Author: பதாகை

தனித்தல் – ஜிஃப்ரி ஹாஸன்

-ஜிஃப்ரி ஹாஸன் – 

வெளிர் மஞ்சள் வெயிலில்
தனித்து நிற்கிறது மரம்
தனித்தல் ஒரு கலை
தனித்தல் ஒரு எழுச்சி
தனித்தல் ஒரு வளர்ச்சி

வெளிர் மஞ்சள் வயலில்
தனித்து நிற்கிறது மரம்

தனித்தல் அதன் சுதந்திரம்
தனித்தல் அதன் கனவு
தனித்தல் அதன் எழுச்சி

வெளிர் மஞ்சள் வெயிலில்
தனித்து நிற்கிறது மரம்

கூட்டத்திலிருந்து
திசைமாறிச் செல்லும் பறவை ஒன்று
அதன் தனிமையை பகிர்ந்து கொள்ளலாம்
பயணக் களைப்பில்
வழிப்போக்கன் ஒருவன்
ஒரு இடைத்தங்கலுக்காய்
அதன் நிழலில் அமரலாம்
அப்போது மரம் ஒரு துணை
மரம் ஒரு இல்லம்
மரம் ஒரு கேண்மை

வெளிர் மஞ்சள் வெயிலில்
தனித்து நிற்கிறது மரம்
திசைதப்பிப் பறக்கும் பறவைகளுக்காகவும்
வழிப்போக்கர்களுக்காகவும்!

சாயல் – ஆகி

ஆகி

மெட்ராசா என்பார் ஐதராபாதிலிருந்து திரும்பினால்
புது தில்லியிலிருந்து திரும்பினாலும் மெட்ராசாதான்
கிட்டத்தட்ட ஓர் நூற்றாண்டைக் கண்டவரானால்
திருச்சிக்கு அந்தப் பக்கம் கண்டதில்லையாதலால்
அவர் இருந்திருந்தால் கொள்ளுப்பேரன் நிலவிலிருந்து
திரும்பியிருந்தால் எப்பப்பு வந்தா மெட்ராசிலிருந்து என்றிருப்பார்
அகமாசா என்றுணர்ந்து கைகளைத் தடவி முகத்தில் ஒத்தியெடுத்து
விரல்கள் உள்ளீடற்று போகிறார்போல் முகர்ந்துகொள்வார்
பிளசர் கார் ஒத்துவராதென்று ஜெயசீலி சித்தி வசிக்கும்
திருச்சிக்கும் சென்றிருக்கவில்லை கடைசி நாட்களில்
படுத்த படுக்கையாயிருந்த நட்சத்திரம் பாட்டிம்மாவை பல மாதங்கள்
மாங்கு மாங்கெனத் தாங்கிக்கொண்டார் ஜெபதங்கம் பெரியம்மா
கர்த்தருக்குள் நித்திரையடைந்தவரின் முகம் கன்னம் வற்றி
எலும்பு துருத்தி சாயலொன்றை கொணர்ந்தது கண்ணாடிப்பெட்டியுள்
பலநாள் பட்டினியில் என்னைக் கண்ணாடியில் நானே முறைத்தால்
காணும் பழந்தின்னி வௌவாலின் சாயல் அதைவிட அச்சு அசலாக
நானிப்போதெல்லாம் வீம்புக்காகவன்றி பட்டினி கிடப்பதில்லை
பழந்தின்னி வௌவால் பறக்கும் நரியென்றுமறியப்படுகிறதாம்
தேரிக்காட்டின் நிலவொளியில் பறக்கும் நரிகள் அருகி வருகின்றன

நூல் விமரிசனம்: சொல் என்றொரு சொல்- ரமேஷ்-பிரேம்

வெ. சுரேஷ்

ரமேஷ்-பிரேம் இரட்டையர்கள் எழுதியுள்ள இந்தப் புத்தகம், நீண்ட காலமாகவே படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த, தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்த ஒன்று. எழுத்தாளராக அறிமுகமாகி இப்போது நண்பராகிவிட்ட கார்த்திகை பாண்டியனின் தூண்டுதலால் இதை இப்போதுதான் படிக்க முடிந்தது. பல இடங்களில் பிரமிப்பூட்டும் மொழியும் நடையும் அமையப் பெற்ற ஒரு நாவல்- ‘நாவல்’ என்று சொல்ல முடியுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை-, பல்வேறு காலகட்டங்கள், பல்வேறு நிலப்பகுதிகள் ( முதன்மையாக தமிழ்நிலம்தான்), ஒரே பெயர் கொண்ட பலவகையான கதாபாத்திரங்கள் இருந்தாலும், எந்த தனிப்பட்ட மனிதரையும் குறிப்பிடுவதாக இல்லாமல், வகைமாதிரிகளைக் குறிப்பிடும் தன்மை கொண்டதாய் உள்ள இந்த நாவலில் ரமேஷ்-பிரேம் தமிழக வரலாறு குறித்த ஒரு மீள்பார்வையையும் மறுகூறலையும் முன்வைக்கிறார்கள். கூடவே இலங்கைப் பிரச்னையும் வரலாற்றுக் காலம் தொட்டு சமகாலம் வரையிலான (2004ல் எழுதப்பட்டிருக்கிறது) தமிழகத்தின் அனைத்து அரசியல், சமூக கலாச்சார நெருக்கடிகளையும் படைப்புக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள்

நாவலில் வெகு உக்கிரமான, முகத்தில் அறையும், சம்பவங்கள் இருக்குமளவுக்கே,. அற்புதமான, நெஞ்சை உருக்கும், நெகிழ வைக்கும், பெரும் மனவெழுச்சியை உருவாக்கும், சித்திரங்களும் இருக்கின்றன. இதற்கு,இரண்டு இடங்களை உதாரணமாகச் சொல்லலாம். புத்தரின் இறுதி மணித்துளிகளைப் பற்றிய விவரிப்பு, புத்தருக்கும் அவர் தன்னை விட்டு விலகிப் போகச்சொல்லும் சிஷ்யருக்கும் இடையே நிகழும் உரையாடல் ஒன்று. பின், ஆனந்தருக்கும் புத்தருக்கும் இடையேயான உரையாடல்கள் கொண்ட பகுதி. இவை தமிழ் புனைவிலக்கியத்தின் எந்த ஒரு சிறந்த படைப்பின் வரிசையிலும் இடம் பெறத் தக்கது. இருந்தாலும், இந்த நாவலைப் படிக்கும்போது,பின்தொடரும் நிழலின் குரலில்,இயேசுவின் இரண்டாம் வருகை பற்றி இடம் பெற்றுள்ள சிறுகதையை மனம் தன்னால் நினைவு கூர்ந்தது. இரண்டாவதாக,கொற்றவை உபாசனையில் ஈடுபடும்,தேவியின் அழகில், தேவியையே காதலிக்கும் அந்த இளம்பூசாரியின் கதை.

இவை போன்ற சில பகுதிகள் இருந்தும் நாவல் ஒரு முழு நிறைவைக் கொடுக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம், மேலே குறிப்பிட்ட சில இடங்களைத் தவிர, இதில் நேரடியான அனுபவங்களை முன்வைக்கும், அல்லது பிறரது அனுபவங்களை புனைவின் வழியே ஆசிரியர் தம் அனுபவங்களாக மாற்றி நமக்கும் கடத்தும் இடங்கள் அரிதாகவே இருப்பது. முன்னரே நிலைப்பாடுகள் எடுக்கப்பட்ட பிரச்னைகளைக் குறித்து, அந்த நிலைப்பாடுகளை பிரதிபலிக்கும் பாத்திரங்களைக் கொண்டே கதை சொல்லப்படுவது அலுப்பூட்டுகிறது. ஒரு பாத்திரம் தன் சொந்த வாழ்க்கை அனுபவம் மூலமாக வரலாற்றின் முன் நிற்கும் தருணங்கள் அன்றி (எ.கா: பதினெட்டாவது அட்சக் கோடு ), வரலாற்றின் தருணங்களுக்கான படைப்பாளிகளின் அரசியல் நிலைப்பாடுக்குக்கேற்ப முன்னரே தயார் செய்யப்பட்ட எதிர்வினைகளின் வகைமாதிரிகளாக பாத்திரங்களை படைத்திருப்பதும், இந்தச் சம்பவங்களில் கதாசிரியர்கள் எந்தப் தரப்பின் பக்கம் நிற்கிறார்கள் என்பது நன்றாகவே புலப்படுவதும், அவை ஒரு போலியான முற்போக்கு, இடதுசாரி அரசியல் சரிநிலைகளை அனுசரித்தே எழுதப்பட்டுள்ளதும்தான் இந்த அலுப்புக்கான முக்கிய காரணங்கள்.

இதற்கு ஒரு சரியான உதாரணமாக, சைவ வைணவ சமயங்களுக்கும், சமண பௌத்த சமயங்களுக்குமான பூசல்கள் பற்றிய இடங்களையம், பின்னர் நாளந்தா பல்கலைக்கழகத்தில், புத்த பிக்குகள் மீதான தாக்குதல் குறித்த சம்பவங்கள் விவரிக்கப்படும் விதத்தையும் சொல்லலாம். சமணர்கள், சைவர்கள், வைணவர்கள் பற்றிய பூசல்களை எழுதுமிடத்து, சைவர்களால் சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள் என்பதை எந்தத் தயக்கமுமின்றி தீர்மானமாக புனைவுக்குள் கொண்டுவரும் கதாசிரியர்கள், நாளந்தா பல்கலைக் கழக புத்த பிக்குகளின் படுகொலைகள் வர்ணிக்கப்படும் இடத்தில், அந்தப் படுகொலைகளை புரிந்தவர்கள் யார் என்ற எந்த அடையாளங்களையும் குறிப்பிடாமல் வாட்களையும் பிற கொலைக்கருவிகளையும் மட்டுமே குறிப்பிடும்போது இந்தப் புனைவில் எவ்வகையிலும் நம்பிக்கை கூடுவதில்லை. இத்தனைக்கும், இரண்டாவது சம்பவத்தை நிகழ்த்தியது, குத்புதீன் அய்பக்கின் தளபதி முஹம்மது பக்தியார் கில்ஜி என்பது வரலாற்று ஆவணங்கள் வழியாக தெளிவான ஒன்று. ஆனால், சமணர்கள் கழுவேற்றப்பட்ட நிகழ்வோ, இன்னமும்கூட சற்று உறுதிப்படுத்தப்படாத ஒன்று. இவற்றில், நாளந்தா சம்பவத்தை நிகழ்த்தியர்வர்களைப் பற்றிய அடையாளமற்ற விவரிப்பு, படைப்பாளிகளின் நேர்மையை கேள்விக்குள்ளாகிறது. இதில் விவரிக்கப்படும், வரலாற்று சம்பவங்களெல்லாம், வரலாற்றில் ஒரு மேலோட்டமான அறிமுகமுள்ள, அன்றாடம் செயதித்தாள் படிக்கும் ஒரு சுமாரான வாசகனுக்கே அறிமுகமானவை.

ஒரு நல்ல படைப்புக்கு மொழி வளமும் புதுமையான கதை கூறுமுறையும் இருந்தால் மட்டும் போதாது என்பதையும் இது உறுதிபடுத்துகிறது. வரலாறு மற்றும் சமூகச் சூழலைக் களமாய்க் கொண்ட புனைவுகளில் கதாபாத்திரங்களின் படைப்பில் நம்பகத்தன்மையும் சம்பவங்களின் நிகழ்வில் யதார்த்தமும் முக்கியமான அம்சங்கள் என்றும் சொல்ல வேண்டும். இதில் அவை முழுமையாக வளர்த்தெடுக்கப்படவில்லை. கட்டுரைகளில் சொல்லிவிடக் கூடிய விஷயங்களை புனைவாக மாற்றுவதில் உள்ள தோல்வி இதில் தெரிவது வருந்தச் செய்கிறது.

  சாகர மேகலை – பானுமதி. ந

பானுமதி. ந

மாலினி சிரித்துக் கொண்டாள். நீல வண்ணத்தில் அவள் அணிந்திருந்த ஒளியாடையில் ஆங்காங்கே நீல இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. நீலோத்பலம், செவ்விய அவளது வலது மேற்கரத்தில் பாதி இதழ் விரித்து தாமரையில் மலர்ந்த அல்லி என இருந்தது. மயிலின் நீலப் பீலி மேற்புர இடக்கையில். நீல வைரங்கள் மின்னும் கங்கணம் அணிந்த கீழ் வலக்கரம் மடியில் ஆடையின் மடிப்பில் மேல் கிடந்தது. காகச் சிறகுகளால் செய்யப்பட்ட உருட்டு மாலை கீழ் இடக்கரத்தில் இருந்தது. காலம் அணுகா யௌவனத் தோற்றம். தன் மாளிகையில் அந்த இளைஞன் இருப்பதை விஷ்வகோசத்திடம் அவள் தெரிவிக்கவில்லை. ஏன் என அவளுக்கே விளங்கவில்லை.

அவன் இன்னமும் மயக்கத்தில்தான் இருக்கிறானா என்றும் அவளுக்கு ஐயம் இருந்தது.

காசினி வந்து வணங்கினாள். அவர்களின் மொழியில்,’அவன் முனகுகிறான்’, என்றாள்.

இயல்பாக தன் இரு கரங்களை மறைத்துக்கொண்டு, அவனைத் தன் முன் நிறுத்தும்படி கட்டளையிட்டாள்.

அவனைப் பார்க்கையில் எழும் அந்த உணர்விற்கு என்ன பெயர்? அவனுக்கு ஒரு ஒளியிருக்கை அமைத்து அதில் அவனைக் கட்ட வேண்டியிருந்தது.

அவன் அவளைப் பார்ப்பதும், தவிர்ப்பதுமாக இருந்தான். இவர்களின் ஒளியாடையில் அவன் இவர்களில் ஒருவனாகத்தான் தெரிந்தான். ஆனால், இத்தனை இக்கட்டிலும் அவன் கண்கள் ஒளியுடன் இருப்பதையும், அலைபாய்ந்து கொண்டிருப்பதையும் அவள் கவனித்தாள்.

“யார் நீ? எங்கிருந்து வருகிறாய்?” அவன் அதிர்வதும், மகிழ்வதும் கட்டப்பட்டிருந்த அந்த நிலையிலும் தெரிந்தது.

“தமிழ் தெரியுமா, உங்களுக்கு? நான் விவேகானந்தன்”, என்றான் இவன் மிக மெல்லிய குரலில்.

மாலினி புன்னகைத்தாள். ”எப்படி வந்தாய்? ஏன் வந்தாய்? அது என்ன ஊர்தி? உன்னை மட்டும்தான் பார்த்தேன். மானுடர்கள் இறக்கும் பிரிவினைச் சேர்ந்தவர்கள். உண்மையைச் சொல், இங்கே உனக்கென்ன வேலை?”

“நான் ஆய்வின் பொருட்டு வந்தவன். நாங்கள் எங்கள் அனுமானத்தின்படி ‘சூன்யவாத நிலையில்’ ஏதேனும் கோள் இருக்குமா எனத் தேடி வான மண்டலத்தைக் கடந்து அந்த ஊர்தியின் மீது ஏறி நால்வர் என  வந்தோம். மூவர் எஞ்சவில்லை. எங்கள் ஊர்தியும் பழுதுபட்டு உங்கள் கோளின் அப்பகுதியில் விழுந்தது.”

“அது உன் உலகிற்கு உதவாது”

“இல்லை. காலத்தை, வெளியை முற்றாக அறிய வேண்டும். எங்கள் வாழ்வின் எல்லைகள் விரிந்தாக வேண்டும். அறிவும் ஆற்றலும் அனைவருக்கும் பொதுவானது. காலத்தை, வெளியை ஒருமித்த உங்கள் கணிதம் தேடி வந்தோம். நான் ஒருவன் மட்டுமே இருக்கிறேன்.”

“எதை வைத்து நாங்கள் காலத்தை, வெளியை ஒருமித்தவர்கள் என்கிறாய்?”

‘நீங்கள்தானா அது என்பது எனக்கு அறுதியாகத் தெரியாது. ஆனால், நீல வண்ண உங்கள் நீள்சுழல் பாதையில் ”கால சக்ர பேதத்தை” நான் யூகித்துக்கொண்டேன்”

இப்பொழுது காசினி சிரித்தாள். ”உங்கள் ‘காசினி ஆர்பிடர்’ சனி கோளைச் சுற்றி வருகிறது என  அறிவோம். அதனாலெல்லாம் நீங்கள் காலசக்ர பேதத்தை அறிய முடியாது.”

“நன்றி. இது நீள்வட்டப் பாதையின் நீல்வட்ட வெளியென சொன்னதற்கு,” என்றான் விவேகானந்தன்.

“உன்னால் அதை அறிந்து கொள்ள முடியாது. அப்படியே தெரிந்து கொண்டாலும் உன் உலகிற்கு நீ திரும்பினால் அல்லவா அதைப் பற்றி பேச?”என்று விஷ்வாவின் குரல் கேட்டது. மாலினி திடுக்கிட்டாள். அவளையும், காசினியையும் அறிவொளி நம்பி அமைதியாக இருக்கும்படி சைகை செய்தான்.

“என் உலகிற்கு நான் திரும்பிச் செல்லாவிடில் மற்றொருவன் வருவான், மேலும் ஒருவன்… மேலும் ஒருவன். அவ்வளவு  எளிதாக  விட்டுவிட மாட்டோம். நம் உரையாடல் இந்த நேரம் இரகசியமான ஓரிடத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறது. எங்களின் வேத ஜோதிடம் ஒட்டி முத்துஸ்வாமி தீஷிதர் எழுதிய ’திவாகரதனுஜம் சனைச்சரம்’ என்ற யதுகுல காம்போதி பாடலில்’ கால சக்ர பேதம்’ செய்வதில் சனி கோளிற்கு இருக்கும் மகத்துவம் பற்றிச் சொல்லியிருக்கிறார். எங்கள் காசினி சுற்ற, ஹூயுஜன்ஸ் அனுப்பும் புகைப்படங்கள் எங்களுக்கு எல்லாவற்றையும் சொல்லிவிடும்” என்றான் விவேகானந்தன்.

“அப்படியா? எப்படியும் நீ மீளப்போவதில்லை. அறிவொளி நம்பியும், மாலினியும் வெவ்வேறு கோள்களிலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டு  பின்னர் எங்கள் குடிமக்கள் ஆகிவிட்டனர். நீ தானாகவே வந்திருக்கிறாய். உன்னையும் எங்கள் குடிமகன் எனச் செய்யப்போகிறேன்” என்ற விஷ்வா,‘நம்பி, நம் அனைத்து உயிரிகளும் இனி இயங்கலாம், தடையில்லை. நாழி ஒன்றில் இவன் ஏழாம் உயிரினமாக மாற்றப்படுவான். ஏற்பாடுகள் செய்யுங்கள்”

‘விஷ்வா, இப்பொழுது நாழி பதினெட்டுதான் ஆகிறது’

“ஆறு நாழி போதும்”, என்றான் விஷ்வா. அங்கிருந்து செல்கையில் அவன் கண்கள் மாலினியையும், நம்பியையும் விரைவாக சந்தித்து மீண்டன.

“உன்னையும், காசினியையும் விஷ்வா விட்டு வைக்க மாட்டான். ஏன் இப்படிச் செய்தீர்கள்? இன்று காலை முதல் எல்லாமே இங்கு சரியாக இயங்கவில்லை. ஒளி இருக்கையோடு இந்தப் பையனை விஷ்வாவின் இடத்திற்கு அனுப்பிவிடு. என்ன யோசிக்கிறாய்?”என்றான் நம்பி

“ஒன்றும் இல்லை, நம்பி. இன்னம் ஆறு நாழி இருக்கிறதே. எப்படியும் நம்முடன்தானே இவன் இனி இருக்கப் போகிறான். நானும், காசினியும் இவனைப் பார்த்தபோது இவன் உணர்வோடில்லை. சரி செய்தபிறகு விஷ்வாவிடம் சொல்லலாம் என இருந்துவிட்டோம். நான் பார்த்துக் கொள்கிறேன்.”

“இன்று நடந்ததை நீ அறியமாட்டாய்.”

“முழுதும் பார்த்தேன், நம்பி, நீ போ, விஷ்வா தேடப் போகிறான்”

நடந்த அனைத்துமே அவள் அறிவாள். ஒளியலைகளால் ஆன இருக்கையில் விஷ்வகோசம் அமர்ந்திருந்தான். அன்று அவர்களுக்குள் எண்ண அலைகளை இயக்கும் நாள் இல்லை. அனைத்தும் ஒத்திசைக்கப்பட்ட நியதியில் தான் நடந்து கொண்டிருக்கும். எண்ணற்ற நுண்ணுயிரிகளால் ஆன ஒளி நெசவு இது. இங்கே ஏழாம் எண்களிலிருந்து பதினைந்தாம் எண்கள் வரை பகுத்துப் பிரிக்கப்பட்ட உயிரிகள் அனைத்தையும், அந்த நுண்ணுயிரிகளே வழிநடத்தும். அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமாய் இருக்கின்றன.

ஏழாம் உயிரினம் தன் வேலையைச் செய்யும் இடமே அந்தக் கடல் பகுதியில்தான். ஒளிக் கோளின் கதிரனைத்தையும் அதுவே வாங்கிக்கொள்ளும். இந்த மண்டலத்தில் அதிக எண்ணிக்கையில் இயங்கும் அது, தன் இனத்தில் சரியாகச் செயல்படாதிருக்கும் பகுதியை புதுப்பித்துக் கொண்டுவிடும். தன் எண்ணிக்கைகள் குறையாது பார்த்துக் கொள்ளும்.

எட்டாம் உயிரினம் தன்னிடம் முன் உயிரினம் கொடுத்துக் கொண்டேயிருக்கும் கதிர்களை அணுக்களாக மாற்றி ஒன்பதாம் உயிரியிடம் கொடுக்கும். இந்த செயல்பாடுகளில் இதுவரை பிழை ஏற்பட்டதில்லை

ஒன்பதாவது, அணுக்களைப் பகுக்கும். சில கருந்துளைகளை அடையாளம் கண்டு அதை பத்தாவதற்கு அனுப்பிவிட்டு, எதிர்மின்னிகளைச்  சேமிக்கும்.

கருந்துளைகள் வரப் பெற்றவுடன் அவற்றை எடையற்ற சிறு துகள்களாக மாற்றி சுற்றியுள்ள கடலின் அமைதிக்குள் பத்தாவது செலுத்திவிடும். இந்தத் துகள்கள் கோளின் மைய விசை அழுத்தத்திற்கு ஏற்ப உருவாக்கப்படும்.

பதினொன்றாவது உயிரினம் இவை அனைத்தையும் கண்காணிக்கும்.

பன்னிரண்டாவது செயல் அறிக்கைகளை நுண் ஒளியலைகளாக மாற்றி அத்தனை உயிரினமும் அறிந்து கொள்ளச் செய்துவிடும்.

பதின்மூன்றாம் உயிரினம் கடலின் காவல் பொறுப்பு. முக்கியமாக கடலில் செலுத்தப்பட்ட கருந்துளைகள் மறு ஆணை வரும் வரை பாதுகாப்பாக இருக்கின்றனவா என கண்காணிக்கும். மேகங்கள் போன்ற சில சஞ்சரிப்புகளால் ஒளிக் கோளிலிருந்து ஒளி தடைபடும் நிகழ்வுகளில் சேமிக்கப்பட்ட எதிர்மின்னியிலிருந்து நுண் ஒளியலைகளை இது அமைக்கும்.

பதினான்காம் உயிரினம் நேர்மின்மம் தங்கும் உயிரி. அதன் செயல்பாடுகள் ஒளியலைகளால் புனையப்பட்ட இவ்விடத்தில் வெளியையும் காலத்தையும் ஒருங்கே சட்டகமென இழுத்து, செயல் புதைந்த பொருளிலிருந்து விசையை வெளிக் கொணர்ந்து அனைத்து உயிரியினையும் இந்தக் கோளில் இயங்கச் செய்யும்.

பதினைந்தாம் உயிரினம் விஷ்வகோசம். அவன்தான் ஒன்றிலிருந்து  ஒவ்வொன்றும் இருநூறு ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஐந்து கோள்களின் நிலவுகளுக்குச் சென்று வருபவன். நொதுமின்னியையும் லெப்டான்களையும் அறிந்தவனும் அவனே. ஒளியலைகள் பயணிக்கும் வேகம் அசாதரணமானது.ஆனாலும், அந்த ஐந்து கிரகங்களும் கொண்டிருக்கும் கோள் விசையில் மாறுபாடு உண்டு. அதையொட்டியே அதனதன் நிலவுகளின் மாறுபட்ட சுழற்சியும் அமையும். அதையும் அவன் கணக்கிட வேண்டும். ஒவ்வொரு கோளிலும், அதனைச் சுற்றியுள்ள நிலவுகளிலும் அதனதன் தூசி அடுக்குகள் கணத்திற்கு கணம் மாறும்; அதைக் கணித வடிவங்களாக பல்காலம் பயின்று அந்த தூசைக் கடந்து உள் செல்லும் வடிவமைத்தவன் அவன். தூசியைக் கடப்பதற்கு மட்டும்தான் அது.

நிலவுகளின் நீள்வட்டப் பாதையில் உள்ளே நுழைகையில் அதன் ஈர்ப்பு விசைக்கேற்ப ஒளி அலை ஊர்தியை மாற்றி அமைக்க வேண்டும்.

இந்தக் கோளில் ஒரு பக்கத்தில் கருமை என்பது கிடையாது. ஒளிக்கோள் வழங்கும் வெளிச்சம் ஒரே சுழற்சிக்கு ஏற்ப  நடைபெறுவதால் இரவு நிகழும் பகுதி இவர்கள் அறியப்படாத ஒன்றாகவே இருக்கிறது.

ஒளி அலை இருக்கையை விஷ்வகோசம் நகராமல் இருக்கும் பொருட்டு அமைத்தான். பதினான்காவது உயிரியை எண்ண அலைகளுக்கு வருமாறு அழைப்பு விடுத்தான். ஏழு முதல் அனைத்துமே எண்ணக் கதம்ப உரையாடலில் இணைந்தது கேட்டு வியந்தான்.

“ஒளிக் கோளின் கதிர்களை வாங்கிக் கொண்டிருக்கையில் மிக நூதனமான ஒரு நிகழ்வினை என் திரையில் கண்டேன். இருளென நாம் கொண்டிருக்கும் பகுதியில் நாம் எப்போழுதோ பார்த்த புதக்கோளின் ஒளிர் பச்சையில் ஒரு ஊர்தி வரும் அதிர்வுகளை என் திரை காட்டிற்று. இதுவரை அறியாத ஒன்று. நான் பதினான்கிடம் தெரிவித்தேன். ஒளிக் கதிர்களை  வாங்குவதை அவர் அறிவுரையின் பேரில் நிறுத்தி வைத்துள்ளேன்”, என்றது ஏழாம் உயிரி.

“கதிர்கள் இல்லாததால் அணு மாற்றம் செய்து அதை ஒன்பதாம் உயிரிக்கு அனுப்ப இயலவில்லை”, என்றது எட்டாம் உயிரி.

“அணு பகுத்தல் நடைபெறவில்லை” இது ஒன்பதாம் உயிரி.

“கருந்துளைகள் வந்தால் அல்லவோ கடலுக்குள் செலுத்த?” என்றது பத்து.

“நிகழாத செயல்களை எப்படிக் கண்காணிப்பது?” பதினொன்றின் கேள்வி.

“செயல் அறிக்கைகளை நுண் ஒளியலைகளாக்கும் நான் திகைத்துப் போயிருக்கிறேன்”, பன்னிரண்டு கவலைப்பட்டது.

“கருந்துளைகள் பாதுகாப்பாக இருக்கின்றன. சேமிக்கப்பட்ட எதிர்மின்னிகளிலிருந்து வெளிப்படும் ஒளி அலைகளின் உற்பத்தி குறையவில்லை”. நல்ல தகவல் சொல்லிற்று  பதின்மூன்று.

“பதினான்காம் உயிரியே, ஏழாம் உயிரி முதல் அனைத்தும் உணர்த்தும் இவ்விஷயம் நாமே அறியாத ஒன்று. அங்கே எது வரக்கூடும்? நாம் எவ்வாறு செல்வது?” என்றான் விஷ்வ கோசம்.

‘இதுவரை நிகழாத ஒன்று. நாம் யோசித்துத்தான் செயல்படவேண்டும். இந்தப் பால்வெளியில் யாரும் நம்மை நாடி வந்ததில்லை; நாமாகக் கொண்டு வந்தவர்களைத் தவிர. நம்முடைய விழிப்புணர்வை பரிசோதிக்க கடலை மேகலையெனக் கொண்ட அன்னையின் ஆடலா, அல்லது வேறு ஏதாவதா, புரியவில்லையே’,என்றார் அறிவொளி நம்பி.

இந்தக் காட்சியை விவேகானந்தனுக்கு மாலினி போட்டுக் காட்டினாள். ”ஏன் எனத் தெரியவில்லை, உன்னை எனக்கு மிகப் பிடித்திருக்கிறது. உன்னுடன் நான் உன் உலகிற்கு வர முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஆனால், விஷ்வா அதை அனுமதிக்கமாட்டான். அவனுக்கு நிகரான அவன் விரும்பும் ஒரே சக உயிரி நான். என்னை இழக்க நேர்ந்தால் அவன் உன்னை உருவற்று அழித்துவிடுவான். இப்பொழுது அவன் உன்னை விட்டுச் சென்றிருப்பதே பெரிய விஷயம். எப்படியும் உன்னுடன் நான் நட்பு கொள்ள அவன் விடமாட்டான். உன்னை ஏழாம் உயிரியாகச் செய்தாலும் நான் உன்னிடம் நட்புடன் இருப்பேன் என்பதை அவன் அறிவான். உன்னை அழித்தாலோ எப்பொழுதும் அவனுக்கு நான் உடன்படமாட்டேன் என்பதும் அவனுக்குத் தெரியும். உன்னை நானே தப்புவித்தால் பழி அவன் மேல் விழாது.  அது அவனது திட்டம். போகும் பாதையில் உனக்கு மரணம் கூட ஏற்படலாம். ஆனால், எனக்காக உன்னை விட்டுவிட்டு தனக்காக என்னை மன்னித்து விடுவான்”.

இதை உள்வாங்கவே விவேகானந்தனுக்கு சில வினாடிகள் பிடித்தன.

“உனக்கு சில இரகசியங்கள் சொல்கிறேன். இந்தக் குளிகை உன் மூளையின் மேல் பரப்பில் வைத்துத் தைக்கப்படும். இது பயோ- கம்பெடபில். சரியாக நான்கு மாதங்களில் உன் குருதியிலேயே இது உயிர் பெற்று நீ விரும்பும் வேகத்தில் கால நேரங்களை இயக்கும். அதனால் நீங்கள் உலகின் அதி வேக சுழற்சியில் பல நூற்றாண்டு கடந்து செல்வீர்கள். அதே நேரம் மற்ற கண்டங்கள் மிகப் பின்தங்கிய நிலையில் இருக்கும். இருவித செயல்பாடு உண்டு இதில். என் ‘பாட்கள்’ உன் ஊர்தியை சரி செய்து நுண் கதிர் வேகத்தில் உன் உலகை நோக்கிச் செலுத்திவிடும்.”

“உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன்? எனக்காக எத்தனை தியாகம்? உங்களுக்கு என் பொருட்டு ஆபத்து எனத் தோன்றுகிறதே?” “

“ஆம், ஆனால் விஷ்வா என்னை இழக்க மாட்டான். ஆனால், தண்டிக்கக் கூடும். அதிலிருந்தும் என்னை அவனே மீட்பான்.”

“என் பொருட்டு நீங்கள் ஆபத்தைச் சந்திக்க வேண்டாம். அவர் என்னை இந்தக் கோளின் வாசியாகத்தானே மாற்றுகிறார்.”

அவள் சிரித்தாள். “மனிதனாக இருந்தும் சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருப்பவர்களை நீ அறியவில்லையே”

“இருந்தாலும்..”

“எனக்காக ஏன்  என்றுதானே கேட்க வருகிறாய்?”

“……”

“நான் ஜூவாலமுகீ, செவ்வாய்க் கோளில் இருந்தபோது. அங்கே செந்தணல், இங்கே நீலாக்னி. உங்கள் ஜோதிட நூல் செவ்வாயை பூமியின் குமாரன் என்று சொல்கிறது. நீ பூமைந்தன். பூமி உனக்குத் தாய் என்றால் நான் அவள் பெயர்த்தி”

அவன் அசந்து போனான். சனியும், செவ்வாயும் பகையாளிகள் என அவன் அப்பா சொன்னது நிழலாடியது. ’ஜூவால மாலினி’ என நினைத்துக் கொண்டான்.

“கிளம்பும் சமயம். விரைவாக எழும்பு. என்றோ ஒரு நிகழ்வில் நாம் மீண்டும் சந்திக்கவும் கூடும்”

 

 

 

 

அவர்களின் பெயர்களை அவள் திரும்பப் பெறுகிறாள் – அர்சுய்லா லெ ஃக்வின்

 

ஆங்கிலத்திலிருந்து தமிழில்: ஆகி

தத்தம் பெயர்களை ஒப்புக்கொண்டு எப்படி அவர்கள் இத்தனை காலம் மெத்தனமாக இருந்தார்களோ, அதே மெத்தனத்துடன் அவர்களில் பெரும்பாலானோர் பெயரற்றிருப்பதையும் ஏற்றுக்கொண்டனர். திமிங்கலங்கள், ஓங்கில்கள், கடல்நாய்கள் மற்றும் நீர்நாய்கள் அவர்களுக்கே உரிய நேர்த்தியுடனும் ஆர்வத்துடனும் ஒப்புதலளித்து தமது தனிமத்தினுள் சறுக்கிச் செல்வதுபோல் பெயரற்ற நிலைக்குள் செல்வதை ஏற்றுக்கொண்டனர். எனினும் கவரிமாக்களின் ஒரு பிரிவினர் ஆட்சேபித்தனர். “கவரிமா” என்பது சரியான ஒலிப்புமுறை எனவும் தங்கள் இருப்பை அறிந்திருந்த எவரும் தங்களை அவ்வாறே அழைப்பதாகவும் அவர்கள் கூறினர். நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான வெவ்வேறு பெயர்களால் பாபேலின் காலந்தொட்டு அழைக்கப்பட்ட, நீக்கமற நிறைந்துள்ள உயிரினங்களான எலிகளையும் தெள்ளுகளையும் போலல்லாது கவரிமாக்கள் மெய்யாகவே தங்களுக்கு ஒரு பெயர் உண்டென்று கூறிக்கொள்ளலாம் என்றும் அவர்கள் கூறினர். கோடை முழுவதும் இந்த விடயத்தை விவாதித்தனர். மற்றவர்களுக்கு இந்த பெயர் பயனுள்ளதாயிருக்கலாம் ஆயினும் கவரிமாக்களின் பார்வைக் கோணத்திலிருந்து காண்கையில் இது மிகவும் தேவையற்றதாகையால் இதை அவர்கள் ஒருபோதும் உச்சரித்ததேயில்லை ஆதலால் இதை கைவிட்டு விடலாமென்று மன்றத்தின் முதிய பெண்கள் இறுதியில் ஒப்புக்கொண்டனர். அவர்கள் தங்களின் தர்க்கத்தை இந்த கோணத்திலிருந்து தங்கள் காளைகளிடம் முன்வைத்தபோது முழு கருத்தொருமைப்பாடு கடுமையாக தொடங்கிய முன்பருவ பனிப்புயல்களால் மட்டுமே காலதாமதமாயிற்று. வெதுவெதுப்பு தொடங்கியவுடன், அவர்களின் உடன்பாடு எட்டப்பட்டு “கவரிமா” என்ற பெயரிடல் பெயரளித்தவரிடம் திருப்பப் பட்டது.

குதிரைகளை அவர்களின் சொற்களஞ்சியத்திலிருந்தே டீன் ஸ்விஃப்ட் பெயரிட முயற்சித்து அதிலவர் தோல்வியுற்ற பிறகு, இவ்வீட்டு விலங்குகளில் வெகு சிலருக்கே எவர் தம்மை எங்ஙனம் அழைக்கின்றனர் என்பதைப் பற்றி அக்கறை இருந்தது. மாடுகள், செம்மறியாடுகள், பன்றிகள், கழுதைகள், கோவேறு கழுதைகள் மற்றும் வெள்ளாடுகள், இவர்களோடிணைந்து கோழிகள், வாத்துக்கள் மற்றும் வான்கோழிகள் என எல்லோரும் தமது உரிமையாளர் என்று அவர்கள் எவரெவரை கருதினார்களோ அவர்களிடம் தங்கள் பெயர்களை ஆர்வத்துடன் திருப்பியளிக்க உடன்பட்டனர்.

சிற்சில பிரச்சினைகள் செல்லப்பிராணிகள் விடயத்தில் தோன்றியது. எதிர்பார்த்தவண்ணம், எல்லா பூனைகளும் தமக்கு சுயமாக சூட்டப்பட்ட, உச்சரிக்கப்படாத, வருணிக்கவியலாத தனிப்பட்ட பெயர்கள் தவிர வேறெந்தப் பெயரும் இருந்ததை உறுதியுடன் மறுத்தனர். எலியட் என்ற கவி கூறியதுபோல் அவர்கள் நீண்ட நேரமெடுத்து சிந்தித்த பெயர்களிவை—ஆயினும் எந்தவொரு சிந்தனையாளரும் தாங்கள் சிந்திப்பது தமது பெயர்களைத்தான் என்று ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லை, மேலும் அவர்களால் உற்று நோக்கப்பட்ட பொருள் உண்மையில் அந்த முழுநிறைவான, அல்லது பிளேட்டோனிய, சுண்டெலியாக இருக்கலாமென்று பார்வையாளர்களில் சிலர் சந்தேகித்துள்ளனர். எது எவ்வாறாயினும் அது இப்போது முக்கியத்துவமற்றது. நாய்களுடன், மேலும் சில கிளிகள், காதற்பறவைகள், அண்டங்காக்கைகள் மற்றும் மைனாக்களுடனும், சிரமம் எழுந்தது. இந்த வாய்மொழி திறன்மிக்க நபர்கள் தமது பெயர்கள் தமக்கு முக்கியமானவை என்று வலியுறுத்தினர், மேலும் அவற்றை விட்டகல முற்றிலும் மறுத்துவிட்டனர். ஆனாலும் இது உண்மையில் தனிப்பட்ட தெரிவு குறித்த பிரச்சினையே, எவரேனும் ரோவர், ஃப்ரூஃப்ரூ, காகா கிகீ அல்லது குகூஎன்றுகூட தனிப்பட்ட உணர்வினடிப்படையில் அழைக்கப்பட விரும்பினால் அவர்கள் அவ்வாறு தாராளமாக அழைக்கப்படலாம் என்று புரிந்துகொண்ட தருணத்தில், ”பூடுல்”, ”கிளி”, “நாய்”, ”பறவை” போன்ற இனம் சார்ந்த சிற்றெழுத்து (அல்லது, ஜெர்மானிய உயிரினங்கள் சம்பந்தமாக, பேரெழுத்து) பெயரிடல்களையும், இருநூறாண்டுகளாக அவர்களை வாலில் கட்டப்பட்ட தகரடப்பாக்களைப்போல் பின் தொடர்ந்த லின்னேயசின் அனைத்து அடைகளையும் விட்டகல அவர்களில் ஒருவரேனும் சிறிதும் ஆட்சேபிக்கவில்லை.

பூச்சிகள் அகன்ற மேகங்களில் நிலையற்ற அசைகளின் திரள்களில் சலசலத்தும் கொட்டியும் ரீங்கரித்தும் படபடத்தும் ஊர்ந்தும் துளையிட்டும் தங்கள் பெயர்களை விட்டகன்றனர்.

கடல் மீன்களை பொருத்தமட்டில், அவர்களின் பெயர்கள் அவர்களிடமிருந்து சமுத்திரங்களெங்கும் கணவாய் மீனின் மங்கலான கரிய மை போல அமைதியாக பரவிச் சென்று சுவடே தெரியாமல் நீரோட்டத்தில் விலகிச் சென்றன.

…………………………..

ஒருவரும் இப்போது பெயரை திரும்பப் பெறுவதற்கு மிஞ்சவில்லை, எனினும் அவர்களில் யாரேனும் நீந்துவதை, பறப்பதை, தவ்வுவதை, பாதையில் குறுக்கேயோ என் மேலேயோ தவழ்வதை, இரவில் என்னை பின்தொடர்வதை அல்லது பகலில் சற்று நேரம் என்னுடன் வருவதை நான் காண்கையில், எத்துணை நெருக்கமாக அவர்களை நான் உணர்ந்தேன். எனக்கும் அவர்களுக்கும் இடையில் அவர்களின் பெயர்கள் ஒரு பெரிய தடைபோல் நின்ற பொழுதில் எனக்கு தோன்றியதைக் காட்டிலும், இப்போது அவர்களை பற்றிய என் அச்சமும் என்னை பற்றிய அவர்களின் அச்சமும் ஒரே அச்சமாகும் அளவுக்கு மிக மிக நெருக்கமாக, மிகவும் அருகிலிருந்தனர். மேலும் நம்மில் பலர் உணர்ந்த கவர்ச்சி, அதாவது ஒருவரை இன்னொருவர் வெதுவெதுப்பாக வைத்திருப்பதற்கான, ஒருவரின் வாசனையை இன்னொருவர் முகர்வதற்கான, ஒருவர் இன்னொருவரின் குருதியை அல்லது சதையை சுவைப்பதற்கான, ஒருவரின் செதில்களை, தோலை, இறகுகளை அல்லது மென்மயிர்களை இன்னொருவர் தொட்டுணர்வதற்கான, உரசிக்கொள்வதற்கான அல்லது வருடுவதற்கான இச்சை—அந்தக் கவர்ச்சி இப்போது அச்சத்துடன் இரண்டறக் கலந்துவிட்டது, வேடரை இரையிலிருந்தும் உண்ணுபவரை உணவிலிருந்தும் பிரித்தறிய இயலவில்லை.

இதுவே நான் சற்றேறக்குறைய முன்நோக்கிய விளைவு. நான் எதிர்பார்த்ததைவிட இது சற்று ஆற்றல்மிக்கதாக இருந்தது, ஆனாலும் என்னால் இப்போது என் மனசாட்சிக்கு துரோகமிழைக்காமல் எனக்காக ஒரு விதிவிலக்கை ஏற்படுத்திக் கொள்ள இயலவில்லை. நான் தயக்கமின்றி பதட்டத்தை தள்ளி வைத்துவிட்டு, ஆதாமிடம் சென்று, ”நீரும் உம் தந்தையும் இதை எனக்கு இரவல் கொடுத்தீர்கள்; உண்மையில், எனக்கு அதை அளித்தீர்கள். அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது, ஆனால் இப்போதெல்லாம் அது சரிபட்டு வருவதாகத் தெரியவில்லை. ஆனாலும், உண்மையாகவே அது பயனுள்ளதாக இருந்தது, மிக்க நன்றி!” என்று கூறினேன்.

ஒரு பரிசை எரிச்சல் தொனிக்காமலோ நன்றியற்ற தன்மை வெளிப்படாமலோ திருப்பிக் கொடுப்பதென்பது கடினம், மேலும் என்னைப் பற்றி அந்த மாதிரியான ஒவ்வாதவொரு மனப்பதிவை ஏற்படுத்திவிட்டு நான் அவரை பிரிந்து செல்ல விரும்பவில்லை. நடந்ததென்னவோ, அவர் கவனமில்லாமல், “அதை அங்கே வைத்துவிடு, சரியா?” என்று மட்டும் கூறிவிட்டு, அவர் என்ன செய்து கொண்டிருந்தாரோ அதை மீண்டும் செய்யத் தொடங்கிவிட்டார்.

நான் இந்த காரியத்தை ஏன் செயல்படுத்தினேன் என்பதற்கு உரையாடல் எங்களிடையே எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதும் ஒரு காரணம், ஆனால் எப்படி இருந்தபோதிலும் நான் சற்று கைவிடப்பட்டதாகவே உணர்ந்தேன். எனது தீர்மானத்தை தக்க வைத்துக்கொள்ள நான் ஆயத்தமாகவே இருந்தேன். மேலும் ஒருவேளை இதை கவனித்தபின் அவர் வருத்தப்படலாம், உரையாட முன்வரலாம் என்று எண்ணியிருந்தேன். சில பொருட்களை இங்குமங்கும் நகர்த்தி வைப்பதும், எதையோ செய்வதுமாய் பொழுதை போக்கிக் கொண்டிருந்தேன், ஆனாலும் அவர் பிற எதையும் கவனிக்காமல் என்ன செய்து கொண்டிருந்தாரோ அதை தொடர்ந்து செய்தவண்ணமிருந்தார். இறுதியாக, “நன்று, அன்பே, விடைபெறுகிறேன். தோட்டத்தின் சாவி திரும்பக் கிடைத்தாலும் கிடைக்குமென்று நம்புகிறேன்,” என்று கூறினேன்.

பாகங்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தவர் திரும்பிப் பார்க்காமல், “சரி, அன்பே, நல்லது. இரவு சாப்பாடு எப்போது?” என்றார்.

”உறுதியாக எதையும் சொல்வதற்கில்லை,” என்றேன் நான். ”இப்போது நான் போகிறேன். அவை…” என்று சற்று தயங்கி நின்றுவிட்டு, பின் இறுதியாக, “அவர்களுடன், தெரியுமல்லவா,” என்று கூறிவிட்டு வெளியே சென்றேன். என் தரப்பை விளக்கிச் சொல்வதென்பது எவ்வளவு கடினமான ஒன்றாக இருந்திருக்குமென்பதை உண்மையில் அக்கணத்தில்தான் நான் உணர்ந்தேன். எல்லாவற்றையும் வழங்கப்பட்டதாக எடுத்துக்கொண்டு என்னால் முன்னைப்போல அரட்டையடித்துக் கொண்டிருக்க முடியவில்லை. குளிர்பருவ பிரகாசத்தை எதிர்நோக்கி நிற்கும் கரிய கிளைகளையுடைய நிச்சலனமான நெடிய நாட்டியக்காரர்களினூடாக, வீட்டிலிருந்து வெளிச்செல்லும் பாதையில் செல்கையில் நான் எடுத்து வைத்த காலடிகள் போல என் சொற்கள் இப்போது மெதுவானதாக, புதிதானதாக, தனியானதாக, தீர்மானமற்றதாக இருந்தாக வேண்டும்.

…………………………..

(1985ல் New Yorker இதழில் முதலில் பிரசுரமான She Unnames Them குறுங்கதையின் அனுமதிபெறப்படாத, இலாப நோக்கற்ற தமிழாக்கம்.

Grandmaster of Science Fiction பட்டம் வழங்கப்பெற்றுள்ள அர்சுய்லா லெ ஃக்வின் The Dispossessed, The Word for World is Forest, The Left Hand of Darkness, The Lathe of Heaven மற்றும் பிற புனைவுகளில்—மானுடவியல், மனவியல், சமூகவியல், சூழல்வாதம், பாலிமை, சமயம் மற்றும் தாவோயிச-அரசின்மைவாதம் சார்ந்த பரிசோதனைகளினூடாக—சாகசக் கதைகளின் ஆதிக்கத்தினுள் சிக்குண்டிருந்த ஊகப்புனைவு வகைமையை கட்டவிழ்த்து வேறொரு தளத்திற்கு நகர்த்திச் சென்றவர். The Birthday of the World and Other Stories மற்றும் Four Ways to Forgiveness இவருடைய சில சிறுகதை தொகுப்புகள்)