Author: பதாகை

இரவின் குரல்

ஜிஃப்ரி ஹாஸன்

இரவுகள் தூங்கிக் கொண்டிருந்தன
நினைவுகள் பிளந்து கொண்டு
தன்போக்கில் அலைந்தன
தூங்கும் இரவுகளிடம்
முறையிடல்களை முன்வைத்த
மனிதர்களை நான் கண்டேன்
பாஷைகளற்ற மௌனம்
சூழ்வதையும் பின் கலைவதையும்
ஒவ்வொரு முறையிடலுக்குப் பின்னும்
கேட்கிறேன்
ஓய்விலிருக்கும் ஒவ்வொன்றும்
தனக்கென்றொரு தவத்தை
தனக்கென்றொரு வரத்தை
தானே கண்டடைகின்றன
கையளிக்க எதுவுமற்ற
வரண்ட இரவுகள் இவை
அதனிடம் எதையும் எதிர்பார்த்திருப்பதன்
அர்த்தமின்மையை உணரும் தருணம்
ஒரு பேருறக்கத்தினுள்
நான் என்னை ஒப்புக் கொடுக்கிறேன்
பாஷைகளற்ற மௌனம்
என்னை மீண்டும் சூழ்ந்து கொள்கிறது

ஒரு குருட்டு நட்சத்திரத்தை தானும்
விட்டு வைக்காத வரண்ட இரவுகள்
மௌனமாய் உறைந்திருந்தன
எனது ஆன்மாவின் அங்கலாய்ப்பை
எனது தனிமைத் தவத்தை
பேயுரு கொண்டு கலைக்கிறேன்
இரவுகள் துயில் கலைந்து
வனத்தின் ஆழத்துள் சென்று மறைகின்றன
இந்த நூற்றாண்டின் இரவுகள் இயங்குவதற்காகவும்
பகல்கள் உறங்குவதற்காகவும் என காலத்தை
மாற்றியமைக்கும் வெறியுடன்
தூங்கும் இரவுகளை பேயுரு கொண்டு
கலைக்கிறேன்

இரவுக்கு ஆயிரத்தொரு கண்கள் – 1

– ஆர். அஜய்-

lyons1

“... They embraced each other and she took him and lay back, undoing her drawers. The tool that his father had bequeathed him moved and he called out: ‘Help me, Shaikh Zacharias, father of veins’. He put his hands on her hips and, setting the vein of sweetness to the Gate of the Cleft, he pushed it until it reached the Lattice Gate and passed through the gate of Victories. After that, he entered the Monday market, the Tuesday market, the Wednesday market and the Thursday market. He found that the carpet filled the room and he moved the tuber round against its covering until the two met“.

லிட்டிரரி ரெவ்யு‘ பல ஆண்டுகளாக அளித்து வரும் ‘மோசமான கலவி எழுத்து’ (‘Bad sex in fiction’) விருதுக்கு போட்டியிடும் தகுதி கொண்ட இந்தப் பத்தி – இந்த விருதுக்கான இறுதிப் பட்டியல் வரை தேர்வு செய்யப்பட்டுள்ள பிலிப் ராத், முரகாமி போன்ற- நம் சமகால இலக்கிய ஜாம்பவான்களால் எழுதப்படவில்லை. குழந்தைகள் படிக்கும்படியாக, பல அம்சங்களை நீக்கி எளிமையான முறையில் பலரால் பல பதிப்புக்களில் -சில புதிய சேர்க்கைகளோடு- மொழிபெயர்க்கப்பட்டு, மாயாஜால, சாகச கதைகளின் தொகுப்பாக மட்டுமே அறியப்படும் ‘ஆயிரத்தொரு அரேபிய இரவுகளின் கதைகளி’ல் (The Arabian Nights Tales of 1001 nights) உள்ள ஒரு கதையின் பகுதி இது என்பது வியப்பளிக்கக்கூடும்.

அரேபிய இரவுகளின் கதைகள் மட்டுமல்ல, க்ரீம் சகோதரர்களின் (Grimm Brothers) தேவதைக் கதைகள் முதற்கொண்டு மற்ற புகழ் பெற்ற நட்டார் கதைகளும் இத்தகைய சுத்திகரிப்புக்கு உள்ளாகியுள்ளன. உதாரணமாக அரேபிய இரவுகளின் மிகவும் புகழ்பெற்ற கதைகளில் ஒன்றான ‘அலிபாபாவின்’ கதை தொகுதியின் பிறசேர்க்கை என்பதும் நூல்களிலும்/ திரைப்படங்களிலும் அலிபாபாவின் காதலியாக வரும் மற்யானா (Marjana/ Morgiana), உண்மையில் அவன் அடிமை என்பதும், அவளே கொள்ளையர்களை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதும், இறுதியில் அலிபாபா அவளை தன் மகனுக்கு மணம் முடித்து வைப்பதும் பரவலாக அறியப்படாத ஒன்றாக இருக்கும்.

வழமையான ஆண்- பெண் உறவு மட்டுமில்லாமல், தற்பால் விழைவு, ரத்த உறவுகளுக்குள் ஏற்படும் விபரீத சம்பந்தம் என பாலியல் விழைவுகளின் பல சாத்தியங்களை தன்னுள் கொண்டுள்ள ‘அரேபிய இரவுக்’ கதைகளை ‘பாலியல்’ என்ற கோணத்தில் தொகுத்து நோக்குவது சுவாரஸ்யமான சில புரிதல்களை தரக்கூடும். ‘ரோஜா போன்ற கன்னங்கள்’, ‘பதினான்கு முழு நிலவுகளை ஒன்று சேர்ந்தது போன்ற ஒளிமிக்க அழகிய முகம்’, ‘உறுதியான உடற்கட்டு’, இந்த வர்ணனைகள் பெண்ணை விவரிப்பவை அல்ல, ஆண்களை. ‘அரேபிய இரவுக் கதைகளில் பெண்களுக்கு நிகராக ஆண்களின் அழகும் மிக விரிவாக வர்ணிக்கப்படுவது முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

இத்தகைய வெளிப்படையான விவரிப்புக்கள் ஒரு புறம் இருக்க, கதைகளில் வரும் ஆண் பாத்திரங்கள் தற்பால் விழைவுள்ளவர்களாக இருப்பின் அவர்கள் தீயவர்களாக வார்க்கப்பட்டிருப்பதின் பின்னால் உள்ள உளவியல் சிக்கல் யோசிக்கப்பட வேண்டியது. தன்னை குறித்து எந்த நேரடி பொருளையும் தராத விவரிப்பில் வெளிப்படையாக இருக்கும் கதைசொல்லி(கள்), தங்கள் விழைவு குறித்து குற்றவுணர்வை தீய தற்பால் பாத்திரங்களின் மூலம் கடந்து செல்கிறார்களா? தற்பால் விழைவுள்ள பெண்களும் இவ்வாறே படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பட்டி விக்கிரமாதித்தியன் கதைகளில் வரும் ஒரு தொடர் அம்சம், பெண்களின் சலன புத்தி மற்றும் அதனால் அவர்கள் எளிதில் சோரம் போவது குறித்த குற்றச்சாட்டுக்கள். நீராடச் செல்லும் முனிவர் ஒருவர் தன் ஜடாமுடியில் இருந்து ஒரு பெண்ணை விடுவித்து செல்ல, அவளோ தன் ஆடையின் முடிச்சில் இருந்து தன் சோர நாயகனை விடுவித்து அவனுடன் களித்திருப்பதாக வரும் பட்டி- விக்கிரமாத்தியன் கதை நிகழ்வை வேறு வேறு வடிவங்களில் பிற நாட்டார் கதை தொகுதிகளிலும் காணலாம். (‘கதா சரித சாகரம்’ போன்ற சம்ஸ்கிருத இலக்கியங்களுக்கும் அரேபிய இரவுகளுக்கும் உள்ள சில ஒற்றுமைகள், கொடுக்கல்/ வாங்கல்கள், இரண்டும் அவற்றுக்கும் முந்தைய வேறு பல மூல ஆக்கங்களில் இருந்து பெற்றுக் கொண்டவை பற்றியும், பஞ்சதந்திர கதைகளுக்கும், மிருகங்களை பற்றிய அரேபிய இரவுகளில் உள்ள கதைகளுக்கும் உள்ள ஒற்றுமைகள் குறித்தும் இலக்கிய ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள், இவை வேறொரு கட்டுரையில் பார்க்கப்படவேண்டியவை). அரேபிய இரவு கதைகளிலும் பெண்கள் இரண்டாம் தரத்தில்தான் வைக்கப்படுகிறார்கள். பேரழகியை கண்டதும் அண்டமே பொசுங்கிப் போகும் அளவிற்கும் பெருமூச்சு விடும், அவளைப் பிரிந்தால் உடல் நலம் குன்றி துயரத்தில் உழலும் ஆண்கள் இருந்தாலும், ‘ஆடமின் விலா எலும்பில் இருந்து வந்தவர்கள்’ என்று வசையாக பயன்படுத்தப்படும் சொற்றொடரின் மூலம் பல இடங்களில் இகழ்ச்சியாக பெண்கள் சுட்டப்படுகிறார்கள்.

பாலியல் விழைவுகள் இட்டுச் செல்லும் முடிவுகளிலும் ஆண்- பெண் வேறுபாடுகள் உள்ளன. மாற்றந்தாய் மூலம் பிறந்த பெண்ணுடன் (step-sister) உறவு கொண்டு குழந்தை பெற்று கொள்ளும் சகோதரன், தன் மகனின் காதலி/ மனைவிக்கு உணவில் மயக்க மருந்து கலந்து அவளுடன் கலவி கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளும் தந்தை பெரிய தண்டனைக்கு உள்ளவதில்லை. சகோதரனாவது பழிக்கு அஞ்சி சகோதரியை இன்னொருவனுக்கு மணம் முடிக்கிறான், அரசனான தந்தையோ தன் இச்சை தீர்ந்தவுடன் அவளை மறந்து விடுகிறான். அதே நேரம், கணவனின் மற்றொரு மனைவி மூலம் பிறந்த மகனிடம் (step-son) இச்சை கொள்ளும் பெண்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.

பெண்கள் சுதந்திரமாக தங்கள் விழைவுகளை அனுபவிக்கும் நிகழ்வுகளும் இந்தக் கதைகளில் உள்ளன. தன் ஏழு சகோதரர்கள் குறித்து நாவிதன் சொல்லும் கதைகளில் இரண்டாவது சகோதரன் சந்திக்கும் பெண்ணும் அவள் சேடிகளும் அவனை மயக்கம் வரும் அளவிற்கு அடிக்கிறார்கள், மீசையையும், தாடியையும் பிடுங்குகிறார்கள், புருவத்திற்கு சாயம் அடிக்கிறார்கள். இவற்றை பொறுமையாக சகித்துக் கொண்டிருந்தால், அதன் பின் அப்பெண் குடி மிகுதியில் உடைகளைக் களைந்து விட்டு நிர்வாணமாக ஒவ்வொரு அறையாக அவனிடமிருந்து தப்பிப்பது போல் ஓட, இவனும் உடைகளை களைந்து அவளை துரத்தியபடி ஓடி அவன் குறி விறைப்படைந்த பின்னரே அவனை தன்னுடன் இணைய விடுவாள் என்று சொல்லப்படுகிறது. ஐம்பது விதமான விசித்திர பாலியல் விழைவுகளுக்கு (fetish) முன்னோடியாக இப்பெண் இருக்கக்கூடும்.

‘கூலி சுமப்பவன் மற்றும் மூன்று பெண்கள்’ கதையில் அவர்கள் அவனுடன் உடல் பற்றிய உணர்வின்றி, தங்கள் நிர்வாணத்தை குறித்து சுவாதீனமாக இருப்பதும், அவனுடன் குடித்து மகிழ்ந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. பார்த்தவுடன் காதல் வயப்படும் கன்னிப் பெண்களும் மீறல்களை ஓரளவு வரை அனுமதித்து, கலவி அல்லாத மற்ற களியாட்டங்களில் காதலனுடன் ஈடுபடுகிறார்கள். ‘..played with him..‘, ‘..played with each other..‘ என்றே இத்தகைய களியாட்டங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தன் கணவன் வேறொரு பெண்ணுடன் உறவு கொள்வதை பார்த்துவிடும் பெண், அதற்கு பழி வாங்கும் விதமாக நகரத்திலேயே மிகவும் அழுக்கான மனிதனை தேர்ந்தெடுத்து அவனுடன் உறவு கொள்கிறாள். பின் கணவன் மன்னிப்பு கேட்டதும் அதை ஏற்றுக் கொள்பவள், தன் கணவன் மீண்டும் தவறு செய்தால் அவனை அழைப்பதாக அந்த அழுக்கான ஆசாமியிடம் கூறுகிறாள்.

இவற்றை பெண்ணியப் பிரதிகளாக பார்க்கத் தேவையில்லை, அடுக்குமுறை கொண்ட ஒரு -அரசர்கள்/ பிரபுக்களால் கவரப்பட்டு அல்லது அடிமைகளாக வாங்கப்பட்டு அந்தப்புரத்தில் உள்ள பலப் பெண்களில் ஒருவராக வாழ்வை கழிக்க வேண்டிய- சூழலின் ஆழத்தில் பதுங்கி இருக்கும் சுதந்திரத்திற்கான விழைவாக அணுகலாம்.

சிறு குற்றங்களுக்கும் கசையடிகள், கை, கால் வெட்டப்படுதல் போன்ற கடும் தண்டனைகள் கொண்ட சட்ட திட்டங்களின் – இத்தகைய பல நிகழ்வுகளை இக்கதைகளில் காண முடிகிறது – காலத்திய பாக்தாத்திலோ, கெய்ரோவிலோ இரவு நேரம். ஜன சந்தடி மிகுந்த வணிக/ குடியிருப்பு வீதிகள். எங்கும் காவலர்களின் கண்காணிப்பு, தண்டனை குறித்த பயம். பொதுவெளியில் மாதிரி குடிமகன்களாக தங்கள் வேலையை மட்டும் கவனித்தபடி அவசரமாக சென்று கொண்டிருப்பவர்கள். குற்றங்கள் எதுவும் நடக்காதது போல் வெளித்தோற்றம் அளிக்கும் சமூகம், எங்கும் ஒழுங்கின் அரசாங்கம். அதே நகரங்களில் அதே இரவு நேரத்தில், தாழிடப்பட்ட, எண்ணெய் விளக்குகளால் மஞ்சள் நிற ஒளிரூட்டப்பட்ட, வாசனை திரவியங்களின் மணத்தால் நிரம்பிய வீடுகளுக்குள்ளும், வணிக நிறுவனங்களின் உள்ளறைகளிலும் அரங்கேற்றப்படும் அனைத்து விதமான மனித ஆசைகளின் ஆடல்கள். இரவுக்கு ஆயிரம் கண்கள் இருப்பின், இச்சைகளின் கூர்மையான ஒளியால் நிரம்பித் ததும்பும் இக்கதைகளின் 1001*1000 கண்களும் அவற்றைக் கொண்டு இரவின் இருளை துளைத்து ஊடுருவிச் செல்கின்றன. அவற்றில் சில நம்முடைய கண்களே, அவை பருகும் இருளும் நம் ஆழ்மன விழைவுகளே.

burton

பின்குறிப்பு:

மால்கம் லாயன்ஸ் (Malcom Lyons), அர்சுலா லாயன்ஸ் (Ursula Lyons) தம்பதியர் இணைந்து மொழிபெயர்த்து, பெங்குயின் பதிப்பாக வந்துள்ள மூன்று தொகுதிகள் கொண்ட நூல்களில் (The Arabian Nights Tales of 1001 Nights Volumes 1, 2 & 3) இருந்து மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. ரிச்சர்ட் பர்டனின் மொழிபெயர்ப்புக்குப் பின் செய்யப்பட்ட முழு மொழிபெயர்ப்பு என்று அறியப்படும் இவை முன்னதோடு ஒப்பிடுகையில் இன்றைய ஆங்கிலத்திற்கு அணுக்கமாக உள்ள நடையை உடையவை (பர்டனின் மொழிபெயர்ப்பில் அலிபாபாவின் மருமகன் மற்யானாவை மணந்து கொள்வது என்பது போன்ற பல பாடபேதங்கள் இரண்டிற்கும் இடையே உள்ளன). மொழிபெயர்ப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு இரண்டுமே படிக்கப்பட வேண்டியவை.

காமத்துப்பூ

ஆகி

மேற்கின்
வெண்கற்பிதம்
கப்பலேறி வந்து
கிழக்கின் கருங்கற்பிதத்தின்
மேல் படர்ந்து, முன்னும் பின்னும்
நிகழ்ந்த ஊடுருவலின் அரைகுறை ஊடுருவலில்
ரத்தங்கசிந்து, இனிமை கசந்து
மென்மொட்டுகள் மலர்ந்து
மெட்டிற்கிணங்காது
சாம்பற்பூக்கள்
அசைந்தன

இயற்கையின் கவிதை

சரவணன் அபி

haiku1

அவ்வப்போது
நிலவின் ரசிகர்களுக்கு
ஓய்வளிக்கும் முகில்கள்

– மட்சுவோ பாஷோ
haiku2

மேற்கின் காற்றில் எறியுண்டு
கிழக்கில் சேர்கின்றன
உதிர்ந்த இலைகள்

– யோசா புஸோன்

haiku3

என் வாழ்வு –
இன்னும் எவ்வளவு மீதம்?
இது குறுகிய இரவு

– மசஓகா ஷிகி

haiku4

குளிர்காலக் காடெங்கும்
உதிர்ப்பதற்கு இலைகளின்றி
கடுஞ்சினத்துடன் ஓலமிடும் காற்று

– நட்சுமே சோசெகி

haiku5

இந்தப் பாதையில்
யாரும் பயணிப்பதில்லை என்னைத் தவிர,
இந்த இலையுதிர்கால மாலையில்

– மட்சுவோ பாஷோ

haiku6

இலையுதிர்காலத்தின் முதற்காலை
நான் பார்க்கும் கண்ணாடி
என் தந்தையின் முகத்தைக் காட்டுகிறது

– முரகாமி கிஜோ

haiku7

விளக்கு அணைந்ததும்
சன்னல் சட்டகத்தினுள்
நுழைகின்றன குளிர் விண்மீன்கள்

– நட்சுமே சோசெகி

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – – ரா. கிரிதரன்

ரா. கிரிதரன்

ஹனீஃப் குரேஷி எழுதிய The Buddha of Suburbia நாவலின் தொடக்கம் இது:

“My name is Karim Amir, and I am an Englishman born and bred, almost. I am often considered to be a funny kind of Englishman, a new breed as it were, having emerged from two old histories”

இரு கலாச்சார அடையாளங்கள் இணையும்போது ஒன்றை மற்றொன்று ஆதிக்கம் செய்யத் தொடங்கும் என்றாலும் முற்றிலும் புதுவிதமான அடையாளம் உருவாவதே அதன் இயல்பாக அமையும். மிகக் கச்சிதமாக அக்கருவைத் தொட்டுத் தொடங்கும் ஹனீஃப் குரேஷியின் நாவல் பிறந்த ஊரைக் கைவிட்டு புது நிலத்தில் வேரூன்ற நினைப்பவர்களைப் பற்றிய நல்லதொரு நாவலாக அமைந்திருந்தது.

அ.முத்துலிங்கம் எழுதிய ‘அமெரிக்கக்காரி‘ எனும் சிறுகதை இதே போன்ற – ஒரு ‘கிட்டத்தட்ட’ தனமையைப் பற்றிய கச்சிதமானத் தொடக்கத்தைக் கொண்டிருக்கிறது.

“ஒரு நாள் அவளுக்கொரு காதலன் இருந்தான்; அடுத்த நாள் இல்லை. அவன் வேறு ஒரு பெண்ணை தேடிப்போய்விட்டான். இது அவளுடைய மூன்றாவது காதலன். இந்தக் காதலர்களை எப்படி இழுத்து தன்னிடம் வைத்திருப்பது என்று அவளுக்கு தெரியவில்லை. அவர்கள் தேடும் ஏதோ ஒன்று அவளிடம் இல்லை. அல்லது இருந்தும் அவள் கொடுக்கத் தவறிவிட்டாள் என்பது தெரிந்தது.”

ஆம், முழுக்க முழுக்க இந்த அமெரிக்கக்காரியின் பார்வையில் சொல்லப்படும் இந்தக் கதையில் வரும் இலங்கைப் பெண்ணும் ‘கிட்டத்தட்ட’ அமெரிக்கக்காரிதான் என்றாலும் அவள் தன்னை ஒரு புது இனம் என்பதைக் கண்டுகொள்ள நெடுகாலம் ஆகிறது. ஆங்கில புத்தகங்கள் படிக்கத் தொடங்கியதால், அதில் வரும் அமெரிக்க சாகச கதைகளை பள்ளியில் சொல்லிக் கொண்டிருப்பதால், பிறந்த நாடான இலங்கையில் சிறுவயது முதலே அமெரிக்கக்காரி என அழைக்கப்பட்டவள் அமெரிக்கா எனும் நாட்டைப் பற்றிய யதார்த்தத்தை சற்று வயதான பின்னரே தெரிந்துகொள்கிறாள். அவளைப் பொருத்தவரை நினைவு தெரியாத நாள் முதலே அமெரிக்கக்காரி எனும் அடையாளத்தை அவள் பெற்றுவிட்டாள். அது ஒரு அழியா மச்சமாக அவளோடே வளர்ந்தது. தான் ஒரு அமெரிக்கக்காரி என நம்பத் தொடங்கும் பத்து வயதில் அவளது தாய் அமெரிக்காவே போனாலும் அவள் இலங்கைக்காரி தான் எனப்போட்டு உடைத்ததில் மனம் நொந்துப்போகிறாள்.

அமெரிக்கக்காரி ஆவதற்கான அவளது முயற்சிகள் அவள் அமேரிக்கா வந்தபின்னும் தொடரத்தான் செய்கின்றன. வலிய வந்து பழகும் நண்பர்களிடமிருந்து அவள் இலங்கைக்காரி போல தலைகுனிந்து விலகுவதில்லை. பேசுகிறாள். காப்பி குடிக்கிறாள். வெளியே செல்கிறாள். அவர்கள் அவளை அடைய எடுக்கும் பிரயத்தனங்களுக்கு ஓர் எல்லை வரை வளைந்துகொடுக்கிறாள். இரவு வீட்டுக்கு அழைக்கும்போது அந்த உறவு ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது. அமெரிக்கக்காரி என்பதை மானசீகமான எல்லையாக்கி சோதித்துப்பார்ப்பதில் அவளுக்கு விருப்பமில்லை. பயமிருப்பதாகவும் தெரியவதில்லை. ஹனீஷ் குரேஷி எழுதுவது போல அவள் கிட்டத்தட்ட அமெரிக்கக்காரி மட்டுமல்ல, கிட்டத்தட்ட இலங்கைக்காரியும்தான்.

கல்லூரி நிகழ்ச்சியில் நாட்டியம் ஆடிக்காட்டும்போது கூடவே தந்திக்கருவி வாசித்த வியட்நாமிய மாணவன் நண்பனாகிறான். என்னை ஆச்சர்யப்படுத்து, எனும் கேள்வி மூலம் ஒரு இதமான நண்பனாகும் அவன் மதிக்கும் எல்லைக்கோடுகள் அவளுக்குப் பிடிக்கிறது. அவன் கண்ணியமாகக் கைபிடிக்கும் வேளையில் அவள் எல்லை மீறி முத்தமிடுகிறாள். செளஜன்யமான உறவு மலர்கிறது.

மாணவர் விடுதியை விடுத்து தனியறை எடுத்து இருவரும் சேர்ந்து வாழத் தொடங்குகின்றனர். அவன் வேலைக்குப் போகத் தொடங்கியபோதும் அவள் முனைவர் பட்டத்துக்குத் தயார் செய்கிறாள். கடுமையான வேலை. வேலைக்கு இடையே ஒரு குழந்தை வேண்டுமென இருவரும் முயல்கின்றனர். மிக இயல்பாக ஆசிய நாட்டு மக்களின் மன இயல்பை கதாசிரியர் தொடர்கிறார். இனம் புரியாத இடத்தை நோக்கி அவர்களது உறவு செல்லவில்லை. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழத்தொடங்கிய சில காலத்தில் அவர்களிடையே ஏற்படும் இடைவெளி குறைந்து அவர்கள் மேலும் நெருங்க ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு வழிமுறையைக் கைக்கொண்டிருக்கிறது. பொதுவாக ஆசியர்கள் குடும்ப வாழ்வின் அடுத்தகட்டத்தை தங்கள் பிள்ளைகள் மூலம் தொடங்குகின்றனர். தனிமனித வெளி என்பது பல்கிப் பெருகும் குடும்பச்சங்கிலி எனும் அமைப்பின் ஒரு அங்கம் மட்டுமே என்பதை உணர்கின்றனர். மேற்கத்திய சமூகம் குடும்ப அமைப்பை தனிமனித வெளியினுள் ஊடுருவலாகவும் இடையூறாகவும் பார்க்கிறது. சேர்ந்து வாழும் இருவருக்கு குறுக்கே வரும் ஒரு இடைவெட்டாக மதிப்பதினால் தனிமனித வெளிக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை மீறியது எதுவும் இல்லை என்றாகிறது. கதையில் இலங்கைக்காரி தனது அமெரிக்கக்காரியை வென்று எடுக்கும் இடமாக இப்பகுதி அமைந்துள்ளது.

வியட்நாமிய காதலனின் விந்து குறைபாடு பெரு வெடிப்பாக அவர்களது உறவைப் பிரிக்கவில்லை. அவர்களை மேலும் நெருங்கச் செய்கிறது. குழந்தைத் தரமுடியாதத் தன்னைவிட்டு விலகும் அவன் அளிக்கும் உரிமையை அன்பால் மறுக்கிறாள். வீடு கட்டச் சேர்த்திருக்கும் பணத்தைக்கொண்டு மகப்பேறு சிகிச்சை செய்யச் செல்கிறாள். இதைச் சொல்லும்போது அமெரிக்காவில் கிளிண்டன் – மோனிகா விவகாரத்தை அ. முத்துலிங்கம் சொல்கிறார். காலக்குறிப்பு போலத் தெரிந்தாலும் மேற்கத்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கத்தை இலங்கைக்காரி-வியட்நாமிய காதலனின் தியாகத்தை ஒப்பிடும் தராசாகவே வாசகருக்குத் தோன்றும்படி எழுதியிருக்கிறார். சம்பந்தமில்லாத தகவல்களை எழுதி கதையை ரொப்புகிறார் எனும் குற்றச்சாட்டு பொய்க்கும் கணம் இது. ஒரு சிறுகதையாசிரியர் சகலவிதமான தகவல்களையும் விட்டுவிட்டு இந்த குறிப்பிட்ட நிகழ்வை ஏன் இந்த இடத்தில் குறிப்பிடுகிறார் என்பதை சேர்த்துப் பார்த்தால் கதை அடிநாதமாகப் பேசும் விஷயத்தை நாம் சென்றடையலாம்.

கருவைச் சுமக்கும் காலம் முழுவதும் அவளது அம்மாவுக்குக் கடிதம் எழுதுகிறாள். குழந்தை வளருகிறது, நீ செத்துப்போய்விடாதே என்பதுதான் ஒவ்வொரு கடிதத்தின் சாரமும். அதுவும் சாதாரணக் குழந்தையல்ல. அமெரிக்கக் குழந்தை என்பது கடிதத்தின் அடிநாதம். யுத்தம் நடந்து கொண்டிருக்கும் நகரத்தில் பஸ் பிடித்துச் சென்று அமெரிக்காவுக்குத் தொலைபேசும் தாயார் என்ன குழந்தை, பெயர் என்ன எனப் பெரும் இரைச்சலுக்கு நடுவே கேட்கிறாள். இவள் சொல்வதெல்லாம் குழந்தை ஒரு அமெரிக்கக்காரி என்பதுதான்.

ஆம், இவளைப் போல் இல்லாமல், அமெரிக்கா எதுவோ அதிலெல்லாம் இயல்பாய் பொருந்திப் போகும் அமெரிக்கக்காரியாக அவள் வளர்வாள்.

அமெரிக்கக்காரி, அ. முத்துலிங்கம், சிறுகதை