Author: பதாகை

நினைவைப் புதைத்தல்- ராகேஷ் கன்னியாகுமரி சிறுகதை

ராகேஷ் கன்னியாகுமரி

நேற்றுவரை தன்னுடன் விளையாடி மகிழ்ந்த தாத்தாவுடன்தான் இருந்தான் சுடலை. ஆனால் இப்போது அவர் குளிர்ந்து விறைத்த தேகமாக. மிகவும் நீண்ட உருவம். எப்படியும் எண்பது வயது தாண்டியிருக்கும். அம்பாசிடர் காரின் பின்புறம், மடியில் அவரது கால்கள். காலில் இருந்த அழுக்கு அப்படியே தான் இருக்கிறது. நகம் நீளமாக என்பதை விட அளவோ அழகோ இல்லாத ஒரு அழகில் அவர் கால்களில்.

சுடலை பள்ளிக்கூடம் போய்விட்டு பக்கத்தில் இருக்கும் தன் வீட்டுக்கு நேராகச் சென்றதே குறைவு. சாயங்காலம் வாசலில் அவன் தென்பட்டவுடன் ‘ஓடிவாடியே’ என்று மனைவியை அழைப்பதுதான் தாத்தாவின் தினவழக்கம். அவரது கத்தி அழைக்கும் குரல் மற்றும் புளங்காகிதமே பக்கத்து வீட்டில் இருக்கும் அம்மாவுக்கு அவன் வருகையை உணர்த்திவிடும். பாட்டி நடந்து வரும்போதே சாப்பிடுவதற்கு அவனுடைய வாயும் வயிறும் தயாராகிவிடும்.

ஒருமுறை பாட்டியை எட்டி உதைத்ததை பார்த்தவுடனே அவனை அறியாமல் அழுதுவிட்டான். பாட்டியும் உதையை வாங்கிக்கொண்டு முனகிக்கொண்டே ஒரு மூலையில் போய் அமர்ந்து ‘இந்த சவத்து கிழவனுக்க காலு வெளங்காத போவ. காலனுக்க விளி இதுக்கு வரல்லியே,’ என்றவாறே சுடலையை அழைத்து அணைத்துக்கொண்டாள் . கண்ணீர் நிற்காமல் வடிந்துக்கொண்டே இருந்தது. அவளும் துடைத்துக்கொண்டே இருந்தாள். அது நடந்து ஏழெட்டு வருடங்கள் இருக்கலாம்.

சுடலை அவன் தாத்தா நகம் வெட்டுவதற்கென இருக்கும் நகவெட்டியை உபயோகித்து பார்த்ததேயில்லை. எப்போதும் கையில் கொண்டு நடக்கும் சிறு வெட்டுக்கத்தியால்தான் லாகவமாக வெட்டுவார் . ஆனால் ஒரு நாள் கூட வெட்டிய நகங்களை வயலில் வீசவே மாட்டார். அவன் சொல்லியும் பார்த்தான், “பக்கத்தில் ஓடும் சிறு ஓடையில் வீசுங்க”, என. அவர் அதற்காக திட்டியதுடன் தண்ணீரில் எக்காரணத்தைக் கொண்டும் எச்சில் துப்பவோ, குப்பைகளை வீசவோ கூடாது என்றும், நகம் மூதேவியின் அம்சம் என்பதால் அதை யாருடைய காலடியும் பதியாத இடத்தில்தான் களைய வேண்டும் என்றதும் அவனுக்கு நினைவுள்ளது .

இதையேதான் பாட்டியும் சொன்னாள், நகங்கள் காளானாய் உருமாறும் என. அதை வயலில் போட்டால் சாமிகள் கோபமாவார்கள் என்றும், நீரில் போட்டால் தண்ணீர் கிடைக்காமல் கடைசி காலத்தில் இறக்க நேரும் எனவும்.

தாத்தா நகங்களை சிறு காய்ந்த இலையில் சேகரித்து எடுத்து வந்து தார்ச்சாலையின் ஓரத்தில் போடுவார், அல்லது இவனிடம் போடச்சொல்வார். இவன் பயத்தால் ஒரு நகத்தைக்கூட சிந்தாமல் அவ்வளவு தூரம் நடந்து வந்து போட்டுச் செல்வான். அவரும் அதை தொலைவில் இருந்து கவனிப்பார். பாட்டி சொல்வாள், நகக்கண்ணில் தோன்றும் வெள்ளைப்புள்ளிகள் அதிர்ஷ்டத்தின் வருகை என. ஒவ்வொரு புள்ளிக்கும் புதுத் துணி கிடைக்கும் எனவும், கிடைத்தவுடன் புள்ளிகள் மறைந்துவிடும் என்றும். நகம் அவனுக்கு வேகமாக வளரும். ஆனால் தங்கைக்கு அப்படி அல்ல. பள்ளி விடுமுறைக் காலங்களில் அதில் அவ்வளவு அழுக்கு படியும். அதே கைகளுடன் சாப்பிடவே பாட்டி விடமாட்டாள். ஆனால் அப்போதெல்லாம் தாத்தா தான் அவனுக்காக பேசுபவர்.
நேற்று இரவிலும் இவன் வெற்றிலை பாக்கை கல்லில் வைத்து இடித்துக் கொடுத்தான். இரவு பதினொரு மணிவாக்கில்தான் கண் திறக்க முடியவில்லை என பாட்டியை கூப்பிட்டார். பாட்டி ஓடிச்சென்று அவரை எழுப்பப் பார்க்கும்போதே நிலைகுத்திய பார்வை. பாட்டியின் அரட்டல் கேட்டுத்தான் சுடலை எழுந்தான். பக்கத்து வீட்டில் இருக்கும் அப்பாவை அழைக்க ஓடினான். அவர் அதற்கு பக்கத்து வீட்டில் இருக்கும் டிரைவர் அண்ணாச்சியை கூப்பிட ஓடினார். அவரது கருப்பு அம்பாசிடர் காரில்தான் தூக்கிச் சென்றனர். ஆஸ்பத்திரியில் சேர்க்கும்போதே தாத்தா செத்துப்போவார் என சுடலைக்கு தோன்றியது. அதுதான் நடந்ததும். ஒரு மணி அளவில் உடம்பை எடுத்துப் போகச் சொல்லிவிட்டனர்.

இப்போது அவனது அப்பாவும், பாட்டியும் இவனுடன் அழுது கொண்டே வந்தனர். வாகனம் வந்து நின்றதும் சுடலையின் அம்மாவின் அழுகையும், அந்த இரவில் எதிரொலிக்கத் தொடங்கியது. மரங்களில் இருந்த காகங்கள் கத்திக்கொண்டே பறந்தது. தாத்தாவின் காலை இவன் பிடித்துக் கொண்டான். பிணத்தை அப்புறப்படுத்தி அதை வீட்டு வெளி வராந்தாவில் வைத்தனர். வெற்றிலைக் கறைகூட அவர் உதட்டில் இருந்தது.

பக்கத்து வீடுகளில் இருந்து ஒவ்வொரு ஆளாக வரத்தொடங்கினர். சுடலையின் அப்பாவிடம் பேசிவிட்டு ஒவ்வொரு ஆட்களையும், சுடலையை ஒத்த பதின்வயதுடைய பசங்களையும் ஒரு பெரியவர் ஒவ்வொரு ஊருக்கும் சென்று தகவல் தெரிவிக்க பிரித்து வழி சொல்லி, பெயர் சொல்லி, அடக்கம் செய்யப்போகும் நேரத்தைச் சொல்லி அனுப்பிக்கொண்டிருந்தார்.

சுடலை மட்டுமே இப்போது அவ்விடத்தில் இளவயதில் இருப்பவன். அவனது அப்பா வேகமாக வந்து தாத்தாவின் நண்பரிடம், புகைப்படத்தையும் இறப்புச் செய்தியையும் பத்திரிக்கைகளில் போடவேண்டும், என்றார். அதற்கு, தம்பி கொஞ்சம் பணம் ஆகுமே என்றவரிடம், எவ்வளவு செலவானாலும் அது மட்டும் செய்யாமல் இருக்கவே முடியாது, என்று கொஞ்சம் ஆவேசமாக சொன்னார் அப்பா.

ஏதாவது பழைய புகைப்படம் ஒன்றை தேடி எடுத்துவரச் சொன்னார் சுடலையிடம். தாத்தாவின் பாதி உடைந்த அலமாரியில் எதுவும் இல்லை. வீட்டில் பெரிது பெரிதாக காந்தி, நேரு, இந்திரா, ஏன் லால் பகதூர் சாஸ்திரியின் புகைப்படம்கூட இருந்தது. ஆனால் அவரின் ஒரு புகைப்படமும் சிக்கவில்லை. நினைவில் வந்தவனாய், அப்பாவின் கல்யாண படத்தில் அவர் பாட்டியுடன் உட்கார்ந்துகொண்டு இருப்பதைப் போன்ற படத்தை எடுக்க வீட்டுக்குச் சென்று கொஞ்சம் மங்கிய அந்த கருப்புவெள்ளை படத்தை எடுத்துக்கொண்டு பெரியவரிடம் காட்டினான். அவர் கையில் இருந்த நீண்ட டார்ச் லைட்டை அதன்மேல் அடித்துப்பார்த்தார். இது அவ்வளவு தெளிவில்லையே தம்பி, வேற இருக்குதாணு பாருப்பா, என்றார். அப்பா அதை பார்த்துக்கொண்டே வேகமாக அருகில் வந்து, இந்த ஒண்ணுதான் கொஞ்சம் தெளிவா இருக்கு, என்றார்.

சரி… என்றவர், இப்போ பத்திரிக்கை ஆபீஸ் அனுப்ப வேற ஆள் இல்லை, தம்பியை போகச் சொல்லலாமா, என்றவாறே அப்பாவைப் பார்த்தார். சரி, என்றவர் கையில் கொஞ்சம் காசை திணித்துவிட்டு நடந்தார். சுடலை புகைப்படத்துடன் பல பத்திரிக்கை அலுவலகங்கள் இருந்த நாகர்கோவிலின் முக்கிய சாலையை அடைந்தான்.

முதலில் இருந்த ஆங்கில பத்திரிக்கை அலுவலகத்தின் வாசலிலேயே இறப்புச் செய்திகளுக்கு இப்போது ஐந்து சதவிகித தள்ளுபடி விலையில் பதிப்பித்து தருவதாக எழுதப்பட்டிருந்தது. இறப்புச் செய்தி அவ்வளவு சந்தோசமான செய்தி என எப்படி இந்த மடையர்கள் யோசித்தார்கள்? ஒரு வேளை செத்தவர்கள் செத்த பின்னும் பிள்ளைகளுக்கு சேமித்துக்கொடுக்கிறார்கள் என்ற நினைப்பில் எழுதி வைத்திருக்கலாம். அந்தச் செய்தியே அவனுக்கு கோபத்தையும், கசப்பையும் அந்த பத்திரிக்கை மேல் தோன்றச் செய்தது. தாத்தா எக்காரணத்தைக் கொண்டும் அந்த பத்திரிக்கையில் மட்டும் வரவே கூடாது என்று முடிவெடுத்தவனாய் பக்கத்து அலுவலகத்துக்குச் சென்றான்.

அங்கு இப்போது இது சேவை என்பதால் சரியான காசுக்கு பதிலாக இருபத்தைந்து சதவிகிதம் விலை குறைத்துள்ளதாக பறைசாற்றி எழுதி வைத்திருந்தது. மனிதாபிமான செயல் தான் என்பதால் உள்ளே சென்றான். அங்கிருந்தவரிடம் விவரத்தை சொன்னபின் அவர் சொன்ன விளம்பர விலை இவன் கையில் வைத்திருந்ததைவிட இருபத்தைந்து சதவிகிதம் அதிகமாகதான் இருந்தது.

அப்பா ஏன் பத்திரிக்கையில் போட பிரியப்படுகிறார், சுடலைக்குத் தெரிந்து அந்த ஊரில் அப்படி யாருமே போடுவது வழக்கமில்லை. ஒருமுறை சுடலை வீட்டு வராண்டாவில் விளையாடிக்கொண்டிருந்த நேரம் வெற்றிலைக்கான புகையிலை வாங்கி வந்த பொட்டலத்தில் இருந்த பழைய செய்தித்தாளை பார்த்துக்கொண்டே தென்னைக்கு உரமேற்ற குழி தோண்டிக்கொண்டிருந்த அப்பாவிடம், இதற்கெல்லாம் ரொம்ப காசு கேப்பானுகளோ?, என்று செய்தித்தாளில் இருந்த யாரோ ஒருவரின் மரண அறிவிப்பை பார்த்துக்கொண்டே கேட்டார். அப்பாவும் பெரிய சிரத்தையில்லாமல், ஆமா… கொஞ்சம் கேப்பானுவ, என்றார். போட்டு எதுக்கு? யாருக்காக?, என அப்பா முணுமுணுத்ததும் நினைவுக்கு வந்தது. ஒருவேளை தாத்தாவின் ஆகப்பெரிய கடைசி கனவாக தன் புகைப்படமும் பெயரும் மரணத்துக்குப் பின் செய்தித்தாளில் வரவேண்டும் என்பதாகவே இருந்திருக்கலாம். இல்லாவிட்டால் ஏன் அந்த செய்தித்தாளின் கிழிந்த துண்டை கூரையின் இடையில் திருகி வைத்துக்கொண்டார்.

இப்படிச் செய்வதால் சுற்றியிருக்கும் பத்தோ பதினைந்தோ கிராமங்களைத் தாண்டி எங்குமே செல்லாத, யாரையுமே தெரியாத, எந்த சொந்த பந்தமும் இல்லாத, தாத்தாவை யார் அடையாளம் காண்பார்கள். அப்படி பார்த்து ஒருவர்கூட வருவார் என நம்பிக்கை சுடலைக்கு ஒரு துளி கூட கிடையாது. இதைவிட பெரிய விஷயம் இவர்கள் வீட்டில்கூட செய்தித்தாள் வரவழைப்பதும் இல்லை. ஏன் பக்கத்து வீடுகளிலும் இதே தான் நிலை.

அப்பாவுக்கு ஆங்கிலமும் தெரியாது. தமிழும் தட்டுத் தடுமாறிதான் வாசிப்பார். தாத்தாவுக்கு ஒரு எழுத்தாவது தெரியுமா என்பது சந்தேகம். அப்படியிருந்தும் ஏன் இதற்கு விருப்பப்படுகின்றனர். சந்தேகத்துடனே இவன் அடுத்திருந்த பத்திரிக்கை அலுவலகத்தில் நுழைந்துவிட்டான்.

அங்கிருந்தவர் என்ன என்பது போல் தலையை மட்டுமே ஆட்டிக் கேட்டார். இவன், செத்த செய்தி போடணும், என்றான். அவர் மெதுவாக எழுந்து வெளியே சென்று வாயில் இருந்த வெற்றிலையை துப்பினார். நெருங்கி அருகில் வந்து தோளில் கைவைத்து உட்காரச் சொன்னார்.

பெயர், விலாசம், வயது போன்ற தகவல்களை கேட்கத்தொடங்கினார். சுடலைக்கு பயம் வந்துவிட்டது. வெருக்கென எழுந்தவன், எவ்வளவு ஆகும், எனக் கேட்டான். அவர் பதிலே சொல்லாமல் அமரச் சொன்னார், சைகையில். தயக்கத்துடனே இரும்பு நாற்காலியில் மீண்டும் அமர்ந்தான். அவர் கையை நீட்டி வாயைக் குவித்து தலையை கொஞ்சம் மேலாக தூக்கிக்கொண்டு, போட்டோ இருக்கா?, என்றார்.

இவன் கையில் இருந்த போட்டோவை நீட்டினான். அவர் அந்த போட்டோவை பார்த்துவிட்டு, தாத்தா உன்னை போலதான், என்றார். பின் மெதுவாக உள்ளறைக்கு எழுந்து நடந்தார். சுடலை அறையின் சுற்றும் முற்றும் தெளிவாக பார்த்தான். அங்கு கிடந்த பத்திரிக்கைகள், படங்கள் எதிலும் தமிழ் எழுத்தே இல்லை. அவனுக்கு அப்போதுதான் உறைக்கத்தொடங்கியது அது மலையாள பத்திரிக்கை விளம்பர அலுவலகம் என்று. என்ன செய்வது என்று நினைக்கும்போதே அவர் வந்து போட்டோவைத் திருப்பி கையில் கொடுத்துவிட்டு கிளம்பச் சொன்னார். நாளைய பத்திரிக்கையில் செய்தி வரும் என்றவர் மீண்டும் வெற்றிலை துப்ப வெளியே சென்றார். அவர் உள்ளே வரும்வரை காத்திருந்துவிட்டு, காசு எவ்வளவு, எனக் கேட்டான். இதற்கு இலவசம் தானே, அவர் சாவதானமாகச் சொல்லிவிட்டு மீண்டும் உள்ளறைக்கு திரும்பினார்.

சுடலைக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. நாளைக்கு மலையாள பத்திரிக்கைகள் உலகம் முழுவதும் சென்று தாத்தாவின் இறந்த செய்தியை அறிவிக்கும். மரண செய்தி கேட்டு பல பேர் நிச்சயம் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் ரோட்டை கடந்து நடக்கத்தொடங்கினான்.

மகா நிர்வாணம், சாத்தான், கானகம் – ர. சங்கரநாராயணன் கவிதைகள்

ர. சங்கரநாராயணன்


மகா நிர்வாணம்

யாருமில்லா பெருவெளியில்
கொட்டிக்கவிழ்த்த இரவாய்
எங்கும் வியாபித்திருக்கிறது
மௌணம்.

கண்ணாடியில் விழுந்த
நீலநிற பிம்பத்தில் தெரிவது யாரோ?

சதைகளின் பெருக்கத்தில்
முகத்தின் தழும்பில்
எனக்கான சாயல் உண்டு

ஆடைகளற்ற நிர்வாண
ஸ்ருதியில் எனக்கும் உள்ளது
சிரிக்கும் புத்தனின் சாயல்

ஒரு கைகுலுக்கலில்
கடத்தப்பட்ட காமம்
பலிபீடத்தில் வதைபடுகிறது

என்னையேற்றிய பலிபீடத்தில்
சிதறிய ரத்தம்
ஈக்களுக்கு உணவாய்

அருபமாய் அரூபமாய்
அருபடுகிறது அறுபடுகிறது வேர்

புல்லின் நுனியில்
காத்திருக்கும் தனிமை

தேவகணத்தில்
அபூர்வ மழை

தூரத்தில்
படிமமாய் கடவுள்

இன்றோடு மறையட்டும்
நாணம்.

சாத்தான்

நீங்கள் இதுவரை சாத்தானை
கண்டிருக்க மாட்டீர்கள்
உங்கள் எல்லோருக்கும்
சாத்தானைப் பற்றிய அறிதல் உண்டு

ஆதாமும் ஏவாளும்
ஆதியில் அவனை அறிந்தவர்கள்

தோற்றத்தில் அவன் என்னை ஒத்திருப்பான்
பேரறிவில் அவன் உங்களுக்குச் சமமான,
அல்லது உங்களைவிட மேலானவன்

நீங்கள் நெடுங்காலம் பயணம் செய்த வழியில்
ஒருவேளை அவனைச் சந்திக்கக்கூடும்

சட்டென்று இறந்தகாலப் புனைவில்
உங்களை ஆழ்த்த எத்தனிக்கலாம்

நீங்கள் மறக்க நினைக்கும்
ஒன்றை  ஞாபகப்படுத்தலாம்

ஒரு தேவகணத்தில் நீங்கள்
அவனை உணர்ந்து கொள்ளக்கூடும்

ஞானத்தில் விழித்த பேரமைதி
உங்களைச் சூழ்ந்து கொள்ளலாம்

நினைவு தப்பிய குடிகாரன் போல்
அவனைப்பற்றியே சிந்திக்ககூடும்.

யாருமற்ற வெட்டவெளியில்
நடனமாடத் தோன்றும்

ஒரு நீண்ட புணர்ச்சிக்கு தயாராவீர்கள்
பின் நீங்களும் சாத்தானாகிவிடுவீர்கள்

எச்சரிக்கையாக இருங்கள்
சாத்தான் அவன் வழியே போகட்டும்

கானகம்

அற உணர்ச்சியின் விசும்பல்
எல்லா தெருக்களின்
கடைசிவரை
கேட்கின்றது

நிச்சலணங்களை
ஒதுக்கி வைத்துவிட்டு
கூடுகட்டத் தயாராகிறது
ஒரு பறவை

அன்றைய கனவில்
வந்தமர்ந்த
நெடுங்காலத்திற்கு முன்
பத்திரப்படுத்திய
இறந்த பறவையின்
ஒற்றைக் சிறகு.

ஆசிர்வதிக்கப்பட்ட
குழந்தைகளிடம்
முத்தங்களைப் பகிர்கின்றேன்

சிறிய பறவையின் அலகில்
கணத்த கனத்த மழை
சூல் கொள்கிறது

மானுடத்தின்
மொத்த பிரியத்தையும்
இறக்கி வைத்திருக்கிறேன்

பறக்கும் இடைவெளியில்
பற்றி எரிகிறது கானகம்

பாலசுப்ரமணியன் பொன்ராஜுடன் ஒரு நேர்முகம் – நரோபா

நரோபா

பிறப்பு/ படிப்பு/ தொழில்/ குடும்பம் பற்றி :

பாலா பொன்ராஜ்: எங்கள் சொந்த ஊர் உடுமலை அருகே, தூரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தெரியும் வாளவாடி. ஆனால் நான் பிறந்து வளர்ந்தது கோவைக்கு அருகேயுள்ள ஒத்தக்கால் மண்டபம், பிரிமியர் மில்ஸ். பிரிமியர் மில்ஸில் எல்லோரும் எங்களை வாளவாடிக்காரர்கள் என்று அடையாளம் கொண்டிருந்தனர்.

எங்கள் தந்தை பொன்ராஜ் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்தார். திமுகவின் தீவிர தொண்டர், தொழிற்சங்க தலைவர். அம்மா சரஸ்வதி. ஒரே தங்கை அமுதா.

பள்ளிப்படிப்பு எங்கள் ஊர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில். நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் டிப்ளமோ. கல்லூரிக்குச் சென்றதில்லை. அஞ்சல் வழி கல்வியில்தான் பி.காம் முடித்தேன். அதையெல்லாம் கல்வியென்றே நான் மதிப்பதில்லை.

எங்கள் ஊரில் இருக்கும் மில்லில் முதலில் ஷிஃப்ட் கிளர்க்காகச் சேர்ந்து, அரைகுறை கணிணி அறிவினால் EDP துறையில் பணியாற்றினேன். அது சலித்துப் போக மருத்துவ பிரதிநிதியானேன். பின்பு ஐசிஐசிஐ வங்கியில் கடன் வசூலிக்கும் துறையில் பெங்களூரில் வேலை கிடைத்து வந்தேன். அதைத் தொடர்ந்து இன்றுவரை கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் வங்கி, நிதித்துறையில் வேலை. தற்போது ஒரு தனியார் வங்கியின் துணை நிறுவனமொன்றில் கிளை மேலாளராக ஓசூரில் பணிபுரிகிறேன்.

எங்கள் தந்தை இறந்த பிறகு நானும் அம்மாவும் ஒன்றாக வசிக்கிறோம். தங்கை மணமாகி கோவைக்கு அருகே வசிக்கிறாள்.

பள்ளிக் கால வாசிப்பு பழக்கம் எத்தகையது?

பாலா பொன்ராஜ்: வாசிக்கத் தேவையில்லாத வயதில் வாசிக்கத் தேவையில்லாத புத்தகங்களில் இருந்தே வாசிப்பு துவங்கியது. கூச்சப்படாமல் சொன்னால் பாப்புலர் கிரைம் புத்தகங்களே நான் முதலில் வாசித்தவை. எனது ஒன்பதாவது வயதில் கிரைம் நாவல்களை எங்கள் மாமா வீட்டிலிருந்து எடுத்து வந்து படித்தேன். பள்ளியில் நடந்த பல்வேறு போட்டிகளில் நானும் எனது நண்பனும் பாட்டுப் போட்டிக்கு பெயர் கொடுக்க முடிவெடுத்த வேளையில், கடுமையான போட்டியாளனை திசைதிருப்பும் நோக்கில், எனக்குச் சரியாக பாட வராது என்று சொல்லி, கட்டுரைப் போட்டிக்கு பெயர் கொடுக்கச் சொன்னான். கட்டுரைப் போட்டியில் தலைப்பு: “பாரதி கண்ட புதுமைப்பெண்”. அதற்காக எங்கள் வீதியில் வசித்த பேரூராட்சி சேர்மனின் நூலக உறுப்பினர் அட்டையை வாங்கிக் கொண்டு நூலகத்திற்கு நுழைந்ததே வாசிப்பின் முறையான துவக்கம். ஒருவேளை என்னுடைய நண்பனின் அறிவுரையைக் கேட்டிருந்திருக்காவிட்டால் ஒரு நல்ல பாடகனை உலகம் இழந்தவிட்ட துர்பாக்கியம் அதற்கு நேர்ந்திருக்காது. வலம்புரி ஜான் எழுதிய பாரதியார் குறித்த புத்தகமே தீவீர புத்தகங்களில் முதலாவது. பின்பு 12 வயதில் பெரியாரின் மொத்த தொகுதிகளை வாசித்தேன். மிக அழகாக பதிப்பிக்கப்பட்டிருந்த தொகுதிகள். 14 வயதில் விவேகானந்தரின் மொத்த தொகுப்புகள். எங்கள் வீட்டில் அருகருகே விவேகானந்தர் மற்றும் பெரியாரின் போஸ்டர்களை ஒட்டியிருந்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. திமுக பிளவுண்டபோது வைகோ மற்றும் கருணாநிதியின் புகைப்படம், பிறகு ஹிட்லரின் புகைப்படம், பின்பு மிலிந்த் சோமன் (ஒரு மாடலாகும் ஆர்வம் அப்போதிருந்தது). இளம்பருவத்தின் அத்தனை கோளாறுகளுக்கும் இடமளிக்கும் சுதந்திரத்தை எனது பெற்றோர் வழங்கினர். வாசிப்பைக் குறித்து என் தந்தை வழங்கிய ஒரே ஒரு அறிவுரை, சிவப்பு கலர் அட்டை புத்தகங்களை மட்டும் வாசித்துவிடக் கூடாதென்று. அதனால் மூளை குழம்பிப் போனவர்கள் அதிகம் என்று சொன்னார். மாஸ்கோ புத்தகங்களின் மொழி அப்படிப்பட்டதென்று பின்பு தெரிந்தது.

15 வயதிற்குள்ளாக “பிச்சைக்காரி” எனும் சமூக நாவல், “அடையாறில் ஆறு கொலைகள்” என்கிற ஒரு கிரைம் நாவல், “வசந்தகுமாரன்” எனும் வரலாற்று நாவல், “இரவின் மகன்” எனும் ஃபேண்டஸி நாவல் (அதில் ஓர் ஓநாய் காட்டில் பிறந்த குழந்தையை வளர்க்கும், ஜங்கிள் புக்கில் வருவதைப் போல. ஆனால் இன்றுவரை நான் ஜங்கிள் புக் வாசித்ததில்லை), நல்ல தாளில் கருப்பு மையால் எழுதிய காதல் கவிதைகள், எய்ட்ஸ் குறித்த ஆங்கில கட்டுரை தமிழ் மொழிபெயர்ப்பு, குறுந்தொகையை எளிய தமிழ்க் கவிதை வடிவில் எழுதியது, “பெப்ஸி” உமாவிற்கு எழுதிய காதல் கவிதை (அப்போது டிப்ளமோ) என வளர்ந்திருந்தேன். அந்தப் பிரதிகள் தொலைந்து போனது வேறு எப்போதையும் விட இப்போது வருத்தம் அளிக்கிறது.

ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். சென்னையைப் பார்த்திராத வயதில் அடையாறில் கொலைகள் நடப்பதாக எழுதியிருந்தேன். அங்கே ஒரு மேம்பாலம் இருப்பதாகவும் அதன் அருகேயிருக்கும் ஓர் உயர்ந்த கட்டிடத்தில்தான் கொலையாளி ஒளிந்திருப்பதாகவும். பின்பு வேலைக்காக சென்னை வர, என்னுடைய அலுவலகம் அடையாறு மேம்பாலத்திற்கு அருகேதான் இருந்தது. வேலை நேரம் போக அலுவலகத்தின் எதிர்ப்பக்கத்தில் பாலத்தின் அருகேயிருக்கும் உயரமான கட்டிடங்களில் ஆறு கொலைகள் செய்த கொலையாளியை நான் தேடிக் கொண்டிருந்தேன். காஃப்கா அமெரிக்காவிற்குப் போனதேயில்லை. அவர் அமெரிக்கா என்றொரு நாவல் எழுதினார். கோல்ரிட்ஜும், ரைம்போவும் கூட அப்படியே, கடல் என்ற ஒன்றைப் பார்ப்பதற்கு முன்பே கவிதையில் கடலை எழுதியவர்கள்.

இப்போது சென்னையும் ஒரு நினைவாக மாறிவிட எப்போதாவது சென்னை போனால் மூன்று வருடங்களுக்கு முந்தைய என்னைத் தேடுவேன். துப்பறிவாளனுக்குச் சிக்காதவர்களாக நாவலில் கொலை செய்தவனும், நாவலை எழுதியவனுமாக சென்னையில் உலவுகிறார்கள்.

பிடித்த/ பாதிப்பு செலுத்திய எழுத்தாளர்? தமிழில்/ உலக இலக்கியங்களில்.. .

பாலா பொன்ராஜ்: ஜெயகாந்தனின் சில நாவல்கள், கவிதா பதிப்பகம் வெளியிட்ட கட்டுரைத் தொகுதிகள் முழுமையும் என்னை வேறு வாசிப்பிற்கு நகர்த்தின (பிற்கால ஜெயகாந்தனுடைய amplified வடிவமே ஜெயமோகன் என்று நம்புகிறேன்). அவர் எழுத்துக்களின் பாதிப்பில் அவர் பாணியில் ஒரு சிறுகதை கூட எழுதினேன். வேறிரண்டு கதைகளும். ஆங்கில இந்து பத்திரிகை அறிவித்திருந்த சிறுகதைப் போட்டிக்கு ஒரு கதையை எழுதினேன். அதை என் சகோதரி ஒருவரின் தோழி மொழிபெயர்ப்பதாக ஏற்பாடு. ஆனால் அது நிறைவேறவில்லை. அந்தக் கதை நல்ல கதையென்ற எண்ணம் இன்றுமுண்டு.

சுந்தர ராமசாமியின் “விரிவும் ஆழமும் தேடி”, “காற்றில் கலந்த பேரோசை” ஆகிய இரண்டு புத்தகங்களும் மிகுந்த பாதிப்பை அளித்தவை. ஜெயகாந்தனிடமிருந்து என்னை விடுவித்தவை. அதன் பிற்கு சுந்தர ராமசாமியின் பாதிப்பு சில வருடங்கள் இருந்தது.

புதுமைப்பித்தன், கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், மா. அரங்கநாதன், சுந்தர ராமசாமி, கோணங்கி, நாஞ்சில் நாடன், ஷோபா சக்தி ஆகியோர் பல்வேறு காரணங்களுக்காக எனக்குப் பிடித்தமானவர்கள். சுஜாதாவும், அ. முத்துலிங்கமும் அடுத்த வரிசையில் நிற்கிறார்கள்.

உலக இலக்கியத்தில் உம்பார்த்தோ ஈகோ, போர்ஹெசின் பாதிப்பு அளவுக்கதிகமானதென்று நினைக்கிறேன். இவர்களை அடுத்து வில்லியம் பர்ரோஸ், ஜூலியோ கொர்த்தஸார், டான் டெலிலோ, முரகாமி ஆகியோர். கால்வினோவை இன்னும் வாசிக்கவில்லை என்ற வருத்தம் உண்டு. இன்னும் அதிகமான பெயர்கள் உண்டென்றாலும் அரைகுறை வாசிப்பில் அவர்களுடைய செல்வாக்கை வரையறுக்க முடியாது. இப்போதைய வாசிப்பில் தாமஸ் பின்ச்சனும், இ.எல். டாக்டரோவும் ஈர்க்கிறார்கள். எட்கர் ஆலன் போவின் முழு படைப்புகளையும், ஹெர்மன் மெல்வில்லின் படைப்புகளையும் வாசிக்க முனைந்துள்ளேன். விரைவாக வாசிக்க முடியாததும், அகராதியை அடிக்கடி பார்க்க நேர்வதும் எனக்கு சலிப்பூட்டினாலும், விடாமுயற்சியாகத் தொடர்கிறேன். குறிப்பாக அமெரிக்க இலக்கியத்தை குறிப்பிடத்தக்க அளவிற்கு வாசிக்க வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன். நான் மிகக் குறைவாகவும், சிதறலாகவும் வாசிப்பவன்.

சென்னை வந்த புதிதில் வாசித்த ரொலாண்ட் பார்த்தின் “நியூட்ரல்” புத்தகம் எனது சிந்தனைகளை மடைமாற்றியது. மேலதிக பெயர்களைச் சொல்ல விரும்பவில்லை.

உங்கள் கதைகளில் மேற்கத்திய இசை ஒரு முக்கிய சரடாக வருகிறதே… அதன் மீதான ஆர்வம், அறிமுகம், பிடித்த இசைக் கலைஞர்கள் பற்றி..

பாலா பொன்ராஜ்: பெங்களூரில் பப்களில் கேட்டுப் பழகிய ராக் இசையின் மீதான காதல் வடியாமல் இருக்கிறது. என்னுடைய நண்பர்களில் சிலர் டோப் அடித்துக் கொண்டு ராக் இசை கேட்பவர்கள். எனக்கு அதெல்லாம் பயம். என்னோடு ராக் இசை தங்கிவிட அவர்களோடு கஞ்சா தங்கிவிட்டது. முக்கியமான ராக் இசைக்குழுக்களின் பாடல்களை, இசையைத் தொடர்ந்து கேட்கிறேன். பெயர்களை உதிர்ப்பதைப் போலாகிவிடும் என்பதால் மிக ஆழமாக நான் தொடர்ந்தும், நெருக்கமாகவும் உணரும் இசைக்குழு ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன். ரேடியோஹெட். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து கேட்கிறேன். இன்னும் அவர்களது இசை என்னை ஈர்க்கிறது. அவர்களுடைய சமீபத்திய ஆல்பமான “Moon Shaped Pool” ஆல்பத்தை ஆரம்பத்தில் ஆர்வமில்லாமலே கேட்டேன். மாஸ்டர்களின் சமீபத்திய படைப்புகள் தோல்வியடைந்தவை என்ற எண்ணம். “பிங்க் ஃபிளாய்டின்” சமீபத்திய ஆல்பத்தின் தோல்வி, மிலன் குந்த்ராவின் சமீபத்திய நாவல், என நாம் மாஸ்டர்களின் காலம் கடந்த முயற்சிகளை அசட்டை செய்கிறோம். ஆனால் ரேடியோஹெட் குழுவின் ஆல்பம் நிச்சயமாக இன்னுமொரு பெரும்படைப்பு. வழமையான ராக் இசையில் துவங்கி, மின்னணு இசைக்கு நகர்ந்த இக்குழுவினர் இசையின் வழியாக எழும் எனது ஆன்மீக உணர்வின் பாதையை, தொடர்ந்து முன்னடந்து நீளச் செய்கின்றனர். மிகச் சமீபமாக EDM இசையின் ஆதிக்கத்திலிருக்கிறேன். Daft Punkன் பாடலான Get Luckyல் துவங்கியது, Kraftwerkன் ஆல்பங்கள், Deadmou5 ஏன் David Guettaவின் பாடல்களைக் கூடக் கேட்கிறேன். Lady Gaga குறித்து சிறு கட்டுரையொன்றை என் வலைப்பூவில் எழுதியுள்ளேன். Lady Gaga, Beyonce, Rihanna ஆகிய மூவரில் எனக்கு அதிகமாக Lady Gagaவைப் பிடிக்கிறது. ஆனால் இவர்களுக்குப் பின்பு ஒரு பெரும் பட்டாளமே பாப் இசையில் உருவாகிவிட்டது. Sia, Sam Smith, Weekend, Taylor Swift, Justin Baiber, Ed Sheeran என் நீண்டாலும் நான் மேற்சொன்ன மூவரை அதிகமாக விரும்புகிறேன். பாப் இசை ஒரு பெரிய இரயில் நிலையத்தைப் போல, எண்ணற்றவர்கள் நுழைகிறார்கள். நாம் அவர்களுக்கு மத்தியில் தொலைந்து போகிறோம். செவ்வியல் இசை எவ்வளவு ஆறுதலானது. மொத்தமே நூறு மேதைகள் இருப்பார்களா?

கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் ஒவ்வொரு இரவிலும் அபூர்வமான இசையை எனது கனவில் கேட்ட அனுபவம் உண்டு. ராக் இசை, எங்கள் கிராமத்தில் பொங்கல் சமயத்தில் வாசிக்கப்படும் பம்பை, தப்பு இவற்றின் கலவையாக, தொடர்பறுந்த காட்சிகள், விநோத உருவங்கள், உதிர்ந்து கொண்டேயிருக்கும் இலைகள், வீழ்ச்சியே இல்லாமல் மிதப்பது, என்று எளிதில் தொடர்புறுத்த முடியாத அனுபவம். நமது கனவுகளில் காலம் மற்றும் இடத்தின் கட்டுப்பாடுகள் இல்லாமலிருந்தாலும், கனவுகளை நினைவுகூர இவையிரண்டும் ஓர் ஒழுங்கை அவற்றிற்கு அளிக்கின்றன.

பியானோ இசையின் மீது புதுக்காதல் பிறந்திருக்கிறது. Yiruma அவர்களின் “River Flows in You” இசைக்கோர்வை என்னை இக்காதலில் விழச் செய்தது. Eric Satieன் படைப்புகள், குறிப்பாக Once Upon a time in Paris (செவ்வியல் இசையில் டைப்ரைட்டிங், தொழிற்சாலை, துப்பாக்கி சத்தங்களைச் சேர்த்தவர்), ஸ்ட்ராவின்ஸ்கியின் Rite of the Spring, ஜுஸெப்பி வெர்டியின் “Devil’s Trill Sonata”, Who குழுவினரின் “Baba O’Riley” ஆகியவை நான் சமீப நாட்களில் கவனித்துக் கேட்பவை. இசையை மட்டுமே தனியாக, விரிவாகப் பேசலாம். என்றாவது பியானோ வாசிப்பேன் என்கிற கற்பனையில் ஆழ்ந்திருக்கிறேன். இணையத்திற்கும், உலகமயமாக்கலுக்கும் நன்றி.

குறிப்பாக தந்தி வாத்தியங்கள், அதுவும் சைகிடெலக் அனுபவங்கள் அளிக்கும் இசையின் மீது உங்களுக்கு ஆர்வம் உள்ளதாக புரிந்து கொள்கிறேன்… அந்த ஆர்வம் பற்றி, உங்கள் படைப்பு மனநிலைக்கு இந்த இசை தூண்டுதல் அளிக்கிறதா?

பாலா பொன்ராஜ்: நிச்சயமாக இசை எனது படைப்பு மனநிலைக்கு மாத்திரமல்ல எனது அன்றாடத்திற்கே பெரிய தூண்டுதலாக இருக்கிறது. ஒருநாளும் இசையின்றி விடிவதோ, முடிவதோ இல்லை. 12 ஆண்டுகளுக்கு முன்பாகவே நான் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தி விட்டேன். எனது வீட்டில் தொலைக்காட்சி இல்லை. ஆகவே நான் பொழுதுபோக்கிற்குக்கூட இசையைத்தான் பெரிதும் சார்ந்திருக்கிறேன்

இசையின் மொத்த நோக்கமே முடிவாக அமைதியை, நிறைவை அளிப்பதுதான் என்று நினைக்கிறேன். ராக் இசை எவ்வளவு சத்தமானதும், Distortionஐ பிரதானமாகக் கொண்டதென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனாலும் ராக் இசை எனக்கு அமைதியை அளிக்கிறது என்று சொன்னால் எனக்கே அதை இன்னும் தீவிரமாக ஆரய வேண்டிய ஒரு கருத்தாகத் தெரிகிறது. தந்தி வாத்தியங்களில் மின்கிதார் என்னை ஒரு டிரான்ஸ் நிலைக்கு உயர்த்துவதாக எண்ணுகிறேன். உதாரணத்திற்கு, Audioslaveன் ஒரு பாடலான Like a Stoneனில் வரும் ஒரு மின்கிதார் இடையிசையைக் கேளுங்கள். அவர்களை விடவும் மேதமையான குழுக்கள், கலைஞர்கள் இருக்கின்றனர் என்றாலும் அதுவே எனக்கு திருப்தியளித்து விடுகிறது. மகிழ்ச்சியோடு உறங்குகிறேன் அல்லது வேலையைத் துவங்குகிறேன். அந்நியத்தன்மை, எதிர்காலத்தன்மை, தொழில்நுட்பச் சிறப்பு, துல்லியம் இவை என்னைப் பெரிதும் ஈர்க்கின்றன. செவ்வியல் இசை அளிக்கும் அதே ஆன்மீக உணர்வை, எனக்கு தொழில்நுட்ப இசையும் அளிக்கிறது. இசையை தொழில்நுட்பம் நம்பமுடியாத துல்லியத் தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. எனது வருத்தமெல்லாம் நல்ல ஸ்பீக்கர்களில் இசை கேட்பதில்லை என்பது மட்டுமே. நல்லதென்று நான் நினைப்பதின் விலை கிட்டத்தட்ட ஆப்பிள் Xன் விலையில் இருக்கிறது. இதை டைப் அடிக்கும்போது Audioslaveன் Be Yourself ஒலிக்கிறது. Be Yourself is all that You can Do….

இந்திய மரபிசை, பரப்பிசை மீது ஆர்வம் உண்டா? (ஒரு கதையில் ஃபடே அலிகான் வருகிறாரே)?

பாலா பொன்ராஜ்: இருந்தது. எனது அறையில் சில நண்பர்கள் சேர்ந்து குறிப்பாக சீனிவாசன், ஃபதே அலிகானின் பாடல்களைக் கேட்போம். சில சமயம் கவ்வாலியோ, இஸ்லாமிய இசையோ ஓர் உன்னதமான மன எழுச்சியை அளிக்கின்றன. கர்நாடக சங்கீதத்தில் அருணா சாய்ராமை விரும்பிக் கேட்டேன் என்றாலும் என்னால் தொடர முடியவில்லை. எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய பாரதியார் பாடலான “நெஞ்சுக்கு நீதியும்” (கருணாநிதியின் தன்வரலாற்றுத் தலைப்பை அளித்தது) எனக்கு பிடித்தமானது. ஒருவிதமான metropolitan hybrid spiritual அனுபவத்தை எனது இசைத் தேர்வுகள் அளிக்கின்றன.

யதார்த்தவாத கதைகளின் மீதான உங்கள் பார்வை/ விமர்சனம் என்ன?

பாலா பொன்ராஜ்: யதார்த்தவாதக் கதைகள்தான் கதைசொல்லலில் கடைசியாக வந்ததென்று நம்புகிறேன். ஒரு கழுதை பேசுவதை நம்பவில்லை என்றால் நாம் கதை படிக்கவே வரக்கூடாது, பாடப்புத்தகங்களோடு நிறுத்திவிடுவது நல்லது (இனி ஒருபோதும் நமது கதைகளில் கழுதை பேசாது). நாம் இம்மாதிரி விசயங்களை நம்பும் அப்பாவித்தனத்தை இழந்துவிட்டோம். முழுதுமாக நாம் இழந்து விட்டோமென்று சொல்ல முடியாது. இதை ஈடு செய்கிற மாதிரி ஹாலிவுட்டின் வழியாக சூப்பர் ஹீரோக்களும், நெட்ஃபிளிக்ஸ் நாடகங்களும், அல்ட்ரா தேசியவாத அரசியல்வாதிகளும், மத அடிப்படைவாதிகளும் நமக்குக் கிடைத்திருக்கின்றனர். அவர்களை நம்புவதும் கழுதை பேசியதென்று நம்புவதும் ஒன்று போலத்தான் என்றாலும் பின்னது கடுகளவும் பாதிப்பற்றது. கடவுள் பேசினார் என்று நம்புவதுதான் உலகின் தலையாய பிரச்சனை, கழுதை பேசியதை நம்புவதென்பது ஒருவகையில் ஆறுதல்.

இவ்வடிவ கதைகள், எழுதும் பலருக்கு நம்பிக்கையை அளிக்கின்றன. அவர்கள் ஏதோ வாழ்வின் யதார்த்தத்தை தொட்டு விட்டதாக எண்ணிக் கொள்கின்றனர். யதார்த்தம் என்பது அறியவே முடியாதென்பதே பற்றாக்குறையுள்ள மொழியின் ஆற்றலின்மையை பரிசீலித்தவர்கள் சொல்கிறார்கள். ராபர்ட் லூயி ஸ்டீவென்ஸன், what happens in ten minutes exceeds all Shakespeare’s vocabulary, என்கிறார். உலகம் அவ்வளவு பெரிது. புனைவை அடைந்து விடலாம். நாமே அதன் விதிகளை உருவாக்குகிறோம். யதார்த்ததை அடையவே முடியாது, ஏனெனில் அதன் விதிகள் நமக்குத் தெரியாதவை.

உங்கள் கதைகளில் மரபின் தாக்கம் அவ்வளவாக இல்லை. (‘புடவு’ கதையில் மட்டுமே வருகிறது. அதுவும் கூட பல தரப்புகளின் உரையாடல்கள் ஊடாக வெளிப்படுகிறது). ஆனால் தொன்மங்கள் உங்களுக்கு உவப்பானவை. ஜெசியா போன்ற புதிய தொன்மங்களை நீங்களே உருவாக்கி இருக்குறீர்கள். மரபார்ந்த தொன்மங்களை தொடாமல் இருப்பது பிரக்ஞைபூர்வமான முடிவா? மரபு சார்ந்த தொன்மக் கதைகள் மீதான உங்கள் மதிப்பீடு என்ன?

பாலா பொன்ராஜ்: தொன்மக் கதைகளின் ஆதாரமான விதிகள் புனைவிற்கு சிறப்பான வாய்ப்பை அளிக்கின்றன என்ற அளவில் தொன்மங்கள் பயன்படுத்தத்தக்கவை. மரபான தொன்மங்கள் ஏற்கனவே பலமுறை அணிந்து, துவைக்கப்பட்டு, கிட்டத்தட்ட சாயமழிந்து போய்விட்டன. நாம் அவற்றின் சாத்தியக் கூறுகளை எடுத்துக் கொண்டு கதை சொல்லலில் பயன்படுத்தலாம்.

எனது ஆளுமையும், சிந்தனையும், வெளிப்பாடும், அன்றாட விசயங்களும் உலகமயமாக்கல் வடிவமைத்தவை என்று நம்புகிறேன். நம்முடைய குடும்பத்தினரை, உறவினர்களை நம்புவதைவிட ஒரு நல்ல கல்லூரியில் படித்த தொழில்நுட்பக் கல்வி நம்மை வாழவைக்குமென்று நம்பும் தலைமுறையைச் சேர்ந்தவன். போர்ஹெஸ் தன்னை ஒரு ‘European in Exile’ என்று அழைத்துக் கொள்கிறார். ‘Citizen of All Countries’ என்கிற கருத்து எனக்கு மனிதர்களுக்கு இடையிலான சிறிய வேறுபாடுகளைக் கடக்க உதவி செய்கிறது. உலக குடிமகனாக ஆகும் வாய்ப்பை வரலாற்றிலே முதன்முறையாக உலகமயமாக்கல் நமக்கு அளித்திருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் சென்னையில் ஒரு சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா குழுவை உருவாக்க முனைந்திருப்பதாகவும், அதற்கான பயிற்சியில் வசதி வாய்ப்பற்றவர்களின் குழந்தைகளும் இருப்பதாகவும் அறிகிறேன். இலண்டன் அரங்கொன்றில் சென்னைக்காரர்கள் 21ம் நூற்றாண்டில் எழுதப்படப் போகும் புதிய சிம்பொனியொன்றை வாசிப்பார்கள் என்கிற எண்ணமே எனக்கு உற்சாகமளிக்கிறது.

ஆஷிஸ் நந்தி சொல்வதைப் போல நமது இலட்சிய வடிவமென்பது கிராமம்தான். நமது சிந்தனையில் நாம் இன்னுமே கிராமத்தை பிரதானமாகவும், கிராமத்திலிருந்து தொலைவிற்கு நகர்ந்து விட்டதை இழப்பாகவும், கிராமங்களுக்கான ஏக்கமிக்கவர்களாகவும் இருக்கிறோம். ஒரு கயிற்றுக் கட்டிலில், வெட்டவெளியில், தோட்டத்துக் காற்று வீச அக்கடாவென்று உறங்குவதை அல்லது அப்படியொரு நிலைக்குத் திரும்புவதை உயர்வான நிலையென்று சொல்லும் எண்ணற்றவர்களை நாம் பார்க்கிறோம். முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் 75% இந்தியர்கள் நகரங்களில் வாழ்வதே தங்கள் இலட்சியம் என்றார். அரசுகள் மக்களை நகரங்களுக்குத் தள்ளுகின்றன. அங்கே அவர்கள் அரசியலற்றும், கண்காணிக்க ஏதுவாகவும் ஆகிறார்கள். நான் இவற்றைக் கவனத்தில் எடுக்கிறேன்.

மரபான தொன்மக் கதைகள் வாசிக்கப்பட வேண்டியவை. இதிகாசங்களை வாசிப்பதற்கு சில வருடங்களை ஒதுக்க வேண்டும். ஆனால் அது உலகளாவிய வாசிப்பாக இருக்க வேண்டும். ஜூலியோ கொர்த்தஸார் அர்ஜூனனைப் பற்றியும், தாமஸ் பின்ச்சன் கைலாய மலை குறித்தும் எழுதுகிறார்கள். மேற்கத்திய தொன்மங்களின் ஒரு கூறையாவது நாம் நமது படைப்புகளில் கையாள்கிறோமா? அல்லது அவற்றை வாசித்தாவது அறிகிறோமா? ரோபர்டோ கலசோ ‘கா’, ‘ஆர்டோ(ர்)’ எழுதினால், வெண்டி டோனிகர் காமசூத்ரா குறித்து எழுதினால் மகிழ்ச்சியடைகிறோம், நம்மில் யாராவது Beowulf குறித்து ஒரு சொல்லாவது சொல்லியிருக்கிறோமா?

உலகின் மரபெல்லாம் நமது படைப்புகளுக்குரிய மூலப்பொருட்கள். காஃப்காவின் படைப்புகள் உலகு தழுவியதாக உணரப்படவில்லையா? அப்படி ஒன்றையாவது உலகிற்கு நாம் வழங்க வேண்டும். கிரேக்க தொன்மங்களைப் போல காலத்துக்கும் வாசிக்கப்படக் கூடியவராக காஃப்கா மாறியது எப்படி?. டிராகுலா போன்ற ஒரு பாத்திரத்தை, டோல்கெய்ன் போன்ற ஓர் எழுத்தாளரை நாமல்லவா உருவாக்கியிருக்க வேண்டும்.

திருப்பனந்தாள் மடத்தைப் போன்ற மடங்களோ, அவற்றின் வரலாறோ, தத்துவமோ என்னை ஈர்ப்பதைக் காட்டிலும், “தி மானுபாக்சரர்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனியாரிடம்” திருப்பனந்தாள் மடத்துத் தலைவர் காப்பீடு செய்திருந்ததே என்னை ஈர்க்கிறது. மரபு நவீனத்தை உள்வாங்கியதை இதைவிட எளிமையாக சொல்ல முடியாது. என்ன, நான் இன்சூரன்ஸ் கம்பெனிக்காரர்களின் பார்வையில் மரபை அணுக வேண்டுமென்று நினைக்கிறேன்.

சிறுகதையின் வழமையான வடிவத்திலிருந்து உங்கள் கதைகள் விலகி இருக்கின்றன. இப்படியான வடிவ உடைவைத்’ தேர்வதற்கு எது உங்களை உந்துகிறது?

பாலா பொன்ராஜ்: வழமையான வடிவங்களின் அலுப்பூட்டக்கூடிய கதை சொல்லல் முறையே என்னை வேறு வகையில் முயற்சித்துப் பார்க்க வைக்கிறது. ஆனால் அப்படி முயற்சிக்கும் வேளையிலும் வாசிப்பவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் பார்த்துக் கொள்ள முனைவேன். இலக்கியத்தின் கேளிக்கை மதிப்பின் மீது எனக்கு நம்பிக்கை அதிகம். கிப்ளிங்கின் ‘Just So Stories’ல் எளிமையான நேரடி கதைசொல்லல் உள்ளது. டொனால்ட் பார்த்தல்மே படைப்புகள் சிக்கலானவை. நாம் இரண்டையும் வாசிக்க முனைகிறோம் இல்லையா? ஏன் ஒரே மாதிரி இருக்க வேண்டும்? Standard narration என்பது பள்ளிக் கல்விக்குச் சரி. அதில் கூட புது கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன.

விமர்சனங்கள்/ அல்லது விமர்சகர்களின் மீது உங்களின் எதிர்பார்ப்பு/ போதாமை/ விமர்சனம் என்ன?

பாலா பொன்ராஜ்: விமர்சகர்கள் இலக்கிய வரலாற்றின் மறைமுக ஆசிரியர்கள் என்று கருதுகிறேன். அவர்கள்தான் ஒரு பிரதியை, ஆசிரியனை இலக்கிய வரலாற்றின் ஓரிடத்தில் வைத்து ஆராய்கிறார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் அந்தப் பிரதிக்கு அல்லது ஆசிரியனுக்கு நீண்டகால தொடர்ச்சியில் ஓர் இடத்தை அளிக்கிறார்கள் அல்லது நிராகரிக்கிறார்கள். விமர்சனப் பூதக்கண்ணாடிகள் படைப்புகளின் நுண் தளங்களைப் பார்க்க உதவி செய்கின்றன.

இலக்கியமும், விமர்சனமும் இரண்டும் ஒன்றிணைந்த சிந்தனைத் துறைகள். நல்ல விமர்சகர்களைப் பேணும் தகுதி நமது சமூகத்திற்கு இல்லை. அதற்கு பல தகுதிகள் இல்லை. இலக்கியப் பரப்பைக் கடந்து சமூகத்தில் இலக்கியத்திற்கு என்ன மதிப்பிருக்கிறதோ அதை விடவும் குறைவாகத்தான் இலக்கிய விமர்சனத்திற்கு இருக்கிறது. நமது சமூகம் தேர்ந்த அறிவியல் எழுத்தாளர்களை, வரலாற்று ஆசிரியர்களை, மொழியியல் அறிஞர்களை உருவாக்கும் தகுதியற்றது. நாம் ரிச்சர்ட் டாக்கின்ஸையும், ராமச்சந்திர குஹாவையும், கார்ல் சாகனையும் வியந்து கொண்டேயிருக்க வேண்டியதுதான். அதே போலத்தான் ஹெரால்ட் ப்ளூம் போன்றவர்களையும்.

உங்கள் கதைகளின் மீது பொதுவாக வைக்கப்படும் விமர்சனங்கள் எத்தகையவை?

பாலா பொன்ராஜ்: அந்நியத்தன்மை. ஆங்கில மொழிபெயர்ப்பை படிப்பது போலுள்ளது, என்பவையே கதைகளின் மீது பொதுவாக வைக்கப்படும் விமர்சனங்கள். ஆங்கிலத்தில் எழுத வேண்டுமென்பது எனது பியானோ ஆசையைப் போல மேலுமொன்று. அப்போது இந்தக் “குறைகள்” மறைந்து போகலாம்.

உங்கள் மொழியை நீங்கள் எப்படி கண்டடைந்தீர்கள்?

பாலா பொன்ராஜ்: அப்படியொன்றும் கோணங்கி, லா.ச.ராமமிர்தம், சு.ரா போல தனித்துவமான மொழியை நான் கண்டடைந்து விட்டதாக நினைக்கவில்லை. நான் மொழியைக் கற்கும் மாணவன். என்ன, எழுதிப் பார்த்துக் கற்றுக்கொள்கிறேன்.

எழுதி முடித்தவுடன் கதை தனித்த உயிராக எழுத்தாளனை விட்டு துண்டித்துக்கொண்டு உயிர் பெறுகிறது எனும் நம்பிக்கை உங்களுக்கு உண்டு. படைப்பு சார்ந்து எழுத்தாளனின் பொறுப்பு என்ன?

பாலா பொன்ராஜ்: எனது எளிமையான நம்பிக்கை என்னவென்றால், ஒரு புனைவு எழுதி முடிக்கப்பட்டு அச்சிலேறி வாசகரின் கைகளுக்குச் சென்றதும் வாசகரும், புனைவும் மணம் செய்து கொள்கிறார்கள். எழுதியவர்கள் அவர்களுக்கு இடையே தலையிடக் கூடாது.

ஆனால் எழுதிய ஒவ்வொரு சொல்லுக்கும் எழுத்தாளன் பொறுப்பாக வேண்டும். சிந்திப்பதும், எழுதுவதும் சுதந்திரமான செயல்கள் என்றாலும் பொறுப்பு மிக்கவை.

கதைகளில் நீட்ஷே வருகிறார். உங்கள் தத்துவ வாசிப்பு / ஆர்வம் பற்றி? புனைவு எழுத்தாளனுக்கு தத்துவ வாசிப்பு எப்படி பங்களிக்கும்?

பாலா பொன்ராஜ்: அறிவியலும், தத்துவமும் அல்டிமேட் ரியாலிட்டியை, பொருண்மையைத் தொட விரும்புகிற துறைகள். அதிநுட்பமானவை. இவ்விரண்டு துறைகளில் விவாதிக்கப்படும் பொருட்கள் நமது சிந்தனையை, கற்பனையை, தர்க்கத்தை அளவுகளுக்கு அப்பால் விஸ்தரிக்கக்கூடியவை. ஒரு புனைவு எழுத்தாளனுக்கு மேற்சொன்ன மூன்றும் எவ்வளவு முக்கியமானவை என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆயினும் வாழ்வை எழுதுகிறவர்கள் ஒருபடி மேலேதான் நிற்கிறார்கள். இந்த எண்ணம் மூன்றாம் உலக நாட்டின் பிரச்சனை என்றே நான் நினைக்கிறேன். நம்மை இன்னும் இலட்சியவாதம் தேய்ந்த அளவிலாவது பீடித்திருக்கிறது. ஆனால் ஒரு சமூகமாக, ஒரு நாடாக உள்ளீடற்ற ஒரு வடிவத்தை எட்டிவிட்டோம். நமது எலும்புகளில் மஜ்ஜை அருகிப் போய்விட்டது.

நம்மைச் சுற்றிலும் குடும்ப உறவுகள், திருமண உறவுகள், ஆண் பெண் இடையிலான சாதாரண நம்பிக்கை இவையெல்லாம் பெரும் சிதைவுகளைச் சந்திக்கின்றன. ஒரு பெண் மாபெரும் சுரண்டலுக்கு, வன்முறைக்கு உள்ளாகக்கூடிய எல்லாச் சாத்தியங்களும் உள்ள அதே வேளையில், ஓர் ஆண், வலிமையற்ற பெண்ணின்மீது எக்கணத்திலாவது வன்முறையை பிரயோகிக்கற எல்லையில் நின்றாலும், பெண்ணின் மீது வன்முறையை பிரயோகிப்பதையும், அவளை பாலியில் ரீதியாகத் துன்புறுத்துவதையும், சமூக உறவுகள் அவனுக்குக் கொடுக்கும் அழுத்தத்திற்கான வடிகாலாகவும் நினைத்துக் கொள்கிறான். அதே சமயம் பெண்களின் மீறல்கள் ஆண்களால் கட்டுப்படுத்த முடியாத இடத்திற்கு நகர்ந்து விட ஆணோ இந்நிலையை எப்படி தடுப்பதென்று தெரியாமல் விழிக்கிறான். சொன்னால் கேட்டுக் கொள்ளும் பழைய பெண்கள் போன தலைமுறையோடு காணாமல் போய் விட்டார்கள். பெண் இன்றைய ஆண் எதிர்கொள்ளும் ஒரு பெரிய சவால். இது ஆண்களை உலகம் முழுக்கவே மிஸோகைனிஸ்ட்டாக மாற்றியிருக்கது. Misogyny is fashion now.

ஒவ்வொரு ஆணும் இப்போது தன்னை ஒரு லெளகீக சூப்பர்மேனாக நிறுவ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். அவன் குறைந்தது தன்னுடைய தங்கையின் கணவனை விட சில ஆயிரங்களாவது சம்பாதிக்க வேண்டுமென்று அவனுடைய மனைவி ஆசைப்படுகிறாள். போட்டி பெருகிப் போய்விட்ட சமூகத்தில் தன்னால் முடிந்த அளவு பணம், அதிகாரம், செல்வாக்கு உடையவனாக, எக்காரியத்தையும் சாதிக்கக் கூடியவனாக இருக்க வேண்டிய பயத்தில் இருக்கிறான். ஒரு நிமிடமாவது தன்னுடைய சூப்பர்மேன் அந்தஸ்து குறைந்து விடக்கூடாதென்று பதட்டமும் உண்டு.

இன்றைய ஆண் ஒரு மிஸோகைனிஸ்ட்டாகவும், சுயமோகியாகவும் இருக்க மரபான ஒழுக்க, மதிப்பீட்டு வீழ்ச்சியும், புற நெருக்கடிகளும் அவனே அவனை ஒரு தீவிர பாதுகாப்பிற்குள் நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளியிருக்கின்றன. குற்ற உணர்விலிருந்து நாம் அதிவேகமாக விடைபெற்றுக் கொண்டிருக்கிறோம். நமக்குத் தேவை வலிமை மட்டுமே என்பதான உலகம். நன்மைக்கும் தீமைக்கும் அப்பால் செல்லக்கூடியது வலிமை மட்டுமே. நீட்ஷே நண்பனைப் போன்ற தத்துவவாதி. நமது குற்றங்களை அவை குற்றங்களே அல்லவென்று சொல்பவர். இயேசு கிறிஸ்து எதிர்-டயோனிஸிஸ் என்று அவர் சொல்லவில்லையா! இன்றைய கார்ப்பரேட் உலகம் அசல் நீட்ஷேவிய பாணியைப் பின்பற்றுகிறது. நாம் ஒரு சக பணியாளரை ஏமாற்றினால் அதை எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மறக்கச் செய்கிற சூழலுக்கான தர்க்க நியாயத்தை நீட்ஷே அளித்து விடுகிறார் என்பதே நீட்ஷேவை வாசிப்பதில் உள்ள அபாயம்.

நீட்ஷேவைக் குறித்த நல்ல அறிமுக நூல் மலர்மன்னன் எழுதியது. அவர் யாரென்று நமக்கு நன்றாகத் தெரியும். நீட்ஷே தன்னை மேலானவர்களாக, தூய்மையானவர்களாக, அதிகாரத்தை தங்கள் பிறப்புரிமையாக பாவிப்பவர்களின் தத்துவவாதியாக மாறிவிடுகிற சூழலை நாம் இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் சந்தித்தோம். இயேசு கிறிஸ்துவின், நபியின் சீடர்கள் மாபெரும் மதப் போர்களை வழங்கினார்கள், மார்க்ஸின், லெனினின் சீடர்கள் டொட்டாலிடேரியன் அரசுகளின் கீழ் மாபெரும் படுகொலைகளைச் செய்தார்கள். நீட்ஷேவின் சீடரான ஹிட்லர் மாபெரும் போருக்கும், கோடிக்கணக்கான உயிர்ப்பலிக்கும் மட்டும் காரணமானவரல்ல, அவர் எப்படி தேர்தல் முறையைக் கொண்டு, தேசியவாதம், தேசப்பற்று, உயர்குடி அடையாளம், தூய்மை இவற்றைக் கொண்டு, கொலை உலைகளை எழுப்ப முடியுமென்று எல்லா தேசங்களைச் சேர்ந்த அதிகார வெறிபிடித்தவர்களுக்கும் ஒரு பாதையை வகுத்துத் தந்திருக்கிறார்.

நீட்ஷேவை வாசித்தல் சவாலானதும், அழகானதுமாகும். கவித்துவமான மொழியால் அவரது கருத்துக்கள், இரத்தக்கறை படிந்திருப்பினும் தூய்மையாகத் தெரிகின்றன. ஆனால் தனிப்பட்ட முறையில் நீட்ஷே அளிக்கும் பாதிப்பை நாம் புத்தரை வாசித்து Detox செய்து கொள்வது நல்லது. பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் அதைச் செய்திருக்கிறார்.

நீட்ஷே ஓர் அழகான துப்பாக்கி. ஆனால் இன்னும் நீட்ஷேவை ஆழமாகக் கற்க வேண்டுமென்று விரும்புகிறேன். அப்படியொரு வாசிப்பை நான் எட்டிவிட்டதாக நினைத்தால் நீட்ஷே குறித்த தனிப்புத்தகம் எழுதக் கூடும். அப்போது கூடவே பியானோவும் வாசிப்பேன் என்று நம்புகிறேன்.

இயற்கை இயைவு உங்கள் ஆன்மீகம் என கொள்ளலாமா?

பாலா பொன்ராஜ்: ஒருகாலத்தில் மார்க்ஸியம், மிஸ்டிசிசம், கவிதை இம்மூன்றின் கலவையாக இவ்வுலகம் இருந்தால் நன்றாக இருக்குமென்று நம்பினேன். பின்பு பல வருட நாத்திக வாழ்விற்குப் பிறகு சில முறைகள் கோவிலுக்குச் சென்று வழிபடவும் செய்தேன். Bachன் “Come, Sweet Death” கேட்கும் போதும், மாசிக் கடைசியில் மஞ்சள் கொன்றை பூத்துக் கிடப்பதையும், ஒரு பாம்பு ஊர்வதைப் பார்க்க நேர்கையிலும் இன்னதென்று விளக்கிச் சொல்ல முடியாத ஆனந்தச் சோர்வு என்னைப் பீடிக்கிறது. Suspending the very idea of being a rational species. கட்புலனும், செவிப்புலனும் போதிக்கும் ஆன்மீகத்தை என்னால் இப்போது விரிவாகச் சொல்ல முடியாததற்கு காரணம் நான் இன்னுமே அவற்றைத் தீவிரமாக சிந்திக்கத் துவங்கவில்லை என்பது மட்டுமே. என்னுடைய முக்கியமான கதைகளில் விலங்குகளை பயன்படுத்துவதை நான் மனிதர்கள் அல்லாத உலகிற்குள் நுழையும் என்னுடைய வேட்கைக்கான முயற்சியாகப் பார்க்கிறேன். இயற்கையிலிருக்கும் ஒவ்வொன்றுமே மனிதர்களுக்கு காட்டுகிற, கற்பிக்கிற நிலையை மனிதன் இசையால் மட்டுமே அடைந்து விட முயற்சிக்கிறான். ஒரு காண்டாமிருகத்தை தொட்டுத் தழுவுவது என்னுடைய பெரிய கனவாக இருக்கிறது. I think the whole point of nature is harmony and interconnectedness என்று நினைக்கிறேன். கூட்டிசைவு இசைக்கு எவ்வளவு முக்கியமென்று உங்களுக்குத் தெரியும்.

நகர்ப்புற நடுத்தர வர்க்கத்து நுகர்வு மீதான விமர்சனங்கள் உங்கள் கதையின் அரசியல் என்று புரிந்து கொள்கிறேன். அதை ஒரு கேலியோடு சொல்வதாக உணர்கிறேன்…

பாலா பொன்ராஜ்: அளவற்ற வாங்கும் சக்தியும், தீராத உடற்சக்தியுமே நமது காலத்தின் இலட்சியம். நான் என்பது இப்போது எனக்குச் சொந்தமாக இருக்கும் பொருட்கள் மட்டுமே. நகர்ப்புறத்து நடுத்தர வர்க்கமே உலகளாவிய இலட்சிய வடிவமாக மாறிக் கொண்டிருக்கிறது.

உரைநடையில் கவிதையின் தாக்கம் உணர்கிறேன். நீங்கள் கவிதை எழுதியதுண்டா?

பாலா பொன்ராஜ்: நிறைய. ஆனால் ஒவ்வொரு முறை கவிதை எழுதி முடித்ததும் நான் கவிஞன் ஆகவே முடியாதென்று தோன்றும். கவிதை எனக்கு வராததற்கு என்னை விடவும் கவிதைதான் மகிழ்ச்சி அடையும்.

நாவல் பகுதி ஒன்று கல்குதிரையில் பார்த்ததாக நினைவு… எப்போது வருகிறது?

பாலா பொன்ராஜ்: அதன் காலத்தில் தூங்கியும், விழித்தும், ஓய்வெடுத்தும், வேறிடம் நகர்ந்தும் ஏதோ ஒரு போக்கில் செல்கிறது. நல்ல குறி சொல்கிறவர்கள் யாராவது இருந்தால் நாவல் பகுதியைக் காட்ட வேண்டும். என்னால் அதன் விதியைக் கணிக்க முடியவில்லை.

கதைகளை திருத்தும் வழக்கம் உண்டா?

பாலா பொன்ராஜ்: கண்டிப்பாக. கைவிட்டுக் கிடப்பவையும் உண்டு.

கதை எழுதுமிடம் சார்ந்து செண்டிமெண்ட்ஸ் உண்டா?

பாலா பொன்ராஜ்: முதல் நூல் சமயத்தில் இல்லை. இரண்டாவது நூலை எழுதிய சமயத்தில் இருந்தது. ஒரு சிறுகதை நன்றாக வந்துவிட வேண்டுமென்பதற்காக பெரும் படைப்பாளிகளின் புத்தகங்களை கணிணிக்கு அருகில் வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது.

வழிப்போக்கன் குறிப்புகள் – ப. மதியழகன் கவிதை

ப. மதியழகன்
1

இது எத்தனாவது ஞாயிற்றுக்கிழமை என்று தெரியவில்லை
பிறந்ததிலிருந்து எண்ணிக் கொண்டா இருக்கிறோம்
விடுமுறை நாளென்பதால் சூரியன் உதித்த பின்புதான் எழுவது
வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையை ஏன் ஓய்வு நாளாக தேர்ந்தெடுத்தார்கள்
என்று நான் விவாதிக்கப் போவதில்லை
அடிமைச் சேவகம் செய்பவர்களெல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில்தான்
அவிழ்த்துவிடப்படுகிறார்கள்
உத்தரவை செயல்படுத்த தாழப்பணிந்து நிற்க நேர்ந்தது என் விதி
எஜமானர்களுக்கு உழவுமாடும், பணியாளும் ஒன்றுதான்
ஏ.சி அறையில் போடப்படும் கையெழுத்து
விளிம்பு நிலை மனிதர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கிறது
கடவுளின் அலைவரிசைக்கு ஒத்துப் போகின்றவர்களெல்லாம்
சாதாரண பரதேசிகள்தானே
ஏழையின் பாத்திரத்தை அருள்மழை நிரப்புவதே இல்லை
ஏழைகளின் சுவர்க்கக் கனவுகளெல்லாம் வெறும்
சோற்றுப் பருக்கைகள்தான்
திரையில் காட்டப்படும் மாயாஜால வித்தையால்
ஏழைகளை எளிதில் வசியப்படுத்திவிட முடிகிறது
இந்த அடிமைகள் தேடுவது விடுதலையை அல்ல
கைவிலங்குகளை
இந்த உலகம் அழியும் வரை ஏழைகளின் பசி நெருப்பில்
குளிர்காய ஒரு கூட்டம் இருந்து கொண்டுதான் இருக்கும்.

2

மனிதர்களிடம் இவன் வைத்த நம்பிக்கை குறைந்தபோது
இவன் தன் பகுத்தறிவு முகமூடியை கழற்றி வைத்துவிட்டான்
இவனது நம்பிக்கையை கடவுள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கவில்லை
கவலை மேகங்கள் இல்லாத வாழ்க்கை வானை
கற்பனை செய்துகூட பார்க்க முடியாது அல்லவா
கருணை வெளிப்படும் தருணத்தில் கடவுள்தன்மைக்கு
வெரு அருகாமையில் சென்றுவிடுகிறோம் அல்லவா
வாழ்க்கை தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறது என்ற கேள்விக்கு
இவனுக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை
இயற்கை உந்துதலுக்கு ஆட்பட்டு தவறிழைக்கும்போது
இவன் பிதாவை வருத்தமடையச் செய்கிறான்
நல்லவர்களை அடையாளம் கண்டுகொள்வதற்கு என்ன
அளவுகோலைப் பயன்படுத்துவதென்று இவனுக்குத் தெரியவில்லை
தரித்திரத்தில் உழல்பவன் மனதில் ஆசாபாசங்களுக்கு
இடம் கொடுக்கலாமா
வாழ்க்கை, புதையலை காவல் காக்கும் பிசாசு
காசு பண்ணத் தெரியாதவன் கடைசிவரை
ஏங்கி ஏங்கிச் சாக வேண்டியதுதான்
இவனுக்கான போதி மரத்தை இன்னும் இவன் தேடிக் கொண்டிருக்கிறான்
இவனுக்கு இங்கிருந்து வெளியேறும் வழி தெரியவில்லை
உண்மைக்கான தேடல் மற்றவர்களிடமிருந்து இவனை
அந்நியப்படுத்திவிட்டது
வாழ்க்கை இவனை மென்று தின்று கொண்டிருக்கிறது
அகம் நோக்கிச் செல்பவர்களுக்கு இந்த உலகம்
சிலுவையைத்தான் பரிசாகத் தருகிறது
இவனுக்கு இப்போதுதான் புரிந்தது கடவுள் என்ற பைத்தியக்காரனின்
கனவுதான் இந்த உலகமென்று.

3

ஆறுதலைத் தேடியலையும் எனது ஆன்மாவுக்கு
சாந்தியளிக்க எவரால் இயலும்
கடவுளின் தண்டனை முறைகள் இப்படித்தான் இருக்குமென்று
யாராலும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது
மரணம் விடுதலை தரும் என்பதால் எல்லா
சித்ரவதைகளையும் பொறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது
பிரார்த்தனை விண்ணப்பங்கள் வெற்றுக் கூச்சல் என
கடவுளால் அலட்சியப்படுத்தப்படுகிறது
இந்த பூமி பாவத்தின் சம்பளத்தை பெற்றுக்கொள்வதற்கான
இடமென்று இப்போதுதான் எனக்குப் புரிகிறது
எந்த மனிதருக்குள்ளும் கனவுகளை விதைக்காதீர்கள்
வாழ்க்கையில் வசந்தத்தை எதிர்நோக்கி காத்திருந்தவர்களெல்லாம்
கண்டடைந்தது என்ன என்று நீங்கள் தெரிந்து கொண்டால்
நிச்சயமாக உங்கள் தேர்வு தற்கொலையாகத்தான் இருக்கும்
அந்திம நாட்களை நெருங்கிக் கொண்டிருப்பவர்களை
கேட்டுப் பாருங்கள் அவர்களில் எவரும்
மறுபடி பிறக்க விரும்ப மாட்டார்கள்
இந்த இரவிலாவது எனது விழிகள் உறங்குமா
உனது ஆளுகைக்கு கீழ் உள்ள என்னால்
உனக்கு அப்படியென்ன ஆபத்தை விளைவித்துவிட முடியும்
கடவுளிடம் மன்னிப்பின் ஒளியை எதிர்பார்த்து
ஏமாந்து போனவர்கள் எத்தனை பேர்
இந்த இரவுப்பொழுது எனக்கு அமைதி தரட்டும்
என் கேள்விகளுக்கு நீ விடையளிக்க மாட்டாய்
என்று தெரியும்
எனது பலவீனம் என்னவென்று நீ அறிந்து வைத்திருக்கிறாய்
நான் இறந்த பின்பு நீ சித்ரவதை செய்து இன்புற
அடுத்து யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறாய்
தீர்ப்பு நாளிலாவது என் தரப்பு நியாயத்தை
செவிமடுப்பாயா
விடியாத அந்த ஓர் இரவை எதிர்பார்த்துதான்
ஒவ்வொரு இரவும் நான் உறங்குகிறேன்
தீர்க்க தரிசனங்கள் உண்மையென்று நம்பி
ஏமாந்து போனவர்களில் நானும் ஒருவன்
விடைபெற்றுக் கொள்கிறேன் எந்த ஒரு மனிதனும்
நான் கடந்து சென்ற பாதையை தேர்வு
செய்ய வேண்டாம்.

4

அன்பினால் இந்த உலகை நிறைத்தவர்கள்
இன்றும் நினைத்துப் பார்க்கப்படுகிறார்கள்
தன்னை இரட்சிக்க நினைக்கும் அன்பின் ஒளியை
மனிதன் அலட்சியப்படுத்திவிடுகிறான்
ஜீவனின் யாத்திரை எதை நோக்கியதாக இருக்க வேண்டும்
மாயமாகிப் போகக்கூடிய இந்த உடலின்
தேவையை பூர்த்தி செய்வதுதான் வாழ்க்கையா
வாலிபத்தில் எதிர்காலத்தைப் பற்றியக் கனவு இன்பமாகத்தான் இருக்கும்
ஞானத்தை அடையக்கூட தொழில்நுட்பம் இன்று வந்துவிட்டது
மொட்டுக்களை இயற்கையல்லாமல் மனிதன் திறப்பது சாத்தியமா
இன்னும் வேண்டும் என்கிற ஆசை இறக்கும் வரை இருந்துகொண்டுதான் இருக்கிறது
மரணத்தின் நிழல் இந்த உலகை ஒருநாள் முழுமையாக தழுவுமல்லவா
கடவுளை வைத்து பணம் பண்ணும் தரகர்களால்
உங்களை மரணத்திலிருந்து காக்க முடியுமா
பூமியின் ஆயுளுடன் ஒப்பிடுகையில் மனித வாழ்க்கை சில நொடிகள்தானே
நான் என்பது எங்கிருந்து எழுகிறதென்று நீங்கள் என்றாவது யோசித்ததுண்டா
ஒருவனின் நம்பிக்கைச் சுவரை உன் வார்த்தைகளால் தகர்த்துவிடாதே
உனது வாதத் திறமையால் வாழ்க்கையை வாங்க இயலாது
உலகை வென்றவர்களெல்லாம் கடைசியில் என்ன கொண்டு போனார்கள்
வாழ்க்கையின் வேர்களை அறிய ஒரு பிறவி போதாதா
விதியின் கொடிய கரங்கள் மனிதனை பொம்மையாகத்தான் ஆக்கி வைத்திருக்கிறது
வலையில் அகப்பட்டுக் கொண்ட மீன் சேற்றில் தலை புதைத்துக் கொள்ளுமாம்
பூஜிக்க வேண்டியது மண்ணாலான இந்த உடலையல்ல உள்ளேயிருக்கும்
பரிசுத்த ஆவியை
கடவுளர் பூமியில் வாழ நாம் சிறிதும் அருகதையற்றவர்கள்
கடவுளின் ஒவ்வொரு குமாரனையும் பார்த்து நாம் பரிகசித்து சிரித்தோம்
இந்த உலகில் புற்றீசல் போல மதம் பெருகிவிட்டது
நெஞ்சில் ஈரமற்றவர்கள் இன்று குண்டுகளால் ஆயிரக்கணக்கானவர்களை
கொன்று குவிக்கிறார்கள்
மனிதர்களிடம் அன்பை விதைக்க ஸ்தாபிக்கப்பட்ட மதங்கள்
இன்று தோல்வி கண்டுவிட்டன
கைவிடப்பட்ட இந்த உலகினருக்கு தற்கொலை ஒன்றே தீர்வாக அமையும்.

நிழல் தேடும் பறவைகள் – அரிசங்கர் சிறுகதை

அரிசங்கர்

“டேய்… எங்கடா போற…”

பாலுவின் பாட்டி கேட்டுக் கொண்டிருக்கும்போதே அவன் வேகமாக இறங்கி மெயின் ரோட்டை நோக்கி போய்க்கொண்டிருந்தான். கிழவி கத்திக்கொண்டேயிருந்தாள். “அய்யோ… நானே இந்தப் புள்ளய சீரழிச்சிட்டனே, இந்தப் புள்ளய வெச்சிக்கிட்டு நான் என்ன பண்ணுவேன்” என்று தொடர்ந்து இதையே வேவ்வேறு மாதிரி புலம்பிக் கொண்டிருந்தாள். வீட்டில் இருந்தவர்கள் இதைப் பொருட்படுத்தாமல் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். பாலுவின் அம்மா இறந்து பதினாறாம் நாள் காரியத்துக்கான வேலை நடந்து கொண்டிருந்தது. மறுபடியும் பாலு தெரிகிறானா என்று கிழவி எட்டிப்பார்த்தாள், தெருவில் யாருமே தட்டுப்படவில்லை.

 

பாலு, அவன் அம்மா வயித்துல இருக்கும்போதே அவன் அப்பா விபத்தில் செத்துட்டார். பாலு பொறக்கற வரைக்கும் கிழவிதான் எல்லாம் பாத்துகிட்டது. கிழவி பெயர் கண்ணம்மா. பாலுவின் அப்பாவை பெத்தவள். பாலுவிற்கு அம்மா வகையில சொந்தம்னு பெருசா ஒண்ணும் இல்ல. கிழவிக்கு ரெண்டு பசங்க, பெரியவன் பேரு குமார், சின்னவன் பேரு சேகர். குமார்தான் பாலுவோட அப்பா. ஏ.எப்.டி மில்லுல வேலை செஞ்சிட்டிருந்தாரு. வேலை முடிஞ்சி சைக்கிள்ள வரும்போது சேலியமேடுகிட்ட லாரி அடிச்சிட்டு அங்கயே உயிர் போய்டுச்சி. ராத்திரில நடந்ததுனால அடிச்சது யாருனு தெரியல. பாலு அப்பா சாகும்போது அவங்க அம்மா நாலு மாசம். எல்லாம் கலச்சிடலாம்னு சொன்னாங்க. கிழவி விடவேயில்ல. “சின்ன பொண்ணு, புள்ள பெத்துட்டு தனியா இன்னா பண்ணும்,” எல்லாரும் கேக்கும்போது “எல்லாம் எனக்கு தெரியும், போய் வேலைய பாருங்க, என்னமோ இவனுங்க வந்துதான் கஞ்சி ஊத்தர மாதிரி நிக்கறானுங்க” னு மூஞ்சில அடிச்சாப்புல கேட்டதால, அதுக்கப்பறம் யாரும் கிழவிகிட்ட எதுவும் கேக்கல.

குழந்த பொறந்தவுடனே கிழவி, பாலுவோட அம்மாகிட்ட ஜாடயா கேக்க ஆரம்பிச்சது, “ஏ வள்ளி, எவ்வளோ நாளுக்கு இப்படி இருக்கலாம்னு இருக்க. எல்லாரும் என்னல ஏசராங்க. நானும் உன்ன இன்னும் எத்தினி நாலுக்கு காவக்காக்கறது.”

வள்ளி எதுவும் பேசல. அவள் அடுப்புல இருந்த சட்டிய இறக்கி கீழ வெச்சிட்டு எழுந்து தோட்டத்து பக்கம் போகும்போது கிழவி மறுபடியும் ஆரம்பித்தது.

“நான் கேக்குறேன் என்ன பதிலே சொல்லாம போறவ, நில்லுடி” என்றாள்.

நின்று திரும்பி “என்ன” என்பது போல் பார்த்தாள் வள்ளி.

“சேகர கட்டிக்கறியா என்ன?. உன்ன வெளியலாம் கட்டிக் குடுக்க எனக்கு யோசன இல்ல. ஏன் வாரிசு என் வீட்டுலதான் வளரனும். ஒழுங்கா சொல்லறத செய்” என்றாள்.

செஞ்சிதான் ஆகனும். இல்ல வெற வழி. கைபுள்ள எடுத்துனு எங்க போறது.

பெருசா யாரயும் கூப்புடுல. அக்கம் பக்கம் நாலு பேரு, ஊர் பெருசு ரெண்டு பேரு, சொந்தம் கொஞ்சம். மொத்தமாவே ஒரு நாப்பது பேருகூட இல்ல. செலவும் பெருசா செய்யல. கல்யாணத்த முடிச்ச சந்தோசம் கிழவிக்கு. கிழவி வள்ளிய பள்ளத்துல இருந்து தூக்கறன்னு இழுத்து பாதாளத்துல எறக்கிடுச்சி.

 

பாலு ஏரிக்கரை பக்கமா சுத்திக்கிட்டிருந்தான். ஊர்ல எங்கல்லாம் ஒதுக்குப்புறமான எடம் இருந்துச்சோ அங்கெல்லாம் போய் தேடிக்கிட்டிருந்தான். எங்க தேடியும் சேகர காணல. எல்லாம் எடத்துலயும் சுத்திட்டு வீட்டுக்கு போலாம்னு வரப்புல வரும்போது பம்பு செட்டுல சரக்கு அடிச்சிட்டு இருந்த ரெண்டு பேரு இவன அடையாளம் கண்டு, “டேய், யாரு சேகரயா தேடர” என்றான் ஒருத்தன்.

பதிலுக்கு பாலு “ஆமா எங்க இருக்கு” என்றான்.

“பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல பாத்தேன்டா” என்று சொல்லிட்டு அவர்களுக்குள் ஏதோ பேசிகிட்டானுங்க அப்பறம் சிரிச்சிக்கிட்டாங்க.

பாலு வேகமா பஸ் ஸ்டாண்ட் பக்கம் ஓடினான்.

 

ல்யாணம் ஆகியும் கொஞ்ச நாளுக்கு சேகர் வள்ளிய அண்ணினே கூப்பிட்டான். அதுக்கு ஒரு நாள் கிழவி கூப்பாடு போட்டதும்தான் பேரு சொல்லி கூப்பிட்டான். சேகர் சின்ன வயசுலருந்தே கிழவிகூடவே தான் திரிவான். அவங்க அண்ணன்கூடலாம் விளையாட போகமாட்டான். கிழவிக்கு பாதிவேலைய அவன்தான் செய்வான். கிழவிகூட ஆரம்பத்துல ஏதோ நம்ம மேல இருக்கற பாசத்துலதான் செய்யறானு நினைச்சிக்கிச்சி. ஆனா சேகருக்கு ஆம்பள பசங்ககூட போய் விளையாடறத விட வீட்டு வேல செய்றதுதான் புடிச்சிருந்தது.

நிரந்தரமா எந்த வேலயும் இல்ல. எங்க போனாலும் நிலையில்ல. கிழவிக்கு ஒண்ணும் புரியல. இருக்குற கொஞ்ச நிலத்த பாத்துக்கனு சொல்லிடுச்சி. சரி அவனுக்கு ஒரு கல்யாணத்த பண்ணிடலாம்னு குமாருகிட்ட கேட்டப்ப, “இவனுக்கு எவன் பொண்ணு குடுப்பான்”னு கேட்டுட்டு போனான். ஏன்னு கிழவி எதிர்க் கேள்வி கேட்டப்ப பதில் இல்ல. குமார் போன கொஞ்ச நாள்லயே கிழவிக்கு இப்படி ஒரு யோசன வந்துடுச்சி. ஆனா புள்ள பொறக்கட்டும்னு காத்திருந்துச்சி.

சேகர், பாலு மேல உசுரயே வச்சிருந்தான். குழந்த தல நிக்கறவரைக்கும் அவன் கொஞ்சம் எட்டிதான் இருந்தான். ஆனா அதுக்கப்பறம் பாலுக்கு எல்லாமே அவன்தான். கால்ல போட்டு குளிப்பாட்டறதுல இருந்து, பவுடர் போட்டு மை வைக்கிறவரைக்கும் அவன்தான் செஞ்சான். பாலுவும் எப்பவும் சேகரே கதினு வளர்ந்தான். சேகர் அவன் அப்பன் இல்லனு பாலு வளர தெரிஞ்சிக்கிட்டான். ஆனா அது அவனுக்கு எதுவும் உறுத்தல. வள்ளிய விட சேகர்தான் அவன நல்லா பாத்துக்கற மாதிரி அவனுக்கு தோனுச்சி.

கொஞ்ச நாள் போனதுக்கு அப்பறம்தான் சேகரோட குணம் வள்ளிக்கு தெரிய ஆரம்பிச்சது. சேகருக்கு சேகரா இருக்கப் பிடிக்கல. ஆனா அத அவன் யாருகிட்டயும் இவ்வளவு நாளா காட்டிக்கல. கிழவி மேல இருந்த பயம்தான் அதுக்கு முக்கியமான காரணம். இதெல்லாம் கிழவிக்கு தெரிஞ்சா அவளோதான். கிழவியே சோத்துல விஷத்த வெச்சிடும். வீட்டுல யாரும் இல்லாதப்ப புடவை கட்டிப் பார்ப்பான். எப்பவுமே நெத்தில குங்குமம்  இருக்கும். கேட்டா அம்மன் கோவிலுக்கு போனேன்னு சொல்லுவான். யாரும் அத பெருசா கண்டுக்கல. லேசா சாயல் தெரிஞ்சாலும் அவன் யாருகூடவும் பழகாததுனால யாருக்கும் எதும் தெரில. கல்யாணத்துக்கு முன்னாடி தனியா இருந்ததுனால சேகரால ஊரயும் வீட்டயும் ஏமாத்த முடிஞ்சது. ஆனா கல்யாணத்துக்கு அப்பறம் எங்க சுத்தனாலும்  ராத்திரி வீட்டுக்குதான வரனும். தனியா போய் படுத்தா கிழவி சும்மா வுடுமா. சேகர் வள்ளிகிட்ட பெருசா எதுவும் பேசமாட்டான். வள்ளியும், ஏதோ நம்பல மாதிரி கிழவி சொன்னதுக்காதான் கட்டிக்கிட்டான் போலன்னு விட்டுட்டா. வள்ளிக்கு புள்ள ஒழுங்கா வளத்தா போதும்னு தான் இருந்துச்சி. சேகர் வெறும் ஆம்பள துணைக்குதான். அதான் வேற எவனும் இன்னும் வள்ளிய அண்டாம இருக்கான். வள்ளிக்கு இதுவே போதும்னு தான் இருந்துச்சி.

ஊர் திருவிழாவுல சேகர பாத்ததுமே அவங்களுக்கு தெரிஞ்சிடுச்சி. இவனும் நம்ம ஆளுதானு. அவன் கண்ணுல அவ்வளவு ஏக்கம். அவங்களோட புடவ, மேக்கப் எல்லாம் பாத்து அவனுக்கு அவங்க கூடவே போய்டனும் தோனிச்சி. கிழவி பின்னாடியே வந்து, “இங்க என்னடா பண்ற…” என்றாள். முதல் முறையாக சேகர் கிழவியிடம் எரிந்து விழுந்தான் “நீ போ… நான் வரேன்..”

கிழவிக்கு ஆத்திரம் வந்தாலும், மனசுக்குள்ள “வீட்டுக்கு வா” னு நினச்சப்படியே நடந்தது. வள்ளிகூட கல்யாணம் ஆகி எட்டு வருசமாகிடுச்சி. அவளுக்கு தெரியாம இவ்வளோ நாளு இருந்ததே அதிகம். அதுவும் ஒரே அறையில, எங்க பாத்தாலும் வள்ளியோட துணிங்கதான் இருக்கும். அவ புடவ, ரவிக்க, அத பாக்கும் போதுலாம் ஆத்திரமா வரும். அந்த ஆத்திரம் பல நேரம் பாலு பக்கமாதான் திரும்பும். இவன் பொறந்ததுனால தான நமக்கு இந்த கல்யாணல் ஆச்சினு. ஆனா அவனால கிழவிய மீறி ஒண்ணும் பண்ண முடில.

சேகர பாத்து ஒன்னு சிரிச்சிது. சேகர் மறைவா போய் பேச்சி குடுத்தான். மெல்ல எல்லாத்தையும் சொல்லி அழ ஆரம்பித்தான். அவங்க எல்லாரும் சேந்து அவன தேத்தி, அவன் எப்ப வேணா வரலாம்னு சொல்லி விலாசம் தந்தாங்க. அவன் வாங்கி பத்திரமா வெச்சிக்கிட்டான்.

திருவிழா முடிஞ்ச கொஞ்ச நாள்ல சேகருக்கு கொஞ்சம் தைரியம் வந்தது. வீட்டுல புடவ கட்ட ஆரம்பிச்சான். வள்ளி வருவானு தெரிஞ்சும் அவன் நிறுத்தல. முழுசா கட்டி அலமாரில இருந்த கண்ணாடில பாத்துக்கிட்டி இருந்தான். இத எல்லாத்தயும் வள்ளி பாத்துக்கிட்டு தான் இருந்தாள். அவன்கிட்ட எதுவும் கேக்கல. கிழவி வந்ததும் கிழவியிடம் அழுது எல்லாத்தையும் சொன்னாள். கிழவி முதலில் இதை நம்பல. ஆனா வள்ளி அழறத பாத்து சேகர் கிட்ட கேட்டா, அவன் எதுவும் சொல்லல. கிழவி வெளக்கமாற எடுத்து சேகர வெளுத்துட்டா. அவனுக்கு இராத்திரி முழுக்க தூக்கம் வரல. கிழவி அடிச்சத அவனால தாங்க முடியல. கிழவிய பழிவாங்கியே ஆகனும்னு முடிவுகட்டி கண்ண மூடினான்.

காலையில வள்ளியோட கல்யாணப் புடவைய எடுத்து கட்டிகிட்டு கல்யாண பொண்ணு மாதிரி சிங்காரிச்சிகிட்டு ஊரயே ஒருவாட்டி சுத்தி வந்தான். அவ்வளவுதான் அன்னிக்கு பாதி பேரு வேலை வெட்டிக்கு போகல. கிழவி வாசல்ல ஒப்பாரிய ஆரமிச்சுது. பொம்பளைங்க அவங்க வேலைய ஆரம்பிச்சாங்க. வள்ளியால இந்த பேச்ச எதயும் கேக்க முடில. ராத்திரி வரைக்கும் கத பேசன ஜனங்க தூக்கம் வந்ததும் போய்டுச்சிங்க. ஆனா எல்லாம் முடிஞ்சிதா என்ன. மறுபடியும் காலைல விடியாமயா போய்டும். விடிஞ்சிது. ஆனா அவங்களுக்கு பேச வேற கதைய விட்டுட்டு வள்ளி தொங்கினு இருந்தா.

 

பாலு பஸ் ஸ்டாண்ட்க்கு வந்தப்ப சேகர் ஒரு கல்லு மேல ஒக்காந்துனு இருந்தான். கைலி தான் கட்டினு இருந்தான். கைல ஒரு பை, அதுல கொஞ்சம் துணிங்க. பாலு நேரா சேகர்கிட்ட போய் நின்னான். அவன பாத்ததும் சேகர் விரட்டனான். ஆனா பாலு போகாம அவன் கைய புடிச்சி “வாப்பா” னு இழுத்தான்.

“நான் உன் அப்பன் இல்ல. வீட்டுக்கு போடா” னு விரட்டனான், ஆனா அவன் கண்னு கலங்க ஆரம்பிச்சிடுச்சி.

“அப்பா என்னயும் இட்டுகினு போப்பா”

“நான் திரும்பி வரமாட்டன். இங்க கிழவி கூடவே இரு போ”

“அப்பா வேணாம்பா”

“என்னய அப்பானு கூப்பிடாத” என்று ஆத்திரப்பட்டான். “உனக்கு தெரியுமில்ல. என்னால உனக்கு அப்பனாலாம் இருக்க முடியாது”

தூரத்தில் பேருந்து வருவதை கண்டு எழுந்தான்.

அவன் கையை பிடித்த பாலு, “உன்னால அப்பாவாதான இருக்க முடியாது. அம்மாவா இருக்கலாம் இல்ல, எனக்கு அம்மாவா இரு,” என்றான்.

சேகர், பாலுவை அணைத்தபடி கதறி அழ ஆரம்பித்தான். பேருந்து அவர்களை நெருங்கிக் கொண்டிருந்தது.