில் இவனுடைய பங்கை அனைவரும் பாராட்டுகிறார்கள். அடுத்து மழையால் பாதிக்கப்பட்ட ஒருநாள் போட்டியில் அப்துல் காதிரின் பந்து வீச்சை துவம்சம் செய்கிறான். ஒரே ஓவரில் மூன்று நான்கு சிக்ஸர். அடுத்த பந்திற்காக காத்துக் கொண்டிருந்தவனின் எதிரே, காதிருக்கு பதிலாக ரிக்க்ஷா தாத்தா சாக்கை தலையில் போர்த்திக் கொண்டு மெல்ல நடந்து வர, பேட்டை கீழே போட்டு விட்டு மைதானத்திலிருந்து ஓடி, மாம்பலம் கிரி ஸ்ட்ரீட்டிற்குச் சென்று, கார்கால நாளொன்றின் மாலை நேர மழைக்குள் நுழைபவனுக்கு இப்போது ஆறு வயது.

அம்மா வேலை முடித்து வர வீட்டில் தனியாகக் காத்துக் கொண்டிருக்கிறான். இவனைப் பள்ளிக்கு ரிக்க்ஷாவில் அழைத்துச் செல்லும் தாத்தா, சற்றே கூன் போட்ட, உயரமான உடலின் மேற்பகுதியை மட்டும் போர்த்தியிருக்கும் சாக்குடன் மழையினூடே தள்ளாடியபடி நடந்து வந்து இவன் போர்ஷன் முன் நிற்கிறார். ஏதோ சொல்ல ஆரம்பிப்பவரின் குரல் உயர, அடுத்த போர்ஷனில் குடியிருக்கும் மாமியின் தலையீட்டுக்குப் பின் திரும்பிச் செல்கிறார். பின் அம்மாவும் அடுத்த போர்ஷன் மாமியும் பேசிக் கொண்டதை கேட்டதில் ரிக்க்ஷா வாடகை, குடி போன்ற வார்த்தைகள் காதில் விழுகின்றன. மழை தொடர்ந்த அடுத்த இரு நாட்களும் வீட்டை விட்டு வெளியே வரமாட்டேன் என்று அடம் பிடித்து பின் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தவன் அந்த பள்ளியாண்டில் மீதி இருந்த மூன்று மாதங்களும் தாத்தாவின் முகம் பார்க்கவே -அவர் பலமுறை தானாகவே பேச்சு கொடுக்க முயன்றபோதும் – பயந்தான். அந்த ஏப்ரல் மாதம்தான் செங்கல்பட்டிற்கு குடி பெயர்ந்தார்கள்.

இறுதி பெல் அடித்தது. சந்துரு பேசியபடி வர, வானை பார்த்தபடியே முதல் தள வராண்டாவில் நடந்தான். இந்த ஆறு வருடங்களில் தாத்தாவின் முகத்தை மறந்து விட்டாலும், மழை மேகங்களினுள் சாக்கைப் போர்த்திக் கொண்டு தள்ளாடியபடி நடந்து வரும் அவருடைய நெடிய உருவத்தை இன்றும் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.

‘எங்க போற, இரு’, என்று சந்துரு சொல்ல நின்றான். சைக்கிள் நிறுத்துமிடத்திற்கு வந்திருந்தார்கள். ‘நான் போயிட்டிருக்கேண்டா, நீ வண்டிய எடுத்துட்டு வா’, என்றிவன் சொல்ல, ‘என்ன அவசரம், வெயிட் பண்ணு’, என்று ஸ்டேண்ட்டினுள் நுழைந்து கொண்டிருந்த கூட்டத்துடன் சந்துருவும் சேர்ந்தான். வெளியேறிக் கொண்டிருந்தவர்களை கவனித்துக் கொண்டிருந்தவன், பெண்கள் பக்கத்திலிருந்து உமா சைக்கிளில் வர வேறு பக்கம் பார்வையை திருப்பி, அவள் தன்னை கடந்து செல்ல தேவைப்படக்கூடிய கணங்கள் கழித்து, திரும்பி அவள் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆறாவதில் இருந்தே பள்ளிக்கு சைக்கிளில்தான் வருகிறாள், பி.எஸ்.ஏ. எஸ்.எல்.ஆர். அவள் வீட்டில் கார்கூட இருப்பதாகச் சொல்கிறார்கள். வானில் மேகமொன்றிலிருந்து துதிக்கை நீட்டிக் கொண்டிருந்தது. ‘வாடா,’ என்று சந்துரு சைக்கிளை தள்ளிக் கொண்டு செல்ல ஆரம்பித்தான். காலையில் பள்ளிக்கு வரும்போது மட்டும்தான் அவன் சைக்கிளை ஓட்டிக் கொண்டு வருவான், மாலையில் அதை தள்ளிக் கொண்டே இவனுடன் நடைதான்.

‘டபுள்ஸ் போலாமாடா, மழ வர மாதிரி இருக்கு, சீக்கிரம் போயிடலாம்’.

‘சரி வா’, என்று சந்துரு சொல்ல, பின்னால் அமர்ந்து கொண்டான். செட்டித் தெருவில் சந்துரு வீடு வந்தவுடன் ‘வரேண்டா நாளைக்கு பாக்கலாம்’ என்று கிளம்பியவனிடம், ‘தண்ணி குடிச்சுட்டு போடா’, என்று சந்துரு கேட்க, ‘இல்ல மழ ஆரம்பிக்கறதுக்கு முன்ன போய்டறேன்’, என்று சொல்லிவிட்டு இப்போது எந்த உருவமும் தென்படாத, முழுதும் ஒற்றை அடர் பழுப்பு நிறமாகிவிட்ட வானை அவ்வப்போது பார்த்தபடியே விரைந்தவன், செட்டித் தெரு முனையை அடைந்து பெரிய மணியக்காரத் தெருவிற்குள் நுழைய சாலையை கடக்கும்போது இடி சப்தம் கேட்டு பாய் கடையருகே ஒதுங்கி வானத்தைப் பார்த்தான்.

வெண்ணிறமும் சிகப்பும் கலந்த சற்றே கிறுக்கலாக எழுதப்பட்ட ‘Y’ போலிருந்த மின்னல், மறையும் முன் வானின் சிறு பகுதியை விண்டு விட்டுச் செல்ல, பிரிந்த அந்தப் பகுதி தன் பழுப்பு நிறத்தை இழந்து வெள்ளை நிற யானையாக மாறி, மெல்ல மிதந்தபடியே அதன் துதிக்கையை அங்கிருந்து இவனை நோக்கி நீட்ட, அதைப் பற்றிக் கொண்டவனை உயர்த்தி தன் மேல் அமர்த்திக் கொண்டு மீண்டும் வானுடன் இணைந்து உள் நுழைந்தது.

‘இன்னும் ரெண்டு மூணு மணி நேரத்துல ட்யூட்டி ஆரம்பிக்கணும், என்னமா குளுருது’ என்று தன் வட்ட உடலைச் சிலுப்பியபடி சொல்லிக் கொண்டிருந்த நிலவிலிருந்து சில நீர்த்துளிகள் இவன் மீது பட்டன. முதலில் நிலவிடம் இவனை அறிமுகம் செய்து வைத்த யானை, ‘அங்க யார் வரா பாரு’, என்று சுட்டிய திசையில் நோக்கினான். நட்சத்திரக் கூட்டமொன்று இணைந்து கரடியாக மாறி இவனை நோக்கி வந்தது. ‘ஏன் பயப்படற, ஷேக் ஹாண்ட் பண்ணு’ என்று யானை சொன்னதைப் போல் செய்தான். ‘வா என் மேல ஏறிக்கோ’ என்று கரடி அழைக்க, தயங்கியவனை யானை சிறு குன்று போலிருந்த மேகத்தின் மீது அமர வைத்தது. ‘யாரு புதுசா இருக்கு’ என்றபடி வந்த ஆமையொன்று ‘இவங்க ரெண்டு பேரையும் விட நான் ஸ்பீடா போவேன், என் மேல ஏறிக்கோ’ என்று கூறியதற்கு பதில் எதுவும் சொல்லாமல் இருந்தவனிடம் ‘யோசிக்காத, நான் மலையையே முதுகுல சுமந்த பரம்பரைல வந்தவன் தைரியமா வா’ என்று மேலும் கூறியது. ‘உக்கும் இதையே எத்தனை யுகத்துக்கு இதே புராணத்த சொல்லப் போறானோ’. யானையின் குரல். ‘சும்மா பேசக் கூடாது ரேஸ் போலாமா’ என்று ஆமை அறைகூவல் விடுக்க ஓட்டப்பந்தயம் ஆரம்பித்தது.

போட்டோ பினிஷ். ‘நான்தான பர்ஸ்ட்’ என்று மூச்சிரைத்துக் கொண்டே யானை இவனிடம் கேட்க, ‘ஒடம்ப குறை மொதல்ல, நீ லாஸ்ட்’ என்றது ஆமை. ‘இவன் சின்னப் பையன், இரு நான் அவர கேக்கறேன்’ என்று அங்கே தோன்றியிருந்த விண்மீன் கூட்டத்தைச் சுட்டி யானை அழைத்ததும், அவை வில்லேந்திய ஆணாக உருப்பெற, அவர் அவர்களை நோக்கி நடந்து வந்தார். ‘இவர் பெரிய ஹன்டர், பேரு ஒரயன்’ என்று இவனிடம் நிலவு கூறியதும், ‘நம்மூர்ல கூப்பிடற பேர சொல்லு, இவர் பேரு ம்ரிகா’ என்று ஆமை இடைமறித்தது. ‘நீ இந்த இடத்த விட்டு நகர மாட்ட, நான் எல்லா எடத்துக்கும் போகணும். ஒவ்வொரு எடத்துல ஒரு பேரு இவருக்கு, எனக்கே எங்க எந்த பேர்ல இவர கூப்பிடனும்னு குழப்பம் உண்டு’, என்று நிலவு சொன்னது. ‘ஏதோ ஒரு பேரு விடு, யாரு ஜெயிச்சாங்க அத சொல்லுங்க,’ என்று யானை அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கும்போது மீண்டும் தூறல்கள் ஊடுருவ நிலவு சிலிர்த்தது. மேகக் குன்றிலிருந்து அவசரமாக இறங்கி தடுமாறியபடி ஓட ஆரம்பித்தவனைத் தடுத்த வேட்டைக்காரர், ‘இரு பயப்படாதே’ என்று கூறிவிட்டு வளைந்த நீண்ட வாளை இவனிடம் தந்து, ‘விக்கிரமாதித்யன் உபயோகித்த, தேவியின் அருள் பெற்ற, வாள் இது’ என்று சொல்ல, கையில் அதை ஏந்திக் கொண்டான். ‘எலுமிச்சைப் பழம் என்னாச்சு அழுகிடுச்சா’ என்று கரடி கேட்டதற்கு யானை பிளிறிச் சிரிக்க, ‘சும்மாருங்க ரெண்டு பேரும்’ என்றது நிலவு. இவனை நோக்கி வந்த மழைக் கணைகளை வாளால் இன்னும் சின்னஞ் சிறிய சிதறல்களாக துண்டாக்க ஆரம்பித்தான்.

‘போதும், முடிந்து விட்டது அங்கே பார்,’ என்று இவன் தோளைத் தொட்டு நிறுத்தி வேட்டைக்காரர் சுட்டிய திசையில் மேகங்களினுள் ஊடுருவிக் கொண்டிருந்த நிறச்சேர்க்கையைப் பார்த்து, ‘ரெயின்போதான அது’, என்று கேட்டான்.’ஆமாம், போய் அதை எடுத்துட்டு வா, பயப்படாத’ என்றவர் சொல்ல, கரடியின் மீதேறி அமர்ந்தவன், வானவில்லின் அருகில் சென்று வளைந்த அதன் நடுப்பகுதியில் கை வைத்து அரைவட்டமாக பிடித்து எடுத்தான். அப்போது தோன்றிய மின்னலிழையொன்றை தும்பிக்கையால் பிடித்திழுத்து இவனிடம் நீட்டி, ‘இந்தா இதை அம்புக் கயிறா கட்டிக்கோ’ என்றது யானை. வேட்டைக்காரர் உதவியுடன் நாண் பூட்டியபின் ‘அம்பு’ என்று கேட்டவனிடம், ‘தோ’, என்று நீண்ட இடித்துண்டொன்றை அவர் நீட்ட, அதை வானவில்லில்
பொருத்தினான். ‘நல்லா காது வரைக்கும் இழு அறுந்துடாது’, என்று வேட்டைக்காரர் சொல்ல, பின்கழுத்து வரை இழுத்து வேட்டைக்காரரை பார்த்தவனிடம், ‘அங்க விடு’, என்று எதிரே இருந்த மேகத்திரையைச் சுட்டினார். மூச்சை உள்ளிழுத்து, மின்னலம்பைத் தொடுத்தான். பள்ளி மேடையில் நாடகம் தொடங்கும்போது திரைச்சீலை இரண்டாக பிரிவது போல் மேகம் பிளவுபட, கண்கூசச் செய்யும் அடர்மஞ்சள் ஒளிக்கற்றைகள் உள்நுழைந்து அவ்விடத்தை நிறைத்தன. யானையின் பிளிறல் ஓசையுடன், நிலவின் மென்மையான கூக்குரல் இணைந்தது.

‘என்னடா அப்படியே நனஞ்சுட்டே வந்திருக்க, கொஞ்சம் வெயிட் பண்ணி வரக்கூடாதா. மழை நின்னுடுச்சு பாரு, இப்ப திருப்பி வெயிலடிக்குது. சரி போய் ட்ரெஸ் சேஞ் பண்ணு போ’, அம்மாவின் குரல் கேட்ட போது தன் வீட்டு போர்ஷனின் முன் நின்றிருந்தான்.

முகமற்றவர்களின் மர்மம்

‘ரூம்ல நானும், எங்கம்மாவும்தான் இருக்கோம். இவன் தொட்டில்ல. எல்லாருக்கும் தகவல் சொல்ல எங்கப்பா போய்ட்டா. இவன பாக்கவே மாட்டேன்னுட்டு மூஞ்சிய சுவத்து பக்கம் திருப்பிட்டிருந்தா. ம்மா பாரும்மான்னு கூப்படறேன், மாட்டேங்கறா. கொழந்த பொறந்தத நர்ஸ் சொன்னத, பொண் கொழந்த பொறந்ததா புரிஞ்சிண்டு ஒரே வருத்தம். கண்ண தொடச்சுக்கிட்டே ஒக்காந்திருக்கா. எங்கக்காக்கும் பொண் கொழந்ததான். என்னமா பேரன பொறந்துருக்கான், பாக்க மாட்டேங்கறன்னு சொன்னவுடன அப்படியே பாஞ்சு வந்து இவன் மேலே
போட்டிருந்த துணிய தூக்கி பாத்தா பாரு, ஆம்ப்ள கொழந்தடி, ஆம்ப்ள கொழந்தன்னு அப்டியொரு சந்தோஷம்’. சுந்தரி அக்காவிடம் அம்மா சொல்லிக் கொண்டிருக்க, படித்துக் கொண்டிருந்த ‘டின்டின்’ சித்திரக் கதையை மூடி வைத்துவிட்டு போர்ஷனை விட்டு வெளியே வந்தவனுக்குப் பின்னால் உரத்த சிரிப்புடன் சுந்தரி அக்காவின், ‘எல்லாடத்தலையும் இப்படித்தான்’. அம்மா அவ்வப்போது விவரிக்கும் நிகழ்வுதான், ஒவ்வொரு முறையும் கேட்பவர்களுக்கு உண்டாகும் குதூகலமும் பரிச்சயமானதுதான்.

போர்ஷனின் பின்புறத்தில் உள்ள காலி மனையை ஒட்டி வந்தமர்ந்தான். அம்மா அந்தச் சம்பவம் குறித்து பேசும்போதெல்லாம் இவனுள் உருவாகும், யாரிடமும் பகிர்ந்திராத, இப்போது தன்னுள் கவிய ஆரம்பிக்கக் போவதை சில கணங்களுக்கு முன்பே உணர்த்தும், நன்றறிந்த சங்கடம்.

அம்மாவின் அம்மா தவறாக காதில் வணங்கிக் கொண்டாள் என்பதை எப்படி உறுதியாக சொல்ல முடியும்? பிறந்த குழந்தைகள் சின்ன கவனமின்மையால் எளிதாக மாறி விடுவது பல திரைப்படங்களில் வருகிறது. ரெண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு வரைகூட இந்த பேச்செழும் போதெல்லாம் அன்றிரவு உடல் முழுதும் போர்த்திக் கொண்டு மூச்சுக் காற்றின் ஓசையை கேட்டபடி நெடுநேரம் விழித்திருப்பான். தனக்கும் அம்மா, அப்பாவிற்கும் உள்ள உருவ ஒற்றுமைகளை தேடிப் பட்டியலிட்ட நாட்களும் உண்டு. மூவரின் மாநிறத்தில் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால் தாத்தியும் சரி, அம்மாவின் அம்மாவும் சரி, நல்ல சிவப்பு என்பதில் வேறொரு குழப்பம். (‘எங்கம்மா மஞ்சள் வெள்ளை, அதான் அழகு வெள்ளை,’ என்கிறாள் அம்மா). ஒருபோதும் உறுதியான முடிவுக்கு வர முடியாத ஒப்பீடு, இப்போது போல்.

‘நல்லா பாத்தேன், இவன போட்டிருந்த தொட்டில் பக்கத்துல சாய் பாபா நின்னிட்டிருக்கார். தல நிறைய முடி, ரெட் ட்ரெஸ். இவனையே பாத்திட்டிருக்கார்’. அம்மா இதையும் இந்த நிகழ்வின் பின்னொட்டாகச் சொல்வதுண்டு. சாய்பாபா வந்து பார்த்திருந்தால் குழந்தை மாற வாய்ப்பே இல்லை, அவர் அப்படியெல்லாம் நடக்க விடமாட்டார், என்றுதான் அவரைப் பற்றி பத்திரிக்கைகளில் படித்துள்ளதை வைத்து நம்ப வேண்டியுள்ளது. ஆனால் ‘அதெல்லாம் பிரமை, நீயே அர மயக்கத்துல இருந்திருப்ப. அவருக்காக விரதம்லாம் இருந்தேல்ல, அதான் ஒனக்கு அப்படி தோணி இருக்கு’ என்கிறார் அப்பா.

‘நர்சிங் ஹோம்ல கொழந்த மாறிடுச்சு, இவன் எங்க பையன்’. போர்ஷனுக்கு வெளியே சத்தம் கேட்டு, அம்மாவும் அப்பாவும் வாசலுக்குச் செல்கிறார்கள். இவன் முன்னறையில் இருந்து பார்க்கிறான். கிணற்றடியில் இருவர் நிற்கிறார்கள். ஒருவர் சட்டை, பேண்ட் அணிந்திருக்க மற்றவர் சேலை. இருவருக்கும் முகத்தில் மட்டும் எந்த பாகமும் இல்லை, வெண்தோல் மட்டும் மேலே பூசப்பட்டிருப்பதைப் போல. அவர்களின் கைகளின் அசைவிற்கேற்ப குரலின் ஒலி வலுப்பெற அம்மா அழுகிறாள். கால்சட்டை இவனை நோக்கி வர, அவரைத்’ தள்ளி விட்டு வீட்டிலிருந்து ஓடி பெருமாள் கோவில் குளத்தினருகே செல்பவன், அங்கிருக்கும் ஆலமரத்தின் கீழ் இவனுக்கு பரிச்சயமான, சிறுவனா இளைஞனா என்று சொல்லமுடியாத, முன்மண்டையில் குடுமியை செங்குத்தாக நட்டு வைத்திருப்பதைப் போன்ற சிகையமைப்பு உடைய, உலகெங்கும் அலைந்து திரிந்து தீயவர்களை வீழ்த்தும் சாகசக்கார நிருபர், மேலுடம்பில் எதுவும் அணியாத, கொழுத்த தொந்தியுடைய கத்திரிக்காயுடன் பேசிக் கொண்டிருந்ததை கண்டு அங்கிருக்கும் மாவு மில்லின் திண்ணையில் நின்று கொண்டு அவர்களை கவனித்தபடி இருந்தவனைப் பார்த்த டின்டின், அருகில் அழைத்தான்.

தன் பிரச்னையை விவரித்தவனிடம், ‘தண்டரிங் தய்பூன்ஸ், ஐ வில் ஹெல்ப் யூ’ என்று டின்டின் சொல்ல, கத்திரிக்காய் இவன் தோளில் தட்டி ‘கவலைப்படாதே, எங்கள் ஆசிரியர் சங்கர்லால் இருந்திருந்தால் மிகச் சுலபமாக இதை தீர்த்து வைப்பார். இப்போது அவர் மணிமொழியின் பிரச்னையை முடித்து வைக்கச் சென்றிருக்கிறார். ஆனால் இவரும் சாதாரணமானவர் அல்ல’, என்று தைரியமளித்தான். ‘ஸ்நோவி வரலையா’ என்று டின்டினிடம் இவன் கேட்க, ‘ஹி மஸ்ட் ஹவ் கம் அக்ராஸ் அ போன்’ என்று சலித்தபடி பதிலளித்து பின்னால் திரும்பி டின்டின் அழைத்தவுடன், டீக்கடையிலிருந்து வெளியே வந்த வெண்ணிற நாய் இவர்களுடன் சேர்ந்து கொண்டது.

‘வீ ஹாவ் டு கோ டு த நர்சிங் ஹோம் பர்ஸ்ட்’, என்று டின்டின் சொன்னதற்கு ‘வண்டி இல்லையே’, என்றிவன் பதிலளித்தான். ‘அதெல்லாம் கிடைக்கும் அங்கே பார்’, என்று கத்திரிக்காய் சுட்ட, ஆலரமரத்தின் அருகே இரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு, மரத்தின் பின்னால் இருவர் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார்கள். ‘லெட்ஸ் டேக் தெம்’, என்று சொல்லிவிட்டு டின்டின், அவற்றில் ஒன்றில் ஸ்நோவியுடன் ஏறிக்கொள்கிறான். கத்திரிக்காயை இவன் ‘டபுள்ஸ்’ அடிக்க, சிறுநீர் கழிப்பதை பாதியில் நிறுத்தி விட்டு வண்டியின் உரிமையாளர்கள் கத்திக் கொண்டே பின்னால் ஓடி வந்து, பின் களைத்து நின்றுவிடுகிறார்கள். மருத்துவமனையில் நர்ஸிடம் ஏதோ கேட்டுத் தெரிந்து கொள்ளும் டின்டின், முழுதும் ஆவணங்களால் நிரப்பப்பட்டிருக்கும் பெரிய அறைக்குள் கத்திரிக்காயுடன் சென்று தேடுகிறான். கையில் கோப்புடன் ‘கிடைத்து விட்டது ஐயா’, என்று உரக்க சத்தமிடும் கத்திரிக்காயை அணைத்து தட்டிக் கொடுத்து ‘லெட்ஸ் கோ’ என்கிறான் டின்டின். கிளம்பி வீடு வருகிறார்கள்.

பின்புறச் சுவற்றின் ஓரத்தில் உள்ள எலுமிச்சை மரத்தினடியில் டின்டின் புடவை, பேண்ட் சட்டை ஆட்களிடம், கோப்பு காட்டி ஏதோ கேட்டுக் கொண்டிருக்க, அவனை ஊக்குவித்தபடி கத்திரிக்காய். ஸ்நோவியின் சிறிய உறுமல்கள். பயங்கொண்ட வெண்தோல் போர்த்திய முகங்கள் சைகை செய்ய, புதிதாக மூன்று பேர் சேர்ந்து கொள்கிறார்கள். டின்டினின் முஷ்டி அவர்களின் தாடையை பதம் பார்த்ததும், அவர்கள் மேலெழும்பி தரையில் விழ, அப்போது காற்றில் வரையப்படும், ‘கோன் ஐஸ்’ போன்று தலை கீழாக திருப்பிப் போடப்பட்ட முக்கோணமும், மேல் பகுதியில் காளானின் வடிவமும் கொண்ட, சித்திரக் கதைகளில் வருவது போன்ற வெண்ணிற பலகைகளில்

BOOM!
THUMP!
WHAM!
CRASH!

கீழே விழுந்து கிடப்பவர்களின் தலையச் சுற்றி வட்டமிடும் சிகப்பு, பச்சை நிற நட்சத்திரங்கள், அவர்களின் இடுங்கிய கண்களின் கீழ் கருவளையங்கள். சுதாரித்து, சுவற்றை அடுத்திருக்கும் காலி மனையில் குதித்து அனைவரும் ஓட, குரைத்தபடி எதிராளிகளைத் துரத்தும் ஸ்நோவி, அவர்களில் ஒருவனின் பின்புறத்தை கடிக்க

OVV!

என்று புட்டத்தை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு மேலும் கீழும் குதிக்கிறான். ‘எல்லாம் நல்லபடியாக முடிந்தது நண்பா’ என்று இவன் தோளைத் தட்டி விட்டு கத்திரிக்காய் செல்கிறான். ‘ஐ வில் அல்வேஸ் பி தேர் டு ஹெல்ப் யூ’ என்கிறான் டின்டின்.

‘நர்சிங் ஹோம்ல கொழந்த மாறிடுச்சு, இவன் எங்க பையன்’ போர்ஷனுக்கு வெளியே சத்தம் கேட்டு, அம்மாவும் அப்பாவும் வாசலுக்குச் செல்கிறார்கள். இவன் முன்னறையில் இருந்து பார்க்கிறான். கிணற்றடியில் இருவர் நிற்கிறார்கள், ஒருவர் சட்டை, பேண்ட் அணிந்திருக்க மற்றொருவர் சேலை. இருவருக்கும் முகத்தில் மட்டும் எந்த பாகமும் இல்லை, வெண்தோல் மட்டும் மேலே பூசப்பட்டிருப்பதைப் போல. இவன் குளக்கரைக்கு ஓட, அங்கே மீண்டும் டின்டின், கத்திரிக்காய், ஸ்நோவி. மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் பயணம்.

BOOM!
THUMP!
WHAM!
CRASH!

தலையைச் சுற்றி வட்டமிடும் சிகப்பு, பச்சை வண்ண நட்சத்திரங்கள். முகமில்லாதவர்களின் ஓட்டம். பிருஷ்டத்தைக் கடிக்கும் ஸ்நோவி.

‘நர்சிங் ஹோம்ல கொழந்த மாறிடுச்சு, இவன்..’

‘என்னடா அங்க தனியா பாக்ஸிங் பண்ணிட்டிருக்க, பெரிய டைசன்தான். அம்மா கூப்டுட்டே இருக்காங்க என்னன்னு போய் கேளு’, சுந்தரி அக்காவின் குரல் கேட்டு, முகத்தினருகே இருந்த முஷ்டிகளை இறக்கியவன், சற்று குனிந்திருந்த உடலை நிமிர்த்திக் கொண்டு போர்ஷனை நோக்கிச் சென்றான். யாருமில்லாத கிணற்றடியைக் கடக்கும்போது திரும்பிப் பார்க்க பின்புற மனை எப்போதும் போல் காலியாக இருந்தது.

படுகளம்

சிறுவனொருவன் செய்யும் சாகசக் கதையொன்றை படித்துக் கொண்டிருந்தான். இதெல்லாம் பெரிய விஷயமில்லை, அந்தப் பயலைவிட எளிதாக, விரைவாக, இவன் செய்து முடித்து விடுவான். ‘மலைக்குகை மர்மத்தை’ கண்டுபிடிப்பவன், வியப்பு நிறைந்திருக்கும் கண்களால் இவனைப் பார்த்தபடியே இருக்கும், இவனுடன் படிக்கும், உமா மற்றும் மீராவின் பக்கம் திரும்பாமல், காரியத்தை முடித்த நிறைவுடன் அவர்களை கடந்து செல்கிறான். ‘இன்னிக்கு கண்டிப்பா போயிட்டு வந்துடு, டிலே பண்ணாத’, அப்பா சொன்னதற்கு பதிலேதும் சொல்லாமல் எழுந்து அரிந்து முடித்த கீரையுடன் சமையலறைக்குள் அம்மா நுழைய ‘என்ன முணுமுணுக்கற, எதுவாருந்தாலும் நேர சொல்லு, பின்னாடி பேசாத, எனக்கு எதுவும் நேரா சொல்லித்தான் பழக்கம்’. பின்னால் சென்றபடி அப்பா, அம்மா எதுவும் கூறியது  போல் தெரியவில்லை. இதுவரை அவள் அப்பாவின் முகத்தின் எதிரே சொல்லிப் பார்த்ததும் இல்லை.

போர்ஷனின் பின்புறத்தில் உள்ள காலி மனையை ஒட்டியுள்ள சுவற்றில் அமர்ந்தான். இன்னும் இரண்டு வாரங்களில் கோடை விடுமுறை முடிந்து விடுவதற்குள் கண்டுபிடிக்க வேண்டிய மர்மங்கள், புதையல்கள் பல உள்ளன. இந்த வருடம் எட்டாவது. இனி பள்ளிக்கு பேண்ட் அணித்து செல்லலாம், இன்னும் பெரிய சாகசங்களை நிகழ்த்தலாம்.

இவனை அம்மா அழைக்கும் குரல் கேட்டு உள்ளே செல்லும்போது மணி பதினொன்றே முக்கால். ‘வா எல்.எல் வீட்டுக்கு போயிட்டு வரலாம்’ என்றாள்.

‘என்னமா’

‘வேல இருக்கு, அருணாவும் ஒன்ன பாக்கணும்னு சொல்லிட்டிருக்கான்னு எல்.எல் சொன்னாங்க, நீயும் வா’

கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பியவளுடன் போர்ஷன் வாசலுக்கு வந்தபோது, முன்னறையில் இருந்த அப்பா ‘கெளம்பிட்டியா, சும்மா வந்துடாத’ என்று சொல்ல, வெறுமனே தலையாட்டினாள். கோம்ஸ் மிஸ் போர்ஷனை தாண்டும்போது ‘எதுக்கு போறோம்மா’ என்று மீண்டும் கேட்டான்.

‘அதான் சொன்னேனே வேல இருக்கு’

‘நா வரணுமாமா’

‘…’

‘அப்பறம் போய் அருணாக்காவ பாத்துக்கறேன்’

‘அதெல்லாம் வேணாம் வா’

பெரியமணிக்காரத் தெருவிலிருந்து, மேட்டுத்தெருவை தாண்டி பதினைந்து நிமிட நடை தூரத்தில் அம்மாவுடன் வேலை செய்யும் எல்.எல். டீச்சரின் வீடு. அம்மாவைவிட பத்து பதினைந்து வயது அதிகமிருக்கக் கூடியவருக்கு, சுருட்டை முடியில் பரவ ஆரம்பித்திருக்கும் நரையும், மூக்குத்தியும் கம்பீரம் கூட்டுகின்றன. அவரும் மஞ்சள் வெள்ளை என்கிறாள் அம்மா. வீட்டினுள் நுழைந்தபோது நோட்டில் எழுதிக் கொண்டிருந்தவர், ‘வா வா’, என்று அதை மூடிக் கொண்டே சொல்கிறார். ‘என்ன டீச்சர் நோட்ஸ் ஆப் லெஸ்ஸன் எழுதறீங்களா’, என்றபடி அம்மா அமர, சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்த அருணாக்கா, ‘என்னடா எப்படி இருக்க, தோ வரேன்’, கேட்டு விட்டு மீண்டும் உள்ளே செல்கிறார் .’ஒக்கார்டா’ என்றிவன் கையை பிடித்து தன்னருகே அமர வைத்துக் கொல்கிறார் எல்.எல்.

‘டிஸ்டர்ப் பண்ணிட்டோமா டீச்சர்’, என்று அம்மா கேட்க ‘அதெல்லாம் இல்ல, அருணாதான் இன்னிக்கு சமையல். எங்களலாம் பாக்க வரமாட்டியா’, என்று இவனிடம் கேட்டவர், ‘வருவேன், மாட்டேன் எதுன்னு புரியாத மாதிரியே தலையாட்டறான் பாரு’, என்று சொல்ல. அம்மாவும், மீண்டும் ஹாலுக்கு வந்திருந்த அருணா அக்காவும் சிரித்தார்கள். ‘இந்த வருஷம் ரிசல்ட் வரது கஷ்டம் போலருக்கு டீச்சர், இந்த செட்ட நெனச்சா நம்பிக்கையே வர மாட்டேங்குது, ரொம்ப மோசமா இருக்காங்க’, எல்.எல்லிடம் பேசிக் கொண்டிருக்கும போதே, அருணாவின் பக்கம் அவ்வப்போது பார்த்தபடி இருந்தாள் அம்மா.

குக்கர் விசில் சத்தம் கேட்டு ‘தோ வரேன்’, என்று அக்கா உள்ளே செல்ல ‘டீச்சர் ஒரு ஹெல்ப்’, என்று ஆரம்பித்து நிறுத்திய அம்மா, ஓரிரு நொடிகளுக்குப்பின், ‘இன்னிக்கு காத்தால தாம்பரம் போயிருந்தோம், என் அத்தைய பாக்க. திரும்பி வரும்போது டி-சிக்ஸ்டில செம ரஷ், என் பர்ஸ்ஸ இவன்கிட்ட குடுத்திருந்தேன், அத தொலைச்சிட்டான்’, என்று தொடர்ந்தாள்.

‘ஐயோ சின்னப் பையன்கிட்ட போய் ஏன் குடுத்த, ஏண்டா கொஞ்சம் கேர்புல்லா இருக்கப்படாதா’, என்று இவனிடம் எல்.எல். கேட்டுக் கொண்டிருக்கும்போது அருணாக்கா மீண்டும் ஹாலுக்கு வந்தார். இவன் எதுவும் பேசாமலிருந்தான்.

‘டிக்கெட் வாங்க காச எடுத்துட்டு, இத கொஞ்ச நேரம் வெச்சுக்கடான்னு குடுத்தேன், திரும்பி வாங்க மறந்துட்டேன். இவனும் தரலை, கீழ போட்டுட்டானோ இல்ல, யாராவது திருடிட்டாங்களான்னு தெரியல’ என்று அம்மா சொல்ல, தலையை குனிந்து கொண்டான்.

‘பஸ்ல இந்த மாதிரி நெறைய நடக்குது ஆண்ட்டி, இனி கேர்புல்லா இருப்பான் திட்டாதீங்க’

‘அதெல்லாம் திட்டல அருணா’

‘எவ்ளோ பணம் இருந்துச்சு’, என்று எல்.எல் கேட்டதற்கு, ‘அதான் இப்ப பெரிய பிரச்சனை’ என்று அம்மா சொல்ல எல்.எல் எதுவும் பேசவில்லை.

‘பர்ஸ்ல தான் வீட்ல இருந்த மொத்த காசு, எறநூத்தம்பது ரூபா இருந்தது, இன்னும் ஒரு வாரம் ஓட்டனும்’

‘ஏண்டி எல்லா பணத்தையும் ஒரே எடத்துல வெச்சிருந்தியா’

மீண்டும் சூழ்ந்த மௌனத்தை தலை நிமிர்ந்து நோக்கினான். அருணாவின் மீது பார்வையை செலுத்திய அம்மா சொல்ல ஆரம்பித்ததை நிறுத்தி சில கணங்களுக்கு பின் ‘அதான் டீச்சர் தப்பு பண்ணிட்டேன்…. ஒரு அம்பது ரூபா கெடச்சா, இந்த ப்ரைடே சாலரி வந்தவுடனே தந்துடுவேன்.. தப்பா எடுத்துக்காதீங்க’ என்று சொல்ல ‘உள்ள பர்ஸ் எடுத்துட்டு வா அருணா’ என்றார் எல்.எல்.

அம்மாவின் பர்ஸை கண்டுபிடிக்க டின்டினிடம் இவன் உதவி கோர, ‘ஸாரி, ஐ கான்ட் ஹெல்ப் யூ’, என்று சர்வதேச சதிகார கும்பலை பிடிக்கும் முயற்சியை ஸ்நோவியுடன் தொடர ஆரம்பித்தான். ‘மணிக்கொடியின் பிரச்சனையை இப்போதுதான் தீர்த்து விட்டு வந்தார் சங்கர்லால். ஆனால் அவரால்கூட இதை கண்டுபிடிக்க முடியாது, மன்னித்து விடு’, என்று தொந்தி மீது கையை மடக்கி வைத்துக் கொண்டு சொல்லி விட்டு கத்திரிக்காயும் தலை குனிந்து செல்கிறான். வேறொரு வானின் இரவில் டைட் ட்யுடி பார்த்துக் கொண்டிருந்த வேட்டைக்காரர், வெளிச்சத்தில் தன்னால் உதவ முடியாது என்றார். இவர் கண்டிப்பாக பர்ஸை கண்டுபிடிப்பார் என்று இறுதி நம்பிக்கையாக உதவி கேட்ட, நீள் அங்கி, தொப்பி அணிந்த, பைப் பிடித்துக் கொண்டிருந்தவரும் ‘ஸாரி, திஸ் இஸ் நாட் எலிமெண்டரி மை டியர் பாய்’ என்று கூறிவிட்டு, கேஸ் விளக்கின் வெளிச்சத்தில் மிதந்து கொண்டிருந்த மூடுபனி படர்ந்த தெருவினுள் இருக்கும் தன் மாடி போர்ஷனுக்குள் நுழைந்து, லண்டன் நகர குற்றவாளிகளில் முதன்மையானவரும், தன் பரம வைரியுமான பேராசிரியரை கைது செய்ய என்ன வியுகம் வகுப்பது என்பது குறித்து சிந்திக்க ஆரம்பித்தார்.

உமையாள்- ந. பானுமதி சிறுகதை

பானுமதி. ந

தரையைத் தொட்டுச் செல்லும் ஓசைகளுடன் விமானங்கள் தாழப் பறந்து செல்வதை இங்கே வரும்போதே கண்டாள் உமையாள். மனிதர்கள், அவர்களது அவசரங்கள், அவஸ்தைகள், ஏமாற்றங்கள். தான் மிகவும் பின்தங்கிவிட்டதாக நினைத்தாள். இல்லை இந்த வெற்று வேகங்களுக்கான அவசியங்கள் அவள் வாழ்வில் ஏற்படவேயில்லையே. பின் அவள் எப்படி தோற்றவளாவாள்? தோற்றவளில்லை, ஆனால் பறிகொடுத்தவளோ? அதில் அவளது பிழைதான் என்ன?

பதினேழு வயதில் அவள் பி.ஏ முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கையில் படிப்பை நிறுத்தி அவளுக்குத் திருமணம். இளமையை உணரும் பொழுதுகளுக்கு முன்னாலே கர்ப்பம். முத்துமீனாள் பிறந்த இரு வருடங்களுக்குள்ளாகவே அவள் மங்கலப் பெண்ணிலிருந்து விதவை எனப்பட்டாள். கனன்று கொண்டிருந்த தீ மேலே சாம்பல் பூத்தது. ”உனக்கென்று ஏதும் ஆசைகள் இருக்கிறதா, மேலே படிக்கிறாயா, கைத் தொழில் ஏதாவது கற்றுக் கொள்கிறாயா?” எனக் கேட்டவர் இல்லை. மாமியாரும் இல்லாத பெரிய குடும்பத்தின் மூத்த மருமகளாக, இப்பொழுது கணவனையும் இழந்தவளாக அவள் நிலை புகுந்த வீட்டாருக்கு வசதியாகத்தான் போனது. ஆனால், ஒன்று சொல்ல வேண்டும், அவள் உழைத்தாலும் எல்லோரும் அவளை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். முத்துமீனாளைப் படிக்க வைத்தார்கள். அவளுக்குக் கல்யாணம் செய்து வைத்தே ஆறு வருடங்களாகிவிட்டன. அவளின் நாத்தியின் மகன்தான் மருமகன்.

உமையாள் இன்று ஏன் இங்கே வந்திருக்கிறோம் என்று புரியாமல் யோசித்தாள். இந்த இடத்தை ஒரு மருத்துவமனை என்று சொல்ல முடியுமா? முத்துமீனாளும்,குமரப்பனும் நான்கு வருடங்களாகவே சிங்கப்பூரில் வேலை பார்க்கிறார்கள். தன்னை இங்கே அழைத்து வந்திருப்பது அவளுக்குக் குடும்ப வேலைகளிலிருந்து சற்று ஓய்வு எனக்கூடச் சொல்லலாம்.

எத்தனை அழகான இடங்கள், வகைவகையான மனிதர்கள், அவர்களின் விரைவோட்டங்கள், எறும்புச்சாரியென வரிசையில் கார்கள், அமைதி ததும்பும் ஆலயங்கள், சிரித்துக் களியாடும் பூங்காக்கள், உலகின் அத்தனை விதமான உணவுகளும் கிடைக்கும் விடுதிகள், உழைப்பிற்கும், நேரத்திற்கும், சுத்தத்திற்கும், பணத்திற்கும் முதன்மை கொண்டாடும் மக்கள். இது வேறு ஒரு உலகம்.

ஆனால், எதற்காக மருத்துவமனை வந்திருக்கிறோம் என அவளுக்குப் புரியவில்லை. மீனாளும்,குமரனும் அவளை அங்கே அமர்த்திவிட்டு உள்ளே சென்றிருக்கிறார்கள். அவள் அமர்ந்திருந்த வரவேற்பறையில் இனிதான லாவண்டர் மணம் கமழ்ந்தது. உறுத்தாத இசை மெலிதாகக் கசிந்து கொண்டிருந்தது. ரிசப்ஷனிலிருந்த நான்கு யுவதிகளும் ஒரே அச்சில் வார்த்தது போல் இருந்தனர். மீனாள் போடுகிற லிப்கலர் நன்றாக இல்லையென்றும், முடிந்தால் இவர்களிடம்  அந்த வகையைக் கேட்க வேண்டும் என்றும் உமையாள் நினைத்துக் கொண்டாள்.

கூடை கவிழ்த்தது போல் முடியுடன் ஒரு சிறு பெண் குழந்தை அவளைக் கடந்து ஓடியது. கால்களில் கொலுசுடன், கைகளில் வளையல்களுடன் ஓடிய அக்குழந்தை நிச்சயமாக தென் இந்தியாவைச் சேர்ந்ததுதான். ஆனால் அதைத் தொடர்ந்து வந்த பெண் வேறு இனத்தவளாகத் தோன்றினாள். மீனாளுக்கும் காலாகாலத்தில் ஒரு குழந்தை பிறக்கவேண்டும். குணத்தில் அவளைக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

உமையாள் சிரித்துக் கொண்டாள். பிறந்தபோது வந்த குணம் பொங்கலிட்டாலும் போகுமா? தேவகோட்டையிலிருந்து  இளம்பாளையம் செல்வதற்கு குடும்பத்துடன் அவர்கள் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தார்கள். பேருந்தில் ஒரே ஒரு ஜன்னல் சீட்டுத்தான் காலியாக இருந்தது. குமரன் தாவி ஏறி அதில் அமர்ந்துவிட்டான். பின்னர் ஏறிய மீனாள் இறங்கிவிட்டாள். ”ஆச்சி,நாம வீட்டுக்குத் திரும்பலாம்.”

எத்தனை கேட்டும், அவள் காரணத்தைச் சொல்லவில்லை. உமையாள் வேறு வழி இல்லாமல் பயணத்தைத் தொடராது இவளுடன் வீடு திரும்பும்படி ஆகிவிட்டது

”எனக்கு ஜன்னல் ஓரந்தான் புடிக்கும்”  என்றாள் தானாகவே மீனாள்.

“ஏட்டி, அதுக்கா பயணத்தை நிறுத்திப் போட்டே. நம்ம குமருதானே, சொன்னா வுட்டுக் கொடுப்பான் இல்ல?”

“அது அவனுக்கே தெரியணுமில்ல. பின்னையும் நா ஏன் கேக்கணும்?”

“அப்படின்னா?”

“அப்படின்னா அப்படித்தான்”

“மொத்தத்தில் என்ன போகமாட்டாம செஞ்சுட்ட”என வாய் வரை வந்த வார்த்தைகளை உமையாள் முழுங்கினாள். அன்று இரவு இவளை நினைத்து கவலைப்பட்டாள்.

தன் சுகத்தை அவள் யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை. தாத்தா, சித்தப்பன்மார், அத்தை எல்லோரிடமும் சலுகை.

“அப்பன் முகம் அறியா புள்ளையை ஒன்னும் சலியாதே”என்று அவர்கள் மீனாளின் பக்கமே நின்றார்கள்.

கல்லூரியில் படிப்பு முடியும் வருடம்.“ஆச்சி, நான் குமரப்பனை கட்டிக்கிடலாமென நெனைக்கேன். நீ பேசுதியா, நாஞ் சொல்லட்டா?”

“என்னடி, நம்மை வைச்சு மானமா காப்பாத்தி இருக்காஹ. படிப்பு, பவிசு எல்லாமே அவங்களால. இன்னும் அரியணை கேக்குதா உனக்கு? நம்மால அவுகளுக்கு ஈடு நிக்க முடியுமா? நீ வேலைக்குப் போய் நம்ம கால்ல நிக்கலாம்னு நா கனா கண்டுட்டிருக்கேன்”

“எனக்கு வளப்பமா இருக்கணும். நீ இத்தனை காலம் உழச்சிருக்கல்ல, அதுக்கு கூலின்னு நெனைச்சுக்கோ”

தன்னை எந்த ஒரு சொந்தமும் இவ்வளவு அவமானப்படுத்தியதில்லை என அன்று முழுதும் பிறர் அறியாமல் உமையாள் அழுதாள். வென்றதென்னவோ முத்துமீனாள்தான். நாத்திக்கும் நல்ல மனம். பிள்ளையின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்கவில்லை.

சிந்தனைத் தொடர் அறுந்து நிகழ் உலகிற்கு வந்தாள் அவள். எங்கே போய்விட்டார்கள் இவர்கள்? எத்தனை நேரம்? சலித்து எழுந்து நடந்து வெளியேறும் மையப் பகுதியில் வந்து நின்றாள். அங்கிருந்த ஒரு அழகான சிற்பம் அவளைக் கவர்ந்தது. வழவழப்பான ஒற்றைக் கரும்பாறையில் ஒரு வட்ட முகம், அதன் கழுத்துப் பகுதியிலிருந்து கிளைத்த இரு உடல்கள், அந்த உடல்களின் மார்புப் பகுதியில் ஒரு சிறு குழந்தை. பார்க்கப் பார்க்கப் பரவசமானாள் அவள். ஒருகால் இந்த மருத்துவமனை மகப்பேற்றுக்கானதோ? அப்படியென்றால், மீனாள் அதற்காகத்தான் வந்திருக்கிறாளோ? என்னிடம் சொல்லக்கூடாதா?

“உன்னை எங்கெல்லாம் தேட்றது, ஒரு இடத்துல இருக்கமாட்டியளோ இங்கிலீஷும் தெரியாது, காணாமப் போனா எங்கிட்டுன்னு பாக்க. சரி, சரி டாக்டர் விளிக்கிறாங்க, வா “

மொழி புரியாவிட்டாலும், உணர்வுகள் வெளிப்படும் குரல் காட்டிக் கொடுத்துவிடாதா, என நினைத்துக் கொண்டு உமையாளும் உடன் சென்றாள்.

டாக்டர் இள வயதினளாக இருந்தாள். சிரித்துக் கொண்டே கைகுலுக்கி பரிசோதிக்கும் படுக்கையில் படுக்கச் சொன்னாள்.உமையாள் தயங்க, “சொன்னதைச் செய்”என்று பல்லைக் கடித்தாள் மகள். ”ஒண்ணுமில்ல, மதனி, ஒரு ஜெனரல் செக்கப், பயப்படாதீய” என்றான் குமரப்பன். என்னென்னவோ பரிசோதனைகள், உமையாளிற்கு ஒன்றும் விளங்கவில்லை. வீடு திரும்புகையில் அவர்கள்  ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. ”தம்பி, குமரு, என்னதுக்கப்பா இம்புட்டு செலவு செய்யறிஹ. நான் நல்லாத்தான இருக்கேன்,” என்றாள்.

“மதனி, மீனாளுக்கு யூட்ரஸ் பழுது. அவ கர்ப்பம் தரிக்க ஏலாதாம். அதான் உங்களுக்குப் பார்த்தம்”

“என்ன சொல்லுதீய?அவளுக்கு என்ன கொறை? ஏன் எங்கிட்ட முன்னமே சொல்லலை? நம்மூர் டாக்டரிட்ட போவோம். அதெல்லாம் சரி பண்ணிடுவாக நம்மூர்ல.”

“சிங்கப்பூர்ல்யே முடியாதுன்னுசொன்ன பொறவு நம்ம பட்டிக்காட்டுல என்ன செஞ்சுடுவாக? ஏதும் விவரமா பேசுதியா நீ?” என்றாள் மீனாள்.

“சரி, உன் கொறையை சரி செய்யமுடியாது. ஆனா, எனக்கு எதுக்கு டெஸ்ட் எல்லாம் செஞ்ச?”

“உனக்கு எல்லாம் நல்லா இருக்குதாம். நீ எங்களுக்கு மகவு சுமந்து தரணும்”

உமையாள் பேச்சிழந்தாள்.

“மதினி,பயப்படாதிக. ராணி போல பாத்துகிடுதோம்.”

“தம்பி,மெய்யாலுமே எனக்கு விளங்கல. என்னைய என்ன செய்யச் சொல்லுதீய?”

“நீ வாடகைத் தாயா இருக்கணும் எங்களுக்கு. எங்க மகவுதான் எங்களுக்கு வோணும்…”

“மேலே சொல்லாதே. நான் இதுக்கெல்லாம் ஒப்புவேன்னு எப்படி நெனைச்சீக”

“ஐய, எல்லாம் லேப்லதான் நடக்கும். உருவான கருதான் உன் கருப்பைக்கு வரும். என்ன சுமந்த மாரி நினைச்சுக்க. எனக்காக இதை செய்ய மாட்டியா என்ன?”

உமையாள் பேச்சற்று அமர்ந்தாள். ஊரிலே அவளுடைய கொழுந்தன் அவங்க வங்கியில ‘அவுட்சோர்ஸ்’ செய்யறதைப் பற்றி சொல்லி விளக்கியது இப்பொழுது நினைவிற்கு வந்தது. தந்திரமாக சிங்கப்பூர் அழைத்து வந்து, ஊரைச் சுற்றிக் காட்டி, விஷயமே சொல்லாமல் மருத்துவமனைக்கு  அழைத்துச் சென்று, தங்கள் செயல்பாடுகள் நியாயமென வாதாடும் இவர்கள் இத்தனை மட்டமானவர்களா?

“மதனி பயப்பட்டுச்சுன்னா வேணாம் மீனா. பின்னர் பாத்துக்கிடலாம்”அவன் சொல்வது கேட்டது.

“”அம்ம வளப்பமா இருக்கையில நடத்திப்புடணும். இந்த ஊர்ல யாரைத் தெரியும் அவுகளுக்கு. நாம சொல்றதைத்தான் கேக்கணும். என்னாலெல்லாம் மகவு சுமந்து சங்கடப்படமுடியாது. ஆண்டவன் சரியாய்த்தான் கொடுத்திருக்கான் எனக்கு.”

உமையாளுக்கு தான் இனி என்ன செய்ய வேண்டும் என்பது புரிந்தது.