Author: பதாகை

தி பிரின்செஸ் ஆஃப் புருண்டி – ஷெல் எரிக்ஸோன்

– ஆர். அஜய்-

‘லிட்டில்’ ஜான் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்தவுடன் அந்த இடத்திற்கு காவல்துறை உயரதிகாரி வருகிறார். அவர் அங்கு வருமளவிற்கு இந்தக் கொலை பரபரப்பான நிகழ்வு இல்லையென்றாலும் ஜானின் பதினாறாவது வயதில் அவனை முதன்முதலாக கைது செய்தவர் என்பதால் இந்த வருகை. பேருந்தில் தன் பள்ளிக்கால வகுப்பறை கனவுக்கன்னியை காண்பவனுக்கு அவளிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சிறு திருப்தியை அளிக்கின்றன. ஆனால் பள்ளி நாட்களைப் போலவே இப்போதும் அவள் தன்னை சற்றும் பொருட்படுத்தாமல் இருப்பது, அவனை அடையாளம்கூட காணாதது அவன் மறக்க நினைப்பவற்றை மீண்டும் கிளர்த்தி, அவன் அடைந்திருந்த மகிழ்ச்சியை குலைக்கிறது. வெளியில் பாதுகாப்பாக நின்று கொண்டு உள்ளே எட்டிப் பார்ப்பது போல் உள்ள குற்றப்புனைவுகளில் இருந்து மாறுபட்டு அச்சமும், துன்பமும், இருளும் நிறைந்த தங்கள் புனைவுலகுகளுக்கு வாசகனை இட்டுச் சென்று, குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளி, புலனாய்வு செய்பவர்கள் என அனைவருக்கும் மனிதத்தன்மையை அளித்து வாசகனை சலனப்படுத்தும் நுட்பங்கள் மோஸ்தராகி விட்டாலும், ஷெல் எரிக்ஸோனின் (Kjell Eriksson) ‘The Princess of Burundi’ நாவலில் விரவியுள்ள, எந்தக் கணத்திலும் உடையக் கூடிய மனங்கள், முறியக் கூடிய உறவுகள் நிறைந்திருக்கும் அதன் நொய்மைத்தன்மை அதனளவில் தனித்துவம் கொண்டதாக ஆக்குகிறது.

காலத்தின் நிறுத்தவியலா பயணம், அப்பயணத்தில் எதிர்பட்ட திருப்பங்களில், வேறொன்றை தேர்வு செய்திருக்கலாமோ என்று ஜானின் நினைவுகள் அவனுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே சிந்தனையை கிளர்த்துகின்றன. ஜானின் மரணத்தை பற்றிய செய்தியைப் படிக்கும் சக மாணவி அவன் மேல் தனக்கிருந்த ஈர்ப்பை நினைத்துப் பார்க்கிறாள். எரிக்ஸோன் இத்துடன் இதை விட்டிருந்தால் ஒரு வழமையான நிகழ்வாக மட்டும் இருந்திருக்கும். இந்தப் பெண்ணும் தனியாகதான் வசிக்கிறார் என்று நமக்குத் தெரிய வருகிறது. இப்போது காப்பகத்தில் உள்ள தன் பெற்றோரின் மனம் தெளிவாக இருந்த காலத்தில் அவர்களைச் சந்தித்த ஒரு சிலரில் ஜானும் ஒருவன் என்பதை நினைத்துப் பார்க்கிறார். ஜான் சின்னச் சின்ன குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் அவனிடமிருந்து விலகியதும் தெரியவருகிறது. அந்த முடிவு சரியே என்றுதான் இப்போதும் அவர் நினைக்கிறார், ஆனால் அவருடைய இப்போதைய தனிமையும் பதின்பருவத்தில் இருந்த கனவுகளும், இன்றைய நிஜமும் முரண்படும் இடம் தரும் வலி அவருள் தன் முடிவு குறித்த சந்தேகத்தின் விதையை விதைக்கிறது. தாங்கள் பிறந்து வளர்ந்த நகரின் தெருக்களின் பெயர்கள் மாறுவது, தன் கண்முன்னே அந்நகரம் வேறுருவம் கொண்டு அடையாளம் தெரியாமலாவது குறித்து ஜானின் நண்பனும், வழக்கை விசாரிக்கும் அதிகாரியிடம் அங்கலாய்க்கின்றான்.

பிறந்து வளர்ந்த ஊரை விட்டு பிழைப்புக்காக விலகி வாழ்தல் துயரமானது என்பது உண்மையே. அதே நேரம் சொந்த ஊரிலேயே வசிப்பவர்கள் அனைவரும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பதும் இல்லை. தங்களை அறியாமல் மனதளவில் அங்கிருந்து விலக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் அந்த இடத்திற்கு அந்நியமாகிப் போவதிலும், அவர்களை அவ்விடத்துடன் பிணைக்கும் இறுதிக் கண்ணியான நினைவுகளும் துன்பம் நிறைந்ததாக மாறுவதிலும் உள்ள நகைமுரணை நாவலினூடே உணர முடிகிறது.

தம்பியின் மரணத்தால் தன்னிலை இழந்து பழிக்குப் பழி வாங்க அலையும், குற்ற வாழ்கையில் இருந்து வெளிவராத முரடனான ஜானின் அண்ணன் தம்பியின் நண்பன் மேல் சந்தேகம் கொள்கிறான். பேச்சுவாக்கில் தம்பி மனைவியின் நடத்தை குறித்து யாரோ சொல்ல, பற்றிக் கொள்ள வேறெதுவும் இல்லாததால் அதை நம்பி அவளிடம் சண்டை பிடிக்கிறான். இதுவரை ஒருவருக்கு ஒருவர் நட்பாக இருந்தவர்கள்தான் என்றாலும், ஜான் மீதுள்ள பாசத்தினால் மட்டும் இணைக்கப்பட்டவர்கள். இந்த துர்மரணத்தால் அந்த இணைப்பு துண்டிக்கப்படுகிறது. ஜானின் மகனை, தந்தை இறந்த அதிர்ச்சியோடு தாயின் நடத்தை குறித்து பெரியப்பாவின் குற்றச்சாட்டும் சேர்ந்து தாக்க, எந்த முடிவுக்கும் வர முடியாமல் தத்தளிக்கிறான். சிக்கலான பருவத்தை கடந்து கொண்டிருக்கும் அவன் வேறேதேனும் மோசமான முடிவை எடுக்கக் கூடும்.

தொலைகாட்சிகளில் வரும் புலனாய்வு அதிகாரிகள் போல் கிரேக்க தொன்மத்தில் ஆர்வம் கொண்டவர்களாக, ஒபேரா கேட்பவர்களாக இல்லாமல், பேருந்து ஒட்டுதல், தோட்ட வேலை செய்தல் போன்றவற்றை தேர்வு செய்யாமல், காவல்துறையை தேர்வு செய்த சாதாரணமானவள் நான், என்று ஜானின் கொலையை விசாரிக்கும் பெண் அதிகாரி தன்னை வரையறை செய்து கொள்கிறார். புலனாய்வில் ஈடுபடுபவர்களும் மிக நொய்மையானவர்களாகத்தான் உள்ளார்கள். திருமணமான சக அதிகாரி மீது ஈர்ப்பு கொள்ளும், தனி ஆளாக கைக்குழந்தையை வளர்க்கும் அதிகாரி, அது இட்டுச் செல்லக் கூடிய உறவின் அறம் குறித்து இரட்டை மனநிலையில் உள்ளார். வெறும் உடல் சார்ந்த தற்காலிக உறவை பேணலாமா என்று யோசிக்கிறார். அந்த ஆண் அதிகாரிக்கும் சமீபத்தில் தான் குழந்தை பிறந்துள்ளது, அவருக்கும் அவர் மனைவிக்கும் இடையே பேச்சு வார்த்தை குறைந்து விட்டது, ஒருவரையொருவர் சீண்டக் கூடாது என்ற பயத்தில்/ விலகல் மனநிலையில் ஒன்றாக வசிக்கிறார்கள். குழந்தைப் பேறு உருவாக்கக்கூடிய மனச் சோர்வு, அது உருவாகக்கூடிய உளவியல் சிக்கல்கள் பற்றிய நுட்பமான சுட்டுதல் நாவலில் உள்ளது. வேறு மனித உடலின் அருகாமையை உணர்ந்து பல காலமாகி விட்டது என்பது மட்டுமே இந்த ஈர்ப்பிற்கான காரணமாக இருக்கக் கூடும். பெண் அதிகாரியும் இவ்வாறு தன்னைச் சமாதானம் செய்து கொள்ள முயல்கிறார். ஆண் அதிகாரி தான் பெண்களால் விரும்பப்படுபவனாக உணர்ந்து பல காலம் ஆகி விட்டதால், அப்படி விரும்பப்படுவதே, புதிய உறவில் ஈடுபடுவதைவிட அவரை அதிகம் கிளர்த்துவதாக இருக்கிறது.

நாவலின் இருண்மையான தொனியை உருவாக்குவதில் இத்தகைய உறவுச் சிக்கல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சில கொலைகள், வன்முறைச் செயல்கள் நிகழ்கின்றன என்றாலும், அவற்றை, அவற்றில் உள்ள ரத்த விரயத்தை விட, எந்த பெரிய காரணமும் இல்லாமல் அவை நிகழ்த்தப்படுவதே கொலையுடன் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய ஒருவனின் நடத்தை, ஜானின் அண்ணன் எடுக்கும் முடிவு – வாசகனுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துபவை. ஒவ்வொரு வன்முறை நிகழ்வின் போதும் அதன் அர்த்தமின்மையை, அது மிக எளிதில் தவிர்க்கப்பட்டிருக்க கூடிய ஒன்று என்பதை வாசகன் உணர்கிறான்.

ஜானின் கொலை துப்புத் துலக்கப்பட்டு குற்றவாளி அடையாளம் காணப்படுவதுடன் வாசகனுக்கு முடிவு கிடைப்பதில்லை. ஜானின் மகன் மனதில் தாய் குறித்து எழுந்துள்ள சந்தேகம் தீருமா என்ற கேள்வி எழுகிறது. பதின் பருவத்தில் சின்ன குற்றச் செயல்கள்செய்ய ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் தன் பாதையை மாற்றி நாற்பத்திரெண்டாவது வயதில் கொல்லப்படும் ஜான், அந்தப் பருவத்திலேயே தன் வழியைச் சரியாக தேர்ந்தெடுத்திருந்தால் அவனுக்கு இந்த துர்மரணம் சம்பவித்திருந்திருக்குமா என்றும் வாசகன் யோசிக்கலாம். இத்தனைக்கும் பெரும்பாலானோரைப் போல சராசரி மத்தியத் தர குடும்பத்தின் குழந்தைப் பருவம்தான் அவனுடையது, மற்றொரு திருப்பத்தில் அவன் சென்றிருந்தால், வேலை, குடும்பம், குழந்தை, வேலையிலிருந்து ஓய்வு, முதுமை, மரணம் என பெரும்பாலானோருக்கு கிடைக்கும் வாழ்க்கை அவனுக்கும் அமைந்திருக்கக் கூடும். ‘இவ்வாறு நிகழ்வதை தவிர்க்க நாம் என்ன செய்திருக்கக்கூடும் என்ற கேள்வியை அனைவரும் தம்முள் எழுப்ப வேண்டும்’ என்று நாவலில் ஒரு இடத்தில் காவல்துறை அதிகாரி கூறுவது தன் சக ஊழியரைப் பார்த்து மட்டுமல்ல, இதே கேள்வியை வேறு வேறு வடிவங்களில் தன் வாழ்வில் ஒரு சில முறையேனும் எதிர்கொண்டிருக்கும் வாசகனிடமும்தான்.

நாவலின் இறுதியில் அதிகாரி ஒருவர் சொல்லும் யோசனையின் தார்மீகமும்- கனவுகள் கலையாமல் பார்த்துக் கொள்வது முக்கியமா அல்லது அது எவ்வாறு நிறைவேறுகிறது என்பது முக்கியமா- விவாதத்துக்குரியதே. புலம் பெயர்ந்தவர்கள் அதிகரிப்பதற்கும் குற்றங்கள் அதிகரிப்பதற்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்று சொல்லும் காவல்துறை அதிகாரி, நிறவெறி கொண்டவர் என்று சொல்ல முடியாது. ஆனால் அவரின் இந்த எண்ணம் அவரை அந்த இடத்திற்கு கொண்டு செல்லவே வாய்ப்பு அதிகம் உள்ளது.

‘இப்போதுதானே எல்லாம் நடந்தது போல் உள்ளது, பின் எப்படி காலம் அவ்வளவு தூரத்திற்கு பின்னால் சென்றது’ என்று மத்திய வயதுடைய ஒருவர் தன் நினைவுகளினூடே அங்கலாய்த்தபடி அலைகிறார். ஜானின் கொலை நடந்து சில நாட்கள் கழித்து அது பற்றிய விசாரணை வளையத்தில் வரும் சில பதின் பருவத்தினர் ‘அது எப்போதோ நடந்தது அல்லவா’ என்று அந்த நிகழ்வை பற்றி அசட்டையாக குறிப்பிடுகின்றனர். ஒருவர் கை தவறிவிட்ட காலத்தை மீண்டும் சிறைப்படுத்த நினைக்கிறார், மற்றொருவர் அதை விசிறி எறிகிறார். காலத்தின் பெறுமானம் நம் வயதிற்கேற்ப மாறுகிறது, ஆரம்பத்தில் அதன் இருப்பையே உணராமல் இருக்கும் நாம் பின்னர் அதன் பின் ஓட வியர்த்தமாக ஓட ஆரம்பிக்கிறோம். இந்த பதின்பருவ குழுவிலும் ஒரு ஜானும் அவன் அண்ணனும், தோழர்களும் இருக்கக்கூடும், ஓரிரு பத்தாண்டுகள் கழித்து இதே கதை மீண்டும் நிகழக்கூடும்.ஆனால் காலம் அப்போதும் தன்னுடைய வழமையான தாள கதியில் முன் சென்று கொண்டிருக்கும், அதன் பயணத்தில் விட்டுச் செல்லும் சக யாத்திரீகர்களின் முகங்களும், பெயர்களும் மட்டுமே மாறுகின்றன, உணர்வுகள் அல்ல.

ஒளிப்பட உதவி – Reader. Writer. Nerd.

பின்-நவீனத்துவத்தை நோக்கி: இஹாப் ஹாஸனை முன்வைத்து ஒரு கருத்தாடல் – ஜிஃப்ரி ஹாஸன்

-ஜிஃப்ரி ஹாஸன் – 

தமிழில் நவீனத்துவ, யதார்த்தவாத இலக்கியம் வலுவாக உள்ள நிலையில் அதன் மீது படைப்பு மற்றும் சிந்தனைத்தளங்களில் தமிழ்ச் சூழலில் தாக்குதல்களைத் தொடுத்து வந்தவர்கள் ரமேஷ்-பிரேம், எம்.ஜி.சுரேஸ், தமிழவன், எம்.டி.முத்துக்குமாரசாமி, அ. மார்க்ஸ் போன்றோர். ஜெயமோகன், சாருநிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன் போன்றோர் நவீன தமிழ் இலக்கியத்தில் மும்மூர்த்திகள் என்றொரு குரல் தமிழ்ச் சூழலில் ஒலிக்கிறது. அது வேடிக்கையான ஒரு மதிப்பீடாகவோ அல்லது சீரியஸான ஒரு மதிப்பீடாகவோ இருக்கலாம். ஆனால் இந்தக் கட்டுரை மூலம் நான் சீரியசாகவே தமிழ்ச் சூழலின் பின்-நவீன இலக்கிய மும்மூர்த்திகளாக ரமேஷ்-பிரேம், எம்.ஜீ. சுரேஸ், தமிழவன் ஆகியோரைப் பிரகடனம் செய்ய விரும்புகிறேன்.  ஆயினும் அவர்களின் படைப்புகளிலும் அநேகமானவை முழுமையான பின்நவீனப் படைப்புகளாகவன்றி பின்நவீனத்துவத்தை நோக்கிய படைப்புகளாகவே உள்ளன. தமிழ்ச் சூழலில் சாரு நிவேதிதாவும் கதைகூறலில் பின்-நவீன உத்திகளைக் கையாண்ட ஒருவர் என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இந்த பின்-நவீன மும்மூர்த்திகளோடு வேறு பலரும் படைப்பிலக்கியம் குறித்த பின்நவீனக் கருத்துநிலைகளை தமிழ்ச் சூழலில் பேசியும் அதற்கான சோதனை முன்னோடிப் படைப்புகளை முன்வைத்தும் வந்துள்ளனர். எனினும் இவர்கள் அதிகமாக படைப்பிலக்கியம் குறித்த பின்நவீனக் கோட்பாட்டை தமிழ்ச் சூழலில் அறிமுகம் செய்வதை விடவும் அதற்கான படைப்பு முயற்சிகளை தமிழில் முன்னெடுப்பதிலேயே கூடுதல் அக்கறை எடுத்துக் கொண்டனர்.

தமிழ்ச் சூழலில் பின்-நவீனப் படைப்புகள் பெருக்கமுறவும் அதன் முழுமையான தன்மைகளோடு பரவலடையவும் வேண்டுமெனில், மிக முக்கிய பின்நவீனக் கோட்பாட்டாளரான இஹாப் ஹாஸனின் பின்நவீனக் கோட்பாடுகளும், அதுதொடர்பான அவரது ஆய்வுக் கருத்துகளும் நமது தமிழ்ச் சூழலில் போதியளவில் பேசப்பட வேண்டியுள்ளது. இவரது பின்-நவீனத்துவ சிந்தனைகள், ஆய்வுகள் குறித்து தமிழ்ச் சூழலில் ஒரு ஆழ்ந்த மௌனமே நிலவி வருகிறது. எம்.ஜி.சுரேஷின் “பின்நவீனத்துவம் என்றால் என்ன?“ என்ற நூலில் மட்டுமே அவருக்கு ஒரு சிறு இடம் வழங்கப்பட்டது. தமிழ்ச் சூழலில் பின்நவீனப் படைப்புகள் எந்தளவு வெளிவந்துள்ளன என அறிந்துகொள்ளவும் அது தொடர்பான ஒரு வாசகக் கருத்துநிலையை உருவாக்கிக் கொள்ளவும் இவர் போன்ற பின்நவீனக் கோட்பாட்டாளர்களின் சிந்தனைகள் பற்றிய அறிமுகமும் உரையாடலும் தமிழ்ச் சூழலுக்கு மிகவும் அவசியமாகின்றன.

50 க்கு மேற்பட்ட புத்தகங்களையும், 300க்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதிய உலகின் மிக முக்கிய பின்-நவீனக் கோட்பாட்டாளர் பேராசிரியர் இஹாப் ஹாஸன். பின்நவீனத்துவம் குறித்த ‘Dismemberment of Orpheus’, The Postmodern Turn: Essays in Postmodern Theory and Culture’, ‘From Postmodernism to Postmodernity’, ‘Toward Concept of Postmodernism’ போன்ற இவரது கட்டுரைகள் சமகால பின்நவீன சிந்தனையில் மிகவும் கவனிக்கத்தக்கவையாகவும், மிக முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்திய கட்டுரைகளாகவும் கருதப்படுவன.

பின்நவீனத்துவம் முன்வைக்கும் மிக முக்கிய கதையாடல்களையும், அதன் தன்மைகளையும் சரியானதொரு அர்த்தத்தில் விபரிப்பதில் இஹாப் ஹாஸன் பெரியளவில் பங்களிப்புச் செய்திருக்கிறார். இவரது விமர்சன எழுத்துகள் மற்றும் கட்டுரைகள் இலக்கிய கலாசாரத்திலும், கோட்பாட்டிலும் ஒரு பெருந்தாக்கத்தை உண்டு பண்ணின.

பின்-நவீன இலக்கியத்தின் தன்மைகளை நவீனத்துவத்தோடு ஒப்பீட்டு முதன் முதலில் சிறப்பாக வேறுபடுத்திக் காட்டினார். ரொபர்ட் ஸ்டோர் போன்ற சிந்தனையாளர்கள் கூட பின்-நவீனம் என்ற பதம் எப்போதும் தங்களைக் குழப்பும் ஒன்றாக இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் இஹாப் ஹாஸன் அதனைத் தெளிவுபடுத்திக் காட்டினார்.

நான் இந்த சொல்லுடன் மிகவும் பிணைந்திருந்து புதிய தோற்றப்பாடான அந்த இயக்கத்தை தெளிவுபடுத்த முயற்சித்தேன் என்று ஊகிக்கிறேன்”  என்று பின்நவீனக் கோட்பாட்டுக்கான தனது பங்களிப்பை இஹாப் ஹாஸன் தனது நேர்காணலொன்றில் குறிப்பிடுவார்.

இஹாப் ஹாஸன் உருவாக்கிய நவீனத்துவத்துக்கும், பின்-நவீனத்துவத்துக்குமிடையிலான வித்தியாசங்களைத் தெளிவாக முன்வைக்கும் இரட்டை எதிர்நிலை அட்டவணை மிகவும் புகழ்பெற்றது. அதுவரை எல்லோரையும் குழப்பிக்கொண்டிருந்த பின்நவீனக்கருத்தியலின் சரியான தன்மையை முதன் முதலில் இந்த அட்டவணையில் இஹாப் ஹாஸன் வரையறுத்தார். இதனால் அந்த அட்டவணை லிண்டா ஹட்சன் போன்ற உலகின் மிக முக்கிய விமர்சகர்களாலேயே அங்கீகரிக்கப்பட்டது. பின்னர் இக்கட்டுரை பல மறுபதிப்புகளைக் கண்டது.

நவீனத்துவத்திற்கும், பின்நவீனத்துவத்துக்குமிடையிலான வித்தியாசங்களைப் பட்டியலிட்டிருந்த இரண்டு செங்குத்து வரிசையில் சில பக்கங்கள் அடிக்கடி மறுபதிப்புச் செய்யப்பட்டன

என்று இஹாப் ஹாஸனே தனது நேர்காணலொன்றில் அவரது இரட்டை எதிர்நிலை அட்டவணைக்கு கிடைத்த பரவலான அங்கீகாரம் பற்றிக் குறிப்பிடுகிறார். இதுதான் அந்த அட்டவணை:

நவீனத்துவம் பின்நவீனத்துவம்
புனைவுவாதம்/குறியீட்டுவாதம் டாடாயிசம்(கலைவேடிக்கை வாதம்)
உருவம் (மூடிய நிலை) எதிர்-உருவம் (திறந்தநிலை)
நோக்கம் விளையாட்டு
வடிவமைப்பு சந்தர்ப்பம்
அடுக்கு நிலை குலைத்துவிடல்
தேர்ச்சித் திறன் சோர்வுநிலை
தொடர்செயல்/ நிகழ்த்துகை கலை புறவயமானது/முற்றுக்பெற்ற ஆக்கம்
படைப்பு/ ஒட்டுமொத்தப்படுத்தல் சிதைவு/ கட்டுடைப்பு
ஒன்றிணைவு முரண்படல்
இருப்பு இன்மை
மையப்படுத்தல் சிதறடித்தல்
வகைமை/ எல்லைப்படுத்தப்பட்டது பிரதி பரஸ்பரம் சார்ந்திருத்தல்
பொருண்மை சார்ந்தது அலங்காரமானது
உருவகம் ஆகுபெயர்
விருப்பத் தேர்வு பலவற்றின் கலவை
வேர்/ ஆழம் மேல்பரப்பு
விளக்கவுரை/ வாசிப்பு எதிர்-விளக்கவுரை
குறிப்பீடு குறிப்பான்
கதையாடல் எதிர்க்கதையாடல்
தேர்ச்சியான சொற்கோவை சாதாரணமாக புழங்கும் சொற்கள்
அறிகுறி விழைவு
பௌதீக அதீதம் முரண்நகை
உறுதிப்பாடு உறுதியற்ற தன்மை

அவர் உருவாக்கிய இந்த இரட்டை எதிர்நிலை அட்டவணை நவீனத்துவத்துக்கும், பின்-நவீனத்துவத்துக்குமிடையிலான வேறுபாட்டினைத் தெளிவாக முன்வைப்பதோடு எது பின்-நவீன இலக்கியம் என்பதை ஒரு வாசகன் இலகுவில் அடையாளங் கண்டுகொள்வதற்கும், ஒரு எழுத்தாளன் பின்-நவீனப் பிரதிகளை உருவாக்குவதற்கும் அது மிகவும் உதவியாக அமைந்திருக்கிறது. இந்த அட்டவணையில் பின்-நவீனத்துவப் பண்புகளாக குறிப்பிடப்பட்டுள்ளவை தமிழ்ச் சூழலில் ரமேஷ்:பிரேம், தமிழவன், எம்.ஜி. சுரேஷ், எம்.டி. முத்துக்குமாரசாமி போன்றவர்களின் புனைவெழுத்துகளில் வெளிப்பட்டு வருகிறது.

இந்த இரட்டை எதிர்நிலை அட்டவணை மொழியியல், இலக்கியக் கோட்பாடு, தத்துவம், மானுடவியல், உளப்பகுப்பாய்வு, அரசியல் விஞ்ஞானம் மற்றும் இறையியல் போன்ற துறைகளிலும் கூட கவனப்படுத்தப்பட்டு வருகிறது.

பின்நவீனத்துவக் கோட்பாடுகளை மேலும் மக்கள்மயப்படுத்துவதில் அக்கறை எடுத்துக்கொண்ட இஹாப் ஹாஸன் புதிய சொற்களை உருவாக்கவும் செய்தார்.

ஒரு தடவை பின்நவீனத்துவத்தின் சிறப்பியல்புகள் அல்லது தூண்டு விசை அல்லது பாணி பற்றி விபரிக்கும் போது நான் ‘indeterminance’ (உறுதியற்ற தன்மை) எனும் சொல்லை உருவாக்கினேன். இது ஒரு போதாமையான விபரணமாகவே இருந்தது. ஏனெனில், பூகோள அரசியல் சூழலில், பின்நவீனத்துவமானது மேற்கத்திய கலாசாரங்களில் மட்டுமன்றி, ஒவ்வொரு வகையினதும் (கலாசாரத்தினதும்) மையங்களுக்கும் விளிம்புகளுக்கும், விளிம்புகளுக்கும் விளிம்புகளுக்கும், மையங்களுக்கும் மையங்களுக்கும், இன்மைகளுக்கும் இன்மைகளுக்குமிடையிலான புதிய உறவுகளிலும் தொடர்புபட்டது. இது உலகமயமாக்கல்/ உள்ளூர்மயமாக்கலின் சிக்கலான மற்றும் புதிய சொற்றொடாரியல் ஆகும்“.

என்று அவர் தனது நேர்காணலொன்றில் குறிப்பிடுகிறார். பின்நவீனத்துவத்தின் இயல்பு பற்றி விபரிக்கும் போது அவர் உருவாக்கிய ‘indeterminance’ எனும் சொல் ஆங்கிலத்திற்கு ஒரு புதிய வரவாகவும், பின்-நவீனக் கோட்பாட்டின் மைய ஆன்மாவையே விபரித்துவிடுவதாகவும் இருந்தது.

பின்-நவீனத்துவம் குறித்து விபரிக்கையில் இஹாப் ஹாஸன் உருவாக்கிய இந்த ‘indeterminancy’ எனும் பதமானது பின்நவீனக் கோட்பாட்டின் முக்கிய போக்குகளான நிச்சயமற்ற அர்த்தம் (ambiguity),  தொடரறு நிலை (discontinuity)  பன்மைத்துவம் (pluralism), தற்செயல் தன்மை (randomness), கலகம் (revolt) நெறிபிறழ்வு ( perversion), சிதைவாக்கம் (deformation) போன்றவற்றுக்கு ஒரு கருத்தியல் வலுவை வழங்கியது.

அநேகமாக தமிழ்ச் சூழலில் பின்-நவீனப் படைப்பாளிகளின் புனைவெழுத்துகளில் இந்த குணாம்சங்கள் சில படைப்புகளில் ஓரளவும், சில படைப்புகளில் முழுமையாகவும் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கட்டுரைகூட பின்நவீனம் குறித்த அவரது முழுக் கருத்தியலையும் கவனத்திற் கொள்ளவில்லை. இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில்தான் அது குறித்து எழுத முடியும்.

குறிப்பு: பின்-நவீனக் கோட்பாட்டுக்கான இஹாப் ஹாஸனின் முழுமையான பங்களிப்புக்காகவே அவரது மரணத்தை ஒட்டி இரங்கல் செய்தி வெளியிட்ட nytimes.org எனும் இணையத் தளம் ‘Father of postmodernism dies at 89’ என இரங்கல் குறிப்பு வெளியிட்டது.

கண்ணாடிச் சில்லுகளும் கருங்குழல் நோட்டுகளும் – சுரேஷ் பிரதீப்

சுரேஷ் பிரதீப்

அக்கா வீடாகவே இருந்தும் வீட்டு முற்றத்தில் யாரும் இல்லாதது உள்ளே செல்வதற்கான ஒரு தயக்கத்தை அளித்தது. காலர் வைத்த நைட்டி அணிந்தபடி விமன்யா எதிர்பட்டாள். என் தயக்கத்தை பார்த்து சிரித்தபடியே என் முகத்தில் இருந்து பார்வையை எடுக்காமல் “ம்மா” என சத்தமாக அழைத்தாள். பள்ளிச் சீருடை தான் அவளை எடுப்பாக காட்டும் ஒரு உடை. மெலிந்து உயர்ந்த பெண்களின் முகம் எவ்வளவு திருத்தமாக இருந்தாலும் அவர்களின் அசைவுகளில் ஒரு கவர்ச்சியின்மையும் நம்பிக்கை குறைவும் வெளிப்படவே செய்கிறது. போட்டுப் பழகிய சீருடையிலேயே சற்றே மிளிர்வு தெரியும் அவளிடம்.

அக்கா கூடத்தின் இடப்புற அறையில் இருந்து மூக்கை ஊறிஞ்சியபடி வெளியே வந்தாள். கார்த்திகாவின் மீது கடுமையான துவேஷம் எழுந்தது. அவளுக்கும் என் அக்கா வயது தான் இருக்கும். விமன்யாவை விட பெரிய பெண் ஒருத்தி அவளுக்கு இருக்கிறாள். ஆனால் அவளிடம் இன்னமும் இளமை தீரவில்லை. அக்காவின் முகம் பழுத்துச் சிவந்திருந்தது. வழக்கம் போல் இடக்கையால் தலையை சொறிந்த படி “தம்பி வாடா” என்றாள். அவள் தலையில் கை படும் போது உதடு வலது ஓரத்தில் லேசாக சுளித்துக் கொள்ளும். அவ்வழகை கார்த்திகா என்றுமே தொட்டு விட முடியாது என மனம் ஆசுவாசம் கொண்டது அல்லது கொள்ள விழைந்தது.

ஜீவா வந்து மேலே ஏறிக் கொண்டான்.

“என்னா மாமா” என இழுத்தான்.

“என்னா மாப்ள” என நானும் இழுத்தேன். அவன் என் தலையில் ஏறிக் கொண்டு பேன் பார்க்கத் தொடங்கினான்.

“அபபா இல்லையாடி” என்றேன்.

“இல்ல மாமா” என்ற விமன்யாவின் விழிகளில் என்னிடம் சொல்ல ஏதோ எஞ்சி இருந்தது.

“என்னடி” என்றேன்.

“உங்க போன வேற யாரும் எடுக்க மாட்டாங்கல்ல” என்றாள். அதிர்ந்த மனதை கட்டுப்படுத்தி “ஓ நீயா அது. வாட்ஸ் அப்ல மெசேஜ் பண்றது இந்த கொரங்குன்னு நெனச்சேன்” என ஜீவாவை கை காட்டினேன் அவள் அந்த நாசூக்கின்மையை வெறுக்க வேண்டும் என்ற உட்சபட்ச வேண்டுதலுடன். விமன்யா மேலே ஏதும் பேசவில்லை.

பசித்தது. அது அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். “டின்னர் இங்க சாப்ட்றீங்களா மாமா” என்றாள். ஏற்பின் அசைவுகள் என்னுள் எழுவதற்கு நேரம் கொடுக்காமல் “கெளம்புறீங்களா” என்றாள். இவ்வளவு சிறிய பெண்ணுக்கு எங்கிருந்து வருகிறது இவ்வளவு கூர்மை என எண்ணும் போதே பதினைந்து பெண்ணுக்கு சிறு வயது அல்ல என்றும் தோன்றியது. பல பெண்களிடம் ஆடுவது தான் என்றாலும் அச்சிறுமியிடம் அவ்விளையாட்டை நிகழ்த்த மனம் ஒப்பவில்லை. அவள் எதிர்பார்க்கும் சங்கட உணர்வை முகத்தில் நிலைக்க விட்டால் என்ன என்று கூட ஒரு கணம் தோன்றியது. ஆனால் உள்ளுக்குள் ஒன்று தீர்மானமாக அதை மறுத்தது. நல்லவேளையாக “தூங்குற நேரத்த நீ எப்படி கொறச்சுப்பன்னு சொன்ன மாமா” என்றபடியே அக்கா வெளிவந்த அதே அறைக்குள் இருந்து வந்தாள் விமன்யாவின் தங்கை கீர்த்தி. எதை முதன்முறையாக கேட்டாலும் ஏற்கனவே அதை என்னிடம் கேட்டது போலத்தான் சொல்வாள்.

சிலரிடம் எச்சூழலிலும் ஒளியேற்றிவிடும் ஒரு தீ இருக்கும். கீர்த்தி அத்தகையவள்.

“ரொம்ப நேரம் தூங்கணும்னு அவசியம் இல்லடா. கண்ணுக்கு மட்டும் கொஞ்சம் ரெஸ்ட் வேணும். அதனால பஸ்ல போறப்ப வண்டில பின்னாடி உக்காந்து போறப்பவெல்லாம் கண்ண மூடிப்பேன்” என்றேன்.

“இப்ப நா கேட்டுட்டு தான இருக்கேன் நானும் கண்ண மூடிக்கிறேன்” என்று கண்களை மூடிக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

திடீரென நினைவெழுந்தவளாய் “மாமா அந்த கதைய கண்டினியூ பண்ணே. தலமுடியும் துளிக் குருதியும்” என்றாள்.

குருதி என்ற வார்த்தையை அவள் உச்சரிப்பது மகிழ்ச்சியாக இருந்தது. நான் சொல்லியிருந்தது எனக்கே மறந்து விட்டது. நெருங்கி நண்பர்கள் அனைவரின் ஒரேயொரு முடியையும் ஒரு துளி ரத்தத்தையும் எடுத்து பாடம் செய்து வைப்பவனின் கதை. யார் என்னிடம் அதைச் சொன்னார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் அதைக் கதையாக இன்னொருவரிடம் சொல்லும் வரை உள்ளுக்குள் ஏதோ அரித்துக் கொண்டிருந்தது. இப்போது கீர்த்தியிடம் கூட இயல்பாக சொல்லக்கூடியதாகிவிட்டது அக்கதை. விமன்யாவின் கடுப்பான முகத்தைப் பார்க்க எழுந்த இச்சையை மிகுந்த சிரத்தையுடன் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

“பஸ் ஸ்டாண்டுக்கு எப்படி மாமா போவீங்க” என இடை வெட்டினாள் விமன்யா.

“கீறி என்ன தூக்கிட்டுப் போகும்” என கீர்த்தியை கை காட்டினேன்.

“நானும் தூக்குவேன் நானும் தூக்குவேன்” என ஜீவா தலையில் இருந்து முதுகுக்கு இறங்கி விட்டான். விமன்யா மேலு‌ம் எரிச்சல் அடைவது தெரிந்தது.

“நான் பிரசன்னாவ வந்து விட்டுட்டு வரச் சொல்றேன்” என்றாள். அந்நேரம் அவள் மீது கடுமையான வெறுப்பு எழுந்தது. இவளுக்கு என்ன வேண்டும்? என்னிடம் என்ன சொல்ல விழைகிறாள்? நான் அவளிடம் என்ன சொல்ல வேண்டும் என நினைக்கிறாள்?

பிரசன்னா வந்தான். நெடுநெடுவென இருப்பவன். அப்படி மெலிந்து உயரமாக இருக்கும் இளைஞர்கள் தான் சாதிக்க தகுந்தவர்கள் என்ற ஒரு பொது புத்தி இருப்பதாக எனக்குத் தோன்றியது. ஆனால் விமன்யா போன்ற மெலிந்த பெண்கள் அப்படி நினைக்கப்படுவதில்லை.

“வர்றண்டி கீறி வர்றங்க்கா வர்றேன் மாப்ள” என ஒவ்வொருவராக விடைபெற்ற பிறகு “இது லைஂபோட பிககனிங் ஸ்டேஜ் விமி. பிகேவ் யுவர்செல்ப் ” என விமன்யாவிடம் சொல்ல வந்ததை முழுங்கி “சி யூ விமி” என்று மட்டும் சொல்லிவிட்டு இரு சக்கர வாகனத்தில் ஏறினேன். அப்படி அவளிடம் சொல்லாதது ஒரு ஆறுதலையும் அளித்தது.

பிரசன்னாவிற்கு பின்னே வண்டியில் நான் ஏறியதும் ஒவ்வொரு தெரு விளக்காக அணைந்ததை எட்டு மணிக்கே கடைத்தெரு காலியாகக் கிடந்ததை பிரசன்னா என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாததை பேருந்தில் ஏறிய பிறகே எண்ணிக் கொண்டேன். ஓட்டுநரையும் நடத்துநரையும் தவிர வேறு யாருமே இல்லாத பேருந்து மெல்லிய துணுக்குறலையும் மகிழ்ச்சியையும் அளித்தது யானையின் உட்புறம் இருப்பது போல . விளக்குகள் அணைந்திருந்ததால் அமர்ந்திருந்த நடத்துநரின் முகம் தெரியவில்லை. டிக்கெட் எடுத்து பிறகு பேருந்தின் மைய இருக்கை ஒன்றில் அமர்ந்தேன்.

எல்லா இருக்கையும் காலியாகக் கிடந்தும் என் இருக்கை ஓரத்தில் அவன் வந்து அமர்ந்தான். நான் ஏறிய பிறகு பேருந்து எங்குமே நிற்கவில்லை இவன் எப்படி ஏறினான் என்ற எண்ணம் எழுந்ததும் ஒரு பயம் பிடித்துக் கொண்டது. அந்த பயமும் பலமுறை ஏற்கனவே உணர்ந்தது போலவே இருந்தது. தமிழ்ச்செல்வி அக்காவின் வீட்டின் இருண்டு அகன்ற கூடத்தில் அவள் தனியே அமர்ந்து அழுது கொண்டிருப்பதைக் கண்ட போது எழுந்த பயம் அது. காட்சியை விட சத்தங்களே அதிக பயத்தை கொடுத்தது. அவள் குரல் அந்த குளிர்ந்த பெருங்கூடத்தின் எல்லா மூலைகளிலும் பட்டு எதிரொலித்துக் கொண்டிருந்தது நாய்கள் ஒன்றிணைந்து ஊளையிடுவது போல.

நம்பிக்கை இன்மையை மட்டுமே வெளிப்படுத்தும் உடலசைவுகளைக் கொண்டிருந்தான். அவன் செய்யப் போகும் ஒவ்வொன்றையும் முன்னரே என்னால் கணிக்க முடியும் எனத் தோன்றியது. அப்படி நான் கணிப்பவற்றையே அவன் செய்வது அவனை மேலும் வெறுக்க வைத்தது. அசிங்கமான ஏதோவொன்று காலில் ஒட்டியிருப்பது போல நெளிந்து கொண்டே இருந்தேன். அழகானவற்றால் அப்படி ஈர்த்து அருகில் வைத்துக் கொள்ள முடியாது.அவற்றால் சலிப்பு தட்டக்கூடும். ஆனால் வெறுக்கிறவற்றை நோக்கி எழும் ஈர்ப்பை எப்போதும் போல் அப்போதும் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு பர்ஸை சட்டைப் பையிலிருந்து எடுத்தான். சில பத்து ரூபாய் தாள்கள் மட்டுமே இருந்த பழைய கிழிந்த பர்ஸ் அது. அதிலிருந்து இரண்டு பத்து ரூபாய் தாள்களை எடுத்து அந்த பர்ஸின் இன்னொரு மூலையில் சொறுகினான். அதனை ஒரு சிறிய நோட்டில் குறித்துக் கொண்டான். ஒரு பழைய தோளில் மாட்டக் கூடிய பை. அவன் அதைத் திறந்த போது உளராத துணிகளில் இருந்து வரும் ஊமை வாடை அடித்தது. பை முழுக்க புத்தகங்கள் சீரில்லாமல் கிடந்தன. வாசிக்கும் பழக்கமுடைய இன்னொரு பைத்தியம் என எண்ணிக் கொண்டேன். அனுவனுவாக அவன் மீது வெறுப்பு பெருகியபடியே வந்தது. கூர்மையற்ற மங்கலான முகம். தொப்பை வெளித்தள்ளத் தொடங்கி இருக்கும் உடல். எண்ணெய் வைக்காத தலை. முகம் முழுவதும் படராமல் அங்கொன்றும் இங்கொன்றுமென தென்பட்ட தாடி. என்னைப் பார்த்து அவன் லேசாக சிரித்த போது பற்றிக் கொண்டு வந்தது எனக்கு. அந்தப் குறுகிய நேரப் பயணம் எப்போது முடியும் என்றிருந்தது.

“சார்” என நான் கேட்டதிலேயே கேவலமான குரலில் என்னை அழைத்தான்.என் வயதோ என்னை விட சற்று மூப்பாகவோ இருக்கக்கூடியவன் என்னை அப்படி அழைப்பது மேலும் வெறுப்பேற்படுத்தியது.

ஒன்றும் சொல்லாமல் அவனை நிமிர்ந்து பார்த்தேன்.

“நீங்க புரோகிராமரா” என்றான். எனக்கு திக்கென்றிருந்தது.

“இல்லை” என்றேன்.

“பொய் சொல்லாதீங்க பிரகாஷ்” என்றவனின் முகம் கணம் கணம் மாறுவது போல இருந்தது.

“எப்படித் தெரியும்?” என்றேன்.

“என்னத் தெரியலையா” என்றவனின் முகத்தை எங்கோ பார்த்தது போல் இருந்தது. இருந்தும் அம்முகத்தை நான் நினைவுமீட்ட விரும்பவில்லை.

மேலு‌ம் சிலர் பேருந்தில் இப்போது அமர்ந்திருந்தனர். அவர்களும் எனக்குத் தெரிந்தவர்களாகவே இருந்தனர். என்னையறியாமலே அவன் யார் என நான் ஊகித்திருந்தேன். விசித்திரமாகத் தோன்றினாலும் ஓட்டுநர் இருக்கை காலியாக இருந்தது எனக்கு எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. பேருந்து விரைந்து கொண்டிருந்த போதே நடத்துநர் குதித்து விட்டார். அவர் மேல் பேருந்து ஏறி இறங்கியதால் ஏற்பட்ட குலுக்கலில் என் அருகே அமர்ந்திருந்தவன் முன் இருக்கையின் கம்பியில் இடித்துக் கொண்டான்.

“விமன்யாவ ஏன் தேவிடிச்சின்னு சொன்ன?” என்று அவன் குரலுக்கு வாய்க்கவே முடியாத கடுமையுடன் சொன்னான்.

“நான் சொல்லல” என்றேன். அவன் சிரித்தான்.

ஏதோ ஒரு உள்ளுணர்வில் திரும்பிப் பார்த்தேன். கடைசி இருக்கையில் விமன்யா அழுதபடி அமர்ந்திருந்தாள்.

“இப்ப என்னடா பண்ணனுங்கிற நீ” என்றேன் என்னுடைய வழக்கமான கடுமையுடன். பழகிய நாய் போல அவன் முகம் சுண்டியது. அது மேலும் தன்னம்பிக்கையை அளிக்கவே “அப்படி பேசினாத்தான் பதினஞ்சு வயசுலயே கண்ட நெனப்புலயும் அலையாம ஒழுங்கா படிப்பா. அதோட நான் தூக்கி வளத்த பொண்ணுடா அவ” எனச் சொல்லும் போது என் சொற்களின் நம்பிக்கை இன்மையை உணர்ந்து அவன் மீண்டும் சிரித்தான்.

“மரியாதையா இறங்கிப் போயிடு” என்றேன்.

ஒரு சிறிய ஊசியால் என் விரல் நுனியில் குத்தி ஒரு துளிக் குருதியை எடுத்தான். ஒரேயொரு முடியை மட்டும் லாவகமாக பிடுங்கினான். அச்செய்கை பால் புகட்டி விடுவது போல இருந்தது. பெருமூச்சுடன் எழுந்துகொண்டு மெலிதாக சிரித்தான்.

“இறங்கப் போறியா” என்றேன். அவ்வளவு கனிவுடன் அதை கேட்டிருக்கத் தேவையில்லை.

“ஆமா இதுக்குத்தான வந்தேன்” என்றேன்.

ஏதோ வருத்தம் நெஞ்சை அழுத்தவே “போகாதடா” என்றேன்.

படபடப்புடன் “ப்ளீஸ் டா பிரகாஷ் போகாத” என்றேன் மீண்டும்.

அவன் அமர்ந்தான்.

பிரகாஷ் மீண்டும் அந்தக் கதையை என்னிடம் சொன்னான். பலமுறை கேட்ட பலமுறை சொன்ன அதே கதை. அக்கதையை கேட்காமல் அதன் உச்சத்தில் திளைக்காமல் வதைபடாமல் அவனை என்னால் என்னிடமிருந்து பிரித்தனுப்ப முடிந்ததேயில்லை.

அந்தப் பழக்கம் நான்காம் வகுப்பு படிக்கும் போது ஏற்பட்டது. அப்பாவின் தலையில் இருக்கும் நரைமுடிகளை அம்மா அழகாகப் பிடுங்குவாள். “வெடுக்” என்ற சப்தத்துடன் அந்த முடிகள் பிடுங்கப்படுவது என்னுள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தும். அந்த முடி பிடுங்கப்பட்டதும் அப்பா அம்மாவைப் பார்த்து மெலிதாகச் சிரிப்பார். இவ்வளவு அழகாக என் அப்பாவால் சிரிக்க இயலுமா? உலகத்தில் எந்த மனிதராவது இவ்வளவு அழகாக சிரித்துவிட முடியுமா? அச்சிரிப்பை அம்மாவுக்காக மட்டுமே சேர்த்து வைத்திருந்தார் போல. ஒருமுறை கூட அவர் அப்படி என்னைப் பார்த்து அப்படி சிரித்ததில்லை. என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியாத ஒரு கருணை மட்டுமே அவர் சிரிப்பில் இருக்கும். அது என்னை துன்புறுத்தும்.

அப்பா அம்மாவையோ என்னையோ அடித்ததில்லை. மிக நிதானமாகப் பேசுவார். தூய கண்ணாடியின் கூர்மை கொண்ட பேச்சு. லாவகமாக வயிற்றுக்குள் இறக்கி உள்ளுறுப்புகளை அறுத்து ரத்தம் கொப்பளிக்க வைக்கும் பேச்சு. அவரின் நிதானமான பேச்சினை அழாமல் கேட்பது அம்மாவுக்கு மற்றொரு பாடு. ஒருவேளை அழுதுவிட்டால் அவர் தன்னையே துன்புறுத்திக் கொள்ளத் தொடங்குவார். அதனால் அம்மா அவரின் கண்ணாடிப் பேச்சுகளை நெஞ்சில் பொங்கும் அழுகையையும் ஆற்றாமையையும் பற்களில் தேக்கி உதட்டை கடித்தபடி கேட்டு நிற்பாள். அவள் திரும்பி நடக்கும் நேரங்களில் கண்ணீரோடு சில துளிகள் குருதியும் சிந்தும்.

நெற்றிப் பொட்டு போன்ற சத்து மாத்திரை கொடுப்பதெற்கென அரை நாள் பள்ளி வைக்கும் போது மருத்துவமனை அழைத்துச் செல்வார்கள். அரை கிலோமீட்டர் தாண்டி இருக்கும் மருத்துவமனைக்கு பின் கை கட்டியபடி வரிசையாகச் செல்வோம். சில நாட்களில் வலது கை ஆட்காட்டி விரலின் நுனியைப் பிடித்து ஊசியால ஒரு குத்து குத்தி ஒரு துளி ரத்தம் எடுப்பார்கள். அதனை ஒரு சிறிய செவ்வக வடிவ கண்ணாடி சில்லில் தேய்ப்பார்கள். குத்தும் போதிருந்ததை விட அந்த கண்ணாடி கையில் படும் போது உடல் கூசும்படியாக வலிக்கும். வரிசை முடியும் வரை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிச் சில்லுகளையே பார்த்து நிற்பேன். வரிசையாக அடுக்கப்பட்ட பொருட்களின் மீது ஒரு மோகம் உருவாகத் தொடங்கியிருந்தது அப்போது. அம்மா மௌனித்துப் போய்விடும் நாட்களில் என் உலகம் ஓடாமல் நின்று போய்விடும். அது போன்ற நாட்களில் பயன்படுத்தி தூக்கி எறியப்பட்ட தீப்பெட்டிகள் அப்பாவின் பிளேடு பாக்கெட்டுகள் கொட்டாங்குச்சிகள் அம்மாவின் உடைந்த கண்ணாடி வளையல்கள் என அனைத்தையும் அடுக்கியபடியே இருப்பேன். அது என் ரகசியப் பொழுது போக்கு. யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்பதில் கூடுதல் கவனத்துடன் இருப்பேன். அதோடு புளியங்காயை லேசாக வாயில் வைத்தால் வாய் நிறைய உமிழ்நீர் சுரந்து விடும். அதனை நூறு மிடறாக துளித்துளியாய் அருந்துவேன். இதுவும் பிறருக்குத் தெரியாது.

வரிசையாக அடுக்கப்பட்ட ரத்தம் தோய்ந்த கண்ணாடிச் சில்லுகளை பார்த்த போது மற்ற அனைத்தும் அற்பமாகத் தெரிந்தது.

“இதெல்லாம் என்னக்கா பண்ணுவீங்க” என்று ஊசியால் குத்தும் பெண்ணிடம் கேட்டேன்.

என்னை குறும்புடன் கூர்ந்து நோக்கியவள் “இந்த கிளாஸ் எல்லாத்தையும் வெந்நீர்ல போட்டா ரத்தம் எல்லாம் தண்ணிக்கு போயிடும். அதோட காபி பவுடர் கலந்து குடிப்போம்” என்றாள். எனக்கு வாயில் அந்த நீரை வைத்துக் கொண்டு மிடறு மிடறாக அருந்த வேண்டும் போலிருந்தது. தியாகராஜனிடம் அதைச் சொன்ன மறுநாள் முதல் என்னிடம் அவன் பேசுவதை நிறுத்தி விட்டான்.

ஆனால் என்னால் தான் முடியவில்லை. நான் முதலில் எடுத்ததே அவன் விரல் குருதியைத் தான். மறுமுறை மருத்துவமனைச் சென்ற போது குருதியற்ற கண்ணாடிச் சில்லுகள் கொண்ட பெட்டியை எடுத்து விட்டேன். ஒவ்வொரு ரூபாயாக சேர்ப்பது போல ஒவ்வொரு துளி குருதியாக எடுத்தேன். பெரும்பாலும் நண்பர்கள் தனிமையில் இருக்கும் போது தான் எடுப்பேன். ஒருவன் விரலில் எடுப்பதை மற்றவன் அறிந்துவிடாதபடி பார்த்துக் கொள்வேன். சில சமயம் எதேச்சையாக சில சமயம் மிரட்டி சில சமயம் பயமுறுத்தி என எப்படியெல்லாமோ குருதிச்சில்லுகளை சேகரித்தேன். என் காக்கி கால்சட்டையின் டிக்கெட் பாக்கெட்டில் இரண்டு சில்லுகள் எப்போதும் இருக்கும்.

யார் விரலில் என்றைக்கு எடுத்தேன் என்பதை ஒரு தனி நோட்டில் குறித்து வைத்துக் கொள்வேன். அந்த நோட்டையும் கண்ணாடிச் சில்லுகளின் பெட்டியையும் ஒரு பாலிதீன் பையில் போட்டு ஆற்றங்கரையில் புதைத்து வைத்திருந்தேன். குருதி எடுப்பதை விட முடி பிடுங்குவது எளிது. அதற்கும் தனி நோட்டு. முடிகளை முதலில் கோணி ஊசிகளில் கட்டி வைத்திருந்தேன். பின்னர் மெல்ல மெல்ல அந்த பழக்கம் குறைந்தது. முடிகளை நோட்டுப் புத்தகத்தில் வைத்து அது யாருடைய முடி என்று என்பதை குறித்து வைப்பேன். அப்படி குறித்த போது தான் கண்ணாடிச் சில்லுகளின் நினைவெழுந்தது. அதில் குறித்து வைக்கவில்லை என்றபோது திக்கென்றிருந்தது. பின்னர் ரத்தக் குறிப்புகள் எடுக்கப்பட்டிருந்த நோட்டைப் புரட்டி அடுக்கி வைத்திருந்த வரிசையையும் நோட்டில் குறித்திருந்த சீரியல் நம்பரையும் ஒப்பிட்டு நுனி விரலால் தொட்டெடுக்கக்கூடிய சிறிய காகித நறுக்கில் சீரியல் நம்பர் போட்டு ஒட்டி வைத்தேன். மிகத்தீவிரமாக ஒரு செயலில் நான் ஈடுபாடு கொண்டிருந்ததாக அது என்னை நம்ப வைத்தது. அதைத்தவிர அனைத்துமே அவசியம்றறது என எண்ணத்தலைப்பட்டேன். அம்மாவின் கடித்த உதடுகளும் அப்பாவின் கண்ணாடிப் பேச்சுகளும் எனக்கு பொருட்டல்ல என்றாயின.

கல்லூரி இறுதி ஆண்டுகளில் வீட்டிற்கு வரும் போது கண்ணாடிச் சில்லுகளின் வரிசை எண்ணைப் பார்த்து அது என்று எடுக்கப்பட்டது என்பதை நினைவு மீட்டுவதும் ஒரு இஞ்சில் இருந்து இரண்டு அடி வரை உள்ள மயிரிழைகள் யார் தலையில் இருந்து என்று எடுக்கப்பட்டன என எண்ணிக் கொள்வதும் என் தனிமையைப் போக்கும் முக்கிய பொழுது போக்குகள். வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் அந்தச் சில்லுகளை கண்களை மூடியபடி வருடுவேன். முடிகளின் மென்மையை விரல்களில் உணரும் போது உடல் சிலிர்க்கும்.

அதன்பிறகு நானே அறியாமல் நான் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தேன். முதலில் நான் செத்துக் கொண்டிருப்பது எனக்குத் தெரியவில்லை. அதன்பிறகே என் கனவுகளில் அவனை காணத் தொடங்கினேன். என் கனவில் வருபவனை எல்லோரும் விரும்பினர். அவன் யார் என அறிவதற்காக நான் வெகு நேரம் உறங்கினேன். வெகுநாட்கள் உறங்கினேன். உறங்கி எழுந்த போது நான் முழுமையாக இறந்து விட்டிருந்தேன். கண்ணாடிச் சில்லுகளும் கருங்குழல் நோட்டுகளும் எங்கோ புதையத் தொடங்கின. மீண்டும் அம்மாவின் கடித்த உதடுகள் கண்ணில் படத் தொடங்கியது.

பிரகாஷ் சொல்லிக் கொண்டிருந்த போதே அவன் முகத்தில் அச்சமூட்டும் வெறுப்பு படர்ந்தது.

“ஒம்மால நீ தாண்ட என்னக் கொன்ன” என விபரீதமான குரலில் கத்தினான்.

எனக்கு தொண்டை அடைத்தது. விமன்யா இளித்தபடி எழுந்து சென்றாள்.

“இல்ல எனக்குத் தெரியாது எனக்குத் தெரியாது” என்றபோது எனக்கு அழுகை வந்துவிட்டது.

“உனக்கு ஒன்னும் தான் தெரியாதே. உங்கிட்ட எவ்வளவு சொன்னேன். என் கண்ணாடிகள உடைக்காத உடைக்காதன்னு. தேவடிப்பயலே கேட்டியாடா நீ. போட்டு ஒடச்சேல்ல. நீ ஒடச்ச பிறகும் எவ்வளவு கெஞ்சு கெஞ்சினே உன்னைய. அத அப்படியே கரச்சாவது என்ன குடிக்க வுட்றான்னு. வுட்டியாடா வுட்டியாடா என்னைய நீ” என்றபோது அவன் முகத்தில் அச்சமூட்டக்கூடிய உக்கிரம் படர்ந்தது.

நான் அவனைத் தடுத்ததாக நினைவில்லை.

“தட்டி விடலேன்னா நீ செத்துருப்படா நாயே” என்றதும் சட்டென ஒரு ஆவேசம் எழுந்தவனாய் “நா உன்னோட மீட்பன்” என்றேன்.

“தூ ஒலுக்க குடுக்கி. நான் ஏன்டா சாவுறேன். எனக்கு சாவே கிடையாது. நீ செத்துருப்படா. அன்னிக்கு நீ செத்துருப்ப” என்றான்.

கை கால்கள் எல்லாம் படபடத்து நடுங்கத் தொடங்கின. அவனை அடித்துக் கொல்ல வேண்டும் போலிருந்தது.

“இப்பனாச்சும் ஒத்துக்கடா. இப்பனாச்சும் ஒத்துக்கடா” எனக் கெஞ்சத் தொடங்கினான். புண்ணைக் கிண்டியது போல ஒரு வெறி ஏற்படுத்தும் நமைச்சல் உடல் முழுக்கப் பரவியது எனக்கு.

“எத ஒத்துக்கணும்” என்றேன்.

மண்டையே தெறித்து விடுவது போல “அய்யோ அய்யோ அய்யோ என்னக் கொல்லுடா. என்னால முடியாதுடா என்னால முடியலடா. நான் என்னடா பாவம் பண்ணினேன் உனக்கு. அல்லாத்தையும் உட்டுத் தொலச்சுட்டு போகத் தான்டா உன்ன கேக்கிறேன்” என தலையில் அடித்துக் கொண்டு அலறினான்.

என்னுள் மேலும் மகிழ்ச்சி பரவியது. மகிழ்ச்சியாக மட்டுமே இதனை எனக்கு நான் சொல்லிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவன் வென்று விடுவான். அவன் என்னை வென்றால் நீங்கள் என்னை மதிக்க மாட்டீர்கள்.

“நீ போகலாம்” என்றேன். பேருந்து உச்ச விரைவில் சென்று கொண்டிருந்தது. கூரையை பிய்த்துக் கொண்டு பேருந்தின் மேலேறினான். தலைகுப்புறக் குதித்தான். அவன் மண்டை சிதறுவதைக் கண்டேன்.

பேருந்தில் இருந்து இறங்கியதும் அலைபேசியை எடுத்தேன்.

“கீரி அந்த கதைய கண்டினியூ பண்ணலாமா?” என்றேன். சொல்லச் சொல்ல எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் அது கதை தான். கதை மட்டும் தான்.

அதுக்கு என்ன இப்ப? – நரோபா

நரோபா

உச்சி வெயிலிலே, மலையுச்சியிலே, தனித்த பன்றிப் பாறையின் கொம்பிலே சாய்ந்து, வானத்தை வெறித்தபடி பீடி இழுத்து கொண்டிருந்தான் பழுவேட்டையன்.

மூச்சிரைக்க நிற்காமல் ஓடிவந்தான் கிடாரம் கொண்டான்.

பழுவேட்டையன் மெல்லத் திரும்பி, துச்சப் பார்வையை வீசினான். ‘என்ன?’ என அவன் கண்கள் வினவின.

“அண்ணே… காரமடையான் தாயோளி… பச்ச புள்ளையப் போடற மாதிரி ஒரு குற்ற உணர்ச்சி கத எழுதிப்புட்டாண்ணே”

பார்வை மீண்டும் வானத்தை வெறித்தது. நிதானமாக புகையை உமிழ்ந்தான்.

“அதுக்கு என்ன இப்ப?”

கிடாரம் வேகவேகமாக மூச்சிழுத்து விட்டான். வியர்வை கொட்டியது.

“அண்ணே… செல்லூர்க்காரன் மத்தவன் பொண்டாட்டியோட படுக்குறத நம்ம அண்ணி பேர வெச்சு கத எழுதி இருக்காண்ணே”

நெருப்பெரியும் பீடி முனையை திருப்பி கண்ணுக்கருகே வைத்து உற்று நோக்கினான் பழுவேட்டையன். “ஹ்ம்… அதுக்கு என்ன இப்ப?” என்றான் பீடியை திரும்பி வாயில் வைத்தபடி.

கிடாரம் முகம் சிவந்து பழுத்தது. பையில் வைத்திருந்த மானிடர் புட்டியை திறந்து, பிளாஸ்டிக் கோப்பையில் ஊற்றினான், அதில் தண்ணி பாக்கெட்டில் இருந்து நீர் பாய்ச்சி, ஒரு மிடறு குடித்தான். சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தான்.

அவன் குரல் தளர்ந்தது. அழுகை முட்டிக்கொண்டு வந்தது. நா தழுதழுக்க, “அண்ணே… போவட்டும் விடு… இந்த புதுப்பட்டிகாரன் நம்ம நெடுங்குடி முத்து ஆக்கிப் போட்ட வெண்டக்கா மண்டி நல்லாயில்லன்னு ஸ்டேடஸ் போட்ருக்காண்ணே”

பழுவேட்டையன் சட்டென நிமிர்ந்தான். பாறையிலிருந்து கீழே குதித்தான். பீடியை தரையில் வீசி வெறும் காலால் தேய்த்தான். குனிந்து தேம்பிக் கொண்டிருந்த கிடாரத்தின் சொக்காயை பிடித்து தூக்கினான். “த்தா… ஏண்டா இத முதல்லேயே சொல்லல…” என விறுவிறுவென மலையிறங்கிச் சென்றான்.

ரிச்மல் க்ராம்ப்ட்டனின் ‘ஜஸ்ட் வில்லியம் கதைகள்’ – அஜய். ஆர்

– ஆர். அஜய்-

வில்லியமின் (William) வீட்டினர் விருந்தொன்றிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். விருந்தினர் அனைவரும் மாறுவேடம் அணிந்து வர வேண்டும். தாங்கள் என்ன உடை அணியப் போகிறோம் என்பது குறித்த உரையாடலின்போது வீட்டின் கடைக்குட்டியான பதினொரு வயது வில்லியம், தனக்கு சிங்கத்தின் தோல் கிடைத்தால் அதை அணிந்து கொண்டு விருந்தினர்கள் இரவு வேளை தோட்டத்தில் உலவிக்கொண்டிருக்கும்போது சிங்கம் போல் உறுமியபடி அவர்கள் மீது பாய்ந்து மகிழ்விப்பேன் என்கிறான். வீட்டினர் இதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

உண்மையில் வில்லியமிற்கு வருபவர்களை துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணமொன்றும் இல்லை, அவனைப் பொறுத்தவரை எதிர்பாராத கணங்களில் சிங்கம் போல் அவ்வப்போது தோன்றி உறுமுவது உற்சாகமான செயல், விருந்தினர்களும் அந்தச் சில கண கிலியை விரும்புவார்கள் என்றே நம்புகிறான், அதைச் சொல்லவும் செய்கிறான். ஆனால் எப்போதும் போல் பெரியவர்கள் அவன் சொல்வதைக் கேட்காமல் அவர்களாக அவனுக்கு ஒரு உடை தேர்வு செய்து விடுகிறார்கள்.

1921 ஆண்டில் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் வெளிவந்த, பதினொரு வயது வில்லியமை கதைநாயகனாகக் கொண்ட ‘ஜஸ்ட் வில்லியம்’ (Just William Series) சிறார்ப் புத்தகங்களின் (தொடர்ந்து பல தசாப்தங்கள் இந்த நூல்கள் வெளிவந்தாலும், வில்லியமின் வயது ஏறுவதில்லை, மார்க்கண்டேயனாக பதினொரு வயதிலேயே இருக்கிறான் சாராம்சமாக இந்தச் சம்பவத்தை புரிந்து கொள்ளலாம். குழந்தையின் கண்களின் வழியே உலகை பார்க்கும், புரிந்து கொள்ளும் வில்லியம், அதற்கு நேர்மாறாக இருக்கும் -தாங்களும் ஒரு காலத்தில் குழந்தையாக இருந்ததை மறந்த- பெரியவர்களின் உலகம், இரண்டும் நேருக்கு நேர் சந்திக்கும்போது ஏற்படும் அனர்த்தங்கள்தான் இந்த புத்தகங்களின் கருப்பொருள்.

பத்து, பதினொரு வயதில் ஒரு சிறுவனுடைய கனவுகள் என்னவாக இருக்கக்கூடும்? ராபின் ஹூட் போல் இருப்பவர்களிடமிருந்து பிடுங்கி ஏழைகளுக்குத் தருவது, புதைக்கப்பட்டுள்ள புதையலைத் தேடி கண்டுபிடிப்பது, வட்ட தொப்பி அணிந்து, தொடைகளில் துப்பாக்கி பொருத்திக் கொண்டு, குதிரை மேல் அமர்ந்து காற்றைக் கிழித்தபடி கௌபாய் போல் அமெரிக்க பாலைவனத்தில் பறந்து செல்வது, போலிஸாரால் கண்டுபிடிக்க முடியாத குற்றத்தை, தொழில்முறை அல்லாத துப்பறிவாளனாக- கொலையாளி விட்டுச் சென்ற, போலிஸார் கண்களில் படாத சிகரெட் துண்டு, அவனுடைய ஷூ அச்சு இவற்றைக் கொண்டு- கண்டு பிடிப்பது, பேய் நடமாடுவதாகச் சொல்லப்படும் மாளிகையில் நடக்கும் கடத்தலை வெளிக்கொணர்வது என அந்த வயதில் செய்ய நினைக்கும் சாகசங்கள் பலவும்தான்.

வில்லியமும் இத்தகைய பகற்கனவுகளில் ஈடுபடுகிறான். ஆனால் ஹார்டி பாய்ஸ் (Hardy Boys) போலவோ ‘பேமஸ் பைவ்’ (Famous Five) போலவோ இல்லாமல் இவை பெரும்பாலும் அ-சாகசங்களாகவே (misadventures) முடிகின்றன. கொலைகாரன் என்று வில்லியம் சந்தேகப்படும் நபர் ஒரு அப்பாவியாக இருக்கிறார், அல்லது அவன் யாரை நம்புகிறானோ அவர் திருடனாக இருக்கிறார். இத்தகைய சிறார் பாத்திரங்கள் குறும்பு செய்தாலும், பெரியவர்கள் சொல்லை அவ்வப்போது மீறினாலும் அவர்கள் உதாரண நாயகர்களாகவே, பிற குழந்தைகள் பின்பற்ற வேண்டியவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். வில்லியம் குறித்து அப்படிச் சொல்வது சிறிது கடினம். படிப்பு பிடிக்காது, ஆசிரியர்களுடன் பரஸ்பர விரோதம் -பிரெஞ்ச் ஆசிரியரிடம் தான் எப்படியும் பிரான்ஸ் போகப்போவதில்லை எனவே ஏன் படிக்க வேண்டும், ஏன் அனைவரும் ஆங்கிலம் படிக்கக் கூடாது, எந்த முயற்சியும் இல்லாமலேயே என்னால் அதை பேச முடியும்போது மற்றவர்களும் அப்படியே பேசக்கூடுமே என்று கேள்வி கேட்கிறான்-, வகுப்பறையில் அமர்ந்திருப்பதைவிட, கிராமத்தில் இருக்கும் சிறு காடுகளில் (woods) அலைந்து திரிவது, அங்கு தென்படும் தண்ணீர்ப் பாம்பை வீட்டிற்கு எடுத்து வருவது, ஓடையில் மீன் பிடிப்பது, பறவைகளைப் போலவே கூடு கட்ட முயற்சிப்பது என அவனுடைய பாதை வேறு. அவன் குடும்பத்தில் இத்தகைய அபிலாஷைகள் என்ன எதிர்வினையை உருவாக்கும் எனச் சொல்ல வேண்டியதில்லை.

மர்மம், குற்றம் என்ற வட்டத்திற்குள் க்ராம்ப்டன் வில்லியமை அடைத்து விடுவதில்லை, உண்மையில் அவை மிக குறைவாகவே இந்தக் கதைகளில் வருகின்றன. அன்றாடத்தில் இருந்துதான் வில்லியமின்பெரும்பாலான சாகசங்களுக்கான யோசனைகள் தோன்றுகின்றன, தினசரி வாழ்வே அவன் புரியும் அனர்த்தங்களுக்கான விளைநிலமாக உள்ளது. ‘குழந்தைகளுக்கான, அவர்கள் மட்டுமே இருக்கும் உலகமாக’ மட்டுமே இல்லாமல் – உதாரணமாக பேமஸ் பைவில் பெற்றோர் முதல் ஓரிரு அத்தியாயங்களுக்கு வருவார்கள், பின் சிறார்கள் கையில் செல்லும் கதையில், அதன் பின் வரும் பெரியவர்கள் பாத்திரங்கள் குற்றவாளிகள் மட்டுமே, அவர்களைப்பிடிப்பது மட்டுமே நம் சிறார் துப்பறிவாளர்களின் வேலை- பெரியவர்களின் உலகத்தினுள்ளும் ஒரு நோட்டம் விடுகிறான் வாசகன்.

தினமும் அவன் செய்யும் சாகசங்கள் என்ன, அவற்றால் சந்திக்கும் பிரச்சனைகளும் என்ன?. காலையில் அபஸ்வரமாக பாடினால் வீட்டில் உள்ளவர்கள் அவனுடைய இசையார்வத்தை புரிந்து கொள்ளாமல் திட்டுகிறார்கள், எல்லாவற்றையும் சோதித்துப் பார்க்கும் மோகத்தில் வீட்டிலுள்ள மின்னணு உபகரணகளை நோண்டி முயன்று மின்சாரம் தாக்கி அலறினால், வீட்டின் வென்னீரூற்றை (geyser) வெடிக்கச் செய்து வீடெங்கும் நீரைப் பாய்ச்சினால் வீட்டினர் அதையும் புரிந்து கொள்ளாமல்- வில்லியம் பார்வையில் ஈவிரக்கமின்றி- வைகிறார்கள். வீட்டின் கடைக்குட்டி என்பதால், பதினெட்டு வயதான கிராமத்துப் பேரழகி அக்கா எதெல் (Ethel), இருபது வயதான, இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ‘தன் வாழ்நாள் காதலை’ சந்திக்கும் அண்ணன் ராபர்ட் (Robert) இவர்களுடன் மல்லுக்கட்ட வேண்டியுள்ளது. அக்காவின் சால்வையை, மதிப்புமிக்க சீப்பை தம்பி உபயோகித்தால் என்ன, சீப்பில் தெரியாத்தனமாக கோந்து ஒட்டியிருந்தால் வில்லியம் எப்படி அதற்கு பொறுப்பேற்க முடியும், பெரியவர்களுக்கு இது புரிவதே இல்லை. ராபர்ட்டும், ஏதெலும் பங்குபெறும் நாடக நிகழ்ச்சிகளில், ஏற்பாடு செய்யும் விருந்துகளில், நல்லெண்ணத்துடன் -அவர்கள் இவன் எதுவும் செய்ய வேண்டாம் என்று முற்றிறுதியாக கூறியும், கடும் தண்டனைகள் குறித்து அச்சுறுத்தியும்கூட- தன் பங்களிப்பை ஆற்றி எல்லாவற்றையும் கலைத்து விடுகிறான். விருந்தினர்களில் ஒருவரை குற்றவாளி என்று நினைத்து ஷெட்டில் அடைத்து விடுவது, ராபர்ட்டின் ‘அப்போதைய உயிர்க் காதலியை’ வெறுப்படையச் செய்து, தன் வாழ்க்கை பாழாகி விட்டது என்று – அடுத்த உயிர்க் காதல் எதிர்படும்வரை- ராபர்ட்டை புலம்பச் செய்வது என வில்லியமின் லீலைகள் பல.

வில்லியமிற்கு ஆண்- பெண் உறவு பிடிபடுவதில்லை, ராபர்ட் தொடர்ச்சியாக ‘காதலில்’ விழுவதை முட்டாள்தனம் என்கிறான், எதெல் மீது வாலிபர்கள் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து, அவளுடைய உண்மை சொரூபம் தனக்கு மட்டும்தான் தெரியும் என்று முணுமுணுக்கிறான். இருப்பினும் திருமணம் நடந்தால் அவர்கள் வீட்டை விட்டுச் சென்று விடுவார்கள் என்று ஜோடிப் (அ)பொருத்தத்திலும்- பெயர் குழப்பத்தில் ராபர்ட்டை விட வயது மூத்த வேறொரு பெண்ணிற்கு அவன் சார்பாக திருமண செய்யக் கோரி கடிதம் எழுதி தானே தருகிறான், இன்னொரு முறை ராபர்ட் இரு வாரங்களுக்கு முன் உயிராக நேசித்த பெண்ணிற்கு கடிதம் தருகிறான், அண்ணன் இப்போது வேறு மலரிடம் தாவி விட்டதை அறியாமல். இதில் எப்படி வில்லியமை குறை கூற? திட சித்தமில்லாத ராபர்ட்தான் இத்தகைய குழப்பங்களிற்கு காரணம் இல்லையா, வில்லியம் சொல்வது போல் ராபர்ட் இன்று, இப்போது, இந்தக் கணம் யாரைக் காதலிக்கிறான் என்பதைச் சரியாக தெரிந்து வைத்திருப்பது கடினம்தான் – ஈடுபடுகிறான்.

அவன் உடன்பிறந்தவர்களும் சளைத்தவர்கள் அல்ல, அவனை அனாதை என்று சொல்லி எங்கேயேனும் விட்டு விடலாமா என எரிச்சலின் உச்சத்தில் பேசிக் கொள்கிறார்கள். அன்றாட செயல்களில் ஏதேனும் தடங்கல் என்றால் வீட்டில் வில்லியம் எங்கே என்றுதான் தேடுகிறார்கள், பெரும்பாலான நேரங்களில் அது சரியும்கூட. அது மட்டுமல்ல, கிராமத்தில் உள்ள பெரும்பான்மையான பெரியவர்களும் (சிறார்கள் அல்ல) அவனையும் அவனுடைய ‘அவுட்லா’ குழுவையும் கண்டு அஞ்சி சற்று விலகி இருக்கவே விரும்புகிறார்கள். கிராமத்தின் கிருத்துவ மத போதகர் (vicar) நடத்தும் ஞாயிற்றுக் கிழமை சர்ச் வகுப்பிற்கு வில்லியமின் வருகையைப் பற்றி நினைத்தால் வகுப்பையே நிறுத்திவிடலாம் என்று நினைக்குமளவிற்கு நொந்திருக்கிறார் அவர். சாந்த சொரூபிகளையும் ரத்த வெறி பிடித்தவர்களாக மாற்றுவது வில்லியமால் சாத்தியமே.

புடம் போட்ட தங்கமாக, அனைவரும் விரும்புகிறவனாக, எப்போதும் வெற்றியை மட்டுமே ருசிப்பவனாக இல்லாததாலும், மிக முக்கியமாக, அவனால் உருவாகும் பிரச்சனைகள் அனைத்தும் அப்பாவித்தனமான நல்லெண்ணத்தின் விளைவாக மட்டும் (பெரும்பாலும்) ஏற்படுகின்றன, -பாதிக்கப்படுபவர்கள் இவ்வாறு எண்ண மாட்டார்கள் என்பது ஒரு புறமிருக்க- என்பதாலும் வில்லியம் மற்ற சிறார் நாயகர்களைவிட நிஜமானவனாக தெரிகிறான். உதாரணமாக, கிறிஸ்துமஸுக்கு முந்தைய தினம் தேவாலயத்துக்கு குடும்பத்துடன் செல்லும் வில்லியம் பாதிரியார் உண்மையே பேசுவது குறித்து ஆற்றும் சொற்பொழிவால் கவரப்பட்டு இனி உண்மையை மட்டும் பேசப்போவதாக சபதமெடுக்கிறான். கிறிஸ்துமஸ் அன்று தன்னுடைய பரிசுகளைக் குறித்து

“Did you like the book and instruments that Uncle and I gave you?” said Aunt Emma brightly.
“No,” said William gloomily and truthfully. “I’m not int’rested in Church History an’ I’ve got something like those at school. Not that I’d want ’em,” he added hastily, “if I hadn’t em.”
“William!” screamed Mrs. Brown in horror.
“How can you be so ungrateful!”
“I’m not ungrateful,” explained William wearily. “I’m only being truthful…

இந்த நிகழ்வை எப்படி அணுக? நாகரீகம் என்ற ஒற்றை அளவுகோலின்படி வில்லியமின் இந்தச் செய்கை கண்டிக்கத்தக்கதுதான். அதே நேரம் பெரியவர்கள் (இதில் பாதிரி) சொல்வதில் உள்ள யதார்த்தத்தை, அதன் எல்லைகளை புரிந்து கொள்ள முடியாமல் அதை அச்சு அசல் அப்படியே பின்பற்றி, அதனால் உருவாகும் விளைவுகளைக் கண்டு தன்னை அந்தப் பெரியவர்களின் உலகம் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆயாசம் ‘wearily’ல் வெளிப்படுகிறது. எந்த பதினொரு வயது சிறுவன்தான் ஜியாமெட்ரி பாக்ஸ் மற்றும் தேவாலையங்களின் வரலாறு என்ற நூல் பரிசாக கிடைத்தால் அதை உண்மையான மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வான். அவனுடைய பார்வையில் இந்தப் பரிசுகளின் பெறுமதி என்னவாக இருக்கும், வில்லியம் இப்படிப் பேசுவதை வைத்து மட்டும் அவனை ஒரு துஷ்டன் என கூற முடியுமா என்ன? மேலும் நண்பர்களுக்காக எதையும் செய்பவனாக, தலைமைப் பண்பு குறும்பு செய்வதற்கு மட்டும்தான் மட்டும் தான் என்றாலும் – உடையவனாக, எந்தச் சிக்கலில் இருந்தும் எப்படியேனும் இறுதி கட்டத்திலாவது தப்பித்து விடலாம் என்ற நன்னம்பிக்கை கொண்டவாகவும் (optimist)- அப்படி பல சமயம் நடப்பதில்லை என்றாலும்- வில்லியம் இருக்கிறான். Lovable (little) rascal என்பதற்கு மிகச் சரியான உதாரணம் அவன்.

ஜிஞ்சர், ஹென்றி, டக்லஸ் என மூன்று கூட்டாளிகள் வில்லியமிற்கு, தங்களை ‘அவுட்லாஸ்’ (Outlaws) என்று -சரியாகவே-அழைத்துக் கொள்கிறார்கள். வில்லியமின் வயதில் தோன்றக்கூடிய பெண்கள் குறித்த அலட்சியம் அவனிடமும் இருப்பது போல் தோன்றினாலும் அது அத்தனை உறுதியானது அல்ல. பெண்களின் ஆராதனைப் பார்வையை உள்ளூர விரும்புகிறான், அவன் படிக்கும் கதைகளில் உள்ள சாகசக்காரர்கள், அவர்கள் மேல் மையல் கொள்ளும் பெண்கள் என்ற வழமையை அவன் நிஜத்திலும் எதிர்பார்க்கிறான் என்று கருதலாம். ராபர்ட் மற்றும் ஏதலைக் கிண்டல் செய்தாலும் அவனும் சிறார் காதலில் (crush) அவ்வப்போது விழுகிறான், அவர்கள் பெரும்பாலும் பெரியவர்களாக இருப்பதால் அவற்றின் முடிவைச் சொல்ல வேண்டியதில்லை. அவன் முகம் கொடுத்து கனிவாகப் பேசும் அவன் வயதையொத்த ஒரே சிறுமி ஜோன் (Joan). ராபர்ட்டின் அப்போதைய உயிர்க்காதலியொருத்தியிடம் மனதைப் பறிகொடுக்கும் வில்லியம், நிதர்சனத்தை உணர்ந்து தான் பெரியவனாகி திருமணம் செய்தால் ஜோனைதான் செய்வேன் என்று சூளுரைப்பதோடு “..I like you better than any insect, Joan’ என்றும் பெருந்தன்மையோடு கூறுகிறான்.

எனிட் ப்ளைடனின் நாவல்களில் இயற்கை வர்ணனைகள், சிறார் எழுத்துக்களில் எதிர்பார்ப்பதைவிட விரிவாகவே இருக்கும், எனினும் அது விதிவிலக்கே. சிறார் எழுத்துக்களில் சம்பவங்களுக்கே பெரும்பாலும் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது, தொடர்ந்து அதே பாத்திரங்களைப் பற்றியே நாவல்கள் வெளிவந்தாலும் புறச் சூழல் துல்லியமாக இராது. ஆனால் தான் வெளிவந்த காலகட்டத்தை, சமூகப் போக்கை பிரதிபலிக்கும் க்ராம்ப்ட்டனின் எழுத்து துல்லியமான புற உலகை, பின்புலத்தை உருவாக்குகிறது. அது குறித்து சில கேள்விகளும் எழுகின்றன. வில்லியமின் குடும்பம் நடுத்தர வர்க்கம் என்று தெரிகிறது. ஆனால் அவர்கள் வீட்டில் சமையல் செய்வதற்கு, பரிமாறுவதற்கு ஆட்கள் உள்ளனர், தோட்டக்காரர் உள்ளார், செடிகளுக்கென்று தனி தோட்ட வீடு உள்ளது. இது உண்மையில் சாத்தியமில்லாததா, அல்லது அன்றைய இங்கிலாந்தில் இயல்பான ஒன்றா என தெரியவில்லை. மிக எளிய நிலையில் இருந்து உழைப்பினால் பெரும் பணக்காரரான பாட்ஸ் (Botts) என்ற பாத்திரம் வரும் கதைகள் அனைத்திலும் அவருடைய மனைவி, கிராமத்தின் உயர்குடியுடன் தொடர்பு கொள்ள முயல்வதையும், அவர்களோ பாட்ஸ் குடும்பத்தை சற்று ஏளனமாக -அவர்கள் தரும் நன்கொடைகளுக்காக மட்டும் பொறுத்துக் கொள்ளும்- பார்ப்பதும் சுட்டப்படுகிறது. உயர்குடி பிறப்புக்கள் (nobility), நற்குடிமக்கள் (gentry), சமூக படிநிலையில் தங்களுக்கு அடுத்த கட்டத்தில் இருப்பவர்கள் முன்னேறுவதை -‘புதுப் பணக்காரன்’ என்ற ஏளன அடையாளத்தை இங்கு நாமும் சந்திக்கிறோம்- எப்படி எதிர்கொண்டிருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

போல்ஷவிக் (Bolshevik) பற்றி இந்தக் கதைகளில் காணக் கிடைக்கும் அச்சமும் குறிப்பிடத்தக்கது, ‘Reds’ என்று அழைப்படும் அவர்கள், கொலையாளிகளாக, சமூக அமைதியை சீர் குலைப்பவர்களாக அடையாளம் காணப்படுகிறார்கள். இவை ரஷ்ய புரட்சிக்குப் பின்னான, அது குறித்து அன்றைய இங்கிலாந்தில் இருந்த அச்சத்தின் பிரதிபலிப்பா, அல்லது க்ராம்ப்ட்டனும் அதையே முன்னிருத்துகிறாரா என்ற கேள்வி எழுகிறது. அதே போல் ‘heathens’, ‘savidges’ என்று மற்ற நாட்டினர் குறிப்பிடப்படுவதும் அந்த காலத்திய சமூகத்தின் பார்வையா அல்லது க்ராம்ப்ட்டனும் அப்படித்தான் மற்றவர்களை பார்த்தாரா என்றும் சந்தேகமெழுப்பலாம் (எனிட் ப்ளைடன் கதைகளில் நிறவெறி உள்ளது என்ற விமர்சனத்தையும் இங்கு நினைவு கூறலாம்).

எப்படி இருப்பினும் இத்தகைய சித்தரிப்புக்களை தங்களுக்கே தங்களுக்கான நீர்க்குமிழ் உலகங்களில் நடைபெறும் பெரும்பாலான சிறார் கதைகளில் பார்ப்பது அரிது. இவை அந்தக் காலத்திய இங்கிலாந்தின் சரியான சித்தரிப்பா என்பதை அப்போது வாழ்ந்தவர்கள், அந்தச் சூழலை நேரடியாக அனுபவித்தவர்கள் மட்டுமே உறுதிப்படுத்த முடியும், ஆனால் நூல்களின் புனைவுலகு என்று எல்லையைப் பொறுத்தவரை க்ராம்ப்ட்டன் உருவாக்கும் விரிவான சித்திரம், கதைகளுக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது. மேலும் கிராமத்தின் மெதுவான வாழ்க்கை, கேக், பிஸ்கட்டுடன் மதிய நேர தேநீர், காலை, மாலையில் தினமும் அதே நேரத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்பது, வேலை முடித்து வரும் தந்தை கதகதப்பான அடுப்பின் முன் அமர்ந்து ஆசுவாசமாக மாலை நேர பேப்பரை வாசிப்பது, இளைஞர்கள் நடத்தும் நாடகங்கள், நடன நிகழ்ச்சிகள், நற்செயல்களுக்காக பணம் திரட்ட பெரியவர்கள் நடத்தும் சந்தைகள் (fete) போன்றவை காலத்தில் உறைந்தவையாக, இன்றைக்கு பொருத்திப் பார்க்க முடியாததாக இருக்கக்கூடும். இருப்பினும் அந்த உறைந்த தன்மையே கடந்து போன காலத்தின் சாட்சியாகவும் உள்ளது.

முப்பதிற்கும் மேல் கதை தொகுதிகள் வெளிவந்துள்ள நிலையில், அதே பத்து பன்னிரெண்டு கருக்கள் (trope)- துப்பறியும் முயற்சி, திருமணம் செய்விக்க நினைப்பது, நாடகம் போடுவது, பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது, தனக்கான செல்வத்தைத் தேடி கடலோட வீட்டை விட்டு வெளியேறி சில மணி நேரங்களில் பல அவஸ்தையான அனுபவங்களுக்குப் பின் திரும்புவது- திரும்பத் திரும்ப வருவது சற்றே அலுப்பூட்டச் செய்யக் கூடியதுதான். ஆனால் அதையும் மீறி வாசகனை வில்லியமை தொடர்ச் செய்வது க்ராம்ப்ட்டனின் நகைச்சுவை ததும்பும் உரைநடை. (‘Crumbs’, ‘Shucks’, ‘Golly’ போன்ற இன்று அவ்வளவாக புழக்கத்தில் இல்லாத சொற்களும் உள்ளன என்பதையும் குறிப்பிட வேண்டும்).

வில்லியமின் நல்லெண்ணக் குறும்புகள் உருவாக்கும் சங்கடங்களில் உள்ள கோமாளித் (slapstick) தன்மை மட்டுமின்று நுட்பமான வார்த்தை விளையாட்டும் க்ராம்ப்ட்டன் எழுத்தில் உள்ளது. வில்லியம் பள்ளியில் படித்த- ஷேக்ஸ்பியர் குறித்த ஒரே ஒரு கட்டுரை வெளிவந்ததால் அவர் குறித்த ஆய்வாளராக தன்னை எண்ணும்- முன்னாள் மாணவர் ஒருவர் ஷேக்ஸ்பியர் நாடகத்தை பள்ளியில் நடத்த முன்வருகிறார். வில்லியமின் வகுப்பிற்கு வரும் அவர் பெகன் (Bacon) தான் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை எழுதியதாக தான் நம்புவதாக ஆரம்பிக்கிறார். ‘Dick of the Bloody Hand’ என்ற அவன் நண்பர்கள் மட்டும் படித்துள்ள கையெழுத்து பிரதியாக உள்ள நாவலை அவன் எழுதி இருப்பதால் வில்லியமிற்கு தானும் எழுத்தாளன் என்ற எண்ணமுண்டு, எனவே முன்னாள் மாணவருடன் உரையாடத் துவங்குகிறான்.

“..How could the other man Ham…”
“I said Bacon”
“Well, it’s nearly the same”
….
“Well, why’s he got his name printed on all the books then?…”And if this other man Eggs..”
“I said Bacon”

Bacon, Ham, Eggs என்ற வார்த்தை விளையாட்டுடன்,- அவற்றிற்கிடையே உள்ள தொடர்புடன் – இந்த உரையாடல் முடிவதில்லை. முன்னாள் மாணவர் ஹம்லேட் (Hamlet) குறித்து பேச ஆரம்பித்து விடுகிறார்.

“I want first to tell you the story of the play of which you are all going to act a scene… There was a man called Hamlet…”
“You just said he was called Bacon”
….
“This was a different man….. This man was called Hamlet and his uncle had killed his father because he wanted to marry his mother”
“What…I’ve never heard of anyone wanting to marry their mother”
“It was Hamlet’s mother he wanted to marry”
“Oh that man that you think wrote the plays”
“No that was Bacon”
“You said it was Ham a minute ago. Whenever I say it’s Bacon you say it’s Ham, and whenever I say it’s Ham you say it’s Bacon..”

“There’s a beautiful girl in the play called Ophelia, and Hamlet wanted to marry her”
“You just said he wanted to marry his mother”
“I did not. I wish you’d listen. Then he went mad and this girl fell into the river, It was supposed to be an accident but probably -”
“He pushed her in” supplied William
“Who pushed her?” demanded Mr.Welbecker irritably.
“I thought you were going to say that the man Bacon pushed her in”
“Hamlet, you mean”
“I tell you what,…. let’s say Eggs for both of them. Then we shan’t get so muddled. Eggs means whichever of them it was”
“Rubbish,”

என்று முன்னாள் மாணவர் கதறுவது நியாயம்தான். ஆனால் வில்லியமின் சந்தேகங்களில்- அவற்றை உருவாக்கும் வார்த்தைகளுக்கிடையே உள்ள தொடர்புகளை பார்க்கும்போது – நியாயம் உள்ளது என்று கூற முடியும் அல்லவா? இத்துடன் வில்லியம்/ க்ராம்ப்ட்டன் நிறுத்துவதில்லை. இந்த உரையாடல் குறித்த சுருக்கத்தை

“Please, sir, he told us that he thinks that the plays of Shakespeare were really written by a man called Ham and that Shakespeare poisoned this man called Ham and stole the plays and then pretended he’d written them. And then a man called Bacon pushed a woman into a pond because he wanted to marry his mother. And there’s a man called Eggs, but I’ve forgotten what he did except that -“

என்று தலைமையாசிரியரிடம் சொல்ல

Mr.Welbecker’s complexion had assumed a greenish hue.
“That will do, Brown,” said the headmaster very quietly.

இருவரும் வேறென்ன செய்திருக்க முடியும்?

இன்று க்ராம்ப்ட்டனின் எழுத்துக்கள் முன்பைப் போல் பரவலாக வாசிக்கப்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது. அவற்றின் இப்போதைய மதிப்பு என்ன? வில்லியமின் சேட்டைகளில் ஒன்றைப் பார்ப்போம். அவனும் அவனுடைய நண்பர்களும் ‘கை போக்ஸ்’ (Guy Fawkes) தினத்தன்று பட்டாசு வெடிக்க பெற்றோர்களால் தடை செய்யப்படுகிறார்கள். எனினும் அவர்களுக்குத் தெரியாமல், நால்வரும் பட்டாசுகளை சேகரித்து வெடிக்கத் தயாராகும்போது, அனைவரின் தந்தைகளும் இதை அறிந்து அவர்களிருக்கும் இடத்திற்கு வந்து, கடும் கோபத்துடன் பட்டாசுகளை பறிமுதல் செய்கிறார்கள். அடுத்து பிள்ளைகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டியதுதான் பாக்கி, சோகத்துடனும் பயத்துடனும் அவர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் இப்போது என்ன நடக்கிறது?

பட்டாசுகளை ஆராயும் தந்தைமார்கள் தங்கள் காலத்திய பட்டாசுகளுடன் ஒப்பிட ஆரம்பிக்கிறார்கள் -பிறகென்ன, எல்லா தலைமுறையையும் போல் தங்கள் காலத்தியதுபோல் இல்லை என்று குறை சொல்லவும் தவறவில்லை-, பின் தாங்கள் சிறுவர்களாக இருந்தபோது நான்கு பேரும் வெடித்துச் செய்த அமர்க்களங்களை நினைவு கூர ஆரம்பிக்கிறார்கள், இறுதியில் மகன்கள் அருகில் இருப்பதை மறந்து விட்டு தாங்களே வெடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். க்ராம்ப்ட்டன் நேரடி காட்சியாக இதை வர்ணிக்கிறார் அவ்வளவே. வாசகன் என்ன காண்கிறான்? நான்கு பெரியவர்கள் ஒரு அரை மணிநேரத்திற்காகவேனும் திரும்பவும் தங்கள் பால்யத்திற்கு சென்றுவிடுவதை. ஆம், வில்லியம் ஒரு தனி குழந்தை மட்டுமல்ல, அவன் குழந்தைமையின் பிரதிநிதி. அவன் தந்தையும் ஒரு காலத்தில் வில்லியமாக இருந்தவர்தான், வில்லியமின் மகனும் (ஒரு வேளை அவன் வளர்ந்து ஜோனை திருமணம் செய்து கொண்டால்) வில்லியம்தான், எல்லா குழந்தைகளும் ஒரு கட்டத்தில் வில்லியமாக மாறிய பின்னரே பெரியவர்களாகிறார்கள்.

எனவேதான், இந்தத் தொகுப்பில் இறுதி நூல் வெளி வந்து பதினைந்து வருடத்திற்கு மேல், எண்பதுகளின் இறுதியில், உலக வரைபடத்தில் மட்டுமே இங்கிலாந்தைப் பார்த்திருந்த சிறுவனொருவன் செங்கல்பட்டு நூலகத்தில் இருந்து எத்தேச்சையாக எடுத்த இந்த நூல்களின் மூலம் தன் பகற்கனவுகளை நிரப்பிக் கொள்ள முடிந்தது. புத்தாயிரத்தின் இரண்டாம் தசாப்தம் முடியப்போகிற இந்த காலகட்டத்தில்கூட உலகின் வேறேதோ மூலையில் இன்று வில்லியமை அறிமுகம் செய்து கொள்ளும் சிறுவன் அவனுடைய அ-சாகசங்களில் உவப்புடன் பங்கேற்பான்.

பின்குறிப்பு:

1. 39 தனி நூல்கள் கொண்ட இந்த தொடரில் ‘Just William’s Luck’ மட்டுமே நாவல், மற்ற அனைத்தும் சிறுகதை தொகுப்புக்களே. இவற்றை வரிசைக்கிரமமாக படிக்க வேண்டிய தேவையில்லை.

2. ரிச்மல் க்ராம்ப்ட்டன் பெரியவர்களுக்கான பல நாவல்களும், சிறுகதைகளும்கூட எழுதி இருக்கிறார், அவற்றையே தன்னுடைய உயரிய படைப்புக்களாகப் பார்த்தார்.