Author: பதாகை

அப்போதும் மரணம் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தது – -ஜிஃப்ரி ஹாஸன்

-ஜிஃப்ரி ஹாஸன் – 

பரபரப்பான சாலையில்
அவனுக்கும் சாவுக்குமான இடைவெளி
ஒரு சாண் தூரத்தில் இருந்தது
பரபரப்பான சாலையோரத்துக் கடைகளில்
அவன் ஜீவிதத்துக்கான
பொருட்களைத் தேடிக் கொண்டிருந்தான்
அப்போதும் சாவுக்கும் அவனுக்குமான
இடைவெளி
ஒரு சாண் தூரத்தில்தான் இருந்தது

சாலையோரப் பூங்காக்களை
வழமை போன்று இரசித்தான்
சாலையின் இரைச்சல்களை
வழமை போன்று செவிமடுத்தான்
தன் பயணப் பைக்குள்
வழமை போன்று கனவுகளைப் பத்திரப்படுத்தினான்

ஞாபகமாகக் குழந்தைகளுக்கு
வாங்கிய பலூன்களும் மிட்டாய்களும்
பையை நிறைத்ததும்
பரபரப்பான சாலையில் பறந்தான்
அப்போதும்
அவனுக்கும் சாவுக்குமிடையிலான இடைவெளி
ஒரு சாண் தூரத்தில்தான் இருந்தது

அவன் ஜீவிதத்துக்கான பொருட்களை
பையில் சுமந்து கொண்டு பறந்தான்
அவன் சாவு கனரக வாகனமொன்றின்
சில்லுகளில் ஒட்டியிருந்தது
நொறுங்கும் கண்ணாடிச் சில்லுகளின்
ஒலியும் அவனது கடைசி குரலும்
பரபரப்பான சாலையை ஆக்கிரமித்தபோது
சாவுக்கும் அவனுக்குமிடையிலான
இடைவெளி
ஒரு சாண் தூரத்தைக் கடந்து விட்டிருந்தது

விஷால் ராஜாவிடம் சில கேள்விகள் – நரோபா

நரோபா

புதிய குரல்கள் – 1 – விஷால் ராஜாவின் ‘எனும்போது உனக்கு நன்றி’யை முன்வைத்து’ – நரோபா 

உங்களைப்பற்றி- பிறப்பு, கல்வி…?

விஷால் ராஜா: 1993ம் வருடம் பிறந்தேன். படித்து வளர்ந்தது முழுக்க சென்னை புறநகரை சேர்ந்த திருநின்றவூரில். 2014ம் வருடம் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தேன். 3 வருடங்களாக தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இலக்கிய பரிச்சயம் எப்படி? எப்போது?

விஷால் ராஜா: சிறு வயதிலேயே நூலகம் அறிமுகம் ஆகிவிட்டது. இலக்கியம் சார்ந்த வாசிப்பு பள்ளி இறுதி ஆண்டுகளில் தொடங்கியது. கல்லூரி காலத்தில் தீவிரம் பெற்றது.

உங்கள்  முதல் கதை எப்போது வெளியானது?

விஷால் ராஜா:  2012 என நினைக்கிறேன். அச்சில் வெளியான முதல் கதை “ஞாபகங்களின் கல்லறை”. உயிர் எழுத்து பத்திரிக்கை.

எது உங்களை எழுதத் தூண்டியது? அல்லது ஏன் எழுதுகிறீர்கள்?

விஷால் ராஜா: எழுத்தைத் தவிர வேறெதுவும் அர்த்தமோ மன நிறைவோ அளிப்பதாக இல்லை.

உங்கள் ஆதர்ச எழுத்தாளர்கள் யார் ?

விஷால் ராஜா: ஒவ்வொரு நல்ல படைப்புமே எனக்கு ஏதோவொரு வகையில் உந்துதல் கொடுக்கிறது. எனவே ஆதர்சங்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் அசோகமித்திரன் மற்றும் ஜெயமோகன்.

கவிதைகள் எழுதியதுண்டா?

விஷால் ராஜா: ஆம். ஆரம்ப காலத்தில் நிறைய எழுதியிருக்கிறேன். சொல்வனம், வல்லினம் போன்ற இணைய இதழ்களில் அவை பிரசுரம்கூட ஆகியிருக்கின்றன. கவிதைகளை விரும்பி வாசிக்கிற ஒருவனாகவே நான் எப்போதும் இருந்திருக்கிறேன். ஆனால் புனைவே என்னுடைய வடிவம் என்பதில் எனக்கு தொடக்கம் முதலே தீர்மானமான எண்ணம் உண்டு.

சிறுகதைகள் உங்களுக்குரிய வடிவமாக உணர்கிறீர்களா?

விஷால் ராஜா: இப்போது யாரும் ஒற்றைச் சம்பவத்தையோ அல்லது ஒரு முரண்பாட்டையோ மட்டுமே குறிப்பிட சிறுகதை வடிவத்தை பயன்படுத்துவதில்லை. அப்படி இறுக்கத்திற்கும் கச்சிதத்திற்குமான வடிவம்தான் சிறுகதை என்று கூறினால் அது நிச்சயம் எனக்கான வடிவம் இல்லை. மாறாக அதன் எல்லைகள் விஸ்தீரணம் அடைந்திருக்கும் இன்றையச் சூழலில் சிறுகதையை நான் எனக்கான வடிவமாகவே உணர்கிறேன்.

நாவல் எழுதும் எண்ணமுண்டா?

விஷால் ராஜா: உறுதியாக உண்டு.

தமிழின் தற்கால இலக்கிய போக்கு குறித்து உங்கள் அவதானிப்பு என்ன?

விஷால் ராஜா: குழப்பமாக இருக்கிறது. நிறைய விஷயங்களை எதிர்மறையாக சொல்லலாம். ஒரு எழுத்தாளனாக என் மேலேயே எனக்கு பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.  சமூக வலைதளங்கள் பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கும் நிலையில் பொழுதுபோக்கு என்கிற அம்சம் எல்லா மட்டங்களிலும் தீவிரத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. நாம் கேளிக்கையை மட்டும் விரும்புகிறவர்களாக மாறிக் கொண்டிருக்கிறோம். பொதுபுத்தி என்பது இனிமேல் மசாலா திரைப்படங்களை மட்டும் சார்ந்தது அல்ல. வாசிப்பு மற்றும் எழுத்து செயல்பாடுகளுக்குள் நுழைந்துக் கொண்டிருக்கும் விட்டேத்தித்தனமும்தான்.  இக்கருத்தை சமீபத்தில் சபரிநாதன் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

உங்கள் முதல் சிறுகதை தொகுப்புக்கு எத்தகைய எதிர்வினைகள் வந்தன?

விஷால் ராஜா: நூல் வெளியாகி ஆறு மாதங்கள் ஆகியிருக்கின்றன. பெரிதாக கவனிக்கப்பட்டது என்று சொல்ல முடியாது. எழுத்தாளர்கள் ஜீ.முருகனும் கார்த்திகை பாண்டியனும் செல்பேசியில் அழைத்துப் பேசினார்கள். அது சந்தோஷமாக இருந்தது. மற்றபடி எந்த எதிர்வினையும் இல்லை. ஆனால் எனக்கு இப்புத்தகம் ஒரு சிறு அடையாளத்தை பெற்றுத் தந்துள்ளது. அதிகம் வாசிக்கப்படவில்லை என்றாலும்கூட.

நவீன தொழில்நுட்பம் இலக்கியத்தின் மீது என்ன வகையான தாக்கத்தைச் செலுத்தியுள்ளதாக எண்ணுகிறீர்கள்?

விஷால் ராஜா: நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் நம் வாழ்க்கையே முற்றிலுமாக உருமாறி கலவையான புது வடிவத்தை எட்டியுள்ளது. அது நம் சிந்தனை முறையிலும் மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறது. எனவே இலக்கியத்திலும் பேசுபொருள் சார்ந்து அது அதிக தாக்கத்தை உண்டு பண்ணும் என நான் நம்புகிறேன். தொழில்நுட்ப முன்னேற்றத்தோடு சமூக அழுத்தங்களும் உறவுச் சிக்கல்களும் புதுப்புது உருவங்கள் பெறுகின்றன. அவற்றை எழுத்தில் பேசாமல் இருக்க முடியாது. அதுவே தாக்கத்தின் முதல் படிதான்.

எழுதி முடித்த கதைகளை திருத்துவது வழக்கமா? வெளியான பின்னர் தொகுப்புக்காக திருத்துவது உண்டா?

விஷால் ராஜா: எழுதி முடித்த பிறகும் வாக்கிய அமைப்பிலும் வார்த்தைத் தேர்வுகளிலும் நிறைய திருத்தங்கள் செய்வேன். முதல் தொகுப்பிற்காக கதைகளை சேர்த்தபோது அதிகம் மாற்றங்கள் தோன்றவில்லை. ஆனால் கதைகளைத் திருத்துவதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.

அடுத்தடுத்த திட்டங்கள் என்ன?

விஷால் ராஜா: முதல் புத்தகத்தின் மீது எனக்கே அவ்வப்போது சின்ன சந்தேகமும் விலக்கமும் தோன்றுகின்றன. அப்படியான எந்த ஐயப்பாடும் இனி எழாத வகையில் தொடர்ந்து எழுத வேண்டும். இப்போது ஒரு குறுநாவல் எழுத ஆரம்பித்திருக்கிறேன். சிறுகதை, நாவல் என்று தீவிரமாகச் செயல்பட விரும்புகிறேன்.

நன்றி, வாழ்த்துகள் விஷால்.

அரிநிழல் -காலத்துகள்

காலத்துகள்

நாடார் பத்து பைசாவிற்கு இங்க் ஊற்றிக் கொண்டிருக்க, பின்னணியில் ராதா மாணிக்கம் இயேசுவின் ஜீவித சரிதத்தை பாடிக் கொண்டிருந்தார். அடுத்து ஜாலி அப்ரஹாம் பாட ஆரம்பிப்பார். ‘ஜாலி’ என்பது பெயரின் பகுதியா அல்லது அடைமொழியா என்பது நாடாருக்கும் தெரியவில்லை. தினமும் காலையில் இரண்டு மூன்று முறையாவது நாடார் கடைக்கு வருவது வாடிக்கை, பாடல் வரிகளும், அவை ஒலிபரப்பாகும் வரிசையும் அத்துப்படி. அடுத்த வருடத்தில் இருந்து இவனும் பேனா உபயோகிக்கலாம். இன்று ஒரு தகவல் ஆரம்பித்திருக்கக்கூடும், அதன் இறுதியில் வரும் குட்டிக்கதையையேனும் கேட்டு விட வேண்டும்.

தேங்காய் பத்தைகளை வாங்கிக் கொண்டு திரும்பினான், மதியம் மிளகாய்ப்பொடி தடவிய இட்லிகள். இரண்டு அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும், சந்துருவுக்கு பிடிக்கும். நாளை சனி, பள்ளி இல்லை, இன்று மாலையே எல்லா வீட்டுப்பாடத்தையும் எழுதி முடித்து விட வேண்டும், பின் இரண்டு நாட்கள் செய்ய நிறைய உள்ளது. அடுத்த தெருவில் இருக்கும், வெளியிலிருந்து மட்டும்எ ட்டிப் பார்த்திருக்கும் ஐஸ் பேக்டரிக்குச் சென்று உள்ளே விடுவார்களா என்று கேட்டுப் பார்க்கலாம், டப்பா ஸ்கூலும், ஸ்ரீனிவாசா தியேட்டர் மைதானமும் தவிர்த்து ஆர்ட்ஸ் காலேஜ் க்ரவுண்டிற்கு செல்லலாம், எதுவும் இல்லாவிட்டால் வீட்டின் பின்னாலேயே விளையாடலாம். எதிரே பாட்டி வந்து கொண்டிருப்பதைப் பார்த்து அவரிடம் ஓடிச்சென்று ‘என்ன தாத்தி, வேறேதாவது வாங்கணுமா’ என்று கேட்டான். தலையசைத்து திரும்பி நடக்க ஆரம்பித்தவர், இவன் முழங்கையை பற்றிக் கொண்டு ‘தாத்தி ஒண்ணு கேட்டா உண்மையைச் சொல்லணும் என்ன. நீதானே சாவி மேகஜீன்ல வரஞ்சு வெச்சிருக்க’ என்று கேட்டார்.

‘ஹிந்து’ மற்றும் ‘எக்ஸ்பிரஸ்’ மட்டும் வீட்டில் அதிகாரபூர்வமாக வாங்குவது. பேப்பர் விநியோகிக்கும் ஸ்ரீதர் கிட்டத்தட்ட அனைத்து மாத வார- ராணி காமிக்ஸ், பூந்தளிர் போன்ற சிறார்- இதழ்களையும் போட்டுவிடுவார். ‘ஞான பூமியை’கூட வீட்டில் பார்க்க முடியும். இதற்காக தனியாக ஏதேனும் பணம் வாங்கிக் கொள்வாரா என்று தெரியவில்லை. சாவியில் ஆறேழு வாரமாக மாந்த்ரீகத் தொடர் ஒன்று வந்து கொண்டிருக்கிறது. கல்லூரி விரிவுரையாளர், அவரிடம் பயில்பவர்கள், இன்னும் சில பாத்திரங்கள். இதுவரை யார் நல்லவர், கெட்டவர் என்பது பிடிபடவில்லை.

‘நா எதுவும் பண்ணலயே தாத்தி’ என்று சொன்னதற்கு, ‘ஏய்ய் பொய்ய் சொல்லக்கூடாது, வேற யார் பண்ணிருப்பா அப்ப, நீ சொல்லு’ என்றார்.

‘என்ன சொல்றேன்னே புரியல தாத்தி, அந்த புக்குக்கு என்னாச்சு’. இதையே மீண்டும் மீண்டும் பேசியபடி சந்தினுள் நுழைந்திருந்தார்கள்.

இந்த வார அத்தியாயத்தில் படுக்கையின்மீது ஒரு காலை முட்டி போட்டபடி இரவு ஆடை அணிந்து கொண்டிருக்கும் பெண்ணொருத்தி எழும் ஓவியம். ஆடையினுள் அவள் அணிந்திருக்கும் உள்ளாடையின் உருவரை தெளிவாகத் தெரிந்தது. பெண்களும் ஜட்டி அணிவார்கள் என்றும், அதை ‘பேண்டீஸ்’ என்று கூறுவார்கள் என்றும் இரண்டு வருஷம் முன்னால்தான் அறிந்து கொண்டான். முக்கோணத்தை திருப்பிப் போட்டது போன்ற பேண்டீஸின் உருவரையை அவ்வப்போது யாரும் கவனிக்காதவாறு பார்த்துக் கொண்டிருந்தான். இன்னும் இரு நாட்களில் அடுத்த இதழ் வந்து விடும், நேற்று இரவுதான் அந்த உருவரையின் கோடுகளின் மீது சிவப்பு நிற ஸ்கெட்ச் பென்னினால் அழுத்தி முக்கோணத்தை இன்னும் அடர்த்தியாகவும், துல்லியமாகவும் ஆக்கினான்.

சுந்தரி அக்கா போர்ஷனை தாண்டும்போதே வீட்டினுள் உரத்த குரலில் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருப்பது கேட்டது. உள்ளே நுழையும்போது ‘சாவியை’ கையில் வைத்துக் கொண்டு ‘அதான் சொல்றேனே, இந்த வார இஷ்யு காணலையேன்னு தேடும்போது புக்ஸ்ல எங்கேயாவது போட்டிருப்பானோன்னு பாத்தா கெடச்சுது, அட்டைல இருக்கற பொண்ணு மூஞ்சில ரெட் ஸ்கெட்ச்ல நாமம் போட்டிருக்கான், எதோ விளையாட்டா பண்ணிருக்கான்னு நெனச்சேன், அப்பறம் உள்ள பாத்தா இப்படி பண்ணிருக்கான்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். இவனைப் பார்த்ததும் ‘ஏண்டா இப்படி பண்ணின?’

“…”

‘நீ பண்ணலனா யார் பண்ணா, நைட் பூதம் வந்து வரஞ்சுதா’

“…”

‘புஸ்தகத்துக்கு கால் மொளச்சு தானா நடந்து வந்து ஒன் புக்ஸ்ஸோட வந்து ஒக்காந்துகிச்சா’

அனைத்திற்கும் ‘எனக்கு தெரியாதுமா’, ‘நா பண்ணல’, ‘அது எப்படி என் புக்ஸ் வந்துதுன்னு தெரியாது’, ‘வந்தனிக்கே அத படிச்சு முடிச்சுட்டேன்’ என்று பதில் சொல்லிக் கொண்டிருந்தான். சத்தம் கேட்டு வந்த சுந்தரி அக்காவிடமும் விஷயத்தைச் சொல்ல புத்தகத்தை புரட்டி உடனேயே திருப்பித் தந்து விட்டார்.

‘என்ன சுந்தரி சிரிக்கற’ என்று அம்மா கேட்க, ‘சின்ன பையன்தானே தெரியாம செஞ்சிருப்பான், விட்ருங்கக்கா’ என்றார். ‘அதில்ல சுந்தரி, சரி ஏதோ பண்ணிட்டான், அத ஒத்துக்கலாம்ல ஒழக்கு மாதிரி இருந்துட்டு என்ன அழுத்தம், தெரியாது தெரியாதுன்னு சொல்லிட்டே இருக்கான்’ என்றார். அவர் தன் போர்ஷனுக்குச் செல்லும்வரை தலை நிமிராமல் இருந்தான்.

‘தோ பார்டா அம்மா அடிக்க மாட்டேன், அப்பாவும் மாட்டா, தப்பு செஞ்சிருந்தா ஒத்துக்கணும், அதுதான் நல்ல மனுஷத்தனம்’ என்பதை திரும்பத் திரும்ப சிற்சில மாற்றங்களுடன் சொல்லிக் கொண்டிருந்த அம்மா எட்டு மணிக்கு மேல் பள்ளிக்கு கிளம்பினார்.

இன்னும் குளிக்கக்கூட இல்லை. ‘போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடுடா’ என்றார் பாட்டி. தட்டில் இட்லியை வைத்து விட்டு, தன் நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு, ‘தாத்தி சொன்னா கேக்கணும் சரியா, தாத்திய ஒனக்கு பிடிக்கும்ல’ என்று சொல்ல தலையாட்டினான். ‘அப்போ ஏன் அப்படி பண்ணினே சொல்லு, அப்பத்தான் தாத்திய ஒனக்கு பிடிக்கும்னு நம்புவேன்’.

“—“

‘இது ஒண்ணு பெரிய தப்பில்லையே, நா ஸ்கூல்ல படிக்கும் போது எங்க மிஸ் ஸ்கர்ட்லதான் வருவா, சைக்கிள்ள அவங்க ஏறர டைம்ல நாங்க குனிஞ்சு பாப்போம்’ என்று அப்பா சொன்னதை இடைமறித்து ‘ஏண்டா கொழந்தட்ட பேசற பேச்சா இது’ என்றார் பாட்டி. ‘அதுக்கில்லமா, இது ஒரு நேச்சுரல் க்யுரியாசிடி தான்னு சொல்ல வரேன், ஆனா அத நான் பண்ணலேன்னு சாதிக்கறான் பாரு அது தான் தப்பு’.

‘ஏண்டா நாலு இட்லியோட நிறுத்திட்ட’ என்று பாட்டி சொல்லச் சொல்ல கையலம்ப வெளியே சென்றான். கிணற்றடியில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த சுந்தரி அக்கா நிமிர்ந்து பார்க்க, அவர் பார்வையைத் தவிர்த்து விட்டு கைகழுவிக் கொண்டு உள்ளே வந்து பள்ளி சீருடையை அணிந்தான்.

ஷூ போட்டுக் கொண்டிருக்கும்போது மீண்டும் அருகே வந்த பாட்டி ‘அப்போ நீ சொல்ல மாட்டேல்ல, பாட்டி மேல ஒனக்கு அப்போ கொஞ்சம் கூட பாசம் கெடையாது அப்படித்தானே’ என்றார். ‘என்ன பாட்டி, நான் தான் செய்யலங்கறேனே, யார் அத பண்ணாங்கன்னு எனக்கு தெரியாது’

‘அப்போ நான், ஒன் ஸ்கூலுக்கு வந்து டீச்சர்ட்ட, ஹெச்.எம்கிட்ட சொல்றேன், அவங்க கண்டுபிடிப்பாங்க’ என்று அவர் சொல்ல, ‘என்ன பாட்டி இதெல்லாம் போய் ஸ்கூலுக்கு வரேங்கற, அவங்க என்ன பண்ணுவாங்க’ என்று ஒரு காலில் மட்டும் ஷூவோடு எழுந்து நின்றபடி கத்தினான். ‘அப்ப நீ உண்மைய சொல்லு, இல்லேனா நான் கண்டிப்பா ஸ்கூலுக்கு வருவேன், எனக்கென்ன’ என்று பாட்டி மீண்டும் சொல்ல, ‘நீ என்ன வேணா பண்ணிக்கோ’ என்று சொல்லியபடி மீண்டும் அமர்ந்து மற்றொரு காலிலும் ஷூவை அணிந்தான். வாசற்படியை தாண்டியபின் மீண்டும் உள்ளே வந்து ‘ஸ்கூலுக்குலாம் வராதே தாத்தி’ என்று சொல்ல, ‘நீ தான் ஒத்துக்க மாட்டேங்கறல, அப்ப நான் கண்டிப்பா வருவேன்’ என்றார்.

ஐந்து நிமிட நடை தூரத்தில்தான் பள்ளி என்றாலும் எட்டரை, அதிகபட்சம் எட்டே முக்கால் மணிக்கெல்லாம் மதிய உணவை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவது வழக்கம். முதல் மணி அடிக்கும்வரை விளையாட்டும், மதிய உணவு இடைவேளையின்போது பத்து நிமிடங்களுக்குள் சாப்பிட்டு முடித்து பின் மீண்டும் ஆட்டம். இன்று கிளம்ப ஒன்பது ஐந்தாகி விட்டது. சந்தைக் கடந்து மெதுவாக நடந்து சென்றுகொண்டிருந்தான்.

போன வருடம் மரத்தடியில் வினோலியா மிஸ் க்ளாஸ் எடுத்துக்கொண்டிருக்கும் போது எதிரே இருந்த ஐந்தாம் வகுப்பு பி பிரிவில் இருந்து பத்மினி மிஸ் வெளியேறி வேகமாக நடக்க ஆரம்பிக்க பின்னால் இரு மாணவர்கள். ஒருவனின் பெயர் விக்கி என்பதைத் தவிர அவர்களைப் பற்றி வேறு எதுவும் தெரியாது. பத்மினி மிஸ் கையில் ஏதோ புத்தகம். இவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அருகில் வரும்போது, இரு மாணவர்களும் அழ ஆரம்பித்திருந்தார்கள். வினோலியா மிஸ் என்னவென்று கேட்க ‘க்ளாஸ்ல பாருங்க மிஸ், மேகஸின் படிக்கறாங்க’ என்று அந்த புத்தகத்தை உயர்த்திக் காட்டினார். ‘ஆனந்த விகடன்’. இவர்களைக் கடந்து தலைமையாசிரியர் அறை நோக்கி மிஸ் செல்வதை, இருவரும் அவரின் முன்னால் சென்று மன்றாடுவதை, மிஸ் விலகி முன்னே செல்ல, பின்னால் சில அடிகள்நடந்து மீண்டும் அவர் முன்னே சென்று கெஞ்சுவதை குனிந்தபடி ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான். வாயசைப்பில் இருந்து அவர்கள் ‘ஸாரி மிஸ், வேணாம் மிஸ்’ என்று மீண்டும் மீண்டும் சொல்வது தெரிந்து.

சாலையைக் கடப்பதற்கு பதில் பள்ளியை தாண்டிவிட்டிருந்தான். திரும்பி சில அடிகள் எடுத்து வைத்து நின்றான். முதல் மணி அடித்திருப்பார்கள். பள்ளி வாசலில் கூட்டம் அதிகமாக இல்லை, கடைசி நேரத்தில் வரும் ஒரு சிலர் மட்டும். இப்போது சென்றாலும், காலை வழிபாட்டில் கலந்து கொள்ள முடியாது, வெளியில்தான் நின்றிருக்க வேண்டும். ப்ரேயர் முடிந்து தலைமையாசிரியை வந்து தாமதமாக வந்ததற்கு கொடுக்கும் தண்டனையை வாங்கியபின் தான் உள்ளே செல்ல முடியும். அதற்குள் பாட்டியும் பள்ளிக்கு வந்து விடலாம், இந்நேரம் கிளம்புவதற்கு தயாராகிக் கொண்டிருப்பார், கிளம்பிக்கூட இருக்கலாம். மீண்டும் திரும்பி வேதாச்சல நகருக்குள் நுழைந்து நடக்க ஆரம்பித்தவன், புதிய பேருந்து நிலையம் வர அதனுள் நுழைந்தான்.

தாம்பரம் செல்லும், டி.சிக்ஸ்டி, அம்மா பெரும்பாலும் பள்ளிக்கு இதில்தான் செல்வார். நிறைய தனியார் பேருந்துகள். பயணிகள் அமரும் இடத்தில் இருந்த பெஞ்சில் அமர்ந்து, வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்தான். சிறிது நேரத்தில் நிலையம் சற்று அமைதியடைய ஆரம்பித்தது. அருகில் அமர்ந்திருந்தவர் கையில் கடிகாரம் இல்லை, எழுந்து அங்கிருப்பவர்களின் மணிக்கட்டை பார்த்தபடி நடந்தான். பத்தேகால். மீண்டும் அதே பெஞ்சிற்கு வந்தமர்ந்தான். எதிரே பூ விற்றுக் கொண்டிருந்த பெண் இவனையே கவனிக்க எழுந்து வேறு இடத்திற்கு செல்லும் போது டையை அவிழ்த்துக் கொண்டபின், சட்டையை ட்ரவுசரில் இருந்து வெளியே எடுத்துவிட்டுக் கொண்டான்.

ஒவ்வொரு இடத்திலும் கொஞ்ச நேரம் அமர்ந்திருப்பது, பின் நிலையத்தினுள் சுற்றி வருவது. பேருந்து நிலைய கழிப்பறைக்குள் நுழையாமல், அதன் முன் சில கணங்கள் நின்றிருந்தான். புத்தகப்பையுடன் எப்படி உள்ளே செல்ல. சற்று தள்ளி வைத்து விட்டு அவசரமாக உள்ளே நுழைந்தான். மலம் கழிக்கும் அறைகள் மட்டும்தான். நுரைத்துத் தள்ளி கழிவறை துளை வரை வந்திருக்கும் மலம். சட்டையின் மேற்பகுதியை மூக்கின் மீது இழுத்து விட்டுக் கொண்டான். வெளியே வந்து சட்டையை மூக்கிலிருந்து எடுத்துவிட்டு நன்கு மூச்சை உள்ளிழுத்துக் கொண்டபோது, இன்னும் கடுத்தது. இன்னும் சிறிது நேரத்தில் கழிவறையை சுத்தம் செய்யக் கூடும், அதன் பின் மீண்டும் செல்லலாம்.

கூட்டம் குறைவாக இருந்த இடத்திற்கு சென்றான், அங்கு அமர்ந்திருந்தவரின் மணிக்கட்டில் பன்னிரெண்டரை ஆகியிருந்தது. பொதுவாக ஒரு மணிக்கு சாப்பிடும்போதுகூட இப்படி பசித்ததில்லை. சாப்பிட ஆரம்பித்தவன் நிமிரும்போது நிலைய வளாகத்தின் மறு முனையில் கழிவறையில் இருந்து வெளியே வருபவரைப் பார்த்தான். இரண்டு இட்லிகளுடன் எழுந்தவன், மீதி இட்லிகளை அங்கு அலைந்து கொண்டிருந்த நாயின் முன் வைக்க அது உண்டு முடித்தது. டிபன் பாக்ஸ்சை கழுவியபின், நிலையத்தில் நின்றிருந்த பேருந்தொன்றில் சென்றமர்ந்தான். உள்ளே இவனும் காக்காயொன்றும்.

போன வருடம் ஸ்டவ் எரியாமல் தொல்லை கொடுக்க, காலை விடுமுறை எடுக்கச் சொன்னார்கள் வீட்டில். மறுத்து விட்டு பள்ளிக்குச் சென்றவனின் வகுப்பிற்கு, இரண்டாம் பீரியட் முடியும் தருவாயில் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வந்துவிட்ட பாட்டி, முதல் இன்டர்வெல்லின்போது அனைவரும் பார்த்தபடி இருக்க, இவனை சாப்பிடச் செய்த பின்னரே கிளம்பினார், மதிய உணவிற்கான டிபன் பாக்ஸை வைத்து விட்டு. அதன் பின் ‘பப்பா’, ‘கொயந்த’, ‘வீட்லனா ஊட்டி விட்டுருப்பாங்கல’ என்று நண்பர்களின் கேள்விகள்.

இந்நேரத்திற்கு பள்ளிக்குச் சென்றிருப்பார். வகுப்பில் இல்லை என்பதை அறிந்தவுடன் அம்மாவிற்கு தகவல் சொல்லிவிடுவார்கள். அவர் வேலை செய்யும் பள்ளியில் தொலைபேசி உண்டு, வீட்டிலோ, தெரிந்தவர்களிடமோ கிடையாது. டெலிக்ராம் ஆபிஸ் சென்றுதான் அழைக்க முடியும். அம்மா அடித்துப் பிடித்துக் கொண்டு வரும்போது இங்குதான் இறங்க வேண்டும். பள்ளியில் இந்த விஷயம் பரவியிருக்கும், வினோலியா மிஸ்தான் இந்த வருடம் க்ளாஸ் டீச்சர், மிகவும் அன்பானவர், கோபப்பட்டு பார்த்ததில்லை.

இவனுக்கு மிகவும் பிடித்த டீச்சர். ஏதேனும் பேருந்தில் ஏறி எங்கேயாவது சென்று விடலாம், கையில் கொஞ்சம்கூட காசு இல்லை. பேருந்தினுள் பயணிகள் வந்தமர ஆரம்பிக்க இறங்கி காலியாக இருந்த இன்னொரு பேருந்தினுள் ஏறினான்.

வரலாற்றுப் புத்தகத்தை திறந்தால், இடது பக்கத்தின் எண் ஐம்பத்தி நான்கு, நான்கு ரன். புத்தகத்தை மூடித் திறந்தான், எழுவத்தி இரண்டு, ஸ்கோர் ஆறு. அடுத்தது தொண்ணூற்றி ஆறாம் பக்கம். ஸ்கோர் பண்ணிரண்டு. அடுத்து நாற்பது. முதல் விக்கெட் அவுட். பத்தாவது விக்கெட் விழும்போது ஸ்கோர் எழுவத்தி எட்டு, தொடர்ந்து மூன்று முறை பூஜ்யத்தில் முடியும் பக்க எண்கள் வந்துவிட்டன.

எழுவத்தியெட்டை இலக்காக கொண்டு அடுத்த இன்னிங்க்ஸ் ஆரம்பிக்கும்போது ‘சீக்கரம் ஏறித் தொலை’ என்று கத்தியபடி வண்டியினுள் ஏறியவருக்குப் பின் கையில் இரு மூட்டைகளுடன் ஒரு பெண்ணும் இவனை விட ரெண்டு மூன்று வயது கூடுதலாக இருக்கக்கூடிய சிறுவனொருவனும் வந்தார்கள். அவனும் பையொன்றை வைத்திருந்தான். முன்னிருக்கையில் அமர்ந்தபடி ‘பால்லாம் கரெக்ட்டா உற குத்தி வெச்சியா, கெட்டுபோவப் போகுது, சாம்பார், கொழும்புன்னு எதையாவது அப்படியே வெச்சுட்டு வந்திருக்கப் போற, திங்கக்கெழம வரும்போது கப்படிக்கும், ‘அந்தப் பையை நல்லா உள்ள வை, இல்லனா கால்ல இடிக்கும்.’ என்று உரத்த குரலில் அம்மனிதர் சொல்ல ஜன்னல் வழியே வெளியே பார்த்தபடி தலையை மட்டும் அசைத்தார் அந்தப் பெண். ‘டேய் ஜன்னல் சீட்ல ஒக்காராத இங்க வா’ என்று சிறுவனை இவனருகில் உட்காரச் செய்தார். ‘கையை ஜன்னல் கம்பி மேல வெக்காத வண்டி ஓட்டும்போது சைட்ல வேற வண்டி வந்தா அடிபடும்’ என்று அந்தப் பெண்ணிடம் அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது பேருந்தை விட்டு இறங்கினான்.

சிறுநீர் முட்டிக் கொண்டு வந்தது, கழிவறையின் அருகே செல்லும்போதே நாற்றமடித்தது. விலகிச் சென்று சுற்றிப் பார்த்தான். நிலையத்தின் ஒரு ஓரத்தில் வெளியிலேயே சுவரோரம் சிறுநீர் கழிக்கிறார்கள். சிறிது நேரத்திற்குப்பின் அங்கு சென்றான். அடிவயிற்றில் வலியுடன் இணைந்த கிளர்ச்சி, வலது கையை சுவற்றில் வைத்துக் கொண்டான். சிறுநீர் கழித்து முடித்த பின்பும் குறியின் நுனியில் ஊசி குத்துவது போன்ற வலி. நிலையத்தில் இருந்த கடையின் முன் டீ குடிக்கும் கூட்டம், கோகுலத்தின் இந்த இதழ் வந்து விட்டது, ஸ்ரீதர் நாளை போட்டு விடுவார், இந்த வார சாவியை பார்த்ததும் அங்கிருந்து விலகி முதலில் அமர்ந்த இடத்திற்கே வந்தான்.

‘என்ன தம்பி காத்தாலேந்து இங்கயே சுத்திட்டு இருக்க, இஸ்கூலுக்கு போலையா’ என்றார் பூக்காரம்மா. ‘இல்லையே கொஞ்ச நேரம்தான் இங்க இருந்தேன், ஒடம்பு சரில. அப்பறம் ஸ்கூல் போயிட்டேன்’.

‘இஸ்கூல்லு வுட்ற நேரமாலியே’ என்றவர், அங்கு பேருந்திற்காக நின்றிருந்தவரிடம் மணி கேட்டுவிட்டு,. ‘நாலற ஆவலியே அதுக்குள்ள வந்துட்ட’ என்று சொன்னார்.

‘கட் அடிச்சிருப்பான், இந்த வயசுலேயே’ என்றார் மணி சொன்னவர்.

‘எந்த ஊரு ஒனக்கு, வீட்ட விட்டு ஓடி வந்துட்டியா, இந்த நேரம்னு பாத்து எந்த போலீஸும் இல்லை’ என்று பூக்காரம்மா ஆரம்பிக்க, ‘ஐயோ இல்ல, நெஜமா எனக்கு ஒடம்பு சரியில்ல’ என்றான்.

அங்கு வந்து நின்ற பேருந்தில் மணி சொன்னவர் ஏற, ஒரு பெண் பூ வாங்க வந்தார். வீட்டிற்குச் செல்ல திரும்பினான். ஒருவேளை இவனைக் காணாமல் வீட்டினர் பயந்து போய் எதுவும் சொல்லாமல் விட்டுவிடக் கூடும். நிலையத்தின் வாயிலை அடைந்தவுடன் திரும்பிப் பார்த்தான். இன்னுமொரு பெண் பூ வாங்க வந்திருக்க பூக்காரம்மா அவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

வேதாச்சல நகர் முனையில் இருந்து பார்த்தபோது பள்ளி வாசலில் எந்த அரவமும் இல்லை. டையை கட்டிக் கொண்டு, சட்டையை உள்ளே திணித்துக் கொண்டு, சற்று தூரம் சென்று காப்பி அரைக்கும் கடைக்கு சற்று முன்பு மரத்தடியில் நின்று கொண்டான். மூன்றாம் வகுப்புக்களுக்கு நேர் எதிரேதான் கடை, பாட்டி ஒரு முறை காப்பி அரைக்க வந்ததை வகுப்பின் ஜன்னல் வழியாக பார்த்திருக்கிறான்.

மணி அடிக்கும் சப்தம் மிக மெல்லியதாக. முதல் மாணவர்கள் வெளியே வர ஆரம்பிக்கிறார்கள், ஓட்டமும் நடையுமாக சென்று ரோட்டை கடப்பவர்களுடன் சேர்ந்து கொண்டான். கூடப் படிப்பவர்கள் பார்க்கும்முன் வீட்டிற்குச் சென்று விட வேண்டும். இவனுக்கு என்னவாயிற்று என்று சந்துரு யோசித்துக் கொண்டிருந்திருப்பான். சந்து முனையில் யாரும் நிற்கவில்லை, உள்ளே காத்துக் கொண்டிருக்கக்கூடும்.

தன் போர்ஷனின் முன் மல்லாட்டை உடைத்துக் கொண்டிருந்த சுந்தரி அக்கா அவற்றை கையில் அள்ளி நீட்டி ‘இந்தா எடுத்துக்கோ’ என்றார். ‘பசிக்கலக்கா’ என்று விட்டு தன் போர்ஷனுள் நுழைந்தான்.

‘டூ இன் ஒன்னில்’ அப்பா பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார், ‘ட்ரெஸ் மாத்திட்டு வா காபி தரேன். புள்ளாண்டான் சட்ட காத்தால இன் பண்ணினது அப்படியே இருக்கு மழதான் பெய்யப் போறது போ’ என்றார் பாட்டி. தெரியாதது போல் நடிக்கிறார். தனியாக கூப்பிட்டுக் கேட்கக் கூடும் அல்லது அம்மா வருவதற்காக காத்துக் கொண்டிருக்கலாம். ஒரு வேளை தலைமையாசிரியை இவன் பள்ளிக்கு வராதது குறித்து அறிந்திராமல் பாட்டியுடன் பேசியிருக்கக் கூடும்.

சிறிது நேரம் கழித்து ‘என்ன ஹோம்வர்க் எழுத ஆரம்பிக்கல, ப்ரைடே சாங்காலமே முடிச்சுடுவே அப்பத்தான் ரெண்டு நாளு ஜாலியா இருக்கலாம்ப’ என்று பாட்டி கேட்க புத்தகங்களை எடுத்துக் கொண்டு அமர்ந்தான். நாளை சந்துரு வீட்டிற்குச் சென்று என்ன வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று கேட்டுக் கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களாக செய்து கொண்டிருக்கும் ஸ்வெட்டர் பின்னும் வேலையை பாட்டி தொடர்ந்தார். நடுவில் ஊசியில் நூலைக் கோர்க்கும்படி இவனிடம் கேட்டார். கண்டிப்பாக அம்மாவிற்குத்தான் காத்திருக்கிறார்கள்.

அம்மா வந்த பின் உடை மாற்றிக்கொள்ள உள்ளே செல்ல, சிறிது நேரம் கழித்து பாட்டியும் அங்கு போனார். இனி அவர்களுக்குள் பேசி விட்டு ஆரம்பிப்பார்கள். வெளியே வந்த பின் சிறிது நேரம் இவனுடன் பேசிக்கொண்டிருந்தார் அம்மா.

திங்கட்கிழமை பள்ளிக்கு வரத்தான் திட்டமிட்டிருக்கிறார்கள். ஹெச்.எம் கண்டிப்பானவர், காலை இறைவணக்கத்தின்போது ஸ்டேஜிற்கு வரச் செய்து எல்லோர் முன்னிலையிலும் இவன் செய்ததை சொல்லக்கூடும், அவர் கையில் சாவி, அனைவர் பார்வையும் இவன் மீது. நிறைய வீட்டுப்பாடங்கள் கொடுத்துள்ளார்களா, சந்துரு இன்று மாலை வர வாய்ப்பில்லை, நாளை காலை முதல் வேலையாக அவன் வீட்டிற்குச் சென்று அது குறித்து கேட்டு விட்டு, இன்று வராததற்கு ஏதேனும் காரணம் சொல்லி விட வேண்டும்.

மாலையில் பாட்டி வீட்டு உரிமையாளர் மனைவியுடன் அரட்டையடிக்கக் கிளம்பினார், அப்பா உள்ளறையில் அன்றைய தினசரியை மீண்டும் புரட்டியபடி. அம்மா சமையலறையில், அங்கு சென்றான். வேக வைத்த உருளைக்கிழங்குகளை தோலுரித்து உப்பு தடவிக் கொண்டிருந்தவர் ‘எடுத்துக்கடா’ என்றார். எதுவும் சொல்லாமல் திரும்பியவன், சில நிமிடங்கள் கழித்து மீண்டும் சென்று ‘தாத்தி ஸ்கூலுக்கு வந்து ஹெச்.எம்ம பாத்து சொல்லப் போறேன்னு சொன்னாம்மா’ என்றான். தக்காளி துண்டுகளை தள்ளி வைத்து விட்டு வெங்காயத்தை நறுக்க ஆரம்பித்தவர் திரும்பாமல் ‘பின்ன நீ இப்படி பண்ணினா அப்படித்தான் செய்வா’ என்றார்.

‘தாத்தி ஸ்கூலுக்கு வந்தாளாமா, நா ஒண்ணும் பண்ணலமா, அங்கெல்லாம் வர வேணாம்னு சொல்லுமா’ என்றிவன் சொல்ல கத்தியை மேடையில் வைத்து விட்டு முன்னே வந்து இவனை இழுத்து அணைத்துக் கொண்டவர், சில கணங்கள் கழித்து இவன் விலக மீண்டும் தக்காளி நறுக்க தொடங்கினார். ‘தாத்தி வரல இல்லமா’ என்று மீண்டும் கேட்டுவிட்டு வெங்காயத்தின் பச்சை வீச்சத்துடன் முன்னறைக்கு வந்தான்.

​புதிய குரல்கள் – 1 – விஷால் ராஜாவின் ‘எனும்போது உனக்கு நன்றி’யை முன்வைத்து’ – நரோபா

நரோபா

ஜீவா படைப்புலகம் வெளியிட்டுள்ள விஷால் ராஜாவின் முதல் சிறுகதை தொகுப்பு ‘எனும்போது உனக்கு நன்றி’ ஒன்பது கதைகளை கொண்டது. தொன்னூறுகளில் பிறந்து தமிழில் புனைவுகள் எழுதும் ஒரு தலைமுறை உருவாகியுள்ளது உவகையும் சற்றே பொறாமையும் அளிக்கிறது. தாராளமயமாக்கலுக்குப் பின்பான தலைமுறை எத்தகைய சிடுக்குகளை புனைவுகளில் கையாள்கிறது? தொழில்நுட்பம் புனைவில் ஏற்படுத்தும் விளைவுகள் என்னவாக இருக்கும்?  கிருஷ்ணமூர்த்தி, லூசிபர் ஜெ வயலட், விஷால் ராஜா, நாகபிரகாஷ், பாரதி என ஒரு வரிசை உருவாகி வருகிறது. விஷால் ராஜாவின் சிறுகதைகள் இறுக்கமான, செறிவான மொழியில் எழுதப்பட்டுள்ளன. கதைசொல்லி அல்லது மையப்பாத்திரம் உள்ளொடுங்கியவனாக, அதிகமும் பிறருடன் உரையாடாமல் தனக்குள் உரக்கச் சிந்திக்கும்/ விவாதிக்கும் தன்மையுடையவனாக இருக்கிறான். வேகத்தைக் கண்டு மிரட்சியடைகிறான். கதைமாந்தர்கள் பொருளின்மையால் மீள மீள சூழப்படுகிறார்கள். அச்சமும் தயக்கமும் கூச்சமும் நுண்ணுணர்வும் கொண்டவர்களால் நிரம்பியது அவருடைய கதையுலகம். பெரும் பிரியத்தை உள்ளத்தில் ரகசியமாக சுமந்தலைகிறார்கள். அவ்வகையில் அவர்கள் எனக்கு நெருக்கமானவர்கள். ஒருவகையில் ஜெயகாந்தன், ஜி.நாகராஜன் போன்ற விதிவிலக்குகளை தவிர்த்து, நவீன தமிழிலக்கிய மையப் பாத்திரங்கள் உள்ளொடுங்கியவர்களின் குரலாகவே இருந்திருக்கிறது. சமூகத்தில் ஓங்கி ஒலிக்காத குரல்களே இலக்கியத்தில் ஆளுகையுடன் திகழ்கின்றன. அவர்கள் அலைக்கழிபவர்கள், கையறு நிலையில் முடிவெடுக்கத் திணறுபவர்கள், பொதுப் போக்கில் ஒழுக முடியாதவர்கள், பல வகைகளில் தாஸ்தாவெஸ்கி நாயகர்களை ஒத்தவர்கள்.

தொகுப்பின் முதல் கதை ‘கசப்பேறிய கோப்பைகள்’. நாகராஜ் எனும் கடைநிலை ஊழியன் மற்றும் கல்யாணி எனும் திருநங்கையை பாத்திரங்களாக கொண்டு பின்னப்பட்டுள்ளது. முதல் வாசிப்பில் எனக்கு அசோகமித்திரனின் ‘காந்தி’யை நினைவுறுத்தியது. ஏறத்தாழ அதே பேசுபொருள்தான்- காரணமற்ற வெறுப்பு, கசப்பு நம்முள் எப்படியோ தங்கி விடுகிறது. அன்பைப் போல் வெறுப்பும் தொற்றி பரவக்கூடியது. ஒரு கசப்பின் சுழற்சியை சொல்லிச் செல்கிறது கதை. நாகராஜிற்கு இருக்கும் திடத்தன்மை கல்யாணிக்கு இல்லை என வாசிக்கும்போது தோன்றியது. கல்யாணி அனுதாப உணர்விலிருந்து வார்க்கப்பட்டிருக்கிறாரோ எனும் ஐயம் எழுந்தது. கல்யாணி எனும் பாத்திரத்தின் வலுவின்மையின் காரணமாக இக்கதை எனக்கு நிறைவளிக்கவில்லை.

தொகுப்பில் உள்ள ‘நீர்க்கோடுகள்’ இதே போன்ற நிறைவின்மையை அளித்தது. அறக்குழப்பங்களும், ஊசலாட்டங்களும் கொண்ட ஆசிரியர் ஹென்றியின் பாத்திரம் வலுவாக உருவாகி இருந்தாலும்கூட, ‘மகள் வயதை ஒத்தவர் மீதான ஈர்ப்பு’ எனும் பழக்கப்பட்ட கதைக்களம் என்பதால் ஆர்வம் குன்றியது. ‘ஞாபகங்களின் கல்லறை’ லயம் கூடிய கவிதைக்கு அருகிலான நடையில் எழுத பட்டிருக்கிறது. ஆனால் கதையாகாத உதிரி துண்டுகளாகவே எஞ்சி நிற்கிறது.

கதாபாத்திரங்களின் பிரதேசம்’ ஜெயமோகன் தளத்தில் வெளியானபோதே வாசித்த நினைவிருக்கிறது. கற்பனையின் வலுவை நம்பி எழுதப்பட்ட கதை. எடுத்துக்கொண்ட கருவிற்கு நியாயம் செய்திருக்கிறது. வெவ்வேறு கதைகூறல் முறைகளை முயன்றிருக்கிறார் என்ற வகையில் சுவராசியமான வாசிப்பை அளிக்கிறது. ‘எனும் போது உனக்கு நன்றி’ வெவ்வேறு காதல் கதைகளின் ஊடுபாவு. ஒரு திரைக்கதைக்கான எல்லா வடிவ சாத்தியங்களும் கொண்டது. கதையே ஒரு காமிரா கோணத்தில் திரையில் காண்பிப்பது போல் வெட்டி வெட்டிச் சொல்லப்படுகிறது. நவீன கதைசொல்லிகள் பலரும் இந்த உத்தியைக் கையாள்கிறார்கள். தவறென்றோ இழிவேன்றோ அல்ல, எனினும் காட்சி ஊடகம் புனைவெழுத்தில் செலுத்தும் தாக்கம் என இதைக் கூறலாம். இக்கதை ஒரு மொட்டை மாடி குடியரட்டையில் கதைமாந்தர்களின் வெவ்வேறு வகையான காதலின் நினைவுகளைச் சொல்கிறது. ஆச்சரியமாக அவர்களின் காதல் கதைகளில் வன்முறை எட்டிப் பார்க்கவில்லை.

உடல்’ இத்தொகுதியில் உள்ள மற்றுமொரு நல்ல கதை. பாரதி, புதுமைப்பித்தன் துவங்கி நவீன தமிழிலக்கியம் மரணத்தை பற்றியும், அதன் அப்பட்டமான அர்த்தமின்மை பற்றியும் மீள மீள பேசுகிறது. வேறெவரையும் காட்டிலும் எழுத்தாளன் மரணத்தைப் பற்றி அதிகமும் எண்ணுகிறான், அஞ்சுகிறான். ‘கதாபாத்திரங்களின் பிரதேசம்’ மரணத்தின் வன்மத்தை நேரடியாக சித்தரிக்கிறது. ‘உடல்’ பரகாய பிரவேசம் போல் ஒன்று நிகழ்ந்து கதைசொல்லி அவன் விரும்பும், அவனை நேசிக்காத பெண்ணுடைய காதலனின் உடலுள் எழுந்துவிடுகிறான். நடைமுறை சாத்தியமற்ற தளத்தில் வைத்து ஒரு மெய்யியல் கேள்வியை விசாரணை செய்கிறார் விஷால். எது நான்? உடலா உயிரா? கதை அங்கிருந்து இந்தச் சலுகையை அனுபவிக்கலாமா எனும் அறக் கேள்விக்கு செல்கிறது. இக்கேள்விகளுக்கு எந்த தீர்மானமான விடையையும் அளிக்காமல், அல்லது எதிர்கொள்ள இயலாமல் தப்பித்துச் செல்கிறான் கதைசொல்லி. எளிய தீர்வுகளை நோக்கிச் செல்லாததே இக்கதைக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது. விஷால் ராஜாவின் கதைகளில் ஒரு பொதுப்போக்காக இதைக் குறிப்பிடலாம். எனினும் இக்கேள்விகள் எரியும் தீவிரத்துடன், தத்தளிப்புடன் கதையில் பதிவாகிறது.

தொகுப்பின் இறுதி கதையான ‘விலகி செல்லும் தூரம்’ கொஞ்சம் அலைவுற்றாலும்கூட ஒரு நல்ல கதை. ஜேக்கப்பின் கதையாக துவங்கி ஹர்ஷத்தின் கதையாக சடாரென மாறிவிடுகிறது. நவீன வாழ்வின் சிதைவுகளிலிருந்து மீட்க நமக்கோர் மீட்பர் வரமாட்டாரா எனும் ஏக்கத்தின் வெளிப்பாடாக இக்கதையைச் சொல்லலாம். நெரிசலான சாலையில், குழப்பமான மனதுடன் நிற்கும் ஒருவனிடம், ‘உன்னை எங்கே கொண்டு செல்ல வேண்டுமோ அங்கே கொண்டு செல்கிறேன் வா’ என ஜேக்கப் அவருடைய ஆட்டோவில் ஏற்றிக் கொள்கிறார். இக்கதையின் மீட்பர் பெரிய மாயங்களை நிகழ்த்திக் காட்டவில்லை, ஆனால் நன்கறிந்த பாதைகளில் விளைவுகளின் மீதான அச்சத்தால் இருக்கும் துணிவின்மையை, வினாக்களை எதிர்கொள்ளும் தயக்கத்தை உடைத்து அவற்றை எதிர்கொள்ள உந்திச் செலுத்துகிறார். ஜேக்கப்பும் கூட முகம் வெளிறி தனிமையில் உழலும் சலிப்படைந்த ஒரு மீட்பர்.

இத்தொகுப்பின் சிறந்த கதைகள் என தயங்காமல் ‘குளிர்’, ‘மகிழ்ச்சிக்கான இரத்தப் புரட்சி’ ஆகிய கதைகளைச் சொல்வேன். குளிர்ந்து தோல் மரத்து போகும் அதிகாலையில் கதைசொல்லி தன்னைச் சுற்றி நிகழ்பவனவற்றை கதையாக்குகிறான். குளிர் என்பது இக்கதையில் indifferent coldness எனும் பொருளில் கையாளப்பட்டுள்ளது. நுண்ணுணர்வு கொண்ட ஒருவன் தன்னைச் சுற்றி இருக்கும் உலகத்தின் குரூரத்தை முதன்முறையாக உணர்ந்து அதிர்வதே கதை. வேண்டுமென்றே தெறிக்கும் வன்மம் அல்ல அந்தக் குரூரம், உண்மையில் அது ஒருவிதமான விட்டேத்தி மனோபாவம். ஆங்கிலேயர்கள் காலத்து தாது வருட பஞ்சங்களின்போது நிகழ்ந்த உயிரிழப்புகளைப் பற்றிக் கூறும்போது,. பிரித்தானிய அரசு கொன்றொழிக்க வேண்டும் எனும் நோக்கத்தோடு செய்ததல்லை, ஆனால் முடியரசின் குளிர்ந்த விட்டேதிதி மனோபாவத்தின் காரணமாக உயிரிழந்தவர்கள் இரண்டாம் உலகப் போரில் மரித்தவர்களை காட்டிலும் அதிகம் என்றொரு செய்தி உண்டு. ஆயுதமேந்த வேண்டும் என்றில்லை, கண்டுகொள்ளாமல் இருந்தாலே குத்திக் கொன்றுவிடலாம். ஈழ படுகொலை சார்ந்த ஒரு குற்ற உணர்வை எனக்கு இக்கதை சட்டென எழுப்பியது. முடிந்தவரை குளிரைப் பொறுத்துப் பார்த்த கதைசொல்லி, இறுதியில் தன்னைக் குளிரிலிருந்து பாதுகாக்க பையிலிருக்கும் சால்வையைத் துழாவுவதோடு கதை நிறைவு பெறுகிறது. ஒட்டுமொத்தமாக சூழலே குளிர்ந்திருக்கும்போது, நாம் என்னதான் செய்துவிட முடியும்? குறைந்த பட்சம் குளிரில் நாம் விறைத்து மரத்து போகாமல் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். அதையே கதைசொல்லியும் தேர்கிறான். ஏதுமற்றவனின் படைக்கலம் என சால்வை அவனை சூழ்கிறது. இக்கதை துல்லியமான சூழல் மற்றும் பாத்திரச் சித்தரிப்புகளால் முக்கியத்துவம் பெறுகிறது.

விஷாலின் கதைகளில் கதைமாந்தர்கள் ‘ஏன் இப்படி இருக்கிறது இவ்வுலகம்?’ எனும் திகைப்பை வெவ்வேறு தருணங்களில் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் தங்களைப் பீடத்தில் அமர்த்திக் கொண்டு பிறரை குற்றம் சுமத்துவதில்லை. புகார் என்றுகூட இல்லை, மிகச் சன்னமான முனகல் ஒன்றே எழுகிறது. அவர்கள் ‘குளிர்’ நாயகனை போல் தங்கள் அளவில் காபந்து செய்து கொள்ள முடியுமா என்று மட்டுமே நோக்குகிறார்கள். ‘எனும் போது உனக்கு நன்றி’ விஷ்வா, அதே கதையில் வரும் மோகன் என இப்பாத்திரங்களில் ஒரு தொடர்ச்சி திகழ்கிறது. ஹென்றியும் கூட அவருடைய மாணவி மீரா அவளாக வேறொருவனை காதலிப்பதைப் பற்றி சொன்னவுடன் ஆசுவாசம் அடைகிறார்.

காதல் விஷாலின் பெரும்பாலான கதைகளின் பேசுபொருளாக வந்திருக்கிறது. போர்ன் வெகு சகஜமாக புழங்கும் ஒரு தலைமுறையிலிருந்து எழுத வந்ததாலும், நவீன தொழில்நுட்பம் உணர்வு ரீதியான பிளவை நிகழ்த்துவதாக இருப்பதாலும் காமத்தை எழுதுதல் பின்னுக்குச் சென்று மீண்டும் காதலை எழுதுதலை இத்தலைமுறை கைக்கொள்ளும் என தோன்றுகிறது.

தொழில்நுட்பம் சார்ந்து மனிதர்கள் அன்னியமாதல், கேளிக்கைகளுக்கு அடியில் உள்ள வெறுமை, அதன் உள்ளுறையும் வன்முறை, பரபரப்பான துய்தல் வழியாக மகிழ்ச்சியை அடைய முனைவது என நவீன வாழ்வின் எல்லா சிக்கல்களையும் பேசும் இத்தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று ‘மகிழ்ச்சிக்கான ரத்த புரட்சி’. செய்தி மொழி, உரையாடல், மனவோட்ட விவரணை என மொழி பல்வேறு வகையில் கற்பனையின் பாய்ச்சலுக்கு ஈடாக பிசிறின்றி வெளிப்படுகிறது. மென்பொருள் துறை பணிச் சூழலை பின்புலமாக கொண்ட இக்கதை பணிச்சூழல் சார்ந்து அன்றாட வாழ்வின் வெறுமை, அழுத்தம், அன்பிற்கான ஏக்கம் என பலவற்றை தொட்டு செல்கிறது. ஒரு தொழில்நுட்ப பூங்காவின் ஊழியர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு தற்கொலைப் படையாக மாற்றப்படுகிறார்கள். துண்டு நிகழ்வுகளாக ஊழியர்களைப் பற்றிய கதையும், நிகழ்வுகளும் விவரிக்கபடுகின்றன. அழுத்தங்கள் எல்லாம் ஒரு பெரு வெடிப்பில் சென்று முடிகிறது. இக்கதையில் வரும் எதிர்பாத்திரம் ‘மிஸ்டர் நோ ஐடி’ என்று அழைக்கப்படுகிறார். உலமயமாக்கலுக்குப் பின்பான வாழ்வில் அடையாள சிக்கல் வலுவாக காலூன்றி இருக்கிறது.

விலகி செல்லும் தூர‘மும், ‘மகிழ்ச்சிக்கான ரத்தப் புரட்சி‘யும் அதன் எதிரெதிர் அக நிலைகள் காரணமாக ஒன்றையொன்று நிரப்பி கொள்கின்றன. அப்படி என்ன பொருளின்மையைக் கண்டுவிட்டாய், என நம்பிக்கையும் ஆசுவாசமும் அளிக்கிறது. விஷாலின் கதைகள் பொதுவாக இவ்விரு புள்ளிகளுக்கிடையிலான ஊசலாட்டம் என கூறலாம். ‘விலகி செல்லும் தூரம்’ ஏறத்தாழ ‘மகிழ்ச்சிக்கான ரத்த புரட்சி’யின் அதே மனநிலையை பிரதிபலிக்கிறது ஆனால் பிந்தைய கதை சென்று சேரும் வெறுமையை அடையவில்லை. இந்த அழுத்தங்கள், அலைக்கழிவுகள் ஒன்றும் அத்தனை முக்கியமல்ல எனும் நம்பிக்கையுடன் நிறைவுறுகிறது. இத்தொகுதியின் மனவோட்டத்திற்கு ஒரு சமரச புள்ளியென ஜேக்கப் மற்றும் ஜானின் கதாபாத்திரங்களை கூறலாம். ‘மகிழ்ச்சிக்கான ரத்த புரட்சி’யில் வரும் நோ ஐடி ஒரு மீட்பரைப் போலத்தான் தோன்றுகிறான், சிக்கல்களுக்கான காரணங்களை வெளியில் அடையாளப்படுத்துகிறான், வெறுப்பை விதைக்கிறான், அதனால் மொத்தத்தையும் அழிவில் அமிழ்த்துகிறான். ஜேக்கப் சின்ன சின்ன நேசங்களை வெளிப்படுத்துகிறான், அவனிடம் பெரிய திட்டங்கள் கனவுகள் ஏதுமில்லை, சிக்கல்களின் ஊதிப் பெருக்கபட்ட பிம்பங்களை உடைக்கிறான். தால்ஸ்தாயின் ‘Where Love is God is’ கதையை மனம் நினைவு கூர்ந்தது.

இத்தொகுதியில் உள்ள இவ்விரு கதைகளே தமிழில் உருவாகி வரும் புதிய தலைமுறையின் அசல் குரலை பிரதிபலிக்கின்றன. பிற கதைகளில் முன்னோடிகளின் சாயல்கள் வெவ்வேறு அளவில் தென்படுகின்றன (அவை தவிர்க்கமுடியாததும்கூட). விஷால் தனக்கான குரலை இவ்விரு கதைகள் வழியாக கண்டுகொண்டுவிட்டார் என்றே எண்ணுகிறேன்.

வதம் – பானுமதி. ந

 பானுமதி. ந

காலையிலேயே மிகுந்த கோபத்துடன் உதித்த ஆதவன் நாள் முழுதும் தன் கிரணங்களை வாரி இறைத்துக் கொண்டிருந்தான். அவனின் தேர் உழுத வான வெளியில் துல்லிய நீல மேகங்களை உண்ணும் ஆசையில் பதுங்கிப் பதுங்கி வந்த வெண் மேகங்கள் அவனது சாரதியின் சவுக்கு பட்டு வீறிய வடிவங்களுடன் ஒதுங்கி ஒதுங்கி அசைவற்று சோர்வுடன் படுத்திருந்தன. தன் கோபம் எதனால் என்று அறியாமல் அவன் கடலுக்குள் தன்னையே தனக்கு ஒளித்துக் கொண்டு மறைந்தான். காற்று அவன் சினத்தில் தானும் கட்டுப்படுவது போல் எங்கோ ஒளிந்து கொண்டு விட்டது.

வழி தப்பிய தவிட்டுக் குருவி  அந்த மொட்டை மாடியில் உயர்ந்திருந்த குடிநீர் குழாயின் வளைவில் அமர்ந்து குரல் எழுப்பிப் பார்த்து பின்னர் சோகமாக அலைக்கழிந்தது. அத்தனை பறவைகள் சுகமாக இருப்பிடம் சேர இது மட்டும் தன் வழி மறந்த விதியை சாகேதராமன் நோக்கினான். ’ஒருக்கால் உன்னை அழுத்தும் பாரத்தை நீ தனியேதான் அனுபவிக்க வேண்டும் என்று சொல்கிறதோ?’ அதன் கூட்டுப் பறவை வந்து அதை அழைத்துச் சென்றால் தனக்கு இந்தப் பிரச்சனையிலிருந்து விடிவு கிடைக்கும் என்றும் அப்படி எதுவும் நடக்காவிடில் தான் அந்தப் பிரச்சனையை எதிர் கொள்ள நேரிடும் என்றும் அவன் உளம் பதைத்தான்.  அதன் சினேகிதப் பறவையை அந்தப் பறவையைவிட இவன் எதிர்பார்க்கத் தொடங்கினான்.

இருள் கவிந்து பெருகியது. குரல் எழுப்பாமல் அந்தப் பறவை பறந்துவிட்டது. இவனை ஏமாற்றம் கவ்வியது. சலித்து நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். மிகத் தேசலான தேங்காயின் கால் ஓட்டில் ஒட்டியிருப்பது போல் நிலா காட்சியளித்தது. ’இன்று நாலாம் பிறையா? நாய் படாத பாடு படப் போகிறேன்.’

தன் எதிர்மறை எண்ணங்களும், அறிவிற்கு உடன்பாடில்லாத சிந்தனைகளும் அவனுக்கு வியப்பாகவும் இருந்தன. ஆனாலும் தன்னைக் குத்திக் கிழித்து, அந்த வதையில், வாதையில் தன்னை வாட்டிக் கொள்ளவே அவனுக்கு விருப்பம் மிகுந்தது.

வீணையில் அன்று ‘சலமேல ரா, சாகேத ராமா’ என்ற பாடலை அக்காவிற்கு அவளது வாத்தியார் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினாராம். இரவு 3 மணிக்கு இவன் பிறந்ததால் இவன் ‘சாகேத ராமன்’. அந்த மார்க்க இந்தோளத்தை இன்று கேட்டாலும் இவனுக்கு மனதைப் பிசையும். பள்ளியில் இவனை ‘சாகேது பிஸ்கோத்து’ என்று கேலி செய்வார்கள். ’சாது கேது சூது’ என்று பாடுவார்கள். தன்னை ஏன் ‘ராமன்’ என்றோ, ‘ராமா’ என்றோ, ‘ராம்’ என்றோ கூப்பிட மறுக்கிறார்கள் இவர்கள் என்றெல்லாம் தோன்றும் இவனுக்கு. ஆனால் சொல்ல பயம். நிலையான தோழமையற்ற தனிமை அவனை படிப்பில் முன்னேறச் செய்தது. பேராசிரியர்கள்கூட இவனிடம் சந்தேகம் கேட்பார்கள். உடன் படிப்பவர்கள் விளக்கங்கள் கேட்பார்கள். ஆனால், யாருமே ஒட்டி உறவாடியதில்லை. தன்னை ஒரு சினிமா பார்க்கக்கூட ஏன் அழைத்ததில்லை யாரும்? ஏன் கர்ப்பக்கிரஹத்துக் கடவுளாக தன்னை ஒதுக்கி விட்டார்கள்? வேண்டிக் கொள்ள மட்டும்….  ‘வேண்ட முழுதும் தருவோய் நீ’ பிரச்சனைகளைத் தீர்க்க மட்டும்… அசடு என்று என் முகத்தில் எழுதியிருக்கிறது போலும்!

சோபையற்ற நிலவைச் சுற்றி வெண்கரடி என மேகங்கள் சூழ்வதை சாகேத ராமன் பார்த்தான். ஆம், ஆம்.. கரடிதான். இவனின் சிறு வயதில் ஒருவன் கரடி வேஷம் கட்டிக் கொண்டு தெருவில் திடீரென வந்தான். பெரியவர்கள் பயந்து கொண்டே பார்க்க, குழந்தைகள் அலறிக் கொண்டே ஓடின. இவன் நினைத்தான், ’நான் எந்த வேஷம் போட்டு மனிதர்களை நெருங்கவிடவில்லை? நான் மனிதனா, கரடியா, குழந்தையா, பெரியவனா?  என் அறிவின் தகிக்கும் நெருப்பில் நானென்னையே வார்த்துக் கொண்டிருக்கிறேன் போலும்.’

‘யாருடன் நான் சாதாரணமாகப் பேசியிருக்கிறேன்? இல்லை, என்னிடம் தப்பில்லை. உலகில் பெரும்பான்மையினர் முட்டாள்கள். நான் என் தொழிலில் மேம்பட்டவன். எனக்கு என்ன குறை?’

‘குறைதான், என் மேதமை அடிபடப் போகிறது. என்னை கூண்டில் நிற்க வைத்து கேள்வி கேட்கப் போகிறார்கள். நிமித்தங்களில் மட்டும் அறிவைச் செலுத்தாத தான் தான் இன்று நாலாம் பிறையையும், தனித்த பறவையையும் எண்ணிக் கலங்குகிறேன்.’

‘சாகேதன், உங்களுக்கு நெறையா வேலை. ஆனா, இந்த ப்ரபோசலை உங்களை விட்டா யாரும் புரிஞ்சிக்கக்கூட முடியாது. ஒரு ரெண்டு நாள்ல .. பிளீஸ் மேலேந்து ப்ரஷர்ப்பா’

தான் ஒரு கரடிதான் என இவன் மேலும் நினைத்தான். தேன் குடிக்க ஓடும், மதி மயங்கிய கரடி. ’உங்களை விட்டா யாரும் புரிஞ்சிக்கக்கூட முடியாது’ இது போறும் முட்ட முட்ட தேன் குடிக்க

இவன் சிந்தனையைக் கலைப்பது போல் மெட்டி ஒலி. ரமணி ஏன் இங்கே வருகிறாள் இப்போ? என் டேபிளைக் கொடைஞ்சிருப்பாளோ? என் வாதையை கொண்டாடப் போறா. அவளை மனசால வதச்சது தெரியாத மாதிரி நான் நடந்துக்கறேன்னு சொல்லுவோ.. எல்லார்ட்டயும் சாதாரணமா இல்ல, ரணமாத்தான்… என்று முடிக்காம விடுவோ…

“ஏன் இங்க தனியா உக்காந்துண்டு இருக்கேள்? சாப்பிடக்கூட வல்லியே?”

இவன் பதில் சொல்லவில்லை. ”என்ன பிராப்ளம், சொன்னாத்தானே தெரியும்?”

‘உனக்கு என்ன சொல்லணும் இப்போ? நீயும், சங்கரும் சாப்பிட்டாச்சோல்யோ? நை நைன்னு புடுங்காம போய்த் தூங்கு’

“எதுக்கு எரிச்சல் படறேள்? வாய் விட்டு சொன்னாத்தானே சல்யூஷன் சொல்லலாம்.”

அவளை எரிப்பது போலும் இழிவாகவும் இவன் பார்த்த பார்வை அவளை காயப்படுத்தியது. அப்படிப் பார்த்த பிறகு இவனையும் இவன் மனம் சாடியது. அவள் சொல்வது சரிதான்; ‘வதையும், வாதையுமான குணம் எனக்கு.’

“எனக்கு ஆப்பிள் க்ரீனும் தெரியும். பேரியம் நைட்ரேட்டின் ஃப்ளேமும் தெரியும். இன்னிக்கு உங்களுக்கு சி.பி.ஐயிலிருந்து வந்த நோட்டீசும் தெரியும்” என்றாள் ரமணி.

பளாரென கன்னத்தில் அறை வாங்கியது போல் இவன் உடல் அதிர்ந்தது. அவர்கள் தேன் நிலவில் நடந்த விஷயத்தை எத்தனை ஞாபகமாக இப்போ சொல்கிறாள்?

திருமணம் முடிந்த அன்றே அவர்கள் தேன் நிலவு பயணம். தனி கூபே அவளை நன்றாகப் படுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு இவன் தன் வேலையில் மூழ்கி விட்டான். ரமணிக்கு தானாகப் பேசவும் தயக்கம். ஆனாலும், மறுநாள் மாலையில் வெளியே போக இவன் அழைத்தபோது அவள் மகிழ்ந்து போனாள். நீலத்தகடு போன்ற ஏரியில் வண்ண வண்ண நிறப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைகளைக் கூடாரம் போல் தொங்கவிட்டிருந்த ஹனிமூன் படகுகள். ஏரியில் கரைகளிலிருந்தும் நீரூற்றிலிருந்தும் நலுங்கும் மின் சிதறல்கள். இனிமை இனிமையென மெருகூட்டிக்கொண்டெ மயக்கும் மாலை. அதற்குப் போட்டியாக மேற்கில் மறையும் கதிர்கள் மேகங்களில் எழுதும் காதல் கவிதைகள். வண்ண வண்ண நெசவுகள், நொடியில் நிறம் மாறும் கலவைகள். அப்பொழுதுதான் அவன் கேட்டான். ”அதோ, அந்த மேகத்தோட கலரை நீ என்னன்னு சொல்வ?”

அவள் சிரித்துக் கொண்டே ‘ஆப்பிள் க்ரீன்’ என்றாள்.

’நீஎன்ன கெமிஸ்ட்ரி எம்.ஃபில்? பேரியம் நைட்ரெட்ன்னு உனக்குத் தோண வேணாம்?’

”இயல்பா எல்லாரும் சொல்ற மாதிரிதானே நானும் சொன்னேன். பேச்சில எல்லாம் இப்படி வராது எனக்கு” என்றாள். அன்று இவன் அலட்சியமாக சிரித்த சிரிப்பு இன்றுவரை அவளுக்கு நெருஞ்சி முள். இன்று அதைப் பிடுங்கி இவனைக் குத்திவிட்டாள்.

இதைப் போல் எத்தனையோ? காயப்படுத்திய பிறகு தன்னை நினைத்து தானும் காயப்படுவான். இது என்ன வதம்? ஏன் அனைவரையும் சொல்லால் அடித்துக்கொண்டே இருக்கிறேன்? உன்னைவிட எனக்கு எல்லாம் தெரியும் என்று ஏன் உணர்த்திக்கொண்டே இருக்கிறேன்? நான் அப்படி மேம்பட்டவன் என்றால் இந்த கோர்ட் நோட்டீசுக்கு ஏன் உளைகிறேன்?

இவளை கரடியெனவே பயம் காட்டுகிறேன். அதன் இளிப்பை, முகச் சுளிப்பை சாமா போன்ற அண்டியவர்களிடம், தன் அறிவை வியக்கும் மேலதிகாரிகளிடம் ஆட்டுவிக்கும் கயிற்றையும் கொடுத்துவிட்டு அதை உணராத மௌடீகமாக மிதப்பில் நான் நடக்கும் நடப்பு.. அடேயப்பா! எல்லாவற்றிற்கும் தன்னையே சொல்லிக் கொள்வதில் இல்லை, தன்னையே கொல்வதில் மனிதனும், மிருகமுமாக… வாதை.

“உங்கள் மனம் கண்ணாடி போல் எனக்குத் தெரியறது. என்னை யாரும் குறை சொல்ல முடியாது என்ற உங்கள் மனப்பிம்பம் இன்று உடைந்துவிட்டது. நோட்டீசைவிட அதுதான் உங்களை பாதிக்கிறது. எம் பி எ கோல்ட் மெடலிஸ்ட் அதுவும் ஃபினான்ஸில் என்பதால் உங்கள் கிரெடிட் தீர்மானங்கள் தவறே ஆகாது என்ற ஆதர்சம் இன்று சிதைகிறது”

‘மேலே பேசாதே. நான் ரெகமண்ட் செய்தபடி நடந்திருந்தா இன்னிக்கு இந்த நோட்டீஸ் வர அவசியமில்லை.ஆனா, பாவிகள்…’

“உங்க பேர்ல தப்பு இல்லைன்னு எனக்குத் தெரியும். அதை க்ளியரா சொல்றதுக்கு வழி வகை செய்யணும் இப்பொ. அதை விட்டுட்டு சாப்பிடாம கொள்ளாம உக்காந்திருந்தா வந்த கடிதாசு இல்லன்னு ஆயிடுமா?”

‘என் காலம் பாத்தியா? உங்கிட்ட எல்லாம் பேச்சு கேக்க வேண்டியிருக்கு’

“விதி சேத்துப் போட்டிருக்கே! ஒண்ணு பண்ணுங்கோ! சாமி அலமாரி முன்னாடி நின்னு இவளை சீக்கிரம் அழைச்சுக்கோன்னு வேண்டிக்கோங்கோ. இதையும் கேட்டுட்டு ருத்ரம் ஆடலாம். நாளைக்கு காத்தால என் அண்ணா வரார். இந்த கோர்ட் சமாசாரமெல்லாம் பாக்கறத்துக்காக”

அவளை அப்படியே தரையில் சாய்த்து வதைக்க எழுந்தவன் அழுது கொண்டே அவளை அணைத்துக் கொண்டான். கரடிக்குப் பயந்த குழந்தை.